Lekha Books

A+ A A-

கங்கூபாய் - Page 3

Gangoobai

மறுநாள் அந்த நிறுவனத்தில் மாடல் அழகியாக பணி புரியும் மோனிஷா அந்த அறைக்கு வருகிறாள். வாமனின் அறை ஏற்கெனவே அவளுக்குத் தெரியும். அலங்கோலமாக எப்போதும் இருக்கக் கூடிய அந்த அறை மிகவும் அழகாகவும், சுத்தமாகவும் மாற்றப்பட்டு இருப்பதையும், கங்கூபாய்தான் அதைச் செய்திருக்கிறாள் என்பதையும் அவள் தெரிந்து கொள்கிறாள். கங்கூபாயை மிகுந்த மரியாதையுடன் அவள் பார்க்கிறாள்.

அவள் மீண்டும் கங்கூபாயை புடவை நிறுவனத்திற்கு அழைத்து வருகிறாள். அங்கு புடவைகளை வடிவமைக்கும் டிசைனரான ரோஹன் இருக்கிறான். அவன் கங்கூபாயின் உடல் அளவுகளை எடுக்கிறான். புடவை, ரவிக்கை இரண்டிற்கும்.

மறுநாள் காலையில் வாமனின் அறை உள்ள பகுதியிலிருக்கும் ஒரு பூங்காவிற்குச் செல்கிறாள் கங்கூபாய். அங்கு அவள் முதல் நாளன்று தனக்கு அருகில் புடவை நிறுவனத்தில் அமர்ந்து `ஷோ'வைப் பார்த்த அந்த வயதான பார்ஸி பணக்காரரைப் பார்க்கிறாள். அவரும் கங்கூபாயைப் பார்த்து அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார். பூங்காவிலிருக்கும் செடிகளை ஆசையுடன் பார்க்கும் கங்கூபாயிடம் `இதென்ன செடிகள்? என் வீட்டில் ஏராளமான செடிகள் இருக்கின்றன!' என்கிறார் பெருமையாக. அத்துடன் தன் வீட்டின் முகவரி கொண்ட முகவரி அட்டையையும் அவளிடம் தருகிறாள்.

அதற்கு அடுத்த நாள் கங்கூபாய் அந்த முகவரி அட்டையைக் காட்டி விசாரித்து.... விசாரித்து அந்தப் பணக்காரரின் வீட்டிற்கு வருகிறாள். மிகப் பெரிய பங்களா. அவர் தன் வீட்டுத் தோட்டத்தை ஆர்வத்துடன் சுற்றிக் காட்டுகிறார். எங்கு பார்த்தாலும் செடிகள்.... கொடிகள்.... மரங்கள்.... எல்லாவற்றையும் பார்த்த கங்கூபாய் `செடிகள் நிறைய இருக்கு ஆனால், எந்தச் செடியிலும் மலர்களே இல்லையே! மலர்கள் இருக்கக் கூடிய செடிகள் இருந்தால்தானே தோட்டத்திற்கு அழகு!' என்று கூறும் கங்கூபாய் `நாம என்ன பெருசா பண்ணிட போறோம்? சூரியன் எங்கே இருக்குன்னு செடிகளுக்குத் தெரியும். அந்த திசையை நோக்கி அவை வளரும். நம்ம வேலை அவற்றுக்கு நீர் ஊற்றுவதுதான்.எல்லாவற்றிற்கும் நீர் தேவைப்படுது. சில செடிகளுக்கு குறைவாக.... சில செடிகளுக்கு அதிகமாக...' என்றும் சொல்கிறாள். பூச்செடிகள் இல்லாமலிருக்கும் தன் வீட்டுத் தோட்டத்தை கங்கூபாய் பாராட்டவில்லையே என்ற குறை அந்த மனிதருக்கு! தோட்டத்தில் நடந்து செல்லும்போது அந்த பணக்காரரின் மகனான இளைஞன் ஏதோ ஒரு பெண்ணுடன் கோபமாக செல்ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறான்.

புடவை நிறுவனத்திற்கு தினமும் போய் வந்து கொண்டிருக்கிறாள் கங்கூபாய். அங்கு பணி புரியும் இரு இளம் பெண்கள் டிசைனர் ரோஹன் தங்களுக்கு ஒரு நாள் கூட விடுமுறை தரமாட்டேன் என்று கூறுவதாக குறைப்படுகிறார்கள் `இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்' உத்தரவே வாங்காமல், நீங்கள் போய் விட்டு வாருங்கள். எதுவும் ஆகி விடாது' என்று கங்கூபாய் கூற, அந்த இளம் பெண்கள் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள்.

மறுநாள் அவர்கள் நிறுவனத்திற்கு வரவில்லை. டிசைனர் ரோஹன் கவலையில் இருக்கிறான். 'வீட்டில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்காக ஒரு குடும்பத்திற்கு மிகவும் அவசரமாக ஒரு புடவை டிசைன் பண்ணித் தர வேண்டும். நாளைக்கு நிகழ்ச்சி. இந்த நேரம் பார்த்து இங்கிருக்கும் பெண்கள் வேலைக்கு வரவில்லை. நான் இப்போது என்ன செய்வது?' என்று கூறுகிறான் அவன். அப்போது உதவிக்கு வருகிறாள் கங்கூபாய். அவனை தனக்கு கற்றுத் தரும்படி கூறுகிறாள். அவன் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, தன்னுடைய எம்ப்ராய்டரிங் அறிவை வைத்துக் கொண்டு, அவள் சிலவற்றைச் செய்கிறாள். அதைப் பார்த்து அசந்து போகிறான் ரோஹன். அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. இரவு நீண்ட நேரம் ஆகும் வரை அவனுடன் சேர்ந்து அவளும் `எம்ப்ராய்டரிங்' வேலையில் ஈடுபடுகிறாள். இறுதியில், ஏழைப் பெண் கங்கூபாயின் உதவியால், அந்தப் புடவை தயாராக, மனதில் சந்தோஷம் பொங்க அவளுக்கு நன்றி கூறுகிறான் ரோஹன். 

அடுத்த நாள் சொல்லாமலே விடுமுறை எடுத்துச் சென்ற இளம் பெண்கள் வேலைக்கு வருகிறார்கள். அவர்களிடம் ரோஹன் எதுவும் கூறவில்லை. இப்போது கங்கூபாயின் புடவை தயாரிக்கும் வேலை ஆரம்பமாகிறது. கங்கூபாயும் அவர்களுடன் சேர்ந்து தனக்குத் தெரிந்த திறமையைக் காட்டுகிறாள்.

பார்ஸி பணக்காரர் ஒருநாள் கங்கூபாயைப் பார்த்து பாராட்டுகிறார். செடிகளைப் பற்றி அவளுக்கு இருக்கும் ஆர்வத்தை மெச்சுகிறார்.

அவரின் மகனுக்கும், புடவை நிறுவனத்தில் பணியாற்றும் மாடலிங் பெண் மோனிஷாவிற்கும் இடையே  நெருங்கிய உறவு இருப்பதையும், அந்த இளைஞன் அவளுக்கேற்ற ஆளில்லை என்பதையும் உணர்ந்த கங்கூபாய், வாமன் மோனிஷாவை மனதிற்குள் உயிருக்கு உயிராக காதலிப்பதையும், அவன்தான் அவளுக்குச் சரியான ஜோடி என்பதையும் உணர்ந்து அவர்களுக்கிடையே காதல் வெற்றி பெற உதவுகிறாள். அவர்கள் இருவரும் கங்கூபாயை தெய்வத்தைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள். 

புடவை வாங்கியவர்கள் எல்லோரும் இலட்சக்கணக்கில் பாக்கி வைத்திருப்பதால், அந்த நிறுவனம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதை விலைக்கு விற்பதற்கு தயாராக இருக்கிறார்கள். பார்ஸி பணக்காரரிடம் கூறி, மிகப் பெரிய தொகைக்கு அதை வாங்கச் செய்கிறாள் கங்கூபாய். அதை வாங்கியவன் வாமன். அதற்கு முழு பண உதவியையும் செய்தவர் அந்த பார்ஸி பணக்காரர். கங்கூபாய் கூறியதால் உண்டான நம்பிக்கையில் அவர் அதைச் செய்கிறார்.

 கங்கூபாயின் புடவை தயாராகி விடுகிறது. அதை அவளிடம் கொடுத்து அணியும்படி கூறுகிறார்கள். அவள் புடவை, ரவிக்கையுடன் கண்ணாடிக்கு முன்னால் நிற்கும்போது தன்னையே அவளால் நம்ப முடியவில்லை. தானா அது? அவளின் அந்த புடவையை வாங்கி பிளாஸ்டிக் பையில் வைத்து தருகிறார்கள்.

அன்று மாலை கங்கூபாய்க்கு வழியனுப்பு விழா. பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தன் செலவில் அதைச் செய்தவர் அந்த பார்ஸி பணக்காரர். வந்த மும்பையில் தங்கியிருந்த ஒரு வார காலத்தில் எல்லோருக்கும் நல்லவை பண்ணிய அந்த ஏழைப் பெண்ணை அந்த விழாவில் எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள். பார்ஸி பணக்காரர், புடவை நிறுவனத்தின் நிர்வாகி. வாமன், மோனிஷா, டிசைனர் ரோஹன் எல்லோரும் தன்னைப் புகழ, கண் கலங்கியவாறு அவர்களிடமிருந்து பிரியா விடை பெறுகிறாள் கங்கூபாய்.

கங்கூபாய் - மீண்டும் மாத்தெரான் கிராமத்து மண்ணில். புடவையுடன் திரும்பி வந்த அவளைப் பார்த்து அவளின் தோழி மலனுக்கு மிகவும் சந்தோஷம் உண்டாகிறது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel