
இருந்தாலும் அவனுக்கு அக்காவை மிகவும் பிடிக்கும். காலையில் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்புவதற்கு முன்பு அவனைக் குளிப்பாட்டுவது அக்காதான். பலமான கையால் தன் உடம்பில் அவள் தேய்ப்பதை பொதுவாக அவன் விரும்பமாட்டான். தன்னுடைய முண்டு துணியை லேசாக முறுக்கி கூர்மையாக வைத்து அதை அவனுடைய காதுக்குள் அவள் நுழைக்கும் போது, அவனுக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். அக்காதான் அவனுக்கு கஞ்சி ஊற்றித் தருவாள். கஞ்சி குடித்து முடித்து கையைக் கழுவியவுடன் ஈர முண்டால் அவனுடைய நெஞ்சில் பட்டிருக்கும் தண்ணீரைத் துடைத்துவிடுவாள். அதற்குப் பிறகு முந்தைய நாள் சலவை செய்து மடித்து வைத்த சட்டையையும், புள்ளி போட்ட காற்சட்டையையும் அணிவிப்பாள். தலைவாரி முடித்து முகத்திலிருக்கும் எண்ணெய்ப் பசையை மீண்டும் ஒரு முறை துடைத்துவிட்டால் அவன் பள்ளிக்கூடம் கிளம்பிவிடலாம்.
இரவில் அவன் சாப்பிட அமரும் போது அவனுக்குப் பக்கத்தில் அக்காவும் உட்காருவாள். அக்கா தன்-னுடைய வாயில் ஊட்டுவது என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், பெரியம்மா பார்க்கும் போது அக்கா சாதத்தை அவன் வாயில் ஊட்டமாட்டாள். அதற்குக் காரணம் ஒரு முறை பெரியம்மா சொன்னாள்: "சோறு உள்ளே இறங்க மாட்டேங்குதோ இந்தப் பச்சைப் பிள்ளைக்கு...?" என்று.
சில நேரங்களில் மட்டும்தான் பெரியம்மாவுக்கு பதில் என்று ஏதாவது சொல்லுவாள் அக்கா. அப்படி அவள் பதில் சொல்வதைக் கேட்டு, பெரியம்மாவிற்கு பயங்கரமாகக் கோபம் வரும். அதற்குப் பிறகு ஒரே ரகளைதான். சிறிது நேரம் சென்ற பிறகு பெரியம்மா ஏதாவது சொல்ல, அக்கா உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவாள். சில நேரங்களில் பெரியம்மாவும் அழுவதுண்டு.
பெரியம்மா அழுதால் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரே ஒரு தடவைதான் பெரியம்மா அழுவதைப் பார்த்து அவன் மனதில் வருத்தம் உண்டாகியிருக்கிறது. அது அக்காவுடன் சண்டை போட்டு அல்ல.
அந்தச் சம்பவத்தை அப்பு இன்னும் மறக்கவில்லை. பெரியம்மாவை அழ வைத்த அந்த மனிதரையும் அப்பு இன்னும் மறக்கவில்லை.
சக்கன் செய்து தந்த ஓலையால் ஆன பந்தைத் தட்டியவாறு அப்பு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வாசற்படியிலிருந்து ஒரு குரல் கேட்டது.
"அம்மா!"
யாரென்று பார்க்கும் போது ஒரு மனிதர் வேலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். நீளமான கையைக் கொண்ட சட்டையை அவர் அணிந்திருந்தார். அவருடைய கையிடுக்கில் ஒரு பை இருந்தது. பெரியம்மா வாசலில் இறங்கி வேலிப் பக்கமாகச் சென்றாள். அவள் அந்த மனிதரிடம் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
"உன் அம்மாதானே சொல்றேன்! இவ்வளவு தூரம் வந்திட்டு வீட்டுக்குள்ள வந்தா என்ன குமாரா?"
பெரியம்மா சொன்னதில் நியாயம் இருப்பதாக அப்புவிற்குத் தோன்றியது. அப்படி என்ன அவருக்குப் பெரிய கௌரவம் வேண்டி இருக்கிறது! பெரியம்மாவிடம் அவருக்கு ஏதாவது சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கும்பட்சம், அவளை ஏன் அவர் வேலிப் பக்கம் அழைக்க வேண்டும்? வீட்டிற்குள் வந்து சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியதுதானே!
அவர் சொன்னார்: "இந்த படியில கால் வைக்க மாட்டேன்னு சொல்லி வீட்டைவிட்டு போயி அஞ்சாறு வருடங்கள் ஆயிடுச்சுல்ல? அப்படி இருக்கிறப்போ நான் எப்படி வீட்டுக்குள்ள வருவேன்மா?"
பெரியம்மா அந்த ஆளைப் பார்த்து கோபமாக இரண்டு வார்த்தைகள் திட்டினால் என்ன? எப்போதும் கன்னாபின்னாவென்று பேசக் கூடிய பெரியம்மா அந்த கவுரவம் பார்க்கும் மனிதரிடம் அதற்குப் பிறகும் கெஞ்சிக் கொண்டிருந்தாள். "என் வயித்துல அவ பொறந்துட்டாளே! அவளை நான் கொல்ல முடியுமா?"
அதற்கு அந்த மனிதர் சொன்ன பதிலை அப்புவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"டேய், நான் சாகுற வரையாவது..."
"அது நடந்திருச்சுன்னா, நான் ஏன் இங்கே வரப்போறேன்?"
அவர் மீண்டும் என்னவோ ஆவேசமாகப் பேசினார்:
"இந்தத் தத்துவத்தையெல்லாம் மகள்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும்...."
இதற்கிடையில் அந்த மனிதர் அவனை முறைத்துப் பார்த்தார். அந்தப் பார்வை அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. ‘வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகளின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொல்ல முயற்சிக்கும் அந்தப் பையத்தியக்காரன் இருக்கிறானே...! அவன் பார்க்கும் போது இந்த அளவிற்கு ஒரு பயம் அப்புவின் மனதில் உண்டானதில்லை. இந்த மனிதரும் ஒரு வேளை கழுத்தைப் பிடித்து திருகுவாரோ?’
அவன் மெதுவாக வாசலுக்குள் நுழைந்தான். அவனுடைய அக்கா உள்ளே போயிருந்தாள். சமையலறையிலிருந்து வெளியே வரும் வாசலுக்குப் பக்கத்திலிருந்த வாழைத் தோட்டத்தைப் பார்த்தவாறு அக்கா நின்றிருந்தாள். முண்டின் நுனியைப் பற்றித் திருகியவாறு அப்பு அவளைப் பார்த்துக் கேட்டான். "வெளியில நிக்குறது யார் அக்கா?"
அக்கா அதைக் கேட்காதது மாதிரி இருந்தாள்.
"அக்கா, வெளியில நிக்கிறது யார்?"
அக்கா என்னவோ சொல்ல முயன்றாள். ஆனால், சொல்லவில்லை.
"யார் அக்கா அது?"
"அது...."
"கழுத்தைப் பிடிச்சு அந்த ஆளு நெரிப்பாரா?"
"யாரு?"
"அந்த ஆளைத்தான் சொல்றேன்... குழந்தைங்க கழுத்தைப் பிடிச்சு அந்த ஆளு நெரிப்பாருல்ல...?"
அதைக் கேட்டு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது அக்காவிற்கு. அவள் சொன்னாள்: "அது உன்னோட மாமா!"
அக்கா சொன்ன விஷயம் அவனுக்கு மிகவும் புதுமையாகத் தோன்றியது. மாமாவாக இருக்கக்கூடிய ஒரு ஆண் எதற்காக அப்படி நடக்க வேண்டும்? படியில் நின்று கொண்டு எதற்கு பெரியம்மாவை மெதுவான குரலில் அழைக்க வேண்டும்? எதற்காக பயமுறுத்துகிற மாதிரி தன்னை வெறித்துப் பார்க்க வேண்டும்? பொல்லாத மாமாதான்!
அக்கா பொய் சொல்லியிருப்பாளோ?
"உண்மையா அக்கா...?"
"ஆமாம்..."
"மாமா ஏன் இதுநாள் வரை இங்கே வரல?"
"மாமா வரமாட்டார்."
அதற்குப் பிறகு ஏதாவது கேட்கலாம் என்று அப்பு நினைத்த போது, அக்கா தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
'இந்த அக்கா சுத்த பைத்தியம்...'
அப்போது பெரியம்மா உள்ளே வந்தாள். பெரியம்மாவைப் பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிவிட்டான் அப்பு. பெரியம்மா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அழுவதற்கிடையில் அவள் என்னென்னவோ சொன்னாள். அதைக் கேட்கும் போது அப்புவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எவ்வளவு திட்டினாலும் அவள் அவனுடைய பெரியம்மா ஆயிற்றே!
எதையோ நினைத்தவாறு அவன் வாசலுக்கு வந்து படி இருக்கும் இடத்தைப் பார்த்தான்.
மாமா போய்விட்டிருந்தார்.
தனக்கு மாமா என்ற ஒரு மனிதர் இருப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா அவர் தன்னை வெறித்துப் பார்த்து பயமுறுத்த வேண்டும்; படியில் நின்று பெரியம்மாவை அழைத்து என்னவெல்லாமோ சொல்லி அவளை அழச் செய்ய வேண்டும்?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook