
சாயங்காலம் குஞ்ஞாப்பு போகும்போது, அவனுடன் சேர்ந்து ஆற்றுக்குப் போக வேண்டும். கல் மேல் ஏறி அமர வேண்டும். நீரையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அங்குகூட ஒரு மூலை இருக்கவே செய்கிறது. பாசியும் புல்லும் நிறைந்த ஒரு இடம். இருண்டுபோய் பச்சை நிறத்தில் ஒட்டுப் புல்களுக்கு நடுவில். பாசிக்கு மத்தியில் வெண்மை நிற மீன்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். அழுகிப் போன இலைகளும், மீன் குஞ்சுகளும் அங்கு கண்ணில் படும். நீருக்குள் இறங்கி... மீனைப் போல குஞ்சாக மாற வேண்டும்... பிறகு...
உண்ணி தூணில் சாய்ந்தவாறு உறங்கினான். கனவு கண்டான்.
அவன் நீரில் இறங்கினான். நீருக்கு அடியில் பாசி பிடித்த காய்ந்த இலைகள் மீது, மீன் குஞ்சுகளைக் கடந்து நடந்தான். பஞ்சைப் போல மென்மையான இலைகள். அந்த மூலையை நோக்கி நடந்தான். மேலே பார்த்தால் பச்சை நிறம் மட்டுமே தெரிந்தது. சுற்றிலும் ஒரே பச்சை நிறம் மட்டும். பாசிக்கு மத்தியில் நடந்து சென்று அவன் கடைசியில் அந்த மூலையை அடைந்தான். அந்த மூலை இருண்டு போய் சின்னதாக இருந்தது. இந்த உலகத்தில் இல்லாத ஒரு குளிர்ச்சியான மூலை அது. ஒட்டுப் புற்கள் அங்கு ஏராளமாக வளர்ந்திருந்தன. ஒரு கல் வேறு அங்கு இருந்தது. அதன்மேல் ஏறி அமர்ந்து சுற்றிலும் உண்ணி பார்த்தான். உறக்கத்தில் அவன் சிரித்தான். என்ன சுகமான அனுபவம்! ‘யாரும் என்னைப் பார்க்க போவதில்லை. யாருக்கும் நான் இருக்கும் விஷயம் தெரியப் போவதில்லை. நான் நிரந்தரமாக இங்கேயே இருந்துவிடப் போகிறேன்’ - உண்ணி தனக்குள் சொல்லிக் கொண்டான். சத்தமும் ஆரவாரமும் இல்லாத, அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இருட்டான நீர்பரப்பு உண்ணியைச் சுற்றிலும் இருந்தது. அவனின் உதடுகளில் ஒரு புன்சிரிப்பு மீண்டும் தவழ்ந்து வந்தது.
அம்மா வந்து அந்த புன்னகை அரும்பிக் கொண்டிருந்த உதடுகளில் முத்தமிட்டாள். உண்ணியைத் தூக்கிக் கொண்டு போய் சூடான தோசை முன்னால் பெஞ்சில் உட்கார வைத்தாள். அவன் திடுக்கிட்டு விழித்து சுற்றிலும் பார்த்தான். அம்மா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
உண்ணி மனதிற்குள் நினைத்தான்: ‘தோசைக்கு மாவு அரைச்சது யாரா இருக்கும்?’
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook