வளர்ப்பு மகள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6605
திருடு போன நகைகளும் அவனிடமிருந்து அவர்களுக்குக் கிடைத்தன. நீதிமன்றத்தில் தான் அந்தக் கொலையைச் செய்யவே இல்லை என்று சாதித்தான் சங்கரன். சம்பவம் நடந்த நாளன்று தான் ராவ்பகதூரின் வீட்டுப் பக்கம் போகவே இல்லை என்று முதலில் சொன்னான். பிறகு அரசாங்க வழக்கறிஞர் கேட்ட பல கேள்விகளையும் பார்த்து அவன் தடுமாறிப் போனான். தான் அங்கு போனது உண்மைதான் என்பதை அவன் ஒப்புக் கொண்டான். தான் அந்தப்பெண் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தபோது, அவள் தன்னை மறந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாளென்றும் அலமாரியிலிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தான் திரும்பிவிட்டதாகவும், அதற்குப் பிறகு நடைபெற்ற எந்தச் சம்பவமும் தனக்குத் தெரியாதென்றும் முன்னுக்குப் பின் முரணாக அவன் சொன்ன பல விஷயங்கள் அவனையே ஆபத்தில் சிக்க வைத்தது. ஆனால், கடைசிவரை அந்தக் கொலை செய்த விஷயத்தை மட்டும் அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை.
மறுநாள் தீர்ப்பு சொல்லப் போவதைக் கேட்பதற்காக எப்போதும் வருவதைவிட அதிகமான ஆட்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தார்கள். பதியனூரிலிருந்து பதினைந்து மைல்கள் நடந்து சங்கரனைத் தூக்கில் போடும் தீர்ப்பைக் கேட்பதற்காக அந்த ஊர் மக்கள் ஒரு ஊர்வலத்திற்கு நிகராக நகரத்தைத் தேடி வந்திருந்தார்கள்.
பதினோரு மணி அடித்தது. குற்றம் சாட்டப்பட்ட சங்கரனைக் கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள். நீதிபதி வந்தார். ஒரே நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. நீதிபதி கருப்புத் துணியைத் தலையில் வைத்ததைப் பார்த்த குற்றவாளி மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டான்.
அப்போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு சம்பவம் அங்கு நடந்தது. மக்களை இடித்துத் தள்ளிக் கொண்டு பைத்தியக்காரனைப் போல ஒரு மனிதர் நீதிபதியின் கால்களில் வந்து விழுந்தார்.
அங்கு வந்து நின்ற ஆளைப் பார்த்ததும் நீதிமன்றமே அதிர்ச்சியில் உறைந்து போனது. அங்கு வந்து நின்ற மனிதரின் வருகையும், அவரின் தோற்றமும், அவர் நடந்து கொண்ட விதமும், அவரிடமிருந்த ஒருவித பதைபதைப்பும் அவர்களால் நம்ப முடியாமல் இருந்தன.
அங்கு வந்து நின்றது- ராவ்பகதூர் ராமனுண்ணிதான்.
"தீர்ப்பு சொல்லக்கூடாது. தீர்ப்பு சொல்லக்கூடாது" என்று ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல அவர் அலறினார். "என் செல்ல மகளைக் கொலை செய்தது சங்கரன் இல்ல. நான்தான். ஆமா... நான்தான் கொலையாளி. அதற்கான ஆதாரங்கள் இதோ..."
ராவ்பகதூர் ஒரு பெரிய டைரியையும் ஒரு பத்திரிகையையும் நீதிபதியின் மேஜை மேல் வைத்தார்.
அவ்வளவுதான்- அங்கிருந்த ஒவ்வொருவரின் மூளையும் பயங்கர அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டது. குண்டுபட்டு இறந்த காகத்தைப் போல நீதிபதி தன்னுடைய நாற்காலியில் வாயைப் பிளந்துகொண்டு உட்கார்ந்துவிட்டார்.
ஐந்து நிமிடங்கள் கழிந்த பிறகுதான் நீதிபதிக்கே சுயஉணர்வு நிலை உண்டானது. கருப்பு நிறத் துணியைக் கழற்றி வைத்த அவர் வக்கீல்களையே உற்று பார்த்தார். வக்கீல்மார்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
நீதிபதி சொன்னபடி போலீஸ்காரர்கள் ராவ்பகதூரை விலங்கு மாட்டி சங்கரனுடன் சேர்த்து சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றார்கள்.
ராவ்பகதூர் ராமனுண்ணி பாலியாடு நீதிமன்றத்தில் தந்த அவருடைய சொந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கியமான பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆகஸ்ட் 15- நீண்ட நாட்களாக ஒரு கெட்ட சிந்தனை என்னுடைய இதயத்திற்குள் புகுந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன்.
16- எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தக் கெட்ட சிந்தனை என்னுடைய மனதை விட்டு விரட்டியடிக்க என்னால் முடியவில்லை. எவ்வளவோ பாவங்களை நான் செய்திருக்கிறேன். இருந்தாலும், இப்படியொரு பெரிய பாவத்தை நான் எந்தச் சமயத்திலும் செய்ய மாட்டேன்.
18- நேற்று இரவு எனக்குக் கொஞ்சம்கூட தூக்கம் வரவில்லை. இரண்டு முறை விலைமாதர்கள் இல்லத்திற்குச் சென்றேன். எப்போதும் குடிப்பதை விட அதிகமாகக் குடித்தேன்.
19- தூக்கம் கலைந்து எழுந்தபோது, என் முன்னால் அவள் நின்றிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் எனக்குள் இருந்த மிருகத்தனம் தலையை நீட்டியது, ச்சே...! அவள் ஒரு சிறு குழந்தை ஆயிற்றே! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நான் அவளைத் தத்து எடுத்தேன். அப்போது அவளுக்கு ஒன்றரை வயது.
ஆகஸ்ட் 22- விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரியிடம் பதிநான்கு வயதுள்ள ஒரு பெண்ணை எனக்காக ஏற்பாடு செய்யும் படி சொன்னேன்.
23- அந்தச் சிறு வயது விலைமாது உண்மையிலேயே ஒரு தேவதைதான். ஆனால், எனக்கு ஒரு சுகமும் கிடைக்கவில்லை. எனக்கு அவள்தான் வேண்டும்.
24- என் செல்லப் பெண்ணை மனதில் நினைக்கும்போது என்னுடைய நரம்புகளில் உணர்ச்சிகள் திரண்டு நிற்கின்றன. இனிப்புள்ள ஒரு நஞ்சு அவள். 25- காலையில் கோவிலுக்குச் சென்று கடவுளைத் தொழுதேன். அங்கு எதுவுமே இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். மனதில் அமைதி கிடைத்ததாக எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உலகமே பொய்யானது. வாழ்வது, எண்ணுவது, செய்வது- எல்லாமே பொய்யானது.சிந்தனையாளர்களின் வாதத்தில் அர்த்தமில்லாமலில்லை.
27- அவள் ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டிருக்கிறாள். அதோடு எனக்குள் இருக்கும் மிருகத்தனமும் சேர்ந்து வளர்கிறது. அவள் "அப்பா" என்று என்னை அழைப்பது என்னைப் பைத்தியம் பிடிக்க வைக்கிறது. இந்த வயதான காலத்தில் இப்படிப்பட்ட மோசமான உணர்வுகள் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? நிழலைப் போல விரட்டியடிக்க முடியாத அளவிற்கு அவை என்னைப் பின் தொடர்ந்து எங்கு வருகின்றன?
30- அதைச் செய்வது பாவமான ஒன்றோ? என் செல்லப் பெண் எனக்கு யார்? யாருமல்ல. யாரோ ஒரு தந்தைக்கும் தாய்க்கும் பிறந்த ஒரு பெண் குழந்தை. நான் எதற்குத் தயங்க வேண்டும்? ப்பூ! ஒழுக்கம்...
செப்டம்பர் 1 - நாளை இரவு நான் அதை நிறைவேற்றப் போகிறேன்.
செப்டம்பர் 2 - "அப்பா, எனக்கு ஒரு ஆர்மோனியம் வேணும்" -என்று நேற்று எனக்கருகில் வந்து கொஞ்சிக் குழைந்து சொன்ன போது என் இதயம் ஈரமாகிவிட்டது. இரவில் நான் அவளின் மெத்தைக்கு அருகில் சென்றேன். அவள் ஒரு குழந்தையைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். நான் திரும்பி பாரூவைத் தேடிப் போனேன்.
3- நான் அவளுக்கு விலை மதிப்புள்ள ஒரு ஆர்மோனியத்தை வாங்கிக் கொடுத்தேன். மகிழ்ச்சிப் பெருக்கால் எனக்கு நன்றி சொல்லும் வகையில் அவள் என்னைக் கட்டிப்பிடித்து என்னுடைய தாடி மீது ஒரு முத்தத்தைப் பதித்தாள்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,