Lekha Books

A+ A A-

வரப்போகும் மாப்பிள்ளை - Page 2

varapogum mapillai

சில நேரங்களில் தனியாக உட்கார்ந்து அவள் தன்னுடைய எதிர்கால கணவனைப் பற்றி மனதில் கனவு கண்டுகொண்டு இருப்பாள். அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அந்த பணவசதி படைத்த மனிதனுடன் அவள் அந்த வகையில் பல ஊர்களுக்கும் செல்வாள். மக்கள் அவர்களை மிகவும் ஆடம்பரமான முறையில் வரவேற்பார்கள். பல்வேறு விஷயங்களைப் பற்றியும் அறிவுரைகள் பெறுவதற்காக பலரும் அவர்களைத் தேடி வருவார்கள். சில நேரங்களில் மிகவும் முக்கியமான விஷயங்களைப் பற்றி முடிவு எடுப்பது அவளாகக்கூட இருக்கும். போலீஸ் இன்ஸ்பெக்டரும் நீதிபதியும் வக்கீல்களும் அவளுடைய கணவனுக்கு முன்னால் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்றிருப்பார்கள். பெண்கள் அந்த மிகவும்

அழகான மனிதனைச் சற்று பார்ப்பதற்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் யாராலும் அவனை நெருங்கக் கூட முடியாது. அவனுடைய ஒரே உரிமை படைத்தவள் அவள் மட்டுமே. அவள் இப்படி கனவு கண்டு கண்டு மனதில் சந்தோஷமடைந்து கொண்டிருப்பாள்.

அவளுக்கு விருப்பமில்லாத மாதிரி யாராவது எதையாவது கூறவோ செயல்படவோ செய்தால்,  அவள் மனதிற்குள் நினைப்பாள்: "இருக்கட்டும்... என் திருமணம் நடக்கட்டும். அப்போது இவர்கள் எல்லாரும் எனக்கு முன்னால் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்க்கத்தானே போகிறேன்!"

இப்படியே ஒரு வருடம் கடந்தோடிவிட்டது சரோஜினியும் பத்மாக்ஷியும் லீலாவதியும் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள். கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்ற ஆர்வம் மூவருக்கும் இருந்தது. ஆனால், சரோஜினிக்கும் லீலாவதிக்கும் படிப்பைத் தொடரக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை இல்லை. சரோஜினியின் தந்தை ஒரு நடுத்தர விவசாயி. கடுமையாக உழைத்தால்  பெரிய அளவிற்கு சிரமம் இல்லாமல் வாழ்க்கையை நடத்தலாம். அவ்வளவுதான். பள்ளி இறுதி வெற்றி பெறுவது வரை அவளைப் படிக்க வைத்ததே வீட்டிற்கான செலவுகளில் பலவற்றைக் குறைத்துக்கொண்டதால்தான். இது ஒரு பக்கம் இருக்க, அவளுடைய தம்பிகள் இருவர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படிப்பை ஆரம்பித்திருந்தார்கள். அவளைக் கல்லூரியிலும், தம்பிகளை ஆங்கிலப் பள்ளிக்கூடத்திலும் படிப்பதற்கு அனுப்பினால், குடும்பம் முழுமையான பட்டினியில் கிடக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

"மெட்ரிக்குலேஷனில் தேர்ச்சி பெற்றுவிட்டாய் அல்லவா? இனி எதற்குப் படிக்க வேண்டும்?" -இதுதான் சரோஜினியின் அன்னையின் கருத்தாக இருந்தது. பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாள்.

பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறாள். இனி பொருத்தமான ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது என்பது சிரமமான ஒரு விஷயமாக இருக்காது- இதுதான் அவளுடைய தாய்- தந்தையரின் விருப்பமாக இருந்தது. அவளுடைய தந்தைக்கு தாயைவிட பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. "என் மகளுக்கு நல்ல ஒரு மாப்பிள்ளை கிடைப்பான். நான் அவளை மிகவும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வேன்.'' -இவ்வாறு  அவன் எப்போதும் கூறிக்கொண்டிருப்பான். தாய்க்கு அந்த அளவிற்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. அது மட்டுமல்ல; தன் மகளுடைய திருமணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்த வேண்டுமோ, அந்த அளவிற்கு சீக்கிரம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருந்தது. அவள் கூறுவாள்: "அந்த அளவிற்கு மிகப்பெரிய மனிதனைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டாம். நம்முடைய நிலைக்கு ஏற்ற ஒருவன் வந்து சேர்ந்தால், அவனுடன் அனுப்பி வைத்துவிட வேண்டியதுதான்.'' அதைக் கேட்கும்போது, சரோஜினிக்கு கோபம் வந்துவிடும். அவள் தன் தாய்க்குத் தெரியாமல் மறைந்து நின்று கொண்டு வக்கனை காட்டுவாள். அவள் மெதுவான குரலில் முணுமுணுப்பாள்: "ஓ... அனுப்பி வைக்கும்போது, போகத் தயாராக யார் இருக்காங்க?''

பத்மாக்ஷியின் தந்தை மிகவும் வசதி படைத்த மனிதர். அவளை எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் படிக்க வைப்பதற்கு அவரால் முடியும். ஆனால் இதற்கிடையில் அவருக்கு சில திருமண ஆலோசனைகள் வந்தன. அவற்றில் ஒன்றை தீர்மானிக்கவும் செய்தார். ஒரு எஞ்ஜினியர்- மிகவும் திறமைசாலியான ஒரு இளைஞன்- அவன்தான் அவளுடைய கணவனாக ஆகப் போகிறவன். அவன் பெண் பார்ப்பதற்காக வந்த நாளன்று சரோஜினியும் லீலாவதியும் பத்மாக்ஷியின் வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். பொதுவாக பெண்ணைப் பார்ப்பதற்காக வரக்கூடிய இளைஞர்களைப்போல அவன்

நடந்துகொள்ளவில்லை. நல்ல சுறுசுறுப்புடன் அங்குமிங்கும் நடந்துகொண்டும், வந்திருந்தவர்கள் எல்லோருடனும் நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தான். நல்ல உயரம், அதற்கேற்ற எடை, நல்ல பொன் நிறம்- மொத்தத்தில் அழகான தோற்றத்தைக் கொண்ட இளைஞன்! மிகவும் நல்லவன்! எல்லாரும் சொன்னார்கள்: "பத்மாக்ஷிக்கு மிகவும் பொருத்தமான ஆள்!'' லீலாவதியின் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது. அவள் சொன்னாள்: "நல்லவன்! மிகவும் நல்லவன்! இல்லையா, சரோஜம்!''

"ம்...'' சரோஜினி மெதுவான குரலில் முனக மட்டும் செய்தாள்.

லீலாவதி தொடர்ந்து சொன்னாள்: "ஒரு வக்கீல் மணமகன் வரவேண்டும் என்பதுதானே பத்மாக்ஷியின் விருப்பமாக இருந்தது? அதைவிட எந்த அளவிற்கு நல்ல ஒரு மனிதன் அவளுக்குக் கிடைத்திருக்கிறான்! அவள் கொடுத்து வைத்தவள்தான்.''

சரோஜினிக்கு அந்த விஷயம் அந்த அளவிற்குப் பிடிக்கவில்லை. "இதென்ன பெரிய அதிர்ஷ்டமா? இதைவிட மிகச் சிறந்த மணமகன்கள் நமக்குக் கிடைப்பார்கள்!'' பத்மாக்ஷியிடம் விடை பெற்றுக்கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள்.

சரோஜினி வீட்டிற்குச் சென்று, உட்கார்ந்து மனதில் நினைத்தாள். ஆமாம்... அவன் அழகானவன்தான். மிக உயர்ந்த பதவியில் இருப்பவன். நல்ல திறமைசாலி. பத்மாக்ஷிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் கணவன். ஆனால் வெளிப்படையாக அதை ஒத்துக்கொள்வதற்கும் அவள் தயாராக இல்லை. அவள் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்: "அவனைவிட எனக்கு கணவனாக வரப்போகும் மனிதன் மிகவும் உயர்ந்தவனாக இருப்பான். அவனுக்கு முன்னால் இவர்கள் எல்லாரும் வெறும் புழுக்களே."

அவள் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பதைப் போல உட்கார்ந்திருந்தாள். அவளுடைய எதிர்கால கணவன்- அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் பல திறமைகளைக் கொண்டவனாகவும் இருப்பவன்- எங்கோ மிகவும் தூரத்தில் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவள் புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான். அவள் மெதுவாக... மெதுவாக.... அவனை நோக்கி நடந்தாள். அவனோ விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தான். திடீரென்று அவன் மறைந்துவிட்டான். அவள் "அய்யோ..." என்று உரத்த குரலில் கத்தினாள். அவள் கண்களைத் திறந்தாள். வாழ்க்கையின் மிகப் பெரிய உண்மைகள்... அவள் ஏமாற்றமடையவில்லை. அவள் மீண்டும் கண்களை மூடினாள். ஆமாம்... அவளுடைய வழிபாட்டு விக்கிரகம் தூரத்தில் தெரிந்தது. அவள் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

பத்மாக்ஷியின் திருமணம் மிகவும் ஆடம்பரமான முறையில் நடைபெற்றது. அடுத்த நாளே அவள் தன்னுடைய கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel