Lekha Books

A+ A A-

நெய் திருட்டு - Page 2

nei thirutu

“இனி நான் எடுக்க மாட்டேன்''- நான் சொன்னேன்: “நீயும் எடுக்கக்கூடாது.''

இப்படி ஒப்புக்கொண்டு நாங்கள் வெளியேறினோம். பாத்திரத்தை அது இருந்த இடத்தில் கொண்டுபோய் வைத்து விட்டு உலகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பதைப்போல நாங்கள் நடந்தோம்.

அதற்குப் பிறகு நெய்யையும் சர்க்கரையையும் நான் எடுக்கவில்லை என்பது சத்தியமான உண்மை. நெய்யின் சிறப்பைப் பற்றி எதுவும் தெரியாது. எனினும் எதுவும் இல்லாதபோது நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிட்டேன். அவ்வளவுதான். தின்பதற்கு பல பொருட்களும் வீட்டில் இருந்தன. பழுத்த பலாப்பழம் இருந்தது. மாம்பழம் இருந்தது. வறுத்த மாமிசம் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டு அலமாரியில் இருந்தது. நான் அவற்றின் மீதெல்லாம் கவனத்தைப் பதித்துக்கொண்டு அப்படியே நடந்து திரிந்தேன். நாட்கள் அப்படியே கடந்து சென்றன. நான் வெறுமனே அடிகள் வாங்க ஆரம்பித்திருந் தேன்! அப்துல் காதருக்கு காய்ச்சலும் பேதியும்!

அடி வாங்குவதற்குக் காரணம்- யாரோ நெய்யை அள்ளி அள்ளித் திருடித் தின்கிறார்கள்! பாத்திரத்திற்கு வெளியிலும் கட்டிலிலும் ரேகைகள் இருக்கின்றன. நான் அடிகள் வாங்கினேன். அப்துல் காதருக்கு இருந்த காய்ச்சல்தான் சுவாரசியமானது. அவன் அப்படியே தவிலைப்போல வீங்கிக் கொண்டிருந்தான். எப்போது பார்த்தாலும் நீரைக் குடிப்பான். எதையும் சாப்பிட முடியாது.

“பிள்ளைகளுக்கு ஏதோ காய்ச்சல்!''- உம்மாவும் நங்ஙேலியும் சொன்னார்கள். வாப்பா ஜோதிடரை அழைப்பதற்காகச் சென்றார். ஜோதிடர்கள் அப்போது பெரிய வைத்தியர்கள்.

அப்போது உம்மா அப்துல் காதரைத் தாங்கி மடியில் எடுத்து வைத்துக்கொண்டு கவலையுடன் தடவிக் கொண்டிருந்தாள்:

“கடவுளே! என் தங்கத்துக்கு என்ன ஆச்சு?''

நங்ஙேலி சொன்னாள்:

“கடவுளே! என் தங்கக் குடத்திற்கு எதுவும் இல்லையே!''

அப்துல் காதர் எந்தவொரு உணர்ச்சி மாறுதலும் இல்லாமல் காய்ச்சலுடன் தடிமனான உடம்புடன் முக்கிய மனிதனாக அங்கு உட்கார்ந்திருந்தான்.

நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். "டேய் திருடா, நீ அந்த நெய் முழுவதையும் திருடி உடல் தடித்துப் போய் அங்கு உட்கார்ந்திருக் கிறாய் அல்லவா?' என்பதைப் போல நான் பார்த்தேன்.

அவனுக்கு எந்தவொரு கூச்சமும் இல்லை. ஜோதிடர் வந்தார். அதற்குப் பிறகு வேறொரு வைத்தியரான வேலன் வந்தார். அது முடிந்ததும் முஸல்யார் வந்தார்.

நாட்கள் அப்படியே போய்க் கொண்டிருந்தன. நெய் குறைந்து கொண்டு வந்தது. எப்போதும்போல அடிகளை நான் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்துல் காதர் தவிலாக மாறிக் கொண்டிருந்தான். அவன் மருந்து எதையும் குடிப்பதில்லை. யார் கண்ணிலும் படாமல் அவன் போய் விடுவான். எப்போதாவது கொஞ்சம் சாதம் சாப்பிடுவான். அவன் நோய் வாய்ப்பட்டவனாக இருந்ததால் எல்லாரும் அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு எந்தவொரு களைப்பும் இல்லை. அப்படிக் காட்டிக்கொள்வான். பரவாயில்லைடா!

தினமும் அவன் நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிடுகிறான் என்ற விஷயம் எனக்குத் தெரியும். ஆனால் யாரிடம் கூறுவது? கூறினால் யாரும் நம்புவதில்லை.

ஒருநாள் நான் அவனுக்கு கொஞ்சம் வறுத்த மாமிசத்தைக் கொடுத்தேன். யாருக்கும் தெரியாமல் நான் அதை அலமாரியில் இருந்து திருடி எடுத்தேன். அவன் மாமிசத்தை வாங்கிச் சாப்பிட்டான். நான் சொன்னேன்:

“டேய், நீ என்னுடைய தம்பி! உண்மையைச் சொல்லு. நீ இப்படித் தவிலாக மாறியது எப்படித் தெரியுமா? நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிட்டுத் தான்...''

“சும்மா போங்க அண்ணா. எனக்குக் காய்ச்சல் என்று சொல்லலையா?''

அவனுடைய திருட்டுத்தனத்தை பொதுமக்களுக்கு முன்னால் எப்படிக் கொண்டு வருவேன்? சொன்னால், யார் நம்புவார்கள்? எனினும் நான் உம்மாவிடம் சொன்னேன். நங்ஙேலியிடமும் சொன்னேன். நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிட்டுத் தீர்க்கும் பெரிய திருடன் அப்துல் காதர்!

சொன்னதைப்போலவே யாரும் நம்பவில்லை. என்னுடைய இதயத்தின் புனிதத் தன்மையால் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு வெள்ளிக் கிழமை. வாப்பா ஜும்மா தொழுவதற்காக பள்ளிவாசலுக்குப் போயிருந்தார். உம்மா சில பெண்களுடன் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு பேன் பார்த்துக் கொண்டே, ஊர் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சோடு பேச்சாக அப்துல்காதரின் புனித நோயைப் பற்றியும் சொன்னாள். அவற்றை யெல்லாம் கேட்ட நான் வீட்டிற்கு வந்தேன். நங்ஙேலி தூங்கிக் கொண்டிருந்தாள். சமையலறைக்குள் நுழைந்து நான் சிறு சிறு சோதனைகளை நடத்தினேன். சிலவற்றைக் கையை நுழைத்து எடுத்துத் தின்றேன். பிறகு வீட்டிற்குள்ளிருந்து வராந்தாவை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தேன். வாப்பா படுக்கும் அறையில் ஏதோ அசைவு... ஒரு கருமுரா சத்தம்! நான் மெதுவாகப் பார்த்தேன். வாப்பாவின் கட்டிலுக்குக் கீழே இரண்டு கால்களைப் பார்த்தேன். அவற்றில் ஒன்று ஊனமான கால்.

அப்துல் காதர் நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்!

நான் மெதுவாக, மிகவும் மெதுவாக வெளியே சென்று ஓடி உம்மாவின் அருகில் போனேன்.

“அப்துல் காதரின் காய்ச்சலைப் பார்க்கணுமா? வாங்க...''

எல்லாரையும் நான் அழைத்துக்கொண்டு வந்து மெதுவாக வாசற்படியில் நிறுத்தினேன். நான் உள்ளே நுழைந்து இரண்டு கதவுகளையும் ஒரு நொடியில் திறந்து விரித்துவிட்டேன்.

அப்துல் காதர் குழியாக இருந்த கிண்ணத்தில் நெய்யையும் சர்க்கரையையும் தின்றவாறு கட்டிலுக்கு அடியில் உட்கார்ந்திருந்தான்!

அவனை நான் பாத்திரத்துடன் பிடித்து வெளியே கொண்டு வந்தேன். உம்மா அவனைத் தாறுமாறாக அடித்தாள். ஆரவாரம் கேட்டு நங்ஙேலி கண்விழித்துவிட்டாள். விஷயத்தைத் தெரிந்து நங்ஙேலியும் அவனை அடித்தாள்.

அந்த அருமையான காட்சியைப் பார்த்துக் கொண்டே நான் நின்றிருந்தேன்.

வாப்பா வந்ததும் அவரும் அவனை அடித்தார்.

இவை எல்லாம் முடிந்ததும் தனியாக இருக்கும்போது அவன் என்னிடம் கேட்டான்:

“அண்ணா, நான் உங்களோட சின்ன தம்பிதானே! என்னை எதற்குக் காட்டிக் கொடுத்தீங்க?''

நான் சொன்னேன்:

“பெரும் திருடா! உனக்காக நான் எவ்வளவு அடிகள் வாங்கியிருப்பேன்! அப்ப நீ நினைச்சியா அண்ணன்றதை- பெரும் திருடா!''

Page Divider

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel