
ஒரு ஆங்கில மாத இதழில் ஒரு கட்டுரை. இன்று இந்த பூமியில் நாம் காணும் உயிரினங்கள் முன்பும் இருந்தன. எத்தனையோ உயிரினங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இப்படி பூச்சிகளும், மிருகங்களும், பறவைகளும், மீன்களும், செடிகளும், மரங்களும் மட்டுமே இந்த பூமியில் இருந்தன. இப்படி எத்தனையோ ஆயிரம் லட்சம்... கோடி என்றுகூட கூறலாம். வருடங்கள்... இந்த நிலைதான் நிலவியது. அப்போது முந்தா நாள் என்று சொல்வது மாதிரி பத்தோ, பதினைந்தோ கோடி வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சில மனிதக் குரங்குகள்... அவை ஏதோ சில காரணங்களுக்காக மரங்களில் இருந்து கீழே விழவோ, மரத்துக்கு மரம் தாவவோ செய்கின்றன. அவை புல்வெளிகளில் நான்கு கால்களாலும் ஓடுகின்றன. காலம் கடந்தோடுகிறது. அவற்றில் சில குரங்குகளோ அல்லது அவற்றின் பின் தோன்றல்களோ இரண்டு கால்களால் எழுந்து நிற்கின்றன. காலப்போக்கில் அவற்றின் கைகளின் நீளங்கள் குறைகின்றன. மரக்கொம்புகளால் இரைகளையும் எதிரிகளையும் அவை அடித்து வீழ்த்துகின்றன. குகைகளில் வசிக்க ஆரம்பிக்கின்றன. குளிரில் இருந்தும் உஷ்ணத்தில் இருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மிருகங்களின் தோல்களால் உடலை மறைக்கின்றன. தீயைப் பயன்படுத்தத் தொடங்குகின்றன. காலம் கடக்கிறது. உலகத்தில் பல பாகங்களுக்கும் அவர்கள் பிரிகிறார்கள். நம்பிக்கைகள், மதம் என்று பலவும் உண்டாகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்களைப் பெற்று இன்றைய மனிதர்களாக நாம் முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.
நான் இப்போது சொன்னதைவிட மிகவும் அருமையாக அந்த மாத இதழில் எழுதப்பட்டிருந்தது. ஒரு அறிவியல் அறிஞர் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையை அந்த சந்நியாசி எடுத்து கடைசி வரை படித்தார். அதற்குப் பிறகு நாங்கள் அந்தக் கட்டுரை குறித்துப் பேச ஆரம்பித்தோம். அவர் சந்நியாசம் தொடங்கி நாற்பது, நாற்பத்தைந்து வருடங்களாகிவிட்டன. ஆங்கிலம் தவிர இன்னும் சில இந்திய மொழிகளும் அவருக்குத் தெரியும். எவ்வளவோ விஷயங்களை அவர் படித்தார். இல்லாமலே போய்விட்ட மதங்களையும், இப்போது இருக்கும் மதங்களையும் பற்றி படித்தார். கடைசியில் விரக்தி தோன்றி, சந்நியாசியாகிவிட்டார். அவர் ஒரு காலத்தில் லைப்ரேரியனாக இருந்தவர். பல சந்நியாசிகளுடன் தங்கி இருந்திருக்கிறார். நானும்தான். மலைகளிலும், குகைகளிலும், பாலைவனங்களிலும்... அந்த வகையில் நாங்கள் பேசிக்கொண்டிருப்பதற்கு விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.
சுற்றிலும் மரங்கள் இருக்க, தனியாக அமைந்திருந்தது எங்கள் வீடு. இங்கே மகளின் தாயும், மகளும், நானும் மட்டும்தான் பேசக் கூடியவர்கள். பேச முடியாதவர்கள்- நான்கு பசுக்கள், பத்து பதினெட்டுக் கோழிகள், ஒரு நாய்க்குட்டி, பிறகு அவ்வப்போது வரும் விருந்தாளிகளாக சில காகங்கள், இரண்டு பருந்துகள். இவை இரண்டும் "க்...கீ” என்று கத்தியவாறு மரக்கிளைகளில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கும். மகளின் தாய் வளர்க்கும் நல்ல கலப்பின விருத்தியில் பிறந்த கோழிக் குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு போய்ச் சாப்பிடுவது தான் இவற்றின் வேலை. மகளின் தாய், பருந்துகளின் வம்சத்தையே சதா நேரமும் சாபமிட்டு அழிக்க நினைப்பாள். ஆண் இனத்தின் இரக்கமில்லாத தன்மையை ஒரு பிடி பிடிப்பாள். இந்த வீடு இருக்கின்ற நிலத்தின் அளவு இரண்டு ஏக்கர். எனக்குத் தெரிந்த வரையில் ஆண் என்று இங்கு இருப்பது நானும், ஒரு ஒயிட் லெகான் சேவலும் மட்டும்தான். ஒயிட் லெகான் சேவலுக்கு அழகான பதினேழு மனைவிகள் இருக்கிறார்கள். அவனைப் பார்த்து, பருந்தை விரட்டி யடிக்கும்படி கூறுவது முறைதானா? தர்மமான செயலா? என்னை எடுத்துக்கொண்டால் நான் உலக இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வேலை எப்போதும் இதுதான். எங்களுடைய இந்த இடத்திற்கு சில நேரங்களில் கீரிகள் வருவது உண்டு. அவை எங்கே தங்குகின்றன என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அருகில் இருக்கிற மலை இடுக்குகளில் அவை வசிக்கலாம். எப்போதுமே இங்கு இருப்பவர்கள் சாரைகளும் பாம்புகளும். பாம்புகளில் இரண்டு வகை இருக்கின்றன. வெளுத்த வரிகள் உள்ள விஷம் இல்லாத பாம்பு ஒருவகை. இன்னொரு வகை விஷமுள்ள மூர்க்கன் பாம்பு, கீரி, சாரை, பாம்பு- மூன்று பேருக்குமே கோழிக்குஞ்சு என்றால் உயிர். நரிகூட இங்கு இருக்கிறது. பனை எறும்பும் இங்கு உண்டு. இவர்கள் ஒருபுறமிருக்க, நீளமான பெரிய கறுத்த தேள்கள், கரையான்கள் ஆகியவையும் உண்டு. எலிகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. தவளைகளும் இங்கு இருக்கின்றன. மூன்று நான்கு ஆமைகளும். இது இப்படி இருக்க, ஒரு பாம்பையோ தேளையோ உடனடியாகக் காட்டச் சொன்னால், மை போட்டுப் பார்த்தால்கூட அவற்றை நம்மால் காட்ட முடியாது. சொல்லப்போனால்- அவை எல்லாமே பேய்களைப் போல, திடீரென்று வீட்டுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும். பகல் நேரங்களில் பாம்புகள் வந்தால் கோழிகள் கொக்கரிக்கும். பறவைகள் கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் பண்ணும். பறவைகள் பலவிதம். எல்லாம் இங்கு உண்டு. பட்டாம்பூச்சிகள், எறும்புகள், ஈக்கள், புழுக்கள், வண்டுகள் என்று எல்லா உயிரினங் களுமே பூமிக்குச் சொந்தக்காரர்கள்தாம். (இந்த வீடு இருக்கிற இரண்டு ஏக்கர் நிலமும் நான் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு விலைக்கு வாங்கியது. இந்த வகையில் பதிவுக் கட்டணம் என்று அரசாங்கம் மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்னிடம் வாங்கியிருக்கிறது. வருடம்தோறும் தவறாமல் வரி கட்டுகிறேன். வருமான வரி கட்டுவதும் ஒழுங்காக நடக்கிறது. அப்படியானால் பருந்து, எலி, பாம்பு, தேள், நரி ஆகியவர்களிடமிருந்து எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா?)
எல்லாவற்றுக்கும் ஆத்மா என்று ஒன்று இருக்கிறது. ரோக அணுக்கள், புல், செடிகள், மரங்கள், ஈ, கொசு, முட்டை, பாம்பு, எலி, நரி, பசு, நாய், பன்றி, மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள், வவ்வால்கள், ஆமைகள், மனிதர்கள்- ஆத்மா எல்லாருக்குமே இருக்கிறது. சந்நியாசி இப்படித்தான் சொன்னார். அப்படியானால் ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவைச் சாப்பிடுவது சரியா? இந்துக்களில் பெரும்பாலானவர்களுக்கு இதில் விருப்பமில்லை. பார்ஸிகள், யகுதன்மார்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியவர்களுக்கு இந்த விஷயத்தில் தெளிவான கருத்து கிடையாது. என்ன இருந்தாலும் யாரையும் துன்புறுத்தாமல் வாழ முடிந்தால், மனிதனைப் பொறுத்தவரை அது ஒரு மிகப் பெரிய விஷயம்தான். என்ன மிகப்பெரிய விஷயம்? நாம் மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து இந்த பூமியில் வாழ்கிறோம். இந்த பூமி ஒரு உருண்டை இது இரவும் பகலும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது. அதோடு சூரியனையும் இது சுற்றுகிறது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook