Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 10

mana-penn

பரபரப்புடன் லலிதா சொன்னாள்: “அது முடியாத விஷயம்... அது அவரை மிகவும் கோபம் கொள்ளச் செய்யும்.'' இதைச் சொல்லிவிட்டு அவள் வேகமாக வெளியேறினாள்.

கிரின் கேட்டான் : “யார் இந்த சேகர் அண்ணா, அக்கா?''

மனோரமா அதற்குப் பதில் சொன்னாள்: “அவன் அந்த பெரிய கேட்டுகளை கொண்ட பெரிய வீட்டில் இருக்கிறான். தெருவின் ஆரம்பத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த வீடு.''

தலையை ஆட்டிக்கொண்டே கிரின் சொன்னான்: “ஓ... அந்த வீடா? அப்படியென்றால் நபின்பாபு இவர்களுக்குச் சொந்தமா?''

மனோரமா தன் மகளை ஒருமுறை பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்: “ஏதோ உறவு! அந்த பேராசை பிடித்த கிழவர் லலிதாவின் குடும்பத்திற்குச் சொந்தமாக இருக்கும் அந்தச் சிறிய நிலத்தையும் அபகரித்துக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்.''

கிரின் அவள் கூறுவதை வியப்புடன் பார்த்தான்.

மனோரமா தொடர்ந்து அவனிடம் கடந்த வருடம் குருச்சரணின் இரண்டாவது மகளின் திருமணம் பொருளாதார பிரச்சினைகளால் எப்படி தடைப்பட்டு நின்றது என்பதையும், நபின் ராய் மிக அதிக வட்டிக்கு எப்படி பணத்தைக் கடனாகத் தந்தார் என்பதையும், அதற்கு ஈடாக அந்த வீட்டை எப்படி தனக்கு அடமானமாகப் பெற்றுக் கொண்டார் என்பதையும் கூறினாள். லலிதாவின் மாமாவால் அந்தப் பணத்தைத் திரும்ப தருவது என்பது இயலாத விஷயம். இறுதியாக நபின் ராய் அந்த வீட்டைத் தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொள்வார்.

இந்த உண்மைகள் அனைத்தையும் கூறிய மனோரமா, அந்த கிழவர் குருச்சரணின் சிதிலமடைந்த வீட்டைத் தரைமட்டமாக ஆக்கி அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய வீட்டை தன்னுடைய இளைய மகன் சேகருக்கு கட்டித்தரவேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டிருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு மகனுக்கும் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்க அவர் எண்ணியிருக்கிறார் என்பதையும், அதை ஒரு கெட்ட எண்ணம் என்று கூறுவதற்கில்லை என்றும் கூறினாள்.

அளவுக்கு மீறிய வருத்தம் கிரினை வந்து ஆக்கிரமித்தது. அவன் கேட்டான் : “சரி... அக்கா குருச்சரண் பாபுவிற்கு வேறு மகள்களும் இருக்கிறார்களே! அவர்களை அவர் எப்படித் திருமணம் செய்து கொடுப்பார்?''

மனோரமா அதற்கு இப்படித்தான் பதில் கூறினாள்: “அவருடைய சொந்த மகள்கள் மட்டுமல்ல - லலிதாவும் இருக்கிறாள். அவளுக்கு பெற்றோர் இல்லை. அவளுடைய திருமண விஷயத்திற்கும் முழு பொறுப்பாளியாக இருப்பவர் அந்த ஏழை மனிதர்தான். அவள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறாள். இந்த வருடம் அவளுக்கு எப்படியும் திருமணம் நடந்தாக வேண்டும். அவர்கள் இருக்கும் பிராமண வகுப்பில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை. ஜாதி விஷயத்தில் எல்லாரும் மிகவும் பிடிவாதமாக இருப்பவர்கள். நம்ம பிராமோக்கள் எவ்வளவோ மேல், கிரின்...''

கிரின் கூறுவதற்கு எதுவுமில்லை. அவளே தொடர்ந்து சொன்னாள்: “ஒரு நாள் அவளுடைய அத்தை எனக்கு முன்னால் இருந்து கொண்டு லலிதாவைப் பற்றிப் பேசும்போது அழ ஆரம்பித்து விட்டாள். அவளின் திருமணத்திற்காக என்ன ஏற்பாடு செய்ய வேண்டும், எப்படிச் செய்வது என்பதைப் பற்றியெல்லாம் அவளுக்கு எந்த திட்டமும் இல்லை. அவளைப் பற்றிய கவலைகளால், குருச்சரண் பாபு தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறார். கிரின் முங்கரில் இருக்கும் உன்னுடைய நண்பர்களின் கூட்டத்தில் அந்தப் பெண்ணை வேறு எதுவும் கேட்காமல் செய்து கொள்வதற்கு யாராவது தயாராக இருப்பார்களா? லலிதாவைப் போன்ற வைரத்திற்கு நிகரான ஒரு பெண்ணைக் கண்டு பிடிப்பது என்பது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.''

குழப்பம் நிறைந்த மனநிலைக்கு ஆளான கிரின் உயிரற்ற ஒரு புன்சிரிப்புடன் சொன்னான்: “நான் நண்பர்களில் யாரைத் தேடுவது, அக்கா? ஆனால், நான் பணத்தால் உதவ முடியும்.''

ஒரு டாக்டர் என்ற வகையில், கிரினின் தந்தையிடம் ஏராளமான பணமும், சொத்துகளும் இருந்தன. கிரின் ஒருவன்தான் அவற்றுக்கு வாரிசாக இருப்பவன்.

மனோரமா கேட்டாள்: “நீ அவர்களுக்கு பணம் கடனாகத் தருவியா?''

“அது கடனாகத்தான் இருக்க வேண்டுமா? அவர் அப்படி நினைத்தால், குருச்சரண் பாபு பணத்தைத் திருப்பித் தரட்டும். அப்படி இல்லையென்றாலும் சரிதான்.''

அது மனோரமாவை ஆச்சரியம் கொள்ளச் செய்தது. அவள் கேட்டாள்: “ஆனால், கிரின்... அவர்களுக்கு அந்த அளவிற்கு பணத்தைக் கொடுப்பதால் உனக்கு என்ன லாபம்? அவர்கள் நம்முடைய சொந்தக்காரர்களும் இல்லை. நம்முடைய ஜாதியைச் சேர்ந்தவர்களும் இல்லை. காரணமே இல்லாமல் இந்தக் காலத்தில் யார் உதவி செய்கிறார்கள்?''

கிரின் தன்னுடைய அக்காவைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னான்: “ அவர்கள் நம் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் வங்காளிகள். இல்லையா? அவர் கடுமையான தேவையில் இருக்கிறார். என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. நீங்க ஏன் விஷயத்தை குழப்புறீங்க, அக்கா? அவர் வாங்கிக் கொள்வதற்குத் தயாராக இருந்தால், நான் பணம் தருவதற்குத் தயாராக இருக்கிறேன். லலிதா அவர்களுக்கு யாரும் இல்லை. நமக்கும் யாரும் இல்லை. அவளுடைய திருமணத்திற்கு ஆகக்கூடிய முழுச் செலவையும் நான் ஏற்றுக் கொண்டு விட்டால்தான் என்ன?''

மனோரமா - குறிப்பாக அவனுடைய அந்த பதிலைக் கேட்டு சந்தோஷப்படவில்லை. உண்மையாகச் சொல்வதாக இருந்தால், அந்த பண விவகாரத்தில் அவள் லாபமோ நஷ்டமோ அடையப் போவதில்லை. ஆனால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு திரும்ப என்ன கிடைக்கும் என்பதை விசாரிக்காமலே மிகப்பெரிய தொகையைத் தருவது என்னும் செயல் பெரும்பாலான பெண்களை மிகவும் ஆழமாக பாதிக்கவே செய்யும்.

அவர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடலை மிகவும் அமைதியாக இருந்து கொண்டு கவனித்துக் கொண்டிருந்த சாரு உற்சாகமடைந்து, எழுச்சி நிறைந்த குரலில் கூறினாள்: “தயவுசெய்து அதை செய்யுங்க மாமா. நான் போய் லலிதாவின் அத்தையிடம் இந்தச் செய்தியைக் கூறுகிறேன்.''

அவள் உடனடியாக தன் தாயிடமிருந்து அவளுடைய தலையீட்டிற்காக பலமான திட்டுதலை வாங்கினாள்: “சாரு, அமைதியாக இரு. இந்த மாதிரி உரையாடல்களில் சிறு பிள்ளைகளுக்கு எந்தவொரு வேலையும் இருக்கக்கூடாது. அப்படி எதுவும் கூறுவதாக இருந்தால், நான் அதை கூறிக் கொள்கிறேன்.''

கிரின் சொன்னான்: “நீங்க அதைச் செய்யுங்க அக்கா. நேற்றைக்கு முந்தைய நாள் நான் குரச்சரண் பாபுவை சாலையோரத்தில் பார்த்து, கொஞ்ச நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிகவும் எளிதான மனிதராக இருந்தார். நீங்க என்ன சொல்றீங்க?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel