
எது எப்படி இருந்தாலும், தேவதத்தன் பெண்கள் விஷயத்தில் பாராமுகம் கொண்டவனாக இருந்தான் என்பது மட்டும் உண்மை.
நாராயணனுக்கும் உண்ணிசங்கரனுக்கும் கல்லூரியில் தோழிகள் இருந்தார்கள். அவர்களுடைய புத்தகங்களிலிருந்து இளம் பெண்களின் புகைப்படங்கள் தரையில் விழுந்தன. வீட்டிலிருந்த பெண்கள் அவற்றைப் பார்த்துவிட்டார்கள்.
அவர்களுக்கு ஊரிலும் சில தொடர்புகள் இருந்தன. கோடை விடுமுறைக்கு வந்திருந்தபோது தேவதத்தன் வீட்டின் அறைக்குள் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது நாராயணனும் உண்ணி சங்கரனும் பக்கத்திலிருந்த நாயர் வீடுகளுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
“வாழ்க்கைன்னா சுவாரசியம் இருக்க வேண்டாமா, குழந்தை!” ராமன் நாயர் தேவதத்தனிடம் கேட்டார்.
தேவதத்தன் அமைதியான குரலில் அதற்குப் பதில் சொன்னான்:
“எனக்கு சுவாரசியமா இருக்குறதைத் தானே நான் செய்ய முடியும்? நீங்க எதற்குத் தேவையில்லாம என்னைக் கஷ்டப்படுத்துறீங்க?”
ராமன் நாயர் தன்னுடைய படத்தைத் தாழ்த்திக் கொண்டார்.
“இல்ல... சும்மா கேட்டேன்.”
“கேட்க வேண்டியதே இல்ல...”
தொடர்ந்து அவன் புத்தகத்தில் தன் பார்வையைச் செலுத்தினான்.
எமன் பின் வாங்கினார்.
தேர்வு முடிவுகள் வந்தன. உண்ணித் திருமேனிமார்கள் மூன்று பேரும் தேர்ச்சி பெற்றார்கள். தேவதத்தனுக்கு முதல் வகுப்பும் ரேங்க்கும் கிடைத்தன. அதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்படவில்லை.
தேர்வு முடிவு வந்து சிறிது நாட்களில் நாராயணனுக்கு வேலைக்கான உத்தரவு வந்தது. தூரத்திலிருந்த மதராஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேய நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது. வெட்டிக்காட்டு ஒளஸேப்பின் மகன் தான் அவனுக்கு அந்த வேலையைத் தயார் பண்ணித் தந்தான்.
“கிறிஸ்தவன் நன்றி உள்ளவன்...” – ராமன் நாயர் சொன்னார்.
“நல்லது நடந்திருக்கு”- வீட்டிலிருந்த சில அந்தர்ஜனப் பெண்கள் சந்தோஷக் குரலில் சொன்னார்கள். நாராயணனின் பாட்டி அழுதாள்:
“என்ன இருந்தாலும் என் குழந்தை வேலைக்குப் போறது மாதிரி ஆயிடுச்சே! இந்தக் குடும்பத்தில இருந்து இதுவரை யாரும் வேலைக்குப் போனதே இல்லை...”
“இப்போ காலம் வேற ஆச்சே!”- ராமன் நாயர் சொன்னார்: “இதுல வருத்தப்படுறதுக்கு எதுவுமே இல்ல. இனி வர்ற காலத்துல வேலை செய்து வாழ்றதுதான் மதிப்பு உள்ள விஷயமா இருக்கும்.”
அதைக் கேட்டு தேவதத்தனுக்குச் சந்தோஷமாக இருந்தது. அவன் ராமன் நாயரிடம் சொன்னான்:
“இப்போத்தான் சரியான ஒரு உண்மையைச் சொன்னீங்க, ராமன் நாயர்.”
“சரிதான்...”- உண்ணி சங்கரனும் அதை ஒத்துக் கொண்டான்.
நாராயணனுக்கு மதராஸ் நகரத்திற்கு வண்டி ஏற்றி அனுப்பும்போது, அவன் சொன்னான்:
“எங்க விஷயத்தையும் நினைச்சுப் பார்க்கணும், அண்ணே!”
“கட்டாயமா...”
நாராயணன் நினைத்துப் பார்த்தான்.
அவன் வேலையில் சேர்ந்து மூன்று மாதங்களில் உண்ணி சங்கரனை அங்கு அழைத்துக் கொண்டான். உண்ணி சங்கரனும் மதராஸுக்கு வண்டி ஏறினான்.
“இது என்ன, தேவதத்தனை அழைக்காம உண்ணியை அவன் அழைச்சிருக்கான்!”- அந்தர்ஜனப் பெண்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.
“அது ஒரு பிரச்சினையே இல்ல...”- தேவதத்தன் சொன்னான்.
அவனுக்கு அதற்கான காரணம் என்னவென்று நன்றாகத் தெரியும். உண்ணிசங்கரனை அழைத்தது வேலைக்காக அல்ல. தட்டெழுத்து படிப்பதற்காக. நல்ல ஒரு வேலையைப் பார்த்து வைத்த பின்பே தான் தேவதத்தனை அழைக்கப் போவதாக நாராயணன் எழுதியிருந்தான்.
தேவதத்தன் வீட்டில் அமர்ந்து புத்தகங்களைப் படித்தான். பொருளாதாரத்தையும் தத்துவத்தையும் படித்தான். ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ, மால்த்தூஸ் ஆகியோரைப் பற்றிப் படித்து முடித்துவிட்டு மார்க்ஸுக்கு வந்தான். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ப்ளேட்டோ, டெக்கார்ட்டெ, ஹெகல் ஆகியோரைப் பற்றிப் படித்து முடித்துவிட்டு திரும்பவும் மார்க்ஸுக்கே வந்து சேர்ந்தான்.
தன்னுடைய கூர்மையான முகத்தை மேலும் கூர்மையாக வைத்துக் கொண்டு, கண்களைச் சிறிதாக ஆக்கிக்கொண்டு, கைகளைச் சுருட்டியவாறு தேவதத்தன் சொன்னான்:
“மார்க்ஸிஸம் மட்டுமே சரியான ஒரு பாதை... அப்படின்னா...”
அவனுடைய மார்க்ஸிஸம் மடத்திலிருந்து வந்ததல்ல. புத்தகத்திலிருந்து மூளைக்குள் நுழைந்தது அது. மூளைக்குள் அது ஒரு புயலையே அடித்துக் கொண்டிருந்தது.
“எல்லாம் சரிதான்... மார்க்ஸ் சொன்னது எல்லாமே...” தேவதத்தன் அந்தர்ஜனப் பெண்களிடமும் ராமன் நாயரிடமும் சொன்னான்: “கம்யூனிஸம் விட்டால் வேற பாதையே இல்ல...”
ராமன் நாயர் அந்தர்ஜனப் பெண்களிடம் எச்சரித்தார்:
“ஆபத்துதான்...”
“அதெல்லாம் வேண்டாம், தேவதத்தா”- அந்தர்ஜனப் பெண்கள் சொன்னார்கள்.
அதைக் கேட்டு தேவதத்தன் சிரித்தான்.
ஆபத்து எதுவும் இல்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். படித்து, அதுதான் சரியான பாதை என்பதை அவன் தெரிந்து வைத்திருக்கிறான். இதில் ஆபத்துக்கு எங்கே இடம் இருக்கிறது?
ஊரைச் சேர்ந்த அரசியல்வாதிகள் யாருடனும் அவன் சேரவில்லை. அவர்களின் நடவடிக்கைகள் சரியல்ல என்று அவன் நினைத்தான். மார்க்ஸிஸம் கணக்கைப் போல. அதைப் படிக்க வேண்டும். அப்போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
அதற்கு அர்த்தம் உடனடியாகக் கொடியைக் கையில் பிடிக்கவேண்டும் என்றொன்றும் இல்லையே!
தேவதத்தனின் கம்யூனிஸம் முழுமையாக அவனை மட்டுமே மையமாகக் கொண்டதாக இருந்தது. அவன் படித்தான். சிந்தித்தான். சிந்தனைகள் தலைக்குள் நுழைந்தபோது தூக்கத்தில் கணித சூத்திரங்களுக்குப் பதிலாக அவன் மார்க்ஸிஸத்தைச் சொல்ல ஆரம்பித்தான். ஒருநாள் மாளிகையின் அறைக்குள் தான் மட்டும் தனியே படுத்து உறங்கிக் கொண்டிருந்த தேவதத்தன் உரத்த குரலில் அலறினான்:
“உடைத்தெறியணும்.”
பதைபதைத்துப் போய் எழுந்த அவனுடைய தாய் அவன் இருந்த இடத்திற்கு ஏறிச் சென்றாள்.
“என்ன?”
“ஒண்ணுமில்ல...”- அவன் மீண்டும் சுருண்டு படுத்தான்.
உலகத் தொழிலாளர்கள் வர்க்கம் ஒன்று சேர்ந்து நிற்பதையும் சுரண்டிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு எதிராகப் புரட்சி செய்வதையும் அவன் கனவு கண்டான். தொழிலாளர்கள் வர்க்கத்தின் தலைவன் அவன்தான். கூட்டமாக நின்றிருந்த தொழிலாளர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களும் ஏழைகளும் இருந்தார்கள். எதிரிக் கூட்டத்தின் மத்தியில் வெட்டிக்காட்டு ஒளஸேப் மாப்பிள நின்றிருந்தான். ஏராளமான மாப்பிளமார்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் பதுங்கிக் கொண்டு நின்றிருந்தார் ராமன் நாயர்.
அந்தக் கனவிற்குப் பிறகு, தகர்ந்து போன புகழைத் திரும்பப் பெறுவதற்கான ஒரே வழி மார்க்ஸிஸம்தான் என்று தேவதத்தனுக்குத் தோன்றியது. கம்யூனிஸத்தின் காலத்தில் அதற்கு அய்க்கரமடத்தின் திருமேனி தலைமை தாங்க வேண்டும். அப்படியென்றால்தான் எப்போதும் மக்களை வழி நடத்திக் கொண்டிருந்த அந்தப் பழைய பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டிருக்க முடியும்.
தூங்கும்போது கோஷங்களை முழக்கமிடுவது அவனுடைய அன்றாடச் செயலானது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook