
உண்ணி சங்கரன் உண்மையிலேயே அதிர்ந்து போய் விட்டான். அவள் வருவாள்... கதவைத் திறந்து வைக்க வேண்டும். இதெல்லாம் உண்மையா? நடுங்கிக் கொண்டிருந்த விரல்களுக்கு மத்தியில் இருந்த பேப்பர் துண்டை அவன் திரும்பவும் வாசித்துப் பார்த்தான். அப்படித்தான் எழுதப்பட்டிருந்தது. இப்படியும் ஒரு காதலா? அவளுக்கு அந்த அளவிற்கு தைரியம் இருக்கிறதா? அந்த அய்யர் பெண்ணுக்கு? அவன் ஒரேயடியாகப் பதைபதைத்தான். அவனுடைய உடல் முழுக்க நடுக்கம்...
சாப்பாட்டைச் சிறிது முன் கூட்டியே சாப்பிட்டு முடித்தான். பையனிடம் தூங்கும்படி சொன்னான். இதயம் வேகமாக அடிக்க, அவன் அவளுக்காகக் காத்திருந்தான்.
வெளியே இரவு பிரகாசமாக இருந்தது. ஒடுகலான தெருவில் விளக்கு வெளிச்சம் பரவித் தெரிந்தது. புகைவண்டி நிலையத்திலிருந்து ஒலித்த சத்தங்கள் இரவை நடுங்கச் செய்து கொண்டிருந்தன.
பின்பக்கம் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வரும் ஆள் வருவதற்காக இருக்கும் கதவைத் திறந்து வைத்தான். பயத்துடன், எதிர்பார்ப்புடன் உண்ணி சங்கரன் காத்திருந்தான்.
சீக்கிரமே விளக்கு அணைந்தது. மற்ற வீடுகளிலும் விளக்குகள் அணைந்தன. இரவு நேரத்தின் இயற்கை வெளிச்சத்தின் தெளிவற்ற கூடாரத்திற்குள் அந்தக் காதலன் அமர்ந்திருந்தான். இப்போது என்ன செய்வது?
கடைசியில் காதலி வந்து சேர்ந்தாள்.
உண்ணி நடுங்கிக் கொண்டே எழுந்து நின்றான். என்ன செய்ய வேண்டுமென்றோ என்ன பேசுவது என்றோ எதுவும் தெரியவில்லை. அவன் தன்னுடைய அறையை நோக்கி நடந்தான். அவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.
அறைக்குள் சென்றவுடன் கதவை மூடி உண்ணி சங்கரன் விளக்கைப் போட்டான். இரத்த ஓட்டமும் ஆர்வமும் கொண்ட அந்த அய்யர் பெண் வெளிச்சம் அறையில் பரவியவுடன் சரவெடியைப் போல அப்படி அதிர்ந்து போய் அவன் மீது சாய்ந்தாள்.
உண்ணி சங்கரன் அட்டையைப் போல சுருண்டு போய் நின்றிருந்தான். பூரித்து சாய்ந்த காதலிக்கு முன்னால் என்ன செய்வதென்று தெரியாமல், சுய உணர்வை இழந்து, குழப்பமான மன நிலையுடன் காதலன் நடுங்கிக் கொண்டு நின்றிருந்தான்.
என்ன செய்வது?
எதுவும் செய்ய தோன்றவில்லை. எதுவும் செய்யவில்லை.
நாற்காலியைச் சுட்டிக்காட்டியவாறு அவன் சொன்னான்:
“உட்காரு.”
அவள் கட்டிலில் உட்கார்ந்தாள். உண்ணி நடுங்கிக் கொண்டிருந்தான். நாற்காலியில் அவன் உட்கார்ந்தான். காதலியின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஏமாற்றத்துடன் தவிப்பும் தெரிந்தது. தன்னுடைய கருமை நிறக் கண்களால் அவள் அவனைத் தின்று கொண்டிருந்தாள்.
உண்ணி அவளைப் பார்த்துப் பயந்து நடுங்கினான். அவளுடைய கண்களை நேருக்கு நேராகப் பார்க்க தனக்கு தைரியம் இல்லை என்று அவன் நினைத்தான்.
யாரும் எதுவும் பேசவில்லை. நேரம் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கவும் இல்லை.
கடைசியில் அவள் ஏமாற்றத்துடன் எழுந்தாள்: “நான் போகட்டுமா?”
“நாளைக்கு வருவியா?”
அவள் பதிலெதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.
வீடு பெருக்குபவர்கள் பயன்படுத்தும் கதவை அடைத்துவிட்டு திரும்பி வந்தபோது, அவனுக்குத் தன் மீதே வெறுப்பு தோன்றியது.
மறுநாள் அவள் காதல் கடிதம் எழுதவில்லை. அவனை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. எனினும், உண்ணி வீடு பெருக்குபவர்களுக்காக அந்தப் பின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான்.
ஆச்சரியம்! அவள் வந்தாள்.
அன்றும் சிறிது நேரம் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். சிறிது நேரம் பேசினார்கள். அவன் கொட்டாவி விட்டதும், அவள் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
ஒவ்வொரு நாளும் ஆக ஆக அவளுடைய உற்சாகமும் அவனுடைய பயமும் குறைந்து கொண்டே வந்தன.
புகை வண்டியின் சத்தத்தைத் தவிர்த்து பார்த்தால், நகரம் மிகவும் அமைதியாக இருந்தது.
உமாதேவி அந்தர்ஜனத்துடன் நாராயணன் திரும்பி வந்தபோது, அவர்களை வரவேற்பதற்காக தம்பிமார்கள் இருவரும் புகை வண்டி நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.
அண்ணி அவர்களுக்குத் தெரியாதவள் அல்ல.
வந்த நாளன்றே கோழிப் பண்ணைக்குப் போக வேண்டுமென்று பிடிவாதம் பண்ணினாள் உமாதேவி.
அதைக்கேட்டு தேவதத்தன் உற்சாகமாகிவிட்டான்.
அவன் அவளை அழைத்துக் கொண்டு போனான்.
அவனுடைய அற்புதச் செயல்களைப் பார்த்து அண்ணி திகைத்துப் போய்விட்டாள். எல்லா விஷயங்களையும் எந்த அளவிற்கு முறையாகவும், அழகாகவும் அவன் செய்திருக்கிறான்! அண்ணிக்கு அவன்மீது நல்ல மதிப்பு தோன்றியது.
தேவதத்தன் அண்ணிக்கு கோழிகளை அறிமுகம் செய்தான். தீவனத்தைப் பற்றியும் நோய், சிகிச்சை ஆகியவற்றைப் பற்றியும் சொன்னான்.
அந்தர்ஜனம் ஆச்சரியத்துடன் அவன் சொன்ன எல்லாவற்றையும் கேட்டாள்.
தேவதத்தன் கோழிகளுடன் பேசினான். அவன் அருகில் சென்றவுடன் அவை கூவின. அவனைச் சுற்றி நின்றன.
தன்னைச் சுற்றி நின்றிருந்த நூற்றுக்கணக்கான கோழிகளில் ஒன்றைத் திடீரென்று தேவதத்தன் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, அதைச் சற்று தள்ளி நிற்க வைத்தான்.
எதுவும் புரியாமல் திகைத்துப் போய் நின்றிருந்த உமாதேவி கேட்டாள்:
“என்ன விஷயம்?”
“இதுக்கு ஜலதோஷம் இருக்கு.”
“அது எப்படி தெரியும்?”- ஆச்சரியத்துடன் உமாதேவி கேட்டாள்.
“அது பார்த்தவுடனே தெரியும். அதுதான் பழக்கத்தின் குணம். அதோட கண்கள் கலங்கி இருக்குறதைப் பார்த்தீங்கள்ல? ஒரு வாட்டம் இருக்குறது தெரியுதுல்ல?”
தேவதத்தனின் கூர்மையான அறிவு குறித்து ஊரெங்கும் உலாவிக் கொண்டிருக்கும் கதைகளைப் பற்றி ஆச்சரியப்பட்டதில் வியப்பேதும் இல்லை என்று நினைத்தாள் உமாதேவி. எவ்வளவு கோழிகளுக்கு நடுவிலிருந்து அவன் அந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட கோழியை ஒரே பார்வையில் கண்டுபிடித்தான்!
“இப்போ இதைக் கண்டு பிடிக்கலைன்னா, விஷயம் பிரச்சினைக் குரியதா ஆயிடும்”- தேவதத்தன் சொன்னான்:“மனிதர்கள் மாதிரிதான் கோழிகளும் திடீர்னு நோய் வந்திடும். அந்த நோய் மற்ற கோழிகளுக்கும் பரவ ஆரம்பிச்சிடும். அதற்குப் பிறகு... அவ்வளவுதான். இப்போ பார்த்தது நல்லதா போச்சு.”
“உண்மையிலேயே இது ஆச்சரியமாகத்தான் இருக்கு!”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல... எல்லாத்துக்கும் பழக்கம்தான் காரணம்.”
கழுத்தைப் பிடித்து தூக்கிய கோழியை தேவதத்தன் அறைக்குக் கொண்டு வந்தான். மருந்து கொடுத்தான். அதைத் தனியாக ஒரு இடத்தில் அடைத்துப் பூட்டினான். அதற்கு முன்பு அந்தக் கோழிக்கு முத்தம் தந்தான்.
“பரவாயில்லை”- அவன் அந்தக் கோழியிடம் சொன்னான்: “நல்லா உறங்கு. நாளைக்கு எல்லாம் சரியாயிடும். அப்போ நண்பர்கள்கூட போய் இருக்கலாம். தெரியுதா?”
கோழி அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதைப் போல கத்தியது... உறங்கியது...
“தேவதத்தனுக்குக் கோழியோட மொழி நல்லா தெரியுது”- இரவில் உமாதேவி அந்தர்ஜனம் தன் கணவனிடம் சொன்னான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook