
“எப்போ?”
புருஷன் தன்னையும் மீறிய ஒரு உணர்வில் கேட்டான்.
“சீக்கிரமே ஒரு வேளை... இன்னைக்கே வரலாம். இல்லாட்டி ஒரு யுகம் கழிச்சு... எது எப்படியோ நான் உங்களோட ராஜாவா ஆவேன். எல்லாரோடயும்...”
“எங்களுக்கு ராஜான்னு யாரும் கிடையாது” - பயந்து நடுங்கியவாறு புருஷன் சொன்னான். “எங்களுக்கு ராஜா ஒரு பிரச்சினையே இல்லை...”
“நிச்சயம் பிரச்சினைதான்...” - சேஷன் சொன்னார். “இல்லாட்டி நான் பிரச்சினையை உண்டாக்குவேன்.”
ஒருவித பரபரப்புடன் சேஷன் தனக்கே உரிய மொழியில் பேசுகிறார் என்பதை புருஷன் புரிந்து கொண்டான். இந்த பரந்து கிடக்கும் உலகத்தில் யாருக்குமே தெரியாத சில ரகசியங்கள் தனக்குத் தெரியப் போகின்றன என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான்.
“எப்படி?” - அவன் கேட்டான்.
“மூணாவது வண்டியில் என்ன வருதுன்னு உனக்குத் தெரியுமா?”
சேஷன் கேட்டார்.
“தெரியாது.”
சேஷன் அதைக் கேட்டு உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரித்தார். அவரின் பற்கள் அந்தக் காலை நேர வெயிலில் பிரகாசித்தன.
“அவளோட எலும்புக்கூடு”- அவர் உரத்த குரலில் சொன்னார்.
“அவளோட எலும்புக் கூடு என்னைத் தேடிப் பயணம் செஞ்சு வருது. பொறுத்திருந்து பார்...”
அதைச் சொல்லிவிட்டு, அவர் ஓடினார். காட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் ஒற்றையடிப்பாதை வழியே அவர் ஓடி மறைந்தார்.
அவர் போய் மறைந்தவுடன், ஒரு பெரிய புயல் அடித்து ஓய்ந்ததைப் போல் உணர்ந்தான் புருஷன்.
அவன் மெதுவாக நடந்தான். அந்தக் காலை வேளையிலேயே அவன் நன்றாக வியர்த்து விட்டிருந்தான்.
நடக்க நடக்க பாதை நீள்வதைப் போல் அவனுக்குத் தோன்றியது. எப்போது பார்த்தாலும் சிறிது தூரத்தில் கிராமத்து மனிதர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால், அவன் நடந்து செல்லும் பாதை மட்டும் இன்னும் முடியாமலே இருந்தது.
மதிய நேரம் ஆனபோது அவன் கிராமத்தின் எல்லையை அடைந்தான். காட்டின் சத்தங்கள் அவனிடமிருந்து இறுதி விடை பெற்றன. அவன் மனதில் அப்போது ஒருவித துக்கம் சூழ்ந்தது. வாழ்க்கையில் இனியொரு முறை தான் காட்டின் இனிமையான இசையைக் கேட்க முடியாது என்பதை நினைத்துப் பார்த்த போது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அந்த நினைப்பு சில நிமிடங்களுக்கு அவனை மவுனியாக ஆக்கியது.
கிராமத்துக்குப் போகும் வழியின் ஆரம்பத்தில் சில மனிதர்கள் காத்து நின்றிருந்தார்கள். காட்டிலிருந்து வரும் அவனை எல்லோரும் சூழ்ந்து கொண்டனர். அவர்களை அவன் அடுத்த நிமிடம் யார் யாரென்று அடையாளம் கண்டு கொண்டான். ஆனால், ஆச்சரியப்பட்டு நிற்கவோ மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிலையிலோ அவர்கள் இல்லை. யாரும் குசலம் விசாரிக்கவில்லை. எல்லோரின் முகங்களிலும் பட்டினியின், வறுமையின் பிரதிபலிப்பு தெரிந்தது. எல்லோருக்கும் தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். அவர்கள் அதை திரும்பத் திரும்ப கேட்டனர்.
“காட்டுல தீ பிடிச்சிருக்கா?”
“சீக்கிரம் வண்டி வருமா?”
“மூணாவது வண்டியோட சத்தத்தை நீங்க அங்கே கேட்டீங்களா?”
புருஷன் அவர்களின் கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பதில் அவன் மனதில் இருக்கவே செய்தது. தன்னுடைய பதில்கள் அவர்களிடம் உண்டாக்கப் போகும் பாதிப்பையும் அவன் உணர்ந்தே இருந்தான்.
இருந்தாலும் அவன் எந்தவித பதிலும் கூறாமல் வெறுமனே அமைதியாக இருந்தான். எல்லாமே தெரிந்திருந்தும் ஒன்றுமே தெரியாதது போல் இருக்கும் ஒரு துறவியைப் போல் அவன் நடந்து கொண்டான். மிகவும் அமைதியாக, மக்கள் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு பாதையை உண்டாக்கிக் கொண்டு அவன் தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான்.
அவன் எந்த பதிலும் சொல்லாததால், அவனை அவர்கள் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. காட்டிலிருந்து வரும் ஒற்றையடிப் பாதையை நோக்கி மீண்டும் அவர்களின் பார்வை பதிந்தது.
புருஷன் மீண்டும் திரும்பி வந்தது அவன் தந்தையிடம் குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு எந்தவித ஆச்சரியத்தையும் உண்டாக்கவில்லை.
வாசலின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் சுருண்டு படுத்துக் கிடந்தான் கிழவன். யாரோ வரும் ஓசையைக் கேட்டதும், அவன் தலையை உயர்த்திப் பார்த்தான்.
புருஷன் மன்னிப்புக் கேட்கிற பாவனையில் தன் தந்தையின் முகத்தையே பார்த்தான். கிழவன் மிகவும் மெலிந்து தளர்ந்து போய் காணப்பட்டான். பட்டினியும், வறுமையும் அவன் உடம்பில் பலவித பாதிப்புகளையும் உண்டாக்கிவிட்டிருந்தன.
“நீ எங்கேயிருந்து வர்ற?” - அவுசேப் கேட்டான்.
“காட்டுல இருந்து...” - அவன் சொன்னான்.
“காட்டுல இருந்தா?” - கிழவன் வேகமாக எழ முயற்சித்தான். அவன் கண்களில் புது உற்சாகம் பிறந்தது மாதிரி இருந்தது. “அங்கே என்ன விசேஷம்?”
“ஒரு விசேஷமும் இல்ல...” - புருஷன் சொன்னான்.
“வண்டி புறப்பட்டிருச்சா?”
புருஷன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.
“நீ வண்டியைப் பார்த்தியா?”
“இல்ல...”
“எப்போ வரும்னு தெரியுமா?”
அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். சேஷன் சொன்ன விஷயத்தை அவன் நினைத்துப் பார்த்தான்.
“சீக்கிரம் வரும். ஒரு வேளை இன்னைக்கே வந்தாலும் வரலாம். இல்லாட்டி ஒரு யுகம் கழிச்சு...”
அவனின் தந்தையின் கேள்விக்கு அவன் சொல்ல வேண்டிய பதில் அதுதான். ஆனால், அதை அவன் எப்படிச் சொல்வான்? அதைச் சொன்னால் தனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று அந்தக் கிழவன் தீர்மானித்துவிட்டால்...?
தற்போதுள்ள சூழ்நிலையில் பதில் எதுவும் கூறாமல் வெறுமனே அமைதியாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தான் அவன்.
“உனக்குத் தெரியாதா?” - அவன் தந்தை கேட்டார்.
“தெரியாது...” - புருஷன் சொன்னான்.
“காட்டுல உன் கூட யாரெல்லாம் இருந்தாங்க?”
ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு புருஷன் சொன்னான். ஒரு பெண் இருந்தா...”
“நான் நினைச்சேன்” - தனக்குத் தானே ஏதோ முணுமுணுத்த கிழவன் அடுத்த நிமிடம் கட்டிலில் சாய்ந்தான்.
பகல் முழுவதும் புருஷன் வராந்தாவிலேயே உட்கார்ந்திருந்தான். யாரும் அவனைத் தேடி வரவில்லை. தான் திரும்பி வந்த விஷயம் அங்கிருந்த மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு விஷயமாகவே தோன்றவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டான். ஒரு வேளை சேஷனை வெளியேற்றியது மாதிரி தன்னையும் அவர்கள் சமூகத்தை விட்டு தள்ளி வைத்து விட்டார்களோ என்று கூட அவன் பயந்தான்.
பாதையில் நடந்து சென்றவர்களில் சிலர் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் புதிதாக எதுவும் நடக்கவில்லை என்பது மாதிரி அவனை உற்றுப் பார்த்துவிட்டு நடந்து போனார்கள். அவனுக்கு நன்கு பழக்கமானவர்களாக இருந்த சிலர் மட்டும் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook