
தம் நாடு ஒரு சமயம் உன்னத நிலையில் இருந்து சமீபத்தில் போரில் தோற்று இழந்த பழம்பெருமையை நிலைநிறுத்த அவர் செய்த தியாகமில்லையா அது? அவருடைய நினைவு கொஞ்ச நாள் மக்களின் உள்ளத்தில் இருந்தது. அதன் பின்? நினைவை மண்ணின் மேல் போட்டுக் காலால் மிதித்து நடக்கத் தொடங்கினார்கள் எல்லோரும். நான் தற்கொலை செய்து கொண்டிருந்தால், மக்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள்.
மக்கள்... சட்… அவர்கள் கிடக்கிறார்கள்.
எனக்குக் ‘கொலைகாரன்’ என்ற பட்டம் எப்படியோ கிடைத்துவிட்டது. செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்திருக்கின்றன. கருணை மனுவை கவர்னரும், ஜனாதிபதியும்கூட நிராகரித்து விட்டார்கள்.
சொந்த மனைவியை, வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்த குழந்தையுடன் கொலை செய்த குற்றத்துக்காக, நிறைய படித்தவரும், முக்கியமான பொறுப்பு ஒன்றில் இருந்தவருமான தேவராஜ மேனன் அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்கில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்!
எனக்கென்று ஒரு துளி கண்ணீர் வடிக்க இந்த உலகில் ஒருவரும் இல்லை. என் தாய் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் எனக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையை நினைத்து எவ்வளவுக்கு மனம் பதைபதைத்திருப்பாள். என் தந்தை பாம்பு கடித்து இறக்கும்போது எனக்கு வயசு மூன்று! எங்கள் வீட்டுக்கு மிக அருகில் தென்கிழக்குத் திசையில் ஒரு பெரிய பாம்புப் புற்று இருந்தது. அங்கேதான் எத்தனை எத்தனை வகைப்பட்ட பாம்புகள்! விஷம் நிறைந்த கொடிய நாகங்களுடன் மனிதர்கள் செய்துவைத்த கற்களினால் ஆன பாம்புகளும் அங்கே காட்சி தந்தன. அந்தப் பாம்புப் புற்றுக்குச் சென்று தவறாமல் விளக்கேற்றி வைக்கும் வழக்கத்தை, எதை மறந்தாலும் மறந்துவிடாமல் மேற்கொண்டிருந்தார்கள், அண்டை அயலில் இருந்த மக்கள். நாகதேவதைகளின் சினத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அப்படிச் செய்து வந்தார்கள். ஏன், வீட்டில் இருந்த சிம்னி விளக்கை ஏற்றி வைக்கவே மண்ணெண்ணெய் இல்லாமல் இருந்த சமயத்தில்கூட, நாகதேவதைகளுக்கு விளக்கு ஏற்றி வைக்கும் வழக்கம் மட்டும் நிற்கவில்லை. மண்ணெண்ணெய் இல்லாவிட்டால் போகிறது; தேங்காய் எண்ணெய் இருக்கவே இருக்கிறதே! எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த அந்த அடர்ந்த காட்டில் வளர்ந்துகிடந்த தெச்சிச் செடிகளின் மலர்களிலிருந்து நான் எத்தனை முறை தேனை எடுத்து உறிஞ்சி மகிழ்ந்திருக்கிறேன்! சிவந்த தெச்சிப் பழங்களில்தான் என்ன சுவை! அந்தப் பழங்களை உண்டுவிட்டு மரத்துக்கு மரம் கிளைக்குக் கிளை உற்சாகத்துடன் தாவித் திரிந்த அணில்களைப் பார்த்தபடி நான் எத்தனை முறை நின்றிருக்கிறேன். அவற்றின் முதுகுப் பகுதியில் காணப்படும் அந்த மூன்று வரிகளைக் காணும் போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா? பாட்டிதான் கடைசியில் அணில்களின் முதுகில் எப்படி அந்த வரிகள் வந்தன என்று சொன்னாள். கருணை கொண்டு ஸ்ரீராம பகவான் அவற்றின் முதுகில் தடவியதால்தான் அந்த கோடுகள் உண்டாயினவாம். கர்ப்பம் தரித்த தம்முடைய பத்தினியான சீதாபிராட்டியை ராமர் ஏன் வெறுத்து ஒதுக்கினார். அதற்கான அவசியம் என்ன என்றெல்லாம் பல சமயங்களில் என் மனசைப் போட்டு நான் குழப்பிக் கொண்டதுண்டு. என் மனம் முழுமையாகத்ச திருப்தியடையும் வகையில் ஒருவரும் பதில் கூறவேயில்லை! மீண்டும் மீண்டும் பாட்டியிடம் இதே கேள்வியைக் கேட்டபோது, பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது. வெற்றிலைத் தாம்பூலத்தைத் துப்பிவிட்டு ஓர் அதட்டு அதட்டினாள்.
“ம்... காலம் கெட்டுத்தான் போய்விட்டது! இல்லாவிட்டால் இப்படியெல்லாம் கேட்பாயா? கடவுளே தப்புச் செய்கிறாரே என்று கேட்டு என்னைக் கிண்டப் பார்ப்பாயா?”
பாட்டி மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், நிச்சயம் அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்க மாட்டேன். காரணம், ராமபிரான் கர்ப்பிணியான தம் மனைவியை ஒதுக்க மட்டும்தானே செய்தார்? ஆனால், நான்...
சிறுவயதில் பாம்புப் புற்றருகிலுள்ள மரங்கொத்தியைக் கவனித்துக் கொண்டிருப்பேன். அப்போது அது சக்கை உண்டோ என்பது போல் கூவும். நானும் அது போலவே கூவுவேன்.
வழக்கம்போல மாலை நேரத்தில் நாக தேவதைக்கு விளக்கேற்றி வைக்க வந்த என் தாய் புற்றருகில் நான் நின்றிருப்பதைக் கவனித்தாள். மெதுவாக என் அருகில் வந்து என் தொடையை பிடித்து அழுத்தி நிமிண்டி விட்டாள். நான் ‘வீல்’ என்று கூவினேன்.
“சாயங்கால நேரத்தில் பாம்புக்காவில் நின்றுகொண்டு அதைப்போல் சக்கையுண்டோ என்று கூவுகிறாயே; பாம்பு கொத்திவிட்டால், அப்புறம் சக்கையும் இருக்காது, தண்ணியும் இராது. ஏன், உன் உயிரும் இருக்காது” என்று கடிந்து கொண்டாள்.
இரவில் அப்பா சந்தையிலிருந்து திரும்பி வருகிற மட்டும் இமையை மூடாமல் அவருக்காக நான் காத்துக் கிடந்தேன். அவர் வந்ததும், தொடையில் பதிந்திருந்த நான்கு விரல்களின் அடையாளத்தைக் காட்டினேன். சமையலறைக்குள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த அம்மாவைக் கூப்பிட்டார் அப்பா.
“என்ன, ஜானு! மகனுடைய தொடையைப் பார்த்தாயா?”
“ஏன்? உங்க ஆசை மகன் இதற்கு முன்னாலேயே எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டாகச் சொல்லியிருப்பானே! சாயங்காலம் நாகதேவதைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டு வரலாம் என்று போனால், அங்கே உங்கள் ஆசை மகன் நின்று கொண்டிருக்கிறான்- மர உச்சியில் இருந்து மரங்கொத்தியுடன் பேசிக்கொண்டு. இந்த வெட்கக்கேட்டை நான் எங்கே போய்ச் சொல்வேன்? ஏதாவது பூச்சி புழு கடித்துவிட்டால் என்ன செய்வது?”
இதைக் கேட்டதும் என் தந்தை சிரித்து விட்டார்.
“நாம் தினமும் பாலூட்டி வளர்க்கிற நாகதேவதை நம் ஆசை மகனைக் கொத்திவிடும் என்றா எண்ணிப் பயப்படுகிறாய் ஜானு?”
ஆமாம்; என் தந்தைதான் இப்படிச் சொன்னார். ஆனால், அவர் இறந்ததோ பாம்பு தீண்டி! ஆட்டுக்குட்டிக்குத் தழை அறுத்துக்கொண்டு வரும் வழியில் எப்படியோ ஸர்ப்பம் தீண்டியிருக்கிறது. அதை அவர் கவனிக்கவேயில்லை. வீட்டுக்கு வந்த பிறகு பார்த்தால் வலது கால் பெருவிரல் நுனியில் ரத்தம் கட்டிப் போயிருக்கிறது. வேதனையும் உண்டாயிருந்ததாம்.
“என் காலில் ஏதோ வேதனையாக இருக்கிறது! ஜானு, வந்து கொஞ்சம் என்னவென்று பார்!”
இதைக் கேட்டதும் என் தாய் பதறிப் போனாள். “தொட்டால் சிணுங்கி முள்ளோ அல்லது கள்ளிச்செடி முள்ளோ குத்தியிருக்குமோ...!” என்றாள். உடனே “அந்தக் கோபால் வைத்தியனை நான் போய் அழைத்து வரட்டுமா?” என்றும் கேட்டாள்.
அவளை உற்றுப் பார்த்துவிட்டு உரக்கச் சிரித்து விட்டார் என் தந்தை.
அம்மா அப்படியொன்றும் பெரியதாக ‘ஜோக்’ அடித்து விடவில்லையே!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook