
"என்னடி... பேசாம இருந்து தப்பிச்சுக்கலாம்னு பார்க்கறியா? அந்த ப்ரவீன் பயலைப் பார்க்கக் கூடாது, பேசக்கூடாதுன்னு சொன்னேனே, எதுக்காக அவன் கூடப் பேசின? சொல்லு. சொல்லலைன்னா இன்னொரு அறை விழும்."
“ஐயோ, ஏற்கெனவே வலியில துடிச்சுக்கிட்டிருக்கேன். இன்னொரு அடியா? தாங்கவே முடியாது. சுகந்தி வீட்டு ஃபங்ஷனுக்குப் போறதுனால பொன்னிக்கு லீவு குடுத்து அனுப்பிட்டேனே. அவளும் துணைக்கு இல்லாம தனியா இந்த மனித மிருகத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேனே” மனக்குரலை அடக்கி விட்டு மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
"சத்தியமா எனக்கு ப்ரவீன் அங்கே வருவான்னு தெரியாதுங்க. தற்செயலா நடந்ததுதான். நீங்கதான் ஏதேதோ கற்பனை பண்ணி..."
"கற்பனை பண்ணி... சொல்லு சொல்லு...."
"கற்பனை பண்ணி என்னை சித்ரவதை பண்றீங்க."
"நான் பண்றது சித்ரவதைன்னா நீ பண்றது? பார்க்கறவங்கள்லாம் உன்னோட அழகை ரசிக்கணும்னு வேணும்னே 'பளிச்’ன்னு அலங்காரம் பண்ணிக்கிட்டு கூட்டத்துல போய் நிக்கறியே, அது சித்ரவதை இல்லையா? அந்த ப்ரவீன் பய கூட இளிச்சு இளிச்சு பேசறியே அது சித்ரவதை இல்லியா?"
"பொண்ணா பொறந்துட்ட ஒவ்வொருத்தியும் தன்னை அழகா அலங்கரிச்சுக்கணும்னு ஆசைப்படறது பெண் பிறவிக்கே உரிய இயல்புங்க. எத்தனை வயசானாலும் நகை, புடவை, பூ, பொட்டுன்னு விதம் விதமா தன்னை அழகு படுத்திக்கறது பொண்ணுங்க கூடவே பிறந்த குணம். மத்தவங்க பார்த்து ரசிக்கணும்னு இல்லை. எங்களை நாங்களே கண்ணாடியில பார்க்கும்போது அழகா இருக்கணும்னு நினைக்கறோம். இதில என்ன தப்பு?"
"தப்புதான். நீ என் முன்னாடி மட்டும்தான் அழகா உடுத்திக்கணும். என்னோட கண்ணுக்கு மட்டும்தான் உன்னோட அழகு தெரியணும். வேற எவனோட கண்ணும் உன் மேல மேயக்கூடாது. எவனும் உன்னை ரசிக்கக் கூடாது."
"அப்பிடி என்ன நான் பெரிசா அலங்காரம் பண்ணிக்கிட்டேன்னு இவ்வளவு கோபப்படறீங்க? ஒரு பட்டுப்புடவை, தளர்வான பின்னல்ல பூ, முத்து ஸெட் நகை போடறது பெரிய அலங்காரமா?"
"உன்னோட அழகுக்கு அது கூடுதலான அலங்காரம்தான்" பேசியவன், அர்ச்சனாவின் முகத்தருகே சென்று "அந்த ப்ரவீனுக்காகத்தானே இத்தனை அலங்காரம்?....ம்?" கர்ஜித்தான்.
அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது. அர்ச்சனாவிற்கு. முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
'ஐய்யோ எனக்கு இவரைப் பார்க்கவே பயம்மா இருக்கே’ யோசித்தவளின் நினைவு திடீரென மங்கிவிட, மயங்கி விழுந்தாள்.
மயங்கி விழுந்தவளைத் தூக்கிக் கொண்டு மாடியறைக்கு சென்றான் தியாகு. முகத்தில் தண்ணீர் தெளித்தான். தண்ணீர் அவளது முகத்தை மட்டுமல்லாது புடவையையும், ஜாக்கெட்டையும் நனைத்தது. மெதுவாக கண் விழித்தாள் அர்ச்சனா. புடவையும், ஜாக்கெட்டும் நனைந்தபடியால் அவளது பொன்நிற தேகம் மேலும் மின்னியது. இதைக் கண்ட தியாகுவின் உடலில் காமத்தீ பற்றி எரிந்தது.
எந்த சூழ்நிலையில், எப்படிப்பட்ட மனநிலையில் அவள் இருக்கிறாள் என்பது பற்றியெல்லாம் சிறிதும் அக்கறை கொள்ளாத அவன், அர்ச்சனாவை அணைத்து தன் ஆசையையும் அணைத்துக் கொண்டான்.
அடிபட்ட வலி, மயங்கியதால் ஏற்பட்ட தலைசுற்றல், இவற்றைவிட மனித நேயமற்ற அவனது பேச்சு. இவற்றால் மனம் துவண்டு கிடந்த நிலைமையில், அன்பே இல்லாமல் வெறும் உணர்ச்சிகளின் வடிகாலாக தன்னைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்ட தியாகுவின் ஸ்பரிசம் தணலென சுட்டது. அவனை எதிர்க்கவும், தடுக்கவும் சக்தியின்றி, தைர்யமின்றி மரக்கட்டையாய் படுத்துக் கிடந்து கண்களை மூடிக் கொண்டாள்.
அவளைப் பற்றிய கவலையே இன்றி நிதானமாய் மல்லாந்து படுத்துக் கொண்டான் தியாகு.
அயர்ச்சியாலும், மனத்தளர்ச்சியாலும், அழுததன் விளைவாலும் அவ்வப்போது நீண்ட பெருமூச்சு விட்டபடி விடியும் வரை ஆழ்ந்து தூங்கி விட்டாள் அர்ச்சனா.
மறுநாள் காலை. அர்ச்சனாவின் உடல் காய்ச்சலால் அனல் கொதித்தது. அவளுக்கு தலை வலித்தது. எழுந்திருக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவள் சிரமப்படுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான் தியாகு. கலைந்திருந்த தன் உடைகளை சரி செய்து கொள்ள பெரிதாக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது அர்ச்சனாவிற்கு. அத்தனை சிரமமாக இருந்தது அவளுக்கு. இன்னொரு பயமும் இருந்தது. உடை கலைந்திருந்த தன் உடலின் கோலத்தால் மீண்டும் மிருகமாகி தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள வந்துவிடுவானோ என்ற அச்சத்தில் தவியாய் தவித்தாள்.
அவள் துன்புறுவதைப் பார்த்து பார்த்து ரசித்து இன்புற்றான் தியாகு. அவன், ஹோட்டலுக்குப் போக வேண்டிய நேரம் வந்ததும் அர்ச்சனாவை எதற்கும் எதிர்பார்க்காமல் அவனே ஃப்ரிட்ஜில் இருந்த ஆப்பிளை எடுத்து சாப்பிட்டுவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டான். கார் புறப்படும் ஒலி கேட்டபின் மெதுவாக, நைட்டியைப் போட்டுக் கொண்டு தள்ளாடியபடி கீழே இறங்கி வந்தாள் அர்ச்சனா.
பொதுவாக இரவு நேரத்தில் மட்டுமே நைட்டியை அணிந்துக் கொண்டிருந்தாள்.
அவளது மொபைல் ஒலித்தது. வேண்டுமென்றே 'பேசறாளா இல்லையான்னு பார்ப்போமே’ என்ற எண்ணத்தில் தியாகு அழைத்தான். நம்பரைப் பார்த்த அர்ச்சனா, போனை எடுக்காமலே தொடர்ந்து அதை கிணுகிணுக்க விட்டாள்.
'கட்டிய மனைவி, கட்டிலை விட்டுக் கூட எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்து ரசித்த அவன் எதற்காக போன் செய்ய வேண்டும்? நான் ஏன் எடுத்துப் பேச வேண்டும்’ வெறுப்பின் எல்லைக்கு சென்றாள் அர்ச்சனா.
தளர்வாய் கீழே வந்தவளை மறுபடியும் மொபைல் போன் ஒலி எரிச்சல் படுத்தியது. நம்பரைப் பார்த்தாள். பொன்னியின் அப்பாவின் நம்பர்! எடுத்துப் பேசினாள்.
"ஹலோ..."
"வணக்கம்மா. நான் பொன்னியோட அப்பா பேசறேன். சேர்ந்தாப்ல இன்னிக்கு ஒரு நாள் இருந்துட்டு நாளைக்குக் காலையில பொன்னி வேலைக்கு வரட்டும்மா."
"சரி." களைப்பின் மிகுதியால் 'ஏன்’ 'எதற்கு’ என்று கூட கேட்க இயலாமல் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக் கொண்டாள்.
'அப்பா... அப்பா... என் நிலைமையை பார்த்தீங்களாப்பா? அநாதை போல ஆதரவில்லாம இப்படிக் கிடக்கறனே... உடம்பும் சரி இல்ல. மனசும் சரி இல்லை. தாலி கட்டின புருஷனோட கனிவான அன்பு இல்ல. பாசம் இல்லை. உடல்நிலை சரி இல்லாத இந்த நேரத்துல அவரோட கவனிப்பும் இல்ல. புருஷன் சுமத்தின களங்கத்தை சுமந்துக்கிட்டு, அதனால நெஞ்சு கலங்க இப்பிடி கிடக்கேனே அப்பா....’ அவளது மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சும் வலித்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.
மறுபடியும் போன் ஒலித்தது. நம்பரைப் பார்த்தாள்.
ப்ரவீனின் நம்பர்! எடுத்தாள்.
"ப்ளீஸ்.. ப்ரவீன். நீ எனக்கு போன் போடாத. என் கூடப் பேசாதே." லைனைத் துண்டித்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook