
"ஓ... உங்க ஊர் திருவிழாவா? கலகலன்னு ஊரே கோலாகலமா இருக்குமே. நான், உன் அண்ணன் சரவணன், நீ, நம்ப ஃப்ரெண்ட்ஸ் சாதிக், எஸ்தர், சுகந்தி எல்லாரும் சேர்ந்து போட்ட ஆட்டமும், லூட்டியும் மறக்கவே முடியாதே... ரெண்டு நாள் உங்க அப்பா வீட்ல தங்கி இருந்து நாம அடிச்ச கொட்டம், ஆயுசுக்கு மறக்க முடியாத கொண்டாட்டமாச்சே...."
"ஸ்டாப் இட்..." தியாகு பயங்கரமாய் கத்தினான்.
அர்ச்சனா மிரண்டாள். ப்ரவீன் திகைத்துப் போனான்.
"என்ன மாப்பிள்ளை ஸார்... என்ன ஆச்சு...?" ப்ரவீன் கேட்டான்.
"எதுவும் ஏடாகூடமா ஆகறதுக்கு முன்னால நீ வெளியே போயிடு.. கெட் அவுட்..." மீண்டும் கத்தினான் தியாகு.
அர்ச்சனா பதறினாள்.
"என்னங்க..."
"நீ வாயை மூடு. எதுவும் பேசாத. இவனை முதல்ல வெளியே அனுப்பு..."
எதுவும் புரியாத ப்ரவீன், அவமானத்தில் முகம் சுண்டினான். எதுவும் பேச இயலாத அர்ச்சனா, அவனைக் கையெடுத்து கும்பிட்டு வெளியேறும்படி சைகை செய்தாள்.
ஆனந்தமாக உள்ளே நுழைந்த ப்ரவீன் அவமானத்தால் ஏற்பட்ட அவஸ்தையாலும், அளவற்ற துயரத்திலும், தளர்ந்த நடையுடன் வெளியே சென்றான்.
அவன் போனதும் அர்ச்சனா, தியாகுவிடம் தைர்யமாய் பேச ஆரம்பித்தாள்.
"வீட்டுக்கு வந்தவங்களை இப்படியா பேசறது? படிச்சவங்கதானே நீங்க?..."
"நான் படிச்சவன்தாண்டி. அவன் உனக்குப் பிடிச்சவனாச்சே. அதனாலதான் அப்படி பேசினேன். நீங்க உங்க மலரும் நினைவுகளைப் பத்தி கதை அளந்துக்கிட்டிருப்பீங்க. அதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கறதுக்கு நான் என்ன கேனையனா? "
"வீடு தேடி வந்தவங்களுக்கு மரியாதை குடுத்து கௌரவமா நடத்தறதுதான் பண்பாடு..."
"அவன், உன்னைத் தேடி வந்தவன். அதுக்குத் தகுந்த மரியாதையைத்தான் நான் குடுத்துருக்கேன்..."
"அவன் தேடி வந்தது நம்ப ரெண்டு பேரையும்தான். நம்பளை வாழ்த்தறதுக்கு வந்தவனை உங்க வார்த்தையால வீழ்த்தி அனுப்பிட்டீங்களே."
"இன்னிக்கு இப்பிடி அனுப்பினாத்தான் நாளைக்கு மறுபடி இங்க வர மாட்டான்."
"அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டான்?"
"உன்னைப் பார்த்தது தப்பு. உன் கூட பழகினது தப்பு. உனக்கு லவ் லெட்டர் குடுத்தது தப்பு. திருந்திட்டதா சொல்லி திரும்ப திரும்ப உன் கூட பழகறது தப்பு. கல்யாணமாகி இன்னொருத்தன் பொண்டாட்டியான உன்னைப் பார்க்க வர்றானே அது தப்பு."
"காதலிக்கறது தப்புன்னு எந்த அகராதியிலயும் இல்லை. நான் அவனைக் காதலிக்கலைன்னு தெரிஞ்சப்புறம் அவனுக்கு என் மேல எந்தத் தப்பான எண்ணமும் இல்லை. அதனாலதான் அவன் இங்கே வந்தான். மடியில கனம் இல்லைன்னா வழியில ஏன் பயப்படணும்?"
"அது சரி... அவனைத் திட்டினா உனக்கு ஏன் கோபமும் ரோஷமும் பொத்துக்கிட்டு வருது? இவ்வளவு ஆசையை அவன் மேல வச்சுக்கிட்டு என்னை ஏண்டி கல்யாணம் பண்ணிக்கிட்டே? என்னோட ஆஸ்திக்காகவா? அந்தஸ்துக்காகவா?"
"அவன் மேல ஆசை இல்லை. உன்மையான அன்பு. எனக்கு அவன் மேல காதலே வரலை. உங்க ஆஸ்தியும், அந்தஸ்தும் என் கால் தூசிக்கு சமம். பண்பாடான குடும்பத்தைச் சேர்ந்தவர்னு எங்கப்பா உங்களுக்கு என்னைக் கட்டி வச்சாரு..."
"எவனையோ காதலிச்சிக்கிட்டுத் திரிஞ்ச உன்னை என் தலையில கட்டி வச்சுட்டாருன்னு சொல்லு."
"மறுபடி மறுபடி சொல்றேன். நான் ப்ரவீனைக் காதலிக்கலை. நான் அவனை விரும்பியிருந்தா எங்களுக்கு எந்தத் தடையும் இல்லாத பட்சத்துல நான் ஏன் அவனை விட்டு விலகினேன்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க."
"யோசிக்கறதுக்கு ஒண்ணுமே இல்லை. ஒரு டம்ளர் பால்ல ஒரு துளி விஷம் கலந்தாலும் அந்தப் பால் சுத்தமான பால் கிடையாது. திரிஞ்சுப்போன பாலை திரட்டுப் பால் ஸ்வீட் பண்ற மாதிரி, மனசு கெட்டுப் போன உன்னை, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க என்னோட அம்மாவும், அப்பாவும்."
"ஹோட்டல் முதலாளி நீங்க, உங்க ஸ்டைல்லயே ஸ்வீட் அது இதுன்னு பேசறீங்க. ஜவுளிக்கடைக்காரரோட பொண்ணு நான். அழுக்கு பட்ட புடவையை சுத்தமா துவைச்சுப் போடற மாதிரி ப்ரவீன் மனசுல என் மேல இருந்த காதலை பரிசுத்தமான அன்பா மாத்தினவ நான். நிர்மலமான அவனோட மனசை ரணகளப்படுத்தி நிர்மூலமாக்கிட்டீங்க. உங்க சந்தேகத் தீயால அவனை சுட்டுப் பொசுக்கிட்டீங்க..."
"உன் தேகம், மோகத்தீ மூட்டும்படியா இருக்கே. அந்த தேகத்தின் சுகம் எனக்கு வேணும்... எனக்கு மட்டுமே வேணும்.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். எனக்கு மட்டுமே சொந்தம். உன்னை வேற எவனும் பார்க்கக் கூடாது. உன் கூட வேற எவனும் பழகக் கூடாது. நீ என்னை விட்டு விலகக் கூடாது. உன் உடம்புல இருக்கற ஒவ்வொரு நாடி நரம்பும் குடுக்கற சொர்க்க சுகபோகத்தை நான் மட்டுமே அனுபவிக்கணும்..." வெறியோடு கத்திக் கொண்டிருந்த தியாகுவைப் பார்க்கவே பயமாகவும், வெறுப்பாகவும் இருந்தது அர்ச்சனாவிற்கு.
தியாகு தொடர்ந்தான்.
"’அர்ச்’ 'அர்ச்’ன்னு செல்லமா உன்னை அர்ச்சிக்கிறானே? அதுக்குப் பேரு வெறும் அன்புன்னு நீ சொல்றதை நான் நம்பணும்? ம்..?"
"நம்பிக்கைதாங்க வாழ்க்கை. தாலிகட்டின மனைவியை இப்படி மட்டமா பேசறீங்களே... உங்களுக்கே நியாயமா இருக்கா?"
"நீதி நியாயத்தைப் பத்தி நீ பேசாத. நீ உண்மையானவள்னா இனிமே அவனைப் பார்க்காத. பேசாதே."
"அவனைப் பார்க்காம, அவன் கூட பேசாம இருந்தாத்தான் நான் நல்லவளா?"
"என்னைப் பொறுத்த வரைக்கும் அப்படித்தான்."
"என்னைப் பொறுத்த வரைக்கும், பொண்ணுங்கறவ தப்பு செய்யணும்னு நினைச்சா எத்தனை தடைகள் இருந்தாலும், எத்தனை பூட்டு போட்டு வச்சாலும் நிலை தடுமாறிடுவா. அதே பொண்ணு, ஒழுக்கமா இருக்கணும்னு நினைச்சாள்ன்னா எந்த சூழ்நிலையில இருந்தாலும் தன்னோட மானத்தைக் காப்பாத்தி கௌரவமா இருந்துப்பா... பெத்தவங்களோட காவலோ, புருஷனோட கண்டிப்போ அவ போற பாதையை மாத்தாது. அவளுக்கு, அவளோட மனசுதான் காவல், பூட்டு, எல்லாமே..."
"எல்லாம் தெரியும்டி எனக்கு. பெரிசா பாடம் சொல்ல வந்துட்டா. நீ என் பொண்டாட்டி, நான் உன்னோட புருஷன். நான் சொல்றதை நீ கேக்கணும். கேட்டுத்தான் ஆகணும்."
"நானும் உங்களைக் கேக்கறேன், நீங்க எந்த யுகத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கீங்க.. இப்படி பத்தாம்பசலித்தனமா பேசிக்கிட்டிருக்கீங்க? புருஷனோட அன்புக்குத்தான் மனைவி அடிமையா இருப்பா. புருஷனோட அராஜகத்துக்கு இல்ல. புரிஞ்சுக்கோங்க."
"புரிஞ்சுதுடி... ஒரு நாள் அந்த ப்ரவீன் பயலைப் பார்த்ததுனாலதான் இவ்வளவு தைர்யமா பேசறேன்னு நல்லாவே புரியுது. எனக்கு சமைச்சுப் போடவும், சேவை செய்யவும், என் கூட படுக்கவும்தான் நீ. சரிசமமா வாய் கிழியப் பேசறதுக்கு எந்த அதிகாரமும் உனக்குக் கிடையாது."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook