Logo

ஜலசமாதி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5970
jala samaadi

த்ம சாந்தியைத் தேடிக் கிளம்பியிருக்கிறான். வயது அறுபதை நெருங்கியிருக்கிறது. முடி முழுவதும் நரைத்துவிட்டது. காலம் உண்டாக்கிய மாறுதல்கள் பாலசந்திரனிடம் நன்றாகவே தெரிகின்றன. உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி மாறிக் கொண்டிருக்கிறது.

மது அருந்தும் பழக்கத்தை அவன் முழுமையாக நிறுத்திவிட்டான். கஞ்சா புகைப்பதையும் நிறுத்திக் கொண்டு விட்டான்.

மாமிசம், மீன் போன்றவற்றைச் சாப்பிடுவதை நிறுத்தி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. பெண் உடம்பின்மீது இருக்கும் ஆசை மீதும் வெறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. எந்தவொரு மாயமோகினியாலும் பாலசந்திரனை இனிமேல் இன்பம் கொள்ளச் செய்ய முடியாது. அவன் சிற்றின்ப விஷயங்களைத் தாண்டி அன்புப் பரவச அனுபவத்தை அடைய நினைத்திருக்கிறான். எல்லையற்ற அன்பு. அதை அடைவதற்கான ஒரே வழி மனதில் இருக்கும் காம எண்ணங்களை முழுமையாக இல்லாமல் செய்து ஆன்மிக வழியில் முன்னோக்கிப் போவதுதான்.

இந்த அலைபாயும் மனதை நிலையாக ஒரே இடத்தில் இருக்கும்படி மாற்றுவதற்கான சரியான வழிகளைத் தேடி அவன் இப்போது புறப்பட்டிருக்கிறான். இதுவரை செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்தாகிவிட்டது. இப்போதும் எத்தனையோ சபலங்கள் அவனை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன. ஆசைகளுக்கு முடிவு ஏற்பட்டு விடவில்லை. ஆசைகளைக் கட்டுப்படுத்த அவன் முயற்சி செய்துகொண்டிருக்கிறான். உயரங்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் இப்போதும் அவனை விட்டுப் போகவில்லை. புகழ்பெற்ற மனிதனாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஆளாக வரவேண்டும் என்ற பலமான ஆசைக்கு முடிவு கட்ட அவனால் முடியவில்லை. பொறாமை என்ற போர்வையைப் பிடித்துக் கிழித்தெறிய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருக்கிறது. ஆணவம் என்பதே இல்லாத ஒரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் முயற்சிக்கிறான். நம்பிக்கை மோசம்... அதை இப்போது அவன் இல்லாமல் செய்ய வேண்டி இருக்கிறது. இங்கு சொல்லப்பட்டவை அனைத்தும் இப்போதுகூட பாலசந்திரனின் குணத்தை விட்டு முழுமையாகப் போய்விடவில்லை.

பயணம் செய்ய வேண்டும். பயணம் செய்து கொண்டிருப்பதற்கு மத்தியில் எங்கேயாவது படுத்து இறக்கவேண்டும். கஷ்டமே இல்லாத மரணத்திற்காக அவன் கடவுளிடம் வேண்டிக் கொள்வதுண்டு. யாருக்கும் ஒரு தொந்தரவும் தராமல் திடீரென்று கண்களை மூடிவிட வேண்டும். வேண்டியவர்களிடம் இனிமேல் விடைபெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இதுவரை ஆட்சி செய்து கொண்டிருந்தது கோபமும் காமமும்தான். திடீரென்று தன்னை வந்து ஆக்கிரமித்த கோபத்திற்கு அடிமைப்பட்டு எத்தனையோ செய்கைகளைச் செய்தாகிவிட்டது. மன்னிக்க முடியாததால்தான் கோபம் அங்கிருந்து கிளம்பிவிட்டது. மன்னிக்க வேண்டும் என்று பலமுறை உபதேசம் செய்யப்பட்டிருப்பதுதான். மன்னிக்கப்பட்டவனே, பெற்றுக்கொள். நீ மன்னிக்கப்படாதவன். அதனால் கிடைக்க வேண்டிய பல விஷயங்களும் கிடைக்காமலே போய்விட்டன. கிடைக்க வேண்டிய பலவும் தடுக்கப்பட்டுவிட்டன.

தந்தை உபதேசித்திருந்தார்- விருப்பமில்லாததைப் பார்க்க நேரும்போது, எதிர்வினையாற்ற வேண்டுமென்று. அநீதியான செயல்கள் நடப்பதைப் பார்க்கும்போது, எதிர்வினை ஆற்றாதவன் மனிதனே அல்ல என்பதை நிரூபிப்பதற்காக அவன் சிரமப்பட்டான். குருநாதர் கூறியது வேறொன்று. மவுனம். மவுனத்தால் அடைய முடியாதது எதுவுமில்லை என்று அவர் கற்றுத் தந்தார். அந்த மூன்று பேர்களின் கருத்துகளையும் பாலசந்திரன் மதித்து நடந்திருந்தால் இன்றைய கஷ்டங்கள் அவனுக்கு வந்திருக்கவே வந்திருக்காது.

இப்போது அதைப் பற்றிப் பேசி பிரயோஜனமே இல்லை. தாய் தந்தையும் குருவும் இந்த உலகத்தைவிட்டு விடைபெற்று எத்தனையோ வருடங்கள் கடந்து போய்விட்டன.

பாலசந்திரனின் புனிதப் பயணத்தின் இலக்கே மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ அடையக்கூடிய ஒன்றல்ல அது. அது ஒரு நீண்ட தவம் என்றுதான் கூறவேண்டும். முழுமையான பணிவு அதற்கு முதலில் வேண்டும். மனமும் உடலும் ஒன்றோடொன்று இரண்டறக் கலக்க வேண்டும். அதற்கு ஒரு சிறிய அளவில் இந்தப் பயணம் பயன்படும்.

மரணத்தைத் தழுவிய தன்னுடைய தந்தை, தாய் ஆகியோரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக எத்தனையோ சடங்குகளை அவன் செய்திருக்கிறான். எனினும், சாந்தி கிடைக்கவில்லை. எங்கோ என்னவோ சில குறைகள் இருக்கின்றன. பாலசந்திரனுக்குத் தேவைப்படும் அளவிற்கு அனுக்கிரகங்கள் கிடைக்கவில்லை. சன்னியாசி வேடம் அணிந்திருக்கும் காரணத்தால் மட்டும் ஒரு மனிதன் சன்னியாசி ஆகிவிடுவதில்லை. சன்னியாசி ஆகவேண்டுமென்றால் அதற்கு வேறுசில விஷயங்களும் வேண்டியிருக்கின்றன. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றைப் பற்றி அவனுக்கு அவ்வளவாகத் தெரியாது.

புத்தன்களத்தில் பாலசந்திரமேனன் (பாலானந்தயோகி) காவிஉடை அணிய ஆரம்பித்து நாட்கள் எவ்வளவோ ஆகிவிட்டன. தேவையான அளவிற்குப் பணத்தை மடியில் கட்டி வைத்துக்கொண்டு அல்ல அவன் பயணத்தை ஆரம்பித்தது. இனியொரு முறை தான் பிறந்த ஊருக்கு திரும்பி வரவேண்டும் என்ற ஆசையெல்லாம் அவனுக்கு இல்லை.

இமயமலையில் அமைந்திருக்கும் ரிஷிகேஷிலிருக்கும் சிவானந்தா ஆசிரமத்தில் போய் தங்கியிருக்கக் கூடிய ஒரு ஆளாகத் தான் ஆக வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசை. இமயமலையில் தவம் இருப்பதைப் பற்றி அவன் வெறுமனே கேள்விப்பட்டிருக்கிறான். அவ்வளவுதான். தபோவன சுவாமிகள் இமயமலையில் தவமிருந்து உயிர்த் தியாகம் செய்த கதையைப் புத்தகத்தின் வாயிலாகப் படித்து அவன் மனதில் அதை ஆழமாகப் பதிய வைத்திருந்தான். அதே நேரத்தில் குளிர், ஆசைகள் போன்றவற்றைக் கடந்து தவம் செய்து கொண்டிருப்பதற்கான சக்தி தனக்கு இருக்கிறதா என்ற விஷயத்தில் பாலானந்த யோகிக்குச் சந்தேகம் இருக்கவே செய்தது. முன்பு பி.கே.பி. என்ற பெயரில் கேரளம் முழுவதும் அறியப்பட்டிருந்த தான் ஒரு நாள் சன்னியாசத்தை ஏற்றுக்கொண்ட விஷயத்தைக் கேள்விப்படுபவர்கள் யாராவது அதை நம்புவார்களா? என்ன காரணத்திற்காக பி.கே.பி. என்று அறியப்படும் எழுத்தாளர் சன்னியாசியாக மாற வேண்டும்? அப்படி யாராவது எங்காவது வைத்து சில கேள்விகளைக் கேட்பார்கள் என்ற சந்தேகத்திற்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை. எவ்வளவோ மனிதர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக சன்னியாசியாக மாறுகிறார்கள். சிலர் வாழ்க்கை மீது கொண்ட வெறுப்பு காரணமாகவும் காவி ஆடைகளை எடுத்து அணிவதுண்டு. ஆழமான சிந்தனைக்குப் பிறகு சன்னியாசிகள் உருவாவதுமுண்டு. உலக மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகச் சன்னியாசத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இல்லாமலில்லை. கவலைகளிலிருந்து விடுபட்டு ஓடி ஒளிய வேண்டும் என்பதற்காகச் சன்னியாசியாக மாறியவர்களும் இருக்கிறார்கள். சன்னியாசிகள் பல வகைப்பட்டவர்கள். அவர்களைப் பற்றி பொதுவாகவே ஒருவகையான அவநம்பிக்கை பாலசந்திரனிடம் இருக்கவே செய்கிறது.


தன்னைப் பற்றி தெரிந்தவர்கள் இப்போது வெகு சிலரே இருக்கிறார்கள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். பி.கே.பி. தான் பாலானந்தன் என்ற உண்மை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பம். தான் இப்போது காவி ஆடை அணிந்திருக்கும் ஒரு ஆள் என்பதுதான் அவனுக்குத் தெரியும். அவன் தன்னைச் சன்னியாசி என்று நினைப்பதில்லை. அதற்கு இனியும் பல படிகளைத் தாண்ட வேண்டும். முன்பு அவன் பலவாகவும் இருந்தான். அந்தக் கதைகள் எதையும் இப்போது யாரும் தெரிய ஆர்வம் காட்டப் போவதில்லை. ரகசியங்கள் முழுவதையும் அவன் காவி ஆடைகளால் மூடியிருக்கிறான். தலையை இப்போதுகூட மொட்டை அடிக்கவில்லை. ஆங்காங்கே நரையோடி வளர்ந்திருக்கும் தாடியை நீக்கவும் இல்லை. பழைய பி.கே.பி.யை யாரும் இனிமேல் பார்க்கக் கூடாது. தனக்கு இனிமேல் இந்த உலகத்தில் எந்த நினைவுச் சின்னமும் எழுப்பப்படப் போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் பலருக்கும் வழிவிட்டு பயணம் செய்தவன். கிட்டத்தட்ட இருபத்தைந்து நூல்கள் எழுதிப் புகழை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதற் கிடையில்தான் இப்படியொரு மாற்றம் உண்டானது. திருமணம் செய்து நிறைய குழந்தைகளைப் பெற்று அவன் வாழ்ந்திருக்க வேண்டியவன். ஆனால் விதி வேறொரு வழியைச் சுட்டிக் காட்டியது.

பி.கே.பி. எழுதிய நூல்களெல்லாம் காலப்போக்கில் மறக்கப்பட்டு மக்களால் தள்ளிவிடப்பட்டு விட்டன. நூலாசிரியர் இல்லாத காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிற மாதிரியான நூல்கள் எதையும் பாலானந்தயோகி எழுதவில்லை. இன்று முதல் பாலானந்த யோகிக்கே மதிப்பு. பி.கே.பி. என்றழைக்கப்படும் புத்தன்களத்தில் பாலசந்திரமேனன் மக்கள் கூட்டத்திலிருந்து நிரந்தரமாகக் காணாமல் போய் விடுகிறான். இனி இருக்கக் கூடிய நாட்களில் அவன் ஏதாவது எழுதுவானா என்ற விஷயம் சந்தேகத்திற்கிடமானதுதான். சில நேரங்களில் எழுதக் கூடாது என்றில்லை. சன்னியாசியும் தன்னுடைய கடந்த காலக் கதையை ஏதாவதொரு புனைபெயரில் எழுதக்கூடாது என்றில்லை. ஒரே பிறவியில் இரண்டு மறுபட்ட மனநிலைகளில், தளங்களில் செயல்படுவது என்பது அபூர்வமான விஷயமொன்றுமல்ல.

அவன் இப்போது பாலானந்த சுவாமி. காவி ஆடை அணிந்தவர்களுக்கு மத்தியில் அறிந்துகொள்வதற்காக வைக்கப்பட்ட பெயர் அது. ஊரும் பெயரும் இல்லாத சுவாமிமார்களுக்கு மத்தியில் அவன் ஒரு ஆள் அவ்வளவுதான்.

கடவுளின் தூதனாகவோ பரமஹம்ஸராகவோ அவன் ஆகப்போவதில்லை.

உலக விஷயங்களை அப்படியே வேண்டாம் என்று தூக்கியெறிந்துவிட்டு, சன்னியாசத்தை ஏற்றுக் கொண்ட ‘பரிவ்ராஜகன்’ என்றோ, மனதை முழுமையாக அடக்கி அதில் வெற்றி பெற்ற ‘யதி’ என்றோ தான் அறியப்படுவோம் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இல்லை.

முந்தைய வாழ்க்கையில் கிடைத்த பாவக்கறை படிந்த வாழ்க்கைச் சுமையை எங்காவது கொண்டுபோய் மூழ்கச் செய்ய வேண்டும். அது கங்கை நதியாக இருந்தால் மிகவும் நல்லது. ஏழு நதிகளில் ஏதாவதொரு நதியில் அது நடந்தாலும் அவனுக்குப் போதும்தான்.

யமுனை, சரஸ்வதி, சிந்து, சரயு, கோமதி, பாகீரதி, எத்தனையோ புண்ணிய நதிகள் இந்த நாட்டின் வழியாக வற்றாமல் ஓடிக் கொண்டுதானே இருக்கின்றன! அவற்றில் ஏதாவதொன்றில் ஜலசமாதி அடைய வேண்டும். அப்படி அடைந்தால் மோட்சம் கிடைக்கும்.

இனி இந்த வாழ்க்கை அதிக நாட்கள் இருக்கப் போவதில்லை. எவ்வளவு நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதனாக இருந்தாலும் சரி. இதுவரை வாழ்ந்த காலம் அளவிற்கு இனி அவன் வாழப் போவதில்லை.

ஸ்வரூபானந்த சுவாமி இந்த உண்மையை அவனுக்குக் கூறினார். அவரை அவன் ஹரித்துவாரில் சந்தித்தான். சன்னியாசிகளின், சன்னியாசினிகளின் உலகம்! ஏராளமான மடங்கள், பாதைகள், ஆசிரமங்கள்.

ஸ்ரீராமானந்தா ஆசிரமத்தின் மடாதிபதி அவர். அவர் ஒரு மலையாளி என்பதும், சொந்த ஊர் பாலக்காடு என்பதும் தெரிந்தபோது அவனுக்கு மகிழ்ச்சி தோன்றியது. அது நெருக்கமாகப் பழக உதவியது.

சின்மயானந்தா சுவாமியும் அபேதானந்தனும் புருஷோத்தமானந்தாவும் ஒரு காலத்தில் அங்கு வந்து தங்கியிருந்தவர்கள்தானாம்!

ரிஷிகேஷிற்குச் செல்ல வேண்டும். வானப்ரஸ்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பிரம்மச்சாரிகளின் இடம் அது. பயற்சி அடைய வேண்டியிருக்கிறது. யம, தமநாதிகளைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும். பிரம்மச்சரியத்தைப் பற்றிய மகத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தியானத்தின் மூலமாக உயர் நிலையை அடைய வேண்டும். தியானம் செய்து கொண்டிருக்கும்போது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் ஆரம்பத்தில் சில கஷ்டங்களைத் தரும். அவற்றை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும். தடைகள் உண்டாகும். அவற்றை கடக்க வேண்டும்.

மனஸா-வாசா-கர்மணா ஒரு உயிரையும் துன்புறுத்தக் கூடாது. அறிந்துகொண்டே ஒரு தவறிலும் போய் தானே விழக்கூடாது. பணிவுள்ளவனாக இருக்கவேண்டும். தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி ஆசைகளை முடிந்தவரைக்கும் விலகி நிற்கச் செய்ய வேண்டும். தன்னைத் தானே அறிந்துகொள்ள வேண்டும். தன்னைத்தானே மறக்க வேண்டும். அப்போது எல்லாம் சரியாக இருக்கும். இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமா? சாத்தியமாகும். அது குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஸ்வரூபானந்த சுவாமி பல படிகளைத் தாண்டியவர். அதே நேரத்தில் அச்சுதானந்தன் அதற்கு நேர் எதிரானவர்.

2

த்தராயணத்திற்கும தட்சிணாயணத்திற்குமிடையில் இருக்கும் இடைவெளி எவ்வளவு என்பது அவனுக்குப் புரிந்தது. ஸ்வரூபானந்த சுவாமியும் அச்சுதானந்த சுவாமியும் சன்னியாசிமார்கள்தான். ஒருவர் எல்லா படிகளையும் ஏறி முடித்து விட்டார். இன்னொருவர் ஒவ்வொரு படியையும் இனிமேல்தான் ஏற வேண்டும். பாலசந்திரனுடன் அதிகமாக நெருக்கமானது அச்சுதானந்தன்தான். பல விஷயங்களிலும் அவர்களுக்கிடையே ஒரு ஒற்றுமை இருந்தது. இரண்டு பேரும் ஒளிந்து ஓடி வந்தவர்கள். சன்னியாசத்தை மேற்கொண்டு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம் அவர்கள் இருவருக்கும் இருந்தது.

கெட்ட மனிதர்களின் தொடர்பால்தான் பலரும் வழி தவறிப் போய்விடுகிறார்கள். சூழ்நிலைகளின் ஆக்கிரமிப்பும் அதற்குக் காரணமாக இருக்கும். நல்ல நண்பர்களே சரியான பாதையில் நடக்கச் செய்வார்கள். நல்ல நட்பு மட்டுமே அதற்குத் தேவை. அச்சுதானந்தன் பாலசந்திரனிடம் இந்த விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தார். அவர் ஒரு மதச் சொற்பொழிவாளர் என்பதைப் போல் தோன்றியது.

கரையில் ஏற முயற்சிக்க வேண்டும். சேற்றுக்குள் விழுந்திருக்கலாம். தப்பிப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். உபாசனை, தியானம், ஆழமான தவம்.

கேள்விப்பட்டிருக்கும் வார்த்தைகள்தான். அதனால் அதில் புதுமை எதையும் பாலசந்திரன் உணரவில்லை.

ஹரித்துவாரில் அவன் முதல் தடவையாகத் தங்குகிறான். வடஇந்தியாவில் பழமையான புண்ணிய ஸ்தலம் அது என்பதைப் பலரும் சொல்லி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். காசியில் அவன் தங்கியிருக்கிறான்.


ஸ்ரீவிஸ்வநாதரையும் அன்னபூர்ணாவையும் வணங்கியவாறு தினமும் கங்கையில் மூழ்கிக் குளித்து உடலைச் சுத்தமாக்கி கங்கையின் கரையில் சாந்தமான மனதுடன் வாழ்ந்த அந்த நாட்கள் நினைவில் வந்தன.

ஹரித்துவாரில் இயற்கையான அழகிற்கு முன்னால் காசி பல நேரங்களில் பாவி என்ற பாதாளம் போல தோற்றம் தரும். பூமியில் மனிதர்கள் செய்யும் அனைத்துப் பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் புண்ணிய இடம் அது. சரஸ் நிரப்பப்பட்ட குழாயிலிருந்து புகையை உள்ளுக்குள் நிறுத்தி இழுத்த அந்த நாட்கள்... கஞ்சா மீது கொண்ட ஆர்வம் பாலசந்திரனை விட்டு நீங்கவில்லை. காவி ஆடை அணிந்தவனாக இருந்தாலும் அவ்வப்போது புகைக் குழாயில் மருந்தை நிரப்பி, எரிய வைத்து, புகையை அவன் உள்ளே இழுத்தான். புகைச் சுருள்கள் காற்றில் பரவின. வாசனை கொண்ட கஞ்சாவின் புகையுடன் நினைவுகளின் அலைகளும் சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும். பிறந்து ஐந்து வயதிலிருந்து இருக்கும் நினைவுகள்... கங்கையின் நீரோட்டத்தில் தன்னுடைய கடந்த கால நினைவுகளும் சேர்ந்து ஓடுவதைப்போல அவன் உணர்ந்தான். முதல் தடவையாக காசிக்குப் போன சமயத்தில் நிரந்தரமாக பாலசந்திரன் ஹுக்கா இழுப்பான். வெளிநாடுகளில் செய்யப்பட்ட குழாய்களைத் தன்னுடன் எப்போதும் அவன் வைத்திருப்பான். அந்த நாட்களில் பாலசந்திரன் எதற்கும் பயப்படமாட்டான். முழுமையான சுதந்திர மனிதனாக அவன் இருந்தான்.

முத்துலட்சுமியின் காதலனாக இருந்த அந்த வசந்த காலத்தின் ஞாபகங்கள்... கூறுவதற்குக் காரணங்கள் எதுவும் இல்லாமல் அவள் தன்னை வேண்டாமென்று உதறி விட்டுப்போன நாட்களின் ஏமாற்றங்கள்... தாங்க முடியாத வேதனைகள்... தடுப்பதற்குக் கடிவாளம் இல்லாமல் கஞ்சாவிற்கு அடிமையாகிய காலகட்டம்... அதற்குப் பிறகு சிறிது சிறிதாக அவன் அதிலிருந்து தப்பினான். எப்போதாவது ஒரு முறை மட்டும்... மாதத்தில் ஒரு முறை... பிறகு அதை வாரத்தில் ஒரு முறை என்று சுருக்கினான். முத்துலட்சுமி புகழ்பெற்றவளாக ஆனாள். ஒரு நடிகை என்ற நிலையில் அவள் தென்னிந்தியாவின் சிறந்த நடிகைக்கான விருது, கிரீடம் எல்லாவற்றையும் பெற்றாள். லட்சங்கள் சம்பாதித்தாள். கோடீஸ்வரியாக ஆனாள். தினமும் வறுமையில் வாடிக் கொண்டிருந்த தாயையும் மகளையும் உணவளித்துக் காப்பாற்றிய அவனை அவள் மறந்து விட்டாள். பணத்திற்குப் பின்னால் அவள் போய்விட்டாள். புகழ் என்ற பொன் கிரீடத்தை- அவன் தனக்குள் தனியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டான். -இன்று இந்த நாடு முழுவதும் புகழின் உச்சியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பழைய முத்துலட்சுமி தன்னுடைய காதலியாக ஒரு காலத்தில் இருந்தாள் என்று சொன்னால் யாராவது அதை நம்புவார்களா? தன்னிடமிருந்த எல்லாவற்றையும் அவளுக்கு அவன் காணிக்கை ஆக்கினான். தாய், தந்தை இருவரின் வார்த்தைகளையும் காதிலேயே அவன் போட்டுக் கொள்ளவில்லை. அவர்களின் பிரார்த்தனைகளைப் பற்றி அவன் கவலையே படவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரே மகன் அவன்தானே! அவனை நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்க அவர்கள் ஆசைப்பட்டார்கள்.

பல ஆண்களுடனும் சேர்ந்து நடித்து எல்லோருடனும் சுதந்திரமாகப் பழகிய அவனுடைய முத்துலட்சுமி பத்மவிபூஷன் விருதைப் பெற்றவள். பாராளுமன்றத்தில் அவள் உறுப்பினராக ஆனாள். இதையெல்லாம் சொன்னால் இன்று யாராவது அதை நம்புவார்களா? என்னவோ வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்கும் ஒரு பைத்தியம் பிடித்த காவி ஆடை அணிந்த மனிதன் என்றுதான் அவர்கள் அவனைப் பற்றி நினைப்பார்கள். சகோதரா, யாரிடமும் கூறி நம்பச் செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. தன்னுடைய முந்தைய வாழ்க்கையின் ஒரு பக்கத்தை எடுத்துக் காட்டினான். அவ்வளவுதான். அதற்கு மேல் கூறுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன.

அச்சுதானந்தன் அவன் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டான்.

உண்மை எப்போதும் உண்மையாகவே இருக்கும். ஒவ்வொரு சன்னியாசிக்கும் தங்களின் முந்தைய வாழ்க்கையில் இருந்த பலவும் ஞாபகப்படுத்திப் பார்க்கும்படி இருக்கும். ஒவ்வொரு மனிதனும் எவ்வளவோ கதைகளைக் கூற முடியும். அது ஒன்றும் அப்படிப்பட்ட பெரிய விஷயமல்ல. மரணமடையும்போது என்ன நடக்கும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அமைதியாக உட்கார்ந்துகொண்டு அச்சுதானந்தன் சர்வ சாதாரணமான சில விஷயங்களை நோக்கி பாலசந்திரனின் கவனத்தைத் திருப்பினார்.

“மரணமடையிற நேரத்துல என்ன நடக்கும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கல.”

“எதுவும் நடக்காது. யாருக்கும் யாரையும் நினைத்துப் பார்க்க அங்கே நேரமில்லை.”

“காசி நகரத்தில் இருந்த உங்களுக்கு அங்கே என்ன காரணத்தால் சாந்தி கிடைக்கவில்லை?”

அச்சுதானந்தனின் கேள்வியிலிருந்து தப்பிக்க வேண்டும்போல் இருந்தது பாலசந்திரனுக்கு.

எனினும் காசி நகரமும் கங்கை நதிக்கரையும் தனக்குள் எப்படியெல்லாம் மாற்றங்களை உண்டாக்கின என்பதை விளக்கிக் கூற பாலசந்திரன் மறக்கவில்லை.

மழை பெய்து கொண்டிருந்த காலத்தில்தான் முதல் முறையாக அவன் காசிக்குப் போயிருந்தான். மழைக் காலமாக இருந்ததால் விடாமல் மழை பெய்த வண்ணம் இருந்தது. கங்கை நதிக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆர்ப்பரிப்புடன் அது ஓடிக்கொண்டிருந்தது. நீரோட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் படகுகள், கட்டுமரங்கள்...

காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போகும் அகலம் குறைவான பாதைகள் வழியாக அவன் நடந்தான். பாதைகள் முழுவதும் சேறாக இருந்தன. கங்கை நதியின் நீரலைகள் கரையைத் தின்று கொண்டிருந்தன. நீருக்குள்ளிருக்கும் சேற்று மண் அலைகளைக் கொண்டு வந்து விட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் நீர் வற்றி விட்டிருந்தது. எனினும் ஈரமும் சேறும் கலந்து பாயசத்தைப் போல பாதைகளில் பரவிக் கிடந்தது. அதன் வழியாகக் காலில் செருப்பு இல்லாமல் அவன் நடந்தான். நிறைய தர்மச் சத்திரங்கள் நீரால் சூழப்பட்டு காட்சியளித்தன. தெருக்களில் நாய்களும் பசுக்களும் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன. தோற்றத்தில் பெரிதாக இருக்கும் பசுக்களை அவற்றின் சொந்தக்காரர்கள் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். சேற்றில் சாணக் குவியல்கள் இங்குமங்குமாய் கிடந்தன. அகலம் குறைவான தெருக்கள் வழியாகத் தான் மட்டும் தனியே நடந்து சென்றபோது மூச்சு அடைப்பதைப்போல் அவனுக்கு இருந்தது. ஏதோ ஒரு ஒடுகலான சுரங்கப்பாதை வழியாகப் பத்து நிமிடங்கள் அவனுக்கு நடக்க வேண்டி வந்தது.

பிணம் எரிவதால் உண்டான வாசனை மூக்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தது. இருட்டும், ஈரமும் கலந்த சூழ்நிலை மூச்சுவிட முடியாமல் செய்வதைப்போல் இருந்தது. யாராவது தன்னை அந்தச் சுரங்கத்திற்குள் கொலை செய்து கங்கை நதிக்குள் எறிந்து விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு அப்போது உண்டானது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு விஸ்வநாதர் ஆலயத்தை நோக்கி அவன் நடந்தான். இனி கோவில் கோபுரத்தை அடைய தூரம் அப்படியொன்றும் அதிகம் இல்லை. பாதையோரத்தில் கண்ட பல காட்சிகளும் இதயத்தை வருத்தம் கொள்ளச் செய்வதாக இருந்தன.


வெறுப்பு தோன்றச் செய்யும் காட்சிகளும் குறைவாக இல்லை. சிதிலமடைந்த மணிமாளிகையின் சாளரங்களில் தொங்க விடப்பட்டிருந்த திரைச் சீலைகளுக்குப் பின்னால் ஏங்கிக் கொண்டிருந்த கண்களை அவன் பார்த்தான். அழகான விதவைகளின் ஏக்கங்கள் தங்கியிருக்கும் இடம் அது என்பதைப் பின்னர்தான் அவன் தெரிந்து கொண்டான். அவன் அதைத் திரும்பப் பார்க்கவில்லை. எதையும் விசாரிக்கவில்லை. அங்கு அவன் சென்றிருப்பதன் நோக்கம் தர்ப்பணம். அங்கு வேறு எந்தச் சிந்தனைக்கும் இடமில்லை.

காசியும் கங்கையும் எக்காலத்திற்கும் புண்ணியஸ்தலம்தான். ஜாதி, மதம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பிற்கு மத்தியிலும் நட்பை ஊட்டி வளர்ப்பதற்குத் தேவையான முயற்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ‘தான் இந்து மதத்தைப் பின்பற்றக் கூடிய ஒரு மனிதன்’- பாலசந்திரன் தன் மனதிற்குள் நம்பிக்கையைப் பலமாக்க முயன்றான்.

கற்படிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டு அவன் கங்கை நதியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இந்துக்களைப் பொறுத்தவரையில் கங்கை என்பது ஒரு நதி மட்டுமல்ல. அது அவர்களின் ஆத்மா. கங்கையில் தாயின் சாயல் இரண்டறக் கலந்திருக்கிறது. கங்கையின் அஸ்தி மட்டும் நீருடன் கலந்து ஓடவில்லை. தன் தாயின் ஆத்மாவையும் கங்கை நீரில் கலந்து ஓடும்படி அவன் செய்தான்.

கங்கை நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு தன் தாயை நினைத்து அவன் அழுதான். தன்னையே அறியாமல் அவன் அழுதான். கண்ணிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

தாயை அவன் கவலைப்படச் செய்யவில்லையா? வேதனைப்பட வைக்கவில்லையா? செய்திருக்கிறான். ஒரு தடவை அல்ல; பல தடவைகள்.

எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருந்தவள் ஒரே ஒருத்திதான். அவள்-முத்துலட்சுமி. அவளுக்கு மிகப்பெரிய அழகை தெய்வம் கொடுத்திருந்தது. அவளுடைய தோற்றத்திலும் வார்த்தைகளிலும் அவன் தன்னையே இழந்து விட்டான். அவள் தந்த சுகத்திற்குப் பின்னால் அவன் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தான். அவளுடைய மணம் இல்லாத இரவு நேரங்கள் பயன்ற்ற ஒன்றாக அவனுக்குத் தோன்றியது.

அவளுக்குக் கீழ்ப்படிந்து அவன் நடந்தான்.

“அவளை வெறுமனே விட்டுடுங்க. அவ அவளோட வழியில போகட்டும். நீங்க உங்க மனதை கட்டுப்படுத்தணும். மனதின் கட்டுப்பாட்டை விட்டால், சமநிலை தவறும்!” - அச்சுதானந்தன் அவனைத் தேற்ற முயற்சித்தான்.

“அவளைப் பற்றி நினைக்கிறப்போ பல நேரங்களில் என் சம நிலை தவறிடுது. திடீர்னு நான் நெருப்பைப் போல கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சிடுறேன். நீங்க என்னை மன்னிக்கணும். நான் எதையும் மறைச்சு வைக்கல. என்னைப் பல தளங்களில் வச்சுப் பார்க்க முயற்சிக்கிறாங்க. வித்தியாசமில்லாத தனித்துவம் கொண்டவன் நான் என்று ஏற்கெனவே நான் என்னைப் பற்றி சொல்லியிருக்கேன்ல? காமத்தை இதுவரை வெற்றிபெற என்னால் முடியல. நான் இப்பவும் முன்பிருந்த அந்த உணர்ச்சிகள் கொண்ட மனிதன்தான். அதில் பெரிய மாற்றங்கள் எதுவும் உண்டாகிவிடவில்லை. காவி ஆடைகள் அணிந்ததால் மட்டும் நான் சன்னியாசி ஆகிவிட்டதாக நம்பி விடல. என்னை நானே சுத்திகரிக்க வேண்டும் என்ற ஒரே விருப்பம்தான் இப்போ எனக்கு இருக்கு. நல்ல மனிதனாக வாழணும். கடந்து போனவற்றை மறக்க முயற்சிக்கணும். அதற்கான சூழ்நிலைகள் அமையுமா?

3

காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தபோது பாலசந்திரனின் மனதிற்குள்ளிருந்த எத்தனையோ கபட விஷயங்கள் அங்கிருந்து கிளம்பி ஓடிப் போய் விட்டதைப் போன்ற ஒரு அனுபவம் அவனுக்கு உண்டானது. அஸ்தியை கங்கை நதியில் கரைத்து ஓடவிட்ட பிறகு அவன் கங்கையில் மூழ்கி, துணிதுவட்டி, தெய்வ சந்நிதியில் போய் நின்றான். அஸ்தியையும் ஜாதகத்தையும் ஒரே நேரத்தில் கங்கையில் ஓடச் செய்ய முடியும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

அவனுடைய தாய் ஏற்கெனவே கூறியிருந்தாள் - தான் இறந்த பிறகு காசிக்குச் சென்று அஸ்தியைக் கரைக்க வேண்டுமென்று. அப்படி ஒருவேளை முடியாமல் போய்விட்டால், திருன்னாவாய்க்குப் போயாவது அஸ்தியைக் கரைக்காமல் இருக்கக் கூடாது. இறந்தவர்களின் ஆத்மாவிற்கு சாந்தி கிடைக்கவேண்டுமென்றால், கட்டாயம் அந்தச் சடங்கைச் செய்ய வேண்டும். பிள்ளைகளோ, பிள்ளைகளின் பிள்ளைகளோ யார் செய்தாலும் சரிதான்- எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நல்ல உடல் நிலையுடன் இருந்த காலத்தில் அவனுடைய அன்னை சொன்ன வார்த்தைகள் இவை.

இப்போது அவை ஒவ்வொன்றாக ஞாபகத்தில் வந்து கொண்டிருக்கிறது. கங்கையின் பிரவாகத்தைப் போல.

‘அம்மா, நீங்க அவ்வளவு சீக்கிரமா சாக மாட்டீங்க. இனியும் பல வருடங்கள் நீங்க வாழ்வீங்க. நான் உங்க பக்கத்திலேயே இருப்பேன். உங்களை நல்லா கவனிச்சு, பத்திரமா பார்த்து, நீங்க சொல்றபடியெல்லாம் கேட்டு நடக்குற நல்ல மகனா நான் இருப்பேன். ‘எதுவும் நடக்கவில்லை. வழி தவறிப் போய்விட்டான். அவனுடைய அன்னை அவனை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தாள். கல்வி கற்கச் செய்தாள். எழுதுவதற்கான ஆர்வத்தைப் பல வகைகளிலும் உண்டாக்கி உற்சாகப்படுத்தினாள். அப்படிப்பட்ட அன்னையை அவன் மறந்து விட்டான் - ஏதோ ஒரு நடத்தை கெட்டப் பெண்ணுக்காக.

“எல்லாத்துக்கும் காரணம் நேரம்தான். எவ்வளவு எச்சரிக்கையாக நாம இருந்தாலும், நடக்க வேண்டியது நடந்தேதான் தீரும். பல விஷயங்களும் நாம எதிர்பார்க்காமலே வாழ்க்கையில நடக்கும். அதனால எதையும் பெருசா எடுத்துக்கக் கூடாது.”

“அச்சுதானந்தஜி, எல்லாவற்றையும் முழுசா கேட்ட பிறகு எனக்கு ஆறுதல் சொன்னா போதும். ஆறுதல் சொல்றதுக்கும் கோபிக்கிறதுக்கும் எனக்கு எந்தத் தகுதியும் இல்ல. ஒரு மூத்த சகோதரர்ன்ற முறையில நான் சொல்ற வார்த்தைகளை எடுத்துக்கிட்டா போதும். நாம ரெண்டு பேருமே சம அளவுல தூக்கத்தில் இருப்பவர்கள்தான். என் கதைகள் மூலமா நீங்க தெரிஞ்சுக்குவீங்க. இப்போ அதற்கான சந்தர்ப்பம் இல்ல. காசியைப் பற்றித்தானே நான் சொல்லிக்கொண்டிருந்தேன். அதுக்கு இடையில அம்மாவைப் பற்றி நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.

ஒரு பக்தனைப் பொறுத்தவரையில் காசி ஒரு புண்ணிய நகரம்தான். காசிக்கு யாத்திரை போன என் பெரிய மாமா திரும்பியே வரல. அறுபது வருடங்களுக்கு முன்னாடி நடந்த சம்பவம் அது. அப்போ என் அத்தை கர்ப்பமா இருந்தாங்க. மாமா எப்படியும் திரும்பி வருவார்ன்ற நம்பிக்கையில அவங்க அவருக்காகக் காத்திருந்தாங்க. ஒரு ஆண் குழந்தையை அவங்கப் பெத்தெடுத்தாங்க. தந்தையைப் பார்க்காமலே அந்தப் பையன் வளர்ந்தான், மாதவன் அத்தான். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக மாதவன் அத்தான் வேலையில இருந்து ஓய்வு எடுத்தாரு. பாதை மாறிப் போறது மாதிரி தோணுச்சுன்னா சொல்லிடுங்க”


“எல்லா விஷயங்களையும் மனம் திறந்து ஒரு ஆள்கிட்ட சொல்றப்போ தோணுற சுகம் உங்க வார்த்தைகள்ல இருக்கு. அதுனால நீங்க சொல்றதைச் சொல்லுங்க. நான் எல்லாத்தையும் கவனமா கேக்குறேன்.”

“கங்கை நதியில் பாவத்தைக் கழுவி விடுறதுக்காகத்தான் எத்தனையோ ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் காசியைத் தேடிப் போறாங்கன்னு பொதுவாக எல்லாரும் சொல்லுவாங்கள்ல? அது உண்மையா? அசுத்தத்தைக் கழுவி விடுறதுனால அப்படி எல்லாரும் சொல்றாங்கன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.

ஒண்ணு மட்டும் உண்மை. காசி விஸ்வநாதரைத் தரிசனம் செய்வதும் கங்கையில் குளிக்கிறதும் மனதிற்குச் சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயங்கள்ன்றது என்னவோ உண்மை. மணிகர்ணிகா கட்டிலும், ஹரிச்சந்திரக் கட்டிலும் நான் பார்த்த காட்சிகளை மறக்கவே முடியாது.

வாழ்க்கை முடியப் போகிற நேரத்துல காசிக்குப் போயி இறப்பதை இந்துக்கள் புண்ணியம்னு நினைக்கிறாங்க. சுடுகாட்டில் சில காட்சிகளைப் பார்த்தப்போ வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன். எதுவுமே நிரந்தரம் இல்ல. எல்லாம் ஒரு பிடி சாம்பல்- அவ்வளவுதான்.

மரணத்தின் கைகளில் பட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்தப்போ, இதயம் பலமாக அடிக்க ஆரம்பிச்சது. இறந்த உடலைச் சுட்டு சாம்பலாக்க முடியாத ஏழைகள்... சுடுகாட்டிலும் பேரம் பேசல்... எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் உண்மை மட்டுமே பேசிய ஹரிச்சந்திர மஹாராஜாவிற்கு நேர்ந்த அக்னிப் பரீட்சைகள் இன்னும் அப்படியே தொடர்ந்து கொண்டுதான் இருக்கு. சுடுகாட்டில் எரிப்பதற்காகக் கொண்டு வந்த இறந்த உடல்கள் கங்கை நதிக் கரையில் விறைத்துப் போய் கிடக்கின்றன. சில பிணங்கள் கல்லால் ஆன படிகளில் இறுதிச் சடங்கை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறதை நான் பார்த்தேன். பாதி எரிந்து முடிந்த பிணங்களைச் சுற்றி நாய்கள் காவல் காத்து உட்கார்ந்திருக்கின்றன. செத்துப் போன பிணங்களில் சில பிணங்கள் கங்கை நதியில் எறியப்படுகின்றன. எரிந்து முடிந்தவை, முழுமையாக எரியாதவை எல்லாமே அதுல இருக்கு. பிணத்தை எரிப்பவர்கள் வரிசையாக நின்னுக்கிட்டு இருக்காங்க. வாரிசுகள் இல்லாத பிணங்கள்... வாரிசுகள் பிணம் முழுமையாக எரிந்து முடியிறது வரை அங்கே இருக்குறது இல்ல. அவங்களுக்கு அவசரம். சுடுகாட்டுக் காவலாளிகள்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு அவங்க அந்த இடத்தை விட்டு போயிடுவாங்க. இறந்துபோன மனிதனின் உடலை விட விறகின் விலை அதிகம் என்பது புரிந்தது. செத்துப் போன மனிதனின் உடல்ல இருந்து துணிகள் பிடுங்கப்படுது. சிலர் ஆடம்பரத்தோட பிணங்களைத் துணியால மூடியிருப்பாங்க. ஜரிகை போட்ட வேட்டிகளும் பட்டுத்துணிகளும் அங்கு கழற்றப்படும். உடுத்திய புடவைகள் நீக்கப்பட்ட நிர்வாண உடல்களைப் பார்த்தப்போ மூச்சு விடுவதற்கே கஷ்டமாக இருந்தது. ஆண்களும் பெண்களும் இளம் பெண்களும் இளைஞர்களும் வயதானவர்களும் சிறுவர்களும் எல்லோரும் அந்தப் பிணக் கூட்டத்தில் இருந்தார்கள்.

பணத்திற்காக எவ்வளவு கேவலமான காரியத்தையும் செய்யத் தயங்காத மோசமான மனிதர்கள்... மது அருந்தி நிதானத்தை இழந்த பிரச்சினைகள் பண்ணிக் கொண்டிருக்கும் இடைத்தரகர்கள்… நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்... பாதாள உலக நாயகர்கள்…

செய்யத் தகாத செயல்களைச் செய்யக் கூடாதுன்னு சொன்னா கத்தியைக் காட்டி பயமுறுத்தக் கூடியவர்கள். திருவிழா கொண்டாட்டத்துடன் பிணங்களைச் சுற்றி ஓடித் திரிகிறார்கள். பேய்களைப் போல.

கோணிகளில் சுற்றப்பட்ட இறந்த உடல்கள் எரிக்கப்படாமல் கங்கையில் போடப்படும் செயலை நேரிலேயே பார்க்கக் கூடிய சந்தர்ப்பமும் எனக்குக் கிடைச்சது. சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணங்களில் இருந்து வந்த பயங்கரமான வாசனை... நெருப்பும் புகையும் சேர்ந்து உண்டாக்கும் மூச்சை அடைக்கும் சூழல்... உடல்களிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் நெய்யைப் போன்றிருக்கும் திரவத்தை நக்கிக் குடிப்பதற்காக நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சுடுகாட்டு நாய்கள்... நிசப்தமாக இறந்த மனிதனின் பிரிவை நினைத்து கவலைப்பட்டு கண்களை மூடிக் கிடப்பவர்களும், அறிமுகமில்லாதவர்களைக் கடித்துக் கிழிக்கத் தயாராக நின்றிருக்கும் மனிதர்களும் அந்தச் சுடுகாட்டில் இருக்கத்தான் செய்தார்கள். காசி விஸ்வநாதா, தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும் இந்த வருத்தம் தரும் காட்சிகளைப் பார்த்து உன்னுடைய இதயமும் மரத்துப்போய் விட்டதோ?

என்னவெல்லாம் கதைகள் அந்தச் சுடுகாட்டைச் சுற்றி ஒவ்வொரு நாளும் நடக்கின்றன.

அச்சுதானந்த சுவாமி, நேரம் அதிகமாயிடுச்சு. இந்த இரவு நேரத்தின் பயங்கரமான இந்தச் சூழலில் நாம ரெண்டு பேரு மட்டும் இங்கே தனியா இருக்கிறது அவ்வளவு நல்ல விஷயமா எனக்குத் தெரியல. நாம இங்கேயிருந்து கிளம்பலாம்...”

மூன்று இரவுகளிலும், மூன்று பகல்களிலும் அவர்கள் கங்கைக் கரையில் இருந்தார்கள். அந்த மூன்று நாட்களில் அவர்களுக்குப் பல்வேறு வகைப்பட்ட அனுபவங்கள் கிடைத்தன. எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் காசி மகாராஜாவின் பழமையான அரண்மனைக்கு எதிரில் இருக்கும் கற்படிகளில் அவர்கள் இடம் பிடித்தார்கள். அங்கிருந்து எல்லாவற்றையும் அவர்கள் பார்க்கலாம். இயற்கையும் பழமையும் ஒன்றோடொன்று கை கோர்த்து காட்சியளிக்கும் இடம் அது.

நீருக்கு மேலே குப்புறப் படுத்துக் கொண்டு, விளையாடும் போது அணியும் முழு காற்சட்டையை அணிந்து, ஒரு மனிதன் போய்க் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள். நீரோட்டத்தில் குளிக்கும் யாரோ ஒரு வித்தைகள் காட்டும் மனிதன் என்றுதான் முதலில் அவர்கள் நினைத்தார்கள். சற்று அருகில் போய் எட்டிப் பார்த்தார்கள். மூங்கிலில் இறுகக் கட்டப்பட்ட ஒரு இறந்த உடல் அது என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

“என்ன யோசிக்கிறீங்க?”

“இது ஒரு கொலைச் செயல் மாதிரியே தெரியலையா?”

“இறந்துபோன ஆத்மாவின் ஒரு வேண்டுகோளை உறவினர்கள் நிறைவேற்றுகிறார்கள். இப்படி இங்கு பல பிரார்த்தனைகளும் நிறைவேற்றப்படுகின்றன.” காசியுடன் நீண்ட காலமாக உறவு கொண்டிருக்கும் அச்சுதானந்தன் உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.

“இதுதான் ஜலசமாதியா?”

“ஜலசமாதின்றது இது இல்ல. அதற்குச் சில சடங்குகள் இருக்கின்றன. மந்திர தீட்சை கொடுத்தவரின் அனுமதி அதற்கு வேணும். மந்திர தீட்சை தந்த குரு உயிரோடு இல்லைன்னா ஏதாவதொரு ஆசிரமத்தின் மடாதிபதியின் அல்லது சத்குருவின் அனுமதி வேணும்.”

“அது எப்படின்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”

“அதை இன்னொரு சூழ்நிலையில நான் விளக்கிச் சொல்றேன். இப்போ அதற்கான நேரம் வரல.”

முழுக்காற்சட்டை அணிந்த மனிதரின் இறந்த உடல் படுவேகமாக நீரோட்டத்தில் சென்றது. கண் இமைக்கக் கூடிய நேரத்தில் அது மறைந்தும் போனது.

மலரலங்காரம் செய்யப்பட்ட ஒரு சிறு கட்டில் கங்கையின் நீரோட்டத்தில் மிதந்து வருவதை அவர்கள் பார்த்தார்கள். கரையை ஒட்டி அந்தக் கட்டில் வந்து கொண்டிருந்தது.


அது ஒரு பெண்ணின் உடல் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை. சிவப்பு நிறத்தில் புடவையும் சிவந்த ரவிக்கையும் அவள் அணிந்திருந்தாள். கை நிறைய கண்ணாடி வளையல்கள் இருந்தன. நீரோட்டத்தோடு சேர்ந்து போய்க்கொண்டிருந்த கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் அழகி. நதியில் அது விடப்பட்டு அதிக நேரம் ஆகவில்லை. அருகில் இருக்கும் ஏதோவொரு இடத்திலிருந்து அதை விட்டிருக்கிறார்கள். உடல் அழுகிப்போயிருந்தால் மீன்கள் கண்களையும் மூக்கையும் கொத்தித் தின்றிருக்கும். சிறிதும் கெட்டுப்போகாத உடல். முல்லை மலர்கள் சிதறி விடப்பட்டிருந்த கட்டில். ஒரு பெரிய மலர் வளையமும் கட்டிலில் இருந்தது. இறந்து போன பெண் அகால மரணத்தை அடைந்திருப்பாளோ? இல்லா விட்டால் குணப்படுத்த முடியாத நோயில் சிக்குண்டு உடல் பாதிப்படைந்து இறந்திருப்பாளோ? அவளுக்கு உறவினர்களும், நண்பர்களும் இல்லையா? பிள்ளைகள் இல்லையா? தாய், தந்தை இல்லையா? பாலசந்திரனின் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் என்ற முறையில் அச்சுதானந்தன் உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்:

“இந்த மாதிரி விஷயங்கள் இங்கு அசாதாரணமானவை அல்ல. காசியில் இளம் வயதுல இருக்குற விலைமாதர்கள் இறந்தா, பூ பரப்பப்பட்ட கட்டில்ல படுக்க வச்சு கங்கை மாதாவிற்குச் சமர்ப்பணம் செய்கிற சில இன மக்கள் இருக்காங்க. இது ஒரு பிரார்த்தனைதான். எல்லாவற்றையும் மிகுந்த கருணை கொண்டு ஏற்றுக் கொள்கிறது.”

4

ச்சுதானந்தனுக்குத் தெரியாத விஷயங்கள் எதுவுமே இல்லை. இந்த உலகத்தில் ஒரு சன்னியாசி இதையெல்லாம் எப்படி தெரிந்து கொண்டார்? நேரில் பார்த்தும் மற்றவர்கள் சொன்னதைக் கேட்டும் தெரிந்து கொண்ட விஷயங்களாக அவை இருக்கலாம்.

அந்தக் காசி நகரம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது அங்கு தங்கியிருக்க வேண்டும். அப்போது மட்டுமே அங்குள்ள சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

“சாயங்காலம் ஆன பிறகு இங்கேயிருந்து கிளம்பினா போதும். அதற்கு மத்தியில் பார்த்தே ஆகணும்னு கட்டாயம் இல்லாத பல விஷயங்களை நான் காண்பிக்கிறேன். அது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.” - அச்சுதானந்தன் உற்சாகமான குரலில் சொன்னார்.

தன்னுடைய குழந்தையின் இறந்த உடலை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு கங்கை நீரில் மிதக்க விடுகிற ஒரு தாய்… குழந்தைக்கு இரண்டு வயதுக்குக் குறையாத வயது இருக்கும். புத்தாடைகளை அது அணிந்திருக்கிறது. சிவப்பு நிற நூலால் தைக்கப்பட்ட தொப்பி குழந்தையின் தலையில் இருக்கிறது. கழுத்தில் பூமாலை தொங்கிக் கொண்டிருக்கிறது. உடல் முழுவதும் பட்டுத் துணியால் மூடப்பட்டிருக்கிறது. முகம் மட்டும் வெளியே தெரிகிறது. பாசம் செலுத்தி வளர்க்கப்பட்ட செல்ல மகளாக இருக்கலாம்.

கங்கை நதியின் நீரோட்டத்தில் குழந்தையை மிதக்கவிட்டபோது அந்தத் தாய் அழவில்லை. மரத்துப்போன இதயத்துடன் தன்னுடைய குழந்தையை நீண்டநேரம் மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு என்னவோ ஆழமான சிந்தனையில் மூழ்கியவாறு கடைசியில் கங்கையின் பரந்த நீரோட்டத்தில் தன்னுடைய செல்லக் குழந்தையை எடுத்து மிதக்கவிடும் அந்த இளம் வயது அன்னையின் முகம் மனதை விட்டு நீங்கவே இல்லை.

நன்றாக இந்தி பேசத் தெரிந்த அச்சுதானந்தனுடன் காசியில் செலவழித்த அந்த நாட்கள்...

கோவில்களின், சிவலிங்கங்களின் ஊர்... தேவி, தேவர்களின் உருவங்கள்... காசி மகாராஜாக்கள் வாழ்ந்த அரண்மனை… அரண்மனையைச் சுற்றி உயர்ந்து நிற்கும் மிகப் பெரிய சுவர்... புகழ்பெற்ற மன்னர்களின் பரம்பரை... மன்னர்களின் பல்லக்குகள், தரங்கள், ஆயுதங்கள், விலைமதிப்புள்ள கிரீடங்கள். ஆடை, அணிகலன்கள், புகழின் உச்சியில் வாழ்ந்த மகாராஜாக்களின் கடந்த காலச் செல்வாக்கைப் பறை சாற்றும் மாதிரிகள். மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. நுழைவுச்சீட்டு வாங்கினால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். யானைப் படையையும், குதிரைப் படையையும் நடந்து சென்று பார்த்தார்கள். நூறு யானைகள், ஆயிரம் குதிரைகள், பத்தாயிரம் காலாட்படை, முக்கிய தளபதிகள், அமைச்சர்கள், மகாராணிகள், ராணிகள், அவர்களின் பெயர்கள், வரலாற்றில் அவர்கள் வகித்த பதவிகள் - எல்லாவற்றையும் பார்த்தவாறு இரண்டு மணி நேரம் கோட்டைக்குள் சுற்றிய பிறகும் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத வருத்தத்துடன்தான் வெளியே வர முடிந்தது. எத்தனையோ ஆட்சியாளர்கள் காலத்தில் சுழலில் பட்டு மறைந்து போயிருக்கிறார்கள். கடந்த கால நினைவுகள் பாலசந்திரனின் மனதில் இனம் புரியாத ஒரு இனிய அனுபவத்தை உண்டாக்கின. பழைய பெயரில் இனியும் ஏதாவது எழுதினால் என்ன என்று அவன் நினைத்தான். ஒரு எழுத்தாளன் எந்த வேடத்தை அணிந்தாலும் அவனுக்குள் இருக்கும் உண்மையான வேஷம் அவனை விட்டுப் போகவே போகாது என்பது தான் உண்மை.

அன்னபூர்ணேஸ்வரியையும் காசி விசாலாட்சியையும் பார்த்து வணங்க பாலசந்திரன் மறக்கவில்லை.

காசி விஸ்வநாதனின் பிரிய நாயகியான காசி விசாலாட்சி! சுந்தரமூர்த்தியான சாட்சாத் பரமசிவன். பார்வதி, காசி விசாலாட்சி, அன்னபூர்ணேஸ்வரி- எல்லாம் ஒன்றுதான். அர்த்தநாரீஸ்வரனின் சக்தியாகத் திருவிளையாடல் நடத்துகிறாள்!

“ஓம்! நமச்சிவாய!”

நடராஜரின் விக்கிரகத்தைப் பார்த்தபோது தன்னை மறந்து சொன்னான் பாலசந்திரன். மீண்டும் மீண்டும் ஓம்! நமச்சிவாய! ஹர ஹர முத்திரை மஹாதேவாசம்போ ருத்ர மஹாதேவா!

கோவில் தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. பிரதான கடவுளும் உப கடவுள்களுக்கும் உள்ள கற்பூர ஆராதனை. ‘சக்திஸ்வரூபிணி, ஜகஜ்ஜனனீ... காப்பாத்தணும்! இந்த அனாதையை ஆசீர்வதிக்கணும்... இருக்க இடம் தரணும்...’ -பாலசந்திரன் கைகள் கூப்பித் தொழுதான்.

விஸ்வநாதர் கோவிலோடு சேர்த்து இருக்கும் அன்னபூர்ணேஸ்வரி கோவில் சந்நிதியில் நின்று கொண்டு சங்கராச்சாரியாரால் பாடப்பட்ட அன்னபூர்ணேஸ்வரி ஸ்தோத்திரங்களை அவன் சொன்னான். தந்தி மகாராஜவிக்னேஸ்வரர் கோவிலுக்குச் சென்று கைகள் கூப்பி பாலசந்திரன் நின்றான். புத்தியும் சித்தியும் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். சன்னியாசியாகப் போகிற ஒருவனுக்கு எதற்கு சித்தியும் புத்தியும்? பி.கே.பி. என்ற எழுத்தாளன் என்ற கோணத்தில் பார்த்தால் அவனுக்கு அவையெல்லாம் தேவைதான்.

காசி விஸ்வநாதரின் உண்மையான விக்கிரகம் விழுந்து கிடக்கும் கிணற்றுக்குள் அவன் எட்டிப் பார்த்தான்.

தேவி- தேவர்களின் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்யப்படும் சிறியதும் பெரியதுமான கோவில்கள்... கோவில்களில் குடியிருக்கும் தெய்வங்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அவற்றின் முன்னால் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்கள்… வழிபாடு செய்யும்போது உண்டியல்களில் பணத்தைப் போடாமல் நேராகப் பூசாரிகளிடம் கொடுக்கும்படி தூண்டும் ஆட்கள்... சிவ பக்தர்களுக்கும் வைணவ பக்தர்களுக்குமிடையே காணும் சிறு சிறு சண்டைகள்...


பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அங்கு செய்யப்படும் விவேகமற்ற செயல்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றைப் பற்றி அச்சுதானந்தன் சொன்ன குற்றச்சாட்டுகள் தெளிவான ஒரு விமர்சனமாக இருந்தது. சன்னியாசி கோலம் பூண்ட பிறகும் அவருடைய விமர்சனத்தில் கூர்மை சிறிதும் குறையவில்லை. அச்சுதானந்த சுவாமி சில நேரங்களில் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார். தான் ஒரு சாதாரண காவி உடை அணிந்த மனிதன் அல்லவென்றும் அச்சுதானந்த மகாராஜ் என்ற மரியாதைக்குரிய பெயரைப் பெற்ற பெரிய ஒரு மனிதர் என்றும் தன்னைக் காட்டிக் கொள்ள அவர் பெரிதும் முயற்சித்தார்.

காசி விசாலாட்சி கோவிலில் அவர்கள் அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். ஹுக்காவில் மருந்து நிறைத்து புகையை பாலசந்திரன் ஊதினான். சுகமாக அங்கேயே படுத்து உறங்கவும் செய்தார்கள்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் கங்கையில் இறங்கிக் குளித்தார்கள். கோமுகியில் நீர் மொண்டு சுயம்பு விக்கிரகத்தின் மீது அதை ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். எங்கிருந்தாவது ஒரு கமண்டலத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

“சன்னியாச தீட்சை எடுத்து முடித்த பிறகுதான் புலித்தோல், கமண்டலம், யோகதண்டம் ஆகியவற்றை ஒருவர் வச்சுக்க முடியும். வயிற்றுப் பிழைப்பிற்கு அது ரொம்பவும் பிரயோஜனமா இருக்கும்” - அச்சுதானந்த சுவாமியின் கருத்தைக் கேட்டபோது, தன்னை அறியாமல் பாலசந்திரன் சிரித்து விட்டான்.

“அகமும் புறமும் ஒரே மாதிரி சுத்தமா இருக்குதுன்னு தோணுற நிமிடத்தில் யக்ஞ தீட்சை எடுத்துக்குவேன். அதுவரை இப்படி நடந்து திரியிறதுலதான் எனக்கு விருப்பம்.”

“பிறகு எதற்கு காவி வேடம்? மற்றவர்கள் தப்பா நினைக்கவா?”

“காவி ஆடை அணிபவர்கள் அனைவரும் சன்னியாசிகள் என்று மற்றவர்கள் நினைச்சா நினைச்சிக்கட்டும். நான் இன்னும் சன்னியாசி ஆகல.”

“சன்னியாசிகள் கஞ்சா நிரப்பப்பட்ட ஹுக்கா இழுக்கலாமா? மீன்களையும், மாமிசத்தையும் சாப்பிடக்கூடிய சன்னியாசிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்? மது அருந்திவிட்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்திருப்பீங்கள்ல? அணிந்திருக்கும் காவி ஆடையை அவிழ்த்து ஒரு மூலையில் வச்சிட்டு, பெண்ணுடன் சல்லாபம் செய்ய நினைக்கும் காவி ஆடை அணிந்த மனிதர்களும் இருக்காங்கறதை ஞாபகத்துல வச்சுக்கங்க.” அதைச் சொல்லும்போது அச்சுதானந்தனுக்கே என்னவோ போல் இருந்தது. பாலசந்திரனுக்கு அதுவரை தெரியாத, கேள்விப்பட்டிராத, அனுபவித்திராத, பார்த்திராத எத்தனையோ உண்மைகளை அவர் வெளியே காட்டினார்.

“அச்சுதானந்த மகாராஜ், என்கிட்ட இதையெல்லாம் ஏன் நீங்க சொல்லணும்? நான் ஆசை வலைகளில் விழப்போவது இல்லை. ஒரு பெண்ணின் நிர்வாண உடலைப் பார்க்கணும்னு எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. நான் எந்தப் பெண்ணைக் கண்டாலும் ஒரு ஓரத்துல போய் ஒதுங்கி நிற்கக் கூடியவன். இளம் பெண்களை மட்டுமல்ல, நடுத்தர வயது கொண்ட பெண்களைப் பார்த்துக்கூட நான் பயப்படுறேன்.”

“கிழவிகளைப் பார்த்துமா?”

“அவங்களைப் பார்த்தும் நான் பயப்படுறேன்.”

“அப்படின்னா உங்களுக்குள்ளே ஒரு நோயாளி மறைந்திருக்கான்றது நல்லாவே தெரியுது. அந்த நோயாளியைத்தான் உள்ளேயிருந்து முதல்ல அடிச்சு வெளியே விரட்டணும்.”

“போகிகளுக்கும் தியாகிகளுக்குமிடையே உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியாதது இல்ல. நான் அதை விளக்கிச் சொல்ல விரும்பல. மேம்போக்கான விஷயங்களைப் பார்த்து யாரையும் மதிப்பிடக்கூடாது...”

விவாதத்திலிருந்து சற்று ஒதுங்கி நின்றுகொண்டு அச்சுதானந்தன் புகை பிடிப்பதில் உள்ள கெடுதல்களைப் பற்றி கூறத் தொடங்கினார்.

“புகை பிடிக்கிறதுக்குப் பதிலா ஆம்லெட் சாப்பிடலாம்ல? அது உடல் நலத்தைக் கொஞ்சமும் கெடுக்காது.”

“சன்னியாசிகளுக்கு ஏற்ற உணவல்ல ஆம்லெட். சைவ உணவைத்தான் அவங்க சாப்பிடணும். நான் தாவர உணவுகளைத்தான் சாப்பிடணும்ன்றதுல உறுதியா இருக்கேன். அப்படின்னா ஹுக்கா இழுத்து, அதை நான் பின்பகுதி மூலமா வெளியே விட்டுடுவேன். இது உடல் நலத்துக்கு நல்லது இல்லைன்னு தெரியாம இல்ல. இது ஒரு பழைய பழக்கம். ஏதாவது சொல்லணும்னு தோணுறப்போ ரெண்டு இழுப்பு இழுத்தால், இது ஒரு சுகமான அனுபவம். எழுதுறப்போதான் இதை அதிகமா நான் புகைப்பேன். இப்போ பேச்சும் எழுத்தும் இல்லாம இருக்குறப்போ புகை பிடிக்கிறதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்” - பாலசந்திரன் தன்னுடைய கருத்து எதையும் மறைத்து வைக்கவில்லை. எல்லாவற்றையும் மனம் திறந்து கூறுவதுதான் நல்லது என்று அவன் மனதில் நினைத்திருப்பானோ என்னவோ?

“அச்சுதானந்தஜீ, நீங்க எப்போவாவது சரஸ் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா?”

சிறிதும் எதிர்பார்க்காமல் அப்படியொரு கேள்வியை பாலசந்திரன் கேட்டதும், அச்சுதானந்தன் பரிதாபமாக அவனுடைய முகத்தையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார். “நான் ஒரு புனிதமான மனிதன் ஒண்ணுமில்லைன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்ல! பிறகு எதுக்கு சம்பந்தமே இல்லாம இப்படியொரு கேள்வியைக் கேட்கணும்?”

அச்சுதானந்தனிடமிருந்து பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள பாலானந்தன் முயற்சி செய்தான். நண்பர்களாக ஆகும்போது எதையும் மறைத்து வைக்கக் கூடாது. மறைத்து வைத்து பேசக் கூடியவன் உண்மையில் நண்பனே அல்ல.

சன்னியாசிகளுக்கிடையில் நண்பர்கள் உண்டா? தங்களின் கடந்த கால அனுபவங்களை அவர்கள் வெளிப்படையாகக் கூறுவார்களா? தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்ப்பார்களா? உண்மையைத் தேடிப் போய் திரும்பி வந்தவர்களுக்கிடையில் கோபப்படுவது மாதிரியான சம்பவங்கள் இல்லையா? ஒருவரையொருவர் கெடுக்கும் எண்ணம் அவர்களுக்கிடையிலும் இருக்கிறதா?

கேள்விகளும் பதில்களும் சந்தேகங்களுமாக அவர்கள் ஒரே திசையில் சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்தார்கள்.

5

“புண்ணியமும், பழமையும் கொண்ட நகரமான காசியின் வரலாறு தெரியுமா? பழைய காசியின் இன்றைய வாரணாசியின் வரலாறு?”

“நான் கொஞ்ச நாட்கள் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறேன். வரலாறு படிக்கவும் வரலாற்றைக் கற்றுத் தரவும் எனக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன.”

“காசி நகரத்தின் சரித்திரத்தையும், பழமையையும், பெருமையையும் புரிந்து கொண்டால் எந்தக் காலத்திலும் இந்த இடத்தை வெறுக்கவே முடியாது. புனித நதியான கங்கை விஸ்வநாதரின் பாதக் கமலங்களைத் தழுவிக் கொண்டுதான் ஓடிக்கொண்டிருக்கு. எத்தனையோ பெரிய ஆத்மாக்கள், கங்கைக் கரையில் அமர்ந்து தவம் செய்திருக்காங்க. அவர்களில் பலரும் இப்போதும் மகா ஆத்மாக்களாக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்காங்க...”

“மிகப் பெரிய ஆத்மாக்கள் என்று கூறுவது மாதிரி யாராவது அந்தக் கூட்டத்துல இருக்காங்களா? இங்கே இருக்குற ஆசிரமங்களில் சாந்தி, சமாதானம் ஆகியவற்றின் உறைவிடமாக இருப்பவை எத்தனை? கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியல. அது ஒரு வரலாற்றுக் கதையாக நிலைபெற்று நிற்கும் என்ற ஆர்வத்தால் அதைப் பற்றி மேலும் விளக்கமாகச் சொல்ல நான் விரும்பல.”


“அப்படிச் சொல்லாம பின்வாங்கக் கூடாது. நான் பலவற்றையும் தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்குறவன். தவிர, நான் ஒரு பக்தன், பயணி. ஆச்சார, அனுஷ்டானங்கள் பலவற்றையும் உதறிவிட வேண்டும் என்று அவசியமில்லை. மூட நம்பிக்கைக்கும் ஆச்சாரங்களுக்குமிடையே வித்தியாசம் இருக்கு!”

“அனுஷ்டானங்களையும் ஆச்சாரங்களையும் பின்பற்றக் கூடாதுன்னு இல்ல. சிறிதும் தவறு செய்யாமல் சுத்தமான வாழ்க்கை வாழ்ந்து உன்னத நிலையை அடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. குறிப்பா, காசியின் பின்புலத்தில். அதனால் ஒரு இந்து காசியின் கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்தான். இந்து, முஸ்லீம், பார்ஸி, பவுத்தம்ன்றது ஒரு பிரச்சினையே இல்ல. மனிதனாக வாழ்வதற்குத் தேவையான ஏதாவதொன்றை இங்கிருந்து பெற முடியுமா என்பதைப் பற்றித்தான் நான் சிந்திக்கிறேன். இந்துக்களும் இந்துக்கள் அல்லாதவர்களும் ஒரே மாதிரி காசி மீது பிரியம் வச்சிருக்காங்க. அந்த பிரியத்துக்கு மதம் ஒரு பிரச்சினையே இல்ல. நூற்றுக்கணக்கான வருடங்களாக இருக்கும் கலாச்சாரம் அதைத்தான் உரத்த குரல்ல சொல்லுது. எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இங்கு வழிபடுறதுக்கு ஆலயங்கள் இருக்கின்றன. அங்கு எல்லோரும் ஒன்று கூடுறாங்க. அன்புக்காக, நட்புக்காக...”

அதைக்கேட்டு மதம் என்ற முகமூடி அணிந்திருக்கும் அச்சுதானந்தன் ஒரு மாதிரி ஆகிவிட்டார்.

“ராம சரித மானஸத்தை எழுதிய துளசிதாசனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?”

“நிறைய கேள்விப்பட்டிருக்கேன். தாய்மொழியில் எழுதப்பட்ட மகாகவி வெண்ணிக்குளம் கோபாலக்குறுப்பின் துளசிதாச இராமாயணத்தை நான் படிச்சிருக்கேன். என் தாயின் வற்புறுத்தல் காரணமாக நான் அதைப் படித்தேன்.”

“துளசிதாசன் இந்த கங்கைக் கரையில் இருக்கும் காசி மகாராஜாவின் அரண்மனைக்குள்ளிருந்துதான் ராம சரித மானஸத்தை ஆரம்பிச்சாரு. கங்கையையும் விஸ்வநாதரையும் அந்தக் காலத்துல அவர் வணங்கினார். கங்கையில் குளித்து, புராணப் பாராயணம் செய்து முடித்த பிறகுதான் காலை நேர உணவையே சாப்பிடுவாருனு அவரைப்பற்றி சொல்லுவாங்க. அவர் இனிமையான குரல்ல பாடுவார். அந்தப் பாட்டுல மயங்காத மனம் என்று அப்போ கங்கைக் கரையில எதுவுமே இல்ல. அவர் பாராயணம் செய்யிறதைக் கேட்பதற்கென்றே ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஆட்கள் வந்து கூடுவாங்க. ஆரம்ப காலத்துல அவர் ரொம்பவும் சாதாரண ஆளாகத்தான் இருந்திருக்காரு. ஒரு பெண்தான் அவரை வேற மாதிரி மாற்றிவிட்டாள்னு சொல்லுவாங்க. ‘நல்ல புத்தகங்களைப் படிக்கணும். அப்படின்னாத்தான் மனிதனாக முடியும்’னு அந்தப் பெண்தான் அவர்கிட்ட சொன்னாளாம்.”

“நான் நல்லதும் கெட்டதுமான ஏராளமான நூல்களைப் படிச்சிருக்கேன். சமஸ்கிருதம் எனக்குக் கொஞ்சம்கூட தெரியாது. இந்தியில யாராவது பேசினாங்கன்னா நான் புரிஞ்சிக்குவேன். தாய்மொழியும் ஆங்கிலமும் மட்டும்தான் எனக்குத் தெரிஞ்ச மொழிகள். எனக்கு மறுவாழ்க்கை தந்ததில் நூல்களுக்குப் பெரிய பங்கு இருக்கு. ஸ்ரீராமகிருஷ்ண வசனாமிர்தமும் விவேகானந்த சாகித்யமும் என்னை ரொம்பவும் ஈர்த்தன. வழிதவறிப்போன எனக்குச் சரியான பாதையைக் காட்டிய உன்னதமான நூல்களைப் பட்டியல் போட்டுக் கூறுவது சிரமம்.”

“வழி தவறிப் போனதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“பிற்காலத்துல நடைபெற்ற சில சம்பவங்கள்... கிடைத்த அனுபவங்கள்...”

“ஆன்மிகப் பாதையைப் பின்தொடர வேண்டும் என்பது தான் இலக்கா?”

“இராமாயணம் ஆறு காண்டங்களையும் படிச்சு முடிச்சிட்டு ராமனுக்குச் சீதை யாருன்னு கேட்குறதுமாதிரி இருக்கு இந்தக் கேள்வி... ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பரமஹம்சராக ஆகுறதுக்கு முன்னாடி கங்கைக் கரையில உட்கார்ந்து தியானம் செய்வாரு. அவர் யோகவாஸிஷ்டத்தை எப்போதும் படிப்பாரு. இந்த மண்ணுல இப்பவும் உலக இன்பங்களைத் துறந்த துறவிகளைப் பார்க்க முடியும். அவர்களுக்குச் சொந்தமா ஆசிரமங்களோ, மடங்களோ இல்ல. அவர்கள் உலக நன்மைக்காகச் சன்னியாசி கோலத்துல சுற்றிக்கொண்டு இருப்பாங்க.”

“அப்படிப்பட்ட ஒரு ஆளை இங்கேயிருந்து நாம போறதுக்குள்ளே எனக்குக் காட்ட முடியுமா?”

“பார்க்கலாம். ஆள் அரவமில்லாத இடங்கள்லயும் மரம் இருக்குற மூலைகள்லயும் ஆலமரத்துக்குக் கீழேயும் கங்கையின் மனித நடமாட்டமில்லாத கரையிலயும் சுடுகாட்டிலும் அவர்கள் இருப்பார்கள். நாம பார்த்தவுடனே அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுன்றது வேற விஷயம். அப்படிப்பட்ட மனிதர்களை ஒரு தடவையாவது தரிசனம் செய்திடணும்னு தேடி நடக்குற பணக்காரர்களை நிறைய பார்க்கலாம். இலட்சக்கணக்கான ரூபாய்களை காணிக்கையா வச்சு அவங்க சாஷ்டாங்கமா விழுந்து கும்பிடுவாங்க. ஆனா, அப்படிப்பட்ட பணக்காரர்களைப் பார்த்துட்டாலே துறவிகள் ஓடி ஒளிஞ்சுக்கணும்னு நினைப்பாங்க.”

அச்சுதானந்த சுவாமியுடன் சேர்ந்து பாலசந்திரன் வாரணாஸி முழுவதும் சுற்றித் திரிந்தான். பலதரப்பட்ட மனிதர்கள்... பல்வேறு மொழிகளைப் பேசக் கூடியவர்கள்... பலவகை குணங்களைக் கொண்டவர்கள்... வாழ்க்கையே பல்வேறு வகைப்பட்ட மனிதர்களால் வகுக்கப்பட்ட ஒரு வினோதம்தான் என்ற உண்மை மீண்டும் மீண்டும் புரிபடத் தொடங்கியது.

பிரகாசமாகக் காணப்பட்ட பூந்தோட்டங்களுடன் இருந்த வீடுகள், பிரம்மாண்டமான மாளிகைகள், கல்விக் கூடங்கள், அனாதை இல்லங்கள். தர்ம குணம் கொண்ட வசதி படைத்தவர்கள் கட்டிய தர்ம சாலைகள், சத்திரங்கள், சத்திரங்களுக்கு மத்தியில் ஆசிரமங்கள், மன்னர்களின் பெயரில் இருக்கும் ஆதரவு இல்லங்கள், சன்னியாசிகளுக்கு வாடகை எதுவும் இல்லாமல் தங்குவதற்கான மையங்கள்... பனாரஸ் பல்கலைக் கழகத்தையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் போய் பார்த்தார்கள். சமஸ்கிருத பாடசாலைகள், வேத விற்பன்னர்கள், சமஸ்கிருத பண்டிதர்கள், ஆசிரியர்கள் என்று பலரையும் அவர்கள் சந்தித்தார்கள்.

வருணைக்கும் அஸிக்கும் நடுவில் இருக்கும் வாரணாசியில் கிடைக்காத பொருட்கள் எதுவுமில்லை. பட்டும் இரத்தினமும் விற்கும் உண்டியல் வியாபாரிகள், ருத்திராட்சம், ஸ்படிகம், துளசி ஆகியவற்றைக் கொண்டு உண்டாக்கப்பட்ட மாலைகள், குங்குமம், மஞ்சள், காசி தீர்த்தம், சாளக்கிரமங்கள், மிதியடி, கூடை, துடைப்பம், பிரம்பு, சிலைகள்... வரிசையாகப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் திறந்திருந்தன. அழகான ஆண்களும் அழகிய பெண்களும் ஒருவரோடு ஒருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு அவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும், இந்தியர்களும் அடங்கிய அவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள். தேனிலவு கொண்டாடுவதற்காக வந்திருப்பவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மக்கள் வெள்ளத்தால் தெருக்கள் திணறிக் கொண்டிருந்தன. வாகனங்கள் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருந்தன. மனிதர்கள் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் ரிக்ஷா வண்டிகளும் இருந்தன. ரிக்ஷா  வண்டிகளில் ஒரு முழு குடும்பமே உட்கார்ந்திருந்தது. வண்டி இழுப்பவன் கண்ணீர் விட்டான். வயிற்றுப் பிழைப்பிற்காகத் தாங்க முடியாத சுமையுடன் வண்டியை இழுத்துக் கொண்டிருந்த ரிக்ஷாக்காரர்களைப் பார்த்தபோது அவர்கள் மீது பரிதாப உணர்ச்சி தோன்றியது. என்ன நாகரிக சமுதாயம்! இன்னொருவனின் கஷ்டமே தெரியாத பணக்காரப் பிண்டங்கள்! பிணங்களிடம் கூட இதை விட அதிக நாகரிகம் இருக்கும்.


பாவம் செய்ததற்கான தண்டனை... போன பிறவியில் மன்னர்களாக இருந்துகொண்டு மக்களை அடக்கி அவர்கள் ஆண்டிருக்கலாம். சாட்டையால் அடித்தும் பார்வையால் பயமுறுத்தியும் பணம் இருக்கிறது என்ற ஆணவத்தால் தறிகெட்டுப்போய் அவர்கள் வாழ்ந்தும் இருக்கலாம். முழுமையான சுயநலவாதிகளாக அவர்கள் அப்போது இருந்திருக்கலாம். பாலசந்திரன் நடந்து செல்லும்போது பல விஷயங்களையும் நினைத்தான். சில கொடுமையான காட்சிகளைப் பார்த்தபோது அவனுக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. காவி ஆடையை விட்டெறிந்து விட்டு மனிதர்களின் நன்மைக்காக களத்தில் இறங்கினால் என்ன என்றுகூட அவன் ஒரு நிமிடம் நினைத்தான்.

வேண்டாம்... வேண்டாம்... இதுவரை அவன் அனுபவித்ததே போதும். இனி வரும் நாட்களிலாவது அவன் மன அமைதியுடன் வாழவேண்டும் என்று நினைத்தான். அநீதியான சம்பவங்கள் பலவற்றையும் அவன் பார்க்க வேண்டியது வரலாம். அதைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்வதே நல்லது. எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது. ஆள்பலமும் அவனுக்கு இப்போது இல்லை.

‘கவலைகளைப் போக்குபவர்’ என்ற பெயரில் அறியப்படும் ஆஞ்சனேயர் கோவிலைப் பாலசந்திரன் பார்த்தான். கவலைகளிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகத்தான் அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். ஒவ்வொருவரின் கவலைகளும் அங்கு போன பிறகு நீக்கப்பட்டு விடுகின்றனவா? நானும் கவலையில் ஆழ்ந்திருக்கும் மனிதன்தானே? பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான். என்னைக் காப்பாற்று என்று’ - இப்படி தனக்குள் எண்ணினான் பாலசந்திரன்.

ஆஞ்சனேயர் ஆலயம் இருக்கும் இடத்தைச் சுற்றி ஏராளமான ஆலமரங்கள் இருந்தன. ஆலும் அரச மரமும் அத்தியும் வேப்பமரங்களும் அங்கு நிறைய வளர்ந்திருந்தன. காய்கள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன. கவலைகள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் குரங்குகள் மரங்களில் ஏராளமாக இருந்தன. பழங்களைத் தின்று கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும், காதலித்துக் கொண்டும் அவை இருந்தன. எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் வானரக் கூட்டம் பல இனத்தைச் சேர்ந்தவையாகவும் பல வயதைக் கொண்டவையாகவும் இருந்தன. ஸ்ரீராமனின் பக்தனான அனுமனின் வம்சப் பரம்பரை. அனுமன் முழுமையான பிரம்மச்சாரியாக இருந்தான் என்பதையும் சிரஞ்சீவித் தன்மை உள்ளவன் என்பதையும் பாலசந்திரன் கேள்விப்பட்டிருக்கிறான். வம்சப் பரம்பரை காமத்திற்கும் கோபத்திற்கும் இரையாகி வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வம்சப் பரம்பரை கவலைகளிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இங்கிருந்து ஓடிப் போவது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயமல்ல.

கவலைகள் இல்லாத அந்த வானரக் கூட்டத்திற்குத் தருவதற்காக அவல், மலர், சோளம் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருக்கும் கடைகள் அங்கு இருந்தன. குரங்குகளின் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் இரும்பு வலைகளுக்குள் அமர்ந்து கொண்டுதான் வியாபாரிகள் பொரியையும் பூக்களையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அனுமனின் சீடர்கள் கூட்டம் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காகச் செய்யும் முக்கியமான வழிபாடுதான் வானர நிவேத்யம். கூட்டம் கூட்டமாக ஓடிவரும் குரங்குகளுக்கு அங்கு வருபவர்கள் பூக்களையும் பொரியையும் எறிகிறார்கள். சிலர் ஆப்பிளையும் கொய்யாப் பழத்தையும் குரங்கின் கையில் கொடுத்து சந்தோஷம் அடைகிறார்கள். பாலசந்திரனும் கொஞ்சம் பொரியை குரங்குகளுக்கு முன்னால் எறிந்தான். குரங்குகளின் ஆர்வமும் ஆரவாரமும் சிறிதும் குறையாமல் இருந்தது. தந்திரசாலிகளும், சாமர்த்தியசாலிகளும், தட்டிப் பறிப்பவர்களும், ஏமாற்றுபவர்களும் அந்தக் குரங்குகளின் கூட்டத்தில் இருக்கவே செய்தார்கள். தாத்தாவும் பாட்டியும், பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும்…

அச்சுதானந்தன் ஒரு வயதான குரங்கைப் பார்த்து கையால் அடிப்பதற்காக ஓங்கினான். அடுத்த நிமிடம் அவன் பல்லைக் காட்டி வக்கணைசெய்தான்.

“சுவாமி... பக்கத்துல போகாதீங்க. அவங்க கூட்டமா வந்து நின்னுடுவாங்க. தலைக்கு நேரா கையை ஓங்கியிருக்கீங்கன்றதை ஞாபகத்துல வச்சுக்கங்க. சீடர்கள் சும்மா விட மாட்டாங்க...” வந்திருந்தவர்களில் ஒருவர் அச்சுதானந்தனைப் பார்த்துச் சொன்னார்.

குரங்குகளிடமும் கவலைகளை அகற்றும் அனுமனிடமும் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் தெருவை நோக்கி அவர்கள் நடந்தார்கள். அடுத்து அவர்கள் சென்றது துர்க்கை கோவிலுக்கு. நடந்து போகக் கூடிய தூரத்தில் அந்தக் கோவில் இருந்தது.

6

துர்க்கை கோவிலின் கோபுரத்தில் ‘ஓம்’ என்று எழுதப்பட்ட பலகை இணைக்கப்பட்டிருந்தது. கொடிமரத்தின் உச்சியில் காவிக் கொடி பறந்து கொண்டிருந்தது. துர்க்கா தேவியின் திருவிழாக் கொண்டாட்டங்களுக்கு முன்னால் செய்ய வேண்டிய மராமத்து வேலைகள் அப்போது நடந்து கொண்டிருந்தன. தச்சர்கள் பெரிய தேரிலிருந்து சிறு சிறு குறைபாடுகளைச் சரி செய்யவும் வேலையில் மூழ்கியிருந்தார்கள். கோவில் அதிகாரிகளில் ஒன்றிரண்டு பேர் சுவருக்குள் நடந்து கொண்டிருந்தார்கள். கோவிலின் சுவர்களும் படிகளும் சரியாக இருக்கின்றனவா என்று அவர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். சேறும் எண்ணெயும் ஒட்டிக் கொண்டிருந்ததைத் துணியால் துடைத்து சுத்தம் செய்தார்கள். எல்லா இடங்களிலும் புதுப்பிக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வண்ணம் பூசுபவர்களும் சுத்தம் செய்பவர்களும் தங்களின் வேலைகளில் மூழ்கிப் போயிருந்தார்கள். துர்க்காஷ்டமிக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒன்பது நாட்கள் நடைபெறும் பூஜை அது.

வியாபாரிகளுக்காகக் கோபுரத்திற்கு முன்னால் கடைகள் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய பந்தல் வேலையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெண்கள்தான் அங்கு பெரும்பாலும் வரக்கூடியவர்கள் என்பதைப் பார்க்கும்போதே உணர முடிந்தது. நெற்றியிலும் தலை முடிமீதும் திலகமிட்டிருக்கும் பெண்கள் வாய் ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டிருந்த பெண்கள் நடை திறக்கப் போவதை எதிர்பார்த்து வரிசையில் நின்றிருந்தார்கள். கண்கள் அந்தப் பக்கம் பார்த்தன. வேண்டாம் அதை நினைக்காமல் இருப்பதே நல்லது.

ஒரு விஷப்பாம்பின் குணத்தைக் கொண்ட அழகிய பெண்ணின் விபச்சாரத்தனமான மந்திர வலைக்குள் சிக்கி நடந்து திரிந்த நாட்கள்...

“இல்ல... என் மனசு இப்போ கூட அதை நினைக்க முயலுது”-பாலசந்திரன் தன் மனதிற்குள் மேல்நோக்கி எழுந்த நினைவுகளைக் கடிவாளம் போட்டு நிறுத்த முயற்சித்தான். நன்கு தெரிந்து கொண்டே அவன் எல்லாவற்றையும் மீறி நடந்தான். எதிலும் உறுதியாக அவனுடைய மனம் நிற்கவில்லை. கண்ணில் பார்ப்பது எல்லாமே உண்மை என்று அவன் தவறாக எண்ணினான். மனபலம் என்ற ஒன்று இல்லாமலே இருந்தது. இப்போது அல்ல. அப்போது.

பிடிவாத குணத்தால் அவன் அப்படி எதைச் சம்பாதித்தான்? மனசாட்சியை ஏமாற்றி வாழும் சுக வாழ்க்கை எவ்வளவு நாட்களுக்கு நடக்கும்? அதில் சுகம் என்பது எங்கே இருக்கிறது?

கெட்டவர்களைக் கொடுமையான பாம்பாக நினைத்து தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுரை சொன்ன தந்தைக்கு மகனிடமிருந்து கூலியாக என்ன கிடைத்தது?


சுயநலம் என்ற குணத்தைக் கொண்ட ஒரு மனிதன் இந்த உலகத்தில் செய்யும் கெட்ட செயல்களுக்கு முடிவு என்று எதுவும் இருக்கிறதா என்ன?

கடவுள் நம்பிக்கை குறைந்து போனதன் காரணமாகத்தான் அவன் பாதை மாறிப் போய் விட்டானா? சூழ்நிலைகளின் ஆக்கிரமிப்பு, மோசமான நண்பர்கள், தாய்-தந்தை இருவரின் அறிவுரைகளையும் உதாசீனப்படுத்தியது, அவற்றை அலட்சியமாக எடுத்துக்கொண்டது… தான் செய்தது அனைத்தும் தப்பு என்று அவன் சொல்ல வேண்டிய நிலை வந்தது. கடைசியில் அவள் அவனை ஏமாற்றினாள். அவன் தோற்றுப்போனான். அவள் வெற்றி பெற்று விட்டாள். பாலசந்திரன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

“எதையாவது சாப்பிட்டுவிட்டு நாம இந்த இடத்தைவிட்டு கிளம்பலாம்.”

அவர்கள் நீண்ட தூரம் நடந்தார்கள்.

மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பயணம்.

திலபாண்டேஸ்வர மகாதேவர் ஆலயத்தையும் தசாஸ்வமேதேஸ்வரர் ஆலயத்தையும் அவர்கள் போய் பார்த்தார்கள். கால பைரவாவிற்குச் சென்றபோது, அங்கு நாய்களின் கூட்டத்தைப் பார்த்தார்கள். பைரவனின் வேட்டை மிருகங்கள்… இல்லாவிட்டால், வாகனங்களோ?

கெட்ட நேரங்களைச் சரி செய்ய வேண்டுமென்றால் கால பைரவனை வணங்க வேண்டும். நாய்களுக்கு உணவு தந்தால் பித்ருக்கள் சந்தோஷப்படுவார்களாம்.

பித்ருக்கள் ஆசீர்வதித்தால் எல்லா விஷயங்களும் சரியாகி விடும். அதுவும் ஒரு நம்பிக்கைதான். அங்கு இறந்தவர்களுக்கு ஹோமம் நடத்தினால், விஸ்வநாதர் அருள் செய்வார் என்பது எல்லோரும் நம்பும் ஒரு விஷயம்.

இன்னும் சிறிது தூரம் நடந்து சென்றால் பழமையான ஒரு கோவிலின் கோபுர வாசலில் ஒரு சக்தி படைத்த சித்தர் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். மவுனி பாபா என்று அவர் எல்லோராலும் அழைக்கப்படுகிறார். அவர் முன்பு வித்யாரண்யா ஸ்ரீவாஸ்தவ என்று அழைக்கப்பட்டவர். பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.

இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு அவரையும் பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். பாபாவைப் பற்றி எத்தனையோ கதைகள் காசியிலும் காசிக்கு வெளியே இருக்கும் இடங்களிலும் உலாவிக் கொண்டிருந்தன. சில கதைகள் வேண்டுமென்றே கூட உருவாக்கப்பட்டிருக்கலாம்.

அவருக்கு எதன்மீதும் பற்று கிடையாது. எல்லாவற்றையும் விட்டெறிந்து விட்டுவந்த பற்றற்ற மனிதராக அவர் இருந்தார். திகம்பரராக அவர் இருந்தார். உடம்பு முழுவதும் ரோமங்கள் அடர்ந்து காணப்பட்டன. காடுபோல ரோமங்கள் வளர்ந்திருந்தன. உறுதியான தடித்த சாரீரம். ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கொண்டிருந்த அந்த மனிதர் பெரும்பாலான நேரமும் கண்களை மூடி அமர்ந்து கொண்டு மவுனத்தில் இருந்தார்.

சில நேரங்களில் கண்களைத் திறந்து தன்னைத் தேடி வந்திருப்பவர்களை அவர் பார்ப்பார். யாரையும் அவர் எளிதில் ஆசீர்வதிப்பதில்லை. சில வேளைகளில் எதிர்பாராத சூழ்நிலைகளில் அபூர்வமாகச் சிலருக்கு அவரின் ஆசீர்வாதங்கள் கிடைக்கவும் செய்திருக்கின்றன. மவுனிபாபாவைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மனிதர்கள் தினமும் அங்கு வந்து கொண்டிருந்தார்கள். சில நாட்களில் ஏராளமான ஆட்கள் வரிசை வரிசையாக அவரைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருப்பார்கள். யார் அங்கு வந்தாலும் போனாலும் மவுனிபாபா அவர்களைக் கவனிப்பதேயில்லை. சிதிலமடைந்து போயிருந்த அந்தக் கோவிலில் எல்லோரையும் ஈர்க்கக் கூடியது அங்கிருக்கும் சிலைகளோ பூசாரிகளோ அல்ல. கோவிலில் இருக்கும் நடராஜன்தான் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஒரே அம்சம். சாட்சாத் நடராஜன்தான் பாபாவாக அவதரித்திருக்கிறார் என்று ஆட்கள் நம்புகிறார்கள்.

பாபாவைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டமான விஷயம் என்று பாலசந்திரன் நினைத்தான். அவரைப் பார்த்ததும் பாலசந்திரன் வணங்கினான். கண்களை மூடியிருந்த பாபா அதைப் பார்த்திருக்க வழியில்லை. அச்சுதானந்தன் வணங்காமல் ஒரு ஓரத்தில் நின்றிருந்தார்.

ஆட்கள் சிலர் சுற்றிலும் நின்றிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு கூட்டம் அங்கு நின்றுகொண்டு கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

மவுனிபாபா தன் கண்களைத் திறப்பாரா?

கண்களைத் திறப்பார் - வந்திருப்பவர் அதிர்ஷ்டசாலியாக இருந்தால். அங்கு சில நிமிடங்கள் அவர்கள் இருந்தார்கள். காவி ஆடைகள் அணிந்த சன்னியாசிகள் கோவிலைச் சுற்றியிருந்த இடங்களில் துணியை விரித்துப் படுத்திருந்தார்கள். அங்கு அவர்கள் சந்தோஷத்தை அனுபவித்தார்கள். உணவு, தங்குமிடம் எல்லாமே அங்கு இலவசமாகக் கிடைத்தன. அதற்குப் பிறகு ஒரு மனிதன் வாழ்வதற்கு வேறு என்ன வேண்டும்?

பாலசந்திரன் பல விஷயங்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான். கவனத்தைத் திசை திருப்புவது மாதிரியான உரையாடல்கள் நடந்து கொண்டுதானிருந்தன. யோகத்தைப் பற்றியும், போகத்தைப் பற்றியும் அங்கு விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கடவுளின் சன்னிதானங்களில் கூட மனிதர்கள் விரும்புவது தங்களின் சுகத்தைத்தான். அந்த அளவிற்கு அவர் சுயநலவாதிகளாக இருந்தார்கள்.

தானும் சுயநலவாதிதானே என்று பாலசந்திரன் நினைத்தான். அச்சுதானந்தனையும் சுயநலம் விடவில்லை. சுயநலம் என்று ஒன்று இல்லாமலிருந்தால் இப்படி அலைந்து திரிய வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காதே! தன்னுடைய சொந்த விஷயத்தைத் தவிர பெரிதாக அவனுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. பணமும் புகழும் இருந்தாலும் எதற்காக அவன் இப்படிக் கிளம்பி வரவேண்டும்? தன்னைப் பற்றிய சிந்தனைதான் அவனுக்குள் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

சரணாகதி அடைவதுதான் கடவுள் பக்தி. புலன்களைக் கட்டுப்படுத்த முடியாதவன், ஆசைகளைக் கடக்காதவன் எந்தக் காலத்திலும் சன்னியாசியாக ஆக முடியாது. யாரோ ஒரு ஆள் எழுதி வைத்த வாசகத்தை சுவரில் தொங்க விடப்பட்டிருந்த பலகையில் அச்சுதானந்தன் படித்தான். தேவநாகரியில் அந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அதன்

அர்த்தத்தை விளக்க முயற்சி செய்த அச்சுதானந்தனைத் தேவையில்லை என்று கையால் விலக்கினான் பாலசந்திரன்.

“பாபாவைப் பற்றித்தான் நாம தெரிந்து கொள்ளணும். அவர் யார்? எதற்காக இங்கு அவர் வந்தார்?” அச்சுதானந்தன் பாபாவைப் பற்றிய கதைகளை ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தார். பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவனில்லை. மாறாகத் தானே அவரைக் கண்டறிந்தவன் என்ற மிடுக்குடன் அவர் அந்தக் கதைகளைக் கூறினார்.

“காசிக்கு வந்த காலத்துல பைத்தியக்காரனைப் போல கங்கை நதிக்கரையிலயும் கோவில் வாசல்லயும் ஈரக் கோணியை உடுத்திக்கொண்டு தலைமுடியை ஜடை மாதிரி விட்டுக் கொண்டு அலைஞ்சு திரிஞ்சதைப் பார்த்தவங்க இங்கேயே நிறையபேர் இருக்காங்க. அப்படிப் பார்த்தவங்கள்ல நானும் ஒருத்தன். பாபா மேல போலீஸ்காரர்கள் எத்தனையோ வழக்குகள் பதிவு செஞ்சாங்க. எத்தனையோ குற்றச்சாட்டுகள் அவர் பேர்ல பதிவாச்சு. எல்லாம் சாதாரண வழக்குகள்...”

“அந்தக் காலத்துல அவர் யாரையாவது தொந்தரவு செய்திருக்கிறாரா?”

“இல்ல... உரத்த குரல்ல கடவுள் பெயரைச் சொல்லுறதைத் தவிர, வேற எந்தத் தொந்தரவும் அவரால யாருக்கும் இல்ல.”

“சத்தம் போட்டு கடவுள் பெயரைச் சொல்றது தொந்தரவா?”


“சில பேருக்கு கடவுள் பெயரைச் சொல்லி கேக்குறது அலர்ஜியான விஷயம். அப்படிப்பட்டவங்க இங்கே இப்பவும் இருக்காங்க. எங்கேயாவது ஒரு இடத்துக்குப் போயிட்டா தானே விருப்பப்படுறது வரை அந்த இடத்தை விட்டு போறதே இல்ல. நீர் கூட குடிக்காம ஒரே இடத்துல உட்கார்ந்து கொண்டிருப்பாரு. தற்கொலை செய்ய முயற்சி பண்ணினார்னு வழக்குப் பதிவு செய்த சம்பவங்கள் கூட நடந்திருக்கு. பாபா எதைப் பற்றியும் அலட்டிக்கிறது இல்ல. விஸ்வநாதர் கோவிலுக்கு முன்னால் மவுன சத்தியாக்கிரகம் அதன் உச்ச நிலையை அடைந்த போது, கோவில் அதிகாரிகள் பாபாவைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போனாங்க. கிட்டத்தட்ட பத்து பேர் சேர்ந்து அவரை அலாக்கா தூக்கி ஹரிச்சந்திர கட் சுடுகாட்டில் கொண்டு போய் விட்டாங்க. பாபா அதற்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டல. அங்கும் அவர் மவுன சத்யாகிரகத்தைத் தொடர்ந்தார். அதிகாரிகள் பாபா மீது வழக்குப் போட்டாங்க. நீதிமன்றத்துல இருந்து குற்றப்பத்திரிகை வந்தது. அதை வாங்குற நிலையில் பாபா இல்ல. வாரண்ட் அனுப்பினாங்க. அதற்கிடையில் பலவகைகளிலும் உடல் ரீதியான தொந்தரவுக்குப் பாபா ஆளானாரு. போலீஸ்காரர்கள் பாபாவைக் கைது பண்ணி, கையில விலங்கு போட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு போனாங்க. இந்த விஷயங்கள் எதுவுமே தன்னைப் பாதிக்கவில்லை என்பது மாதிரி அவர் நடந்து கொண்டார். சாம-பேத- தண்டங்கள் எதுவும் பயன்படாதுன்னு தெரிந்தவுடன், போலீஸ்காரர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டுட்டாங்க. அவருக்கு எப்படி தண்டனை தருவதுன்னு தெரியாம அவர்கள் எதுவும் செய்யாம வெறுமனே விட்டுட்டாங்க. வழக்கை விசாரிச்ச நீதிபதிக்கு மூன்று நாட்கள் தூக்கமே வரல. அதோட அவர் வீட்டுல ஏகப்பட்ட பிரச்சினைகள். அவர் வீட்டுல பெரிய அளவுல திருட்டு நடந்திடுச்சு. அவரோட மனைவி குளியலறையில் வழுக்கி விழுந்து அவளுக்குக் கால் ஒடிஞ்சிடுச்சு. தீர்ப்பு சொல்ல வேண்டிய நாள்ல அவரோட ஆடையில நெருப்புப் பிடிச்சது. இப்படி விரும்பத்தகாத எத்தனையோ சம்பவங்கள் உண்டானதும் நீதிபதி பயப்பட ஆரம்பிச்சிட்டாரு. பாபாவுக்குத் துரோகம் செய்ததற்கு தண்டனையாகத்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று நினைச்சு அவர் அந்த நிமிடமே பாபாவின் பக்தனாக மாறிவிட்டார்.

பார்ப்பதற்கும் செய்கையிலும் அசாதாரண ஒரு மனிதராகத் தெரிந்த பாபா சாதாரண ஒர பைத்தியம் பிடிச்ச ஆள் இல்லைன்றதும், நினைச்சுப் பார்க்க முடியாத அற்புதங்கள் செய்யக்கூடிய பெரிய சித்தர் அவர் என்பதும் தெரிஞ்சவுடனே, மக்கள் அவர் பின்னாடி ஓடி வர ஆரம்பிச்சாங்க. வேறவழி இல்லாம அவர் கடைசியில பழைய இந்தக் கோவில்ல வந்து இருக்க ஆரம்பிச்சாரு. ஆள் அரவமில்லாத இந்தப் பகுதியை அந்தக் காலத்துல யாரும் திரும்பிக் கூட பார்க்குறது இல்ல. பாபாவைப் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்ட மக்கள் அவரைத் தேடி வர ஆரம்பிச்சாங்க,நம்ப முடியாத அந்தக் கதைகள் நாடு முழுவதும் பரவ ஆரம்பிச்சது. இப்போ பாபாவைப் பார்த்து அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வர்றவங்களோட எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே வருது. அவரின் பக்தர்களும், பார்க்க வருபவர்களும் மட்டுமல்ல- உயர்ந்த நிலையில் இருக்கும் பலரும் இங்கே வந்து பாபாவைப் பார்த்து, திரும்பிப் போறதில் ஆத்ம திருப்தி அடைகிறார்கள்.”

நடராஜர் ஆலயத்தில் பூஜை மணி ஒலித்தது. நேரம் மாலையாகிறது. இரண்டு பேரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார்கள்.

7

“கேசவபாரதியைப் பார்த்தா, மவுனி, பாபாவின் முந்தைய வாழ்க்கையைப் பற்றி நாம தெரிஞ்சுக்கலாம்.”

“யார் அந்த கேசவபாரதி?”

“காசி சமஸ்கிருத பாடசாலையின் பிரின்ஸிபாலாக இருந்து வேலையிலிருந்து ஓய்வு பெற்ற மிகப் பெரிய பண்டிதர் அவர். பிரம்மச்சாரியான கேசவபாரதியைத் தெரியாதவர்கள் காசியில் ரொம்பவும் குறைவாகத்தான் இருப்பாங்க. கேசவபாரதியின் சொந்தக்காரரான வித்யாரண்ய ஸ்ரீவாத்சவா என்ற மவுனி பாபா உத்தரபிரதேசத்திலிருக்குற அலாகாபாத் உயர்நீதிமன்றத்துல நீதிபதியா இருந்தார். தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்டு தவறாகப் புரிந்து கொண்டு குற்றவாளியான மகனைச் சரியான ஆதாரங்கள் இல்லைன்னு சொல்லி விடுதலை செய்துவிட்டு, விடுதலையான மகனின் நிரபராதியான தந்தையைத் தூக்குல போடச்சொல்லி தீர்ப்பு எழுதிய நீதிபதி.”

“மனைவியைச் சுட்டுக் கொன்றது கணவனா? இல்லை கணவனின் தந்தையா?”

“நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. இரு பக்கங்களிலும் பிரபலமான வக்கீல்கள் ஆஜரானார்கள். சம்பவம் நடைபெற்ற நாளன்று மகன் ஊரிலேயே இல்லை என்றும், மதுராபுரியில் ஏதோ ஒரு லாட்ஜில் அவன் தங்கியிருந்தான் என்றும் பொய்யான ஆதாரம் ஒன்றைக் காட்டியதால், குற்றவாளி தப்பித்துவிட்டான். வாதங்களுக்கு மேல் வாதம் நடந்தது. வசதியான அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரைப் பரம்பரையாகவே கொல்வது, கொல்லப்படுவதுன்னு பழக்கப்பட்டவங்க. தந்தையின் பெயர் ருத்ரபிரசாத் சிங். இதற்கு முன்பும் எத்தனையோ வழக்குகளில் அவர் குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் அவர் தப்பிச்சிக்கிட்டே வந்திருக்காரு.

தூக்குல போடுறதுக்கு முன்னாடி பேசினப்போ ருத்ர பிரசாத் சொன்னாரு, ‘கடவுள் உண்மையானவரா இருந்தாருன்னா என்னைத் தூக்குல போடச் சொன்ன நீதிபதிக்குக் கட்டாயம் தண்டனை கிடைக்கும். இந்த வழக்குல நான் நிரபராதி அதே நேரத்துல இதற்கு முன்னாடி நடந்த பல வழக்குகள்லயும் நான் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவன்’ கொலை செய்தல், பலாத்காரம், திருட்டு... இப்படி எத்தனையோ வழக்குகள்... கடவுளின் தண்டனையும் ஆசீர்வாதமும் எப்போது கிடைக்கும்னு யாருக்கும் தெரியாது. தூக்கில் தொங்கவிடப்பட்ட பிறகு அந்தச் செய்தி அன்றைய பல பத்திரிகைகளில் வந்திருந்தது.

தன்னுடைய மனசாட்சிக்கு நம்பிக்கை உள்ளவனாகத்தான் நடக்கவில்லைன்னு நீதிபதி வித்யாரண்ய ஸ்ரீவாத்சவா மனப்பூர்வமா நினைச்சாரு. அந்த எண்ணம் அவரைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது. அந்த நினைப்பு நாளாக நாளாக வளர்ந்து கொண்டே வந்தது. கடைசியில் அதுவே ஒரு நோய் மாதிரி மாறியது. அந்த நோய் முற்றி அவரை ஒரு எல்லையில கொண்டு போய்விட்டது.

பெரிய அதிகாரத்தைக் கொண்ட தன்னுடைய உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஏதோ ஒரு சமணர்களின் ஆசிரமத்தில் போய் ஒன்றரை ஆண்டுகள் தங்கினார். அரை நிர்வாண கோலத்துடன் இந்தியா முழுவதும் சுற்றினார். கடைசியில் காசிக்கு வந்தார். கடைசியில உடல்ல மீதமிருந்தது ஒரு பச்சை நிறக் கம்பளி மட்டும்தான்னு அதைப் பார்த்தவர்கள் சொன்னாங்க. ஆடை அணிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைப் பொறுத்தவரையில் அது ஒரு பிரச்சினையே இல்லை. அந்த ஆஜானுபாகுவான பருத்த உடலைக் கொண்ட வித்யாரண்ய ஸ்ரீவாத்சாவைப் பார்க்கும் யாரும் அவரையே பார்த்துக்கொண்டு நிற்பாங்க.


அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உண்டான மாற்றம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. மனைவி காது பக்கத்துல வந்து சொன்னாள்ன்றதுக்காக நிரபராதியைத் தூக்குல போடச்சொல்லி தீர்ப்பு சொன்ன விஷயத்திற்காக மனதில் கவலை கொண்ட அவரைப் பற்றியே எல்லாரும் பேசினாங்க. வித்யாரண்ய ஸ்ரீவாத்சாவைப் பற்றி எல்லாருக்குமே பொதுவாகவே எப்பவும் நல்ல அபிப்ராயமே இருந்தது. வக்கீலாக வேலை பார்க்குறப்போ ஏழைகளிடமிருந்து பணமே வாங்காமல் அவர் வழக்கை நடத்தியிருக்காரு. வீடு தேடி வர்ற ஏழைகளை வெறும் கையோட திருப்பி அனுப்பாத தர்மசீலர் அவர். விதவைகளுக்கு மறுமணம் செய்து கொடுப்பதில் ஆர்வமா ஈடுபட்ட மனிதர் அவர். பொருளாதார உதவிகள் செய்யக் கூடியவர். இரக்க குணம் கொண்டவர். நிறைய படித்த பண்டிதர். ஏராளமான நூல்களைப் படித்து அறிவு பெற்ற ஞானி. இப்படிப் பல காரணங்களால் எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு மனிதரிடம் திடீரென்று உண்டான மாற்றம்.”

மவுனி பாபாவின் கடந்த கால வாழ்க்கையைக் கேட்டு பாலசந்திரன் நிசப்தமாகி விட்டான்.

பாபா இருக்குமிடத்திற்குப் போய் அமர வேண்டும் என்ற விருப்பம் பாலசந்திரனை மீண்டும் அந்தப் பக்கம் பிடித்து இழுத்தது. கண்களைத் திறந்திருக்கும் பாபாவைப் பார்க்க அவன் விரும்பினான். மீண்டும் அந்த ஞானியின் பாதங்களில் சரணடைய வேண்டும் என்று நினைத்த அவன் அங்கு நோக்கி நகர்ந்தான்.

பக்தர்கள் அந்தப் பாதங்களுக்கு அருகில் நாணயங்களை வைத்திருந்தார்கள். பூஜைப் பொருள்களையும் பழங்களையும் வைத்திருந்தார்கள். அவர் அப்படிப்பட்ட விஷயங்கள் எதிலும் தன் கவனத்தையே செலுத்துவதில்லை. நாணயங்கள் வந்து குவிந்து கிடப்பதோ, நோட்டுகள் சுற்றிலும் இறைந்து கிடப்பதோ பாபாவைத் தொடக் கூடிய விஷயங்களல்ல. அதை எடுத்துக்கொண்டு செல்பவர்களும், எண்ணி சரிபண்ணி வைப்பவர்களும் பாபாவுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அங்கு வரும் யாரும் அனுமதி இல்லாமலே அவற்றை எடுத்துக் கொண்டு போகலாம். எனினும், அவரைச் சுற்றி நின்று கொண்டிருக்கும் சிலர் கணக்கையும், தினசரி வரவு செலவுகளையும் எழுதி வைத்து விட்டு போவார்கள். திருடர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளும் பாபாவைச் சுற்றி காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், தெரிந்தது மாதிரி அவர் காட்டிக் கொள்ள மாட்டார்.

யாருக்கும் அங்கு இலவசமாக உணவு கிடைக்கும். மதியம் ஒரு நேரம் மட்டும் பிரசாத ஊட்டு.

பிரசாதத்திற்காக கூட்டமாக நின்றிருந்த பக்தர்களுக்கு மத்தியில் அச்சுதானந்தனும் பாலசந்திரனும்கூட இருந்தார்கள்.

உணவிற்கும், பணத்திற்கும் அங்கு பலவிதப்பட்ட தில்லுமுள்ளுகளும் நடைபெற்றுக் கொண்டுதானிருந்தன.

அங்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டு மீண்டும் மவுனி பாபாவின் பாதங்களுக்கு அருகில் வந்து அவர்கள் அமர்ந்தனர். பாலசந்திரன் பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். மின்சாரம் தாக்கியதைப் போல ஒரு நிமிடம் அவன் அதிர்ச்சியடைந்தான். திடீரென்று பாபா கண்களைத் திறந்தார். பாலசந்திரனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்சிரிப்பை அவர் தவழவிட்டார். ஆசீர்வாதத்திற்காகத் தலையைக் குனிந்த பாலசந்திரனின் நெற்றியை பாபா தன் கையால் தொட்டார். அந்த உதடுகளிலிருந்து ஏதோ சில வார்த்தைகள் வெளியே வந்தன. மீண்டும் பாபா தன் கண்களை மூடினார். நன்றிப் பெருக்குடன் பாலசந்திரன் அந்த இடத்திலிருந்து விடைபெற்றான். அச்சுதானந்தனை அவன் பின்பற்றி நடந்தான்.

ஓய்வெடுக்க கிளைகள் இல்லை. படுத்து உறங்கக் கூடுகள் இல்லை. வெயிலும் வெப்பமும் குளிரும் பனியும் மழையும் ஒரு பிரச்சினையே இல்லை. குளிர், வெப்பத்தை வெற்றி பெற வேண்டும். உடல் இரண்டையும் தாங்கக் கூடியதாக மாற வேண்டும். ஒரு நேர உணவு எங்கிருந்து கிடைக்கும் என்ற விஷயத்தில் ஆர்வமாக இருக்கக் கூடாது. உடலைப் பற்றிய அக்கறையை முழுமையாகக் கைவிட வேண்டும். பணமும் புகழும் தேவையே இல்லை. அமைதி மட்டும்தான் வேண்டும். சமாதியுடன் சாந்தி கிடைக்க வேண்டும். ஆமாம்... அவன் அடைய நினைப்பது ஜலசமாதிதான். கங்கை நதியில் ஜலசமாதி. ஆமாம்... அது எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். கங்கல்தான் அதற்கேற்ற இடம். ஹரித்துவாரிலிருந்து மிகவும் குறைந்த தூரத்திலேயே அந்த இடம் இருக்கிறது. ஆள் அரவமற்ற இடம் போய் பார்க்க வேண்டும். பாலசந்திரன் என்னவோ தீவிரமான சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தான். அவனுடைய கண்களிலிருந்து நீர் வழிவதை அச்சுதானந்தன் கவனித்தான். இந்தப் பயணத்திற்கு மத்தியில் ஒரு சித்தரையாவது பார்க்க நேர்ந்ததற்காக மனதில் சந்தோஷம் உண்டாகியிருக்கலாம். ஆனந்தக் கண்ணீரின் உறைவிடம் எங்கிருக்கிறது என்பது இப்போது புரிந்து விட்டது.

“இல்ல... அப்படி எதுவும் இல்ல... நான் பழைய சில கதைகளை நினைச்சுப் பார்த்தேன்...”

“வாழ்க்கையைக் குலுங்கச் செய்த எத்தனையோ சம்பவங்கள்... அதையும் இதையும் நினைச்சு மனசைக் கஷ்டப்படுத்திக்காதீங்க. பந்த பாசங்கள் நம்மை விட்டு போகுறதுன்றது அவ்வளவு சாதாரண ஒரு விஷயமல்ல. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கங்க.”

பாலசந்திரன் ஒரு ஆலமரத்திற்கு அடியிலிருந்த சிமெண்ட் தரையில் போய் உட்கார்ந்து தன் கண்களை மூடினான். கங்கை நதியின் நீரோட்டம் உண்டாக்கிய சத்தம் காதுகளில் வந்து மோதிக் கொண்டிருந்தது. கங்கை நதிக்கரை வழியாகச் சிறிது தூரம் மீண்டும் நடந்து பார்க்க வேண்டுமென்ற விருப்பம் பாலசந்திரனைப் பிடித்து இழுத்தது. எவ்வளவு பார்த்தாலும் போதும் என்ற உணர்வே அவனுக்கு உண்டாகவில்லை. காசி விஸ்வநாதரிடமும் வாரணாஸி நகரத்திடமும் விடை பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம் மிகவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மவுனி பாபாவின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டி இருக்கிறது. முன்னோக்கி வைத்த காலைப் பின்னோக்கி வைக்கிற பிரச்சினையேயில்லை. காசியில் இருந்த ஒரு மாதகால வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது.

உடல் நலம் நன்றாக ஆகியிருக்கிறது. உடலில் பளபளப்பு உண்டாகியிருக்கிறது.

‘காசி, இமாலய புனித யாத்திரை’ என்றொரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று அவன் நினைத்தான்.

பார்க்க வேண்டிய எத்தனையோ புண்ணிய இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திற்கும் அதற்கென்றிருக்கும் சிறப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். புனிதப் பயணம் வரும் பக்தர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை அச்சுதானந்தன் அவனுக்குக் கூறினார்.

அச்சுதானந்தனிடமிருந்து கிடைத்த தகவல்கள் பாலசந்திரனுக்குப் பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

பஞ்சதீர்த்தங்களை நோக்கித் தான் மட்டும் தனியே பயணம் செய்தான் பாலசந்திரன்.

ஹரித்துவாரில் புகழ் பெற்ற கோவில்கள்...

புனித நகரமான ஹரித்துவாரில கால் வைத்தபோது உண்டான அனுபவம்... நகரமாக மாறியிருக்கும் புண்ணிய பூமி...


சன்னியாசினிகளின், சன்னியாசிகளின் கூட்டம்... பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு நாளும் அங்கு ஏராளமான பேர் வந்து குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இந்தியாவைச் சேர்ந்த பயணிகளும் பக்தர்களும் வந்து அங்கு ஒன்று கூடுகிறார்கள். புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற லாட்ஜ்கள்... கங்கை நதியைப் பார்த்தவாறு இருக்கும் ஃப்ளாட்டுகள்... ஹோட்டல்கள் கங்கை நதியின் இரு கரைகளிலும் இருக்கும் கட்டிடங்கள்... கங்கை நதியில் இறங்கிக் குளிப்பதற்கான கற்படிகள் ஹரித்துவாரில் இருக்கின்றன. வசித்துக் கொண்டிருக்கும் கட்டிடங்களின் மாடியிலிருந்து கீழ் நோக்கி இறங்கக் கூடிய படிகள் கங்கைக் கரையில் வந்து முடிகின்றன. படிகளில் உட்கார்ந்து கொண்டு முழு ஹரித்துவாரையும் பார்க்கலாம். இங்கும் கங்கையின் தோற்றம் தான். மற்ற எதையும்விட குறிப்பிட்டுக் கூறக் கூடிய விசேஷங்கள்... ஆசிரமங்கள், மடங்கள், தர்மச் சாலைகள், பர்ணக்குடில்கள் காசியில் பார்த்ததைப் போலவே ஹரித்துவாரிலும் இருக்கின்றன.

பழமையான புண்ணிய நகரமான ஹரித்துவாரைப் பற்றியுள்ள வரலாற்றுக் கதைகளை பாலசந்திரன் மனப்பாடமாக்கி வைத்திருந்தான். சில விஷயங்கள் அவனுக்கு ஏற்கெனவே நன்கு தெரியும். அச்சுதானந்தன் எல்லாவற்றையும் அவனுக்கு விளக்கிக் கூறியிருந்தார். கபில முனிவர் வாழ்ந்த இடம் ஹரித்துவார். இங்குதான் கபிலரின் ஆசிரமம் இருந்தது.

சகரபுத்திரர்களைக் கபில முனிவர் தன்னுடைய கோபத்திற்கு இரையாக்கியது அந்த நதிக்கரையில்தான்.

தன்னுடைய வம்சம் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பகீரதன் தவம் செய்த புண்ணிய புராதன சங்கம பூமி இது.

தன்னுடைய அப்பழுக்கற்ற, ஆழமான தவ வலிமையைக் கொண்டு கங்கை அன்னையை பூமியை நோக்கி வர வைத்த பகீரதன்...

பகீரத முயற்சியின் வியர்வை முத்துக்கள் விழுந்து புனிதமும், செழிப்பும் அடைந்த ஹரித்துவாரின் ஆன்மீக அம்சங்கள் கலந்த வளமையான மண்... பாலசந்திரனின் உடல் தெறித்து விடுவதைப் போல் இருந்தது. ரோமங்கள் சிலிர்த்து நின்றன.

8

“நண்பர்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும்போது நீங்கள் மனதில் வருத்தப்படக்கூடாது. சமதளத்திலிருந்து பார்க்கும்போது மலைகள் மிகவும் தெளிவாகத் தெரிவதைப் போல, ஆத்மாவிற்கு ஆத்ம சந்தோஷம் கிடைப்பதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் நட்பில் இல்லாமல் இருக்கட்டும்.” - மிகப் பெரிய கவிஞனான கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளை பாலசந்திரன் அப்போது மனதில் நினைத்தான். ‘எத்தனையோ தடவைகள் நான் அந்த வரிகளை என்னை மறந்து உச்சரித்திருக்கிறேன். உலகத்தை உற்றுநோக்கும் கூர்மையான பார்வை கொண்ட கவிஞனும், தத்துவஞானியுமான லெபனான் நாட்டின் பொக்கிஷம்!’- பாலசந்திரன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

அச்சுதானந்தனிடம் பாலசந்திரன் எல்லா விஷயங்களையும் மனம் திறந்து சொன்னான். மனதிலிருந்த சுமைகளையெல்லாம் இறக்கி வைத்துவிட்ட நிம்மதி அப்போது அவனுக்கு உண்டானது. பாலசந்திரனின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களைக் கேட்ட அச்சுதானந்தனுக்குப் பெரிய அளவில் வருத்தங்கள் எதுவும் உண்டாகவில்லை. இதெல்லாம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக நடக்கக் கூடியவைதான் என்பது மாதிரி அவர் நடந்து கொண்டார்.

காதலும், அது வேண்டாமென்று உதறிவிட்டு வருவதும் புதிய ஒரு விஷயமொன்றும் இல்லையே!

எனினும், பாலசந்திரனைப் பொறுத்தவரையில் முன்பு நடைபெற்ற சம்பவங்களை அவனால் சிறிதுகூட மறக்க முடியவில்லை என்பதே உண்மை. பி.கே.பி. என்ற புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருந்தபோதும், பாலசந்திரன் என்ற காதலனாக நடந்து திரிந்த போதும், காவி ஆடை அணிந்து பாலானந்த சுவாமியாக மாறியபோதும் அவனின் உள்ளே பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு உருவம் இருக்கவே செய்தது. அந்த உருவம் இப்போதும் அவனைப் பின்தொடர்ந்து கொண்டுதானிருந்தது. “நான் அவளை உயிருக்குயிரா காதலிச்சேன். அவளுக்காக நான் மற்ற எல்லாரையும் மறந்தேன். அப்படி நான் மறந்தவர்கள் கூட்டத்தில் என் தாயும், தந்தையும் கூட இருந்தார்கள். அவங்கக்கிட்ட நான் எப்படி நடக்கணுமோ அப்படி நடக்கலைன்ற குற்ற உணர்வு என்னை எப்பவும் அலட்டிக் கொண்டேயிருக்கு. அவளை நான் மறந்து எவ்வளவோ வருடங்களாச்சு! அதற்குப் பிறகும் என் தாய், தந்தை ரெண்டு பேர்கிட்டயும் நான் நடந்து கொண்டது என்னைப் பாடாய்ப்படுத்திக்கிட்டு இருக்கு”- பாலசந்திரன் சொன்னான்.

“எனக்கு எல்லாம் புரியுது. ஆனா அதைப்பற்றி இப்போ திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தி எந்தப் பிரயோசனமும் இல்ல. இருக்குற காலம் வரை நல்ல ஒரு மனிதனாக வாழ முயற்சி பண்ணுறதுதான் சரியான விஷயம். கடந்துபோன நாட்கள்ல இனிமேல் நாம வாழ முடியாதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்ல! அதனால கடந்த கால ஞாபகங்களை மனசில இருந்து அறுத்து எறியப் பாருங்க. நிகழ் காலத்தில வாழ நினைங்க. நேற்றுகள் நல்லதும் கெட்டதுமான பல அனுபவங்களை உங்களுக்குத் தந்திருக்கலாம். பொதுவாகவே நல்ல நினைவுகளை யாரும் அந்த அளவிற்கு ஞாபகப்படுத்திப் பார்க்குறது இல்ல. கீறல் உண்டாக்கிய சம்பவங்களைப் பற்றியே அதிகமாக எல்லாரும் மனசுல நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. அது மனதின் ஒரு தனி குணம். எல்லா பிரிவுகளுமே வேதனைத் தரக்கூடியதுதான். நாம ரெண்டு பேரும் கூட இப்போ பிரியத்தான் போறோம். எதைப் பற்றியும் மனதில் பதற்றம் அடையக் கூடாது. பதறினால், நாம முன்னோக்கிப் போக முடியாது”- அச்சுதானந்தன் கூறினார்.

ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரி, கேதார்நாத், பிருந்தாவனம் ஆகிய இடங்களுக்குப் போகும்போது அறிமுகமாகிக் கொள்ள வேண்டிய சிலரின் பெயர்களைத் தாளில் அவர் எழுதித் தந்தார். அவர்களின் முகவரிகளையும்.

மிகப் பெரிய சக்தி படைத்தவர்கள், துறவிகள் ஆகியோரின் பாதங்கள் பட்டு கிளர்ச்சி அடைந்த புண்ணிய இடம்...

ஸ்ரீ மகாதேவரும், ஸ்ரீ பார்வதிதேவியும் உடம்போடு உடம்பு சேர்ந்திருக்கும் மகா சந்நிதி. எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற வரலாற்று சம்பவங்கள்! பதிவுகள்! எல்லாம் கண்களுக்கு முன்னால் தெரிவதைப்போல உணர்ந்தான் பாலசந்திரன். ஹரித்துவாரில் இருக்கும் ஒவ்வொரு சிலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கவே செய்கிறது. புராண வரலாறு கொண்டு அந்தக் கதைகள் சிறகை விரித்துக் கொண்டு அங்கு பறந்து கொண்டிருந்தன. வர்ணனை கொண்டு அதை விளக்க முடியாத கவலையுடன் பாலசந்திரன் சுற்றிலும் கண்களை ஓட்டினான்.

கங்கலுக்குக் கட்டாயம் போகவேண்டும். அங்குதானே ஜலசமாதி! கடைசியாக அவன் விரும்பும் செயல். அது ஒரு வேளை கொடுமையான ஒரு செயலாக இருக்கலாம். தற்கொலை செய்து கொள்வதற்கு இணையான ஒன்று அது. அதற்கான தைரியத்தை அவன் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறான். அந்தச் செயல் என்று நிறைவேற்றப்படும் என்பது அவனுக்குத் தெரியாது. எல்லாம் கடவுளின் விருப்பப்படி நடக்கட்டும்.


பாலசந்திரன் ஹரித்துவாரிலிருந்து கங்கலை நோக்கி நடந்தான். எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், அங்கு போனால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நீல நிறத்தில் விசாலமாக கங்கை நதி ஓடிக் கொண்டிருக்கும் கங்கல் ஒரு புகழ் பெற்ற புனித இடம்.

சதி, யாக நெருப்பில் குதித்து வாழ்க்கையைத் தியாகம் செய்த கங்கல் காலை நேரச் சூரியனின் கதிர்கள் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்த நேரம். பல நிறங்களிலும் பல வடிவங்களிலும் இருக்கும் சிலைகள் அங்கு சிதறிக் கிடந்தன. அவற்றில் பலவும் சாளக்கிராமங்களாக இருந்தவை. அவற்றைப் பொறுக்கி பைக்குள் போட்டுக் கொண்டு போக வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. ‘வேண்டாம்... வேண்டாம்... தேவையில்லாத சுமையாக இவை எனக்கு ஆயிடும்...’- அவன் மனதிற்குள் கூறிக் கொண்டான்.

ஆள் அரவமற்ற ஒரு சிலைக்குக் கீழே போய் அவன் உட்கார்ந்தான். தக்ஷப்ரஜாபதியின் யாகம் நடந்த அந்த இடத்தில் ஏராளமான விலை மதிப்புள்ள பொருட்கள் பூமிக்கு அடியிலும் நதியின் அடிப்பகுதியிலும் இப்போதும் கிடக்கவே செய்கின்றன. அதைப் பார்ப்பதற்கான கண் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது பாலசந்திரனுக்கு நன்றாகத் தெரியும். ஜீவமுக்தி அடைந்தவர்களை மட்டும் அந்தப் பொருட்கள் கூவிக் கூவி அழைக்கின்றன. சில அதிர்ஷ்டசாலிகளுக்கு அபூர்வமாகச் சில சமயங்களில் அவற்றில் சில கிடைக்கலாம். கங்கை நீர் வற்றிப் போயிருக்கும் சதுப்புகளில் தர்ப்பைப் புற்கள் வளர்ந்திருந்தன. அவை மிகவும் உயரமாக இருந்தன.

கங்கை நதி வழிவிட்டு ஓடியதால் உண்டான மணல் திட்டுகளில் வெயில் விழுந்து கொண்டிருந்தது. மணல் பொன்னைப் போல மின்னியவாறு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தது. சற்று தாண்டி வானத்தில் கழுகுகள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தன. சற்று அருகில் எங்கோ ஒரு பிணம் அழுகி நாறிவிட்டிருக்க வேண்டும்.

இறந்தது மிருகமா? மனிதனா?

ஆர்வம் குடி கொண்ட பார்வை அந்தப் பக்கமாகச் சென்றது, அரை மைல் தூரம் கிழக்குப் பக்கமாகச் சென்றால் ஒரு குடிசைப் பகுதி இருக்கிறது. அங்கு பல செயல்களும் நடக்கின்றன.

“அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காம இருக்குறதே நல்லது. இரவிலும் பகலிலும் ஒரே மாதிரி பயப்பட வேண்டிய இடம் அது.” -யாரோ எச்சரிக்கை செய்தார்கள்.

தனிமை விரும்பிகள் சன்னியாசிகள் ஆகியோரின் இடமான கங்கலிலும் பாவக் கறைகள் படிந்திருக்குமோ?

கங்கை நதியின் ஓரம் வழியாக மீண்டும் ஹரித்துவாருக்கே அவன் திரும்பி நடந்தான்.

பரந்து விரிந்த கங்கையின், எத்தனை முறை பார்த்தாலும் போதும் என்று தோன்றாத இயற்கைக் காட்சிகளின் ஈர்ப்புச் சக்தியில் சிக்கித் தான் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல் பாலசந்திரன் உணர்ந்தான்.

வானத்தில் இருந்த நீல நிறம் நதியில் விழுந்தபோது, நீரின் நிறமும் நீலமாக மாறியது.

மாயாதேவி கோவில், பைரவர் கோவில், மகாவிஷ்ணு ஆலயம்- இப்படி எத்தனையோ ஆலயங்கள் நதிக்கரையில் உண்டாக்கப்பட்டிருந்தன. சாதுக்களின் தர்ம சத்திரத்திற்குச் சென்றால் பிச்சை கிடைக்கும். கோடீஸ்வரர்களான தொழிலதிபர்களின் பண உதவியால் நடத்தப்படும் யோகாசிரமங்களும் ஹரித்துவாரில் இருக்கின்றன என்பதை அவன் தெரிந்து கொண்டான். சிறிது காலம் இங்கே தங்க வேண்டும். அதற்குப் பிறகு இமயமலைக்குப் போக வேண்டும். கங்கோத்ரி, யமுனோத்ரி, மானஸகங்கோத்ரி... அவன் போக விரும்பிய இடங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அந்த இடங்கள் எல்லாவற்றையும் போய் பார்ப்பதற்கான ஆயுள் தனக்கு இருக்கிறதா? அதற்கேற்ற உடல் நலம் இருக்கிறதா? பணம் இருக்கிறதா? எதுவுமே கையில் இல்லாமல், எல்லாவற்றையும் இழந்து நின்று கொண்டிருக்கும் தனக்கு இந்த இமயமலை அபயம் தருமா? இறுதி ஓய்வு எங்கு இருக்கும்? -இப்படி தனக்குள் எத்தனையோ கேள்விகளை எழுப்பினான் பாலசந்திரன்.

“ஒரு நிச்சயமும் இல்லை... எது பற்றியும். வரும் ஒவ்வொன்றும் வந்ததுபோல போகவும் செய்யும்...”

மாணவனாக இருந்த காலத்தில் படித்த மகாகவி குமாரன் ஆசானின் வரிகள் பாலசந்திரனின் நாக்கு நுனியில் வந்து விளையாடின.

தலை சாய்ப்பதற்கு ஒரு இடத்தைத் தேடி பாலசந்திரன் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்த ஹரித்துவாரின் கங்கை நதிக் கரைக்குத் திரும்பவும் வந்தான்.

9

ஞ்சா புகை வந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி மாமிசத்தைக் கண்ட நாயைப் போல இப்போதும் பாலசந்திரனின் மனம் சென்று கொண்டிருந்தது. அமைதியற்ற மனதைக் கொண்ட தனக்கு எதிராக சொல்லப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் அடிப்படையாக இருந்தது கஞ்சாமீது தான் கொண்ட விருப்பம்தான் என்பது அவனுக்குத் தெரியாதது அல்ல. பல சந்தர்ப்பங்களிலும் அவன் அதிலிருந்து ஒதுங்கியிருக்க முயன்றிருக்கின்றான். எனினும், அதன் மீது கொண்ட வெறுப்பு நீடித்து நிற்கவில்லை. அதைப் புகைத்தால் குளிரிலிருந்து தப்பிக்கலாம் என்று அவன் நினைத்தான். நரம்புகளைக் கடுமையாகக் குளிர் தின்று கொண்டிருந்தது, பற்கள் ஒன்றோடொன்று அடித்துக் கொண்டிருந்தன. உடல் ‘கிடுகிடு’வென நடுங்கிக் கொண்டிருந்தது. தேவையான கம்பளி ஆடைகள் கைவசம் இல்லை. காலில் செருப்பு இல்லை. எந்தச் சன்னியாசியாக இருந்தாலும் அங்கு ஷூ அணிகிறார்கள். கம்பளியால் உடம்பை மூடிக் கொள்கிறார்கள். ஹரித்துவாரில் குளிர் நிறைந்த இரவுகள்...

சிறிது புகைத்தால் குளிர் இருப்பது தெரியாது. புகையை இழுத்துக் கொண்டே இருக்கலாம். அதன் மூலம் தன்னைத் தானே முழுமையாக மறந்துவிட்டு உட்கார்ந்திருக்கலாம். கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளில் மூழ்கலாம். நிகழ் காலத்தின் பொருந்தாத விஷயங்களைப் பற்றி நினைக்கலாம். எதிர்காலத்தைப் பற்றி மனதில் கவலை கொள்ளலாம்.

இவ்வளவு காலமாக ஏராளமான அனுபவங்கள் உண்டானாலும், புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லையே! தான் உண்மையிலேயே பலவீனமானவன்தான். அப்போதும் இப்போதும். இந்தப் பலவீனங்களிலிருந்து எப்போது முழுமையான விடுதலை கிடைக்கும்? நாட்கள் கடந்து போய்க் கொண்டிருப்பது தெரியவில்லை. பன்னிரண்டு வருடங்கள் எதுவுமே செய்யாமல் இழக்கப்பட்டுவிட்டன. எந்தவொரு காரியத்தையும் அந்தக் காலத்தில் செய்யவில்லை. கவலைகள், ஏமாற்றங்கள்...

கவலைகளுக்கு அடிமையாகாமல் போயிருந்தால் அந்த நாட்கள் எவ்வளவு அருமையான நாட்களாக இருந்திருக்கும்!

தன்னிடமிருந்து நம்பிக்கையுணர்வு எப்போதிருந்து இல்லாமற் போனது?

என்ன காரணத்தால் தன்னால் ஒரு தைரியசாலியாக இருக்க முடியவில்லை? எதுவுமே செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை.

உண்மையில் தான் ஒரு கோழையாகி விட்டோமே! எல்லா விஷயங்களை விட்டும் ஒளிந்து கொண்டு ஓடுவது... நேரடியாகச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் சந்திக்காமல் பின்வாங்குவது... கடமைகளை மறப்பது... பொறுப்புகளைத் தட்டிக் கழித்து அலட்சியப்படுத்துவது...


நினைப்பதற்கே கஷ்டமான ஒரு விஷயம்தான்! பி.கே.பி. என்ற எழுத்தாளனின் அடையாளம் ஒவ்வொரு நாளும் அழிந்து கொண்டு வரும் விஷயத்தை அவன் கவனிக்காமலே இருந்து விட்டான். எல்லா நேரங்களிலும் மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் அவனை ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தன. தன்னுடைய நாட்கள் எண்ணப்பட்டு விட்டன. இனி தான் இருக்கப் போகும் நாட்களே மிகவும் குறைவுதான் என்று அவனுக்கே தோன்றியது.

சாந்தி தேடி புறப்பட்ட இந்தப் புனிதப் பயணத்திற்கு மத்தியில் அவன் பார்த்த இடங்களும் தங்கிய ஊர்களும் அறிமுகமான மனிதர்களும் அவனுடைய நினைவு மண்டலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்க் கொண்டிருந்தார்கள். நோட்டுப் புத்தகத்தில் அவை ஒவ்வொன்றையும் அந்தந்த நேரத்தில் எழுதி வைத்திருந்தால் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு இப்போது நேரமில்லை.

ஏராளமான மடங்களில் அவன் ஏறி இறங்கினான். தர்ம சாலைகளுக்குள் நடக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து அவன் தெரிந்து கொண்டான். அனாதை இல்லங்களில் இரவு நேரங்களில் படுத்து உறங்கினான். பகல் நேரங்களில் சந்நியாச கோலத்தில் அலைந்து திரிந்தான். இலவசமாக உணவு கிடைக்கும் இடங்களுக்குப் போய் காத்துக் கிடந்தான். வரிசையில் அதற்காக உட்கார்ந்திருந்தான். கிடைத்ததில் திருப்தி அடைந்து நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தான்.

சிறிதும் எதிர்பார்க்காமல் சுவாமி தயானந்த தீர்த்தாவை ஹரித்துவாரில் அவன் சந்தித்தான். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் திருவல்லா. கோட்டயம் மாவட்டத்தில் அது இருந்தது. தயானந்த தீர்த்தாவிற்கும் சொந்தத்தில் ஒரு மடம் இருந்தது. இரக்க குணமும், மனிதர்களை நேசிக்கும் குணத்தையும் கொண்டிருந்த தயானந்த தீர்த்தாவின் நிழலில்தான் அதற்குப் பின்னாலிருந்த அவனுடைய நாட்களை அவன் நகர்த்தினான். அவனைப் பேணியது. வாழ வைத்தது என்று பார்த்தால் தயானந்த தீர்த்தாவின் முதன்மை சீடனான ராம்கிருபாலைத்தான் சொல்ல வேண்டும். விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருக்க வேண்டி வந்த ராம்கிருபாலின் கதை... உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்கிருபால் சர்மா... இந்தியும் மலையாளமும் நன்கு தெரிந்த இளைஞன்... வழிமாறி பயணம் செய்து கடைசியில் ஆசிரமத்தில் வந்து சேர்ந்து விட்டான்.

பலவகைப்பட்ட மனிதர்களுடனும் அறிமுகமாகவும், பழகவும் வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்பம்தான் என்று பாலானந்த சுவாமி மனப்பூர்வமாக நம்பினான்.

முரண்பாடுகளும் ஆச்சரியங்களும் ஒன்று கலந்த சன்னியாசிகளின் வாழ்க்கை முறை... காவி ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் பயங்கரமான முகங்கள்... அதே காவி ஆடைகளுக்குள்தான் அவன் உண்மையான துறவிகளையும் பார்த்தான். மிகப் பெரிய தியாகிகளைப் பார்த்தான். எல்லாவற்றையும் வேண்டாமென்று தூக்கியெறிந்து விட்டு வந்த துறவிகளுக்கு மத்தியில்தான் அடிக்கவும் கொல்லவும் தயங்காத பயங்கர மனிதர்களையும் அவன் பார்த்தான். காமத்திற்காகவும், பெண்ணுக்காகவும் எந்த அதர்மச் செயலையும் செய்யத் தயங்காதவர்கள்... கடைசியில் குற்றவாளிகளாகப் பிடிக்கப்பட்டு நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்த கிரிமினல்கள்...

யாருக்கும் அங்கு அபயம் கிடைக்கிறது. காவி ஆடை அணிந்திருக்கும்போது, வெளியிலிருந்து பார்த்தால் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். ஆனால், சில முகங்கள் அமைதித் தன்மை நிறைந்ததாகவும் ஒளி பொருந்தியதாகவும் இருக்கும். கருணையே வடிவமான அத்தகைய மனிதர்களைக் கண்டால் நம்மையே அறியாமல் நாம் அவர்களைப் பார்த்து வணங்க ஆரம்பித்து விடுவோம். அதே நேரத்தில் வேறு சிலரின் முகத்தில் குரூரமும், ஆணவமும் நிறைந்திருக்கும். அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போதே நமக்கு அடையாளம் தெரிந்துவிடும்.

‘கீர்த்தியை விரும்பக் கூடிய ஒரு சாது தன்னுடைய புலன்களை அடக்கி, மனதை அமைதியானதாகவும், பிரகாசமானதாகவும் வைத்திருக்க வேண்டும்’- தயானந்த தீர்த்தா பாலசந்திரனிடம் எப்போதும் இதை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

பரமார்த்த நிகேதன் மடாதிபதி தயானந்த தீர்த்தாவுடன் உண்டான அறிமுகம் பாலசந்திரனை உயர்ந்த சிந்தனைகளை நோக்கி உயர்த்தின. “கீழ் நோக்கிப் போவது என்பது மிகவும் எளிதானது. மேல் நோக்கி உயர்வதுதான் மிகவும் சிரமமானது. உயரங்களிலிருந்து உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரிதான். இலக்கியமாக இருந்தாலும் சரிதான்....ஆன்மிகமானாலும் சரிதான்.... மலையின் உச்சியை அடைவதற்கான முயற்சி இருக்க வேண்டும்... அது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்...” தயானந்த தீர்த்தா அவனிடம் சொன்னார். அவனுக்குள் அதற்கான வெறியை உண்டாக்கினார்.

வார்த்தைகளில் செயல்களில் பெரிய மனிதர்களின் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இந்த விஷயங்கள் யாரையும் பொதுவாக சிறிதும் பாதிப்பதில்லை. முழுமையாகத் தேடிச் செல்லும் படிகள் ஒவ்வொன்றிலும் ஏறும்போது தடைகள் வந்து சேர்கின்றன.

“உடல் இன்று இல்லாவிட்டாலும் நாளை அழியப்போவதுதான் என்பது தெரிந்தும் தன்னுடைய சொந்த சுகத்திற்காகவும், நிலைபெற்று நிற்க வேண்டும் என்பதற்காகவும் செய்யக் கூடாத செயல்களை மனிதன் செய்கிறான். தவறான வழிகளில் சென்று அடையக் கூடிய எதுவும் தங்கியிருக்கப் போவதில்லை. கடைசியில் அது தண்டனையாக அளிப்பது சந்தோஷமற்ற ஒரு நிலையைத்தான்.”

“குருஜீ, நான் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்ட ஒரு காலம் இருந்தது. இப்போ அந்த விஷயத்தை நினைச்சுப் பார்க்குறப்பவே எனக்கு மனசு கஷ்டமா இருக்கு.”

“அதிலிருந்து தப்பித்தாகி விட்டது அல்லவா? அந்த வகையில் நல்லதுதான். யாரும் புனிதமானவர்கள் இல்லை. ஏதாவது புதுமைத் தன்மை இல்லாதவர்கள் இந்த உலகத்தில் மிகவும் அரிதாகவே இருப்பார்கள். முடிந்தவரையில் மனதிலிருக்கும் அழுக்குகளை இல்லாமல் செய்ய வேண்டும். அதில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது.”

“எனக்கு உங்களின் வழிகாட்டுதல் தேவைப்படக் கூடிய நேரத்துலதான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். எனக்குச் சரியாக வழியை நீங்கதான் காட்டணும்.”

“நான் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை. அறிவுரை கூறக் கூடியவனின் மேலாடையை அணிந்து கொள்வது என்பது என்னுடைய விருப்பம் அல்ல. எனினும், சில விஷயங்களை நான் கூறுகிறேன். அவ்வளவுதான்.

புலன்களை அடக்கி மனதை அமைதியான ஒரு தளத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்குத்தான் தியானம் செய்ய வேண்டும் என்று கூறுவது. ஒரே இலக்குடன் இருக்கும் தியானத்தால் மனதிற்குள் மண்டிக் கிடக்கும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியும்.”

எத்தனையோ முறை கேட்ட விஷயம்தான், என்றாலும் பாலசந்திரன் மிகவும் கவனம் செலுத்தி எல்லாவற்றையும் கேட்டான்.

கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

“பேச்சு நின்றவுடன், உனக்குள் இருக்கும் கேள்விகளுடன் இதற்கு முன்பு நீ சந்தித்திராத ஒரு நிலையை அடைந்தாய். மனதில் ஒருமை நிலையை அப்போது நீ அடைந்தாயா?

துறவு அறிவு உனக்குள் வளர்த்தாயா?

பொறாமை என்ற ஒன்று இல்லாமல் போனதா?


ஆணவம் இல்லாத ஒரு நிலையை நீ அடைந்தாயா?

அதெல்லாம் இருக்கட்டும்.

பணத்தின் மீதும், புகழின் மீதும் கொண்ட ஆசை இல்லாமல் போனதா?

உள்ளும் புறமும் ஒரே மாதிரி சுத்தமாகி விட்டனவா?

பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிரந்தரமாக உன்னை விட்டு விலகி விட்டதா?

சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு உண்மையான மனிதன் என்று உன்னை நீ கூறிக் கொள்ள முடியுமா?”

அவன் தனக்குத் தானே பல கேள்விகளைக் கேட்க நேர்ந்தபோது, “இல்லை... இல்லை...” என்றுதான் அவனுடைய மனசாட்சி பதில் கூறிக் கொண்டிருந்தது.

“இந்த உலகத்தில் மனஸா- வாசா- கர்மணா துரோகம் செய்யாமல் யாராவது வாழ முடியுமா? காலம் கலி காலம். மனிதர்கள் மத்தியில் நாட்கள் ஆக ஆக நல்ல விஷயங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. சன்னியாசிமார்கள் கூட சுயநலம் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எல்லாவித கெட்ட செயல்களையும் செய்து விட்டு சன்னியாசி கோலம் பூண்டு என்ன பயன்?”

சில இடங்களில், ஆதரவு இல்லங்களில், கோவில் பகுதிகளில், சந்திக்க நேர்ந்த கேடுகெட்ட மனிதர்களின் கதைகளைக் கேட்டபோது பாலசந்திரனுக்கு அதிர்ச்சிதான் உண்டானது.

கண்ணில் சிறிதுகூட இரக்கமில்லாமல் மனிதர்களிடம் நடந்து, கடைசியில் தீர்க்க முடியாத மிகப் பெரிய நோய்கள் பிடித்து, படுத்த படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூட முடியாமல் அங்குலம் அங்குலமாக இறந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து அவன் பரிதாபப்பட்டிருக்கிறான். கணக்கற்ற கெட்ட செயல்களுக்கு இறுதியில் தீர்ப்பு உண்டாக்குகிறது வினை! மனிதர்களின் கண்களில் மண்ணைத் தூவ எளிதில் முடியும். கடவுளின் கண்களை ஏமாற்றவே முடியாது. நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையற்றவர்கள் எல்லோருமே இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஹரித்துவாரில் வானம் சிவந்து கொண்டிருக்கிறது. மாலை நேரம் வந்தது. ஹர்கீபைரில் குளிக்கும் இடத்தை அடைந்தபோது, ஆரத்தி நடக்கப் போகும் நிலையில் இருந்தது. கங்கை நதிக்கரையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடியிருந்தனர். கங்கை அன்னையின் ஆசீர்வாதத்திற்காக நடத்தப்படும் ஆரத்தியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகப் பாலசந்திரன் வேகமாகச் சென்றான். கோவில்களிலிருந்து மணிகள் முழங்கிக் கொண்டிருந்தன. புரோகிதர்கள் கற்பூரம் எரிந்து கொண்டிருந்த பந்தத்தை உயரத் தூக்கிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். தீப ஒளியில் குளித்த அந்தப் பகுதி முழுவதும் ஒரே ஆர்ப்பரிப்பாக இருந்தது.

10

பாலானந்த சுவாமி சமாதியாகி ஒரு நாள் ஆகிவிட்டது. இன்னும் அவனுடைய இறந்த உடலை அடக்கம் செய்யவில்லை.

அவனுடைய மரணம் இயற்கையான மரணம்தான்.

ஹரித்துவாரின் கங்கை நதிக்கரையிலிருக்கும் குளிக்கும் இடமொன்றின் படியில் கிடந்தபடியே அவன் தன்னுடைய இறுதி மூச்சை விட்டு விட்டான். யோகப் பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும்போது நிலைகுலைந்து கீழே விழுந்து, உயிர் போய்விட்டது.

இருபத்து நான்கு மணி நேரங்கள் கடந்த பிறகும் இறந்த உடலுக்கு எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை என்பதுதான் அங்கிருந்த எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. இறந்த உடலில் கெட்டுப் போனதற்கான அடையாளங்கள் எதுவும் காணப்படாததால் தெய்வீகத் தன்மை கொண்ட துறவி என்று மக்கள் தங்களுக்குத் தாங்களே தீர்மானித்துக் கொண்டார்கள். சன்னியாசியின் சமாதி தரிசனத்திற்காக ஆட்கள் அங்கு வந்து கூடினார்கள். கூடியிருந்தவர்களில் ஒரு பகுதியினர் கங்கைக்கரையில் உடலை எரித்து விடலாம் என்றார்கள். வேறு சிலர் இறந்தவர் விருப்பப்பட்டதைப் போல ஜலசமாதி செய்வததுதான் சரியானது என்றார்கள்.

இறந்தவர்களுக்கு ஜலசமாதி என்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டும்தான் ஜலசமாதி அடையும் தகுதி இருக்கிறது.

விவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. இருபத்து நான்கு மணி நேரங்கள் முடிந்து நாற்பத்தெட்டாவது மணியை நோக்கி நேரம் கடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் ஆன பிறகும் உடலில் சொல்லிக் கொள்கிற மாதிரி கேடுகள் எதுவும் உண்டாகவில்லை.

புரோகிதர்களும் சன்னியாசிமார்களும் இறந்து போன உடலைப் பற்றி பல விவாதங்களைச் செய்து கொண்டிருந்தனர்.

இறந்த மனிதன் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்ற கேள்விக்கு அங்கிருந்த யாராலும் ஒரு தெளிவான பதிலைக் கூற முடியவில்லை.

எந்த கோத்திரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

இறந்துபோன மனிதன் சன்னியாசி பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆள் என்றும், சன்னியாசிக்கு ஏற்ற முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்வதுதான் சரி என்றும் எல்லோரும் பொதுவான தீர்மானத்திற்கு வந்தார்கள்.

அதை எப்படிச் செய்வது என்ற விஷயத்தில் மீண்டும் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

இறந்த உடலை எரிப்பதா? ஜலசமாதி அடையும்படி செய்வதா? குலுக்கிப் போட்டு எடுக்கும்போது வந்த முடிவு ஜலசமாதி என்பதுதான்.

பாலானந்தனின் இறந்த உடல் மீது மலர் வளையங்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. பக்தர்களும் சன்னியாசிகளும் கூட்டமாகப் பங்கு பெற்ற இறுதி ஊர்வலம் கங்கையை நோக்கி நகர்ந்தது. ஜலசமாதிக்கு முன்னாலிருக்கும் சடங்குகள் ஆரம்பமாயின. பாலானந்தன் எல்லோராலும் புகழப்பட்டான். அவனைச் சப்பணமிட்டு உட்கார வைத்தார்கள். பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போல அது இருந்தது. பலகை மீதுதான் அவனை அமரச் செய்திருந்தார்கள். தராசுத் தட்டைப்போல இருந்த மரப்பலகையில் அமர்ந்திருந்த பாலானந்தனின் உடலை நீரை நோக்கித் திறந்தவாறு இருக்கும் குழிக்குள் இறக்கிக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. பலகையில் இறுகக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை மெதுவாகக் கீழ்நோக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான்கு பேர்கள் உதவிக்குத் தட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கயிறு நுனியைக் கீழ்நோக்கி இழுத்து இறக்குவதை ஒரு புண்ணியச் செயலாக எண்ணியவர்கள் முன்னோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மந்திரங்களை உச்சரித்தார்கள்.

“நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்

சக்திம் சத்புத்ர பராசரம்

வ்யாஸ்ம் சுகம்கௌட பரம்மஹாந்தம்

கோவிந்த யோகீந்த் ரமதாஸ்யசிஷ்யம்.”

குரு பரம்பரையை மனதில் வைத்து சுலோக புஷ்பாஞ்சலியைச் சொன்னார்கள். பிதாவையும் பிதாமகனையும் அவனுடைய மகனையும் வணங்கும் சடங்குகள்... பரம்பரைப் பரம்பரையாக வரும் பிறவிகளின் ஆசீர்வாதத்திற்காக நடக்கும் பிரார்த்தனை... ஜலசமாதி நடக்கும் இடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தார்கள். சடங்குகளை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அவர்கள் இருந்தார்கள்.

கேமராக்கள் இயங்கின... ஃப்ளாஷ் பல்புகள் பளிச்சிட்டன. வீடியோ கேமராக்கள் சடங்குகளைப் படம் பிடித்தன. படம் பிடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் இத்தகைய ஒரு சடங்கை வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்ப்பதாக இருக்கலாம்.


அங்கிருந்த சூழலே திடீரென்று மாறியது. சங்கநாதம் காற்றைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது. சிறிது நேரம் படு அமைதி நிலவியது. குருவின் உடல் குழிக்குள் இறங்கிப் போவதைப் பார்த்து ராம்கிருபாவின் கண்கள் ஈரமாயின. அடக்கிய விம்மல்... அழ ஆரம்பித்த அருமைச் சீடனை யாரோ அமைதிப்படுத்தினார்கள். கவனிக்கப்படாமலே போன ஒரு அற்புத மனிதன்... நேற்றுவரை நம்முடன் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதன்.

எல்லாவற்றையும் வேண்டாமென்று விட்டெறிந்து விட்டு வந்த ஒரு துறவியாக அவன் இருந்தான்.

“ஓம் அஸதோ மா ஸத்கமய

தமஸோ மா ஜ்யோதிர்கமய

ம்ருத்யோர் மா அம்ருதம்கமய”

வேத மந்திரங்கள்... பிரார்த்தனைகள்...

குழியில் இறங்கிக் கொண்டிருக்கும் இறந்த உடலுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தைலாபிஷேகம், நீர் அபிஷேகம், மலர் அபிஷேகம், மலர்களை வைத்துச் செய்யப்படும் மந்திர அர்ச்சனை...

“யத்ஜாக்ரதோ தூரம்

இதைதி தைலம்

தத் ஸுப்தஸ்யததைவேதி தூரம்கமம்”

பூக்களைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனை... துளசி இதழ்கள் இறந்த உடலை மூடிக் கொண்டிருந்தன.

கற்பூரமும் வெட்டிவேரும் சேர்ந்து உண்டாக்கிய வாசனை அந்தப் பகுதியெங்கும் கமழ்ந்தது.

சடங்குகள் மிகவும் எளிமையாக இருந்தன. கலசங்களில் நிறைக்கப்பட்ட கங்கை நீர் பரமாத்மாவின் தலையில் வந்து விழுந்து கொண்டிருந்தது.

“மன: சிவ ஸங்கல்ப மஸ்து”

நவதானியங்களைச் சிதறவிட்டார்கள்.

புத்தாடை கொண்டு மூடப்பட்ட பாலானந்தனின் உடலை கங்கையில் அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். பாலானந்தன் எல்லோரின் குருவாகவும் ஆகப்போகிறான்.

“ஓம் தர்மாய ஸ்வாஹா

ஓம் அதர்மாய ஸ்வாஹா

ஓம் ஸர்வ பூதேப்ய: ஸ்வாஹா”

பரமாத்மாவுடன் இணையப் போகும் மனிதனுக்கான மந்திரங்கள்,பிரார்த்தனைகள்...

மந்திரங்களால் புனிதமாக்கப்படும் உயிருக்கு முக்தி...

அடக்கம் செய்யப்படும் உயிரின் புகழ் மேலும் மேலும் பெருகட்டும். ஜடப் பொருளான பஞ்ச பூதங்களால் படைக்கப்பட்ட உடல் நல்லதை நோக்கிச் செல்லட்டும்.

கருமேகங்கள் திரண்டிருந்த வானம் தெளிவானது.

வானத்தில் உதித்துக் கொண்டிருந்த சூரியனின் தரிசனம் அங்கு கூடியிருந்த மக்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியது. கங்கையின் நீரோட்டத்தை தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியிருந்தார்கள். சுவருக்குள் சிக்கிக் கொண்ட பறவை... சிறிது நேரம் இறந்த உடல் இப்போதிருக்கும் இடத்திலேயே இருக்கும். சில நேரங்களில் நீரோட்டத்தின் வேகத்தில் காணாமல் போனாலும் போகலாம்.

‘ஓம்! ஸவாஹா’மந்திரங்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கவில்லை.

தோல், சதை, குருதி, கொழுப்பு, எலும்பு, நாடி, நரம்புகள், சாம்பல்- இவை எல்லாமே ஒளிமயமான கடவுளுடன் கலந்து பாவமில்லாமல் இருக்கட்டும்! சன்னியாசியின் பூத உடல் இருந்த புண்ணிய பூமி வணங்க வேண்டிய ஆலயமாக மாறட்டும்!

மண், நீர், நெருப்பு, காற்று, வானம் என்ற ஐம்பெரும் பூதங்களுடன் இணையும்படி ஆகட்டும்! சத்தம், ஸ்பரிசம், வடிவம், ரசம், வாசனை- இவை எல்லாம் புனிதத்தன்மையுடன் நீரில் கலக்கட்டும்.

மனம், வாக்கு, உடல் - புண்ணிய நிலையுடன் மனிதர்கள் மத்தியில் நிலைபெற்று நிற்கட்டும். ஒளிரும் வடிவத்துடன் மின்னிக் கொண்டிருக்கட்டும். ஹோமப் பொருட்களை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். பூர்ணாஹுதி சமர்ப்பண பவேன மந்திரத்தைச் சொன்னார்கள்.

“ஓம் பூர்ணமதே: பூர்ணமிதம் பூர்ணால் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய, பூர்ண மேவாவசிஷ்யதே”

ஒவ்வொரு வார்த்தையிலும் சுவாசத்திலுமுள்ள உச்சரிப்புடன் சடங்குகள் நடந்து முடிந்தன.

திடீரென்று சூரியன் கரிய மேகங்களால் மூடப்பட்டது.

சுற்றிலும் இருட்டு. ஜலசமாதியில் பங்கெடுத்தவர்கள் ஒவ்வொருவராகப் பிரிந்து போனார்கள். கங்கலைச் சுற்றி மழைத் துளிகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. மேகம் கர்ஜித்தது. கண்கள் குருடாகிற மாதிரி இடி, மின்னல்கள் உண்டாயின. தொடர்ந்து இடிச்சத்தம்... எந்த நிமிடமும் பெரிய அளவில் மழை பெய்யலாம்.

பரந்த வெளியில் பலமாகக் காற்று வீசியது. கங்கைக் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. பெரிய ஓட்டத்திற்கு ஆரம்பம் குறிப்பது மாதிரி நீர் வளையங்கள் அலைகளாக வடிவம் எடுப்பதற்கு முன்பாக எல்லோரும் அந்த இடத்தை விட்டு நீங்கினார்கள். சிதறிய மலர்களையும் தர்ப்பைப் புல்லையும் பார்த்தவாறு கற்கள் மீது அமர்ந்துகொண்டு காகங்கள் நடனமாடின. நாராயணக்கிளிகள் “கீச் கீச்” என சத்தம் போட்டுக் கொண்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.