Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 17

Sodhanaikoodam

"அது உண்மைதான். அவன் ஒருமுறைகூட தடுப்பு ஊசி குத்திக் கொண்டதில்லை. அவனுக்கு நோய் பாதித்தால், தப்பிப்பது மிகவும் சிரமமானது.''

"நீங்கள் எல்லா நாட்களிலும் இங்கு வந்து அவனுடைய ஆரோக்கியத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.''

"அவனுக்கு ஏதாவது நோய் பாதித்தால், அது எனக்கும் பரவும். இந்த வயதான காலத்தில் ஏதாவது நோய் வந்தால், அது என்னையும் கொண்டுபோய் விடும். ஒரு பெண்ணாக இருந்தாலும் உங்களால் நகைச்சுவையை ரசிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். தொற்று நோய்களின் உலகத்தை நான் கடந்து விட்டேன். எவ்வளவு நெருக்கமாகப் பழகினாலும், எனக்கு நோய் வராது. ஆனால், எனக்கு வேறொரு பிரச்சினை இருக்கிறது. நாளை மறுநாள் நான் குஜ்ரான்வாலாவிற்குச் செல்ல வேண்டும்.''

"அது இன்னொரு நகைச்சுவையா? தயவு செய்து இந்த அப்பிராணி பெண்ணை விடுங்க...''

"நான் இதை சீரியஸாகத்தான் கூறுகிறேன். டாக்டர் அமூல்யா ஆதி என்னுடைய ஒரு பழைய நண்பர். அவர் அங்கு பணியாற்றினார். அங்கு அவருக்கு நல்ல வேலை இருந்தது. கிடைத்த பணம் முழுவதிற்கும் அவர் அங்கு பூமியை வாங்கிக் குவித்தார். ஜன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர் மரணத்தைத் தழுவினார். அவருக்கு மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளில் நான் தலையிடாமல் இருக்க முடியாது. அங்கு இருக்கும் சொத்து முழுவதையும் விற்றுவிட்டு அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டும். அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று எனக்குத் தெரியாது.''

"அதைப் பற்றி யாராலும் முன்கூட்டியே கூற முடியாது.''

"சோஹினி, இந்த உலகத்தில் நடைபெறும் காரியங்கள் எதிலும் நமக்கு எந்தவொரு பிடிமானமும் இல்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சந்திப்பது என்பதுதான் நம்மால் முடியக்கூடிய ஒரேயொரு காரியம். மனிதர்கள் விதிமீது நம்பிக்கை வைத்திருப்பதில் தவறே இல்லை என்று உங்களுக்குத் தெரியாதா? தவிர்க்க முடியாத காரியங்களில் ஒரு தலைமுடி அளவிற்குக்கூட வேறுபாட்டை உண்டாக்க முடியாது என்று எங்களைப் போன்ற விஞ்ஞானிகள் நம்புகிறோம். உங்களால் முடிந்த வரைக்கும் முடியக்கூடிய காரியங்களைச் செய்து முடியுங்கள். எதுவும் செய்ய முடியாத நிலை வரும்போது, எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்.''

"மிகவும் நல்ல விஷயம். அதையொட்டி இனி நான் பயணிக்கப் போகிறேன்.''

"நான் ஏற்கெனவே சொன்ன மஜீம்தார் இருக்கிறாரே! அவர் அந்த அளவிற்கு ஆபத்தான நபரொன்றும் இல்லை. மற்றவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்கள் அவரை கூட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், அவருடைய கூட்டத்தில் இருக்கும் வேறு சில ஆட்களைப் பற்றி காதுகளில் விழுந்த செய்தி- அவர்கள் மிகவும் சாணக்கியத்தனமான குணம் கொண்டவர்கள் என்பது. நூறடி தூரத்தில் நின்றாலும், ஆபத்தை உண்டாக்கக்கூடிய திறமை உள்ளவர்கள். அவர்களின் கூட்டத்தில் பங்கு பிஹாரி என்றொரு வக்கீல் இருக்கிறார். அவருக்கு அருகில் செல்வது, ஒரு ஆக்டோபஸின் அருகில் செல்வதைப் போல ஆபத்தானது. வசதி படைத்த விதவைகளின் வெப்பம் நிறைந்த ரத்தம்தான் அப்படிப் பட்டவர்களுக்கு உணவு. அந்த விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நடங்க... எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய பார்வையைப் பற்றி நினைத்துப் பாருங்கள்...''

"சவுதரி மஸாய், உங்களால் உங்களுடைய பார்வையை வைத்துக் கொண்டு நடக்க முடியும். ஆனால், என்னுடைய சோதனைக் கூடத்தில் யாராவது தொட்டு விளையாடினால், நான் உங்களுடைய தத்துவ விஞ்ஞானத்தையும் நீதியியலையும் காற்றில் பறக்க விட்டுவிடுவேன். உங்களுடைய அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை நான் மறுப்பேன். நான் ஒரு பஞ்சாபிப் பெண். நன்றாக கத்தியைக் குத்தி இறக்குவதற்கு எனக்குத் தெரியும். யாரைக் கொல்வதற்கும் என்னால் முடியும். எதற்கு அதிகம்...? என்னுடைய மகளாக இருந்தாலும் மருமகனாக இருந்தாலும் ஒரே குத்தில் கொல்வதற்கு என்னால் முடியும்.''

புடவையின் மடிப்பகுதியில் அவள் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்தாள். ஒரே இழுப்பில் அவள் அந்த கத்தியை வெளியே எடுத்து, அதன் பிரகாசித்துக் கொண்டிருந்த தலைப் பகுதியை அவருக்கு முன்னால் காட்டினாள். "அவர் என்னை மாறுபட்டவளாகப் பார்த்தார். அன்பிற்காக கெஞ்சி அழுவதற்கு மட்டும் தெரிந்திருக்கும் ஒரு வங்காளப் பெண் அல்ல நான். அன்பிற்காக உயிரைக் கொடுப்பதற்கு என்னால் முடியும். அதேபோல உயிரை எடுப்பதற்கும். அந்த சோதனைக் கூடத்திற்கும் என்னுடைய இதயத்திற்கும் இடையில் நான் இந்தக் கத்தியை மறைத்து வைத்திருக்கிறேன்.''

"ஒரு காலத்தில் நான் கவிதை எழுதுவதுண்டு. இனிமேலும் கவிதை எழுதலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.'' சவுதரி சொன்னார்.

"நீங்கள் என்ன கவிதையை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய தத்துவ அறிவியல் இருக்கிறதே, அதைத் திரும்பவும் எடுத்துக் கொண்டு போங்க... என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததை நான் எந்தச் சமயத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் தனியாகப் போராடிக் கொள்வேன். "நான் வெற்றி பெறுவேன்... வெற்றி பெறுவேன்... வெற்றி பெறுவேன்" என்று பெருமையுடன் நான் கூறிக் கொண்டேயிருப்பேன்.''

"அடடா! நான் இதோ என்னுடைய தத்துவ விஞ்ஞானத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இந்த நிமிடத்திலிருந்து உங்களுடைய வெற்றி கோஷங்கள் கொண்ட பயணத்திற்கு இசையை உண்டாக்குபவன் நான். தற்போதைக்கு சிறிது நேரத்திற்கு நான் இங்கு இல்லை. ஆனால், உடனடியாக நான் திரும்பி வருவேன்.''

ஆச்சரியம் என்றுதான் கூற வேண்டும்- சோஹினியின் கண்கள் நீரால் நிறைந்தன. "நான் கூறுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.'' அவள் சொன்னாள். அவள் சவுதரியின் கழுத்தில் கையை வைத்து சுற்றிப் பிடித்தாள். "இந்த உலகத்தில் ஒரு உறவும் நிரந்தரமில்லை. இந்த உறவும் வெறும் நிமிடங்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஒன்றுதான்.''

அப்படிக் கூறிவிட்டு அவள் தன்னுடைய பிடியை விட்டாள். அவள் அவருடைய கால்களில் விழுந்து கடவுளின் பெயர்களை முணுமுணுத்தாள்.

10

சூழ்நிலைகள்... அதாவது- சிச்சுவேஷன்ஸ் என்று பத்திரிகைகள் குறிப்பிடும் சம்பவங்கள் திடீர் திடீரென்றுதான் நடைபெறுகின்றன. அதுவும் அடுத்தடுத்து. வாழ்க்கைக் கதை அதன் கவலைகளையும் சந்தோஷத்தையும் சுமந்து கொண்டு முன்னோக்கிப் போவது ஒரு நிச்சயிக்கப்பட்ட வேகத்தில்தான். இறுதி அத்தியாயத்தை அடையும்போது, மோதல்... அதாவது- ஒருவரையொருவர் இடித்துக் கொள்வது எல்லாவற்றையும் நொறுக்கிச் சாம்பலாக்குகிறது. பிறகு... முழுமையான அமைதி. படைப்பாளி கதையை படிப்படியாக பகுதி பகுதியாக உண்டாக்குகிறார். பிறகு ஒரே நிமிடத்தில், ஒரே அடியில் எல்லாவற்றையும் நொறுக்கி சாம்பலாக்குகிறார்.

சோஹினியின் பாட்டி அம்பாலாவில் இருந்தாள். பாட்டி சோஹினிக்கு ஒரு தந்திச் செய்தியை அனுப்பி இருந்தாள். "நீ என்னைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தால் உடனே வா" என்பதுதான் அந்தச் செய்தி.

சோஹினிக்கு உயிருடன் இருக்கும் ஒரேயொரு உறவு பாட்டி மட்டும்தான். அந்தப் பாட்டியிடமிருந்துதான் நந்த கிஷோர் சோஹினியை வாங்கினான்.

"நீ என்னுடன் வர வேண்டும்.'' அம்மா நீலாவிடம் கூறினாள்.

"அது முடியாது.'' நீலா சொன்னாள்.

"ஏன் முடியாது?''

"என்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவர்கள் ஒரு விருந்து உண்டாக்க விரும்புகிறார்கள்.''

"யார் இந்த அவர்கள்?''

"விழிப்புணர்வு தேடுபவர்கள் இருக்கும் க்ளப்பின் உறுப்பினர்கள். பயப்பட வேண்டாம். அவர்கள் மிகச் சிறந்த மனிதர்கள். அந்த உறுப்பினர்களின் பட்டியலைப் படிங்க... மிகுந்த சிறப்புத் தன்மை கொண்ட மனிதர்கள்.''

"உன் நோக்கம் என்ன?''

"அதை விளக்கிக் கூறுவது எளிதான விஷயமல்ல. அந்த பெயரே உங்களுக்குத் தெளிவான அறிகுறிகளைத் தரவில்லையா? எல்லா வகையான அர்த்தங்களையும் அதற்குள் ஆழமாக மறைத்து வைத்திருக்கிறார்கள். ஆன்மிகம், இலக்கியம், கலை ஆகியவற்றின் அடையாளங்கள். அன்றொரு நாள் நபகுமார் பாபு அதற்கு அருமையான ஒரு விளக்கம் அளித்தார். அவர்கள் உங்களிடம் ஏதோ நன்கொடை கேட்டு வருவார்கள்.''

"ஆனால், எல்லா நன்கொடைகளையும் முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய நல்ல ஒரு நன்கொடையை அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். நீ முழுமையாக அவர்களுடைய கைகளில் சிக்கிவிட்டிருக்கிறாய். அது மட்டும் போதும். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது. எனக்குத் தேவையற்றது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. என்னிடமிருந்து அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்காது.''

"அம்மா, உங்களுக்கு என்மீது ஏன் இந்த அளவிற்குக் கோபம்? அவர்கள் இந்த நாட்டிற்கு சுயநலமற்று சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள்.''

"அந்த மாதிரி விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதே நமக்கு நல்லது. நீ இப்போது சுதந்திரமானவள் என்று உன்னுடைய நண்பர்கள் கூறியிருப்பார்கள்.''

"அவர்கள் அப்படிச் சொன்னார்கள்.''

"என்னுடைய கணவர் வைத்துவிட்டுப் போன பணத்தை உன்னுடைய விருப்பப்படி நீ செலவழிக்கலாம் என்றும் அந்த சுயநலமில்லாதவர்கள் உனக்கு அறிவுரை கூறியிருப்பார்கள்.''

"எனக்கு அது தெரியும்.''

"உயிலில் மேலும் ஒரு வரியைச் சேர்க்க வேண்டும் என்று நீ ரகசியமாக முயற்சிக்கிறாய் என்று நான் கேள்விப்பட்டேன். உண்மைதானா?''

"அது உண்மைதான். பங்கு பாபுதான் என்னுடைய வக்கீல்.''

"அவர் உனக்கு மேலும் ஏதாவது அறிவுரை தருவதுண்டா? புதிய ஆசை வெளிச்சங்கள்...?''

நீலா எதுவும் பேசவில்லை.

"என்னுடைய எல்லைக்குள் எங்காவது நுழைந்தால் உன்னுடைய பங்கு பாபுவை நான் ஒரு வழி பண்ணி விடுவேன். சட்டப்படி என்னால் அதைச் செய்ய முடியவில்லையென்றால் நான் சட்டத்தை மீறுவேன். அம்பாலாவிலிருந்து நான் பெஸாவர் வழியேதான் திரும்பி வருகிறேன். சீக்கியர்களான நான்கு தடியர்கள் என்னுடைய சோதனைக் கூடத்திற்கு காவல் இருப்பார்கள். போவதற்கு முன்னால் நான் இன்னொரு விஷயத்தையும் உன்னிடம் கூறுகிறேன்- நான் ஒரு பஞ்சாபிப் பெண்.''

இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்தவாறு அவன் சொன்னாள்: "இந்தக் கத்திக்கு என்னுடைய மகள் யாரென்றோ, அவளுடைய வக்கீல் யாரென்றோ அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியாது. அதை மனதில் வைத்துக் கொள். ஏதாவது கணக்கு தீர்ப்பதற்கு இருந்தால், திரும்பி வந்த பிறகு நான் அதைத் தீர்த்துக் கொள்கிறேன்.''

11

சோதனைக் கூடத்தைச் சுற்றிலும் நிறைய இடம் வெறுமனே கிடந்தது. சத்த ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் தேவையற்ற ஆரவாரங்களில் இருந்தும் சோதனைக் கூடத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் அப்படி செய்யப்பட்டிருந்தது. அந்த அமைதி தவழும் சூழ்நிலை தன்னுடைய ஆராய்ச்சி செயல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு விஷயம் என்று ரேபதிக்குத் தோன்றியது. அதனால் இரவு நேரத்திலும் அவன் சோதனைக் கூடத்திற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

படிகளுக்குக் கீழே இருந்த கடிகாரத்தில் இரண்டு மணி அடித்தது. சிந்தனையில் மூழ்கியிருந்த ரேபதி சாளரத்தின் வழியாக இரவு நிறைந்திருந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று சுவரில் ஒரு நிழல் அசைவதை அவன் பார்த்தான்.

அவன் திரும்பிப் பார்த்தபோது நீலா அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அவள் பாவாடை அணிந்திருந்தாள். மெல்லிய பட்டுத் துணியால் தயாரிக்கப்பட்ட ஒரு ஷிம்மீஸ். அவன் நாற்காலியை விட்டு வேகமாக எழுந்திருக்க ஆரம்பித்தபோது, நீலா அவனுடைய மடியில் உட்கார்ந்து விட்டிருந்தாள். அவள் அவனை தன்னுடைய கைகளுக்குள் இருக்கும்படி செய்தாள். ரேபதியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவனுடைய நெஞ்சு வழக்கத்தைவிட அதிக வேகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. "இங்கேயிருந்து போ. தயவுசெய்து இந்த அறையை விட்டுப் போ...'' மூச்சுவிட முடியாததைப் போன்ற குரலில் அவன் சொன்னான்.

"ஏன்?'' அவள் கேட்டாள்.

"என்னால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை.'' ரேபதி சொன்னான்: "நீ ஏன் இங்கே வந்தாய்?''

நீலா அவனை தன் உடலுடன் மேலும் சற்று நெருக்கமாக இருக்கும்படிச் செய்தாள். "நீங்கள் ஏன் என்னைக் காதலிக்கவில்லை?'' அவள் கேட்டாள்.

"ம்... நான் உன்னை காதலிக்கிறேன்.'' ரேபதி சொன்னான்: "ஆனால், இப்போது நீ இங்கேயிருந்து போகணும்.''

திடீரென்று சீக்கியரான ஒரு காவல்காரன் அந்த அறைக்குள் நுழைந்து வந்தான். "உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சீக்கிரமா வெளியேறுங்க!'' அவன் சொன்னான்.

தனக்கே தெரியாமல் ரேபதி மின்சார மணியை அழுத்திக் கொண்டிருந்தான்.

அவன் ரேபதியின் பக்கம் திரும்பினான். "பாபுஜி, உங்களுடைய நம்பிக்கையை நீங்கள் இழந்து விடாதீர்கள்.''

நீலாவை மடியிலிருந்து தள்ளிவிட்டு, ரேபதி எழுந்தான். "நீங்க சீக்கிரமா போங்க. இல்லாவிட்டால் மேம் சாஹிபாவின் உத்தரவுப்படி நான் நடக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.'' அவன் நீலாவிற்கு முன்னெச்சரிக்கை விடுத்தான்.

இன்னொரு மொழியில் கூறுவதாக இருந்தால் அவன் அவளைப் பிடித்து வெளியேற்றுவான் என்று அர்த்தம். வெளியேற்றும் போது, நீலா அவனுக்கு நேராக இன்னொரு வார்த்தைகள் கொண்ட மாலையைத் தொடுக்க மறக்கவில்லை. "சர் ஐஸக் நியூட்டன்... நாளை நீங்கள் எங்களுடைய வீட்டிற்கு தேநீர் குடிப்பதற்காக வரவேண்டும். மாலை சரியாக 4.45 மணிக்கு. தெரியுதா? உங்களுக்கு சுய உணர்வு இல்லாமற் போய் விட்டதா?'' அவள் கேட்டாள்.

"நான் கேட்டேன்.'' சற்று நடுங்கிய குரலில் ரேபதி சொன்னான்.

நீலாவின் சதைப்பிடிப்பான உடல் அழகான ஒரு சிற்பத்தைப் போல அவளுடைய மெல்லிய பாவாடையின் வழியாக தெளிவாகத் தெரிந்தது. அதிர்ச்சியடைந்து அதைப் பார்த்துக் கொண்டு நிற்பதைத் தவிர, ரேபதியால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel