
ஆனால், இங்கு அப்படியல்ல... நம் வீட்டில் இருப்பதைப்போலவே ஒரு உணர்வு நமக்குத் தோன்றும். அந்த உணர்வு மனதிற்கு ஒரு புது தெம்பைத் தரும். அது எப்படி வருகிறது என்பது தெரியவில்லை... என்ன காரணத்தாலோ வேலை செய்வதற்கு புது சக்தியும், உற்சாகமும் நமக்கு கிடைக்கிறது என்பதென்னவோ உண்மை. காட்டைக் கடந்து நான் பக்கவாட்டில் போன பாதை வழியே நடந்து போனால், பாசி படர்ந்த ஒரு சர்ச்சில் போய் அது முடிந்தது. அங்கு நிறைய லின்டென் மரங்கள் இருந்தன. ஆல்பெர்ட்துரே வரைந்த ‘ரிட்டர், டோட் அன்ட் ªபூஃபே’ என்ற ஓவியத்தை அங்கு நான் கண்ட காட்சி ஞாபகப்படுத்தியது. கார்லோ டால்ஸியின் ‘தி கார்டன் ஆஃப் ஆலிவ்ஸ்’ என்ற ஓவியத்தை நீ பார்த்திருக்கிறாயா? ரெம்ப்ராண்ட்டின் முத்திரை பலவற்றை அதில் நாம் பார்க்கலாம். நான் சமீபத்தில் அதைப் பார்த்தேன். இரண்டு பெண்களும் தொட்டிலும் உள்ள ‘தி பைபிள் ரீடிங்’ என்ற ஓவியத்தை நீ பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன். ஃபாதர் கோரோ அதே விஷயத்தைப் பற்றி வரைந்திருக்கும் ஓவியத்தை நீ பார்த்திருப்பதாகச் சொன்னது ஞாபகத்தில் இருக்கிறது. அவர் மரணமடைந்து சிறிது நாட்களில் நடத்தப்பட்ட கண்காட்சியில் அவரின் அந்த ஓவியத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து நின்றுவிட்டேன்.
ஒருவன் எதைப் பார்த்தானோ, அதை மட்டுமே அவன் மனதில் எப்போதுமே நினைத்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் அதுதான் உயர்வான கலையம்சம் கொண்டது. அதற்குப் பிறகு அவன் நிச்சயமாக ஒரு தனிமையை அனுபவிக்கும் மனிதன் இல்லை. அவன் தனியாக இருக்கிறான் என்று அதற்குப் பிறகு நாம் கூறவும் முடியாது. அவன்தான் தான் பார்த்த கலையம்சம் கொண்ட பொருளைப் பற்றிய ஞாபகங்களுடன் இருக்கிறானே.
இதய மகிழ்ச்சியுடன் நான் கை குலுக்குகிறேன். நல்லது நடக்கட்டும். வேலையில் வெற்றிகள் பல காண வாழ்த்துகிறேன். வாழ்க்கைப் பாதையில் நல்ல விஷயங்கள் பலவற்றை நீ சந்திக்க வாழ்த்துக்கள். அவை என்றும் நம் மனதில் நிலை பெற்று அதை மேலும் வளமுள்ளதாக ஆக்கட்டும். மவ்வைப் பார்த்தால், நான் கேட்டதாகச் சொல்.
உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.
இந்தக் கடிதத்தை என்னிடமே பல நாட்கள் இருக்க வைத்துவிட்டேன். நவம்பர் 15ம் தேதி கடந்து போய் மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ரெவ.தேயோங்கிடமும் மாஸ்டர் போக்மாவிடமும் பேசிப் பார்த்தேன். ஃப்ளெமிஷ் மாணவர்களை அனுமதித்ததைப்போல் என்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இங்கு மேலும் நான் இருப்பதாக இருந்தால், இப்போது இருப்பதைவிட எனக்கு அதிகம் பணம் தேவைப்படுகிறது. அதனால் போரினேஜ் செல்லும் திட்டத்தை மேற்கொள்வதே சரியென எனக்குப் படுகிறது. அங்கு நான் போய்விட்டால் இன்னொரு பெரிய நகரத்தை சமீப காலத்திற்கு நான் நினைத்துப் பார்க்கவே மாட்டேன்.
கடவுள்மேல் முழுமையான நம்பிக்கை இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் நமக்கு தைரியம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.
***
ஹாலண்ட்
எட்டன், ஹாலண்ட், நவம்பர் 3, 1881.
அன்புள்ள தியோ,
என்னுடைய இதயத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை நான் உன்னிடம் சொல்லியே ஆக வேண்டும். ஒரு விதத்தில் பார்க்கப் போனால், இந்த விஷயம் உனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்ததுதான், புதிதான ஒன்றுமல்ல. இந்தக் கோடையில் கீ மீது எனக்கு ஒரு ஆழமான காதல் பிறந்துவிட்டது என்பதை உன்னிடம் சொல்ல நான் பிரியப்படுகிறேன். என் காதலை அவளிடம் வெளிப்படுத்தியபோது அதை அவள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள். கடந்த காலம், எதிர்காலம் எல்லாமே தனக்கு ஒன்றுதான் என்கிறாள் அவள்.
அவள் அப்படிச் சொன்ன பிறகு எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் என் காதலை ஒரேயடியாக மறுத்துவிட்டாள் என்பதை ஏற்றுக்கொண்டு வெறுமனே இருந்துவிடுவதா, இல்லாவிட்டால் அவள் இன்னும் சரியான முடிவெடுக்கவில்லை என்று நினைத்து, மேலும் நம்பிக்கையை மனதில் வைத்துக்கொண்டு என் காதலைக் காற்றில் பறக்கவிடாமல் இருப்பதா?
இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதே நல்ல ஒரு விஷயமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் என் காதலை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு நான் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அவள் அப்படி என் காதலை மறுத்ததற்காக ஒரு விதத்தில் நான் ஏமாற்றமடைந்தாலும், இந்த நிமிடம் வரை அப்படி அவள் சொன்னாள் என்பதற்காக நான் மனதிற்குள் வருத்தப்படவில்லை. இந்த மாதிரியான பல விஷயங்களை நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அவற்றைப் படிக்கும்போது மனதில் ஒரு வகை உணர்ச்சி அரும்பவும் செய்யும். ஆனால், அவற்றையே நேரில் சந்திக்கிறபோது, எத்தனைப் பேருக்கு அவை வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான ஒன்றாக இருக்கிறது?
எது எப்படியோ - மனதளவில் நான் என் செயலுக்காக மகிழ்ச்சியடையவே செய்கிறேன். நான் வெளிப்படையாக என் காதலை வெளிப்படுத்தியது பிறருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அப்படி தைரியமாக செயல்பட்டதற்காக உண்மையிலேயே நான் சந்தோஷப்படுகிறேன்.
இந்த விஷயத்தை முன்கூட்டியே உனக்கு நான் ஏன் தெரியப்படுத்தவில்லையென்றால், அந்த சமயத்தில் தெளிவற்ற ஒரு மனநிலையுடனும், பக்குவப்பட்ட ஒரு முடிவுடன் நான் இல்லாமலிருந்ததும் தான் காரணங்கள். நிலைமை அப்படியிருக்கும்போது, நான் எப்படி இதைப் பற்றி விளக்கமாக உனக்கு எழுத முடியும்? ஆனால், இப்போது எந்த கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை ஒரு நிமிடம் மனதில் நினைத்துப் பார். இந்த விஷயத்தை அவள் தவிர, அம்மா, அப்பா, அங்கிள், ஸ்ட்ரிக்கர் ஆன்ட்டி, ப்ரிசெனேஜில் இருக்கும் ஆன்ட்டி, அங்கிள் எல்லோரிடமும் நான் மனம் திறந்து கூறிவிட்டேன்.
நான் சந்தித்து சொன்னவர்களிலேயே யாருக்குமே தெரியாமல் மறைமுகமாக வந்து எனக்கு இதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், கடுமையாக முயற்சி செய்தால் நிச்சயம் எனக்கு வெற்றி கிடைக்குமென்றும் சிறிது கூட நான் எதிர்பார்த்திராத ஒரு மனிதர் என்னைப் பார்த்து சொன்னார். அவர் யார் என்று நினைக்கிறாய்? நம் வின்சென்ட் அங்கிள்தான். கீ என்னிடம் ‘நான் ஒருபோதும் உன்னை விரும்பியதில்லை. நமக்குள் அப்படி ஒரு உறவு எந்தக் காலத்திலும் நடக்க சாத்தியமே இல்லை’ என்று சொன்னதை மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் மேலோட்டமாக எடுத்துக் கொண்ட என் போக்கு அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook