Lekha Books

A+ A A-

உன் மனதை நான் அறிவேன் - Page 39

Unn Manadhai Naan Ariven

சுதாகர், நிதானமாக அவனது லோகன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனது இருக்கைக்கு அருகே உட்கார்ந்திருந்தான் வெங்கட். அம்மா- அப்பா வைத்த வெங்கடாஜலபதி எனும் பெயரை வெங்கட் என்று சுருக்கிக் கொண்டான்.

வெங்கட் முப்பத்தைந்து வயது இளைஞன். நிறம் கறுப்பு எனினும் களையாக இருந்தது.

பீரும், மதுபானமும் அருந்தும் பழக்கம் இல்லாதபடியால் முகத்தில் ஏற்படும் ஊதல் இல்லை. சிவந்த விழிகள் இன்றி வயதுக்கு மீறிய தொந்தியும் இன்றி... கண்ணியமான தோற்றத்துடன் இருந்தான்.

காரின் ஆடியோ, யுவன்சங்கர் ராஜாவின் 'காதலிக்கும் ஆசை இல்லை' பாடலை இசைத்துக் கொண்டிருந்தது.

''என்ன சுதா... நம்ப சிங்கப்பூர் திட்டம் என்ன ஆச்சு?''

வெங்கட் பேச ஆரம்பித்ததும், பாடலின் ஒலியைக் குறைத்தான் சுதாகர்.

''நம்ம திட்டம் சிங்கப்பூர் போற திட்டம் வெங்கி. சின்னாளம்பட்டி கிராமத்துக்குப் போற திட்டம் இல்லை. பணம்... அந்த வெள்ளையப்பன் இல்லாம எந்த அப்பன்களும் எங்கயும் போக முடியாது... அதுக்கான நடவடிக்கைகளை செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். நான் என்ன சும்மாவா இருக்கேன்? பணம் போடற பார்ட்னர் நான். பழகின தோஷத்துக்கு இந்த சிங்கப்பூர் திட்டத்துல உன்னை ஸ்லீப்பிங் பார்ட்னரா போட்டிருக்கேன். நீ என்னடான்னா... அவசரப்படற... என்னை டென்ஷன் பண்ற.''

''டென்ஷன் உனக்கு மட்டுமா? வீட்ல எனக்கு தினமும் பிரச்னையாகுது. என் பொண்டாட்டி கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல. பையனுக்கு ஃபீஸ் கட்டணும்.''

''அட நீ என்னப்பா? அந்த ராணியை மில் ஓனர் மோகனரங்கம் கேட்டார்ல? அவளை முடிச்சு குடுத்தா... செம அமௌண்ட் கிடைக்குமே...''

''அட நீ வேற... என்னமோ... கல்யாணத்துக்கு கேக்கற மாதிரி பேசற?''

''ஆமாமா அவர் நித்ய கல்யாண ஆள்தானே?''

''ராணி இப்ப ரொம்ப பிஸியாயிட்டா. டைரக்ட்டா அவளுக்கு பெரிய ஆளுக தொடர்பு கிடைச்சுக்கிட்டிருக்கு. நம்பளை கண்டுக்கறதே இல்லை.''

''மோகனரங்கம் அவளை கண்டுக்கணும்ங்கறாரே?''

''அவ பெரிய தொகை சொல்றாப்பா சுதா.''

''மோகனரங்கம் என்ன சின்ன ஆளா? அவர் கேட்டதை நாம குடுத்தா... நாம கேக்கறதை அவர் குடுப்பாரு.''

''ஜோக் அடிக்கற நிலைமையிலயா இருக்கோம். சீரியஸா பேசுப்பா.''

''இங்க பாரு வெங்கட்... வாழ்க்கையை ஈஸியா கொண்டு போகணும். எதுக்கும் அலட்டிக்கக் கூடாது.''

''ஒனக்கென்ன அசால்ட்டா சொல்லுவ... அலட்டிக்க கூடாதுன்னு... என் பொண்டாட்டி அருணாவோட அண்ணனுக பேட்டை ரௌடிங்க. அருணா அவனுங்ககிட்ட போய்... தான் கஷ்டப்படறதா சொன்னா... உடனே அரிவாளைத் தூக்குவானுங்க.''

''இப்ப உனக்கு என்ன கஷ்டம்?''

''கையில பணம் இல்லாத கஷ்டம்.''

''இந்தா இதைப்புடி''

''தேங்க்ஸ் சுதா.''

''தேங்க்ஸ்ல்லாம் இருக்கட்டும். இப்போதைக்கு இதை வச்சு உன் அருணாவோட வாயை அடைச்சு வை.''

''ஐய்யோ... தெரியாம காதலிச்சுத் தொலைச்சுட்டேன். கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். அவஸ்தைப்பா சுதா. 'நீங்களும் சுதாகர் அண்ணனும் பார்ட்னர்ங்கறீங்க. அவரு கார் வச்சிருக்காரு. நீங்க இந்த பைக்கையே கட்டி அழறீங்களேன்'னு கேக்கறா சுதா. ஏதோ பேருக்கு பார்ட்னர்ன்னு சொல்லப் போய் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.''

''மாட்டினது நீ இல்லை வெங்கி. உன்கிட்ட மாட்டிக்கிட்டது நான். எவ்ளவு பணம் குடுத்தாலும் செலவு பண்ணி தீர்த்துடற...''

''தீர்த்து முடிக்கிறது நான் இல்லை சுதா. என் பொண்டாட்டி அருணா. மகனை கொண்டு போய் ஸ்கூலுக்கு விடப் போவா. வீட்டுக்கு வந்ததும் துணியை துவைக்க உட்காருவா. அவ்ளவுதான்... துணி துவைச்சு முடிக்க ரெண்டு மணி நேரம் ஆகும். அதுக்கப்புறம் படுத்தாள்ன்னா தூக்கம்தான். கும்பகர்ணனுக்கு போட்டியா தூங்குவா. முக்கால்வாசி நாட்கள்ல்ல சமைக்கறதே கிடையாது. எனக்கு ஃபோன் போட்டு 'ஹோட்டல்ல ஏதாவது வாங்கிட்டு வாங்க'ன்னு சொல்லுவா... பார்ஸல் வாங்கிட்டுப் போகணும். மாசத்துல இருபது நாள் ஹோட்டல்ல வாங்கினா எவ்ளவு செலவு ஆகும்ன்னு பார்த்துக்க. வாஷிங் மெஷின் வாங்கிப் போட்டிருக்கேன். அதில துவைக்க மாட்டாளாம். கையிலதான் துவைப்பாளாம். வேலைக்காரி வச்சுக்கோன்னா அதுவும் கேட்க மாட்டா. 'எனக்கு பிடிக்காது. நானேதான் எல்லாம் செய்யணும்'பா. செஞ்சுட்டு செஞ்சுட்டு 'எனக்கு சமைக்க முடியலை. நேரம் இல்லை. பையனை கொண்டுவிட, சாப்பாடு கொண்டு போய் குடுக்கன்னு போக வரவே சரியா இருக்கு'ன்னு சொல்லி புலம்புவா...!''

''வேலைக்காரி வீட்டு வேலை செஞ்சா பிடிக்காதுன்னு சொல்ற உன் பொண்டாட்டிக்கு ஹோட்டல்ல யாரோ சமைக்கறது மட்டும் பிடிக்குதாமா...?''

''அது ஒரு ஹோட்டல் தீனி பைத்தியம் சுதா. அவங்க அம்மா வீட்ல எப்பவும் ஹோட்டல்லதான் வாங்கி சாப்பிடுவாங்க. டீ கூட வீட்ல போட மாட்டாங்க. அதே பழக்கம் இவளுக்கும் வந்துருச்சு... இன்னொரு விஷயம், கையில காசை குடுத்தா போதும். புடவைக் கடை, சுடிதார் கடைன்னு கிளம்பிடுவா. எக்கச்சக்கமா வாங்கிப் போட்டுடுவா. இப்பிடி செலவு பண்ணினா என்னம்மா பண்றதுன்னு கேட்டா போச்சு... பெரிய பூகம்பமே வெடிக்கும். அவ பேச நான் பேச... அடுத்த கட்டமா அவளோட அண்ணன்களுக்கு ஃபோன் பண்ணி ஏடா கூடமா என்னைப் பத்தி போட்டுக் குடுத்துடுவா. அவ்ளவுதான்... அவனுங்க என்னைத் தேடி வந்து 'தங்கச்சி கண்ணுல தண்ணி வந்தா... உன்னை சும்மா விடமாட்டோம்'ன்னு மிரட்டுவானுங்க. நான் எதிர்த்து பேசினா... அடிதடி கலாட்டாவாயிடும். என் மகன் மேல உயிரையே வச்சிருக்கேன். அதனால வம்பு பண்ணாம அமைதியா இருந்திடுவேன். என்னோட மௌனத்தை மைனஸ் பாயிண்ட்டா அவங்க எடுத்துக்கறதால அருணாவும் அதனால என்னை மதிக்கறதில்லை...''

''அவ பின்னால திரிஞ்சு, துரத்தி துரத்தி காதலிச்சியே... இப்ப என்னடான்னா ஏகப்பட்ட பிரச்னை சொல்ற?!''

''காதலிக்கும் போது தேன் ஒழுக பேசினா. கல்யாணத்துக்கப்புறம் தேள் கொட்டற மாதிரி கொட்டறா. அவளுக்கு இப்பிடிப்பட்ட அண்ணனுங்க இருக்கானுங்கன்னு தெரிஞ்சிருந்தா... அருணாவை காதலிச்சிருக்கவே மாட்டேன்...''

''அண்ணனுங்க அக்கிரமக்காரங்கள்ன்னு தெரிஞ்சா... காதலிச்சவளை கை கழுவிடுவியா?''

''பின்னே என்ன பண்றது சுதா? வீட்டுக்கு போறதுக்கே பயம்மா இருக்கு. ஆனா ஒண்ணு... இத்தனை பிரச்சனைக்கு நடுவுல... என் பையனோட குரல் கேட்டா எனக்கு எல்லா கவலையும்  பறந்துடும்... மறந்துடும்...''

''சரி, சரி... அருணா சின்ன வயசுக்காரி. செல்லமா வளர்ந்தவ. அதனால விவரம் போதாது. கொஞ்ச நாளானா சரியாயிடுவா.''

''அது சரி சுதா. நம்ம சிங்கப்பூர் திட்டம்?...''

''நீ அதிலயே இரு. அதுக்காகத்தான் நானும் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல்ல முடிஞ்சுடும். சிங்கப்பூர்ல ஹோட்டல் ஆரம்பிக்கறதுக்கு எண்பது பர்ஸண்ட் பணம் என்கிட்ட ரெடியா இருக்கு. பாக்கி இருபது பர்ஸண்ட் தேறிடுச்சுன்னா 'ஆகாய வெண்ணிலாவே'ன்னு பாடிக்கிட்டே ஃப்ளைட் ஏறிட வேண்டியதுதான்.''

''நான் மட்டும் முதல்ல சிங்கப்பூர் போய்ட்டு அங்கே ஹோட்டல் வேலைகளைப் பார்த்து முடிச்சுட்டு உனக்கு தகவல் சொல்றேன். அதுக்கப்புறம் நீ வா. நீ நிரந்தரமா அங்கே தங்க வேண்டிய அவசியம் இருக்காது. தேவைப்படறப்ப வந்து போனா போதும்...''

''ஒரேயடியா அருணாகிட்ட இருந்து விடுதலை கிடைச்சுடும்ன்னு இருந்தேனே...''

''நீ அருணாவை நிரந்தரமா இங்கே விட்டுட்டு வந்தா... அவளோட அண்ணனுங்க உன்னை சும்மா விட்டுடுவானுங்களா?''

''ஆமாமா. அடிக்கடி வர போக இருந்தாத்தான் அருணாவும் 'கம்'ன்னு இருப்பா. இல்லைன்னா அவளை சிங்கப்பூருக்குக் கூட்டிட்டு போகச் சொல்லி என்னை இம்சை பண்ணுவா...''

''சுதா... சிங்கப்பூர் போனப்புறம் நம்பளோட இந்த இழிவான தொழிலை விட்டுடணும்...''

''ஃபைனான்ஸ் பிஸினஸ்ல அவனை இவனை ஏமாத்தி, எப்பிடியோ மாட்டிக்காம ஒரு பெருந்தொகை சேர்த்துட்டோம். ஸைடு பிஸினஸா பெண்களை வாடகைக்கு பேசி விடறதை செஞ்சோம். இனிமேல் ஹோட்டல் தொழில் மட்டுமே செய்வோம். அதுக்கு முன்னால ஆத்ம திருப்திக்காக நான் செய்ய வேண்டிய வேலை இருக்கு. அதை செய்றதுக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி, அதுவும் நடந்துக்கிட்டிருக்கு. அந்த வேலை முடியட்டும். நம்ம திட்டம் நிறைவேறிடும்.''

''பொருளாதார நெருக்கடியை தீர்த்துட்டா... என்னோட பொண்டாட்டி நெருக்கடிக்கும் ஒரு முடிவு வரும்...''

''அது பொருளாதாரம். அருணா உன்னோட தாரம்...''

''சுதா...  புலமை துள்ளி விளையாடுது சுதா...''

''நீ வேற... ஏதோ பேச்சு வாக்கில வந்துச்சு. சரி... சரி... உன்னோட வீட்டை நெருங்கிட்டோம். நீ இறங்கிக்கோ. நாளைக்கு சந்திப்போம்.''

''ஓ.கே. சதா...'' என்ற வெங்கட் காரை விட்டு கீழே இறங்கிச் சென்றான்.

சுதாகரின் கார், புழுதியைப் கிளப்பியபடி வேகமாக சென்றது.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

அக்கா

அக்கா

November 10, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel