Lekha Books

A+ A A-

உன் மனதை நான் அறிவேன் - Page 21

Unn Manadhai Naan Ariven

பாவனாவின் விழிகளில் கண்ணீர் நிறைந்து இருந்தது. வயிற்றுப் பாட்டிற்காக தன் கற்பை விற்றுப் பிழைக்கும் பிழைப்பை எண்ணி அழுதாள். 'இதுக்கு ஒரு முடிவு வேணும். கண்டிப்பா வேணும். என்ன செய்யறது? ஏதாவது செஞ்சாகணும். படிப்பும் இல்லை. கிடைச்ச வேலையை செய்யலாம்ன்னு போனா... எங்கே போனாலும் பாலியல் பலாத்காரம். வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு போனா கூட செய்ற வேலைக்குரிய காசை குடுத்து அனுப்பாம... என்னமோ... வேலை குடுத்ததே பெரிய விஷயம் போல... அவங்களோட அநாகரீகமான, மோசமான நடத்தையை வேற சகிச்சுக்க வேண்டியிருக்கு.

'இங்க ரெண்டு பேய் தலைவிரிச்சு ஆடுதுன்னு அங்க போனா... அங்கயும் ரெண்டு பேய் தலை விரிச்சு ஆடுது'ங்கற கதையா என்னோட வாழ்க்கை ஆகிப்போச்சு. இந்தப் பேயை விட அந்தப் பேய் பரவாயில்லைன்னு நெட்டை பாபு கூப்பிடற இடத்துக்குப் போக வேண்டியதிருக்கு... இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணுமே... என்ன வழி?!' நீண்ட நேரமாக சிந்தித்துக் கொண்டிருந்த பாவனாவின் சிந்தனையைக் கலைத்தது சுதாகரின் குரல்.

நீண்ட நாட்களாக தொடர்பு அற்றுப் போன சுதாகர், மீண்டும் அங்கே வந்தான். எதுவுமே நடக்காதது போலவும், சகஜமாக வந்து போவது போலவும் அங்கே வந்து நின்றான்.

அவனைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது பாவனாவிற்கு. வீடு தேடி வந்தவனை 'வா' என்று வரவேற்கவும் முடியாமல், 'போ' என்று விரட்டவும் முடியாமல் மௌனமாக நின்றிருந்த பாவனாவிடம் எதையும் எதிர்பார்க்காமல் மளமளவென்று பேச ஆரம்பித்தான் சுதாகர்.

''என்ன பாவனா? வீட்டுக்குள்ள லைட்கூட போடாம இருட்டில உட்கார்ந்திருக்க?! வீட்ல வேற யாரையும் காணோம்?... ஏன் இவ்வளவு டல்லா இருக்கே? உடம்பு சரி இல்லையா? உன் முகமே சரி இல்லையே... சாப்பிட்டியா? இல்லையா...?''

''ரொம்ப அக்கறைதான் உனக்கு. என்னோட பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுட்டு இத்தனை நாள் கழிச்சு வந்து ஒண்ணுமே நடக்காத மாதிரி 'சாப்பிட்டியா'ன்னு கேக்கறியே? நீ மட்டும் ஏமாத்தலைன்னா என்னோட வாழ்க்கையில ஒரு ஏற்றம் வந்திருக்கும். நல்ல மாற்றம் வந்திருக்கும்.''

 ''ஏன்? என்ன ஆச்சு?...''

 ''என்னைத் தேடி வராதேன்னு சொல்லியும் வந்துக்கிட்டே இருக்கியே... இந்த பிழைப்புக்கு ஒரு முழுக்கு போடணும்னு நான் தவிக்கிறேன். உன்னாலதான் எனக்கு இவ்ளவு கஷ்டம். கணிசமான தொகையை முழுங்கி, ஏப்பம் விட்டுட்ட. நீ மட்டும் என்னை ஏமாத்தலைன்னா... வாழ்க்கையில ஒரு முன்னேற்றம் கிடைச்சிருக்கும். ஒவ்வொரு நாளும் முகம் அறியாத நபர்கள்ட்ட என்னோட நிஜ முகத்தைக் கழற்றி வச்சுட்டு பொய்முகத்தோட பழக வேண்டியதிருக்கு.''

''முதல்ல வேதாந்தம் பேசறதை நிறுத்து. உன்னோட மறைமுக வாழ்க்கை முடிஞ்சு, திரைமறைவு இல்லாத தெளிவான வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன். அந்த திட்டத்துக்கு நீ ஒத்துழைச்சா... உனக்கு பெரிசா ஜாக்பாட் மாதிரி ஒரு தொகை குடுப்பேன்...''

''கொஞ்சம் வாயை மூடறியா சுதாகர்? இன்னொரு முறை ஏமாற, நான் என்ன பைத்தியக்காரியா?''

''இந்த தடவை நான் சொல்றதைக் கேட்கலைன்னாத்தான் நீ பைத்தியக்காரி...''

''என்ன சொல்ற சுதாகர்? புரியும்படியா சொல்லு...''

''நான் சொல்றதை கவனமா கேளு. இந்த வேலை ஒரு சினிமாவுல நடிக்கற மாதிரியான வேலை. உனக்கு பிடிக்காத வேற எந்த பழைய ரூட்டும் இதில கிடையாது. நான் சொல்றதைக் கேட்டு அதன்படி ஒரு வீட்ல நீ நடிக்கணும்...''

''என்னது?! வீட்ல நடிக்கணுமா?''

''முழுசா நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள குறுக்கே பேசறியே?! ரொம்ப ஈஸியான வேலை...''

''அதை... நான் சொல்லணும்... வீட்ல நடிக்கணும்ங்கற... அதைப் போய் ஈஸியான வேலைங்கற? எனக்கு பயம்மா இருக்கு.''

''ஒரு பயமும் இல்லை. நீ டீல் பண்ண வேண்டியது ஒரு பொண்ணு கூடதான். நான் சொல்ற அந்தப் பொண்ணோட வீட்டுக்கு ரெகுலரா போற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிக்கோ...''

''முன்ன பின்ன தெரியாதவங்க வீட்டுக்கு ரெகுலரா போறதா? நீ சொல்ற ஐடியா... சொதப்பலா இருக்கு... விபரீதமானதா இருக்கு...''

''ஐய்யோ... நான் சொல்றதை முழுசா கேட்காம நீயாவே ஏன் கண்டபடி கற்பனை பண்ணிக்கற? என்னோட திட்டத்துக்கு நீ முழுசா ஒத்துழைச்சா... அரைகுறையா இருக்கற உன்னோட வாழ்க்கைத்தரம் உயரும். பெரிசா... நீ... கஷ்டப்பட வேண்டியதும் இல்லை. நல்லா நடிக்கத் தெரிஞ்சா போதும்...''

''வீண் வம்புல மாட்டிக்கிட மாட்டேனே?!...''

''ம்கூம். அதைப்பத்தின பக்கா ப்ளானை உனக்கு நாளைக்கு நான் சொல்றேன்...''

''நீ சொன்னப்புறம் நான் என்னோட முடிவை சொல்றேன்...''

''சரி...''

''நீ சொல்லப்போற திட்டத்துக்கு செயல்பட நான் சம்மதிச்சா... எனக்கு எவ்ளவு கொடுப்ப?..''

''ஆமாமா. கண்டிப்பா அதை நான் சொல்லித்தான் தீரணும். அப்பதானே நீ பணத்துக்காகவாவது ஒத்துக்குவ?'' என்ற சுதாகர், தொடர்ந்து சொன்ன தொகையைக் கேட்டு பிரமித்துப் போனாள் பாவனா.

''சொன்னேன்ல! நான் சொல்ற தொகை, உனக்கு இந்த வேலையை செய்ய வைக்கற ஆர்வத்தைத் தூண்டும்ன்னு!..''

''தொகையெல்லாம் பெரிசுதான். இந்த ஜென்மத்துல என்னால சம்பாதிக்கக் கூடியதில்லைதான். ஆனா... நீ சொன்ன அந்த தொகையில முப்பது பர்ஸண்ட்... நான் வேலையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே குடுத்துடணும்.''

அவசரமாய் குறுக்கிட்டான் சுதாகர்.

''என்னது? முப்பது பர்ஸண்ட் பணத்தை அட்வான்ஸா குடுக்கணுமா?! ...''

''ஆமா. மறுபடியும் உன்கிட்ட ஏமாற... நான் என்ன லூஸா?... அது மட்டுமில்ல.. உன்னோட திட்டத்துல என்னோட பங்கு என்ன... அதனால எனக்கு ஏதாவது பாதிப்பு வருமான்னு நான் யோசிச்சுதான் முடிவு சொல்வேன். இதுக்கு ஒத்துக்குவேன். பணம் கிடைக்குதேங்கறதுக்காக தேவை இல்லாத பிரச்னையில மாட்டிக்கக் கூடாதே. இன்னிக்கு நிலைமையில... பணம் இல்லாட்டாலும் வம்பு, வழக்குன்னு இல்லாம ஏதோ வாழ்க்கை போயிட்டிருக்கு... என்னால முடியக் கூடிய வேலைதானான்னு நான் தெரிஞ்சுக்கணும்...''

''உன்னால முடியும்ங்கறதுனாலதான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். உன்னால மட்டும்தான் முடியும்ங்கறது என்னோட அபிப்ராயம்...''

''இந்த ஐஸ் வைக்கற வேலையெல்லாம் எனக்கு வேண்டாம்... சிக்கல் இல்லாத காரியம்ன்னா... நீ குடுக்கப் போற பெரும் தொகைக்காக நான் செய்வேன். மறுபடி என்னை ஏமாத்தணும்னு நினைச்சா... நான் பொல்லாதவளாயிடுவேன்...''

''என்னோட இந்த திட்டத்துக்கு சம்மதிக்கலைன்னாத்தான் நீ ஏமாளி...''

''சரி... சரி... நாளைக்கு நாம எங்கே சந்திக்கறோம்? இங்க... வீட்ல வேண்டாம்.''

''நாளைக்கு பீச்சுக்கு வந்துடு. அங்கே உட்கார்ந்து பேசலாம்.''

''மெரீனாதானே? கண்ணகி சிலைகிட்ட வந்துடறேன். மறுபடியும் சொல்றேன். பேசினதுல பாதி தொகையை முன் பணமா வாங்கிக்காம நான் எதுவும் செய்ய மாட்டேன்.''

''ரொம்பத்தான் கறாரா பேசற?! சரி... சரி... நாளைக்கு உன்னைப் பார்க்க வரும்போது பணத்தோட வர்றேன்.''

சுதாகர் வெளியேறினான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel