Lekha Books

A+ A A-

நீ எங்கே? என் அன்பே ! - Page 3

ஸ்பானரையும், ஸ்க்ரூ டிரைவரையும் பிடித்துக் கொண்டு கார் வர்க் ஷாப் முதலாளியிடம் அடியையும் வாங்கிக் கொண்டிருந்த பழைய சுப்பையன் இன்றைய சினிமா நட்சத்திரமாகிவிட்ட நிரஞ்சனின் நினைவிற்கு வந்தான். நினைவுகள் சுழன்றன.

“டேய் சுப்பையா, வேலைக்குப் போகலியா? மணி என்ன ஆச்சு பாரு. ஓகோ, துரை சினிமாவுக்கு புறப்பட்டாச்சாக்கும். ஏண்டா, வர்க் ஷாப்ல வேலை செஞ்சா சோத்துக்கு நாலு காசு கிடைக்கும். சினிமாவாடா சோறு போடப் போகுது?” பெரியம்மா கத்தினாள்.

“ஆமா, சினிமாதான் எனக்கு சோறு போடப் போகுது. நானும் ஒரு நாள் பெரிய ஸ்டாராகி, சோறு என்ன சோறு தினமும் பிரியாணியாவே சாப்பிடப் போறோம் பாரு, பெரியம்மா.”

“பேசாம மெட்ராசுக்கு போய் ஒரு ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தா என்ன? அங்க சினிமா ஆளுகளை பழக்கம் பண்ணி எப்படியாவது சினிமாவுல நடிக்கற சான்ஸ் வாங்க முடிஞ்சா...’ சிந்தனையின் முடிவில் தீவிரமானான். தாய், தந்தையை இழந்துவிட்ட அவனை வளர்த்து வரும் பெரியம்மாவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரயில் ஏறினான்.

ரயிலில், சக பிரயாணிகளின் இலவச ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அலட்சியப்படுத்தி சென்னை வந்து இறங்கினான். சிறுவனாகவும் இன்றி, வாலிபனாகவும் இன்றி இரண்டுங்கெட்டான் தோற்றத்தினால் வாய்ப்பு இன்றி பட்டினி கிடந்த நாட்கள் எத்தனை?

ஸ்டுடியோவிலேயே வேலைக்கு சேர்ந்து, அங்கே வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களிடமெல்லாம் வாய்ப்பு கேட்டு கெஞ்சினான். இரண்டு வருடங்களில் முழு வாலிபனாக பரிமளித்த நிரஞ்சனின் கனவுகள் நிறைவேறும் நாளும் வந்தது. அன்று குட்டியண்ணக் கவுண்டரின் கே.கே.பிலிம்ஸ் தயாரிக்கும் புதுப் படத்தின் பூஜை. சினிமா தயாரிப்பாளராகி, பெரும் பணமும், புகழும் சேர்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்தவர் குட்டியண்ண கவுண்டர். அவருடைய நல்ல நேரம். திறமையான இயக்குனர்களும், அபார திறமை உடையவர்களும் கிடைத்து, அவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி அடைந்தன. புகழும், பணமும் ஏராளமாய் சேர்ந்தது. அவர் அறிமுகப்படுத்தும் புதுமுகங்கள் வெகு வேகமாய் முதலிடத்தைப் பெறுவார்கள் என்ற சென்டிமென்டான நம்பிக்கை, படவுலகில் பரவலாக இருந்தது. அன்றைய டாப் ஹீரோ சுகுமாருக்காக மந்திரி உட்பட பிரபல பிரமுகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.

சுகுமாரின் வீட்டிற்கும் ஃபோன் கால்கள் பறந்தன. இதோ வருகிறார்; இதோ வருகிறார் என்ற பதில் வந்தும், அவன் வரவில்லை. அவனுடைய பணியாளர் ஒருவன் வந்தான். கவுண்டரின் அருகே சென்றான்.

“கவுண்டர் சார். சுகுமார் ஜலபானத்துல மிதந்துட்டிருக்காரு. அவருகிட்ட யாரும் நெருங்க முடியலை. எக்கச்சக்கமான போதை. தெளியட்டும். கூட்டிட்டு வரேன்.”

“அட போய்யா. மந்திரி வந்து காத்துக்கிட்டிருக்காரு; அவனுக்கு தெளிஞ்சு, நீ கூட்டுட்டு வந்து அதுக்கப்புறம் நான் பூஜை போடணுமாக்கும். கெட் அவுட்.” கவுண்டர் கத்திய கத்தலில் வந்தவன் தலை தெறிக்க வெளியே ஓடினான்.

பூஜைக்காக காத்திருந்த ஸ்டுடியோ ஊழியர்களுடன் முன்னால் நின்றுக் கொண்டிருந்த நிரஞ்சனைப் பார்த்தார் கவுண்டர்.

தன்னிடம் பல முறை வாய்ப்பு கேட்ட அந்த இளைஞனின் வசீகர முகத்தினால் கவரப்பட்டார். சுருள் சுருளான அடர்த்தியான தலைமுடி ஒரு தனிக் கவர்ச்சி அளித்தது. செதுக்கியது போன்று அமைந்திருந்த மூக்கு அவன் முகத்திற்கு அதிகப்படியான கம்பீரத்தைக் கொடுத்தது. பல வகையான உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய ஒளி பொருந்திய, தீர்க்கமான கண்கள் அவனுக்கு பெரிய ப்ளஸ் பாயின்ட்டாக இருந்தன.

“டைரக்டர் சார், இவனைப் பாருங்க. இவனையே ஹீரோவா போட்டுடலாம்னு நினைக்கிறேன். ஒரு டெஸ்ட் பாருங்க. இன்னிக்கே அடுத்த நல்ல நேரத்துல நம்ம திட்டப்படி பூஜையைப் போடறோம்; ஒரு சீன் எடுக்கறோம்.”

உறுதியாக வந்த கவுண்டரின் கட்டளைக்கு பணிந்து, நிரஞ்சனை மேக்கப் டெஸ்ட் செய்த இயக்குநர், அவனது நடிப்பாற்றலிலும் முழு திருப்தி அடைய, அன்றைய சுப்பையா, நிரஞ்சன் என பெயர் மாறினான். மிக விரைவில் தன் திறமையால் புகழ் ஏணியில் ஏறினான். நன்கு முன்னேறி, வசதிகள் கூடிய பின் சொந்த ஊர் சென்று, தன்னை வளர்த்த பெரியம்மாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டான்.

“நிரஞ்சன்,” பின்னால் இருந்து குரல் வந்தது. நினைவுகளில் இருந்து மீண்ட நிரஞ்சன் திரும்பினான். குட்டியண்ண கவுண்டர் புன் சிரிப்போடு நின்றிருந்தார்.

“வாங்க கவுண்டரே. வணக்கம். உட்காருங்க.”

“வணக்கம். பார்த்து ரொம்ப நாளாச்சு. ரொம்ப பிஸியாயிட்டீங்க.”

“ஆமா கவுண்டர். ஏகப்பட்ட படங்கள் ஒத்துக்கிட்டிருக்கேன்.”

“நிரஞ்சன், நானும் புதுசா படம் ஒண்ணு பண்ணலாம்னு கதை வாங்கி வச்சிருக்கேன். இயக்குநர் பல்லவராஜா சொன்ன கதை. ரொம்ப நல்லா இருக்கு. அடுத்த மாசம் ரெண்டாந்தேதில இருந்து அறுபது நாளைக்கு ஷெட்யூல் கூடப் போட்டாச்சு.”

“வெரி குட். ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள் கவுண்டர் சார்.”

“வாழ்த்துக்களோடு உங்க கால்ஷீட்டும் சேர்ந்து குடுத்தா நல்லது.”

“என்ன? அடுத்த மாசம் ஷெட்யூல்ங்கறீங்க. என்னோட கால்ஷீட் கேக்கறீங்க? ஸாரி கவுண்டர் ஸார்? நைன்ட்டி நைன் முடிய டேட்ஸ் குடுத்தாச்சே சார். என் பி.ஏ. சோமுவை கேக்கணும். இதோ சோமு வந்தாச்சே.”

சோமு நிரஞ்சனின் காரியதரிசி. உயரம் சத்யராஜ். உடற்பயிற்சியினால் உரமேறி இருந்த உடல்; இறுகிய முகம்; கொஞ்சமாய் பயமுறுத்தும் பார்வை. இதுதான் சோமு.

“சோமு கவுண்டர் புதுப்படம் ஆரம்பிக்கிறாராம்… என் கால்ஷீட் கேக்கறாரு.”

“கவுண்டர் சார், நிரஞ்சன் சாரோட கால்ஷீட் தொண்ணுத்தி ஒன்பது முடிய கிடைக்காது. இங்க பாருங்க டைரியை.”

“டைரி எல்லாம் பார்க்கணுங்கறது இல்லை. நீங்க மனசு வச்சா எனக்கு எப்படியாவது கால்ஷீட் குடுக்கலாம் நிரஞ்சன்.”

சோமுவைப் பொருட்படுத்தாமல் நிரஞ்சனிடம் தொடர்ந்தார் கவுண்டர்.

“சாரி சார். நான் என்ன வச்சுகிட்டா இல்லைங்கறேன். முன்னாடி கேட்டவங்களுக்கெல்லாம் கால்ஷீட் குடுத்துருக்கேன் சார்.”

“நீங்க முயற்சி பண்ணா உங்களால முடியும் நிரஞ்சன். இந்த கதையில வர்ற காரெக்டர் நீங்க செஞ்சாத்தான் நல்லா வரும். உங்களாலதான் முடியும்.”

“கவுண்டர் சார். ப்ளீஸ். நான் சொல்றேன்ல. டேட்ஸ் இல்லை சார்.”

“நீங்க கேக்கற தொகையை தர்றதுக்கு தயாரா இருக்கேன் நிரஞ்சன்.”

“சார். இப்போ ரேட் ஒரு பிரச்சனையே இல்லை. டேட் தான் பிரச்சனை. ரேட்டைக் கூட்டறதுக்காக நான் சும்மா சொல்றேன்னு நினைக்கறீங்க போலிருக்கு. டைரியையும் பார்க்க மாட்டேங்கறீங்க.”

“நீங்க மனசு வச்சா எனக்கு எப்படியாவது கால்ஷீட் குடுக்கலாம்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel