Logo

ஹவ் ஓல்ட் ஆர் யூ?

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4271
How Old Are You?

என்னை கவர்ந்த திரைப்படங்கள் -  சுரா (Sura)

ஹவ் ஓல்ட் ஆர் யூ? – How Old Are You?

(மலையாள திரைப்படம்)

நான் சமீபத்தில் பார்த்து வியந்த மலையாள திரைப்படம் 'ஹவ் ஓல்ட் ஆர்  யூ?' நடிகர் திலீப்பிடமிருந்து குடும்ப வாழ்க்கையில் பிரிந்த பிறகு, மஞ்சு வாரியர் நடித்த படம். அதனால் இந்த படத்திற்கு ஆரம் பத்திலிருந்தே ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை நூறு சதவிகிதம் சந்தோஷப்படும் அளவிற்கு நிறைவேற்றி தந்திருக்கிறார் படத்தின் இயக்குநரான ரோஷன் ஆன்ட்ரூஸ்.

பரபரப்பாக பேசப்பட்ட அப்படத்தின் கதைதான் என்ன? கதை இதோ:

நிருபமா ராஜீவ் ஒரு குடும்பத் தலைவி.  36 வயதான அவள் வருவாய் துறை அலுவலகத்தில் ஒரு க்ளார்க்காக பணியாற்றுகிறாள். அவளுடைய கணவன் ராஜீவ் நாராயணன் 'ஆகாஷ் வாணி'யில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறான். அவர்களுக்கு ஒரு மகள். அவள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். ராஜீவிற்கு அயர்லேண்டிற்குச் சென்று செட்டிலாகி விட வேண்டும் என்பது பல வருட ஆசை. அவனுக்கும் மகளுக்கும் விசா கிடைத்து விடிகிறது.  நிருபமாவிற்கு எவ்வளவோ முயற்சி செய்தும், விசா கிடைக்கவில்லை. அவளின் வயது ஒரு காரணம்.  இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்திய குடியரசு தலைவர் கலந்து கொண்ட ஒரு அரசு விழாவில், அவருக்கு முன்னால் பதட்டத்தின் காரணமாக அவள் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறாள். அந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகி விடுகிறது. அன்றிலிருந்தே எல்லோருக்கும் அவள் கேலிப் பொருளாக ஆகி விடுகிறாள்.

விசா கிடைக்காத காரணத்தால், அவளுடைய கணவனும், மகளும் மட்டும் அயர்லேண்டிற்கு கிளம்பி விடுகின்றனர்.

ஒரு சாதாரண பெண்ணாக அலுவலகத்திற்கு போய் வந்து கொண்டிருக்கிறாள் நிருபமா.

இந்தச் சூழ்நிலையில் அவளை ஒருநாள் சிறிதும் எதிர்பாராமல் சந்திக்கிறாள் அவளுடைய தோழியும், அவளுடன் ஒரு காலத்தில் சேர்ந்து படித்தவளுமான சூசன் டேவிட். அவள் ஒரு தொழிலதிபராக இருக்கிறாள். நிருபமாவின் இப்போதைய சராசரி தோற்றத்தையும், சுறுசுறுப்பற்ற போக்கையும் பார்த்து அவள் மிகவும் ஆச்சரியப்படுகிறாள். ஒரு காலத்தில் கல்லூரியில் மிகச் சிறந்த மாணவியாகவும், பல நல்ல விஷயங்களுக்காக போராடியவளாகவும், பலரின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்த அந்த நிருபமாவா இவள் என்று அவள் வியப்புடன் நினைக்கிறாள். தான் மனதில் நினைப்பதை அவளிடம் வெளியிடவும் செய்கிறாள். திருமண வாழ்க்கை அவளை எந்த அளவிற்கு கோழையாகவும், தன்னம்பிக்கையற்றவளாகவும் மாற்றி விட்டிருக்கிறது என்பதை நினைக்கிறாள். அவளை தான் பார்த்த பழைய நிருபமாவாக அவள் மாற்ற முயற்சிக்கிறாள்.

இதற்கிடையில் தன் வீட்டின் மொட்டை மாடியில் தான் இது வரை இயற்கை உரங்களைப் போட்டு 'ஆர்கானிக்' முறையில் வளர்த்த காய்கறி தோட்டத்தை அழிக்க நினைக்கிறாள் நிருபமா. தான் இனிமேல் அதை கவனிக்க முடியாது என்பதே காரணம். அங்கிருந்த காய்கறிகளைப் பறித்து அவள் தனக்கு தெரிந்த ஒரு வேலைக்காரப் பெண்ணிடம் தருகிறாள். அந்தப் பெண் அவற்றைக் கொண்டு போய் தான் வேலை செய்யும் வீட்டில் கொடுக்க, அந்த வீட்டின் உரிமையாளர்  காய்கறியின் சுவையைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து விடுகிறார். அந்த காய்கறிகளைப் பயிரிட்டு உருவாக்கிய நிருபமாவை வர வைக்கிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் தன் மகனின் திருமணத்தின் விருந்தின்போது தேவைப்படும் காய்கறிகள் முழுவதையும் சப்ளை செய்ய முடியுமா என்று அவளிடம் அவர் கேட்கிறார். அதுவும் 2000 பேருக்கு. ஏதோ ஒரு நம்பிக்கையில் சரி என்று தலையை ஆட்டி விடுகிறாள் நிருபமா. சிறிய அளவில் தன் வீட்டு தேவைக்கென காய்கறி பயிரிட்டுக் கொண்டிருந்த அவள் 2000 பேருக்கு தேவைப்படும் காய்கறிகளை எப்படி உருவாக்குவாள்?அதற்கான நிலத்திற்கு எங்கே போவது?


தன் வீட்டின் அருகில் இருக்கும் எல்லா வீட்டுக்காரர்களையும் பார்த்து பேசுகிறாள். அனைத்து வீடுகளின் மொட்டை மாடிகளையும் காய்கறி வளர்க்க தான் திட்டமிட்டிருப்பதாகவும், அதன் மூலம் எல்லோருக்கும் வருமானம் கிடைக்குமென்றும், அவர்கள் எதுவுமே செலவழிக்க தேவையில்லை என்றும், செலவு முழுவதையும் தான் பார்த்துக் கொள்வதாகவும், வெறுமனே இடத்தைக் கொடுத்தால் மட்டும் போதுமென்றும் நிருபமா கூறுகிறாள். அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

அடுத்து அவள் வங்கியை அணுகுகிறாள். விவசாயம் செய்வதற்கு கடன் தரும்படி  கேட்கிறாள். அதற்கு உறுதுணையாக இருக்கிறாள் அவளுடைய தோழி சூசன். 'லோன்'கிடைக்கிறது. பிறகென்ன?மொட்டை மாடிகளில் 'ஆர்கானிக்' முறையில் காய்கறிகள் வளர்க்கப் படுகின்றன. மாநில அரசாங்கத்தின் தலைமை பீடம் வரை இந்தச் செய்தி போய் சேர்கிறது. விவசாயம் சம்பந்தமாக அரசு நடத்தும் கருத்தரங்கமொன்றில், சூசனின் சிபாரிசில் இயற்கை விவசாயம் பற்றி உரையாற்றுவதற்கான வாய்ப்பு நிருபமாவிற்கு கிடைக்கிறது. அவளின் உரையைக் கேட்டு அமைச்சரும், அதிகாரிகளும் அசந்து போய், தங்களை மறந்து கைத் தட்டுகின்றனர். அந்த நிகழ்ச்சியின் நட்சத்திரமாக ஆகிறாள் நிருபமா. அதைத் தொடர்ந்து இயற்கை வேளாண்மை அமைப்பின் தலைவராக அவள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறாள். திறமைசாலியான தன் தோழிக்கு இப்போது கிடைத்திருக்கும் கவுரவத்தைப் பார்த்து மனதிற்குள் பூரிப்படைகிறாள் சூசன்.

தான் வாக்களித்தபடி 2000 பேர் திருமண விருந்தில் சாப்பிடுவதற்கு தேவைப்படும் காய்கறிகளை முழுமையாக சப்ளை செய்கிறாள் நிருபமா. அவளைப் பார்த்து கேரள மாநிலமே ஆச்சரியப்படுகிறது. ஒரு குடும்பப் பெண்ணிற்குள் இப்படியொரு புரட்சிகர சிந்தனையா என்று எல்லோரும் அவளைப் பற்றி வியப்புடன் பேசிக் கொள்கின்றனர். பத்திரிகைகள் அவளைப் பாராட்டி கட்டுரைகள் எழுதுகின்றன.

அவளைப் பற்றிய செய்தி இந்திய குடியரசுத் தலைவர் வரை போய் சேர்கிறது. அந்த புதுமைப் பெண்ணை தான்  அளிக்கும் தனிப்பட்ட விருந்திற்கு அழைக்கிறார் குடியரசுத் தலைவர். இதற்கிடையில் நிருபமாவின் கணவனும், மகளும் அவளைப் பார்க்க வந்திருக்கின்றனர். தான் சாதாரணமாக நினைத்து பல நேரங்களில் மட்டம் தட்டிப் பேசிய தன் மனைவி இப்படியொரு திறமைசாலியா என்று அண்ணாந்து பார்க்கிறான் அவளுடைய கணவன்.

டில்லி குடியரசுத் தலைவரின் மாளிகை. அரண்மனை போன்ற அந்த வீட்டில் 'ஆர்கானிக் வேளாண்மை'யின் பெருமையைச் செயல் வடிவில் காட்டிய நிருபமாவிற்கு குடியரசுத் தலைவர் தனிப்பட்ட முறையில் விருந்தளிக்க,  அதில் தன் கணவனுடனும், மகளுடனும் கலந்து கொள்கிறாள் நிருபமா. இரண்டு வருடங்களுக்கு முன்பு, தன்னைப் பார்த்து பயந்து போய் மயக்கமடைந்து கீழே விழுந்த அந்த பெண்ணா இவள் என்று ஆச்சரியத்துடனும், மதிப்புடனும் பார்க்கிறார் குடியரசுத் தலைவர். நிருபமா கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் எல்லா தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பப் படுகிறது. இந்தியாவின் பல கோடி மக்களும் தொலைக் காட்சிகளில் நிருபமாவை பெருமையுடனும், மரியாதையுடனும் பார்க்கின்றனர். குடியரசுத் தலைவரின் மாளிகையிலிருந்து அரசு அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் மரியாதையுடன் விடை கொடுக்க,  அரசு வாகனத்தில் தன் கணவனுடனும், மகளுடனும் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் பயணிக்கிறாள் நிருபமா.

நிருபமாவாகவே வாழ்ந்திருக்கிறார் மஞ்சு வாரியர். நிருபமாவின் கணவனாக-குஞ்சாக்கோ போபன். நிருபமாவின் தோழி சூசனாக-கனிகா.

இசை: கோபி சுந்தர். டைட்டில் பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார்.

அருமையான ஒரு படத்தை இயக்கியதற்காகவும், பயனுள்ள ஒரு செய்தியை படத்தின் மூலம் கூறியதற்காகவும் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸுக்கு பூச்செண்டும், பாராட்டும். 

இந்த நிருபமா கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்கப் போகிறவர்... ஜோதிகா. 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.