Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஸ்ட்ரே டாக்ஸ்

Stray Dogs

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

Stray Dogs - ஸ்ட்ரே டாக்ஸ்

(ஈரானிய திரைப்படம்)

2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம்.

சில திரைப்படங்களை பார்த்த சில நிமிடங்களில் மறந்து விடுவோம். சிலவற்றை சில நாட்கள் மறக்காமல் இருப்போம். ஒரு சில படங்கள்தாம் எத்தனை வருடங்கள் ஆனாலும், நம் மனதை விட்டு சிறிதும் மறையாமல், சாகா வரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் இது.

இப்படத்தின் இயக்குனர் Marziyeh Meshkini. பல அருமையான திரைப்படங்களை இயக்கி, உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஈரானிய திரைப்பட இயக்குனர் Mohsen Makmalbaf  இன் மனைவி இவர். 2000ஆம் ஆண்டில்  ‘The Day I Became a woman’   என்ற சிறந்த படத்தை இயக்கிய Marziyeh Meshkini  இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் ‘Stray Dogs’.

2004ஆம் ஆண்டில் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க ஆஃப்கானிஸ்தானில் படமாக்கப்பட்டது. போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, வீதிக்கு வந்த ஒரு இளம் வயது ஏழை சிறுவனையும் அவனுடைய ஐந்து வயது தங்கையையும் பற்றிய கண்ணீரை வரவழைக்கும் கதை இது.

இப்படத்தைப் பார்த்தபோது, பல இடங்களில் என்னை மறந்து என் கண்களில் கண்ணீர் அரும்பியது. இதில் வரும் அந்த ஏழை சிறுவனுக்காகவும் சிறுமிக்காகவும் என் மனதில் பரிதாப உணர்ச்சி தோன்றியது. இரக்கமற்ற போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, எந்த விதமான ஆதரவும் இல்லாமல் இதைப் போல தெருக்களில் எத்தனைக் கோடி சிறுவர்களும் சிறுமிகளும் அனாதைகளாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தபோது, மனதில் இனம் புதியாத கனமும், கவலையும் உண்டாயின.

இத்தகைய பாதிப்பிற்கு என்னை ஆளாக்கிய ‘Stray Dogs’ படத்தின் கதைதான் என்ன?

ஆஃப்கானிஸ்தானின் காபுல் நகரத்தின் ஒரு புறப் பகுதியில் ஆழமான குழியொன்று இருக்கிறது.  அதற்குள் ஒரு சிறிய நாய் இருக்கிறது. அதன் மேற்பகுதியில் தீப் பந்தங்களுடன் பத்து சிறுவர்கள் நின்று கொண்டு, அப்பந்தங்களை காட்டிக் கொண்டும், குழிக்குள் போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில்தான் சிறுவன் Zahedம் சிறுமி GolGhotaiயும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இருவர் மட்டும் தனியாக கீழே வருகிறார்கள். கீழே ஒரு பாதை இருக்கிறது. அதன் வழியே நுழைந்து, நெருப்புக்கு பயந்து நடுங்கியவாறு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அந்த அழகான சிறிய வெள்ளை நிற நாயை அவர்கள் வெளியே எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் நாயைத் தூக்கிக் கொண்டு வருவது, மேலே நின்று கொண்டிருக்கும் சிறுவர்களின் கண்களில் படவில்லை.

சிறுமி GolGhotai நாயை இரக்கத்துடன் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க, அவளுடன் சேர்ந்து நடக்கிறான் அவளுடைய அன்பு அண்ணன் Zahed. இதுதான் ‘Stray Dogs’ படத்தின் முதல் காட்சி.

அடுத்த காட்சியில் பரட்டைத் தலையுடனும், அழுக்கு படிந்த ஆடைகளுடனும், வெறும் கால்களுடனும், ஏழை கோலத்துடனும் இருக்கும் அந்தச் சிறுவனும் சிறுமியும் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு பழைய கட்டிடத்திற்கு முன்னால் வந்து நிற்கிறார்கள். அந்த கட்டிடத்தின் இரும்பால் ஆன வெளிக் கதவு மூடப்பட்டிருக்கிறது. வெளியே நின்று, அவர்கள் அந்தக் கதவின் தாழ்ப்பாளைக் கொண்டு தட்டுகிறார்கள். காவலாளி ஒருவன் வெளியே வருகிறான். அவர்களைப் பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்கிறான். சிறுவனும் சிறுமியும் ‘உள்ளே எங்களின் அம்மா இருக்கிறார்கள். நாங்கள் உள்ளே போக வேண்டும்’ என்று கூறுகிறார்கள். சிறுமியின் கையில் இருக்கும் நாயைப் பார்த்த காவலாளி ‘நாயை உள்ளே அனுமதிக்க முடியாது’ என்கிறான். அதற்கு அந்தச் சிறுமி ‘இந்த நாயை வெளியே விட்டால், குளிரில் நடுங்கி அது இறந்து விடும். அதனால் தயவு செய்து, இதை அனுமதியுங்கள்’ என்கிறாள். அது சரியாகப் படவே, காவலாளி நாயையும் உள்ளே செல்ல அனுமதிக்கிறான். சிறுவனும், சிறுமியும் நாயுடன் உள்ளே நுழைகிறார்கள்.

அப்போதுதான் அது ஒரு சிறைச்சாலை என்பதே நமக்கு தெரிய வருகிறது. அந்தச் சிறார்களின் அன்னை உள்ளே அடைக்கப்பட்டிருக்கிறாள். அவளையும் சேர்த்து, அங்கு மேலும் பல பெண்கள் கைதிகளாக இருக்கிறார்கள். தங்களின் அன்பு அன்னையுடன், அவள் பெற்ற அந்த பிள்ளைகள் போய் இணைகிறார்கள்.

அன்னைக்கு அருகில் சிறுவனும், சிறுமியும் படுத்துக் கொள்கிறார்கள். தன்னுடன் நாயையையும் இறுக பற்றிக் கொண்டு படுக்க வைத்திருக்கிறாள் சிறுமி. அவர்களுக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு ஏழை பெண் தன் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். இதைப் போல மேலும் பல பெண்கள் கைதிகளாக அங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த சிறுவன், சிறுமி ஆகியோரின் தாய் தன் பிள்ளைகளுடன் படுத்துக் கொண்டே பேசுகிறாள். ‘நாளைக்கு சிறையிலிருக்கும் உன் அப்பாவிடம் நான் கூறுவதை அப்படியே போய் கூறுவாயா?’ என்று கேட்க, சிறுமி ‘சரி’ என்கிறாள். உடனே அந்த தாய் ‘நான் சொல்வதை, சிறிதும் மாறாமல் உன் அப்பாவிடம் சொல்லு. நான் இல்லாதப்போ, எப்படி உன் அம்மா இன்னொரு ஆளை திருமணம் செய்யலாம்னு கேட்பாரு. அதற்கு நீ சொல்லு நீங்க தலிபானாக மாறி போருக்குப் போய் ஐந்து வருடங்கள் ஆன பிறகும், நீங்க திரும்பி வரவே இல்லை. உங்களைப் பற்றி எந்தவிதமான தகவலும் இல்லை. நீங்க போர்ல இறந்துவிட்டீங்கன்னு நினைச்சு, அதற்குப் பிறகுதான் அம்மா இன்னொரு ஆளை கல்யாணம் பண்ணினாங்க. ஆனால், இந்த விஷயம் தெரிஞ்சதும், நீங்க அம்மாவைப் பற்றி ‘மோசமான பெண்ணு’ன்னும் ‘கெட்ட நடத்தை உள்ளவள்’னும், ‘விபச்சாரி’ன்னும் அரசாங்கத்துல புகார் பண்ணிட்டீங்க. எங்களைக் காப்பாத்துறதுக்கு வேறு வழி இல்லாமலும், நாங்க பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காகவும், நீங்க இனி வரப் போறது இல்லைன்னு உறுதியா தெரிஞ்ச பிறகும்தான் அம்மா அந்த இன்னொரு திருமணம் செய்யவே முடிவு செஞ்சாங்க. ஆனால், இது எதுவுமே தெரியாமல் நீங்கள் புகார் செய்ய, அரசாங்கம் ‘நடத்தை கெட்டவள்’னு முடிவு செஞ்சு அம்மாவை சிறைக்குள்ளே அடைச்சுடுச்சு. அம்மா சிறையில கிடக்க, நானும் அண்ணனும் படுக்க இடம் இல்லாமல் தவிச்சிக்கிட்டு இருக்கோம். பகல் முழுவதும் எங்கெல்லாமோ அலைஞ்சு, கையில் கோணியை வச்சுக்கிட்டு பழைய பேப்பர்களையும், கண்ட கண்ட பொருட்களையும் பொறுக்குறோம். அவற்றைக் கொண்டு போய் காயலான் கடையில போட்டு, கிடைக்கிற காசுல ரொட்டியோ பன்னோ வாங்கி சாப்பிடுறோம்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version