Lekha Books

A+ A A-

தி மிரர்

The mirror

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

The mirror - தி மிரர்

(ஈரானிய திரைப்படம்)

ரு பள்ளிக் கூடம் செல்லும் சிறுமியை மைய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 1997ஆம் ஆண்டில் திரைக்கு வந்து பல விருதுகளையும் அள்ளிச் சென்றது.

Jafar Panahi இயக்கிய இந்தப் படம், மாறுபட்ட திரைப் படங்களை வரவேற்பவர்கள் மத்தியில் இப்போதும் கூட தலையில் வைத்து கொண்டாடப்படுகிறது.

படத்தைப் பார்க்கும்போது இப்படியெல்லாம் கூட ஒரே ஒரு சிறுமியை மட்டுமே நம்பி ஒரு அருமையான திரைப்படத்தை உருவாக்க முடியுமா என்ற கேள்வி எல்லோரின் மனங்களிலும் உண்டாகும். மாறுபட்ட ஒரு கதைக் கரு இருந்து, அதற்கு அருமையான திரைக்கதை அமைத்து, அதை சீராக படமாக்கி விட்டாலே, ஒரு படம் மிகச் சிறந்த திரைப்படமாகி விடும் என்பதற்கு சரியான உதாரணம்- ‘The mirror’தான்.

உலகமெங்கும் பாராட்டப்பட்டு, உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதைதான் என்ன?

மினா பள்ளிக் கூடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி. பள்ளிக் கூடம் முடிந்து விட்டது. எல்லா மாணவிகளையும் அவரவர்களுடைய பெற்றோர் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். எப்போதும் உரிய நேரத்திற்கு வந்து சேரக் கூடிய மினாவின் தாய் அவளை அழைத்துச் செல்வதற்கு இன்னும் வரவில்லை.

மினா பள்ளிக் கூடத்தின் வாசலில் தன் அன்னையை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறாள். அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் கிட்டத்தட்ட அங்கிருந்து போய் விட்டனர். மினா மட்டும்தான் அங்கு நின்று கொண்டிருக்கிறாள். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் கூட அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் மினாவின் தாய் வரவில்லை. பள்ளிக் கூடத்திற்கு முன்னால் இருக்கும் சாலை மிகவும் பரபரப்பாக இருக்கிறது. வாகனங்கள் ஏராளமாக சாலையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. பேருந்துகள், கார்கள், ஜீப்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கன், சைக்கிள்கள்... அவற்றில் ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... எல்லாவற்றையும் வெறித்து பார்த்துக் கொண்டே பள்ளிக் கூடத்தின் வாசலில் நின்றிருக்கிறாள் மினா.

மினாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எப்போதும் சரியான நேரத்திற்கு வந்து தன்னை அழைத்துச் செல்லும் தன்னுடைய தாய் இன்று ஏன் வரவில்லை என்ற காரணம் தெரியாமல் அவள் தவிக்கிறாள். அவளுக்கு அழுகை அழுகையாக வருகிறது. எனினும், அதை அடக்கிக் கொண்டு பரிதாபமாக அவள் நின்று கொண்டிருக்கிறாள்.

பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் அவளின் ஒரு கையில் பெரிய கட்டு போடப்பட்டிருக்கிறது. கை மடக்கி கட்டு போடப்பட்டு, அதன் நுணி அவளுடைய கழுத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கையை மடக்கி வைத்திருக்கும் அவள் இன்னொரு கையில் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கூட பையை வைத்திருக்கிறாள்.

நேரம் கடந்து கொண்டிருக்கிறது. டெஹ்ரான் நகரம் சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும், சத்தங்களுடனும், ஆரவாரங்களுடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் தன் அன்னைக்காக காத்திருப்பது சரியாக இருக்காது என்று நினைக்கும் மினா, அங்கிருந்து கிளம்புவது என்று தீர்மானிக்கிறாள்.

சாலையைக் கடப்பதற்காக நிற்கிறாள். சிவப்பு விளக்கு மாற்றப்பட்டு, பச்சை விளக்கு எரிகிறது. வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சாலையைக் கடப்பதற்காக நிற்பவர்கள் மிகவும் வேகமாக சாலையைக் கடக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து ‘நம் செல்லக் குட்டி’ மினாவும் சாலையைக் கடக்கிறாள்.

சாலையின் ஓரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மனதுடன் நின்றிருக்கிறாள் மினா. பரிதாபமான முகத்துடன் அழாத குறையாக நின்று கொண்டிருக்கும் அந்தச் சிறுமியைப் பார்க்கிறார் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் ஒரு மனிதர். தன்னை ‘ஜெனரல்’ என்று பெருமையாக அழைத்துக் கொள்ளும் அவர், அந்தச் சிறுமியை தன் வண்டியில் ஏறிக் கொள்ளும்படி கூறுகிறார். பேந்த பேந்த விழித்துக் கொண்டு, சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களைப் பார்த்தவாறு அந்த வண்டியில் பயணிக்கிறாள் மினா.

குறிப்பிட்ட தூரம் பயணம் செய்த பிறகு, அந்த வண்டி ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறது. மினா மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.

அதற்குப் பிறகு எதுவுமே தெரியாமல், கண்ணில் பார்க்கும் பேருந்து ஒவ்வொன்றிலும் அவள் ஏறுகிறாள், இறங்குகிறாள். இப்படியே பல பேருந்துகள்... எந்த பேருந்தாக இருந்தாலும், அது தன்னைத் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு போய் சேர்க்கும் என்ற நினைப்பு அவளுக்கு.

பயணத்தின்போது, அவளுக்கு பல வகையான அனுபவங்கள் உண்டாகின்றன. அவளைப் பார்க்கும் எல்லோரும் அவளைப் பார்த்து பரிதாபப்படுகின்றனர். அவளிடம் இரக்கம் கொள்கின்றனர். அவளின் நிலைமையைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகின்றனர். தங்களால் முடிந்த அளவிற்கு அவளுக்கு உதவுவதற்கு முன் வருகின்றனர்.

ஒரு பேருந்தில் அவள் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. கட்டுப் போட்ட கையுடன், பள்ளிக்கூட பையை வைத்துக் கொண்டு அவள் நிற்கிறாள். இப்படியே அவள் நீண்ட தூரம் கால் கடுக்க நிற்க வேண்டியதிருக்கிறது. அப்படி பயணம் செய்யும்போது, சுற்றிலும் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் பயணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் அவள் பார்க்கிறாள். பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும், அவர்கள் எப்படி பேசுகிறார்கள், எப்படி பயணிகளிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதையும்.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்திலிருந்து பலர் கீழே இறங்குகிறார்கள்... புதிதாக சிலர் பேருந்திற்குள் ஏறுகின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனிக்கிறாள் மினா. அவர்கள் உரையாடுவதை அவள் மிகவும் கவனம் செலுத்தி கேட்கிறாள். அதன்மூலம் டெஹ்ரானில் வாழும் மக்கள், அவர்களின் வாழ்க்கை. அவர்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள். கனவுகள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள் அனைத்தும் காட்டப்படுகின்றன.

இப்படி எவ்வளவு நேரத்திற்குத்தான் ‘நம்ம பொண்ணு’ கால் வலிக்க பேருந்தில் நின்று கொண்டு, சிரமம் நிறைந்த பயணத்தை மேற்கொண்டு போவாள்’ என்று கவலையுடனும் பதைபதைப்புடனும் நாம் மினாவை கண்ணீர் மல்க பார்க்கும்போது, அவள் இந்தப் பக்கமாக திரும்புகிறாள்.

அப்போது, ‘மினா, கேமராவைப் பார்க்காதே!’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்கிறது. அதைத் தொடர்ந்து, மினா போலியாக கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்தெறிகிறாள். ‘இதற்கு மேல் நான் நடிக்க மாட்டேன். நான் வீட்டிற்குப் போகணும்’ என்று கூறியவாறு பேருந்தை விட்டு இறங்கி, வேகமாக நடக்கிறாள்.

இப்போதுதான் நமக்கே தெரிகிறது - இதுவரை நடந்தது படப்பிடிப்பு என்று. தங்களுடைய ‘குழந்தை நட்சத்திரம்’ முக்கால்வாசி படத்தின்போது ‘இனி நடிக்க மாட்டேன்’ என்று சொன்னால், அப்படத்தின் இயக்குனர் அதிர்ச்சியடைய மாட்டாரா?

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel