Logo

தி கிட்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6009
The Kid

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

The Kid - தி கிட்

(அமெரிக்க திரைப்படம்) 

1921ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பேசாத படம் (Silent Movie). இப்போது உலகமெங்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கலையுலக மேதை சார்லி சாப்ளின் எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்த படம். சாப்ளின் இயக்கிய முதல் முழு நீள திரைப் படம் இதுதான். திரைக்கு வந்தபோது, மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று, பணத்தை வாரி குவித்த படம்.

வருடங்கள் எவ்வளவோ கடந்தோடிய பிறகும் இந்தப் படம் திரைப்பட ரசிகர்களாலும், சார்லி சாப்ளினின் ரசிகர்களாலும் இப்போது கூட தலையில் வைத்து சந்தோஷத்துடன் கொண்டாடப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் - இந்தப் படத்தின் கதையும், அதில் இடம் பெற்ற அருமையான காட்சிகளும், மனதில் நிற்கக் கூடிய கலைஞர்களின் நடிப்புத் திறமையும்தான்.

‘The Kid’ அப்படி என்ன அருமையான கதையைக் கொண்டிருக்கிறது?

இன்னும் திருமணமாகாத நிலையில் இருக்கும் ஒரு பெண் தனக்கு புதிதாக பிறந்திருக்கும் மகனுடன், ஒரு தர்ம மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறாள்.

அந்த குழந்தையின் உண்மையான தந்தை ஒரு ஓவியன். அவன் அந்த பெண்ணின் புகைப் படத்துடன் உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு முன்னால் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அவன் கையில் வைத்திருந்த புகைப்படம் கை தவறி நெருப்பில் விழுகிறது. முதலில் அதை எடுத்தவன், பின்னர் என்ன நினைத்தானோ - அந்த புகைப் படத்தை நெருப்புக்குள்ளேயே போட்டு எரியச் செய்து விடுகிறான்.

குழந்தையின் தாய் தனக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தையை ஒரு விலை மதிப்புள்ள காரின் பின் இருக்கையில் அனாதையாக வைத்து விட்டு, ஓடி விட வேண்டும் என்று தீர்மானிக்கிறாள். குழந்தைக்கு அருகில் ஒரு சிறு குறிப்பை எழுதி வைக்கிறாள். ‘இந்த குழந்தையைப் பார்ப்பவர்கள், அதன் மீது அன்பு செலுத்தி வளருங்கள்’ என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால், வெறுமனே சாலையில் நின்றிருந்த அந்த காரை இரண்டு நபர்கள் திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள். திருடிச் சென்ற இருவரும் அந்த குழந்தையைப் பார்க்கிறார்கள். இது என்னடா புதிய பிரச்னை என்று தலையைப் பிய்த்துக் கொள்ளும் அவர்கள் அந்த குழந்தையை தெருவில் போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள்.

எந்தவிதமான வேலையும் இல்லாமல், ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஏழை மனிதன் அனாதையாக கிடக்கும் அந்த ஆண் குழந்தையைப் பார்க்கிறான். அந்த குழந்தையை தான் எடுக்க வேண்டுமா என்று ஆரம்பத்தில் தயங்கும் அவன், பின்னர் தன் மனதில் உண்டான ஈரத்தின் காரணமாக அந்த குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறான்.

தனக்கென்று உலகத்தில் யாருமே இல்லாத அந்த ஏழை மனிதன், ஒரு குழந்தை தனக்கு கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறான். அதை தன் சொந்தக் குழந்தையைப் போல வளர்க்கிறான். அதற்கு ஜான் என்று பெயர் வைக்கிறான். பலவித சிரமங்களுக்கு மத்தியில் அந்த ஆண் குழந்தையைப் பொக்கிஷத்தைப் போல பாதுகாத்து வளர்க்கிறான். அந்தச் சிறுவனும் அந்த மனிதனுடன் பசையைப் போல ஒட்டிக் கொள்கிறான். அந்த ஏழை மனிதனுக்கு அந்தச் சிறுவன்தான் உலகம். அந்தச் சிறுவனுக்கு அவன்தான் உலகம். வறுமையை அந்த இரு உயிர்களும் பங்கு போட்டு வாழ்கின்றன.

இப்படியே ஐந்து வருடங்கள் கடந்தோடி விடுகின்றன. சிறு சிறு சட்ட விரோதச் செயல்களையும், குற்றச் செயல்களையும் செய்துதான் அந்த ஏழை மனிதன் இதுவரை தன்னுடைய வாழ்க்கையை ஓட்டி வந்திருக்கிறான். இப்போது குற்றச் செயல்களில், அந்தச் சிறுவனும் துணையாக இருக்கிறான். அவன் ஏதாவது வீட்டின் கண்ணாடியின் மீது கல்லை விட்டெறிந்து உடைப்பான். அடுத்த சில நிமிடங்களில் அந்த கண்ணாடியை சீர் பண்ணுவதற்கு போய் நிற்பான் அந்த மனிதன். இப்படி பல கில்லாடித்தனமான வேலைகளைச் செய்து அந்த இருவரும் தங்களின் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் அந்தச் சிறுவனை தெருவில் அனாதையாக போட்டுச் சென்ற அவனுடைய தாய் மிகவும் வசதி படைத்த பெண்ணாக ஆகிறாள். தான் ஏழையாக இருந்தபோது, தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை தெருவில் சர்வசாதாரணமாக போட்டுவிட்டு வந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் அவள் தினமும் மனதிற்குள் குமைந்து கொண்டிருக்கிறாள். தன் செயலுக்காக அவள் உண்மையிலேயே வருத்தப்படுகிறாள். அந்த குற்ற உணர்ச்சியின் காரணமாக, அவள் பல தர்மச் செயல்களையும் செய்கிறாள். நிறைய ஏழைகளுக்கு அவள் உதவிக் கொண்டிருக்கிறாள். அதன் மூலம் தன் மனதை அவள் திருப்திப்படுத்திக் கொள்கிறாள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த பணக்காரப் பெண் அந்தச் சிறுவனை ஒரு இடத்தில் சந்திக்க நேர்கிறது. ஆனால், அவன்தான் தன்னுடைய மகன் என்று அவளுக்கு தெரியாது. அந்தப் பெண்தான் தன் தாய் என்று அந்தச் சிறுவனுக்கும் தெரியாது.

திடீரென்று அந்தச் சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. மருத்துவர் ஒருவர் அவனுக்கு சிகிச்சை செய்வதற்காக வருகிறார். அப்போதுதான் அவருக்கே தெரிகிறது - அந்தச் சிறுவனை வளர்த்துக் கொண்டிருக்கும் அந்த ஏழை மனிதன் அந்தச் சிறுவனின் உண்மையான தந்தை அல்ல என்ற உண்மை. அந்த மனிதன், தெருவில் கண்டெடுத்த குழந்தைக்கு அருகில் இருந்த எழுதப்பட்ட குறிப்பை மருத்துவரிடம் காட்டுகிறான்.

தான் பார்த்த அந்த விஷயத்தை பெரிய அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்கிறார் மருத்துவர். இரண்டு மனிதர்கள் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்று அனாதை இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று வருகிறார்கள். சிறுவனைத் தருவதற்கு மறுக்கிறான் அந்த ஏழை ஊர் சுற்றி மனிதன். அவனிடமிருந்து பலவந்தமாக பிடுங்கி, சிறுவனை அழைத்துச் செல்கிறார்கள் அவர்கள். தான் வளர்த்த பையனை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு மனமில்லாத அந்த மனிதன், அவர்களை விரட்டிச் செல்கிறான். அவன் விரட்ட... அவர்கள் தப்பித்துச் செல்ல... அவன் விரட்ட... இறுதியில் சிறுவன், அவனுக்கே கிடைக்கிறான்.


அந்த பணக்காரப் பெண் சிறுவன் எப்படி இருக்கிறான் என்பதை பார்ப்பதற்காக வருகிறாள். நடந்த விஷயங்களை மருத்துவர் அவளிடம் கூறுகிறார். அவள் எழுதிய அந்த வரிகளை அவளிடமே காட்டுகிறார் அவர். அவ்வளவுதான். ஒரே நேரத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும், ஆனந்தமும் அவளுக்கு உண்டாகின்றன. அந்த ஏழை சிறுவன் தனக்குப் பிறந்த தன் செல்ல மகன்தான் என்பதை அவள் புரிந்து கொள்கிறாள்.

அந்த ஏழை மனிதனும் ஏழை சிறுவனும் ஒரு கட்டிடத்தில் அன்று இரவு தங்குகிறார்கள். அந்தச் சிறுவன் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கொண்டிருக்கும் பணக்காரப் பெண், சிறுவனை கண்டு பிடித்து தருபவர்களுக்கு 1000 டாலர்கள் பரிசாக தருவதாக கூறியிருப்பதை, அந்த கட்டிடத்தின் மேலாளர் படிக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் அந்தச் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கு அந்த பணக்காரப் பெண் வரவழைக்கப்பட்டு, அவளுடன் சேர்கிறான் சிறுவன். பல வருடங்களுக்குப் பிறகு அன்னையும் மகனும் ஒன்று சேர்கிறார்கள்.

அந்த ஏழை மனிதன் கண் விழித்து, பையனைத் தேடுகிறான். அவன் அங்கு இல்லாமற் போகவே, தூக்கக் கலக்கத்திலேயே தன்னுடைய பழைய, சிறிய வீட்டை நோக்கி வருகிறான். கதவுக்கு வெளியே அமர்ந்து அவன் கனவில் மூழ்குகிறான். அவன் காணும் கனவில் தேவதைகள், பேய்கள் அனைவரும் வருகிறார்கள். கனவு முடிய, அவனை ஒரு போலீஸ்காரர் தட்டி எழுப்புகிறார். ஒரு காரில் அவனை அமரச் செய்து, அவரும் உள்ளே உட்காருகிறார். கார் ஒரு மிகப் பெரிய வீட்டை நோக்கி விரைகிறது. அந்த வீட்டின் கதவுகள் திறக்கப்பட, பணக்காரப் பெண்ணும் சிறுவன் ஜானும் அங்கு நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த ஏழை மனிதனைப் பார்த்ததும், ஓடி வந்து தொற்றிக் கொள்கிறான் சிறுவன். அந்த மனிதனோ பாசத்துடன் சிறுவனை அணைத்துக் கொள்கிறான். சிறிது நேரம் பிரிந்திருந்த அந்த வளர்ப்புத் தந்தையும், வளர்ப்பு மகனும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். போலீஸ்காரர் அந்த ஏழை மனிதனின் கையைக் குலுக்கி பாராட்டி விட்டு, அங்கிருந்து கிளம்புகிறார். தான் வீதியில் விட்டெறிந்து விட்டுப் போன தன் அருமை மகனை, பலவித சிரமங்களுக்கு மத்தியில் பாசம் செலுத்தி வளர்த்த அந்த நல்ல மனம் கொண்ட ஏழை ஊர் சுற்றி மனிதனை தன் வீட்டிலேயே இனி இருக்கும்படி கேட்டுக் கொள்கிறாள் அந்த பணக்காரப் பெண். இதை சிறிதும் எதிர்பார்த்திராத அந்த ஏழை மனிதன் மனதில் முழுமையான சந்தோஷத்துடன், அவர்களுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைகிறான்.

இனி அவன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமும், குதூகலமும், உற்சாகமும்தானே! அந்த ஈரம் நிறைந்த இதயத்திற்கு இவை அனைத்தும் கிடைப்பது கூட நியாயமான ஒன்றுதானே!

வேலை எதுவுமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டும் கில்லாடித்தனங்கள் செய்தும் பிழைத்துக் கொண்டிருக்கும் ஏழை மனிதனாக- சார்லி சாப்ளின். வறுமையின் கொடும் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தாலும், எப்படியும் வாழ வேண்டும் என்ற வேட்கையுடன் வாழும் அந்த மனிதனை யாருக்குத்தான் பிடிக்காது?

சிறுவன் ஜானாக - Jackie Coogan. என்ன அபாரமான நடிப்பு! திரைப்படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், என்ன இயல்புத்தன்மையுடன், சர்வ சாதாரணமாக நடித்திருக்கிறான் பையன்!

பணக்காரப் பெண்ணாக.... சிறுவனின் அன்னையாக - Edna Purviance.

படத்தின் ஆரம்பத்திலேயே ‘A Picture with a smile – and perhaps, a tear’ என்ற வரிகளுடன் ஆரம்பமாகும். ‘The Kid’ உண்மையிலேயே புன்னகையும், கண்ணீரும் நிறைந்த ஒரு திரைப்படமே!

சார்ளி சாப்ளினும் இந்த படத்தில் வரும் சிறுவன் ஜானைப் போலவே, சிறு வயதில் பல கஷ்டங்களையும் அனுபவித்தவரே. படுக்க இடம் இல்லாமல், அணிவதற்கு ஆடை இல்லாமல், சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் தாங்க முடியாத வறுமையில் அவர் உழன்றிருக்கிறார். ‘The Kid’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டத்துடன் இருந்ததற்கு, சாப்ளின் தன் சொந்த வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களும் ஒரு காரணம்.

படத்தில் வரும் தெரு காட்சிகள் பலவும் லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள புகழ் பெற்ற Olvera Street இல் படமாக்கப்பட்டன.

1921இல் திரைக்கு வந்த இந்தப் படத்தில் வசனம் எதுவும் கிடையாது. 68 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தை 1971ஆம் ஆண்டில் சாப்ளின் எடிட் செய்து, மீண்டும் திரைக்கு கொண்டு வந்தார். அப்போது ஒரு புதிய இசையை அவரே சொந்தமாக ‘கம்போஸ்’செய்து சேர்த்திருந்தார்.

படத்தில் வரும் கனவு காட்சியில் தேவதையாக வந்த Lita Grey என்ற பெண் Charlie Chaplin இன் இரண்டாவது மனைவியாக 1924இலிருந்து 1927 வரை இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘Honorary Academy Award’ ஐப் பெறுவதற்காக சார்லி சாப்ளின் அமெரிக்காவிற்குத் திரும்பவும் வந்தார். அப்போது ஒரு காலத்தில் தன்னுடன் சிறுவன் ஜானாக நடித்து கலக்கிய Jackie Coogan ஐ, சாப்ளின் சந்தித்தார் (அடடா! எப்படிப்பட்ட சந்திப்பாக இருந்திருக்கும்! அந்த நாள் ஞாபகங்கள் அவர்களின் நெஞ்சங்களில் அலை மோதி ஆனந்த அனுபவத்தைக் கொடுத்திருக்குமே!).

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.