Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தி சாங்க் ஆஃப் ஸ்பேரோஸ் - Page 2

The Song Of Sparrows

இந்த வேலையை ஒரு தொழிலாக தானும் செய்யலாமே என்ற எண்ணம் அப்போது அவனுக்கு உண்டாகிறது. தொடர்ந்து அந்த புதிய வேலையில் அவன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான். பரபரப்பான சாலைகளில், பல வாகனங்களையும் முந்திக் கொண்டு ஆட்களை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு அவன் ‘மோட்டார் சைக்கிள் ஓட்டுன’ராக விரைகிறான். ஆனால், அவன் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களும், அவர்கள் தங்களுடன் கொண்டு செல்லும் பொருட்களும் கரீம் என்ற நேர்மையான மனிதனைச் சோதனைக்குள்ளாக்குவதாக இருக்கின்றன.

உண்மையான, தவறு செய்யாத மனிதனாக இருந்து கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த கரீம், அன்றாடம் மோட்டார் சைக்கிளில் ஆட்களையும் பொருட்களையும் ஏற்றி, கடுமையாக உழைத்து என்னதான் பணத்தைக் கொண்டு வந்தாலும், அதனால் மனதளவில் கவலைப்படுகின்றனர் அவனுடைய மனைவியும் மகள்களும். ஒவ்வொரு நாளும் அவன் பழைய பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வந்து தருகிறான். புதிது புதிதாக இதற்கு முன்பு பார்த்திராத பொருட்களைப் பார்க்க பார்க்க, அவனுடைய பேராசை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் பணம் சம்பாதிப்பதிலும், புதிய பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்ப்பதிலுமே அவனுடைய முழு கவனமும் இருக்கிறது. காலப் போக்கில் - தன்னுடைய மகளிடம் கொண்டு வந்து கொடுக்க வேண்டிய hearing aid ஐயே அவன் மறந்து விடுகிறான்.

ஒரு நேர்மையான… கோடு போட்டுக் கொண்டு, அதில் நடந்து போய்க் கொண்டிருந்த கரீம், டெஹ்ரானில் கிடைத்த புதிய வேலையாலும், அறிமுகமான புதிய மனிதர்களாலும், தினந்தோறும் பார்த்த வினோதமான புதிய பொருட்களாலும் பலவித மாறுதல்களுக்கு ஆளாகிறான்.

சிறிதும் எதிர்பார்த்திராத பல புதிய பிரச்னைகளையும் அவன் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. மனதில் முழு அமைதியுடன் இருந்தவனுக்கு தினந்தோறும் சந்திக்கக்கூடிய பிரச்னைகளும் திருப்பங்களும் ஆச்சரியம் தரக் கூடியவையாக இருக்கின்றன.

எல்லாவற்றையும் சந்தித்துக் கொண்டு, அனைத்து விஷயங்களுடனும் போராடிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் தன் கிராமத்திற்கு வந்து, ஏதோ சிந்தனையுடன் ஒரு திறந்த வெளியில் நடந்து போய்க் கொண்டிருக்க, என்றோ காணாமல் போன அந்த நெருப்புக் கோழி சற்று தூரத்தில் நடந்து போய்க் கொண்டிருக்கிறது.

காணாமல் போன நெருப்புக் கோழி மீண்டும் கிடைக்கிறது. அதை பண்ணைக்குள் கொண்டு வந்து அடைக்கிறான் கரீம். அதைத் தொடர்ந்து இடையில் காணாமல் போன மன அமைதியும் அவனுக்குக் கிடைக்கிறது.

எந்தவித பேராசையும் இல்லாமல், இயற்கையுடன் ஒன்றிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நல்ல மனிதன், தன் இயல்புப் பாதையில் மீண்டும் தன் வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கிறான்.

காணாமல் போன நெருப்புக் கோழி திரும்பவும் கிடைக்கும்போது, விண் அளவிற்கு சந்தோஷத்தில் திளைக்கும் கரீமுடன் நாமும் சேர்ந்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்குகிறோம்.

இந்தப் படத்தில் கரீமாக நடித்த Reza Naji சிறந்த நடிப்பிற்கான Asia Pacific Screen Awardஐப் பெற்றார். 81வது Academy Awardக்காக சிறந்த வேற்று மொழிப் படம் என்ற பிரிவில் பங்கு பெறுவதற்காக‘The song of Sparrows’ ஈரானின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டில் பெர்லினில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக Reza Naji தேர்ந்தெடுக்கப்பட்டு, Silver Bear விருதைப் பெற்றார்.

Majid Majidi இயக்கும் படம் என்றால், பார்த்து எவ்வளவு வருடங்கள் கடந்தாலும், அதை நம்மால் மறக்கவே முடியாது. அதே போல ‘The song of Sparrows’திரைப்படமும் நம் உள்ளங்களில் எப்போதும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும். Majid Majidiயும், கதாநாயகனாக நடித்த Reza Najiயும், நெருப்புக் கோழி பண்ணையும், நெருப்புக் கோழிகளும், அந்த கிராமமும், பரபரப்பான டெஹ்ரான் நகரமும், அதன் சாலைகளில் மிகவும் வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் வாகனங்களும், ஆட்களை கட்டணம் வாங்கிக் கொண்டு ஏற்றிக் கொண்டு செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களும்....

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version