Logo

மெயில் ரன்னர்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6666
mail runner

புதிய கிராம வளர்ச்சி திட்டங்கள் செயல்வடிவத்திற்கு வந்தபோது, வடக்கு வயநாட்டின் குத்தனூர் கிராமத்திலிருக்கும் கிளை அஞ்சல் அலுவலகம் ஒரு சப் அஞ்சல் அலுவலகமாக ஆனது. ஙஹண்ப் என்று எழுதப்பட்ட ஒரு சிவப்பு நிற அறிவிப்புப் பலகை நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த ஒரு பேருந்து அந்த கிராமத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது.

வழக்கம்போல அன்றும் காலையில் அஞ்சல் அட்டையைக் கொண்டு போவதற்காக வந்திருந்த மெயில் ரன்னர் ஒணக்கனைப் பார்த்து போஸ்ட் மாஸ்டர்ரைருக் குறுப்பு சொன்னார்: உன்னை வேலையிலிருந்து விலக்கியாச்சு. ஒரு மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு நீ இன்றே போகலாம். தலைமை அலுவலகத்திலிருந்து ஆர்டர் வந்திருக்கிறது.''

ஒணக்கனுக்கு எதுவும் புரியவில்லை. தொண்டைக் குழியில் அட்டை மாட்டிக் கொண்டதைப்போல வாயைத் திறந்து கொண்டு அவன் போஸ்ட் மாஸ்டரின் முகத்தையே பேந்தப் பேந்த பார்த்துக் கொண்டிருந்தான்.

டேய்... காதில் விழந்ததா? உன்னிடம்தான் சொன்னேன்.'' மாஸ்டர் உரத்த குரலில் கேட்கும்படி கூறினார்: இனிமேல் நீ இங்கு தேவையில்லை. இன்றிலிருந்து தபால் பையை மெயில் பேருந்தே கொண்டு போகப் போகிறது.''

ங்...'' ஒணக்கன் அதைக் காதில் வாங்கிக் கொண்டு மெதுவான குரலில் முனகினான். அட்டை அவனுடையை தொண்டைக் குழியில் மாட்டிக்கொண்டிருப்பதென்னவோ உண்மைதான். கழுத்தில் தாலி கட்டியிருக்கும் திருமணப் பெண்ணைப்போல உள்ளே மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அஞ்சல் பையையே பாசத்துடன் பார்த்துக் கொண்டே அதற்குப் பிறகும் அவன் அதே இடத்தில் நின்றிருந்தான்.

போஸ்ட் மாஸ்டர் அவனுடைய கையில் ஒரு துண்டு மஞ்சள் நிறத் தாளைத் தந்தார். தலைமை தபால் நிலையத்திலிருந்து வந்திருந்த ஆர்டர். தொடர்ந்து மாஸ்டர் ஒரு பெரிய புத்தகத்தை விரித்து வைத்து ஒணக்கனின் இடது கையைப் பிடித்து, பெருவிரலில் ஏதோ மையைப் புரட்டி, அந்தப் புத்தகத்தின் ஒரு மூலையில் அவனுடைய விரல் முத்திரையைப் பதியச் செய்தார். இரண்டு புதிய பத்து ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்தார்.

பிறகு எதுவும் பேசாமல் மாஸ்டர் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்.

அதற்குப் பிறகும் ஒணக்கான் அதே இடத்தில் நின்றிருந்தான். செய்வதற்கு எதுவும் இல்லை. தன்னுடைய இடது கை பெருவிரலையே அவன் வெறித்துப் பார்த்தான். பிறகு அந்த விரலை நெற்றியில் பதித்து ஒரு திலகத்தை வைத்தான். மஞ்சள் நிறத் துண்டுத்தாளை மடியில் சொருகி வைத்தான். நோட்டுகளைச் சற்று வாசனை பிடித்துப் பார்த்தான். நல்ல வாசனை. புதிய அரிசியின் வாசனை. அந்த நோட்டுகளை மடியில் சொருகி அவை சுருங்கி அழுக்காவதைப் பார்க்க அவனுக்கு மனம் வரவில்லை.

ஒணக்கன், நீ இன்னும் போகலையா?'' போஸ்ட் மாஸ்டர் முகத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு கண்ணாடித் துண்டுகள் வழியாக வாசலைப் பார்த்து அதிகாரத் தொனியில் கேட்டார். ஒணக்கன் சற்று அதிர்ச்சியடைந்து விட்டான். உள் மூலையில் திருமணப் பெண்னை இறுதி முறையாக ஒருமுறை பார்த்து விட்டு அவன் முற்றத்தில் இறங்கி நடந்தான்.

எங்கே போவது? எங்கும் போவதற்கில்லை. அந்தப் பகுதியை விட்டுப் போவதற்குச் சிறிதுகூட மனம் வரவில்லை. ஒரு ஆவியைப் போல அவன் சிறிது நேரம் அங்கேயே சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் அஞ்சல் நிலையத்திற்கு முன்னால், சாலையின் அருகிலிருந்த ஒரு பெரிய சூரியகாந்தி மரத்தின் தடித்த வேரின்மீது எற்கு என்று தெரியாமலேயே ஒரு அமர்ந்திருக்கும் சந்தியாகிரகத்தை அவன் ஆரம்பித்தான்.

தன்னுடைய இளமைக் காலத்தைப் பற்றியும் அஞ்சல் இலாகாவுடன் பிணைந்திருந்த தன்னுடைய நீண்ட வாழ்க்கையைப் பற்றியுமுள்ள கனவைப் போன்ற காட்சிகள் அவனுடைய கண்களுக்கு முன்னால் கடந்து போய்க் கொண்டிருந்தன.

தான் பதினான்காம் வயதில் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து மைசூரின் கெத்தய்க்குப் போனதும், மைசூர் குறும்பர்களுடன் சேர்ந்து ஆறு மாத காலம் காக்கன்கோடு காடுகளில் யானை பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தங்கியிருந்ததும், கெத்த ஆரம்பமானதும் யானைப் பாகன்களுடன் ஆரவாரம் எழுப்யிவாறு காடு முழுவதும் இங்குமங்குமாக நடந்து திரிந்ததும் அவனுக்கு நன்கு ஞாபகத்தில் இருந்தன. அவனுடைய தந்தை மைசூரிலேயே வயிற்று வலி வந்து மரணத்தை தழுவி விட்டான். ஒணக்கன் தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பி வந்தான். பிறகு ஐந்து... பத்து வருடங்கள் அவன் மலையில் இருக்கும் மரம் வெட்டுபவர்களுக்கும் யானைப் பாகன்களுக்கும் உதவியாக இருத்து ஒரு வகையில் வாழ்க்கையை ஓட்டினான். இதற்கிடையில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான், திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் ஆவதற்கு முன்பே அவனுடைய குறும்பத்தி இன்னொரு குறும்பனுடன் சேர்ந்து மைசூருக்கு ஓடிப் போய்விட்டாள். அதற்குப் பிறகு ஒணக்கனுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாகவில்லை. ஒரு யானைப் பாகனாக ஆக வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசையாக இருந்தது. அது நடப்பதைப்போல தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையில்தான் குத்தனூரில் இருக்கும் "ம” எஸ்டேட்டிற்கு அருகில் ஒரு புதிய அஞ்சல் நிலையம் வந்ததும், அஞ்சல் இலாகாவிற்கு அங்கு ஒரு மெயில் ரன்னரின் தேவை உண்டானதும்... குத்தனூரிலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருந்து சப் தபால் நிலையத்திற்கும் அங்கிருந்து இங்கும் அஞ்சல் பையைக் கொண்டு போய்ச் சேர்ப்பதும்தான் மெயின் ரன்னரின் வேலை. வேலைக்கு மனு போட்டவர்கள் என்று யாரும் கிடைக்கவில்லை. காரணம்- அந்த ஐந்து மைல் தூரத்தில் மூன்றரை மைல் தூரமும் ஆபத்துக்கள் நிறைந்த யானைக்காடுகளாக இருந்தன. காட்டு யானைகளின் கூத்தரங்கு. சம்பளமாக கிடைப்பதோ வெறும் பத்து ரூபாய்.

யாரோ ஒணக்கன் குறும்பனைக் கூறி போக வைத்தனர். ஒணக்கனுக்கு வேலை கிடைத்தது. ஆனால், ஒணக்கனை வேலைக்கு எடுத்தபோது, போஸ்ட் மாஸ்டருக்கு பல சந்தேகங்களும் இருந்தன. காடுகளுக்குள் சுற்றிக் கொண்டு திரிந்த ஒரு மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதனிடம் பொறுப்பு மிக்க ஒரு வேலையை ஒப்படைக்கிறோமே என்று அவர் நினைத்தார். அவன் ஒழுங்கு தவறாமல் வேலைக்கு வருவானா? ஒரு நாளைய கடிதங்கள் வராமல் போய் விட்டால், மேலதிகாரிகளிடமும் எஸ்டேட்டின் வெள்ளைக்காரர்களிடமும் விளக்கம் கூற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எஸ்டேட்டின் வெள்ளைக்காரர்கள் அரசாங்கத்தின் சொந்த ஆட்களாச்சே! ஆனால், போஸ்ட் மாஸ்டரின் சந்தேகங்களுக்கு அர்த்தமே இல்லாமல் போயின. ஒணக்கன் அந்த வேலைக்கு கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு மாஸ்டருக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை.


மெயில் பையைத் தோளில் போட்டுக் கொண்டு, ஆவி பறக்கும் யானைச் சாணத்தை மிதித்துக் கொண்டு அந்த அடர்ந்த காடுகளின் வழியாக ஓடிக் கொண்டிருப்பதுதான் ஒணக்கன் வாழ்க்கையின் சந்தோஷமாக இருந்தது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகவும் வேலை பார்ப்தற்கான அடையாளச் சின்னமாகவும் அரசாங்கத்திடமிருந்து ஒரு ஈட்டி கிடைத்தது- தலைப் பகுதியில் சலங்கைகள் கட்டப்பட்டிருந்த ஒரு ஈட்டி. காட்டு மிருகங்களை பயமுறுத்தி ஓடச் செய்வதற்கும் அஞ்சல் ஊழியனின் வருகைகைய அறிவிப்பதற்கு... சலங்கையின் "க்லீம்...ப்லீம்...” என்ற சத்தம் உண்டாக்க ஒணக்கனின் வருகை. இல்லை... வேகமான பாய்ச்சல். பாய்ந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், பாய்ந்து செல்ல வேண்டும் என்ற அரசாங்கத்தின் கட்டளை இருக்கிறது என்று ஒணக்கன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். தன்னுடைய சலங்கைகளின் ஓசை கேட்ட பிறகு வழி மாறி ஒதுங்காதவர்களை அந்த ஈட்டியால் குத்திக் கொல்லக் கூடிய அதிகாரத்தையும் அரசாங்கம் தனக்கு அளித்திருக்கிறது என்று ஒணக்கன் ஊர்க்காரர்களிடம் கூறி, நம்பச் செய்திருந்தான். ஆனால், இன்று வரை அவன் யாரையும் குத்திக் கொல்ல வேண்டிய சூழ்நிலை வரவில்லை.

நகரத்தைப் பார்த்திராத அந்த அப்பிராணி மனிதனுக்கு பத்து ரூபாய் சம்பளம் என்பது மிகப் பெரிய ஒரு விஷயமாக இருந்தது. அரசாங்க ஊழியன் என்ற ஒரு மதிப்பு வேறு இருக்கிறதே! இடதுபக்கத் தோளில் அஞ்சல்கள் கொண்ட பையைத் தொங்க விட்டுக் கொண்டு அந்த தபால்காரன் தினமும் பத்து மைல்கள் ஓடுவான். அவனுடைய விரைப்பையும் குலுக்கலையும் பார்த்தால் மலைக் கடவுளின் அருள் உண்டாகியிருக்கிறதோ என்று தோன்றும். "ஹ்ஙீம்... ஹ்ஙீம்” என்றொரு முனகல் சத்தம் வந்து கொண்டிருக்கும். காட்டு யானைகள் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருக்கும் அந்த அடர்த்தியான காடுகளை நெருங்கும்போது அவனுடைய ஆவேசம் அதிகமாகும். வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது அங்கு காட்டு யானைகளைச் சந்திக்காமல் இருக்க மாட்டான். அப்போது ஓடித் தப்பித்துச் செல்ல முயற்சிப்பதற்கு பதிலாக அவற்றின் அருகில் சென்று சில வித்தைகளைக் காட்டி அவற்றை மெய் மறக்கச் செய்து, ஆபத்து நிறைந்த சில விளையாட்டுகளைச் செய்து காட்டுவதில்தான் அவனுடைய முழு கவனமும் இருக்கும். யானைகளின் நடவடிக்கைகளைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் அவன் தெரிந்து வைத்திருந்தான். அவற்றின் ஓட்டத்திலிருந்தும் பிடிப்பதிலிருந்தும் தப்பித்துச் செல்வதற்கான வழிமுறைகளையும் அவன் கற்று வைத்திருந்தான்.

காட்டு யானை அருகில் எங்கோ இருக்கிறது என்பது தெரிய வந்தால், அவன் மெதுவாக யானையுடன் ஒரு சந்திப்பை நடத்துவதற்காக மரங்கள் அடர்ந்த காட்டிற்குள் பதுங்கிப் பதுங்கிச் செல்வான். யானை தன்னைப் பார்க்கவில்லையென்றால், யானையின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவன் உடனடியாக ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவான். யானை திரும்பி நின்று அவனை ஆக்கிரமிப்பதற்காக வந்தால், அவன் தந்திரமாக வேறு எங்காவது விலகிச் சென்று, சிறிது நேரம் எந்த இடத்திலாவது மறைந்து இருந்து கொண்டு, பிறகு இன்னொரு பக்கத்தில் தோன்றி, யானைக்கு சலாம் அடித்து சில குறும்புத்தனங்களைக் காட்டுவான். யானை மீண்டும் ஆக்கிரமிப்பதற்காக ஓடி வரும். ஒணக்கன் ஓடி மறைந்த வழி தெரியாது. இப்படி யானையை முட்டாளாக்கி தவிக்க வைப்பது- இதுதான் அவனுடைய விளையாட்டாக இருந்தது. இதுவரை ஒரு காட்டு யானையாலும் தன்னைத் தொட முடியவில்லை- அதுதான் அவனுடைய வீர முழக்கமாக இருந்தது.

இந்த யானை விளையாட்டின் விளைவாக ஒரே ஒரு முறைதான் அவன் வேலைக்கு வராமல் இருந்திருக்கிறான். ஒரு நாள் சாயங்காலம் அஞ்சல் பையும் ஒணக்கனும் குத்தனூருக்கு வந்து சேரவில்லை. போஸ்ட் மாஸ்டர் இரவு ஒன்பது மணி வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஒணக்கனின் சத்தமோ அசைவோ எதுவுமில்லை. என்னதான் நடந்தாலும், சாயங்காலம் ஐந்து மணிக்கு முன்பே அஞ்சல் அலுவலகத்திற்கு திரும்பி வரக் கூடிய, நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்க கூடிய மனிதனாக ஒணக்கன் இருந்தான்.

போஸ்ட் மாஸ்டர் பதைபதைப்பிற்குள்ளானார். காட்டு யானைகளின் தொந்தரவுகள் அதிகமாக இருந்த காலம் அது. மக்களின் பேச்சுக்கான விஷயமே அவற்றின் பராக்கிராமங்கள் பற்றிய கதைகளாகத்தான் இருந்தன. ஒணக்கனை காட்டு யானைகள் குத்திக் கொன்று விட்டன என்று எல்லாரும் முடிவு செய்து இரங்கல் செய்தி வெளியிடவும் செய்தனர்.

மறுநாள் காலையில், அதோ வந்து கொண்டிருக்கிறான் ஒணக்கன். அஞ்சல் பையும் சலங்கைகள் கட்டப்பட்ட ஈட்டியும் தோளில் இருந்தன.

நேற்று எங்கே போயிருந்தாய்?'' போஸ்ட் மாஸ்டர் கேட்டார்.

யானை...'' அவ்வளவுதான் அவனால் கூற முடிந்தது. அஞ்சல் பை பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது அல்லவா? போஸ்ட் மாஸ்டர் அதை மட்டும் பார்த்தால் போதாதா என்பதைப்போல ஒணக்கன் மவுனமாக நின்று கொண்டிருந்தானே தவிர, வேறு எதுவும் பேசவில்லை.

ஒன்றிரண்டு வருடங்கள் கடந்த பிறகுதான் ஒணக்கன் அந்த கதையையே வெளியே கூறினான். நடந்தது இதுதான். ஒணக்கன் ஒரு காட்டு யானையை ஏமாற்றிக் கொண்டு ஓடும்போது போய் நின்றது இன்னொரு பெரிய காட்டு யானைக்கு முன்னால்... உடல் முழுவதும் செம்மண் புரண்டு மலையைப்போல நின்றிருந்த ஒரு முரட்டுத்தனமான ஆண் யானை... ஒணக்கனால் முன்னோக்கியோ திரும்பிப் பின்னோக்கியோ ஓடுவதற்கு வழியில்லாத நிலை உண்டானது. இறுதியில் இடது பக்கத்தில் ஒரு இடைவெளி இருப்பதைப் பார்த்து அந்த பக்கமாக வேகமாக சென்று மாட்டிக் கொண்டது கோட்டையைப்போல அடர்ந்து கிடந்த புதர்களாக இருந்தன. திரும்பிப் பார்த்தபோது ஆண் யானை பின்னால் உரத்து சத்தம் உண்டாக்கியவாறு வந்து கொண்டிருந்தது. ஒணக்கன் புதருக்கு உள்ளே மறைந்து இருப்பதற்கு ஒரு தீவிரமான முயற்சி செய்தான்; முடியவில்லை. திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. தோளில் இருந்த அஞ்சல் பையை யானையின் கவனத்தில் படுகிற மாதிரி ஒரு மரக்கொம்பில் எறிந்து தொங்கவிட்டான். பார்வை சக்தி குறைவாக இருந்த யானை தன்னுடைய எதிரி மரக் கொம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து, தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு அந்த புதருக்கு வெளியே காவல் காத்துக் கொண்டு நின்றிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒணக்கன் தரையின் வழியாக ஊர்ந்து சென்று வந்த பாதையிலேயே திரும்பி ஓடித் தப்பினான்.

ஆனால், அஞ்சல் பை கிடைக்காமல் போய்விடக் கூடாதே? அரை மணி நேரம் கடந்தபிறகு, ஒணக்கன் மொதுவாக அந்த இடத்திற்கு பதுங்கிச் சென்று பார்த்தான். யானை அந்த புதருக்கு வெளியே சுற்றிச் சுற்றி காவலுக்கு நின்று கொண்டிருந்தது.


அவன் நிலம் முழுவதையும் மிதித்து ஒரு வழி பண்ணிவிட்டிருந்தான். தும்பிக்கையை அஞ்சல் பை தொங்கிக் கொண்டிருந்த மரக் கொம்பை நோக்கித் தூக்கி இடையில் அவ்வப்போது கோபத்துடன் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஒணக்கன் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். இதுவரை என்ன விளையாட்டு விளையாடினாலும் தோளிலிருந்து அஞ்சல் பையை அகற்றிய செயலை அவன் செய்ததில்லை. காட்டுப் போக்கிரியான ஒரு யானை அதைச் செய்ய வைத்து விட்டது. யானையை அந்த இடத்தை விட்டுப் போகச் செய்வதற்கு அந்த ஆபத்து நிறைந்த இடத்தில் தன்னுடைய வித்தைகள் எதுவும் உதவாது என்று அவனுக்குத் தெரியும். அந்த வகையில் அவன் தன்னைத் தானே திட்டிக் கொண்டு நின்றிருந்தபோது, சற்று தூரத்திலிருந்து ஒரு ஆரவாரம் கேட்டது. காட்டு யானைகளின் வருகை அது என்பதைப் புரிந்து கொண்டான். யானைகளைப் பார்த்து அவனுக்கு பயமில்லை. "ஒற்றை யானை'தான் ஆபத்து விளைவிக்கக் கூடியவன். எனினும், அந்த யானைகளின் ஊர்வலம் நடக்கும் பாதையிலிருந்து விலகி நின்றிருப்பதுதான் நல்லது என்று நினைத்து அவன் எங்கு போய் ஒளிவது என்று தேடினான். வானத்தைத் தொட்டுக் கொண்டு நின்றிருந்த மரங்களின் கூட்டத்தைத் தவிர, அந்தப் பகுதியில் வேறு எதுவும் இல்லை. இறுதியில் ஒரு அடர்ந்த புதருக்குள் சென்று ஒளிந்து கொள்வது என்று அவன் தீர்மானித்து, எப்படியோ அதற்குள் போய் மறைந்து கொண்டான்.

தூசிகளையும் ஆவி பறக்கும் சாணத்தையும் பின்னால் விட்டவாறு, யானைகளின் கூட்டம் கடந்து சென்றது. ஒரு முப்பது யானைகளாவது இருக்கும்.

ஒணக்கன் புதருக்குள் இருந்து வெளியே வருவதற்கு முயன்றபோதுதான், தான் ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதே அவனுக்குத் தெரிந்தது. வெளியே வருவதற்கு இடைவெளி தென்படவில்லை. புதர்கள் அவனைச் சற்று நெருக்கிக் கொண்டிருந்தன. அந்த புதரின் வலைக்குள் இருந்து உதறிக் கொண்டு வெளியே வருவதற்கு அவனுக்கு ஒரு மணிநேரம் சிரமப்பட வேண்டியிருந்தது. அதற்குள் நேரம் இருட்ட ஆரம்பித்தது.

ஒணக்கன் அஞ்சல் பையைச் சென்று பார்த்தான். யானை அதற்குக் கீழேயே நின்றிருந்தது.

நள்ளிரவு தாண்டும் வரை யானையும் ஒணக்கனும் அந்த அஞ்சல் பையைப் பார்த்துக் கொண்டே அந்த காட்டில் இருந்து கொண்டிருந்தார்கள். இறுதியில் அந்த வழியே வந்த ஒரு பெண் யானைதான் ஒணக்கனை காப்பாற்றினாள். யானை மோகினியைப் பார்த்ததும், ஆண் யானை மரக் கொம்பில் தொங்கிக் கொண்டிருந்த எதிரியை விட்டு விட்டு, அவளுக்குப் பின்னால் நடந்து மறைந்தது.

அஞ்சல் பையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒணக்கன் குத்தனூருக்குத் திரும்பி வந்தபோது, புலர் காலைப் பொழுது சேவல் கூவிக் கொண்டிருந்தது.

அந்த யானைகள் இருக்கும் காட்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்களைப் பற்றிய கதைகள்தான் ஒணக்கனின் அறிவியல் சொத்துக்களாக இருந்தன. எஸ்டேட்டின் மூலையில் பலசரக்கு வியாபரம் செய்யும் வடகரையைச் சேர்ந்த மொய்து ஹாஜிக்கு "யானை ஹாஜி” என்ற பெயர் வந்ததற்கு, அந்தக் காட்டில் இருந்த ஒரு அட்டகாசம் செய்யும் ஆண்யானைதான் காரணம். ஒணக்கன் அந்தக் கதையை விளக்கிக் கூறுவான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவமது. ஒரு நாள் மதிய நேரத்தில் ஹாஜி தன்னுடைய விவசாயம் இருந்த நிலத்தைப் பார்த்து விட்டு கடைக்கு அந்த யானைகள் இருக்கும் காட்டின் வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஒற்றையடிப் பாதையின் வழியாகத் திருப்பத்தை அடைந்தபோது, திடீரென்று ஒரு ஒற்றை ஆண் யானை ஹாஜியை நோக்கிப் பாய்ந்து வந்தது. தடிமனான உடலைக் கொண்ட ஹாஜி "அல்லா” என்று உரத்த குரலில் கத்திக் கொண்டே உடலைக் குலுக்கியவாறு ஓட ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் யானையும் ஓடியது. யானைக்கு பார்வை சக்தி குறைவாக இருக்கும் என்பதையும் மனிதர்களின் சத்தத்தைத் தெரிந்து கொண்டுதான் அது பின் தொடர்கிறது என்பதையும் கேள்விப்பட்டிருந்த ஹாஜி, தன்னுடைய தொப்பியை எடுத்துப் பின்னால் ஏறிந்தார். யானை தொப்பியினையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் அதே இடத்தில் நின்றிருந்தது. பிறகு தொப்பியை மிதித்துத் தேய்த்து முன்னோக்கித் தாவியது. ஹாஜி சட்டையை அவிழ்த்து எறிந்து விட்டு ஒட்டத்தைத் தொடர்ந்தார். யானை சிறிது நேரம் அந்தச் சட்டையுடன் ரகசிய உரையாடல் நடத்தியது. அதோ வருகிறது... அதற்குப் பிறகும் யானை. இறுதியில் அவர் அணிந்திருந்த துணியை அவிழ்த்துக் கீழே போட்டு விட்டு ஒளிந்து கொண்டார். சிறிது நேரத்திற்கு யானையின் காலடிச் சத்தம் கேட்கவில்லை. இப்போது தப்பித்து விட்டோம் என்று ஹாஜி முடிவுக்கு வந்து விட்டார். திரும்பிப் பார்த்தபோது, ஹாஜியின் கட்டங்கள் போட்ட துணியைக் கொம்பில் தூக்கிப் பிடித்துக் கொண்டு கொடி போல பறக்கவிட்டவாறு வந்து கொண்டிருந்த யானையைப் பார்த்தார். பிறகு உடலிலிருந்து அவிழ்ப்பதற்கு எதுவும் இல்லை என்ற சூழ்நிலை வந்ததும், ஹாஜி உள்ளுக்குள் இருந்த சிலவற்றை வெளியேற்றியவாறு ஓடினார் என்று ஒணக்கன் கூறினான். எது எப்படி இருந்தாலும், ஹாஜி கடைக்குத் திரும்பி வந்தது நல்ல ஒரு கோலத்துடன்தான்.

இரவில் லாந்தர் விளக்கைப் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் யானைகளும் அந்தக் காட்டில் இருந்தார்கள்.

ஒருமுறை எஸ்டேட்டிற்குக் கொண்டு செல்லக் கூடிய அரிசியையும், மசாலா பொருட்களையும் ஏற்றிக்கொண்டு தலசேரியிலிருந்து திரும்பி வந்த ஒரு மாட்டு வண்டி அந்த யானைகள் இருக்கும் காட்டை நெருங்கியபோது, பொழுது இருட்டி விட்டிருந்தது. ஒற்றைக் கண்ணன் குஞ்ஞாலியும் நொண்டிபோக்கரும்தான் வண்டியில் இருந்தார்கள். போக்கர் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். குஞ்ஞாலி அரிசி மூட்டையின்மீது சாய்ந்து படுத்துக் கொண்டு "கெஸ்” பாடிக் கொண்டிருந்தான். மாட்டு வண்டியின் அச்சின் முனையில் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டிருந்த பித்தளையில் இருந்த மணிகள் "க்லீம் க்ணும்' என்று தாளத்துடன் ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. திடீரென்று வண்டியின் ப்ரேக் பிரிந்து கீழே விழுந்தது. போக்கர் காளைகளைப் பிடித்து நிறுத்தினான்.

ப்ரேக் போயிருச்சே, குஞ்ஞாலி.'' போக்கர் உரத்த குரலில் சொன்னான். குஞ்ஞாலி பாட்டை நிறுத்தி விட்டு, மெதுவான குரலில் முனகினான்.

ப்ரேக் போனால் போகட்டும், வண்டியை ஓட்டு.'' குஞ்ஞாலி சொன்னான்.

முடியாது. யானைக் காட்டைத் தாண்டி விட்டால் அதற்குப் பிறகு வருவது குளியம்பாறை இறக்கம். வண்டியில் ப்ரேக் இல்லையென்றால் அரிசி மூட்டையும் வண்டியும் காளைகளும் நாமும் அந்தப் பள்ளத்தில் தலை கீழாக விழுந்து கிடப்போம். அதுதான் நடக்கும்.''


நீ என்ன சொல்றே?''

நீ இறங்கிப் போய் அந்த மரத்தின் கொம்பை ஒடித்து ப்ரேக் உண்டாக்கு.''

குஞ்ஞாலி கீழே இறங்கி, இடுப்பிலிருந்த கத்தியை எடுத்துக் கையில் பிடித்தாவறு, வண்டியின் அச்சுக்குள் கீழே கட்டப்பட்டிருந்த லாந்தர் விளக்கை அவிழ்த்துக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு "ப்ரேக்” கிற்கான மரக் கொம்பைத் தேடி காட்டிற்குள் சென்றான். போக்கர் இருட்டில் வண்டியில் உட்கார்ந்திருந்தான்.

அரை மணி நேரம் கடந்த பிறகும், குஞ்ஞாலி திரும்பி வரவில்லை. "ப்ரேக்” உண்டாக்கப் பயன்படும் மரக்கொம்பு கிடைக்காமல் நண்பன் காட்டிற்குள் சற்று உள்ளே போய் விட்டான் போலிருக்கிறது என்று போக்கர் நினைத்துக் கொண்டான். ஒரு மணி நேரம் கடந்தது. குஞ்ஞாலியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. போக்கர் ஒரு சுருட்டை வாயில் வைத்துக் கொண்டு இழுத்தான்.

அந்தச் சுருட்டு இழுக்கப்பட்டுத் தீரும் நிலைக்கு வந்தபோது, காட்டிலிருந்து லாந்தர் விளக்கின் வெளிச்சம் நகர்ந்து வருவது தெரிந்தது. போக்கர் சுருட்டுத் துண்டை வீசி ஏறிந்து விட்டு, "ப்ரேக்'கைச் சரி பண்ணுவதற்காக வண்டியை விட்டுக் கீழே இறங்கி, குனிந்து கொண்டு "ப்ரேக்'கை இணைக்கும் கயிறைப் பரிசோதித்துக் கொண்டே உரத்த குரலில் சொன்னான்: இந்தக் காட்டில் என்ன எடுத்துக் கொண்டு இருந்தாய்? முரடா... உன்னை காட்டு யானை குத்திக் கொன்னுருச்சுன்னு நினைச்சிட்டேன்.''

பதிலெதுவும் வரவில்லை. போக்கர் திரும்பிப் பார்த்தபோது கண்ட காட்சி... லாந்தர் விளக்கைத் தும்பிக்கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்தது குஞ்ஞாலி அல்ல- ஒரு முரட்டுத் தனமான காட்டு யானைதான். "என் கடவுளே...” என்று உரத்த குரலில் கத்தியவாறு போக்கர் ஒரு மரணப் பாய்ச்சல் பாய்ந்தான்- பெரும் நொண்டியாக இருந்த போக்கர் அரை நொண்டியாக மாறியது அன்றைய அந்த பாய்ச்சலின் காரணமாகத்தான்.

ஒரு பெரிய மரத்தின் மேலே உட்கார்ந்திருந்த காரணத்தால் ஒற்றைக் கண்ணன் குஞ்ஞாலியும் தப்பித்துக் கொண்டான். அவர்களுக்கு நஷ்டம் என்று ஆனது ஒரு லாந்தர் விளக்கு மட்டுமே. அந்த லாந்தர் விளக்கும் தும்பிக்கையுமாக சுற்றிக் கொண்டிருந்த அந்த சுவாரசியமான ஆண் யானையை அதற்குப் பிறகும் சிலர் பார்க்கத்தான் செய்தார்கள்.

அந்த சூரியகாந்தி மரத்திற்குக் கீழே உட்கார்ந்து கொண்டு ஒணக்கன் இப்படிப் பலவற்றையும் சிந்தித்துக் கொண்டிருந்தான். சம்பவங்கள் பலவும் நிறைந்த அந்தக் காடுகளில் இங்குமங்குமாக ஓடிக்கொண்டு அவன் தன்னுடைய வாழ்க்கையின் இருபத்தோரு வருடங்களைக் கழித்திருக்கிறான். அந்த வாழ்க்கை இன்று அவனிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

"ப்ரேம்... ப்ரோம்.. ப்ரேம்.. ப்ரோம்...”

பேருந்தின் "ஹார்ன்” சத்தம் அவனை சுய உணர்விற்குக் கொண்டு வந்தது. பேருந்து முக்கி முனகி குலுங்கியவாறு அஞ்சல் நிலையத்திற்கு முன்னால் வந்து நின்றது. சக்கரங்கள் இணைக்கப்பட்டிருந்த தேங்காய் கூட்டைப் போன்று இருக்கும் ஒரு பொருள்...

பேருந்திற்குள் ஐந்தாறு பயணிகள் இருந்தார்கள். முன்னால் இருந்த இருக்கையில் இரண்டு பேர் நெளித்து கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒரு கறுத்து மெலிந்த வழுக்கைத் தலைக் கிழவன், கண்ணன் நாயர் என்ற அதிகாரி. இன்னொரு ஆள்... ஓ... நம்முடைய யானை ஹாஜி. யானை ஹாஜியைப் பற்றிய அந்தப் பழைய கதையை மனதில் நினைத்து ஒணக்கன் மெதுவாகச் சிரித்துக் கொண்டு, முகத்தை மூடிக் கொண்டான்.

போஸ்ட் மாஸ்டர் அந்த அஞ்சல் பையை-தாலி கட்டிய திருமணப் பெண்ணைப் போல இருந்த அவனுடைய செல்லமான மெயில் பேக்கை வெளியே எடுத்துக் கொண்டு வந்து, நடத்துனரின் கையில் ஒப்படைத்தார். நடத்துனர் அதை வாங்கி பேருந்தின் பின்னால் ஒரு மூலையில் வைத்தான். "ப்ரேம் ப்ரோம் ப்ரேம் ப்ரோம்” என்ற இசை முழக்கத்துடன் பேருந்து முன்னோக்கி நகர்ந்து சிறிது நேரம் ஆன பிறகு, பார்வையிலிருந்து மறைந்தது.

அவனுடைய உயிரையும் பிடித்து இழுத்துக் கொண்டுதான் அந்த பேருந்து பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

அவனுடைய சிந்தனைகள் தொடர்ந்தன. சிறிது நேரத்தில் அந்தப் பேருந்து யானைக்காட்டிற்குள் நுழையும். புதர்களும் பாறைகளும் கொடிகளும் நிறைந்த விசாலமான காட்டின் வழியாக அந்த வாகனம் போகும்போது அட்டகாசங்கள் செய்யும் யானைகள் வெறுமனே விடுமா? யானை சீறிக் கொண்டு ஆக்கிரமிப்பதற்கு நெருங்கும்போது, புதர்களுக்குள் போய் ஒளிந்து கொள்வதற்கு அந்தத் தேங்காய் கூடால் முடியுமா? பயங்கரமான ஆண் யானையைப் பற்றி அவன் குறிப்பாக நினைத்துப் பார்த்தான். வலது பக்க செவியில் சந்திரக் கலையைப் போல பெரிய ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கும் அந்த இளம் யானையை ஒரு மாத காலமாக அவன் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறான். மெயில் ரன்னரின் போக்குவரத்து இருக்கக் கூடிய சரியான நேரம் அந்த ஆண் யானைக்கு நன்கு தெரியும் என்று தோன்றுகிறது. அந்த நேரம் பார்த்து யானை அவனை எதிர்நோக்கி கொண்டு அங்கு எங்கேயாவது மறைந்து நின்று கொண்டிருக்கும். ஆனால், சாமர்த்தியங்கள் நிறைந்த குறும்பன் ஆண் யானையை வாசனை பிடிந்து அறிந்து, அதைப் பின்னால் இருந்து கொண்டு ஒரு வழி பண்ணக் கூடிய எல்லா வித்தைகளையும் பயன்படுத்துவான். ஒன்றிரண்டு தடவைகள் அவன் யானைக்குப் பின்னால் பதுங்கிச் சென்று அதன் துடைப்பத்தைப் போல இருக்கும் வாலைப் பிடித்து ஆட்டி ஓடவும் செய்திருக்கிறான். யானைக்கும் அவனுக்குமிடையே பல நேரங்களில் ஓட்டப் பந்தயம் நடந்திருக்கிறது. ஆனால், நேற்று அந்த விளையாட்டு கொம்பின்மீது ஏறி விட்டது. யானை அவனைப் பிடித்து விட்டது, பிடிக்கவில்லை என்ற நிலையில் இருந்தது. திடீரென்று புதர்களுக்கு மத்தியில் மறைந்து கொள்ள எப்படியோ அவனுக்கு முடிந்தது. கூர்மையான கற்கள் நிறைந்திருந்த ஒரு மூலை அது. வளைந்தும் திரும்பியும் கொண்டிருந்த அந்த ஒற்றையடிப் பாதைகளின் வழியாக குறும்பனைப் பின் தொடர்ந்து செல்ல தடிமனான யானையால் முடியாது. யானைக்கும் ஒணக்கனுக்கும் இடையே நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு ஒரு மணி நேரம் தொடர்ந்தது. இறுதியில் தோல்வியை தழுவியதென்னவோ யானைதான். அஞ்சல் நிலையத்தை அடைவதற்கு நேரமாகி விட்டது என்று தோன்றியதும் ஒணக்கன் விளையாட்டை நிறுத்தி விட்டு பாதைக்கு வந்தான். அவன் எங்கே மறைந்து கொண்டிருக்கிறான் என்பதை தேடியாவறு தும்பிக்ûகையை காற்றில் தூக்கிவைத்துக் கொண்டு நான்கு பக்கங்களிலும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த யானையில் அந்த இறுதி நிற்பை அவன் தனக்க முன்னால் பார்த்தான்.

 


அவனைத் தேடிய அந்த யானை இன்றும் அங்கு வந்து நின்று கொண்டிருக்கும். ஒணக்கன் அந்த சூரியகாந்தி மரத்தின் வேரிலிருந்து மெதுவாக எழுந்து நடந்தான். தோளில் பையும் கையில் ஈட்டியும் இல்லாததால் நடை சரியாக வரவில்லை. எனினும், அது தெரியாமல் பழைய தாளத்தில் உள்ள கால் வைப்புகளுடன் அவன் நடந்தான்.

அவன் அந்தப் புதர்களை நெருங்கினான். எங்கும் பேரமைதி. இளம் காற்றில் புதர்களின் தலைப்பகுதிகள் அசைந்தன. ஒரு மரக் கிளையில் ஒரு மலைவாழ் மனிதன் ஆனந்தத்துடன் அமர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான். கீழே சாலையில், மெயில் பேருந்தின் சக்கரங்கள் உண்டாக்கிய கோடுகள் பதிந்து தெரிந்தன.

திடீரென்று புதர்களின் மறைவிலிருந்து கறுப்பாக ஏதோவொன்று அசைவது அவனுடைய கவனத்தில் பட்டது. சந்திரக் கலை அடையாளத்தைக் கொண்ட ஒரு காது தாளத்தில் அசைந்து கொண்டிருந்தது.

யானை!

அவன் அசையாமல் நின்றிருந்தான். ஆனால், யானை அளந்து வைத்த காலடிகளுடன் முன்னோக்கி நெருங்கி வந்தபோது, ஒணக்கனின் கால்கள் மண்ணிலேயே நிற்கவில்லை. அவன் ஓடுவதற்கு முயற்சித்தான். ஆனால், கால்களுக்கு வேகம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு கேடு- ஒரு தோல்வி உணர்வு- ஒரு பிடிவாதம்! நீச்சல் தெரியாத ஒரு மனிதன் நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டதைப்போல அவன் கைகளையும் கால்களையும் நீட்டித் தட்டி துடித்துக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் அப்படியே கடந்தது என்று தெரியவில்லை. ரப்பர் குழாயைப் போன்ற ஒரு பொருள் அவனுடைய முதுகைத் தொட்டது. அவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான்.

யானையின் தும்பிக்கை தன்னுடைய இடுப்பை இறுகச் சுற்றுவதை அவன் உணர்ச்சியே இல்லாமல் கூர்ந்து பார்த்தான். அது மட்டுமல்ல; அது உண்மைதானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ரப்பர் குழாயைப் போல இருந்த அந்தப் பொருளை அவன் சற்று தொட்டுப் பார்க்கவும் செய்தான். அவன் காற்றில் மேலே உயர்ந்து கொண்டிருந்தான். இரண்டு ஆட்களின் உயரத்தில் காற்றில் தலை குப்புறப் படுத்துக்கொண்டு அவன் அந்த காட்டின் பரப்பை முழுமையாகப் பார்த்தான். அடுத்த நிமிடம் தான் ஓங்கி நிலத்தில் வீசி ஏறியப்படுவோம்...

காற்றில் தங்கி நின்றிருந்த அந்த ஒரு நிமிடத்தில் அந்த காட்டுடன் உறவு கொண்ட தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்கள் அடங்கிய ஒரு முழு ஓவியம் அவனுடைய மூளையில் தோன்றி மறைந்து போனது. பாக்கெட்டிற்குள் நுழைத்து வைத்திருந்த புதிய பத்து ரூபாய் நோட்டுக்கள் காய்ந்த இலைகளைப் போல காற்றில் மிதந்து பறப்பதையும் அவன் தெளிவாகப் பார்த்தான்.

அவன் கீழே வந்து கொண்டிருந்தான். அவன் கண்களை மூடிக் கொண்டான். ஆனால், அந்த வருகையில் பலமும் வேகமும் இல்லை. யாரோ தன்னை மேலே தூக்கி அணைத்து மெதுவாகக் கீழே வைப்பதைப் போல தோன்றியது...

அசைவு நின்று விட்டது என்பது தெரிந்ததும் அவன் மெதுவாக கண்களைத் திறந்தான். அவன் நிலத்தில் மல்லாக்கப் படுத்திருந்தான். தும்பிக்கையை மடக்கி முன் பகுதியை உள்ளே சுருட்டி வைத்துக் கொண்டு, இடது பக்க முன் காலின் முட்டியை அசைத்து, பெரிய காதுகளை வீசி ஆட்டி, சட்டைய் பொத்தான்களைப் போல இருந்த கண்களை மின்னச் செய்து கொண்டு, யானை அவனுடைய கால் பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. அவன் உணர்ச்சியே இல்லாமல் யானையின் முகத்தையே சிறிது நேரம் பார்த்தான்.

காடு முழுவதும் குலுங்குவதைப்போல நிலத்தை மிதித்து யானை பிளிறியது. பிறகு... அந்த ஆண் யானை அலட்சியமாக கொம்புகளை ஆட்டி, தலையை கீழே தாழ்த்தி வைத்துக் கொண்டு, தும்பிக்கையை அசைத்துக் கொண்டே திரும்பி, காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தது.

சிறிது நேரம் சென்றதும் ஒணக்கன் எழுந்து உட்கார்ந்தான், அவனுக்கு எதுவுமே புரியவில்லை. தனக்கு ஒரு உடல் இருக்கிறது என்றே அவனுக்குத் தோன்றவில்லை. யானைச் சாணத்திலிருந்து ஆவி புறப்படுவதைப்போல அவனுடைய மூளையிலிருந்து ஆவியும் புகையும் பறந்து கொண்டிருந்தன. கண்களில் இருட்டு படர்ந்து விட்டிருந்தது. ஒரு கரிய நிழலைப்போல அவன் சாலையின் அருகில் ஒரு புதரின் மறைவில் நின்று கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் நின்றிருந்தோம் என்பதே உறுதியாகத் தெரியவில்லை.

"ப்ரேம்.. ப்ரோம்... ப்ரேம்... ப்ரோம்...”

பேருந்தின் இசை முழக்கம் அவனை சுய உணர்விற்குக் கொண்டு வந்தது. அஞ்சல் பையுடன் பேருந்து குத்தனூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.

சிவப்புத் திலகம் வைத்த அந்த மெயில் பேருந்து முனகியவாறு நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. அவனுடைய வாழ்க்கையை தோல்வி நிலைக்கு கொண்டு வந்த எதிரி முனகிக் கொண்டு வருகிறது... அந்த செயலற்ற நிலையில் விரக்தியுடன் அவன் அந்த வாகனத்தையே வெறித்துப் பார்த்தான். அவன் சாய்ந்து நின்றிருந்த புதரை நோக்கிப் பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது.

"க்ரிக்...க்ரிக்...க்ரிக்...”

ஓட்டுனர் திடீரென்று பேருந்தை ப்ரேக் போட்டு நிறுத்தி விட்டு, வெளியே குதித்து சக்கரத்திற்குக் கீழே பார்த்தான். மண்டை ஓடு நசுங்கி மூளை வெளியே வந்து, ஒரு உடல் சக்கரத்திற்கு கீழே கிடந்தது. உடலில் கிழிந்த வேட்டியையும் காக்கிச் சட்டையையும் பார்த்தவுடன், இறந்தது மெயில் ரன்னர் ஒணக்கன் குறும்பன்தான் என்பது அவர்களுக்குப் புரிந்து விட்டது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.