Logo

கள்ள நோட்டு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7568
kalla nottu

ள்ள நோட்டு என்பதே தெரியாமல் கள்ள நோட்டு வாங்கி, தாயே தான் பெற்ற மகளை விற்ற சம்பவத்தை, அந்த மகள்மீது காதல் கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சமீபத்தில் சொன்னான்: நல்ல பெரிய மார்பகங்களையும், தடித்த பின்பகுதியையும் கொண்ட ஒரு இளம் பெண் அவள். பட்டாளக் கேம்ப்பை அடுத்துள்ள ஒரு மரத்தினடியில் இருந்த ஒரு குடிசையில் அவள் தாயுடனும் சகோதரிகளுடனும் இருந்தாள்.

ஒவ்வொரு நாளும் அவன், அந்தப் பெண்ணைக் குடிசை வாசலில் பார்ப்பான். சில நேரங்களில் ஒன்றுமே செய்யாமல் வெறுமனே நின்றிருப்பாள். வேறு சில நேரங்களில் கயிறு பிரித்துக் கொண்டிருப்பாள். இளம் வயது போலீஸ் கான்ஸ்டபிள் அவளைப் பார்க்கும் நேரங்களில் காமம் கலந்த தன் பார்வையை அவள் மீது வீசுவான். பதிலுக்கு அவனை அவள் கவனித்தாளா இல்லையா என்பது அவனுக்கே தெரியாது. பார்ப்பதற்கு அழகான பெரும்பாலான பெண்களிடம் இளைஞர்களுக்கு சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஈர்ப்புதான், அவள்மீதுஅந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கும் ஏற்பட்டிருந்தது.

இருந்தாலும், ரத்தம் புரண்ட கள்ள நோட்டுகளுடன் அவளைக் கண்ட பயங்கர காட்சியை இதயத்தில் நினைத்துப் பார்த்த போதுதான் அவனுக்கே என்னவோ போல் இருந்தது.

அவள் மட்டுமல்ல- அவளின் தாயும் வழக்கில் சிக்கினாள். தாய் தன் சொந்த மகளை விற்றதாக ஒரு வழக்கு; கள்ள நோட்டு கையில் வைத்திருந்ததாக இன்னொரு வழக்கு. மூன்றாவது வழக்கு வெட்கப்படத்தக்கது- கள்ள நோட்டு அச்சடித்ததாக. உண்மையான திருடனைப் பிடிக்க முடியாவிட்டால், கண்ணில் படுபவனைத் தூக்கில் போட வேண்டியதுதான் என்ற பழங்காலப் பழக்கம்தான் இப்போது அங்கு நடைமுறையில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்காக போலீஸையும் அரசாங்கத்தையும் குறை சொல்ல முடியுமா என்ன? பழங்காலந்தொட்டு வழக்கத்தில் இருந்த ஒன்றைத்தான் இப்போதும் செயல்படுத்தி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

அப்படியானால் அந்தக் கள்ள நோட்டைத் தயாரித்தது யாராக இருக்கும்? கள்ள நோட்டு அச்சடிக்க வேண்டுமென்றால், அதற்கு நல்ல பேப்பர் வேண்டும். புதிய நோட்டு அடிப்பதற்கான இயந்திரம் வேண்டும். யுத்தம் தொடங்குவதற்கு முன்பு இருந்த மாதிரியான இயந்திரமோ, அச்சோ இப்போது சரியாக வராது. பிறகு... போர் வந்தபிறகு எல்லாப் பொருட்களுக்கும் விலைவாசி ஏறியதுபோல, பேப்பருக்கும் கடுமையாக விலை கூடியிருக்கிறது. அது மட்டுமல்ல... பணமே அதிகமாகக் கொடுத் தால்கூட, பேப்பர் கிடைப்பது என்பது கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, நோட்டு அச்சடிக்க நல்ல பேப்பரும் மற்ற தேவையான பொருட்களும் எங்கிருந்து கிடைத்தன?

காற்றில் மிதந்து வந்த வதந்திகள் இரண்டு விதத்தில் இருந்தன. பெரிய பணக்காரர் யாரோ பேப்பரையும் மற்ற பொருட்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார் என்பது முதல் வதந்தி. எதிரிநாடுகள் இதற்கென இருக்கும் தரகர்கள் மூலம் கள்ளத்தனமாக நோட்டுகளை அச்சடித்து ரகசியமாக நம் நாட்டுக்குள் வினியோகம் செய்கிறார்கள் என்பது இரண்டாம் வதந்தி.

எது எப்படி இருந்தாலும் அந்தக் கள்ள நோட்டையும் நல்ல நோட்டையும் அருகருகில் வைத்துப் பார்த்தால், அவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பதென்பது கஷ்டமான ஒரு விஷயமாகவே இருந்தது. போருக்குப் பிறகு, நோட்டுகள் ஆயிரம் மடங்கு பெருகிவிட்டன. வெள்ளியால் ஆன காசுகளையோ, தங்க நாணயங்களையோ இப்போது பார்க்கவே முடியாது. வெள்ளியும் பொன்னும் எங்கேதான் போயின? போருக்குத் தேவைப்படும் என்று வெள்ளியாலும் தங்கத்தாலும் பீரங்கி குண்டுகள் தயாரிக்கிறார்களோ என்னவோ? யாருக்கும் இது பற்றிய அறிவு கொஞ்சமும் கிடையாது. பலரிடமும் கள்ள நோட்டு இருக்கிறது. கொழுத்துப்போன பணக்காரர்கள், பெரிய வியாபாரிகள், உயர்ந்த அதிகாரிகள்- இவர்களிடம் கட்டாயம் கள்ளப் பணம் இருக்கவே செய்கிறது.

இப்படிப்பட்ட வதந்திகளை இங்கு பரப்புவது யார்? கள்ள நோட்டு, கள்ள நோட்டு என்று பலரும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களால் கள்ள நோட்டை நேரில் காட்ட முடியுமா? சொல்லப்போனால் எல்லாருக்குமே இந்த விஷயத்தில் மிகவும் பயம் அதிகம். காரணம்- கள்ள நோட்டு அச்சடிப்பவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை  பெரிது. தான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று அவன் நிரூபித்தே ஆகவேண்டும்.

நாட்டில் உள்ள எந்த மனிதனையும் ஒரே நிமிடத்தில் குற்றவாளியாக்கிவிட முடியும். யாரும் எந்த நேரத்திலும் குற்றவாளிதான்- சம்பந்தப்பட்ட மனிதனே தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும்வரை. இப்படி ஒரு சட்டம் இருந்ததால், மக்கள் உண்மையிலேயே அச்சத்துடனே இருந்தார்கள். வெறுமனே "இது கள்ள நோட்டு மாதிரி தெரியுதே!' என்று சொன்னால்கூட அவர்களின் முகமே மாறிப்போகும். இந்த விஷயத்தில் அதிகம் பயந்து போயிருந்தது சாதாரண மக்கள்தான். அவர்களுக்கு கைக்கூலி கொடுக்கும் அளவிற்கு வசதிகள் கிடையாது. அவர்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்- உண்ண உணவில்லாமல், உடுக்க துணி இல்லாமல், இப்படி...

இருந்தாலும் நீதியை நிலை நாட்டும் அரசாங்கம் எல்லாருக்கும் உணவுப் பொருட்களும் மற்ற பொருட்களும் குறிப்பிட்ட விலைக்குக் கிடைக்கும் வண்ணம் எல்லாருக்கும் ரேஷன் கார்டுகள் கொடுத்திருந்தன. ஒரு குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்குத் தேவையான பொருட்களை ஒரு வாரத்திற்கு வைத்துக் கொள்ளும்படி ரேஷன் கார்டுகள் மூலம் அரசாங்கம் நியாய விலைக் கடைகளில் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், அதை வாங்குவதற்கே கையில் காசு இல்லையென்றால்...?

பணமும் இல்லாமல், பணத்தை உண்டாக்கக் கூடிய வேலையும் கிடைக்காமல், ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் பசியால் வாடிப்போய் வதங்கி அழிந்து கொண்டிருந்தன. ஆனால், இப்படி நித்தமும் அழிந்து கொண்டிருந்தோர் பட்டிய லில் ஆயிரக்கணக்கான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். இவர்களில் நிறைய துன்பங்களை அனுபவிக்கவேண்டி வந்தவர்கள் பெண்கள்தாம்.

அவர்கள் ஒருவேளை உணவுக்காக எதைச் செய்யவும் தயாராக இருந்தார்கள். என்ன செய்தாலும் உணவுப் பொருட்கள் கிடைப்பதென்பது மிகப்பெரிய ஒரு விஷயமாக இருந்தது. பணம் இருந்தால்கூட, உணவுப் பொருட்கள் இல்லை என்ற நிலை. அரசாங்க டிப்போக்கள்கூட கிட்டத்தட்ட காலிதான். நாட்டில் இருந்த தானியங்கள் எங்கே போயின? போரின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய இறக்குமதிப் பொருட்கள் வரவில்லை என்றாலும், இந்த நாட்டில் தானியங்கள் இருந்தனவே! அவை எங்கே? போருக்கு முன்னால் இருந்தனவே! விவசாயம் செய்யக் கூடிய ஏராளமான நிலங்கள் இங்கு தரிசு நிலங்களாகக் கிடந்தன. அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? அரசாங்கத்தின் விவசாய இலாகா, விவசாயம் சம்பந்தமாக பெரிய அளவில் ஆர்வம் எடுத்துச் செயல்படுகிற ஒரு இலாகாவாக இல்லை என்பதே உண்மை.


அரசாங்கத்தின் முக்கிய வேலையே சட்டம் உண்டாக்குவது என்பதாக இருந்தது. நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, அரசாங்கம் புதிய அறிவிப்புகளுடன் முன்னால் வந்து கொண்டிருந்தது.

உங்களின் வீடுகளின் முன்னால் இருக்கும் பூந்தோட்டங்களை விவசாயம் செய்யக் கூடிய இடங்களாக மாற்றுங்கள்!

அதுவும் முடிந்தது. அப்படியும் பஞ்சம் தீர்ந்தபாடில்லை. பட்டினியால் தினமும் மக்கள் செத்துக் கொண்டிருந்தனர். சவங்களிடமும் ரூபாய் நோட்டுகள் இருந்தன. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போது அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை உண்டாக்கியது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் தானியத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு ஒரு விலை போட்டு வாங்கிக் கொள்ளலாம். அது ஒரு நல்ல அறிவிப்புதான் என்றாலும், அதனால் அரசாங்கத்திற்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. அரசாங்கம் கொடுக்கும் விலையைவிட மூன்று நான்கு மடங்கு அதிகப் பணம் கொடுத்து வாங்கி, அதை ஐந்திலிருந்து பத்து மடங்கு அதிகம் வைத்து மக்களிடம் விற்பதற்கு பெரிய வியாபாரிகள் தயாராக இருந்தார்கள். அவர்கள் பக்கம் நிற்பதைத்தான் அதிகாரிகளும் விரும்பினார்கள்.

காரணம்- வியாபாரிகளிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய லஞ்சப் பணம். அவர்களிடம் இருப்பது கள்ள நோட்டா என்று கேட்க யாருக்கும் தைரியம் கிடையாது. அப்படி யானால், கள்ள நோட்டு எங்கிருந்துதான் வந்தது? மக்களை இப்படியொரு கேள்வியைக் கேட்க வைத்த ஒரு சம்பவம் அரசாங்கத்தின் டிப்போவில் நடந்தது. ரேஷன் கார்டுகளுடன் அங்கு மக்கள் ஈயைப்போல மொய்த்துக் கொண்டிருந்தனர். ஐந்து பேர்களுக்கான ரேஷன் கார்டுடன் எலும்பும் தோலுமாய் இருக்கும் ஒரு சிறு பெண் கூட்டத்தை நெருக்கிக் கொண்டு டிப்போ ஊழியர் முன் போய் நின்றாள். அவள் கையில் ஒரு புதிய பத்து ரூபாய் நோட்டு இருந்தது. "இந்தக் கள்ளநோட்டு உனக்கு எங்கே இருந்து கிடைச்சது?” என்று அந்த மனிதன் கேட்டபோது, அவள் வெலவெலத்துப் போனாள். அழுதவாறே தன் தாய் கொடுத்தனுப்பியதாக அந்தச் சிறு பெண் சொன்னாள்.

இந்தச் சம்பவத்தைச் சொன்ன போலீஸ்காரன் அந்தச் சிறு பெண்ணையும் அழைத்துக் கொண்டு அவளின் தாயிடம் சென்றான். அவர்கள் பட்டாளக் கேம்ப்பிற்குப் பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்கீழே இருந்த ஒரு குடிசையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். குடிசைக்குப் பக்கத்தில் நின்று அந்தப் பெண்ணின் தாயை அவன் அழைத்தான்.

“அம்மா எந்திரிக்க முடியாமப் படுத்துக் கிடக்கிறாங்க'' என்று அழுதவாறே அந்தப் பெண் சொன்னாள். அந்தப் போலீஸ்காரன் முரட்டுத்தனத்துடன் வாசல் கதவு அருகே போனான்.

மூத்த மகள் வீட்டில் இல்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தான் அவன். ஆனால், அவள்தான் வீட்டில் இல்லையே!

அந்தப் பெண்ணின் தாய் இறந்துபோன சவத்தைப்போல எந்தவித அசைவும் இல்லாமல் படுத்துக் கிடந்தாள். அவளுக்குப் பக்கத்தில் செத்துப்போன மாதிரி மூன்று குழந்தைகள்! போலீஸ் காரனைப் பார்த்ததும் அவர்கள் எல்லாரும் பயந்துபோய் விட்டனர். “கள்ள நோட்டு உங்களுக்கு எங்கே இருந்து கிடைச்சிச்சு?' என்று அவன் கேட்டபோது, அந்தத் தாய் சலனமே இல்லாமல் கிடந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் கழித்து அந்தத் தாய் பேசினாள்: “எங்களை நீங்கதான் காப்பாத்த ணும். கடவுள், எஜமான் உங்களைக் காப்பாற்றுவார். நாங்க சரியா சாப்பிட்டு ரெண்டு வருஷமாச்சு. எங்களுக்கு ரேஷன் கார்டு இருக்கு. ஆனா, அதை வாங்கப் பணம் இல்ல. ஏதாவது விஷத்தைக் குடிச்சு செத்துடலாமான்னு பார்த்தோம். அப்போதான் கடவுள் காப்பாத்தினாரு. எஜமான், நீங்கதான் எங்களைக் காப்பாத்தணும். கள்ள நோட்டு அதுன்னு எங்களுக்குத் தெரியாது!''

சொல்லி முடித்த அந்தத் தாய் தன் குடும்பத்தைப் பற்றித் தெளிவாக விவரித்தாள். அவளின் கணவன் ஒரு தொழிலாளியாக இருந்தான். போர் ஆரம்பித்தவுடன் அவனுக்கு வேலை இல்லாமற் போனது. பஞ்சம் வந்ததும், கணவன் செத்துப்போனான். நான்கு பெண் குழந்தைகளும் தாயும் கஷ்டப்பட்டு வாழ வேண்டிய நிலை. மூத்த மகள் மட்டும்தான் வேலை செய்கிற அளவிற்கு உடல் தெம்பு உள்ளவள். ஆனால், அவளுக்கு வேலை கிடைத்தால்தானே! அவள் கொண்டு வரும் தேங்காய் மட்டையை வைத்து, கயிறு பிரிப்பார்கள். அதற்குக் கூலியாக அப்படியொன்றும் அதிகமாகக் கிடைக்காது. அரை ரூபாய் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? தாங்க முடியாத கஷ்டம்தான். இருந்த வீட்டை கணவன் வாங்கிய கடனுக்காக, பணம் கொடுத்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இவ்வளவு சொன்ன அந்தத் தாய் கள்ள நோட்டு எங்கே இருந்து கிடைத்தது என்பதை மட்டும் கூறவே இல்லை.

போலீஸ்காரன் அவளை மிரட்டினான். “அடிச்சு எலும்பை உடைச்சிடுவேன்'' என்று உறுமினான். அப்போது அந்தப் பெண் சொன்னாள்: “ஒரு ஆள் கொடுத்தாரு...''

“யார்?''

யார் என்று அவளால் பெயர் சொல்ல முடியவில்லை.

“இன்னும் எத்தன ரூபா இருக்கு?''

“அவ்வளவுதான். ஒரே நோட்டுதான். வேற இல்ல...''

அதோடு போலீஸ்காரன் விடவில்லை. மேலும் மிரட்டினான். விளைவு- இன்னும் நோட்டுகள் இருப்பதாக அந்தப் பெண் ஒப்புக் கொண்டாள். ஒரு பானைக்குள் கைவிட்டு ஒரு பழைய துணியால் கட்டப்பட்ட பொட்டலத்தை எடுத்தாள். அதை அவிழ்த்தபோது பத்து ரூபாய் நோட்டுகளும், நூறு ரூபாய் நோட்டுகளும் வெளியே வந்தன. மொத்தம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தது. எல்லாமே புத்தம் புதிய நோட்டுகள்! பணத்தைக் கொடுத்த ஆள் யாரென்று சொல்லத் தெரியவில்லை. “நல்ல இருட்டா இருந்துச்சு. யாரோ பெரிய ஆள் மாதிரிதான் இருந்தாரு. மூத்த மகளை அவர் கூட அனுப்பி வச்சா, தானே காப்பாத்துறதா சொன்னாரு!''

மூத்த மகளுக்குப் போக விருப்பமில்லை. இருந்தாலும் அவள் போனாள்.

நடந்தது அவ்வளவுதான்.

அந்தக் கள்ள நோட்டு வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, கள்ள நோட்டை வாங்கிக் கொண்டு விற்பனை செய்யப்பட்ட மகளைப் பற்றித் தெரிய வந்தது. அந்தப் போலீஸ்காரன் அந்தத் தாயை அழைத்துக் கொண்டு சென்று மகளைக் கண்டுபிடித்தான்.

பட்டாளக் கேம்ப்பை அடுத்து இருக்கும் வயலில் கூட்டமாக மக்கள் நின்றிருந்தனர். என்னவென்று சென்று பார்த்தபோது, ரத்தம் புரண்ட ஒரு கட்டு கள்ள நோட்டை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்தவாறு அந்தப் பெண்ணின் மூத்த மகள் இறந்து கிடந்தாள். அவளின் மார்புப் பகுதி திறந்து கிடந்தது. உடுத்தியிருந்த ஆடையின் முன்பக்கம் முழுவதும் ரத்தம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.