Logo

திவாகரனின் தந்தை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6350
Diwakaranin Thanthai

ன்னுடைய ஒரு நெருங்கிய நண்பராக இருந்த சுகுமாரன் வக்கீலின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவருடைய சொந்த ஊருக்குச் சென்ற மறுநாள் அந்த இடங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்ப்பதற்காக அவர் என்னை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார்.

அதிகமான ஆட்கள் வசிக்காத ஒரு கிராமப் பகுதியாக அது இருந்தது. வக்கீல் ஒரு பெரிய ஜமீன்தாராக இருந்ததால், அங்கிருந்த இடங்களில் பெரும்பாலானவை அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன.

நேரம் மதியம் ஆனது. தலைகள் காய்ந்து கருகி விட்டிருந்த ஐந்தோ ஆறோ வயதான தென்னை மரங்கள் மட்டுமே எஞ்சியிருந்த, விசாலமான ஒரு வெள்ளை மணல் இருந்த நிலத்தை நாங்கள் அடைந்தோம்.

அந்த நிலப் பரப்பின் கிழக்குப் பகுதியில் இன்னொரு நிலம் இருந்தது. அங்கு செல்லக்கூடிய வழியில் முட்களால் ஆன கதவு ஒரு ஆமைப்பூட்டு கொண்டு பூட்டப்பட்டிருந்தது. என்னுடைய நண்பர் தன்னுடைய பெல்ட்டில் தொங்கிக் கொண்டிருந்த சாவிக்கொத்திலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து பூட்டைத் திறந்தார்.

என்னுடைய நண்பர் முன்னால் நடந்தார். பின்னால் நானும். ஒரு சுடுகாட்டிற்குள் நுழைவதைப் போன்ற ஒரு பய உணர்வு, காரணமே இல்லாமல் என்னை ஆட்கொண்டது. அந்த நிலப்பகுதி அந்த அளவிற்கு மிகப் பெரிய அளவு கொண்டதாக இல்லாமலிருந்தாலும், நிறைய மரங்களைக் கொண்டிருந்தது. பயங்கரமான ஒரு தனிமை அங்கு எப்போதும் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அங்கு காய்ந்த சருகுகள் விழுந்து நிலம் முழுவதும் மூடிக் கிடந்தது. நான்கு பக்கங்களிலும் உயரமாக முள் வேலி கட்டப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்ததால் ஒரு நாய்கூட அங்கு நுழைய முடியவில்லை.

ஒரு பெரிய புளியமரம், சில சவுக்கு மரங்கள், வேறு சில பெரிய மரங்கள்- இவை அனைத்தும் அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்த நிலம் ஒரு காட்டைப் போல காட்சியளித்தது. ஆனால், என்னை அதிகமாகக் கவர்ந்ததும் அச்சமுறச் செய்ததும் அங்கு நிலவிக் கொண்டிருந்த ஆழமான பேரமைதிதான். அது என்னுடைய இதயத்தை மரத்துப் போகச் செய்தது. நரம்புகளை முறுக்கேறச் செய்தது. என்னுடைய நண்பர் திடீரென்று பின்பற்றிய மவுனம் என்னுடைய பயத்தையும் சந்தேகத்தையும் அதிகமாக்கியது. அந்தப் பேரமைதியுடன் போரிட்டு, பயந்து போய் சத்தம் போட்டுக் கொண்டிருந்த என்னுடைய கன்ன நரம்புகளின் "பும்” என்ற சத்தம் மட்டும் எனக்கு கேட்டுக் கொண்டிருந்தது. எங்கிருந்தாவது- ஏதாவதொரு நாசமாய்ப் போன உயிரினம் சற்று ஓசை உண்டாக்கியிருந்தால்...! என்று நான் நினைத்தேன். ஆனால், அந்த மரத்துப் போன பேரமைதிக்கு எந்தவொரு மாறுதலும் உண்டாக வில்லை.

நாங்கள் எங்கு போகிறோம்? அந்த நிலப்பகுதி என்ன? இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும், அந்தப் பேரமைதியைக் குலைப்பது ஒரு கொலைச் செயலைச் செய்வதற்கு நிகரானது என்று எனக்குத் தோன்றியதால் மவுனமாக இருப்பதற்கு நான் கட்டாயப் படுத்தப்பட்டேன்.

பிணத்தை ஆர்வத்துடன் கொத்தி இழுக்கும் கழுகைப்போல ஒரு பெரிய பிணம் தின்னும் காகம் அந்தப் பலா மரத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பலாப் பழத்தை அமைதியாகக் கொத்தி இழுத்து விழுங்கிக் கொண்டிருந்தது. ஒரு புறாவும் அங்கு பறந்து வந்தது. ஆனால், அதுவும் ஓசை உண்டாக்கவில்லை.

நான் என்னுடைய நண்பரை, ஒரு மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு இருப்பதைப்போல பின்தொடர்ந்தேன். அவர் அந்த நிலத்தின் தெற்குப் பகுதியை நோக்கி நடந்தார். அங்கு காலியாகக் கிடந்த ஒரு இடம் வட்ட வடிவத்தில் சீர் செய்யப்பட்டு காட்சியளித்தது. அங்கு விழுந்து கிடந்த காய்ந்த ஐந்தெட்டு மா இலைகளை என்னுடைய நண்பர் பொறுக்கி எடுத்து தூரத்தில் எறிந்தார். தொடர்ந்து நாங்கள் நிலத்தின் வடக்குப் பகுதியை நோக்கி நடந்தோம். அங்கு சிதிலமடைந்த, அழிவு நிலைகளில் இருந்த ஒரு ஓலைக் குடிசை வெறுமனே கிடந்தது. இருள் நிறைந்திருந்த அதன் உட்பகுதிக்குள் என்னுடைய நண்பர் நுழைந்து பார்த்தார். நான் பேய்கள் இருக்கின்றன என்பதை நம்பாத மனிதனாக இருந்தாலும், பட்டப் பகலில் அதற்குள்ளிருந்து பேய்கள் எட்டிப் பார்க்கின்றன என்பதைப் போல எனக்குத் தோன்றியது. அந்த நிலத்தில் அரை மணி நேரம் இருந்து விட்டு, நாங்கள் அங்கிருந்த திரும்பினோம். அந்த முட்களால் ஆன கதவை முன்பு இருந்த மாதிரியே பூட்டிவிட்டு, என்னுடைய நண்பரும், பின்னால் நானும், முன்னால் சொன்ன வெண்மணல் பரப்பிற்குள் மீண்டும் கால் வைத்தோம். அப்போதுதான் என்னுடைய நாக்கிற்கு அசையக் கூடிய ஆற்றல் கிடைத்து விட்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.

“மிகவும் தாகமாக இருக்கிறது.'' நான் மிகுந்த பதைபதைப்புடன் என்னுடைய நண்பரிடம் கூறினேன். என் தொண்டை சுக்கைப் போன்று வறண்டு போயிருந்தது.

நாங்கள் அந்த நிலத்தின் மூலையில் இருந்த ஒரு ஆல மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தோம். பிறகு ஒரு மனிதனிடம் கூறி இரண்டு மூன்று இளநீர்களைப் பறித்து வரச் செய்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டோம்.

நான் என்னுடைய நண்பரிடம் கேட்டேன்: “அந்த நிலம் என்ன?'' “அது திவாகரனின் நிலம்'' என்று அவர் கூறியபோது, எனக்கு பெரிய ஆச்சரியம் உண்டானது. இறுதியில் அவர் அந்தக் கதையை என்னிடம் கூறியபோது, எனக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. அவர் கூறிய கதையைத்தான் இங்கு சேர்த்திருக்கிறேன்.

அந்த சம்பவம் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அன்றும் இந்த நிலம் இப்படியேதான் எந்தவிதமான கவனமும் செலுத்தப்படாமல், புற்களும் செடிகளும் முழுமையாக வளர்ந்து, படர்ந்து, இருள் நுழைந்து, தனிமை பயம் நிறைந்ததாக இருந்தது. இந்த நிலத்தின் அன்றைய உரிமையாளர்தான் இன்று நீங்கள் இதில் பார்த்த வீட்டைக் கட்டியவர். ஆனால், வீட்டின் வேலைகள் பாதி முடிவடைவதற்கு முன்பே அவர் காரணமே இல்லாமல் மரண மடைந்து விட்டார். அதற்குப் பிறகு அந்த வேலையை முழுமை செய்வதற்கு யாரும் முயற்சிக்கவில்லை.

அந்த நிலத்தைப் பற்றி பலரும் பல கதைகளையும் கூறிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு வீடு முடிவடையாத இடம். அங்கு ஒரு பாழுங்கிணறு இருக்கிறது. அதில் தங்கத் துகள்கள் இப்போதும் இருக்கின்றன என்று ஆட்கள் கூறுகிறார்கள். இங்கு உள்ளவர்கள் எல்லாருக்கும் அந்த நிலத்தைப் பற்றி பெரிய பயம் இருக்கிறது. அவர்கள் அதை, “சைத்தானின் நிலம்'' என்றுதான் குறிப்பிடுகி றார்கள். சாயங்கால நேரம் வந்துவிட்டால், அதற்குப் பிறகு ஒரு மனித உயிரைக்கூட இந்த நிலத்தின் கூப்பிடும் தூரத்தில் பார்க்க முடியாது.


இந்த நிலத்தில் இருக்கும் பலா, மாங்காய் போன்றவற்றை அணிலும் காகங்களும் தவிர யாரும் ருசித்துப் பார்ப்பதுகூட இல்லை. அது இருக்கட்டும். அந்தக் காலத்தில் ஒரு சாயங்காலப் பயணத்திற்காக இந்த வழியே வர நேர்ந்தபோது இந்த நிலத்தின் பயங்கர தன்மை என்னை முதல் தடவையாகக் கவர்ந்தது. சுற்றிலும் இருந்த இடங்களைவிட முற்றிலும் மாறுபட்டு இருந்த இதன் யாருக்குமே தெரியாத தன்மையும், தனிமை உணர்வும், பேரமைதியும், இனம் புரியாத தன்மையும் சேர்ந்து என்னை அதிர்ச்சியடையச் செய்தன. ஒன்றோடொன்று இணைந்து கிடக்கும் ஒரு பயங்கர ரகசியத்திற்குள் நுழைவதைப் போல அந்த நிலத்தை நான் உற்றுப் பார்த்தபோது, என்ன ஒரு ஆச்சரியம்! அந்த மரக் கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு வனதேவதை தோன்றினாள்.

ஆமாம்... நான் பார்த்தது ஒரு வனதேவதை அல்ல என்பதை எப்படி நம்புவது? சாயங்காலம் கடந்து விட்டிருந்த நேரமாக இருந்தி ருந்தால் நிச்சயமாக நான் பயப்பட்டு கூப்பாடு போட்டிருப்பேன்.

அந்த இளம்பெண் மின்னலைப் போல வேலிக்கு அருகில் வந்தாள். ஒரு இனம் புரியாத உணர்ச்சி அவளுடைய வெளிறிப் போயிருந்த முகத்தை ஒரு மாதிரி ஆக்கி விட்டிருந்தது.

“இங்கு அருகில் எங்காவது டாக்டர்கள் இருக்கிறார்களா?''

அவளுடைய குரல் சாதாரண மனிதக் குரல் அல்ல என்று எனக்குத் தோன்றியது. அந்த கறுத்த விழிகளை உருட்டியவாறு கண்களை இமைக்காமல் அவள் என்னுடைய பதிலை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சுமார் இரண்டு மைல் தூரத்தில், நீதிமன்றத்திற்கு அருகில், ஒரு டாக்டர் இருக்கிறார் என்ற விஷயத்தை நான் எப்படியோ கூறினேன்.

“சார்... நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா? அந்த டாக்டரை உடனடியாக சற்று அழைத்துக் கொண்டு வர வேண்டும். என் குழந்தைக்கு தீவிரமான நோய் வந்திருக்கு.''

“அப்படியே நடக்கட்டும்'' என்று சம்மதித்தவாறு நான் சிரமப்பட்டு திரும்பி நடந்தேன்.

ஒரு மணி நேரத்தில் ஒரு பழைய ஜட்கா வண்டியில் டாக்டர் குமாரதாஸும் நானும் அந்த நிலத்திற்கு அருகில் வந்தோம்.

மெல்லிய ஒரு பயத்துடனும் சந்தேகத்துடனும் நான் முன்னாலும் டாக்டர் பின்னாலுமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தோம்.

மழை பெய்து குழி விழுந்திருந்த முற்றத்தைத் தாண்டி நாங்கள் குறுகலானதும் இருளடைந்ததுமாக இருந்த ஒரு கூடத்திற்குள் நுழைந்தோம். நோயாளி தெற்கு பக்கத்தில் இருந்த அறையில் படுத்திருந்தான். அறையின் சுவர்களில் பாதி பெரிய கற்களைக் கொண்டும் மீதிப் பகுதி ஓலையாலும் உண்டாக்கப்பட்டிருந்தது. வெயிலும் மழையும் உள்ளே வராமல் இருக்கும் வண்ணம் மேல் கூரை ஓலையால் உண்டாக்கப்பட்டிருந்தது. தாழ்ப்பாள்கள் வைக்கப் படாத சாளரத்தின் வழியாக பகலின் எஞ்சியிருந்ததும் சோர்வடைந்தது மான வெளிச்சம் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.

எங்களைப் பார்த்ததும் அவள் மரியாதையுடன் எழுந்து ஒரு பழைய நாற்காலியை எடுத்துப் போட்டாள்.

கையும் காலும் ஒழுங்காக இல்லாத நிலையில் இருந்த அந்த ஆபத்தான நாற்காலியைச் சற்று சந்தேகத்துடன் பார்த்துவிட்டு, டாக்டர் தன்னுடைய தோல் பையை அதன்மீது வைத்துவிட்டு, அருகில் குனிந்து நின்றார்.

அறையில் நல்ல வெளிச்சத்தைக் கொண்ட ஒரு தீபம் வேண்டுமென்று அவர் கூறினார். அவள் உடனே ஒரு "ஹரிக்கேன்” விளக்கை எரிய வைத்துக் கொண்டு வந்து ஒரு ஸ்டூலின்மீது வைத்து விட்டு விலகி நின்றாள்.

சுமார் ஒன்பது வயது இருக்கக்கூடிய ஒரு சிறுவன் கட்டிலின்மீது மல்லாந்து படுத்திருந்தான். அவனுடைய பிரகாசமான வட்ட முகத்தையும், ஒளி படைத்த பெரிய கருமையான கண்களையும் பார்த்து விட்டு டாக்டர் தன் தோல் பையைத் திறந்தார். உடனே சிறுவன் டாக்டரிடம் சற்று மிடுக்கான குரலில் சொன்னான்: “டாக்டர்... உங்களுடைய கைக்கடிகாரம் நின்று போய்விட்டது.''

டாக்டர் உடனே தன்னுடைய கைக்கடிகாரத்தைக் காதில் வைத்துப் பார்த்தார். அது நடக்கவில்லை. அவர் அதைத் துடைத்து ஓட விட்டு, ஒரு புன்சிரிப்புடன் சிறுவனின் முகத்தையே பார்த்தார்.

டாக்டர் சிறுவனைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவனுடைய தாய் என்னை அருகிலிருந்த அறைக்கு அழைத்தாள். ஒரு தங்கத்தால் ஆன கம்மலை என்னுடைய கையில் தந்துவிட்டு அவள் சொன்னாள்: “என் கையில் டாக்டருக்குக் கொடுப்பதற்குப் பணமில்லை. தற்போதைக்கு இதை அடகு வைத்து தேவையானதைச் செய்தால், பெரிய உதவியாக இருக்கும்.''

அவளுடைய கையிலிருந்து அந்த கம்மலை வாங்குவதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால், வாங்காமல் இருக்கக் கூடிய அளவிற்கு எனக்கு அவள் யார்? இந்த எண்ணமும் உண்டாகாமல் இல்லை. இறுதியில், நான் அவளைச் சமாதானப்படுத்தினேன்: “டாக்டருக்கு நான் பணம் தருகிறேன். பிறகு எனக்கு கொடுத்தால் போதும்.''

“சரியாக இருக்காது...'' அவள் வற்புறுத்தினாள்: “நீங்கள் இதை இப்போது வாங்கிக் கொள்ள வேண்டும். எனக்கு வேறு சில விஷயங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது.''

இறுதியில் மனமில்லா மனதுடன் நான் அந்த நகையை வாங்கினேன். நாங்கள் இருவரும் சிறுவன் படுத்திருந்த அறைக்குள் சென்றோம். அங்கு சிறுவனுக்கும் டாக்டருக்குமிடையே இந்த விதத்தில் ஒரு உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

“டாக்டர் குமாரதாஸ், இன்னும் நான் எத்தனை நாட்களுக்கு இப்படியே கிடக்கணும்?''

“என் குழந்தையே, ஒரு பதினைந்து நாட்களுக்குள் உனக்கு முழுமையான உடல் நலம் கிடைத்துவிடும்.''

“பதினைந்து நாட்களா? சார்... அந்தச் சமயத்தில் எனக்கு பதி னைந்து ஆங்கிலப் பாடங்கள் போய்விடுமே?''

“அது பரவாயில்லை... உடல் நலம்தானே பெரிய விஷயம்?''

டாக்டரும் நானும் வெளியே வந்தோம். சிறுவனின் நிலைமையைப் பற்றி நான் தனிப்பட்ட முறையில் டாக்டரிடம் விசாரித்ததற்கு அவர் சொன்னார்: “நிலைமை மிகவும் கவலைப்படக் கூடியது. சந்தேகப்பட வேண்டும். மிகவும் சந்தேகப்பட வேண்டும். டபுள் நிமோனியா...''

“எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. அவனை எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டும்.'' நான் சொன்னேன்.

“என்னால் முடியக்கூடிய அனைத்தையும் நான் செய்கிறேன். என்ன ஒரு அழகான பையன்!''

“ஆமாம்... ஆமாம்... தங்கக் கட்டியைப் போல இருக்கிறான்! அந்த அறையில் விளக்கின் தேவையே இல்லை என்று தோன்றுகிறது. கஷ்டம்! அந்தச் சிறுவன் போய் விட்டால்...?''

நாங்கள் குதிரை வண்டியில் ஏறி "தாஸ் ஃபார்மஸி'யின் முன்னால் போய் நின்றோம்.

டாக்டர் ஒரு புட்டி மருந்தைத் தயார் பண்ணி என் கையில் தந்தார். டாக்டரின் ஃபீஸையும் மருந்திற்கான விலையையும் நான் கொடுத்தேன். பிறகு மருந்தைக் கையிலெடுத்துக் கொண்டு நான் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தேன்.


“அம்மா... எனக்கு ஆரஞ்சுப் பழம் வேணும்.''

“திவாகரா... இங்கே எங்கும் ஆரஞ்சுப் பழம் கிடைக்காது. என் மகனே, உன் களைப்பை மாற்றுவதற்கு கொஞ்சம் பார்லி நீர் குடி...''

“அம்மா... என்னால் எதையும் குடிக்க முடியாது. ஆனால், நீங்க வற்புறுத்தினால் நான் குடிக்கிறேன்.''

தாயும் மகனும் இப்படி உரையாடிக் கொண்டிருந்தபோது நான் அங்கு நுழைந்தேன்.

திவாகரன் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு தன்னுடைய தாயிடம் ஏதோ ரகசியமாகக் கேட்டான். அவள் ஏதோ பதில் சொன்னாள்.

திவாகரன் என்னைத் தன் அருகில் வரும்படி அழைத்தான். நான் அவனுடைய மெத்தைக்கு அருகில் போய் நின்றேன்.

அவன் என் கையைப் பிடித்துக் கொண்டே சொன்னான்: “நீங்கள் செய்த உதவிக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.''

நான் புன்னகைத்துக் கொண்டே அவனுடைய மெத்தையில் உட்கார்ந்து அவனுடைய கையைத் தடவினேன்.

சிறிது நேரம் கழிந்ததும் அவன் கேட்டான்: “உங்களுக்கு என்ன வேலை?''

நான் சொன்னேன்: “நான் ஒரு வக்கீல்''.

“நான் படித்து பெரியவனாக ஆன பிறகு ஒரு வக்கீலாக வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆனால், ஒரு டாக்டராக ஆவதுதான் நல்லதென்று இப்போது தோன்றுகிறது.''

நான் சிரித்துக் கொண்டே கேட்டேன்: “எதனால்?''

“காரணம்- நான் ஒரு சிறிய காரில் ஏறி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கலாம். எல்லாரும் என்னை டாக்டர் திவாகரன் என்று அழைப்பார்கள். வக்கீல் திவாகரன் என்பதைவிட டாக்டர் திவாகரன் என்று இருப்பதுதான் நல்லது. பிறகு எனக்கு சொந்தத்தில் பெரிய மருத்துவமனை இருக்கும். அதற்கு நான் என்னுடைய தாயின் பெயரை வைப்பேன். "இந்திரா ஃபார்மஸி” என்று.'' அவன் அர்த்தம் நிறைந்த ஒரு குறும்புச் சிரிப்புடன், இடது கண்ணால் தூரத்தில் தைத்துக் கொண்டிருந்த தன்னுடைய தாயைச் சற்று பார்த்தான். இந்திராவும் சிரித்துக் கொண்டே என்னுடைய முகத்தைப் பார்த்தாள்.

தொடர்ந்து திவாகரன் என்னிடம் ரகசியமான குரலில் சொன்னான்: “எனக்கு ஒரு ரப்பர் குழாய் வேண்டும். அந்த டாக்டர் காதில் வைத்த பொருள் இருந்தது அல்லவா? அதைப் போன்று ஒன்று. அதன் பெயர் என்ன?''

“ஸ்டெத்தாஸ்கோப்'' என்று நான் சொன்னேன். அவன் அந்த பெயரை ஐந்தெட்டு தடவை திரும்பத் திரும்பக் கூறினான்.

அன்று சாயங்காலம் நான் கோழிக்கோட்டிற்குச் சென்று டாக்டர் பெயர் எழுதித் தந்த புதிய மருந்தையும், ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்களையும் டாக்டர் தாஸிடமிருந்து ஒரு பழைய ஸ்டெத்தாஸ்கோப்பையும் வாங்கிக் கொண்டு திவாகரனிடம் வந்தேன்.

நான் கொண்டு வந்திருந்த சாமான்களையும் பரிசுகளையும் பார்த்து அவனுடைய முகம் மலர்ந்தது. அவன் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்து, கூடையிலிருந்து ஆரஞ்சுப் பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து மெத்தைமீது வைத்தான். பிறகு... அந்த ரப்பரால் ஆன கருவியைக் காதில் வைத்துக் கொண்டான். முதலில் தன்னுடைய இதயத் துடிப்பையும் தன் தாயின் இதயத் துடிப்பையும் ஆர்வத்துடன் கவனித்தான். அதற்குப் பிறகு அவன் சிறிது நேரம் என்னுடைய முகத்தையே அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஒரு மெல்லிய உருக்கத்துடன் என் கையைப் பிடித்து அழுத்தியவாறு திவாகரன் சொன்னான்: “நீங்கள் எவ்வளவு நல்ல மனிதர்! இப்படி யாரும் எங்களிடம் கருணை காட்டியதில்லை.''

தொடர்ந்து அவன் தன்னுடைய முகத்தை நான் முத்தமிட வேண்டும் என்பதைப் போல உயர்த்திக் காட்டினான்.

அந்த வெளிறிய வியர்வை அரும்பியிருந்த கன்னத்தில் உணர்ச்சி வசப்பட்டு நான் மீண்டும் மீண்டும் முத்தமிட்டேன்.

தன்னுடைய கன்னங்களைத் துடைத்துக் கொண்டே அவன் சொன்னான்: “என் தாயைப் போல, அந்த அளவிற்கு கடுமையாக முத்தமிட உங்களுக்குத் தெரியவில்லை சார்.''

மறுநாள் காலையில் நான் திவாகரனைப் பார்ப்பதற்காகச் சென்றேன். அவன் படுக்கையில் கண்களை மூடிக்கொண்டு தளர்ந்து போய் படுத்திருந்தான். இந்திரா மெத்தைமீது உட்கார்ந்திருந்தாள்.

என்னைப் பார்த்ததும் அவள் எழுந்து நான் உட்காருவதற்காக ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டாள். இந்திரா சொன்னாள்: “நேற்று இரவு திவாகரனுக்கு உடல்நலக் கேடு கொஞ்சம் அதிகமாகி விட்டது. ஒருமுறை சுயஉணர்வு இல்லாத நிலைகூட உண்டாகி விட்டது.'' ஆடையால் கண்ணீர் துளிகளைத் துடைத்துக் கொண்ட அவள் தொடர்ந்து சொன்னாள்: “எங்களுக்கு இங்கே யாரும் துணையென்று இல்லை. என்னை விற்றால்கூட பரவாயில்லை. நான் திவாகரனைக் காப்பாற்றியாக வேண்டும்.''

அவள் கருணை கலந்த ஒரு பார்வையை என்னை நோக்கிச் செலுத்தினாள். நான் அழவில்லை. அவ்வளவுதான்.

உடனடியாக நான் டாக்டரைத் தேடி ஓடினேன். மீண்டும் அவர் வந்து திவாகரனைச் சோதித்துப் பார்த்துவிட்டு திரும்பிச் சென்றார்.

திவாகரன் கண்களைத் திறந்தான். “என் அப்பா வந்துட்டாரா?'' என்று கேட்டான்.

எதிர்பாராத அந்தக் கேள்வியைக் கேட்டு நான் திகைத்துப் போய்விட்டேன். இந்திராவின் உதடுகளோ வெள்ளைத் தாளைப் போல வெளிறிப் போயின.

திவாகரன் சற்று கோபத்துடன் இந்திராவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டே மீண்டும் கேட்டான்: “சொல்லுங்க... என் அப்பா வந்துட்டாரா இல்லையா?''

அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். திவாகரனின் கோபம் அளவுக்கு மேல் அதிகமானது. அவன் விரிப்பை எடுத்து வீசி எறிந்தான்.

“சொல்லுங்க... என் அப்பா வரவில்லையா? இல்லாவிட்டால் எனக்கு அப்பான்னு ஒருத்தர் இல்லையா?''

இந்திரா குலுங்கிக் குலுங்கி அழுதாள். திவாகரனின் நடவடிக்கை திடீரென்று மாறியது. அவன் ஒரு மான் குட்டியைப் போல அமைதியானவனாக ஆனான். இந்திராவை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு அவன் சொன்னான். “அம்மா, அழாதீங்க. நான் என் னென்னவோ சொல்லிட்டேன். நான் தூங்கும்போது என் அப்பா வந்திருப்பதாக ஒரு கனவு கண்டேன். அதனால்தான் நான் கேட்டேன். அப்பா வரலைன்னா வேண்டாம். வர்றப்போ வரட்டும்.''

அந்த அன்னையும் மகனும் ஒருவரையொருவர் இறுக அணைத் துக் கொண்டார்கள். அந்த அணைப்பில் சிக்கிக் கொண்டு திவாகரன் கண்களை மூடித் தூங்கிவிட்டான். திவாகரன் உறங்கிய பிறகு, நான் இந்திராவிடம் மெதுவான குரலில் கேட்டேன்:

“அவன் தன் தந்தையைப் பற்றி விசாரிக்கிறானே! அவனுடைய அப்பா எங்கே இருக்கிறார்?''

இந்திரா முகத்தைத் தாழ்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாளே தவிர, எந்த பதிலும் கூறவில்லை. மழைபெய்து முடித்தவுடன் மரங் களிலிருந்து நீர்த்துளிகள் விழுவதைப் போல அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வழிந்து கொண்டிருந்தன.

நான் மீண்டும் கேட்டேன்: “திவாகரனின் தந்தை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?''


அவள் இருக்கிறார் என்றோ இல்லை என்றோ கூறவில்லை. பயங்கரமான ஏதோ நினைவில் அவளுடைய முகத்தில் இருந்த அழகு ஒரு நிமிட நேரத்திற்கு இல்லாமற் போனது. தன்னுடைய சுருண்ட தலைமுடியை இறுகப் பற்றிக்கொண்டு, தூங்கிக் கொண்டி ருக்கும் கோழியைப் போல அவள் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

நான் அதற்குப் பிறகு அவளிடம் எதையும் கேட்கவில்லை. எனக்கு அனைத்தும் புரிந்துவிட்டன.

முதலில் ஈர்க்கப்படுவது, பிறகு சகித்துக் கொள்வது, சம்மதிப்பது, அதில் இன்பம் காண்பது, இறுதியில் அழுவது, கவலைப்படுவது, கடைசியில் நிரந்தரமாகக் கஷ்டப்படுவது- ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அந்த பயங்கரமான ரகசியங்கள்... நாகரீகத்திற்காகப் புதுப்பிக்க முடியாத அந்த பழைய பல்லவிகள்... அதற்குப் பிறகும் நான் எதற்கு அதைப் பற்றிக் கூற வேண்டும்?

திவாகரன் கண் விழித்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான். நான் அவனுக்கு அருகில் சென்றேன். என்னைப் பார்த்ததும் அவன் சற்று புன்னகைத்துக் கொண்டே சொன்னான்: “வணக்கம். நான் உங்களை எப்படி அழைக்க வேண்டும்?''

நான் அவனுக்கு அருகில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனை அணைத்துக் கொண்டேன்.

“திவாகரா, நான் நீ காண வேண்டிய ஆள்தான்.''

“யார்?'' ஒரு சந்தேகத்துடன் அவன் என்னைப் பார்த்தான்.

“உன் அப்பா.''

“என் அப்பாவா?''

தன்னுடைய கறுப்பு விழிகளால் விழித்தவாறு அவன் சிறிது நேரம் அசைவே இல்லாமல் என்னையே பார்த்தான்.

ஆபத்து நிறைந்த ஒரு நீரோட்டத்திற்கு எதிராக என்னுடைய இதயம் நீந்திக் கொண்டிருந்தது. மலையில் இருக்கும் தனிமை அங்கு வந்து ஆட்சி செய்வதைப்போல எனக்குத் தோன்றியது.

திவாகரன் எழுந்து உட்கார்ந்தான். நான் அவனைத் தாங்கிக் கொண்டேன். அதற்குப் பிறகு சிறிது நேரத்திற்கு அவன் என் முகத்திலிருந்து தன் கண்களை எடுக்கவில்லை. தொடர்ந்து அவன் “அம்மா...'' என்று அழைத்தான்.

இந்திரா அருகில் வந்தாள்.

“அம்மா... இவர் என் அப்பாவா?''

இந்திராவின் முகம் வெளிறிப் போனது. அவள் குழப்பத்துடன் என் முகத்தையே பார்த்தாள்.

இந்திராவின் முகத்தை நானும் அர்த்தம் நிறைந்த ஒரு இரக்கப் பார்வையுடன் பார்த்தேன். அதைத் தொடர்ந்து, இப்போது சொல் லியே ஆக வேண்டும் என்பதைப் போல அவள் ஏதோ ஒரு சத்தத்தை உண்டாக்கினாள். அது அவளுடைய ஒப்புக்கொண்ட பதில் என்பதாக திவாகரன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவன் என்னுடைய மார்பில் கையை வைத்துக்கொண்டு சகஜமாக அந்த மிடுக்குடன் சொன்னான்: “அப்படின்னா நீங்கள்தானே என் அப்பா?''

நான் திவாகரனை இறுக அணைத்துக் கொண்டே சொன்னேன்: ஆமாம்... திவாகரா, நான் உன் அப்பா. நீ என் செல்ல மகன்.''

“நீங்கள் இரக்கம் இல்லாத ஒரு மனிதர் என்றாலும், நல்ல ஒரு அப்பா என்று தோன்றுகிறது. இல்லையா அம்மா?''

நான் சிரித்தேன்: “எதனால் அப்படிச் சொல்கிறாய் திவாகரா?''

“நீங்கள் இதுவரை என்னிடம் எதற்காகக் கூறவில்லை?''

“என் மகனான உன்னால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்பதற்காக அல்லவா நான் உன்னிடம் கூறாமல் இருந்தேன்?''

“ஓ... நான் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அம்மா சொல்லிக் கேட்டேனே தவிர, நான் இதுவரை உங்களைப் பார்த்ததே இல்லை. நான் என் தந்தையைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் அம்மா "அடுத்த நாள் வருவார்... நாளை வருவார்' என்று சொல்லுவாங்க. நீங்கள் இதுவரை எங்கே இருந்தீங்க? பினாங்கிலா? சிங்கப்பூரிலா? இல்லாவிட்டால்... காங்கிரஸில் சேர்ந்து சிறையில் இருந்தீங்களா?''

“மகனே, நான் உன்னைத் தேடி அலையாமல் இருந்திருப்பேனா?''

“அப்பா... அம்மா... நான் அப்படி அழைக்கட்டுமா? நான் உங்களிடம் என்னென்னவெல்லாம் பேசவேண்டும் தெரியுமா? அங்கே இருக்கும் சீதுவும் ராமுவும் என்னை தந்தை இல்லாத பையன் என்று சொல்லி கேலி பண்ணுவாங்க. அம்மா, அந்த வீட்டுல இருக்குற சீதுவைக் கூப்பிடுங்க...''

இந்திரா கேட்டாள்: “எதற்கு மகனே?''

“சீதுவிற்கு நான் என் அப்பாவைக் காட்டணும்.''

அப்போது என் கையில் இருந்த கடிகாரத்தையும் சட்டையின் தங்க நிறப் பொத்தானையும் அவன் உரிமையுடன் தன் கையில் வைத்திருந்தான்.

அன்று நான் அங்கிருந்து புறப்படும்போது இந்திரா தன்னுடைய நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு என்னிடம் சொன்னாள்: “நீங்கள் என்ன காரியம் செஞ்சீங்க? அய்யோ... நீங்கள் குழந்தையிடம் என்ன சொல்லிவிட்டிருக்கீங்க? மகா பாவம்...''

நான் எந்தவொரு சமாதானமும் கூறாமல் முகத்தைத் தாழ்த்தி வைத்துக்கொண்டே கிளம்பினேன்.

காலப்போக்கில் திவாகரனால் என்னை எந்தச் சமயத்திலும் பிரிந்து இருக்க முடியாது என்ற நிலை உண்டானது.

நாட்கள் செல்லச் செல்ல அவனுடைய நோய்க்கு குணம் உண்டாவதாகத் தெரியவில்லை. நான் டாக்டர் தாஸின் சிகிச்சையை நிறுத்திவிட்டு, கோழிக்கோட்டிற்குச் சென்று டி.எம்.ஓ.வை அழைத்துக் கொண்டு வந்தேன்.

மருத்துவ அதிகாரி சோதித்துப் பார்த்துவிட்டு சிகிச்சை செய்தபோது, திவாகரன் யாருக்கும் இரக்கம் உண்டாகிற குரலில் அவரிடம் கூறினான்:

“டாக்டர் டி.எம்.ஓ... நோ மணி... வீ வெரி புவர்.''

அந்த வார்த்தைகள் அந்த ஐரோப்பிய டாக்டரின் இதயத்தை மிகவும் தொட்டுவிட்டது. அவர் திவாகரனின் கன்னத்தில் முத்த மிட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் ஃபீஸ் வாங்க சம்மதிக்க வில்லை. அது மட்டுமல்ல- கோழிக்கோட்டில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு அவனை அழைத்துக் கொண்டு வரும் பட்சம், எல்லா உதவிகளையும் செய்வதாகவும் அவர் சொன்னார். ஆனால், அப்படிப்பட்ட ஒரு நீண்ட பயணம் தற்போதைய அவனுடைய உடல் நிலைமைக்கு ஆபத்தாகத் தோன்றியதால், நாங்கள் அந்தக் கருத்தை அலட்சியப்படுத்த வேண்டியதாகிவிட்டது.

அன்று சாயங்காலம் திவாகரனுக்கு நல்ல முன்னேற்றம் உண்டானது. அது அவனுடைய உடல் நலக்கேடு உண்டான பதினொன்றாவது நாள். அவனுடைய நிலைமையைப் பார்த்து நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைந்தோம். இந்திராகூட சந்தோஷத்துடன் பேச ஆரம்பித்தாள்.

ஆனால், இரவு வந்ததும் அவனுடைய நிலைமை மாறியது. அணையப் போகிற திரியைப் போல அவனுடைய முகத்தின் பிரகாசம் சற்று மங்கி, ஒளிர்ந்தது. இரவு எட்டு மணிக்கு அவன் கண்களைத் திறந்து தன் தாயை அழைத்தான்.

இந்திரா அருகிலேயே நின்றிருந்தாள்.

“அம்மா.. எனக்கு ஒரு முத்தம் தாங்க...''

இந்திரா அவனுக்கு முத்தமிட்டாள். தொடர்ந்து சுயஉணர்வு இல்லாமற் போனது.

இரண்டு நிமிடங்கள் கடப்பதற்கு முன்பே தினகரன் என் மடியில் படுத்து மரணத்தைத் தழுவிவிட்டான்

“அதோ... அங்கே தெரிவது... திவாகரனின் நிரந்தரமான ஓய்விடம். எனக்கும் இந்திராவிற்கும் இருப்பது அது மட்டுமே. இப்போது இந்திரா என்னுடைய மனைவி. புனித ஆலயம்...''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.