Logo

பாரம்பரியம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4932

பாரம்பரியம்

தகழி சிவசங்கரப்பிள்ளை

தமிழில் : சுரா

 

ரு நாள் காலையில் அந்த பிச்சைக்காரன் சுமை தாங்கிக் கல்லின் மீது சாய்ந்த நிலையில் இறந்து கிடந்தான். சுமை தாங்கிக் கல்லின் மீது ஒரு சிறிய மூட்டையும், அதற்கு மேலே அந்த வாளும் வைக்கப்பட்டிருந்தன. சந்திப்பிலிருந்த வியாபாரம் செய்பவர்களும் மற்றவர்களும் சுற்றிலும் கூடினார்கள். எல்லோரும் இரக்கத்துடன் நான்கு வார்த்தைகளைக் கூறினார்கள்,

பாவம்.... யாருக்கும் தொல்லை கொடுக்காதவனாக இருந்தான். எந்த திசையைச் சேர்ந்தவனோ? சந்திப்பிற்கு வந்து சேர்ந்து இரண்டு வருட காலம் ஆகியிருக்கும். அவன் யாருடனும் பேசி பார்த்ததில்லை. நாயர்களிடம் தவிர வேறு யாரிடமிருந்தும் அவன் நீர் பருக மாட்டான். சுமை தாங்கிக் கல்லில் பதிக்கப்பட்டிருந்த வார்த்தைகளை வாசிப்பதற்கு அவன் மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தான். இரவில் தூங்குவது விளையாட்டு நடக்கும் இடத்தில்தான். துணியால் மூடப்பட்டிருந்த அந்த வாளை ஒரு போர் வீரனைப் போல பிடித்தவாறு நடந்து செல்வதை நீக்கி விட்டுப் பார்த்தால், அவனிடம் பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு அடையாளமும் இல்லை.

காவல் துறையினர் வந்து பிணச் சோதனையை ஆரம்பித்தார்கள்.

அது ஒரு பழைய வாள். மூட்டையில் ஒரு செம்பு தகடும், ஒரு கடிதமும் இருந்தன. செம்பு தகட்டில் என்னவோ எழுதப்பட்டிருந்தது. யாராலும் வாசிக்க முடியாத ஏதோ பழைய எழுத்து.. கடிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது:

'பாதையின் ஓரத்தில் கிடந்து இறக்கும் பிச்சைக்காரனின் பிணம், பயணிப்பவர்களுக்கு ஒரு தொல்லையான விஷயம்.  அவன் அந்த வகையில் உடலை நீட்டிக் கொண்டோ சுருண்ட நிலையிலோ பாதி மூடப்பட்ட கண்களுடனோ திறக்கப்பட்ட வாயுடனோ கிடப்பதைப் பார்த்து பாதையில் நடந்து செல்வோரின் முகம் சற்று கோணும். அந்த பிச்சைக்காரன் ஏராளமான பதில்களை வைத்துக் கொண்டு மரணத்தைத் தழுவும் ஒரு பெரிய கேள்வியின் சின்னம்.

பாதையின் ஓரத்தில் கிடந்து இறக்கும் பிச்சைக்காரனின் வாழ்க்கை வரலாறு அந்த வகையில் யாருக்குமே தெரியாமல் போய் விடக் கூடாது. அந்த ஒவ்வொரு ஆதரவற்ற பிணத்திற்கும் ஒவ்வொரு செய்தி கூற வேண்டிய நிலை இருக்கும். இறுதி தாகத்தின் போது திறக்கப்பட்ட வாய், ஒரு துளி நீர் விழுந்து மூடாமல் இருந்தது, கண்களைக் காகம் கொத்தி எடுத்தது எல்லாவற்றையும் தெரிந்துகொண்டால், உலகத்திற்கு அருமையான பாடங்கள் கிடைக்கும். பாதையின் ஓரத்தில் அந்த வகையில் இருக்கக் கூடிய சாட்சிகள் குறையும்.

என்னுடைய மரணத்தின் மூலம் நானும் ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன். நான் பிறந்தது, வளர்ந்தது, மரணமடைந்ததால் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம் அது மட்டுமே. என்னுடைய செய்தி யுகங்களைக் கடந்து எல்லையற்ற பரம்பரைகளின் செவிகளுக்குள் போய்ச் சேர வேண்டும்.

நான் பிறந்தது ஒரு எட்டு அறைகளைக் கொண்ட பெரிய மாளிகையில்.... காசு மாலையும், தங்கத்தால் ஆன அரை ஞாணத்தையும் அணிவித்து, இலட்சக்கணக்கான பேர்களுக்கு நெல்லையும் பணத்தையும் கையாளக் கூடிய ஒரு மனிதர்தான் எனக்கு சோறு அளித்தார். எங்களுடைய பெரிய மாமா! ஊரிலேயே பெரிய மனிதர்!

எங்களுடைய குடும்பத்தின் பெருமை வரலாற்றையும் தாண்டியது. எங்களுடைய அறையில் மாணிக்கத்திற்கு நிகரான நெல்லும், பொன் நிறத்தில் வாழைக் குலையும் இருந்தன. நான் சிறு குழந்தையாக இருந்தபோது, பாட்டி என்னை மடியில் உட்கார வைத்து கதைகள் கூறுவாள். குடும்பத்தின் பழைய மாமாமார்களைப் பற்றிய கதைகள்.....

மந்திரவாதி மாமா அமாவாசையன்று நிலவை உதிக்கச் செய்த மனிதர். அவருக்காகத்தான் தெற்கு பகுதியில் களரிப் பயிற்சிக்கு இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சேரமான் பெருமாளுடன் போர் புரிவதற்குச் சென்ற மாமாவின் வாள்தான் இன்று களரியில் இருக்கிறது. மாணிக்கத்தையும் பத்து எடை பொன்னையும் அவர் கொண்டு வந்தார். இந்த அளவிற்கு நிலங்கள் கைவசம் வந்து சேர்வதற்குக் காரணம் -செண்பகசேரி தம்புரானின் போர் வீரனாக ஒரு மாமா இருந்ததுதான். தாசில்தார் மாமாவை பாட்டி பார்த்திருக்கிறாள்.

நான் அந்த மாமா மார்களின் மருமகன்! யார் என்னைப் பார்த்தாலும், அந்த உண்மை அவர்களுடைய நினைவில் வரும் என்று எனக்கு தோன்றியது. எல்லோரும் என்னை 'குழந்தை' என்று அழைப்பது வெறுமனே அல்ல.

அந்த வகையில் என்னுடைய இளமைக் காலம் கடந்து போய்க் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் என்னுடைய வீட்டில் என்னவோ பிரச்னைகள் நடந்து கொண்டிருந்தன. என்ன என்று எனக்கு தெரியவில்லை. சில சம்பவங்கள் ஞாபகத்தில் இருக்கின்றன. என் தாய்க்கும் சித்திகளுக்குமிடையே சண்டை நடந்தது. அன்று சோறு சமைக்கவில்லை. பின்பு ஒருமுறை பெரிய மாமா சிறிய மாமாவை அடிப்பதற்காகச் சென்றார். சிறிய மாமா எதிர்த்தார். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு வருடம் முடியும்போதும், மே மாதத்தில் வரக் கூடிய நெல் குறைந்து கொண்டிருந்தது. சில பணியாட்கள் போய் விட்டார்கள். சிறிய மாமா விவசாயம் செய்ய போகவில்லை. படகையும் சக்கரத்தையும் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) யாரெல்லாமோ கொண்டு போனார்கள்.

பாம்புப் புற்றின் அருகிலிருந்த கோவிலில் விக்கிரகங்கள் சாய்ந்து விழுந்தன. கந்தர்வனின் மடம் இடிந்து விழுந்தது. அங்கு ஒவ்வொரு வருடமும் நடக்கக் கூடிய பாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்து மூன்று வருடங்களாகி விட்டன. களரிக் கட்டிடம் ஒரு பக்கம் சாய்ந்து கிடந்தது. வசித்துக் கொண்டிருந்த வீடு வேயாததால், சிதிலமடைய ஆரம்பித்திருந்தது. பசிக்கும் நேரங்களில் வீட்டில் சோறு கிடைக்காத நிலை உண்டானது.

நாயர் குடும்பத்தின் வீழ்ச்சியைப் பார்த்திருக்கக் கூடிய கேரளத்தைச் சேர்ந்தவர்களிடம்  அந்த விஷயத்தை விளக்கிக் கூறவில்லை. என்னுடைய வாலிபப் பருவத்தின் ஆரம்ப நிலையில் குடும்ப வீடு நின்றிருந்த நிலத்தின் பட்டயத்தில் நான் கையெழுத்துப் போட்டேன். நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.

ஆனால், அந்த போருக்குச் சென்ற மாமாவின் வாளையும், எங்களுடைய குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கிடைத்த செம்பு பட்டயத்தையும் நான் முந்தைய நாளே என் கையில் வைத்துக் கொண்டேன். பின்னர் ஒரு நாள் நடைபெற்ற கதையை இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன். கோவிலின் வாசலில் மூன்று நான்கு பேர் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். நான் அந்த வழியாக கடந்து சென்றேன். ஒரு மனிதர் அழைத்து சொத்து கைமாறி எழுதப்பட்டதைப் பற்றி என்னிடம் விசாரித்தார். நான் எல்லாவற்றையும் கூறினேன். இறுதியில் அவர்களில் ஒரு ஆண் கேட்டார்:

'குழந்தை, இனி என்ன செய்வே?'

நான் முழுமையான தன்னம்பிக்கையுடன் பதில் கூறினேன்:

'போருக்குச் சென்ற மாமாவின் வாளையும் செம்பு பட்டயத்தையும் நான் எடுத்து வைத்திருக்கிறேன்.'


அவர்கள் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். இப்போதும் அந்த குலுங்கல் சிரிப்பு என் செவிகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நாங்கள் வெவ்வேறு இடங்களுக்கும் மாறி வசித்தோம். குடும்பத்திலிருந்தவர்கள் ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவினார்கள். இறுதியில் நானும் ஒரு வயதான சித்தியும் மட்டும் எஞ்சினோம். அவளுடைய மரணத்தின்போது நாக்கை எடுக்க முடியாமலிருந்தபோதும் அவள் கேட்டாள்.'

'இனி என்ன செய்வாய், குழந்தை?'

வாழ்க்கையில் பலமுறை அந்த கேள்வியை நான் என்னிடமே கேட்டுக் கொண்டேன்.

உலகம் பரந்து கிடக்கிறதல்லவா? எனக்கு வாழ்வதற்கான பாதை இல்லாமற் போகுமா? என்னுடைய பெருமைக்குரிய பாரம்பரியம் எனக்கு துணையாக இருக்காதா? அந்த வாளையும் செம்பு பட்டயத்தையும் எடுத்துக் கொண்டு நான் என்னுடைய மரண இடத்தைத் தேடி சாலையில் இறங்கினேன்.

தனியாகக் கிடந்த பாதையின் வழியாக அப்படி நடந்து செல்லும்போது, நான் அந்த போருக்குச் சென்ற மாமாவை நினைத்துப் பார்ப்பேன். அவரை கண்களுக்கு முன்னால் நான் பார்ப்பேன். இடுப்பையும் தலையையும் இறுக வைத்துக் கொண்டு, போர் புரிவதற்குச் செல்லும்  அந்த பயணம்! மிகப் பெரிய போரில் சாய்ந்தும், திரும்பியும், எழுந்து தாவியும், குதித்து பாய்ந்து சண்டை போடும்போது இந்த வாள் மின்னல் கீற்றைப் போல பிரகாசிக்கும்.... நான் சற்று நெகிழ்வேன். நான் அந்த மாமாவின் மருமகன்.

அந்த வகையில் பழைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோதும், அந்த கேள்வி அவ்வப்போது என்னை வெறித்துப் பார்க்கும். 'இனி எப்படி வாழ்வாய்?' ஆனால், உடனடியாக மீண்டும் மனம், சுகமான கனவுகளுக்குள் சாய்ந்து விழும்.

சாலையில் இறங்கிய மூன்றாவது நாள் பசியெடுத்து தாகம் உண்டாகி நான் பாதையின் ஓரத்திலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று, சிறிது குளிர்ந்த நீர் கேட்டேன். சமையலறைக்குள்ளிருந்து கடுகு வறுக்கும் வாசனை வந்து கொண்டிருந்தது. ஒரு பெண் சிறிது நீரைக் கொண்டு வந்து விட்டு, என்னை தலையிலிருந்து பாதம் வரை பார்த்தவாறு கேட்டாள்'.

'நீ எங்கேயிருந்துடா வர்றே?'

அந்த கேள்வி எனக்கு பிடிக்கவில்லை. என்னை 'குழந்தை' என்றல்லாமல், யாரும் அழைத்ததில்லை. பெண் தொடர்ந்து கேட்டாள்:

'உனக்கு விறகு வெட்ட தெரியுமா? கூலியும் உணவும் தர்றேன்.'

எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. நான் அங்கிருந்து கிளம்பினேன். அந்த இறந்து போன வெற்றி வீரரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

நாட்கள் கடந்து செல்லச் செல்ல, எப்படி வாழ்வது என்ற கேள்வி மேலும்
பல முறை எனக்குள் எழுந்து பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. வேலை செய்து வாழ்வது என்பது மரியாதைக்குரியது என்ற எண்ணம் எனக்கு உண்டாக ஆரம்பித்தது. ஆனால், என்ன பணி இருக்கிறது?

ஒரு நாள் நான் பாதையின் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்றேன். வயதானவர் வாசலில் அமர்ந்திருந்தார். நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று கேட்டார். நான் தயங்கினேன். நான் போருக்குச் சென்ற மாமாவின் கதையைக் கூற ஆரம்பித்தேன். அதை அவர் முழுமையாக கேட்டார். நான் ஒரு பைத்தியக்காரன் என்று அவர் நினைத்திருப்பாரோ என்னவோ? அவர் கேட்டார்:

'சரி.... நீ எதற்காக இங்கு வந்தாய்?'

'நான் ..... நான் வாழணும்.'

'உனக்கு ஏதாவது வேலை தெரியுமா?'

எதுவுமே தெரியாது என்று நான் கூறினேன். அப்படியென்றால், அங்கிருந்து கிளம்பிச் செல்லும்படி அவர் கட்டளையிட்டார்.

மீண்டும் அந்த வாளைப் பிடித்தவாறு சாலையின் வழியாக நான் பயணித்தேன். பழைய கதைகளின் நினைவில் பசியையும் தாகத்தையும் கொஞ்சம் குழி தோண்டி புதைக்க  முடிந்தது. ஆனால், அதையே தினந்தோறும் செய்து கொண்டிருக்க முடியுமா? நான் வேறு வழியில்லாமல் ஒரு வீட்டிற்குச் சென்று கொஞ்சம் கஞ்சி நீர் கேட்டு வாங்கியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அந்த பாத்திரத்தைக் கழுவி கவிழ்த்து வைக்க வேண்டுமென்று அவர்கள் உறுதியாக கூறினார்கள். எங்களுடைய ஊரிலேயே  மிகவும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் நான்!

அன்றிலிருந்து நான் ஒரு பிச்சைக்காரனாக ஆனேன். ஆனால், அங்கும் நான் தோற்று விட்டேன். பிச்சையெடுப்பவன் வெற்றி பெற வேண்டுமென்றால், பிச்சை எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு வீட்டிற்குச் சென்றால், எங்கு சென்று அமர வேண்டும் என்று எனக்கு தெரியாது. எப்படி பரிதாபத்தை ஏற்படுத்துவது மாதிரி கேட்பது என்று தெரியாது. எல்லா வீடுகளுக்கும் செல்வதற்கும் பயம். அவர்கள் நாயர்களாக இல்லாமற் போய் விட்டால்........?

இப்படி எதற்கும் லாயக்கு இல்லாமலேயே பதினைந்து நீண்ட வருடங்கள் வயிறு எரிய நான் நடந்து திரிந்தேன். இறுதியில் இந்த சந்திப்பிற்கு வந்து சேர்ந்தேன். இந்த சுமை தாங்கிக் கல்லும் பாதையோர கோவிலும் என்னுடைய குடும்பத்தினரால் உண்டாக்கப்பட்டவை. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இறுதி உறுப்பினர் கிடந்து இறப்பதற்காக உண்டாக்கியிருக்கலாம்.

இந்த சுமை தாங்கிக் கல்லின் மீது சாய்ந்து அமர்ந்தவாறு நான் ஏராளமான விஷயங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன். என்னுடைய சிந்தனையின் போக்கு நிறைய மாறியிருக்கிறது. ஆனால், என்னுடைய குணம் மாறவில்லை. மாறவும் செய்யாது.

இந்த வாளையும் செம்பு பட்டயத்தையும் குடும்பத்தில் வைத்து பாதுகாத்திருக்கக் கூடாது. பாதையின் ஓரத்தில் கிடந்து இறக்கும் பிச்சைக்காரனின் கழியை அவனுடன் சேர்த்து புதைப்பதைப் போல, இந்த வாளை அந்த மாமாவுடன் சேர்த்து புதைத்திருக்க வேண்டும். இந்த வாள் பழைய காலத்தின் ஒரு ஆயுதம் என்பதை மட்டும் அறிந்திருந்தால் போதும். அதற்கு மாறாக அதைச் சுற்றி சில கதைகள் வந்து சேர்ந்து உண்மைக்குப் புறம்பான ஒரு மனிதத் தன்மை உண்டாகி விட்டது. என்னுடைய மற்றும் என் மாமாமார்களின் செயல் அதன் மூலம் வழி தவறியது. நூற்றாண்டுகளுக்கு முன்னால் உண்டாக்கப்பட்ட இந்த வாளைப் பிடித்தவாறு நிமிர்ந்து நெளிந்து நாகரீக உலகத்தின் சாலையின் வழியே நடக்கும் என்னுடைய நிலை கிண்டலுக்குரியது. எனினும், இந்த வாளை நான் வழிபடுகிறேன். அதைத்தான் நான் கற்றேன்!

இந்த சுமை தாங்கிக் கல்லின் மீது சாய்ந்து அமர்ந்திருக்கும்போது என்னுடைய பாரம்பரியத்தைப் பற்றி நான் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. எனக்கென்று சொந்தமான ஒரு அறிவு இப்போது இருக்கிறது. நான் இந்த அளவிற்கு ஏன் கஷ்டப்படுகிறேன்? ஒருவேளை, அந்த மாமாமார்கள் செய்த பாவங்களின் விளைவைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனோ?

பாவங்களா? ஆமாம் .....போர் புரியும் மாமா, போர் முடிந்து திரும்பி வந்தபோது மாணிக்கத்தையும் பொன்னையும் கொண்டு வந்தார் அல்லவா? போர் புரிந்த நாட்டிலிருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்தவையாக இருக்கலாம்! அவரை கொள்ளைக்காரன் என்று குறிப்பிட்டால் என்ன? மந்திரவாதி மாமா - மந்திரவாதம் என்பது தர்மத்திற்குப் புறம்பானதுதானே? கடந்த தலைமுறை தாசில்தார்களைப் பற்றி உங்களுக்குத்
தெரியுமல்லவா?

எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. இந்த வாளையும் செம்பு பட்டயத்தையும் நான் கையில் வைத்துக்கொண்டு நடந்து திரிந்தேன். இதை இனியும் தூக்கிக் கொண்டு திரிவதற்கு யாருமில்லை. இந்த பாதையோர கோவிலிலேயே இதை நினைவுச் சின்னமாக வைத்தால் பரவாயில்லை. எல்லையற்ற பரம்பரைகளுக்கு இனி இதைப் பற்றி - போர் புரிந்த நாயரின் வாளைப் பற்றி - கூறுவதற்கு இருப்பது பரிதாபமான ஒரு கதைதான்.'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.