Logo

'மிஸ். என்'னின் கதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5187

'மிஸ். என்'னின் கதை

(ரஷ்ய கதை)

ஆன்டன் செக்காவ்

தமிழில் : சுரா

 

நல்ல கால நிலையாக இருந்தது. ஆனால், நாங்கள் திரும்பி வந்தபோது வானத்தில் இடிச் சத்தங்கள் கேட்டன. கறுத்து இருண்டு போய் காணப்பட்ட ஒரு மேகம் கோபத்துடன் எங்களை நோக்கி வேகமாக வந்தது. மேகம் எங்களை நெருங்கி...நெருங்கி வந்தது. நாங்கள் மேகத்தை நோக்கி...

அந்த மேகத்தின் பின்புலத்தில் எங்களுடைய வீடும் அங்குள்ள தேவாலயமும் வெண்மை நிறத்தில் தெளிவாக தெரிந்தன. உயரமான பாப்லார் மரங்களிலும் வெள்ளியைப் போன்ற பிரகாசம்... காற்றில் பெய்ய தயாராக இருக்கும் மழை மற்றும் வெட்டி போடப்பட்ட புதிய வைக்கோலின் வாசனை... என் நண்பர் முன்பு எந்தச் சமயத்திலும் பார்த்திராத அளவிற்கு உற்சாகம் நிறைந்தவராக இருந்தார். அவர் உரத்த குரலில் சிரித்து எல்லா வகையான முட்டாள்தனங்களையும் வெளிப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார். 'கலை வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோபுரங்களையும், பாசி படர்ந்த சுவர்களையும், ஏராளமான வவ்வால்களையும் கொண்டிருந்த ஒரு மத்திய கால கோட்டையைப் பார்த்து, மழையிலிருந்து தப்பிக்க இடம் தேடினோம். இறுதியில் பலமான ஒரு இடி, மின்னலில் உயிரை இழந்து ... நினைப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது!' - அவர் கூறினார்.

வயல்களுக்கு மேலே முதல் ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதைப் போல பலமாக ஒரு காற்று வீசியது. வெட்டவெளியெங்கும் தூசி நிறைந்தது. ப்யோதர் ஸெர்ஜியேவிச் உரத்த குரலில் சிரித்தவாறு குதிரையின் வேகத்தை அதிகரித்தார்.

'அழகு'! அவர் உரத்த குரலில் சத்தம் போட்டு கூறினார்: 'அருமை!' ஒரு நிமிடத்திற்குள் நான் ஒட்டு மொத்தமாக நனைந்து குளித்து விடுவேன் என்பதையும், ஒரே இடி மின்னலில் எரிந்து அடங்கிப் போய் விடுவேன் என்பதையும் எண்ணி உற்சாகமடைந்து அவருடைய சந்தோஷம் படர்ந்து பிடித்துக் கொண்டதைப் போல நானும் சிரித்தேன்.

சீறிப் பாய்ந்து சென்ற விதமும், அந்த சூறாவளி காற்றும் சேர, மேலும் கீழும் மூச்சு விட்டபோது, ஒரு பறவை என்ற தோணல் கம்பீரமான ஒரு ஆவேசத்தை உண்டாக்கியது. நாங்கள் வாசலை அடைந்தபோது, காற்று குறைந்து விட்டிருந்தது. மேற்கூரைகளிலும் புற்களின் நுனிப் பகுதிகளிலும் பெரிய நீர் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. குதிரை லாயத்திற்கு அருகில் ஒரு ஆள் கூட இல்லை.

ப்யோதர் ஸெர்ஜியேவிச் குதிரைகளை அவிழ்த்து லாயத்தில் கட்டினார். அவரை எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்தபோது, என் கண்கள் சாய்வாக பெய்து கொண்டிருந்த மழையின் மீது இருந்தன. வெறுப்பை உண்டாக்கும் வைக்கோலின் வாசனை வெளியே இருப்பதை விட அங்கு அதிகமாக இருந்தது. மழையும் மேகமும் சேர்ந்து முழுமையான இருளைப் பரவச் செய்திருந்தன.

'அது பயங்கரமாக இருந்தது. எதையாவது அழித்திருக்கும்!' - வானத்தை இரண்டாக பிளந்த பெரிய ஒரு இடிச் சத்தத்திற்குப் பின்னால் என்னை நோக்கி நடந்தவாறு அவர் கூறினார்.

அந்த சீறிப் பாய்ச்சல் அளித்த பெருமூச்சுடன் எனக்கு நெருக்கமாக வாசலுக்கு அருகில் நின்றவாறு அவர் என்னை கூர்ந்து பார்த்தார் - வழிபடுவதைப் போல.

'நடாலியா வ்ளாடிமிரோவ்னா...' - அவர் கூறினார்: உன்னையே பார்த்தவாறு அருகில் இப்படி நிற்கக் கூடிய சந்தர்ப்பத்திற்குப் பதிலாக எதை வேண்டுமானாலும் நான் தருவேன். இன்று நீ பேரழகியாக இருக்கிறாய்!'

அவருடைய கண்களில் ஆனந்தமும் வேண்டுகோளும் இருந்தன. முகம் வெளிறிப் போய் காணப்பட்டது. அந்த மீசையிலும் தாடி உரோமங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த நீர்த் துளிகள் கூட என்னை அன்புடன் பார்ப்பதைப் போல தோன்றியது.

'நான் உன்னைக் காதலிக்கிறேன்' - அவர் கூறினார்: 'எனக்கு உன் மீது எந்த அளவிற்கு விருப்பம் இருக்கிறது என்று தெரியுமா? உன்னைப் பார்க்க முடிவதில் எந்த அளவிற்கு சந்தோஷம் இருக்கிறது என்று தெரியுமா? என்னைத் திருமணம் செய்து கொள்ள உன்னால் முடியாது என்று எனக்கு தெரியும். எனக்கு எதுவுமே வேண்டாம். நான் எதையும் விருப்பப்படவுமில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதை நீ அறிந்து கொண்டால் மட்டும் போதும். எதுவுமே கூற வேண்டாம். பதில் கூற வேண்டாம். பார்த்ததாக காட்டிக் கொள்ளவே வேண்டாம். நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்., உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதற்கு அனுமதி தா.'

அவருடைய அளவற்ற சந்தோஷத்தை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. பிரகாசமாகக் காணப்பட்ட அந்த முகத்தையே நான் கூர்ந்து பார்த்தேன். மழையின் சத்தத்துடன் சேர்ந்து ஒலித்த அந்த குரலைக் கேட்பதற்காக நான் காதுகளைத் தீட்டி வைத்திருந்தேன். அசையக் கூட முடியாத அளவிற்கு சிலையைப் போல ஆகி விட்டேன் நான்.

அவருடைய பிரகாசிக்கும் கண்களையே பார்த்துக் கொண்டே இருப்பதற்கும், அந்த குரலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பதற்கும் நான் ஆசைப்பட்டேன்.

'நீ பேரமைதியுடன் இருப்பவளாயிற்றே! நல்லது... இந்த பேரமைதியை மீற வேண்டாம்.!'

எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. முழுமையான சந்தோஷத்துடன் சிரித்தவாறு பெரிதாக பெய்து கொண்டிருந்த மழையில் நான் வீட்டிற்குள் ஓடி நுழைந்தேன். சிரித்தவாறு அவரும் சேறு நிறைந்த குழிகளைத் தாவிக் கடந்து என்னுடன் சேர்ந்து ஓடி வந்தார்.

குழந்தைகளைப் போல சத்தம் போட்டவாறு, முழுமையாக நனைந்து, மேலும் கீழும் மூச்சு விட்டு, படிகளில் ஓசை உண்டாக்கி நாங்கள் ஓய்வு அறைக்குள் வேகமாக நுழைந்தோம். என்னிடம் வழக்கத்தில் இல்லாத உரத்த சிரிப்பையும் உற்சாகத்தையும் கண்டு, ஆச்சரியத்துடன் பார்த்து அப்பாவும் சகோதரனும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

மழை மேகங்கள் மறைந்தன... இடிச் சத்தங்கள் கேட்காமல் ஆயின... ப்யோதர் ஸெர்ஜியேவிச்சின் தாடி உரோமங்களில் நீர்த் துளிகள் ஒளிர்ந்து கொண்டேயிருந்தன. இரவு உணவு வரை அவர் பாட்டு பாடிக் கொண்டும், சீட்டியடித்துக் கொண்டும், நாயைக் குளிப்பாட்டிக் கொண்டும் இருந்தார். நாய்க்குப் பின்னால் அறைகளைக் கடந்த அலட்சியமான ஓட்டத்திற்கு மத்தியில் அவர் குளிர் காய்வதற்கான நெருப்புடன் வந்த வேலைக்காரனைத் தட்டி வீழ்த்தினார். இரவு உணவின்போது அவர் நன்றாக உணவு சாப்பிட்டார். நிறுத்தாமல் பேசினார். 'குளிர் காலத்தில் பச்சை வெள்ளரியைச் சாப்பிட்டால் மூச்சுக்கு  வசந்தத்தின் வாசனை இருக்கும்' என்றும் கூறினார்.


படுக்கையை விரித்தபோது நான் ஒரு மெழுகுவர்த்தியை எரிய வைத்து சாளரங்களை நன்கு திறந்து வைத்தேன். விவரித்துக் கூற முடியாத ஒரு உணர்வு என் மனதையும் இதயத்தையும் ஆக்கிரமித்தது. நான் சுதந்திரமானவள்... நல்ல உடல் நிலையைக் கொண்டவள்... பதவியும் பணமும் இருக்கின்றன... அன்பு செலுத்தப்படுகிறேன்... பணமும் பதவியும் இருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம் - பதவியும் பணமும் - கடவுளே... எவ்வளவு உயர்ந்த விஷயமது! தோட்டத்தில் பனி விழுந்த போது, அறைக்குள் நுழைந்த குளிரில் விறைத்துப் போய் நான் ப்யோதர் ஸெர்ஜியேவிச்சுடன் இருக்கக் கூடிய உறவைப் பற்றி சிந்தித்தேன். நான் அவருடன் காதல் வயப்பட்டிருக்கிறேனா? ஏதாவதொரு தீர்மானத்தில் போய்ச் சேர முடிவதற்கு முன்பே நான் தூங்கி விட்டேன்.

காலையில் படுக்கையில் சூரிய வெளிச்சத்தின் புள்ளிக் குத்துகளையும், எலுமிச்சை இலைகளின் நிழலையும் பார்த்தபோது, முந்தைய நாளின் அழகான சாயங்கால வேளை என்னுடைய நினைவுகளில் தோன்றியது. வாழ்க்கை எனக்கு மிகவும் செழிப்பு நிறைந்ததாகவும், வேறுபாடுகள் நிறைந்ததாகவும், மந்திரத் தன்மை கொண்டதாகவும் தோன்றியது. ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு வேகமாக ஆடையை அணிந்து நான் தோட்டத்திற்கு ஓடினேன்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது? அதற்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை. குளிர் காலத்தில் நாங்கள் நகரத்திலிருந்த போது, ப்யோதர் ஸெர்ஜியேவிச் சில வேளைகளில் எங்களைப் பார்ப்பதற்காக வந்தார். கிராமத்திலுள்ள  நண்பர்கள் கிராமத்தில் மட்டுமே.... விடுமுறை காலத்திற்கு மட்டும் ஏற்றவர்கள்.... நகரத்தில்... அதுவும் - குளிர்காலத்தில் அவர்களுடைய ஈர்ப்பில் பாதி இல்லாமற் போய் விடும். நகரத்தில் அவர்களுக்கு தேநீர் தரும்போது, நீங்கள் அவர்களின் ஆடையைப் பார்ப்பீர்கள். அவை வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்று தோன்றும். சர்க்கரை கரைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதாக தோன்றும். நகரத்தில் வைத்தும் ப்யோதர் ஸெர்ஜியேவிச் காதலைப் பற்றி பேசினார். ஆனால், அது சிறிதும் பழையதைப் போல இல்லை. இங்கு எங்களுக்கிடையே உள்ள வேறுபாடு அதிக தெளிவுடன் வெளிப்பட்டது. எனக்கு பணமும் பதவியும் இருக்கின்றன. அவர் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பவர். நாகரீக மனிதர் கூட இல்லை. ஒரு ஏழையின் மகன். விசாரிக்கும் நீதிபதியின் பொறுப்பு உண்டு - அது மட்டும்தான். நாங்கள் இருவரும் - நான் இளமையும் அழகும் உள்ளவள்... அவர்... கடவுளுக்கு மட்டுமே தெரியும்.... காரணம். - இந்தச்  சுவர் மிகவும் உயரமானதாகவும் உறுதியானதாகவும் இருப்பதாக நம்பினார். வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர் செயற்கையான புன்னகையுடன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை விமர்சித்தார். அதே நேரத்தில் வீட்டில் யாராவது இருந்தால், மிகவும் அமைதியாக இருப்பார். எங்காவது ஒரு விரிசலை உண்டாக்காத அளவிற்கு சுவர்கள் இல்லை. ஆனால், எனக்குத் தெரிந்த வரையில், நவீன காதலர்கள் வெட்கப்படக் கூடியவர்களாகவும், உயிர்ப்பு அற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினையே. வாழ்க்கையில் தாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்றும், காதல் தங்களை ஏமாற்றி விட்டது என்றும் நம்பி, எளிதில் தோல்வியை ஒப்புக் கொண்டு கீழ்ப்படிந்து விடுவார்கள். எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக வாழ்க்கையின் அலட்சியத்தைக் குறை கூறி காலத்தைக் கழிப்பார்கள். விமர்சனம் வெறும் குறை கூறலாக தரம் தாழ்ந்து போய் விட்டதைக் கூட மறந்து விடுவார்கள்.

எனக்கு தாராளமாக அன்பு கிடைத்தது. தோளோடு தோள் உரசி, சந்தோஷம் எப்போதும் என்னுடன் இருந்தது. எந்தவொரு குறைகளும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். என்னையே நான் புரிந்து கொள்வதற்குக் கூட முயற்சிக்காமல், வாழ்க்கையிலிருந்து எதை எதிர்பார்க்கிறேன்... எது காத்திருக்கிறது என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கை கடந்து போய்க் கொண்டிருந்தது. காலமும்... மற்ற எல்லோரையும் போலத்தான் என் விஷயத்திலும் நடந்தன. என் மீது அன்பு வைத்திருந்தவர்கள்... பிரகாசம் நிறைந்த நாட்கள்... உற்சாகம் நிறைந்த இரவுகள்.... பாடல்களில் வானம்பாடி... புதிய வைக்கோலின் வாசனை...... விரும்பிய ஒவ்வொன்றும் நினைவுகளில் சந்தோஷத்தைப் பகிர்ந்தளித்தன..... ஒரு அடையாளம் கூட எஞ்சியிருக்காமல் எங்கோ போய் மறைந்து விட்டன..... மூடுபனியைப் போல..... அவை அனைத்தும் எங்கே?

என் தந்தை மரணமடைந்து விட்டார். எனக்கு வயதாகி விட்டது. ஒரு காலத்தில் நான் விரும்பியவை அனைத்தும் .... காதுகளில் இனிமையாக பதிந்து எதிர்பார்ப்புகளை அளித்தவை - ஓசை உண்டாக்கி பெய்து கொண்டிருந்த மழை.... இடி முழக்கங்கள்.... இனிய கனவுகள்.... காதல் உரையாடல்கள் .... அனைத்தும் நினைவாக மட்டும் .... முன்னால் ஒரு ஆள் கூட இல்லாத வெற்றுப்பாதை.... இறுதியில் பயத்தை உண்டாக்கும் இருட்டும்.....

மணியடித்தது ப்யோதர் ஸெர்ஜியேவிச்சாகத்தான் இருக்க வேண்டும். குளிர் கால மரங்களைப் பார்த்தவாறு, கோடை காலத்தில் அவை தளிர் இட்டதை நினைத்தவாறு நான் முணுமுணுப்பேன்! 'என் அன்பிற்குரியவரே!' வாழ்க்கையின் வசந்த காலத்தைப் பங்கு போட்டவர்களைப் பார்த்து கவலைப்படும்போதும் நான் அதையேதான் கூறுவேன்.

என் தந்தையின் பரிந்துரையைத் தொடர்ந்து ப்யோதர் ஸெர்ஜியேவிச் நகரத்திற்கு இடம் மாறுதல் கிடைத்து வந்து சேர்ந்தார். அவருக்குச் சற்று வயது தெரியும்.... முகத்தில் சுருக்கங்கள் உண்டு.... என்னைப் பிடிக்கும் என்று கூறுவதை அவர் நிறுத்தி விட்டிருந்தார். 'சரசர' என்ற பேச்சுமில்லை... பணியின் மீது விருப்பமில்லை. எதன் மீதோ கோபம்... எதன் மீதோ நிராசை... வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை..... மனமில்லா மனதுடன் வாழ்க்கை.... குளிர் காயும் அடுப்பினருகில் நெருப்பையே வெறித்துப் பார்த்தவாறு மிகவும் அமைதியாக அவர் அமர்ந்திருந்தார். என்ன கூறுவது என்று தெரியாமல் நான் கேட்டேன்:

'என்ன?'

'ஒண்ணுமில்ல....'

இருவரும் மீண்டும் பேரமைதிக்குள் மூழ்கி விட்டோம். குளிர் காயும் அடுப்பிலிருந்து வந்த சிவந்த வெளிச்சம், கவலை பரவியிருந்த அந்த முகத்தில் ஓடி விளையாடியது.

நான் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன். என் தோள்கள் அசைந்தன... தலையைக் குனிந்தவாறு நான் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தேன். என் மீதும் இந்த மனிதரின் மீதும் எனக்கு அளவற்ற இரக்கம் உண்டானது. கடந்து போய் விட்ட அந்த காதல்... வாழ்க்கை எங்களுக்கு மறுத்த அந்த காதல்.... அதற்காக நான் நிறைய ஏங்கினேன். என் பணமும் பதவியும் என் மனதின் எந்த இடத்திலும் இல்லை.

உரத்த குரலில் தேம்பியவாறு, தலையை இறுக பிடித்துக் கொண்டு நான் முணு முணுத்தேன்! 'என் கடவுளே..... என் கடவுளே... வாழ்க்கை வீணாகி விட்டது.... வீணாகி விட்டது.....' அவர் எதுவுமே கூறாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தார். 'அழாதே' என்று அவர் எனக்கு ஆறுதல் கூறவில்லை. நான் அழ வேண்டியதில்லை என்பதையும், அதற்கான நேரம் வந்து விட்டது என்பதையும் அவர் புரிந்து கொண்டார். என்னைப் பார்த்து அவர் பரிதாபப்படுகிறார் என்பதை அந்த கண்களின் பார்வை கூறியது. எனக்கு அவரின் மீதும் பரிதாப உணர்ச்சி இருந்தது. எனக்கொரு வாழ்க்கையைத் தருவதற்கு.... தனக்குத் தானே ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கு முடியாத அந்த தைரியமற்ற மனிதரின் மீது எனக்கு கடுமையான வெறுப்பு தோன்றியது.

கோட் அணிவதற்கு அவர் வேண்டுமென்றே ஒரு அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறார் என்று கூடத்தில் அவரைப் பயணம் அனுப்பும் வேளையில் எனக்கு தோன்றியது. எதுவும் கூறாமல் அவர் என் கையில் இரண்டு தடவைகள் முத்தமிட்டார். கண்ணீரின் கோடுகள் விழுந்திருந்த என் முகத்தையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். ஒரு வேளை அன்றைய இடி முழக்கத்தையும், காற்றையும், சரிந்து பெய்த மழையையும், நாங்கள் நன்றாகச் சேர்ந்து சிரித்து சந்தோஷமாக இருந்ததையும், என் அப்போதைய முகத்தையும் நினைத்துப் பார்த்திருக்கலாம். அவர் என்னவோ கூற நினைத்தார். கூற ஆசைப்படுவதைப் போல.... ஆனால், எதுவும் கூறவில்லை. தலையை ஆட்ட மட்டும் செய்தார். தொடர்ந்து கைகளை இறுக பிடித்து குலுக்கினார்.

அவரை அனுப்பி விட்டு நான் மீண்டும் குளிர் காயவும் அடுப்பிற்கு அருகில் அமர்ந்தேன். அணைந்து கொண்டிருந்த தீக்கனல்களில் சாம்பலின் மெல்லிய அடையாளம்... வெளியே பனி எப்போதுமிருப்பதை விட அதிகமாக இருந்தது... அடுப்பில் மோதி காற்று ஒரு சோக ஓசையை உண்டாக்கியது.

நான் தூங்கி விட்டேன் என்று கருதி பணிப்பெண் என்னைத் தொட்டு, அழைத்தாள்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.