Logo

குளிர்பானம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4151

குளிர்பானம்

பி.கேசவதேவ்

தமிழில் : சுரா

 

குளிர்பானம் ... குளிர்பானம் .....’ தெருவின் ஒரு ஒடுங்கிய மூலையிலிருந்து தொடர்ந்து புறப்பட்டுக் கொண்டிருந்த அந்த குரல், சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயிலில் வியர்வை ஒழுக நடந்து கொண்டிருந்த ஜானுவை அந்தப் பக்கமாக ஈர்த்தது. சர்பத் நிறைக்கப்பட்டிருந்த சில புட்டிகளும் அந்த புட்டியின் வாய்ப் பகுதியில் ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் நான்கைந்து கண்ணாடி டம்ளர்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த ஒரு மேஜைக்குப் பின்னால் நின்றவாறு அஹம்மது கூறிக் கொண்டிருந்தான். !ஹாய்! ஹாய்! முதல் தரமான குளிர்பானம் .... ஒரு டம்ளர் குடித்து விட்டுச் செல்லுங்கள். குடிச்சிட்டுப் போங்க.. குளிர்பானம்.....குளிர்பானம்.....’

ஜானு பித்தளைப் பாத்திரத்தை இடுப்பில் வைத்தவாறு மேஜைக்கு அருகில் சென்று ஈர மண்ணில் மிதித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் அந்த புட்டிகளையும்  அவற்றின் வாய்ப் பகுதியிலிருந்த எலுமிச்சம் பழத்தையும் மேஜைக்குக் கீழே ஒரு மண் பானையிலிருந்த சுத்தமான நீரையும் ஆவலுடன் பார்த்தாள். காய்ந்து வறண்டு போன தொண்டையில் ஒரு துளி -  அந்த நீர் (குளிர்பானம் என்று கூறுவதற்கு தெரியவில்லை).... அதை பருகுவதற்கு அந்தச் சிறுமிக்கு தடுக்க முடியாத அளவிற்கு ஆர்வம் இருந்தது.

அஹம்மதின் சொற்பொழிவு தொடர்ந்து கொண்டிருந்தது: ‘குளிர்பானம்.... குளிர்பானம்..... வாய்க்குள் ஊற்றினால், தலையிலிருந்து பாதம் வரை குளிர்ச்சியாக இருக்கும். ஒரு டம்ளர் குடிச்சிட்டுப் போங்க.... குடிச்சிட்டுப் போங்க.’

தலையில் ஒரு ‘சும்மாடும்’ கையில் ஒரு பெரிய கூடையுமாக வந்த ஒரு சுமை தூக்கும் மனிதன் மேஜையின் அருகில் வந்து ‘ஒரு டம்ளர்’ என்று கட்டளை பிறப்பித்தான். அஹம்மது சொற்பொழிவை நிறுத்தாமல், மிகவும் வேகமாக அவனுடைய குளிர்பானத்தைத் தயார் பண்ண ஆரம்பித்தான். அவன் துணிக்குக் கீழேயிருந்து கத்தியை எடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை அறுத்தபோது, ஜானுவின் பார்வைகள் அந்த கத்தியைத் தாண்டி எலுமிச்சம் பழத்திற்குள் நுழைந்தன. அவன் எலுமிச்சம்பழ நீரை டம்ளரில் ஊற்றினான். அவன் புட்டியிலிருந்து இரண்டு கரண்டி சர்பத்தை டம்ளரில் ஊற்றிய போது, அவள் மேஜையுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்தாள். அவன் மேஜைக்குக் கீழேயிருந்து ஒரு தகரப் பாத்திரத்தில் சிறிது நீரை எடுத்து டம்ளருக்குள் தூக்கி ஊற்றிய போது, அவளுடைய ஆர்வம் கட்டுப்பாட்டை விட்டு வெளியே குதித்தது. ‘கொஞ்சம் எனக்கு தருவீங்களா?’

அஹம்மது தமாஷான ஒரு சிரிப்புடன் அவளுடைய முகத்தையே சற்று பார்த்தான். அவனுடைய குளிர்பானத்தை சுமை தூக்கும் மனிதனின் கையில் கொடுத்து விட்டு, அவன் மீண்டும் அவளைப்  பார்த்து சிரித்தான். அந்த சுமை தூக்கும் மனிதனின் தொண்டைக்குள் நீர் அப்படியே  இறங்கிச் செல்வதைப் பார்த்தவாறு ஜானு கேட்டாள்.

‘அதற்கு என்ன விலை?’

அஹம்மதுவிற்கு இரக்கம் உண்டானது. அவன் கேட்டான்! ‘மகளே ...... உன் கையில் எவ்வளவு காசு இருக்கு?’

ஜானு தன்னுடைய மடியைப் பிடித்தவாறு கூறினாள்: ‘என் கையில் பத்து அணா இருக்கு.  ஐந்து நாழி பால் விற்றது......’

சுமை தூக்கும் மனிதன் நீட்டிய கண்ணாடி டம்ளரையும், காசையும் வாங்கியவாறு அஹம்மது கூறினான்: ‘அப்படின்னா..... ஆறு காசு எடு. ஒரு டம்ளர் குளிர்பானம் தர்றேன்.

‘இதுல இருந்து காசை எடுத்தால், என் அம்மா அடிப்பாங்க.’

அஹம்மது ஜானு கூறியதைப் போலவே கூறினான்: ‘காசு வாங்காமல் குளிர்பானம் தந்தால், என் வாப்பா அடிப்பார்.’

‘உங்களுடைய வாப்பா பார்க்கவில்லையே?‘

‘அந்த மடியிலிருந்து காசை எடுத்தால், உன் அம்மா பார்க்க மாட்டாங்க.’

‘அங்கே போன பிறகு, அம்மா எண்ணிப் பார்ப்பாங்க.’

‘இங்கே வர்றப்போ, வாப்பா எண்ணிப் பார்த்தால் ......?’

‘எனக்கு கொஞ்சம் போதும் ... தாகமா இருக்குறதாலதானே?’

‘அப்படின்னா...... உனக்கு பச்சைத் தண்ணி தர்றேன்.’

 

புட்டியைச் சுட்டிக் காட்டியவாறு ஜானு கூறினாள்: ‘கொஞ்சம் அதையும் சேர்த்து ஊற்றினால் போதும்.’

அஹம்மதுவிற்கு இரக்கம் உண்டானது. அவன் சிறிது குளிர்பானத்தைத் தயாரித்து ஜானுவிற்குக் கொடுத்தான். அவள் ஒரு புன்னகையுடன் அதை வாங்கி பருகினாள். கண்ணாடி டம்ளரைத் திரும்ப கொடுத்து விட்டு அவள் கூறினாள்: ‘எனக்கு அப்பா எப்போதாவது காசு தந்தால், உங்களுக்கு தர்றேன்......தெரியுதா?’

அஹம்மது கருணை மனதுடன் கூறினான்! ‘இதற்கு காசு தர வேண்டாம். உன் வீடு எங்கே இருக்கு?’

‘அதற்கு இங்கேயிருந்து தூரமா போகணும்.’

‘நீ தினமும் பால் விற்பதற்கு வருவாயா?’

‘ம் .... தினமும் வருவேன். லாட்டரிச் சீட்டுல பணம் கிடைச்சப்போ, அப்பா வாங்கிய பசு ஐந்து நாழி பால் தரும். அதை விற்று விட்டு வீட்டிற்குப் போறப்போ, சாயங்காலம் ஆயிடும்.’

‘அப்படின்னா ..... நீ நிற்க வேண்டாம். சீக்கிரம் போ.’

ஜானு நன்றியுடன் அஹம்மதுவைச் சற்று பார்த்து விட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

*     *     *     *

       ஜானுவிற்கு பதின்மூன்று வயதுதான். நகரத்திற்கு வெளியே கிராமத்திலிருக்கும் ஒரு விவசாயத் தொழிலாளியின் ஒரே மகள் அவள். அதிகாலையில் கொஞ்சம் பழைய கஞ்சியை குடித்து விட்டு, அவள் பால் விற்பதற்காக நகரத்திற்குப் புறப்படுவாள். சாயங்காலம் ஆனதும், அவள் திரும்பி வருவாள். பால் விற்று கிடைக்கும் காசிலிருந்து ஒரு காசை எடுத்தால் கூட அவளுடைய அம்மா அடிப்பாள். மதிய வேளையில் ஏதாவது கடையிலோ வீட்டிலோ ஏறி கொஞ்சம் பச்சைத் தண்ணீரைக் குடித்து விட்டு, அவள் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வெயிலில் வீட்டிற்கு வருவாள்.

       அஹம்மது கொடுத்த குளிர்பானம் அவளுக்கு மிகவும் சுவையான ஒரு விருந்தைப் போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு குளிர்பானத்தை அவள் அதுவரை குடித்ததே இல்லை. அதன் சுவையை மனதில் நினைத்துக் கொண்டே அவள் வீட்டிற்குச் சென்றாள். வீட்டிற்குச் சென்றவுடன் இனிப்பு நிறைந்த அந்த நீரைக் குடித்த கதையை அவள் அம்மாவிடம் கூறினாள். மறுநாள் அதிகாலையில் அவள் அந்த நீரின் சுவையை நினைத்துக் கொண்டே கண் விழித்தாள், பழைய கஞ்சியைக் குடித்து விட்டு, பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அவள் வேகமாக நகரத்தை நோக்கி நடந்தாள்.

       பால் விற்பனை முடிந்து, ஜானு தெருவின் அந்த ஒடுங்கிய மூலையை அடைந்தாள். அஹம்மதுவின் சொற்பொழிவு அவளுக்குக் கேட்டது: ‘குளிர்பானம் ... குளிர்பானம் ..... பருகி விட்டுப் போங்க.’

       ஜானு மேஜையின் அருகில் சென்று சற்று சிரித்தாள். அஹம்மது முந்தைய நாள் தான் அவளுடன் உரையாடியதைப் பற்றி எதுவும் காட்டிக் கொள்ளாமால், தன்னுடைய சொற்பொழிவைத் தொடர்ந்து கொண்டிருந்தான்:

       சிறிது நேரம் ஜானு அவனுடைய முகத்தையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்து விட்டு, தன் மடியிலிருந்து ஆறு காசுகளை எடுத்து நீட்டியவாறு மிடுக்குடன் கூறினாள்: ‘இதோ  ஆறு காசு ..... ஒரு பாத்திரம் முழுக்க தரணும்.’


       அஹம்மது சிரிப்பை அடக்கிக் கொண்டே காசை வாங்கி, குளிர்பானத்தைத் தயார் பண்ணுவதற்கு மத்தியில் கேட்டான்: ‘அடியே! நேற்று குளிர்பானம் வாங்கியதற்கு காசு எங்கே?’

       ‘அதை நாளைக்கு தர்றேன். இப்போ..... ஆறு காசுக்கு பாத்திரம் முழுக்க தரணும்.’

       அவன் ஒரு கண்ணாடி டம்ளர் முழுவதும் நிறைத்து குளிர்பானத்தை ஜானுவிற்குக் கொடுத்தான். அவள் அதை பருகி விட்டு, அஹம்மதுவிடம் விடை கூட கூறாமல் போவதற்கு முயன்றாள். ஆனால், செல்வதற்கு அவளுக்கு ஒரு சங்கடம்! வீட்டிற்குச் சென்ற பிறகு, ஆறு காசுகளைச் செலவழித்ததற்கு அம்மா அவளை அடிப்பாள். அம்மாவிடம் என்ன பொய் கூறுவது? அவள் சிந்தித்தவாறு நின்று கொண்டிருந்தாள். அஹம்மதுவிடம் காசைத் திரும்ப கேட்பதற்கு அவளுக்கு தைரியமில்லை. அந்த நீரை வாங்கி பருகியிருக்கக் கூடாது என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், இனி என்ன செய்வது? குடித்தாகி விட்டது.......... காசு கொடுத்தாகி விட்டது.

       ஜானுவின் கண்கள் நிறைந்து கன்னங்களின் வழியாக வழிய ஆரம்பித்தது. சிரிப்பை அடக்கக் கூடிய அஹம்மதுவின் முயற்சி வீணானது. அவன் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே கேட்டான்: ‘நீ ஏன் அழறே?’

       ஜானு தேம்பித் தேம்பி அழுது கொண்டே கூறினாள் : ‘அம்மா அடிப்பாங்க.....’

       அஹம்மது ஆறு காசுகளை எடுத்து அவளின் கையில் கொடுத்து விட்டு கூறினான்: ‘காசைக் கொண்டு போ. எனக்கு காசு வேண்டாம். புரியுதா? தினமும் மதிய வேளையில் இங்கே வா. குளிர்பானம் தர்றேன். ம்..... அழாமல் போ........’

       ஜானு கண்ணீரைத் துடைத்து விட்டு, சிரித்தாள். அவள் நன்றியுடன் திரும்பிப் பார்த்து..... பார்த்துக் கொண்டே நடந்து மறையவும் செய்தாள்.

       மறுநாளிலிருந்து அவன் தினமும் மதிய வேளையில் அஹம்மதுவின் மேஜைக்கு அருகில் வருவாள். அவன் அவளுக்கு ஒரு கண்ணாடி டம்ளர் குளிர்பானத்தை வழக்கமாக தருவான். அவள் அதைப் பருகி விட்டு, அஹம்மதுவின் மரப் பெட்டியின் மீது அமர்ந்து  ஓய்வெடுப்பாள். சில நேரங்களில் அவள் அஹம்மதுவின் கடையைப் பெருக்கிச் சுத்தப்படுத்துவாள். பீடி வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பாள்.

ஒரு நாள் அவள் வந்தபோது அஹம்மதுவிற்கு ஒரு இலைப் பொட்டலத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள். அதில் கொஞ்சம் பலாப் பழங்கள் இருந்தன. அவளுக்குச் சாப்பிட்டுவதற்காக கொடுத்தவற்றை அவள் அஹம்மதுவிற்குக் கொடுப்பதற்காக பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். பாலை எடுத்துக் கொண்டு நகரத்திற்குப் புறப்பட்டபோது, அம்மாவிற்குத் தெரியாமல் அவள் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு  வந்து விட்டாள். அஹம்மது சந்தோஷத்துடன் அவளுடைய பரிசை ஏற்றுக் கொண்டான். அன்றிலிருந்து அவள் வரும்போதெல்லாம் எதையாவது கொண்டு வருவாள் – அஹம்மதுவிற்குக் கொடுப்பதற்காக. எதுவும் கிடைக்காத நாளன்று அவளுக்கு மிகவும் கவலையாக இருக்கும்.

இப்படியே நாட்களும் வாரங்களும் கடந்தோடின. கோடை காலம் முடிந்தது.  மழைக் காலம் ஆரம்பமானது. பிறகு அஹம்மதுவின் குளிர்பானத்திற்கு தேவையில்லாத சூழ்நிலை உண்டானது. வியாபாரத்தை நிறுத்தி விட்டு, வீட்டிற்குச் செல்ல அவன் முடிவு செய்தான்.

அஹம்மதுவின் வீடு நகரத்திலிருந்து நீண்ட தூரத்தில் ஒரு கிராமத்தில் இருந்தது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து வயது இருக்கும். கோடைக் காலம் வரும் வரை அவனுடைய தொழில் விவசாயம்தான். கோடைக் காலம் வந்து விட்டால், மனைவியையும் குழந்தைகளையும் தந்தையின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு, அவன் குளிர்பான வியாபாரத்திற்காக நகரத்திற்குச் சென்று விடுவான்.

ஒரு நாள் ஜானு எப்போதும் போல வந்தபோது, மறுநாள் தான் வியாபாரத்தை நிறுத்தி விட்டு, வீட்டிற்குச் செல்லப் போவதாக அஹம்மது அவளிடம் கூறினான். ஜானு எதுவும் கூறவில்லை. அவள் அன்று நீண்ட நேரம் அஹம்மதுவின் மரப் பெட்டியின் மீது அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுடைய மனதில் ஏதோ ஒரு கவலை! அது என்ன என்று அவளுக்கே தெரியவில்லை. அவளுடைய மனதிலிருந்து ஏதோ ஒரு அறிமுகமற்ற மனிதன் அவளிடம், அவளால் புரிந்து கொள்ள முடியாத மொழியில் பேசிக் கொண்டிருந்தான். அஹம்மது அவளிடம் பலவற்றையும் கேட்டான். அவை எதற்கும் அவள் பதில் கூறவில்லை. அவள் அமைதியாக எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.  இடையில் அவ்வப்போது அவள் அஹம்மதுவின் முகத்தையே பார்ப்பாள். அவன் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.

இறுதியில் போவதற்காக ஜானு எழுந்தாள். அஹம்மதுவின் முகத்தைப் பார்ப்பதற்கான தைரியம் அவளுக்கு இல்லை. அமைதியான குரலில் அவள் கேட்டாள்: ‘நாளைக்கு எப்போ போறீங்க?’

ஜானுவின் இந்த உணர்ச்சி வேறுபாடு அஹம்மதுவை ஆச்சரியப்பட வைத்தது. அவன் அமைதியான குரலில் கூறினான்: ‘நாளை காலையில் புறப்படுவேன் .... நீ வருவதற்கு முன்னால் ....‘

ஜானு எதுவும் கூறாமல் அங்கிருந்து கிளம்பினாள். மறுநாள் அதிகாலையில் அஹம்மது வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முழுமை செய்தான், மேஜையை ஒரு நண்பனின் கடையில் ஒப்படைத்தான். புட்டிகளையும் கண்ணாடி டம்ளர்களையும் மரப் பெட்டியில் போட்டு அடைத்தான்.  அதுவரை இருந்த அவனுடைய சம்பாத்தியத்தை எண்ணிச் சரி பார்த்து விட்டு திரும்பிப் பார்த்தபோது, அவனுக்கு அருகில் ஜானு நின்று கொண்டிருந்தாள்! ஏதோ ஒரு அமைதியற்ற நிலை அவளை பாதித்திருந்தது. இனிமேல் குளிர்பானம் கிடைக்காது என்ற நினைப்பில்தான் அவள் கவலையுடன் நின்று கொண்டிருக்கிறாள் என்றுதான் அஹம்மது நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இரண்டு அணா காசை  எடுத்து அவளை நோக்கி நீட்டிக் கொண்டே கூறினான்: ஜானு..... நான் போய் வரட்டுமா? இந்தா..... இதை நீ வச்சுக்கோ.’

       ஜானு கோபத்துடன் அவனுடைய கையைத் தட்டி விட்டாள். அணா தெறித்து தூரத்தில் போய் விழுந்தது. அஹம்மது குனிந்து, அவளுடைய முகத்தையே பார்த்தான். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் தெறித்து விழுந்த இரண்டணா நாணயத்தை எடுத்துக் கொண்டு வந்து, வேறு ஒரு இரண்டணா நாணயத்தையும் சேர்த்து அவளை நோக்கி நீட்டினான். அதற்குப் பிறகும் அவள் அவனுடைய கையை ஒரு முறை தட்டி விட்டாள். உடனடியாக அவன் கையை இறுக வைத்துக் கொண்டதால், அணா தெறித்து விழவில்லை. அவன் கேட்டான். ‘நீ ஏன் அழறே?’ அவள் பதில் கூறவில்லை.

       அஹம்மதுவிற்கு செல்வதற்கான நேரம் வந்து விட்டது. மதிய வேளையில் வீட்டிற்குப் போய் சேர வேண்டுமென்றால், அவன் உடனடியாக புறப்பட வேண்டும். அவன் மரப் பெட்டியை எடுத்து தலையில் வைத்தான். ஜானுவிடம் இன்னொரு முறை விடை கூறி விட்டு நடக்க ஆரம்பித்தான்.

       ஜானு கண்ணீரைத் துடைத்து விட்டு, அஹம்மது செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் சிறிது தூரம் நடந்த பிறகு, திரும்பிப் பார்த்தான். ஜானு அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அவன் தெருவின் திருப்பத்தை அடைந்ததும், மீண்டும் திரும்பிப் பார்த்தான். அப்போதும் ஜானு அங்கேயே அவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

அவன் தெருவில் திரும்பி மறைந்தான். ஜானு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.

அதற்குப் பிறகும் ஜானு பால் விற்பதற்காக தினமும் நகரத்திற்கு வருவாள். அந்தத் தெருவை அடைந்ததும், அஹம்மதுவின் குளிர்பானம் விற்பனை செய்யப்படும் இடத்தைப் பார்த்தவாறு அவள் சிறிது நேரம்  அப்படியே நின்று கொண்டிருப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு செயலாக இருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.