Logo

சட்ட மீறல்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4057

சட்ட மீறல்
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா

ந்த பெரிய நகரத்திற்கு நான் வந்து சேர்ந்தது என்னுடைய மானத்தை விற்று வாழ்வதற்காக அல்ல. எந்தவொரு இளம்பெண்ணும் தன்னுடைய மானத்தை அப்படி மனதளவில் விட்டெறிவாள் என்றும் தோன்றவில்லை. தன்னுடைய மானத்தை ஒரு கடைச் சரக்காக ஆக்கி ஒருத்தி கூட விற்பனைக்கு வைத்துக் கொண்டு நடந்து திரிய மாட்டாள். மானத்தை இழந்து விட்டு, ஒருத்தி தன்னுடைய சரீரத்தை விற்பனைக்கு வைத்துக் கொண்டு நடந்து திரிகிறாள் என்று வரலாம். ஒரு பெண்ணின் மானம் ஒரே ஒரு தடவைதான் இழக்கப்படும்.

இங்கே பிறகு... நான் எதற்காக வந்தேன் என்று நீங்கள் கேட்டால், அதற்கு என்னால் பதில் கூற முடியாது. என்னால் இங்கு வராமல் இருந்திருக்க முடியும். ஆனால், அதனால் என்னுடைய மானம் இழக்கப்படாமல் இருந்திருக்காது. உலகத்தின் எந்த பகுதியும் எனக்கு ஆபத்து நிறைந்ததாகவே இருந்தது. அதே நேரத்தில் – ஒரு விஷயத்தை நான் உண்மையிலேயே கூறட்டுமா? என்னை நம்ப வேண்டும். இந்த நகரத்திற்கு வந்து சேர்வது வரை, நான் ஒரு பெண்தான் என்ற நினைப்பு எனக்கு இருந்ததில்லை. ஆபத்தைப் பற்றிய உணர்வும் இல்லாமலிருந்தது. ஒரு நாள் வரை ஒரு ஆணின் பார்வையிலும் படாமல் எப்படி இருந்தேன் என்பதும், அன்று எப்படி... எதனால்... ஆணின் பார்வையில் பட்டேன் என்பதும் எனக்கு தெரியாது. கிராமப் பகுதியிலிருந்த ஒரு பெரிய வீட்டின் வேலைக்காரியாக நான் இருந்தேன். மாமிசத்தைத் திருடிச் சாப்பிட்டு விட்டேன் என்ற காரணத்திற்காக எஜமானியம்மா என்னை துடைப்பத்தால் அடித்து வெளியேற்றி விட்டாள்.

இங்கு வராமல் இருந்திருக்கலாம். வந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், எனக்கு செல்வதற்கு எந்தவொரு இடமும் இல்லாமலிருந்தது. காற்று வீசி பறக்கச் செய்யும் காய்ந்த இலையைப் போல நான் இங்கு வந்து சேர்ந்தேன்.

இங்கு வந்து சேர்ந்ததும், எனக்கு புரிந்து விட்டது – நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று... காப்பாற்றிக் கொள்வதற்கு சில விஷயங்கள் என்னிடம் இருக்கின்றன என்று. நான்கு பக்கங்களிலும் நான் பயத்துடன் பார்த்தேன். அயோக்கியர்கள்! ஒன்றல்ல... பத்தல்ல... நூறு கண்கள் என் மீது பதிந்தன. நான் எங்கு சென்றாலும், எனக்குப் பின்னால் ஆட்கள் இருப்பார்கள். சீட்டி அடிக்கும் சத்தங்கள்! சில அபிப்ராயங்கள்! நான் அபய இடம் தேடி நகரம் முழுக்க ஓடித் திரிந்தேன். இங்கு எவ்வளவு உயர்ந்த வீடுகள் இருக்கின்றன! சமுதாயத்தின், ஆன்மீகத்தின் காப்பாளர்கள் வசிக்கும் இடங்கள்! நான் பல வாசல் கதவுகளையும் தட்டினேன். எதுவும் திறக்கப்படவில்லை.

‘தெரு முழுவதும் அலைந்து திரியும் பெண்’ என்று என்னைப் பற்றி தீர்மானம் எழுதி விட்டார்கள். நான் என்னையே விற்று விட்டேன் என்பதைப் போல... நான் அழுது விட்டேன்.

என் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒரு நாளது. என்னுடைய வாழ்க்கைக்கு வடிவம் உண்டான நாள்! நான் வந்து சேர்ந்த தகவல் நகரம் முழுக்க விளம்பரமாகி விட்டதைப் போல தோன்றியது. என்னை என்னுடைய சம்மதம் இல்லாமல், நான் விருப்பப்படாத பாதையின் வழியாக வலிய இழுத்துக் கொண்டு போவார்கள். அது மட்டுமல்ல – என்னுடைய சம்மதத்தை எனக்கே தெரியாமல் தங்களின் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்ற சூழ்நிலை வரும். நான் சம்மதித்து விடுவேன்.

ஓடி... ஓடி எங்கும் தப்பிக்க முடியாமல் நான் சாயங்கால வேளையில் படகுத் துறையை அடைந்தேன். இரவிலும் பகலிலும் பிரகாசமும் வெளிச்சமும் ஆட்களின் கூட்டமும் உள்ள இடமது. ஒரு பிரகாசமான விளக்கிற்குக் கீழே நான் போய் நின்றேன். சற்று தூரத்தில் நிழலின் கீழும், வட்டமிட்டுக் கொண்டும் எனக்கு முன்னால் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்கும் அந்த ஓநாய்கள் இருந்தன. ஒரு விஷயம் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. யாரும் என்னுடன் நேரடியாக உரையாடவில்லை. அது ஒரு குறைச்சல் உள்ள காரியமாக தோன்றியிருக்கலாம்.

கொல்லம், கொச்சி முதலான பல இடங்களுக்கும் ஐந்தைந்து நிமிட இடைவெளியில் படகுகள் சென்று கொண்டிருந்தன. பல இடங்களிலிருந்தும் படகுகள் வந்து கொண்டுமிருந்தன. வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தவர்கள் என்னை கவனிக்க ஆரம்பித்தார்கள். இடத்தை விட்டுச் செல்லும் ஏதாவது படகில் ஏறி தப்பிக்க.... அதுவும் சாத்தியமற்றதாக இருந்தது. கையில் பணமில்லை. அந்த செல்லும் காரியமும் தப்பித்தலாக இருக்காது.

நான் இப்போது கூறுவது உங்களுக்கு புரியாது. புரிந்தாலும், நீங்கள் நம்பப் போவதில்லை. இவையெல்லாம் பொய்கள் என்றுதான் தோன்றும். ஏனென்றால், உங்களுடைய கண்களுக்கு முன்னால் நடப்பவற்றை நீங்கள் பார்ப்பதில்லை. உண்மைகளிலிருந்து மிகவும் விலகித்தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு கூறுபவை அனைத்தும் கெட்டுப் போன ஒருத்தி தன்னுடைய தவறுகளை வெள்ளையடிப்பதற்காகச் செய்யும் முயற்சி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்ச வேண்டிய தேவை எனக்கில்லை. உங்களுக்கு என்மீது என்ன தோன்றினாலும், எனக்கு அதனால் ஒன்றுமில்லை. மானம் கெட்டுப் போன ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இப்படியொரு நாள் இருக்கும். எங்கும் போக முடியாமல், துணைக்கு யாருமில்லாமல் வாயைப் பிளந்து கொண்டு நின்றிருக்கும் ஆபத்திற்கு முன்னால் நின்று நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாள்! மானத்தின் விலையை அன்று அவள் தெரிந்து கொள்வாள். உங்களுக்கு மானத்தைப் பற்றி சொற்பொழிவு ஆற்றுவதற்குத்தான் முடியும். மானம் என்றால் என்னவென்பதை அதை இழக்கப் போகும் அந்த அதிர்ஷ்டமற்ற பெண் அனுபவித்துத் தெரிந்து கொள்ளவும் செய்கிறாள்.

அடுத்த நிமிடம் எனக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் நான் பயந்தேன். எனக்கு தப்பிக்க வழியே இல்லை என்பதை உறுதியாக தீர்மானித்துக் கொண்டேன். ஒருவேளை சில மணித் துளிகளை நகர்த்திக் கொண்டு போவதற்கு இயலலாம்.

அப்படி தூணைப் போல நின்று கொண்டிருப்பது சரியல்ல என்று தோன்றியது. நான் சுவரில் சாய்ந்து அமர்ந்தேன். அந்த அமர்ந்த நிலையில் சரீ களைப்பின் காரணமாக நான் சற்று கண்களை மூடி விட்டேன். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன் என்று எனக்கு தெரியாது. அதிர்ச்சியடைந்து கண் விழித்து, நான்கு பக்கங்களிலும் பார்த்தேன். நான் அமர்ந்திருந்த இடத்திலேயேதான் அமர்ந்திருந்தேன்.

அவ்வாறு கண்களை மூடி தூங்கியது சரியல்ல என்று எனக்கு தோன்றியது. அது என்னுடைய கவனக் குறைவால் உண்டானதல்ல. அதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் நான் தூங்கலாமா? அப்போதும் சில இளைஞர்கள் என்னை கவனித்துக் கொண்டிருந்தனர்.


கஷ்டம்! பலம் கொண்ட ஒரு ஆணின் பலம் உள்ள கரங்களின் வளையத்திற்குள் சிக்கியிருந்தால்...! அப்படி நடந்திருந்தால், எந்த அளவிற்கு நிம்மதி கிடைத்திருக்கும்! அது யாராக இருந்தாலும் சரிதான். ஒரு ஆண் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆணின் சொத்தாக, அவனுடைய அடிமையாகவே என்றென்றும் வாழ்வதற்கு தயார். அதற்கு அந்த ஆணுக்கு விருப்பமில்லையென்றால், ஆபத்து இல்லாமற் போன இடத்திலேயே என்னை விட்டெறியட்டும். இந்த இரவுப் பொழுதில் ஒரு காப்பாளன் எனக்கு இருந்தால் போதும்.

ஆனால், என் மீது காலையிலிருந்து பதிந்திருந்த எந்தவொரு பார்வையிலும், அந்த இரக்கத்தை நான் பார்க்கவில்லை. எல்லா ஆணுக்கும் நான் வேண்டும். தனக்கு மட்டுமே வேண்டுமென்று தோன்றுவதில்லை. தேவை முடிந்து விட்டால், வீசி எறிந்து விடுவான். வேறு யார் வேண்டுமென்றாலும், எடுத்துக் கொள்ளட்டும், எப்படி வேண்டுமென்றாலும் ஆகட்டும்... அதுதான் நினைப்பு.

அந்த கண்களில் ஒன்றில் கூட ஆழமான சுயநலத்தின் கடுமையைப் பார்த்தால் போதும். எனக்குத்தான் வேண்டுமென்ற, இன்னொரு ஆளுக்கு தர மாட்டேன் என்ற ஒரு ஆவேசம்! அப்படியொரு இடத்தைப் பார்த்தால், நான் அங்கு போய் இருந்து கொள்வேன். என்னை பிய்த்து கடித்துக் கொள்ளட்டும்... பறித்து கிழித்துக் கொள்ளட்டும்... நான் தாங்கிக் கொள்வேன். அது இருக்கட்டும்... என்னை தனியாக ஒருவன் கூட பின்பற்றி வருவதில்லை. செல்லும் வழியில் நண்பர்களையும் அழைப்பார்கள். அப்படியே தனியாக வந்திருந்தால், அது தனிப்பட்ட முறையில் உரிமை கேட்கலாம் என்பதற்காக அல்ல – தனியாக வந்தால்தான் நடக்கும் என்பதால்தான்.

நான் மீண்டும் அமர்ந்து சற்று கண் அயர்ந்து விட்டேன். திரும்பவும் திடுக்கிட்டு கண் விழித்தேன். என்னுடைய மானத்தைப் பற்றி எனக்கு உணர்வு இல்லாமற் போய் விட்டதா?

மானம்! என் ஆன்மாவையே நடுங்கச் செய்யும் ஒரு துணிச்சல் எனக்கு உண்டானது. ஏதோ ஒரு மிகப் பெரிய சக்தி என்னை ஆக்கிரமித்தது. நான் வேறு ஆளாக மாறி, எழுந்தேன். என்னை ஆக்கிரமித்தது எது என்று எனக்கு தெரியவில்லை.

என் தலைக்குள் ஒரு வெளிச்சம் விழுந்தது. நான் யார்? வாழ்க்கையில் முதல் தடவையாக என்னைப் பற்றி அந்த கேள்வியை என்னிடமே கேட்டேன். உறவு உள்ளதாக – ஆமாம்... அப்படித்தான் – ஒரு உயிர் கூட வாழ்க்கையில் இல்லாதவள்! அது ஒரு விருப்பமுமில்லை. என்னுடைய அன்பைச் செலுத்துவதற்கு இடமில்லை. என் மீது அன்பு செலுத்தும் இடமுமில்லை. என் அன்பைச் செலுத்த – எனக்கு அன்பு என்ற ஒன்று இருக்கிறதா? அன்பு செலுத்த நான் படிக்கவில்லை. நான் ஒரு பெண். ஒரு ஆண் என்னை ஏற்றுக் கொள்வானா? அதற்கான சாத்தியம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது!

இன்று வரை என்னுடைய மானத்தை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்றாலும், நான் அரங்கத்தை விட்டு வெளியே வந்து விட்ட பெண் என்று தீர்மானம் எழுதி விட்டார்கள். மானத்தைப் பற்றிக் கூட... யாருக்கு? தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்ணுக்கா? அவளுக்கு எதற்கு மானம்? எதற்காக, யாருக்காக அவள் மானத்தைப் பத்திரப்படுத்தி காப்பாற்ற வேண்டும்? மானமாம் மானம்! குடும்பத்தை உண்டாக்கி, பிள்ளை, குட்டிகளுடன் சேர்ந்து அப்படியே சந்தோஷமாக வாழும்போது, உங்களுடைய சமூகச் சூழலின் உறுதிக்காகவும் தெளிவான நிலைக்காகவும் சுய நலத்திற்காகவும் நீங்கள் உண்டாக்கி வைத்திருக்கும் ஏற்பாடுதானே மானம்? மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்புவது எனக்காக அல்ல. உங்களுக்காகத்தான். நான் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது உங்களுடைய விருப்பம். என் மானம் கெட்டால், நீங்களோ, உங்களுடைய பிள்ளைகளோ எனக்குப் பின்னால் வருவார்கள். உங்களுடைய மனைவியின் மீது அன்பு செலுத்தாத நிலை உண்டாகும். அப்படி நடந்து... நடந்து... நான் உங்களுடைய சமுதாயத்திற்கு ஒரு தொல்லையாக ஆவேன். எனக்கோ? மானத்தைக் காப்பாற்றினாலும், இல்லையென்றாலும்... இந்த தெருக்களில் சுற்றித் திரியும் பெண் சுற்றிச் சுற்றி ஏதாவது பாதையில் விழுந்து அழிவாள்... ஒரு சமுதாய உயிரினம் என்ற நிலையில், நான் ஒரு சட்டத்தை மீறினேன் என்று நீங்கள் வேண்டுமானால் கூறலாம். கூறிக் கொள்ளுங்கள்! சமூக உயிரினம் என்ற நிலையில், எனக்கும் சில குறைந்தபட்ச உரிமைகள் இல்லையா? இல்லாவிட்டால்... பெரிய பெரிய கடமைகள் மட்டும்தான் இருக்கின்றனவா?

எனினும், எனக்குள் ஏதோ பலமான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மானத்தைப் பற்றிய உணர்வு எப்படி, என்னிடம் உண்டானது என்பதை நான் சிந்தித்தேன். அந்த உணர்வு எனக்குள்ளேயே இருப்பதுதான். உண்டானது அல்ல. எனக்குள் ஒரு போட்டியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த ஒரு பெரிய சக்திக்கும், எனக்குள்ளேயே இருக்கும் சக்திக்குமிடையே!

மீண்டும் நான் பயந்தேன்... சோர்வடைந்தேன்... என்னைக் காப்பாற்றுவதற்கு யாருமில்லையா? நான் என்ன செய்ய வேண்டும்?

ஒரு போலீஸ்காரன் எனக்கு அருகில் வந்தான். காலிலிருந்து தலை வரை பார்வையால் பயணித்து விட்டு, அவன் கேட்டான்:

‘நீ யாருடீ? எதற்காக இங்கே நிற்கிறாய்?’

நான் யார்? என்னால் பதில் கூற முடியவில்லை. இந்த பிறவி சாத்தியமும் அல்ல. நான் யார்? யார்?

போலீஸ்காரனின் முகம் வெறுப்பு காரணமாக சுருங்கியது. அவன் கூறினான்:

‘பிணங்கள்! மற்றவர்களைத் தொல்லைப்படுத்துறதுக்கு என்றே ஒவ்வொண்ணும் வந்து சேருது. நகரம் முழுவதையும் நாசம் செய்றதுக்கு.... இவையெல்லாம் எங்கேதான் பிறந்தனவோ?’

அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஆளிடம் அவன் தொடர்ந்து சொன்னான்:

‘நாளைக்கே கேள்விப்படலாம் – நகரத்தில் இதன் மூலம் பத்து இடங்களில் தகராறு உண்டானது என்று. கொலையும் நடக்கலாம். நல்ல குடும்பத்திலுள்ள ஆளும் அதில் இருப்பான். இது தீராத நோய்களின் உறைவிடம். நாடு முழுக்க பரப்புவதற்கு வெளியேறியிருக்கு...!’

அப்போது எனக்கு புரிந்தது – ஒருத்தியின் மானம் போனால், அது சமுதாயத்தை எப்படி பாதிக்குமென்று.

அவன் என்னிடம் நடக்குமாறு கூறினான். நான் நடந்தேன். அவன் எனக்குப் பின்னால்... கையிலிருந்த பிரம்பால் அவன் என்னுடைய பின் பகுதியில் ஒரு அடி அடித்தான். எதற்கோ, ஏனோ! நான் சுருங்கிப் போய் விட்டேன்.

அன்று நான் போலீஸ் ஸ்டேஷனில் படுத்தேன். அடடா! என்ன ஒரு நிம்மதி! நான் தூங்கினேன்.


மறுநாள் போலீஸ்காரன் என்னை ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினான். அவர் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். முதல் கேள்வி என்னுடைய பெயர் என்ன என்பது. அந்த பெயரை நான் கூறினேன். அடுத்ததாக என்னுடைய ஊர் எங்கு இருக்கிறது என்பது. எனக்கு ஊர் இல்லை என்று நான் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை. அவருடைய குற்றமல்ல – ஊர் இல்லாத மனிதர்கள் இல்லை என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்தானே நீங்கள் அனைவரும்! நான் ஒரு பெரிய திருடி என்று அவர் கூறினார். அடுத்த கேள்வி எனக்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது. யாரும் இல்லை என்று நான் சொன்னேன். அதுவும் பொய்யாம்! நான் நினைப்பதற்கு சில மனிதர்களின் பெயர்கள் இருக்கின்றன. உண்மைதான். ஆனால், அவர்கள் எனக்கு யாருமில்லை. அந்த வகையில் சில கேள்விகளுக்குப் பிறகு, ஒரு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தபடி கிடைக்காததால், நான் பிறந்தது எங்கே என்று அவர் கேட்டார். அது எனக்கு தெரியும். நான் அந்த இடத்தின் பெயரைக் கூறினேன்.

எல்லாவற்றையும் எழுதி விட்டு, என்னை நான் பிறந்த இடத்தில் கொண்டு போய் சேர்க்கும்படி அவர் தீர்ப்பு எழுதினார்.

நீதிபதிக்கு முன்னால் என்னை கொண்டு போய் நிறுத்தியபோது, எனக்கு நிம்மதியாக இருந்தது. ஆபத்து நீங்கி விட்டது என்று நினைத்தேன். அரசாங்கம் என்னை ஆபத்து இல்லாத ஒரு இடத்தில், மானத்தைக் காப்பாற்றக் கூடிய ஒரு சூழலில் கொண்டு போய் சேர்க்கும் என்று நினைத்தேன். ஆனால், நான் பிறந்ததாகக் கூறிய ஊரில் கொண்டு போய் விடும்படி தீர்ப்பு! எதற்கு? ஒருவேளை என்னை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இல்லாமலிருக்கலாம். அரசாங்கம் என்ன செய்ய முடியும்? நான் வரி கட்டுகிறேனா என்ன?

**********
நான் மீண்டும் இந்த நகரத்திற்கே வந்தேன். இன்று நான் விளக்கிற்குக் கீழே பயந்து கொண்டு நிற்கக் கூடியவள் அல்ல. நிழலைப் பின்பற்றி இரவு வேளையில் பயணிப்பவள். பயந்து ஓடுவதில்லை. இரு பக்கங்களிலும் பார்த்து புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு நடப்பேன். ஆட்கள் என்னைப் பார்த்து பயப்படுவதில்லை.

இன்று நான் சமுதாயத்திற்கு முன்னால் ஒரு கேள்விச் சின்னம் – எனக்கு தெரியும். என் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் எனக்கு தெரியும். அப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருக்கட்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.