Logo

குழந்தைகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4046

குழந்தைகள்
(ரஷ்ய கதை)
ஆன்டன் செக்காவ்
தமிழில்: சுரா

ப்பாவும் அம்மாவும் நதியா அத்தையும் வீட்டில் இல்லை. சாம்பல் நிறக் குதிரை இழுத்துச் செல்லும் வண்டியை வைத்திருக்கும் வயதான அதிகாரியின் வீட்டில் நடைபெறும் ஒரு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு சாப்பிடும் மேஜையைச் சுற்றிலும் அமர்ந்து ‘லாட்டோ’ விளையாடிக் கொண்டிருந்தனர் குழந்தைகள் — க்ரிஷா, அன்யா, அல்யோஷா, சோனியா... பிறகு சமையல்காரனின் மகன் ஆந்த்ரேயும். அவர்கள் பொதுவாக படுத்து தூங்கக் கூடிய நேரமெல்லாம் கடந்து விட்டது. ஆனால், அம்மா வந்த பிறகு பெயர் வைக்கப்பட்ட குழந்தை எப்படி இருக்கிறது, விருந்தில் என்னென்ன உணவு வகைகளெல்லாம் இருந்தன என்ற விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் எப்படி உறக்கம் வரும்?

தொங்கிக் கொண்டிருக்கும் விளக்கின் வெளிச்சத்தில் மேஜையின் மீது விளையாட்டு பொருட்களும் கடலைத் தோல்களும் தாள் துண்டுகளும் பரவி கிடந்தன. ஒவ்வொருவருக்கு முன்னாலும் இரண்டு கார்டுகள் வீதம் இருந்தன. மேஜையின் மத்தியிலிருந்த ஒரு வெள்ளை நிற தட்டில் ஒவ்வொரு ‘கோபெக்’கின் ஐந்து நாணயங்கள் இருந்தன. அதற்கடுத்து பாதி தின்னப்பட்ட ஒரு ஆப்பிள். ஒரு கத்திரி... கடலைத் தோல்களைப் போடுவதற்கு ஒரு பாத்திரம்.

பணம் வைத்துத்தான் விளையாட்டு — ஒவ்வொரு கோபெக். திருட்டு விளையாட்டு விளையாடினால், அந்தக் கணமே வெளியேற்றி விடுவார்கள்.

சாப்பிடும் அறையில் வேறு யாருமில்லை. ஆயா கீழேயிருக்கும் அறையில் சமையல்காரனுக்கு தையல் கற்றுத் தந்து கொண்டிருக்கிறாள். குழந்தைகளில் மூத்தவன் — ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் வாஸ்யா — வரவேற்பறையில் போடப்பட்டிருக்கும் ஸோஃபாவில் தூங்கிக் கொண்டிருக்கிறான்.

விளையாட்டு மிகவும் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மொட்டைத் தலையையும் வீங்கிய கன்னங்களையும் நீக்ரோக்களிடம் காணப்படுவதைப் போன்ற தடிமனான உதடுகளையும் கொண்டிருந்த ஒன்பது வயது நடக்கும் க்ரீஷாதான் மிகவும் அதிகமான உற்சாகத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். ப்ரிப்பரேட்டரி வகுப்பில் அவன் படித்துக் கொண்டிருந்தான். வகுப்பிலேயே மிகுந்த அறிவைக் கொண்ட மாணவன் அவன்தான். மிகவும் பருமனாக இருப்பவனும் அவன்தான். பணத்தை நினைத்து மட்டுமே அவன் விளையாடுகிறான். தட்டிலிருந்த கோபெக்குகளை ஆசைப்படாமலிருந்திருந்தால், அவன் எப்போதோ போய் படுத்து உறங்கியிருப்பான். மற்றவர்களின் கார்டுகளை அவன் அவ்வப்போது ஆர்வமும் பொறாமையும் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். தோல்வி பயம், பொறாமை, பணத்தைப் பற்றிய கணக்கு கூட்டல்கள் — மொத்தத்தில் அவனால் அடங்கி இருக்க முடியவில்லை. வெற்றி பெற்றால், உடனடியாக அவன் ஆர்வத்துடன் எல்லா பணத்தையும் அள்ளி தன் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொள்வான்.

கூர்மையான தாடைப் பகுதியையும் கூர்மையான அறிவு ஒளிர்ந்து கொண்டிருக்கும் கண்களையும் கொண்டிருந்த எட்டு வயது நடக்கும் பெண் குழந்தையான அன்யாவிற்கும் எங்கே தோற்று விடுவோமோ என்ற பயம் இருக்கிறது. விளையாட்டு மாறி வருவதற்கேற்ப அவளுடைய முகம் அவ்வப்போது சிவந்து காணப்படும். சில நேரங்களில் வெளிறி வெளுக்கும். அவளுக்கு பணம் பெரிய பிரச்னையில்லை. ஆனால், வெற்றி என்பது பெருமைப்படக் கூடிய விஷயம்.

ஆறு வயது நடந்து கொண்டிருக்கும் சோனியா விளையாட்டில் கிடைக்கக் கூடிய சுவாரசியத்திற்காக மட்டுமே விளையாடுகிறாள். நல்ல உடல் நலத்தைக் கொண்ட குழந்தைகளிடமும், விலை மதிப்புள்ள பொம்மைகளிடமும் மட்டுமே இருக்கக் கூடிய நிறத்தையும், முடிச் சுருள்களையும் கொண்டிருந்த அவளுடைய முகம் சந்தோஷத்தால் பிரகாசமாக காணப்பட்டது. யார் வெற்றி பெற்றாலும் அவள் கைகளைத் தட்டி, சத்தம் போட்டு சிரிப்பாள்.

சிவந்த நிறத்தைக் கொண்ட குழந்தையான அல்யோஷா சத்தமாக சுவாசம் விட்டுக் கொண்டும், இளைத்துக் கொண்டும், கார்டுகளை உற்று பார்த்துக் கொண்டும் இருந்தான். விளையாட்டில் வெற்றி, தோல்வி, பணம் எதுவுமே அவனுக்கு பிரச்னையில்லை. விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதித்ததே பெரிய விஷயம் என்பதைப் போல அவனுடைய முகம் இருக்கும். பார்த்தால் வெறும் அப்பாவியைப் போல காணப்படுவான். ஆனால், உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் — அவன் ஒரு குட்டிப் பிசாசு. அவன் விளையாட்டில் ஈடுபடுவதே விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தால் அல்ல. விளையாட்டிற்கு மத்தியில் உண்டாகக் கூடிய சண்டைகளைப் பார்ப்பதற்குத்தான். அது அவனுக்கு விருப்பமான விஷயம். ஒரு அடிபிடியோ, கெட்ட சொற்கள் கூறுவதோ நடந்தால் சந்தோஷம் உண்டாகி விடும். அவனுக்கு பத்து வரைதான் எண்ணுவதற்கு தெரியும். அதனால் அன்யாதான் அவனுடைய பாய்ண்ட்களையும் கணக்குகளையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பாள்.

காலிக்கோ துணியால் ஆன உடுப்பில் மார்புப் பகுதியில் கண்ணாடி சிலுவை பதிக்கப்பட்ட, கனவில் நடப்பவனைப் போல எண்களையே உற்றுப் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கும் ஐந்தாவது விளையாட்டுக்காரனான சமையல்காரனின் மகன் ஆந்த்ரே கறுத்து வெளிறிப் போன சிறுவன். பணம், வெற்றி, தோல்வி எதுவுமே அவனை பாதிக்கவில்லை. கார்டுகளின் கை மாறலில் உண்டாகக் கூடிய எளிய கணித அறிவியல்தான் அவனை ஈர்த்திருக்கும் விஷயம்.

வரிசைப்படி அவர்கள் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். எண்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பதால், ஒரு சுவாரசியத்திற்காக ஒவ்வொரு எண்ணையும் அவர்கள் இன்னொரு பெயர் குறிப்பிட்டு அழைத்தார்கள்.

ஏழாம் எண்ணை ‘போக்கர்’ என்று குறிப்பிட்டார்கள். பதினொன்றை ‘கொம்பு’ என்று. விளையாட்டு அந்த வகையில் சுவாரசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘முப்பத்திரண்டு’ என்று அழைப்பதற்கு மத்தியில் க்ரிஷா தன் தந்தையின் தொப்பியிலிருக்கும் மஞ்சள் நிற தொங்கல்களைப் பிடித்து பிய்த்துக் கொண்டிருந்தான்.

‘பதினேழு!’

‘போக்கர்!’

‘இருபத்தெட்டு... வாசலை மூடு.’

ஆந்த்ரேவிற்கு இருபத்தெட்டின் அழைப்பு விட்டுப் போனதை அன்யா கவனித்தாள். வேறொரு நேரமாக இருந்தால், அவள் அதை ஞாபகப் படுத்தியிருப்பாள். ஆனால், இப்போது பணம், இன்னும் சொல்லப் போனால் — அதை விட மரியாதை சம்பந்தப்பட்ட விஷயமும் இருந்ததால், அவள் சந்தோஷப்படவே செய்தாள்.

‘இருபத்து மூணு!’ — க்ரிஷா தொடர்ந்தான்.

‘அறுபத்து ரெண்டு.’

‘ஒன்பது!’

‘இதோ ஒரு கரப்பான் பூச்சி!’ — தவிட்டு நிறத்தில் மேஜையின் மீது வேகமாக நடந்து கொண்டிருந்த பூச்சியைச் சுட்டிக் காட்டியவாறு சோனியா சத்தம் போட்டு கூறினாள்.


‘கொல்லக் கூடாது. அதற்கு ஒருவேளை குஞ்சுகள் இருக்கலாம்’ — அல்யோஷா உரத்த குரலில் கூறினான்.

கரப்பான் பூச்சியை கவனித்துக் கொண்டிருந்த சோனியா அதன் குஞ்சுகள் எந்த அளவிற்கு சிறியனவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாள்.

‘நாற்பத்து மூணு! ஒண்ணு!’ — அன்யாவிற்கு இரண்டு வரிசைகள் சேர்ந்திருக்கின்றன என்ற வேதனையுடன் க்ரிஷா தொடர்ந்து கூறினான்: ‘ஆறு!’

‘என்னுடையது முடிந்து விட்டது. நான் வெற்றி பெற்று விட்டேன்’ — குறும்புத்தனம் நிறைந்த கண்களை உருட்டி, சத்தமாக சிரித்தவாறு சோனியா உரத்த குரலில் கத்தினாள். மற்றவர்கள் முகங்களின் தாழ்ந்தன.

‘அவளுடைய சீட்டைச் சோதித்துப் பாரு’ — சோனியாவையே வெறித்துப் பார்த்தவாறு க்ரிஷா கூறினான்.

அங்கு இருந்தவர்களிலேயே மூத்தவனும் அறிவாளியுமான க்ரிஷாதான் முடிவுகளை எடுப்பவன். அவன் கூறுவதை அவர்கள் கேட்டு நடப்பார்கள். சோனியாவைக் கூர்ந்து சோதித்துப் பார்த்தான். திருட்டு விளையாட்டு அல்ல என்பதை கண்டு பிடித்த விஷயம் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நொறுக்கி விட்டது.
புதிய விளையாட்டு ஆரம்பமானது.

‘நேற்று நான் ஒரு விஷயத்தைப் பார்த்தேன்’ — தனக்குத் தானே கூறிக் கொள்வதைப் போல அன்யா உரத்த குரலில் கூறினாள்: ‘ஃபிலிப் ஃபிலிப்போவிச் கண்களின் மடிப்புகளை விரிய வைத்தவாறு மேலே பார்த்தான். சிவப்பு நிறத்தால்... சாத்தானின் கண்களைப் போல. பார்த்தால் பயம் தோன்றும்.’

‘நானும் பார்த்தேன்’ — க்ரிஷா கூறினான்.

‘எட்டு! எங்களுடைய வகுப்பில் ஒரு சிறுவனால் காதுகளை அசைக்க முடியும். இருபத்து ஏழு!’

ஆந்த்ரே தலையை உயர்த்தி க்ரிஷாவைப் பார்த்தான். ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு கூறினான்: ‘என்னாலும் காதுகளை அசைக்க முடியும்.’

‘அப்படியென்றால், பார்க்கலாமே!’ — ஆந்த்ரே உதடுகளையும் விரல்களையும் அசைக்கச் செய்தான். காதுகளும் அசைகின்றன என்று அவன் நினைத்தான். சுற்றிலும் குலுங்கிக் குலுங்கி சிரிக்கும் சத்தம் உயர்ந்தது.

‘அவன் அந்த அளவிற்கு நல்ல மனிதனல்ல... அந்த ஃபிலிப் ஃபிலிப்போவிச்’ — சோனியா பெருமூச்சு விட்டாள். ‘நான் நேற்று இரவு உடை மட்டும் அணிந்து நின்று கொண்டிருந்தபோது, அவன் நர்சரிக்குள் நுழைந்து வந்தான்... நான் ஒரு மாதிரி ஆயிட்டேன்.’

‘விளையாட்டு முடிந்து விட்டது’ — தட்டினை நாணயங்களுடன் வேகமாக பாய்ந்து எடுத்துக் கொண்டே க்ரிஷா கூறினான்: ‘நான் வெற்றி பெற்று விட்டேன். வேண்டுமென்றால், சோதனை பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.’

சமையல்காரனின் மகன் தலையை உயர்த்தி பெருமூச்சு விட்டான்: ‘என்னால் இனி விளையாட முடியாது.’

‘ம்... ஏன்?’

‘அது... அது... என் கையில் பணமில்லை.’
‘பணமில்லாவிட்டால், விளையாட முடியாது’ — க்ரிஷா கூறினான்.

அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பதைப் போல ஆந்த்ரே தன் பாக்கெட்டிற்குள் தேடிப் பார்த்தான். பலகார துண்டுகளையும், முனை கடிக்கப்பட்ட ஒரு பென்சிலையும் தவிர, வேறு எதுவுமே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு முகத்தை வேண்டுமென்றே இறுக வைத்துக் கொண்டான். அவன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்தான். இனி எந்த நிமிடமும் ஒரு அழுகை வெடிக்கலாம்.

‘உனக்காக நான் பணம் வைக்கிறேன்’ — அவனுடைய அந்த பரிதாப நிலையைப் பார்க்க முடியாமல் சோனியா கூறினாள்: ‘பிறகு... திருப்பி தரணும்.’

எல்லோரும் பணம் வைத்தார்கள். அடுத்த விளையாட்டு ஆரம்பமானது. ‘மணியடிக்கும் சத்தம் கேட்பதைப் போல இருக்குது’ — தட்டுகளைப் போன்ற பெரிய கண்களுடன் அன்யா கூறினாள்.

விளையாட்டை நிறுத்தி விட்டு, அவர்கள் சாளரத்திற்கு அருகிலிருந்த இருட்டையே வெறித்துப் பார்த்தார்கள். விளக்கின் பிரதிபலிப்பு இருட்டில் ஒளிர்ந்தது.

‘உனக்கு வெறுமனே தோன்றியிருக்கணும்’ - ‘இரவில் மணியடிக்கப்படும் ஒரேயொரு இடம் சுடுகாடுதான்’ — ஆந்த்ரே கூறினான்.

‘என்ன காரணம்?’

‘தேவாலயத்திற்குள் திருடர்கள் நுழையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக... அவர்களுக்கு மணிச் சத்தம் என்றால் பயம்.’

‘திருடர்கள் ஏன் தேவாலயத்திற்குள் நுழைய வேண்டும்?’ — சோனியாவிற்கு சந்தேகம் உண்டானது.

‘என்ன சந்தேகம்? காவலாளியைக் கொல்வதற்குத்தான்.’

ஒரு நிமிடம் பேரமைதி. ஒரு அதிர்ச்சியுடன் எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த விளையாட்டு ஆரம்பமானது. இந்த முறை ஆந்த்ரேதான் வெற்றி பெற்றான்.

‘அவன் திருட்டு விளையாட்டு விளையாடினான்’ — அல்யோஷா அவனையே வெறித்துப் பார்த்தான். வேகமாக எழுந்து ஒரு முழங்காலை உயர்த்தி மேஜையின் மீது வைத்துக் கொண்டு ஆந்த்ரேவின் கன்னத்தில் ஒரு அடி அடித்தான். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மேலும் ஒவ்வொன்றாகக் கொடுத்து விட்டு, இருவரும் அழ ஆரம்பித்தார்கள். சாப்பிடும் அறையில் பல வகையான அழுகைச் சத்தங்களும், புலம்பல்களும் கேட்டன. எனினும், விளையாட்டு முடியவில்லை. ஐந்து நிமிடங்களில் எல்லோரும் பழைய மாதிரியே சிரிப்பும், பேச்சுமாக ஆகி, முகத்தில் வழிந்த கண்ணீர் அடையாளங்களுக்கு மத்தியில் சிரிப்பு மலர்ந்தது. அல்யோஷாவிற்குத்தான் அதிக சந்தோஷம் — ஒரு சண்டையைப் பார்க்க முடிந்ததே!

ஐந்தாம் வகுப்பு படிக்கும் வாஸ்யா அறைக்குள் நுழைந்து வந்தான். அவனுடைய முகம் முழுவதும் தூக்கக் கலக்கமும், வெறுப்பும் நிறைந்திருந்தன.

‘வெட்கக் கேடு!’ — நாணயம் குலுங்கிக் கொண்டிருந்த பாக்கெட்டைத் தடவியவாறு க்ரிஷா அமர்ந்திருப்பதைப் பார்த்தபோது, அவனுக்குத் தோன்றியது அப்படித்தான்: ‘குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது... பிறகு அவர்கள் பணத்திற்காக போட்டி போட்டு விளையாடுவது... இப்படித்தான் குழந்தைகளை வளர்ப்பதா? வெட்கக் கேடு!’

ஆனால், அவர்களுடைய அளவற்ற ஆர்வத்தைப் பார்த்து விட்டு, அவனுக்கும் கூட விளையாட வேண்டும் என்று தோன்றியது: ‘ஒரு நிமிடம்... நானும் விளையாடுகிறேன்.’

‘ஒரு கோபெக் வைக்கணும்.’

‘இதோ... ஒரு நிமிடம்...’ — அவன் பாக்கெட்டிற்குள் தேடினான்: ‘என் கையில் கோபெக் இல்லை. ரூபிள்தான் இருக்கு. நான் ஒரு ரூபிள் வைக்கிறேன்.’

‘அது முடியாது. கோபெக்தான் வேணும்.’

‘முட்டாள்கள்! ரூபிள், கோபெக்கை விட பெரியது. வெற்றி பெறும் ஆள் எனக்கு மீதி சில்லரையைத் தந்தால் போதும்.’

‘வேண்டாம். கொஞ்சம் போனால், போதும்.’

தோளைக் குலுக்கியவாறு அவன் சமையலறையை நோக்கி நடந்தான். வேலைக்காரர்களின் கைகளில் கோபெக் எதுவுமில்லை.

‘நீ எனக்கு சில்லரை தா’ — திரும்பி வந்த வாஸ்யா, க்ரிஷாவிடன் கூறினான்: ‘நான் அதற்கு பலன் கிடைக்கிற மாதிரி தர்றேன். அதுவும் இல்லாவிட்டால், நீ ஒரு ரூபிளுக்கு பத்து கோபெக்குகளை எனக்கு விற்பனை செய்.’

க்ரிஷா, வாஸ்யாவையே சந்தேகத்துடன் பார்த்தான்: ‘இவன் என்னை எப்படியாவது ஏமாற்றி விடுவானோ?’

‘நான் தர மாட்டேன்’ — பாக்கெட்டை இறுக பிடித்துக் கொண்டே அவன் சொன்னான். வாஸ்யாவிற்கு கோபம் வந்தது. அவன் அவர்களை முட்டாள்கள் என்றும், மந்த புத்தியைக் கொண்டவர்கள் என்றும் கூறினான்.

‘நான் பணம் வைக்கிறேன். வாஸ்யா, உட்காரு’ — சோனியா கூறினாள்.

இரண்டு சீட்டுகளை முன்னால் வைத்துக் கொண்டு அவன் அமர்ந்தான். அன்யா சத்தம் போட ஆரம்பித்தாள்.


‘கொஞ்சம் நிறுத்துங்கள். என்னுடைய ஒரு கோபெக் விழுந்து விட்டது’ — க்ரிஷா கவலையுடன் கூறினான். எல்லோரும் விளக்கை எடுத்து, நாணயத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அங்கேயிருந்த குப்பைகள் அனைத்தும் கைகளில் பட்டன. தலைகள் ஒன்றோடொன்று மோதின. நாணயம் மட்டும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த வாஸ்யா, க்ரிஷாவின் கையிலிருந்து விளக்கை வாங்கி மேஜையின் மீது வைத்தான். க்ரிஷா இருட்டிலும் தேடிக் கொண்டிருந்தான்.

இறுதியில் நாணயம் கிடைத்து விட்டது. எல்லோரும் மேஜையைச் சுற்றிலும் அமர்ந்து, மீண்டும் விளையாட்டை ஆரம்பிப்பதற்கு தயாரானார்கள்.

‘சோனியா தூங்கி விட்டாள்’ — அல்யோஷா உரத்த குரலில் கூறினான். தலை முடிகள் தோளில் விழுந்து கிடக்கின்றன. ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும் அவள் உறங்க ஆரம்பித்து என்று தோன்றும் பார்க்கும்போது. அந்த அளவிற்கு சாந்தத் தன்மையுடனும் ஆழமாகவும் இருந்தது அவளுடைய உறக்கம். எல்லோரும் நாணயத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது, அவள் தூங்கி விட்டாள்.

‘வந்து... அம்மாவின் கட்டிலில் ஏறிப் படு’ — அவளைச் சாப்பிடும் அறையிலிருந்து வெளியே இழுத்தவாறு, அன்யா கூறினாள்.

எல்லோரும் சேர்ந்து அவளை வெளியே கொண்டு சென்றார்கள். ஐந்து நிமிடங்கள் கடந்ததும், அம்மாவின் கட்டில்... பார்க்க வேண்டிய காட்சிதான். சோனியாவிற்கு மிகவும் அருகில் அல்யோஷா படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவர்களுடைய கால்களில் தலைகளை வைத்து, க்ரிஷாவும் அன்யாவும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சமையல்காரனின் மகன் ஆந்த்ரேயும் அங்கேயே சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அடுத்த விளையாட்டு ஆரம்பமாகும் வரை, எல்லா சக்திகளையும் இழந்து, நாணயங்கள் அவர்களைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. இனிய கனவுகள்.... சுகமான தூக்கம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.