Logo

புகை வண்டியில்...

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4047

புகை வண்டியில்...
எஸ்.கெ. பொற்றெக்காட்
தமிழில்: சுரா

னதா எக்ஸ்பிரஸ்ஸில் நான் ஷொர்னூர் புகை வண்டி நிலையத்தில் இறங்கினேன். அதிகாலை மூன்று மணி. எர்ணாகுளத்திற்குச் செல்ல வேண்டும். பக்கத்து ப்ளாட்ஃபாரத்தில் கொச்சிக்குச் செல்லும் வண்டி நின்று கொண்டிருந்தது. ஆனால், அது ஐந்தரை மணிக்குத்தான் புறப்படும். ஷொர்னூர் ஸ்டேஷனில் வந்து சிக்கிக் கொண்டால், எந்தச் சமயத்திலும் உண்டாகக் கூடிய அனுபவம் இதுவாகத்தான் இருக்கும்.

எங்கிருந்து வந்தாலும், எங்கு போவதாக இருந்தாலும் அந்த ஸ்டேஷனில் குறைந்த பட்சம் மூன்று மணி நேரமாவது பயணிகள் தவம் செய்வதைப் போலத்தான் ரெயில்வே அதிகாரிகள் புகை வண்டிகள் புறப்படும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்திருப்பார்கள். ஆனால், இந்த அதிகாலை வேளையில் வரும் வண்டியில் அங்கு வந்து இறங்கினால், ஒரு லாபம் இருக்கிறது. மூட்டைப் பூச்சி கடி, அடி, சொறி, முனகல் ஆகியவற்றுடன் வெயிட்டிங் அறையின் பிரம்பு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டு நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. கொச்சிக்குச் செல்லும் வண்டியில் இரண்டாம் வகுப்பில் இருக்கும் குஷன் மெத்தையில் ஏறி படுத்து சுகமாக உறங்கலாம். அங்கு இடம் கிடைத்தால், அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பேக்கை கையிடுக்கில் வைத்தவாறு கொச்சிக்குச் செல்லும் வண்டிக்குள் இருக்கும் அறைகளை எட்டி பார்த்துக் கொண்டே நான் நடைமேடையின் வழியாக சற்று நடந்தேன். வண்டிக்குள் பிரகாசமோ, வெளிச்சமோ, ஓசையோ, அசைவோ எதுவுமேயில்லை. எனினும், மனிதர்கள் இருந்தார்கள். தூங்கிக் கொண்டிருப்பவர்கள், தேவையில்லாமல் இடத்தைக் கைப்பற்றி தூங்குவதைப் போல நடித்துக் கொண்டு படுத்திருந்தவர்கள் என்று நிறைய பேர் இருந்தார்கள். ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியின் கதவு பாதியாக திறந்து கிடந்தது. நான் உள்ளே டார்ச் விளக்கை அடித்து பார்த்தேன். பொது மருத்துவமனையின் பிணவறையில் பார்ப்பதைப் போல கீழேயும் மேலேயும் இருந்த ‘பெர்த்’களிலெல்லாம் ‘பிணங்கள்’ இடங்களைப் பிடித்திருந்தன. கீழேயிருந்த ஒரு பெர்த்தில் ஷுக்களை ‘பேக்’ செய்ததைப் போல, இரண்டு பேர் ஒருவரோடொருவர் காலையும் தலையையும் எதிரெதிரே வைத்துக் கொண்டு சுருண்டு படுத்திருந்தார்கள். நான் முன்னோக்கி நடந்தேன். அடுத்த இரண்டாம் வகுப்பு பெட்டியின் கதவைச் சற்று பிடித்து அசைத்துப் பார்த்தேன். திறக்கவில்லை. கேடு கெட்டவர்கள் உள்ளேயிருந்தவாறு அடைத்து வைத்திருந்தார்கள். அதற்குள் சுகமாக உறங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் யாரெல்லாம் என்று எனக்கு தெரியும். சுமை தூக்குபவருக்கு நான்கணா கொடுத்து காரியத்தைச் சாதிக்கும் மூன்றாம் வகுப்புக்காரர்கள். இரவு உணவு சாப்பிட்டு முடித்து, பஞ்சு மெத்தையில் படுத்துத் தூங்குவதற்காக வரும் ரெயில்வே பணியாட்கள் அப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்குபவர்களில் சிலர். வேறு வழியில்லை. இறுதியில் காலியாக கிடந்த ஒரு சாதாரண மூன்றாம் வகுப்பு பெட்டிக்குள் நான் போய் சேர்ந்தேன்.

நடுவில் நீளமான மரத்தாலான மறைவு உண்டாக்கப்பட்டிருந்த ஒரு புதிய மாடல் கம்பார்ட்மெண்ட். சாயத்தின் மணம் மறையாமலிருந்தது. நான் மறைவிற்குப் பின்னால், மேலே இருந்த பொருட்கள் வைக்கப்படும் பலகையின் மீது ஏறினேன். அங்கு என்னுடைய பேக்கை தலையணையாக வைத்து, யாருக்கும் எந்தவொரு தொந்தரவும் இல்லை என்பதைப் போல, சற்று சாய்ந்து படுத்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை. தூக்கத்தை வர விடாமல் செய்வதற்கு பல வகையான சத்தங்கள் கீழேயிருந்து வந்து கொண்டிருந்தன. அனைத்தும் குறட்டையின் பலவகைப்பட்ட சத்தங்கள்தாம். தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு ஒரு ‘ஆர்க்கெஸ்ட்ரா’வை உண்டாக்கி விட்டிருக்கிறார்கள் என்பதைப் போல தோன்றும். என்னென்ன மாதிரியான சத்தங்கள்! ராட்டையைச் சுழற்றுவதைப் போல, தூரத்தில் காரை கிளப்புவதைப் போல, மரம் சாய்ந்து முறிவதைப் போல, சட்டியில் வறுப்பதைப் போல, புறா ஓசை உண்டாக்குவதைப் போல - இப்படி பலவகைப்பட்ட சத்தங்கள் தனியாகவும் சேர்ந்தும் என் காதுகளுக்குள் நுழைந்து ஒலித்துக் கொண்டிருந்தன. சில குறட்டைகளின் இறுதிப் பகுதி தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்தது. ‘ஹ்ற... ஹ்ற... அம்!’ அந்த வகையில் சில குறட்டைகள் வேத மந்திரங்களை உச்சரிப்பதைப் போல இருந்தன (கற்கால மனிதனின் குறட்டையிலிருந்துதான் வேத மந்திரங்களின் உச்சரிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது என்று நம்ப வேண்டியதிருக்கிறது.) பீங்கான் பாத்திரத்தில் பாலைக் கறப்பதைப் போன்ற ஒரு இனிய சத்தமும் எனக்கு மிகவும் அருகில் கீழேயிருந்த பெஞ்சிலிருந்து அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பிள்ளை பெற்ற பெண்ணின் குறட்டைச் சத்தம். அவள் அங்கு ஒரு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே உறங்கிக் கொண்டிருந்தாள்.

குறட்டைச் சத்தங்களுக்கு மத்தியில் சில உறக்கத்தின் போது இருக்கக் கூடிய புலம்பல்களும் கேட்டுக் கொண்டிருந்தன. ‘தேவஸ்ஸி முதலாளி நூற்றைம்பது ரூபாய்.’ மேற்கு மூலையில் சுருண்டு படுத்திருந்த ஒரு பிணம்தான் அப்படி புலம்பிக் கொண்டிருந்தது. தேவஸ்ஸி முதலாளியுடன் உள்ள அந்த விஷயம் என்னவாக இருக்கும்? எனக்கு ஒரு ரேஷன் கடைக்காரனைத் தெரியும். அவன் பகல் வேளையில் திருட்டுத்தனமாகச் செய்த வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் அவனுடைய மனைவிக்கு நன்கு தெரியும். தூக்கத்தில் அவை எல்லாவற்றையும் அவன் கூறுவான். இந்த மனிதனும் ஒரு ரேஷன் கடையில் வியாபாரம் செய்யக் கூடியவனாக இருப்பானோ?

திடீரென்று மூக்கிற்குள் நுழையும் ஒரு வாசனை பெட்டி முழுவதும் பரவியது.

‘தொம்மச்சா, இங்கே வாங்க... காலியாக கிடக்குது’ என்றொரு நாகரீகமற்ற குரலும் அங்கு கேட்டது.

ஐந்து நிமிடங்களுக்குள் சுமையும் பொட்டலமுமாக ஒரு குழு திருவிதாங்கூர் கிறிஸ்தவர்கள் – மலபாரில் குடியிருந்த நிலங்களை விட்டு சொந்த ஊருக்குச் செல்பவர்கள் – பெட்டியின் மரத்தாலான மறைவிற்குப் பின்னால் காலியாகக் கிடந்த பெஞ்ச்களிலும் பலகைகளிலும் இடத்தைப் பிடித்தது. அவர்கள் புல் தைலம் நிறைக்கப்பட்ட புட்டிகளைக் கட்டி, மூடி வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். அதன் வாசனை நிறைந்த தகவல்தான் முன்பு பெட்டிக்குள் நுழைந்து வந்தது.

பத்து நிமிடங்களுக்குள் ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கி, பெட்டிக்குள் பழைய குறட்டைச் சத்தங்களின் ஆட்சி தொடர்ந்தது.

அதற்குப் பிறகும் அரை மணி நேரம் கடந்தது. இதற்கிடையில் மூலையில் படுத்திருந்த பெரியவர் ‘தேவஸ்ஸியின் நூற்றைம்பது ரூபாய்’ விஷயத்தை மீண்டுமொரு முறை சத்தமாக கூறினார். பிள்ளை பெற்ற பெண்ணின் குழந்தை, மூட்டைப்பூச்சி கடித்ததாலோ, மார்பின் காம்பைக் கடித்துக் கொண்டிருந்ததை விட்டு விட்டதாலோ, ஏதோ மின்சார ஹாரனின் சத்தத்தில் ஒன்றிரண்டு தடவைகள் அழுதது.

திடீரென்று பெட்டிக்குள் ஒரு டார்ச் விளக்கின் வெளிச்சம் பரவியது.

‘இதோ... அங்கே இருப்போம்’ – ஒரு பெண்ணின் மென்மையான குரல்.


‘நம் இருவருக்கும் முன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ – ஒரு ஆணின் உரத்த குரல் தொடர்ந்து கேட்டது.வண்டியின் நடைபாதைக்கு மிகவும் அருகில் காலியாகக் கிடந்த பெஞ்சில் டார்ச் அடித்து சோதித்துப் பார்த்துக் கொண்டே, ஒரு பெரிய பெட்டியை பெஞ்சிக்குக் கீழே வைத்து விட்டு, இரண்டு பேர் – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அங்கு இடம் பிடித்தார்கள். பெண் மூலையில் சாய்ந்து உட்கார்ந்தாள். ஆண் அங்கு கால்களை நீட்டி படுத்தான்.

அவர்களுக்கு அருகில் மேலேதான் நான் படுத்திருந்தேன்.

ஒரு குளிர்ச்சியான காற்று பெட்டிக்குள் வேகமாக நுழைந்தது. அந்த ஆண் எழுந்து சாளரங்களை கீழே இறக்கி அடைத்து விட்டு, மீண்டும் படுத்தான்.

‘ஓ... தாங்க முடியாத அளவிற்கு குளிர்... காஷ்மீரில் குளிர் எப்படி?’ – மென்மையான குரல்.

‘தேவகி டீச்சர், காஷ்மீரிலிருக்கும் குளிரைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்?’ – ஆண் குரலின் பதில்: ‘அங்கு மூக்கைச் சிந்தினால், கிடைப்பது ஐஸ் கட்டிதான்... ஐஸ் கட்டி. அதை மூக்கிலிருந்து பிரித்து எடுப்பதற்கு பேனாக்கத்தி வேண்டும்.’

அழகான ஒரு சிரிப்பு. தொடர்ந்து ‘அய்யோ’ என்றொரு குரலை எழுப்பியவாறு குழைந்து நீண்ட ஒரு குலுங்கல் சிரிப்பு. அந்த ஆண் அவளுடைய சரீரத்தில் எங்கேயோ சற்று தொட்டு கிச்சுக் கிச்சு மூட்டியதால் உண்டான சிரிப்பு.

‘மேனன், இனி அந்த கடுமையான குளிரைத் தேடி நீங்கள் போக வேண்டுமல்லவா? விடுமுறையும் சுற்றிப் பார்ப்பதும் முடிவுக்கு வந்து விட்டதல்லவா?’ – இனிய குரல்.

ஆண் குரல் பதில் கூறியது: ‘இந்த விளையாட்டிற்கும், சிரிப்பிற்கும் தண்டனை ராணுவ முகாமின் அந்த குளிர் மூலம் கிடைக்கும். இந்த விளையாட்டுக்களையெல்லாம் நினைத்துக் கொண்டு வேதனைப்பட்டவாறு இரவுகளைக் கழிக்க வேண்டும்.’

‘ஓ.... அங்கு சென்று விட்டால், கிச்சுக்கிச்சு மூட்டியதையெல்லாம் நினைச்சுப் பார்ப்பீங்க. நான் கேட்க விரும்பல. காஷ்மீர் இளம் பெண்களே இல்லாத ஊராச்சே!’

‘இருந்தாலும்... ஊரிலிருக்கும் பெண்ணின் வாசனையை மறக்க முடியுமா?’

‘ஓ... போதும்.. போதும்... அதெல்லாம் இருக்கட்டும். மேனன், உங்களுடைய திருமண காரியம் எதுவும் நடக்கலையே?’

‘தேவகி டீச்சர், அந்த காரியங்களை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேனே!’

‘அதற்கு தடையெதுவும் இல்லை. மேனன், உங்களுக்கு ஒரு இளம் பெண் கிடைப்பது என்பது சிரமமான விஷயமா என்ன? அந்த ராதாவைத்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேனே!’

‘ஓ... அதை வேண்டாம் என்று நினைத்தேன். அந்த பெண்ணுக்கு ஒரு காதலன் இருக்கிறானாம். ஆலுவாவில் உத்தியோக மண்டலத்திலோ வேறு எங்கோ....’

‘ச்சீ... ச்சீ...’ – மூலையில் படுத்திருந்த நூற்றைம்பது ரூபாய் வயதான மனிதனின் குரல். அவன் திடீரென்று தட்டுத் தடுமாறி எழுந்து ஓலமிடும் குரலில் சத்தம் போட்டு கூறினான்: ‘ஏய் அம்மா... குழந்தை மூத்திரம் பெய்து நாசமாக்கிடுச்சு.’

பிள்ளை பெற்ற பெண்ணின் குரல்:

‘குழந்தைகள் மூத்திரம் பெய்றது என்பது சாதாரண விஷயம்தான். அதற்கு இப்படி கூக்குரல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யணுமா?’

அந்த ராணுவக்காரனின் கருத்து அது. அந்த வகையில் தேவையற்ற ஒரு கருத்தை வெளியிட்டு, அவனும் அந்த இனிய குரலும் அழுத்தமாக சிரித்தார்கள்.

‘சே....ல் நல்ல இளம் பெண்கள் தேவையான அளவிற்கு இருப்பார்களே?’ – மென்மையான குரல் திருமண விஷயத்தைத் தொடர்ந்தது.

‘ம்... சே....ல் இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும்.’

நான் நினைத்தேன்: ‘சே...’ கிராமம்தான் வரலாற்று இடம். திருச்சூருக்கு அருகிலிருக்கும் அந்த கிராமம் என்னைக் கவர்ந்த ஒரு மூலை. மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ஒரு நண்பனின் வீட்டைத் தேடி அந்த கிராமத்தைச் சுற்றி நடந்து திரிந்த கதையை நான் நினைத்துப் பார்த்தேன். கேரளத்திற்கென்று இருக்கக் கூடிய பெண்களுக்கான அழகின் ஆச்சரியப்படத்தக்க முன்மாதிரியை நான் பார்த்தது கூட அந்த கிராமத்தின் ஒரு ஒற்றையடிப் பாதையில்தான். அவள் குளத்திலிருந்து குளித்து முடித்து கறுத்த சீனப்பட்டைப் போன்ற கூந்தலைத் துவட்டியவாறு திரும்பி வந்து கொண்டிருந்தாள். எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் அவளுக்கு அருகில் வந்ததும், ஆபாசமான ஒரு கிராமிய பாணி காதல் பாடலை உரத்த குரலில் பாடினான். அவளோ முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடுகளையும் வெளிப்படுத்தாமல் தலையைக் குனிந்து கொண்டு நடந்து சென்றாள். நான் கேட்டதிலேயே மிகவும் ஆபாசமான ஒரு பாட்டாக அது இருந்தது. அந்த இளைஞனின் ஆபாசப் பாட்டையும் நடவடிக்கையையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு போக்கிரித்தனமா? அந்த அப்பிராணி இளம் பெண்ணின் சார்பாக எதிர்த்து கேள்வி கேட்பதற்காக நான் திரும்பி நின்றேன். அந்த இளைஞனும் திரும்பி நின்று ஒரு திருட்டுச் சிரிப்பு சிரித்தான்.

‘ஊமை, சார்... ஊமை. ஆசாரிப் பெண்...’ – அந்த இளைஞன் உற்சாகத்துடன் கூறினான்.

அதைக் கேட்கும் நானும் சிரிப்பேன் என்று அந்த குறும்புக்கார இளைஞன் மனதில் நினைத்திருக்க வேண்டும். நான் திகைத்துப் போய் நின்று விட்டேன்.

வேலாயுதன் என்ற பெயரைக் கொண்டிருந்த அந்த இளைஞன்தான் எனக்கு என்னுடைய நண்பனின் வீட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டினான். நாங்கள் பல ஒற்றையடிப் பாதைகளின் வழியாகவும் நடந்து சென்றோம். வேலாயுதன் அந்த பகுதி சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் என்னிடம் கூறினான். அந்த தகவல்களில் அந்த ஊரிலிருக்கும் பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் மரியா டீச்சருக்கு வகுப்பறையில் காக்காய் வலிப்பு நோய் ஊண்டாகி, அதை சரி பண்ணச் சென்ற தலைமை ஆசிரியர் மேனனின் மூக்கைக் கடித்து பிய்த்த ஒரு செய்தியும் இருந்தது.

கிறிஸ்தவர்களின் ஏதோ ஒரு நேர்த்திக் கடன் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீடுகள் மற்றும் குடிசைகளின் வாசல்களில் வாழை மரங்களை நட்டு, அதன் மீது வண்ணத் தாள்களால் ஆன கொடிகளை ஏராளமாக தொங்க விட்டிருந்தனர். நாங்கள் அந்த வகையில் பல ஒற்றையடிப் பாதைகளையும், நிலப் பகுதிகளையும் சுற்றி இறுதியில் வயலின் கரையிலிருந்த புற்களால் வேயப்பட்ட ஒரு பழைய வீட்டிற்கு முன்னால் போய் நின்றோம். நண்பனின் வீடு. ஆனால், நண்பன் அங்கு இல்லை.


எனினும், ‘சே...’ கிராமத்தின் வழியாக நடைபெற்ற அந்த மாலை நேர பயணம் வீண் என்று தோன்றவில்லை. கேரளத்தின் சுத்தமான இயற்கை அழகு ஆட்சி செய்யும் ஒரு கிராம மூலையாக அது இருந்தது. சிவந்த மண்ணால் ஆன சுவர்களின் மூலைகளில் பச்சை நிற புத்தம் புதிய திரியைப் பற்ற வைத்து பிடித்ததைப் போல எழுந்து நிற்கும் செடிகளும், கொம்புகளால் ஆன வேலியில் மறைந்து நின்றிருக்கும் மருதாணிச் செடிகளும், பச்சை நிற குடை பிடித்து நின்றிருக்கும் பரங்கி மாமரங்கள் அழகூட்டும் சிறிய நிலப் பகுதிகள் மாலை நேர வெயிலில் பிரகாசித்து நிற்கும் காட்சிகளும் தேவகி டீச்சர் அந்த கிராமத்தின் பெயரை உச்சரித்த நிமிடத்தில் என் மனதில் தோன்றின.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைத்தான் ராணுவத்திலிருக்கும் மேனன் திருமணம் செய்து கொள்ள போகிறான். நல்லதுதான். என் வாழ்த்துக்கள்!

‘அந்த நளினி இருக்கிறாளே, நளினி... அந்த இளம் பெண் பள்ளிக்கூட இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்’ – மென்மையான குரல்.

‘நளினி வேண்டாம்’ – ராணுவக்காரன் ஒரு சிகரெட்டை வாயில் வைத்து, நெருப்புக் குச்சியை உரசி பற்ற வைத்தான். அதன் வெளிச்சத்தில் அவனுடைய முகத்தின் பகுதியைப் பார்க்க முடிந்தது. ஒரு நீண்ட முரட்டுத்தனமான மூக்கும் முறுக்கு மீசையும். அவன் வாயின் வழியாக புகையை விட்டபோது, ஒரு போர் விமானம் நெருப்பு பிடித்து தலை கீழாக விழுவதைப் போல தோன்றியது.

‘ஏன் நளினியை வேண்டாம் என்று சொன்னீர்கள்?’ – மென்மையான குரலின் விசாரிப்பு.

ராணுவத்தில் பணி புரிபவன் பதிலெதுவும் கூறவில்லை – அவனுக்கு கூறக் கூடிய அளவிற்கு காரணம் ஏதாவது இருக்க வேண்டும்.

சிறிது நேரம் சென்றதும் அந்த பட்டாளத்தில் பணியாற்றும் மனிதன் நளினியை வேண்டாம் என்று கூறியதற்கான காரணத்தை மனம் திறந்து கூறினான்: ‘அந்த நளினியின் தந்தை இருக்கிறாரே... அந்த பென்ஷன் வாங்கும் தலைமை ஆசிரியர்... அவர் என்னை ஒருமுறை காவல் துறையிடம் பிடித்துக் கொடுப்பதற்கு ஒரு முயற்சி செய்து பார்த்தார். நளினியின் அண்ணி கமலம்தான் வழக்கிற்குக் காரணம் – கமலம் இப்போது எங்கு இருக்கிறாள்?’

‘கமலம் நாகப்பூரிலோ வேறு எங்கோ இருக்கிறாள்’ – மென்மையான குரலின் பதில்: ‘ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள்.’

ராணுவக்காரன் ஏதோ பழைய நினைவுகளுடன் சீட்டி அடித்தான்.

‘அந்த அம்மிணி இருக்கிறாளே! அவள் ஒரு அருமையான பெண்ணாச்சே?’ – மென்மையான குரல் இன்னொரு பெண்ணைப் பற்றி கூறினாள்.

‘ஓ... அவளை எனக்கு நன்றாக தெரியும். ஆண்களைப் பார்த்தால் அவளுக்கொரு ‘நெவர் மைன்ட்’ குணம். எனக்கு வேண்டாம்.’

‘இருந்தாலும், பார்ப்பதற்கு அழகான ஒரு இளம் பெண் அவள்.’

அந்த பெண்ணுக்கு அம்மிணி மீது ஏதோ ஒரு தனிப்பட்ட பிரியம் உள்ளதைப் போல் தோன்றியது. ஆனால், ஆணுக்கு அந்த அடங்காத பெண் வேண்டாம். அனுபவம் காரணமாக அவன் அப்படி கூறியிருக்க வேண்டும்.

‘அந்த கமலாக்ஷி இருக்கிறாள். அவள் எப்படி?’ – மென்மையான குரல்.

‘அந்த குள்ளப் பெண்... அப்படித்தானே? வேண்டாம்.... வேண்டாம். இளம் பெண்களுக்கு கொஞ்சம் உயரமெல்லாம் இருக்கணும்.’

அதற்கு அந்த மென்மையான குரல் பதில் கூறவில்லை. தனக்கும் அந்த குறைபாடு இருப்பது காரணமாக இருக்க வேண்டும்.

‘அந்த ராஜலட்சுமி இருக்கிறாளே! அவள் எங்கு போனாள்? திருமணம் ஆகி விட்டதா?’ – ஆண் குரல் விசாரித்தது.

‘எந்த ராஜலட்சுமி? அந்த ஆசிரியரின் மகளா?’

‘ஆமாம். பொன் நிறத்தைக் கொண்ட, மெலிந்து போய் காணப்பட்ட அந்த இளம் பெண்... – அவள்தான் உண்மையிலேயே ப்யூட்டி...’

‘ஓ... உங்களுடைய அந்த ப்யூட்டி இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியுமா?’

‘என்ன? யாருடனாவது சேர்ந்து ஓடிப் போய் விட்டாளா?’

‘அவள் இப்போது மதனப்பள்ளி சயரோக மருத்துவமனையில் கிடக்கிறாள்.’

‘அய்யோ... பாவம் ராஜலட்சுமி.’

மதனப்பள்ளியிலிருக்கும் சயரோக மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் ராஜலட்சுமியைப் பற்றி கேள்விப்பட்டதும், எனக்கு மாலதியைப் பற்றிய ஞாபகம் வந்தது. மாலதி என்னுடைய ஊரில் ஒரு முழுமையான அழகியாக இருந்தாள். அழகி என்று மட்டுமல்ல – படிப்பு விஷயத்திலும் அவள் மிகவும் திறமைசாலியாக இருந்தாள். கொஞ்சம் கவிதை எழுதும் திறமையும் இருந்தது. அவள் பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றாள். அதற்குப் பிறகு சென்றது கல்லூரிக்கு அல்ல – மதனப்பள்ளியிலிருக்கும் அபய மய்யத்திற்குத்தான். அங்கு அவள் ஆறு மாதங்கள் இருந்தாள். பிறகு சொந்த ஊருக்கு வந்து, நீண்ட நாட்கள் ஆவதற்கு முன்பே, மரணத்தைத் தழுவவும் செய்தாள். மாலதியின் இறந்த உடல் துணியில் கட்டப்பட்டு சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த காட்சி என் மனதில் ஊர்வலம் வந்தது.

தவளைகளின் சத்தம் கேட்கிறது. ஒரு புதிய குறட்டைச் சத்தம். திருவிதாங்கூர் ஆட்களில் ஒரு ஆள் பெட்டிக்குள் குறட்டை ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்ந்திருக்கிறான்.

அந்த பட்டாளக்காரனும் பள்ளிக்கூட ஆசிரியையும் ‘சே...’ கிராமத்தில் திருமண வயதை அடைந்த செல்விகளின் ஜாதக ஆராய்ச்சியை முறைப்படி தொடர்ந்து கொண்டிருந்தார்கள். சந்திரிகா, சாரதா, ஆனந்தவல்லி, லீலா, குஞ்ஞிலட்சுமி – இப்படி பல பெயர்களைக் கொண்ட இளம் பெண்களும் விவாதத்திற்கு விஷயமாக ஆனார்கள். பட்டாளக்காரன் ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு குற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அம்புஜாக்ஷியின் தலைமுடி இமயமலைக் காட்டிலிருந்து இறக்குமதி செய்ததாம். சாரதா ஒரு காதல் கடித வழக்கு சம்பந்தப்பட்டவளாம். அது போதாதென்று – அவளுடைய தாய்க்கு சிரங்கு நோய் பிடித்திருக்கிறதாம். சந்திரிகாவின் கண்ணும் மூக்கும் உதடும் பரவாயில்லையாம். ஆனால், அவளுடைய சரீரம் ‘அன்ஃபிட்’டாம். அதற்கு நேர் எதிர் ஆனந்தவல்லி விஷயம். சுருண்டு நீளமாக வளர்ந்திருக்கும் தலைமுடியையும் சிறிய இடையையும் கடைந்தெடுத்ததைப் போன்ற பின் பகுதியையும் கொண்டிருந்த அந்த இனிய பதினேழு வயது இளம் பெண்ணை பின்னாலிருந்து பார்த்தால் யாரும் சற்று பார்த்துக்கொண்டு நின்று விடுவார்கள். அந்த முகத்தைப் பார்த்தால், அப்படி பார்த்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றும். பூனையின் முகத்தை அவள் கொண்டிருந்தாள். குஞ்ஞிலட்சுமியின் குடும்பம் புகழ் பெற்றது. அவளுடைய சகோதரர்கள் உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். எல்லாம் சரிதான். அந்த பெண்ணின் தடிமனான சரீரத்தையும் நடையையும் ஒரு முறை பார்த்து விட்டவர்கள் அதற்குப் பிறகு அந்த வழியே போகவே மாட்டார்கள். சைக்கிளில் ஏறி, நசுங்கிப் போன தவளையைப் போல அவளுடைய நடை இருக்கும்.


சந்திரிகா, சாரதா, குஞ்ஞிலட்சுமி, அம்புஜாக்ஷி, ஆனந்தவல்லி – இவர்களையெல்லாம் முன்னால் பார்ப்பதைப் போல, எனக்கு தோன்றியது. அப்பிராணி இளம் பெண்கள். ‘சே...’ கிராமத்தில் கனவு கண்டு கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும், அந்த செல்விகளுக்குத் தெரியுமா... ஷொர்னூர் ஸ்டேஷனிலிருக்கும் ஒரு புகை வண்டியின் பெட்டிக்குள் வைத்து தாங்கள் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படும் கதை!

பிள்ளை பெற்ற தாயின் குழந்தை உரத்த குரலில் அழுதது. இடைவிடாமல்... இந்த முறை அந்த குழந்தை தன் அழுகையை நிறுத்துவதைப் போல தெரியவில்லை.

‘ஏய்... குழந்தையின் அழுகையைச் சற்று நிறுத்து. குழந்தையின் தாய் உறங்கிட்டாளா?’ – பட்டாளக்காரன் ஆண்மைத் தனம் நிறைந்த குரலில் சத்தம் போட்டு கேட்டான். சிறிது நேரம் அவர்களுடைய உரையாடல் நின்று விட்டது.

‘நான் வீட்டில் ட்யூஷன் சொல்லித் தரும் விஷயம்... மேனன், உங்களின் அத்தைக்கு அந்த அளவுக்கு விருப்பமில்லை’ – மென்மையான குரல்.

‘அப்படியா? ஏன் அத்தைக்கு விருப்பமில்லை?’

‘மாமா மீது சந்தேகமாக இருக்கும்.’

ராணுவத்தில் பணியாற்றும் மனிதன் உரத்த குரலில் சிரித்தான். அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘எனினும், சந்திரனுக்கும் உஷாவிற்கும் என்னை மிகவும் பிடிக்கும். அந்த குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு காரணமாகத்தான் நான் உங்களுடைய வீட்டிற்கு ட்யூஷன் எடுப்பதற்கே செல்கிறேன்... என் ராஜன், ரமா ஆகியோரின் வயதைக் கொண்ட பிள்ளைகள்!’

‘டீச்சர், உங்களுடைய பிள்ளைகளின் அப்பா இறந்த போது, இன்சூரன்ஸ் பணம் இரண்டாயிரம் ரூபாய் கிடைத்தது அல்லவா? அதை என்ன செய்தீர்கள்?’

‘அவருடைய சம்பாத்தியம் அது மட்டும்தான். அது எதையும் தொடாமல் வங்கியில் போட்டிருக்கிறேன்.’

பட்டாளத்துக்காரன் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை.

நான் பயப்பட்டேன். அந்த அப்பிராணி விதவைப் பெண்ணின் வங்கி சேமிப்பைத் தட்டிக் கொண்டு போவதற்கு அந்த ராணுவத்தில் பணி புரியும் மனிதன் திட்டமிட்டிருப்பானோ? நடக்கக் கூடாது என்றில்லை. அந்த ஆசிரியைக்கு அந்த இளைஞனிடம் அந்த அளவிற்கு காதல் இருந்தது.

திடீரென்று பெட்டியில் விளக்குகள் எரிந்தன. எஞ்ஜின் மாட்டப்பட்டு, வண்டி புறப்படுவதற்கு தயாராகிறது.

சிறிதும் எதிர்பாராமல் விளக்குகள் எரிந்ததும், பட்டாளத்துக்காரன் சற்று தடுமாறி விட்டான். அவன் அந்தப் பெண்ணின் மடியில் தலையை வைத்து அதுவரை படுத்திருந்திருக்கிறான்.

நான் அந்த மனிதனை தலையிலிருந்து கால் வரை சிறிது பார்த்தேன். வெளுத்து தடிமனான உருவத்தைக் கொண்டிருந்த ஒரு கடோத்கஜன். அவனுக்கு வாழ்க்கையிலேயே மிகவும் பொருத்தமான பணி பட்டாள வேலைதான் என்று தோன்றுகிறது. நன்கு உணவு சாப்பிடலாம். அறிவுக்கு வேலையே இல்லை. காதலையோ, ரொமான்ஸையோ கண்டு பிடித்து செயல்படுத்துவதற்கான பொறுமையும் நேரமும் இல்லை. உடலுறவு தேவைகளை, தட்டினால் திறக்கப்படும் இடத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் வெளிப்படையாக கூற வேண்டும். யாருடனும் வெறுப்பு இல்லை. ஆனால், பார்த்தால் மனிதர்களுடன் ஒன்றாகக் கலந்து பழகக் கூடியவன் என்பதைப் போல தோன்றவில்லை. கேட்காமலே காரியத்தைச் செய்வான். அங்கு விட்டெறிந்தால், சில நேரங்களில் வேறு ஆளை தேடிக் கொள்ள வேண்டும் என்று கூறுவான். அப்படி சில தனி குணம் கொண்ட மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா? நம்முடைய பட்டாளத்துக்காரன் மேனன் அந்த வகையைச் சேர்ந்த ஒரு வினோதமான மனிதன் என்ற விஷயம் ஒரே பார்வையிலேயே எனக்கு புரிந்தது.

அந்த பெண் ஒரு நடுத்தர வயதைக் கொண்டவள். ஒரு முப்பத்தைந்து வயது இருக்கும். முகத்திலிருந்து அழகு அப்படியொன்றும் அதிகமாக மறைந்து போயிருக்கவில்லை. இழக்கப்பட்டதை கவர்ச்சியான நடவடிக்கைகளால் சரி பண்ணுவதற்கான திறமையைக் கொண்ட ஒரு புத்திசாலி அந்த ஆசிரியை.... ராஜன், ரமா ஆகியோரின் தாய்.

அவர்களுடைய உரையாடல்களில் குறிப்பிடப்பட்ட விஷயங்களிலிருந்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய ஒரு சிறிய வரைபடத்தை நான் வரைய ஆரம்பித்தேன்.

தேவகி டீச்சர் அன்று ‘சே...’ கிராமத்திலிருந்த பள்ளிக் கூடத்தில் புதிதாக வந்து சேர்ந்த பத்தொன்பது வயது கொண்ட ஒரு ஆசிரியை. அவன் – நாம் அந்த மனிதனை சேகரன் என்று அழைக்கலாம் – ஆமாம்.... சேகரன் அன்று எட்டாவது வகுப்பில் இரண்டு வருடங்கள் தோல்வியைத் தழுவி, மூன்றாவது முறையாகவும் அங்கேயே படித்துக் கொண்டிருந்தான். தேவகி டீச்சர் அவனை திட்டவும் தண்டிக்கவும் செய்திருக்கலாம்.

அதற்குப் பிறகும் சேகரன் தோற்று, இனிமேலும் தோல்வியைத் தழுவினால், தன்னுடைய ஆசிரியர்களுக்கு அவமானமாக இருக்கும் என்றெண்ணி தன் பள்ளிக்கூட படிப்பையே நிறுத்திக் கொண்டான்.

சேகர மேனனின் அதற்குப் பிறகு உள்ள செயல்களைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. வீட்டில் சாப்பிடுவதற்கான வசதிகள் இருக்கின்றன. அந்த வகையில் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டு நடப்பான். தேநீர், சிகரெட், திரைப்படம் ஆகியவற்றிற்கும், நண்பர்களுக்கு தேவைப்படும் சில்லறை செலவிற்கும் பணத்தை ஏதாவது வகையில், நிலத்திலிருந்து தேங்காய்களைத் திருடியோ வேறு ஏதாவது செய்தோ தயார் பண்ணுவான். இடையில் காவல் நிலையத்தின் வாசற்படி வரை கொண்டு போய் விட்ட சில காதல் வழக்குகளும்.

அந்த வகையில் ஒருநாள் அவன் கிராமத்தை விட்டு கிளம்பி, பட்டாளத்தில் போய் சேர்ந்தான். பொருத்தமான ஒரு வாழ்க்கையைப் பெற்றதும், அவன் அங்கேயே தங்கி விட்டான். இப்போது காஷ்மீரிலிருந்து விடுமுறையில் வந்திருக்கிறான்.

வீட்டிற்கு வந்ததும் அவன் முதலில் பார்த்தது தன் மாமாவின் குழந்தைகளுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த பழைய தேவகி டீச்சரைத்தான். அதற்குப் பிறகு நடந்தது உறுதியாக தெரியவில்லை. இப்போது அவர்கள் இருவரும் எங்கோ ரகசியமாக சுற்றி விட்டு, யாருக்கும் தெரியாது என்பதைப் போல திரும்பி வருகிறார்கள்.

வண்டி பூங்குன்னம் ஸ்டேஷனை அடைந்தது.

‘நான் இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ – தேவகி டீச்சர் கூறினாள்.

மிஸ்கி பெருங்காயத்தின் விளம்பரம் தமிழில் எழுதப்பட்டிருந்த ஒரு சணல் பையையும், புடலங்காய் துண்டைப் போல இருந்த ஒரு சிறிய குடையையும் கையில் பிடித்தவாறு அந்த டீச்சர் அங்கு இறங்கி முகத்தை தாழ்த்தி வைத்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தாள். பட்டாளக்காரன் கதவிற்கு அருகில் நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றதும், அவள் முகத்தைத் திருப்பி அவனை நோக்கி ஒரு கவர்ச்சியான சிரிப்பை வெளிப்படுத்தியவாறு நேராக வெளியே செல்லும் வாசல் வழியாக கடந்து சென்றாள்.
பிள்ளை பெற்ற பெண்ணும் குழந்தையும் அங்கேயே இறங்கினார்கள்.

வண்டி நகர்ந்தது. நூறு அடிகள் செல்லவில்லை. திடீரென்று வண்டி ஒரு கிறுகிறுப்புடன் நின்றது. யாரோ சங்கிலியைப் பிடித்து நிறுத்தியிருக்கிறார்கள். நான் தலையை நீட்டி பார்த்தேன். அந்த பட்டாளக்காரனின் உரத்த சத்தம் கேட்டது: ‘என் தோல் பெட்டி... என் தோல் பெட்டி....’

அவனுடைய தோல் பெட்டி காணாமல் போய் விட்டதாம்.

‘பெட்டி திருடு போவது சாதாரணமாக நடக்கக் கூடியதுதான். அதற்காக இந்த அளவிற்கு ஆரவாரம் செய்ய வேண்டுமா?’ – மூலையிலிருந்து ஒரு கருத்து. நான் அந்த கருத்தைக் கூறிய ஆளை சிறிது பார்த்தேன். நூற்று ஐம்பது ரூபாய்காரன்தான். கறுத்து, குள்ளமாக, கழுத்தில் வீக்கத்தைக் கொண்டிருந்த ஒரு வயதான மனிதன் ஒரு பிசாசுச் சிரிப்பு வேறு.
‘உங்களுடைய பெட்டியின் அடையாளம் என்ன?’ – அவன் பட்டாளக்காரனிடம் கேட்டான்.

‘ஒரு சிவப்பு நிற புதிய தோல் பெட்டி.’

‘ஓ... அப்படிப்பட்ட ஒரு பெட்டியை முள்ளூர் கரையில் வைத்து ஒரு இளைஞன் இந்த பெட்டியிலிருந்து எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்தேன். அது உங்களுடைய பெட்டியா?’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.