Logo

கிராமப்புற விலைமாது

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4105

கிராமப்புற விலைமாது
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா

பாதையின் அருகிலிருந்த ஒரு மண்ணால் ஆன குடிசை. சிறிதாக இருந்தாலும், ஒரு சுத்தமும் பளபளப்பும் அதில் இருந்தன.

அதன் வாசலில் மாலை வேளையில் நல்ல ஆடைகள் அணிந்த ஒரு இளம் பெண்ணைப் பார்க்கலாம். அவள் ஒரு முல்லை மாலையைச் சூடியிருப்பாள். ஒரு குங்குமப் பொட்டை அவள் அணிந்திருப்பாள்.

கமலம்மா அழகிதான். நல்ல அழகான கண்களைக் கொண்ட சரீரம். கள்ளங்கபடமற்ற தன்மை, ஏராளமான தலைமுடி – இவையெல்லாம் அவளுடைய சொத்துக்கள்.

அவளுக்கு ஐந்து வயதைக் கொண்ட ஒரு தம்பி இருக்கிறான். எட்டு வயது உள்ள ஒரு தங்கை இருக்கிறாள். நடுத்தர வயதைக் கொண்ட ஒரு தாய் இருக்கிறாள்.

வீட்டிற்குள் அவளுடைய தாயும் ஒரு இளைஞனும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவன் மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய நோக்கத்தை அனுபவங்கள் பலவற்றைப் பார்த்த அந்த வயதான பெண் புரிந்து கொண்டாள். அவனுக்குள் ஒரு ஏக்கம் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது. ஊரிலுள்ள இளம் பெண்களைப் பற்றியதாக இருந்தது அந்த உரையாடல்.

‘அது நடக்கக் கூடியதுதான்’ – அந்த வயதான பெண் சொன்னாள்: ‘அது உலகத்தில் நடந்து கொண்டிருப்பதுதான். ஆண்கள் பெண்களை தேடிச் செல்வார்கள்.’

‘அப்படியென்றால், நான் அவளைத் தேடிச் சென்றது தவறா?’ – இளைஞன் கேட்டான்.

‘நிச்சயமாக இல்லை. பிறகு... ஒரே ஒரு விஷயம் இருக்கு. யாருக்கும் தெரியக் கூடாது.’
‘அதை நான் சத்தியம் செய்து கூறினேன்.’

‘டேய்.... ஆமாம்.... பெண்களுடன் பழகணும். இந்த காகத்திற்கு போட்டால், கொத்தாத பிணத்தைத் தேடி உன்னைத் தவிர, யாராவது போவாங்களா? இங்கே பாரு.... என் மகள் இருக்கிறாள். கமலம்மா... நான் என் மகள் என்பதற்காக சொல்லவில்லை. அவளை ஒரு ஆண் கூட தொட்டதில்லை. எனினும், ஒரு ஒழுக்கம் வேணும்டா...’

‘அது உண்மைதான்.’

இவ்வாறு அந்த உரையாடல் கொஞ்சம் பணம் கை மாறலில் போய் முடிந்தது. இளைஞன் ஒரு பொட்டலத்தை அவளுடைய கையில் கொடுத்தான். அவள் அதை வாங்கி எண்ணிப் பார்த்தாள்.

‘இது எதுக்குடா?’ – அந்த வயதான பெண்ணின் நெற்றி சுருங்கியது.

‘இப்போது இவ்வளவுதான் இருக்கு’ – இளைஞன் ஏக்கத்துடன் சொன்னான்: ‘நான்...’

அந்த பெண் அந்த சக்கரத்தை (பழைய திருவிதாங்கூர் நாணயம்) அவனுடைய முகத்தின் மீது வீசினாள்.

‘உனக்கு வெட்கமாக இல்லையாடா? பதினான்கு சக்கரம்! அவளுக்கு பதினேழு வயதுதான் நடக்குது. நீ இதை வச்சுக்கிட்டு... முன்பு சொன்னேல்ல... அவளுக்கு கொடு. உன்னோட எச்சில் தரத்திற்கு அவள் பொருத்தமாக இருப்பாள்.’

‘என் தாய் சத்தியமா.... கடவுள் சத்தியமா. என் கையில் இப்போது இவ்வளவுதான் இருக்கு. அதனாலதான் நான்...’

ஏழரை கோழி கூவியபோது அந்த வயதான பெண் கண் விழித்தாள். பக்கத்து அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மகளை தட்டி எழுப்பினாள்.

‘அடியே! பொழுது விடிஞ்சிருச்சு...’

ஒரு மெல்லிய உரையாடல் அந்த அறைக்குள் கேட்டது. சிறிது நேரம் கழித்து, அந்த வயதான பெண் மீண்டும் பொழுது விடிந்த தகவலை தன் மகளிடம் ஞாபகப்படுத்தினாள். கதவு ‘கிர்ர்’ என்று திறக்கப்படும் சத்தம் கேட்டது.

கமலம்மாவிற்கு விசேஷமான ஆடைகள் இருந்தன. நகைகள் இருந்தன. அவள் எந்தச் சமயத்திலும் எந்தவொரு ஆணுடனும் பேசி, யாரும் பார்த்ததில்லை. எந்த ஆண் அந்த வழியே கடந்து சென்றாலும், அவள் அலட்சியமாக சற்று பார்த்திருக்கலாம். ஆனால், அந்த கண்களுக்கு அசாதாரணமான ஒரு சக்தி இருந்தது. அந்த வகையில் அழிவதற்கு தயாராகாமல், விலை தராமல் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருந்தாள்.

ராமன் குஞ்ஞு ஒரு பெரிய பொட்டலத்தை தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தவாறு, அதிலிருந்து மிட்டாய்களை எடுத்து... எடுத்து தின்று கொண்டிருந்தான். அவன் உற்சாகத்துடன் குதித்து விளையாடிக் கொண்டிருந்தான். அந்த மிட்டாய்களை கொடுத்தவன் பத்மநாபன் அண்ணன். ஆறேழு மணி ஆகி இருட்டியபோது, அந்த அண்ணன் மீண்டும் வீட்டிற்கு வந்தான். அப்போது ஒரு நல்ல அரைக் கால் ட்ரவுசரை கொண்டு வந்திருந்தான். அவன், ராமன் குஞ்ஞுவை தன் மடியில் அமர வைத்து விளையாட வைத்தான்.

நள்ளிரவு வேளை நெருங்கியபோது, ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. ராமன் குஞ்ஞு அதிர்ச்சியடைந்து கண் விழித்தான். அவன் தன் தாயை அழைத்தான். தாய் கதவைத் திறந்து வெளியே வந்தாள். சில முனகல் சத்தங்களும் கேட்டன. பாயிலிருந்து தலையை உயர்த்தி அவன் வெளியே பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் வாசலில் யாரோ படுத்து உருளுவதை அவன் பார்த்தான்.

மறுநாள் அதிகாலை வேளையில், அருகிலிருந்த நிலத்தில் நின்று கொண்டிருந்த மாமரத்தின் கிளையில், அந்த நல்ல மனிதனான பத்மநாபன் அண்ணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

‘நேற்று பத்மநாபன் அண்ணன் எனக்கு அரைக்கால் சட்டையும் மிட்டாயும் தந்தார்’ என்று அந்தச் சிறுவன் கூறியபோது, அவனுடைய தாய் அவனின் வாயை இறுக மூடினாள். அதற்குப் பிறகு அவன் அதை கூறவில்லை. ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு அவன் கற்றுக் கொண்டான்.

வனஜா – அதுதான் அவளுடைய தங்கையின் பெயர். வனஜாவின் கையில் ஒரு சிறிய பொட்டலத்தை பங்கஜாக்ஷன் அண்ணன் கொடுத்தான்: ‘இதை வெந்நீரில் போட்டு அக்காவைக் குடிக்குமாறு சொல்லணும்.’

தாய்க்கும் அக்காவுக்குமிடையே சமீபத்தில் ஒரு சண்டை நடந்தது. தாய் மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டினாள். கமலா கேட்டாள்: ‘என்னை என்ன செய்யச் சொல்றே, அம்மா?’

‘அதற்காக இப்படியெல்லாம் செய்யணும்னு நான் சொன்னேனா?’

‘இப்படி வரும் என்று உனக்கு தெரியாதா, அம்மா? அம்மா, நீ மூணு பிள்ளைகளைப் பெற்றவள்தானே?’

‘அடியே! ஆமாம்... அப்படி அறிவு கெட்டு பேசினால், போதாது. எனக்கு வயசு குறைவு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளணும். கவனமாக இருக்கணும் என்பதை நான் சொல்லாமலிருந்தேனா?’

நள்ளிரவு நேரத்தில் ஒரு பலவீனமான முனகல் சத்தம் கேட்டது. வனஜா கண் விழித்தபோது, அவளுக்கு அருகில் அவளின் தாய் இல்லை. பக்கத்து அறைக்குள்ளிருந்த சிறிய சாளரத்தின் வழியாக ஒரு பிரகாசம் வந்து கொண்டிருந்தது. வனஜா எழுந்து பார்த்தாள். அவளுடைய தாய் அக்காவின் கையை பலமாக பிடித்திருக்கிறாள். தாடி வளர்த்த ஒரு அரக்கன் அக்காவின் கால்களை மிதித்து பிடித்தவாறு, குனிந்து நின்று கொண்டிருக்கிறான். அக்கா இரத்தம் சிந்த மல்லாக்க படுத்திருக்கிறாள்.


கமலம்மா நோயாளியாக சில நாட்கள் கிடந்தாள். அந்தக் காலத்தை ராமன் குஞ்ஞு நினைத்துப் பார்க்கிறான். போலீஸ்காரர்கள் அங்கு வந்தார்கள். ஒரு பெரிய மீசை வைத்திருந்த மனிதன் அக்காவை அடிப்பதற்காக காலை மடக்கினான். அவர்கள் என்னவோ எழுதிக் கொண்டு போனார்கள். அவனுக்கு எதுவுமே புரியவில்லை.

கமலம்மாவின் நோய் குணமானது. ஆனால், என்ன ஒரு வித்தியாசம்! அவளுடைய தலை முடி முழுவதும் உதிர்ந்து விட்டது. சரீரம் வெளிறி, மெலிந்து, எலும்புகள் வெளியே தெரிந்தன.

அவளுடைய தாய் நல்ல தாயத்து தயார் செய்து, அவளுடைய உடல் நிலையை ஒரு வகையில் திரும்ப கொண்டு வந்தாள். ஆனால், இளமை கையை விட்டு போய் விட்டது. அந்த வீட்டின் அழகில் ஒன்று குறைந்து விட்டது. ராமன் குஞ்ஞுவிற்கு கஞ்சிக்கோ சோற்றுக்கோ பிரச்னை இல்லை. ஆனால், பலகாரங்கள் இல்லை. புதிய சட்டையோ, ட்ரவுசரோ எதுவும் கிடைக்கவில்லை. யாரும் அவற்றைக் கொண்டு வந்து கொடுக்கவுமில்லை. அவன் தன் அக்காவைப் போட்டு நச்சரித்தான்.

குத்து விளக்கிற்கு முன்னால் அமர்ந்து அந்தச் சிறுவன் பாடம் படிக்கிறான். அவனுக்கு அருகிலேயே கமலம்மாவும் அமர்ந்திருக்கிறாள். வெளியே நாய் குரைத்தது. ஒரு ஆள் வாசலில் வந்து நிற்கிறான். அவன் திண்ணையில் ஏறினான்.

‘ஒரு பீடி பற்ற வைக்கணும்.’

கமலம்மா எழுந்து கதவிற்குப் பின்னால் போய் நின்றாள். வாசற் படியில் வைத்திருந்த விளக்கிலிருந்து அந்த ஆண் பீடியைப் பற்ற வைத்து விட்டு, வாசலுக்குச் சென்றான். சிறிது நேரம் கழித்து பீடி அணைந்து விட்டதென்று கூறியவாறு அவன் திண்ணையில் ஏறினான். மீண்டும் வாசலுக்குச் செல்ல ஆரம்பித்தபோது, அவன் ஒரு சைகை செய்தான். சிறிது நேரம் கழித்து அக்காவும் வாசலுக்குச் சென்றாள்.

ராமன் குஞ்ஞு எதையோ நினைப்பதைப் போல எந்தவித அசைவுமில்லாமல், எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்பது வயது நடக்கிறது. வாசலில் நடைபெற்ற ஒரு உரையாடல் அவனுடைய காதில் விழுந்தது.

‘அந்த சிறுவன்... அவன் கேட்பான்.’

‘ஓ! அது பரவாயில்லை’ – அதை கூறியது அவனுடைய சகோதரிதான். ராமன் குஞ்ஞு சற்று எட்டி பார்த்தான். அன்று இரவு அவன் தூங்கவேயில்லை. அவனுக்கு உறக்கம் வரவில்லை. தாழ்ந்த குரலில் இருக்கக் கூடிய உரையாடல்களுக்கு அவனுடைய காது காத்திருந்தது.

‘உங்களுடைய இளைய மகளை இங்கே வரச் சொல்லுங்க’ – யாரோ கூறினார்கள்.

‘அய்யோ! சின்ன பொண்ணு!’ – அம்மா கூறினாள்.

‘ஓ! இங்கே கூப்பிடுங்க.’

அவனுடைய அன்னை வனஜாவைத் தட்டி எழுப்பி, பக்கத்து அறைக்கு அழைத்துக் கொண்டு செல்வதை ராமன் குஞ்ஞு பார்த்தான்.

மறுநாள் அவளுடைய கையில் சக்கரமும் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) இருந்தது.

கமலம்மா ஒரு காலத்தில் விலை மதிப்புள்ள பொருளாக இருந்தாள். இன்று அந்த பொருளின் வயது தடையாக இருந்தது. ஆனால், அந்த வீடு வாழ்ந்து கொண்டிருந்தது. முன்பு கூறுவது கிடைத்தது என்றால், இன்று கொடுப்பதை வாங்கிக் கொள்கிறாள்.

அவள் வனஜாவை அழகு படுத்துவாள். அவளுடைய தலை முடியை வாரி கட்டி விடுவாள். நல்ல புடவையை அணிவிப்பாள். வனஜாவும் நல்ல அழகான ஒரு இளம்பெண்தான்.
அந்த வழியே ஒருவன் கடந்து சென்றான். அவன் அவளை கவனிக்கவேயில்லை. கமலம்மா வனஜாவிடம் என்னவோ கூறினாள். அவள் படியைக் கடந்து பாதையை அடைந்து ஓடினாள்.

சிறிது நேரம் கழித்து அவள் திரும்பி வந்து கொஞ்சம் நாணயங்களை தன் அக்காவின் கையில் கொடுத்தாள்.

‘இப்போ இவ்வளவுதான் இருக்குன்னு சொன்னார், அக்கா.’

‘நாளை உன்னுடைய பிறந்த நாள் என்று நீ சொல்லவில்லையா?’

‘சொன்னேன். பிறகு... சாயங்காலம் வர்றப்போ தர்றேன்னு சொன்னாரு.’

கமலம்மா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். அவளுடைய கண்கள் நீரால் நிறைந்தன. புடவையின் தலைப்பால் அதைத் துடைத்து விட்டு, அவள் உள்ளே சென்றாள்.

‘அம்மா! நான் வனஜாவைக் கூறி அனுப்பி வைத்து, நான்கு சக்கரங்கள் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) கிடைத்தன.’

அவள் அழுது விட்டாள். அவளே கூறி அனுப்பி வைக்க வேண்டிய நிலை உண்டாகி விட்டது. யாரும் அவளைத் தேடி வருவதில்லை. அந்த காலம் கடந்து சென்று விட்டது.

கமலம்மா நீண்ட நேரமாக கண்ணாடியை எடுத்து பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அவளுடைய செல்வம் போய் விட்டதாக அவளுக்கே தோன்றியது.

தாய் மகளிடம் கூறினாள்:

‘பெண் என்றால், ஒரு ஒழுக்கம் இருக்கணும்.’

‘நான் என்ன ஒழுக்கக் கேட்டைக் காட்டி விட்டேன்?’

‘உனக்கு, ஒரு துணி வாங்கித் தருவதற்கு ஒருத்தன் இருக்கானா?’

‘அம்மா, அப்படி ஒருத்தன் வாங்கி தருவதை நீ ஒத்துக் கொள்ள மாட்டே...’

அப்போது அவளுக்கு கவலை உண்டானது. இனியும் பரவாயில்லை என்று தோன்றக் கூடிய ஒருவன் வருவானா?

‘என் வாழ்க்கையை இப்படி வீணாக ஆக்கி விட்டு... கடவுளே!’

கமலம்மா தேம்பித் தேம்பி அழுதாள்.

நிறைய வாழ்ந்தவளாக இருந்தாலும், மனைவியாக ஆக வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் உண்டாகி விட்டிருந்தது.

‘உன் வாழ்க்கையை நான் எப்படிடீ பாழாக்கினேன்?’

‘ஒன்றுக்குப் பிறகு இன்னொன்றாக...’

‘இந்த அறிவு உனக்கு அன்று இல்லையா?’

‘நான் எதுவுமே தெரியாத சின்ன பொண்ணு! ஜரிகை போட்ட மேற் துண்டும்.. கடவுளே! துரோகி!’

அந்த இளமையின் ஆரம்பத்தில் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் தூண்டப்பட்டு ஒன்றிற்குப் பிறகு இன்னொன்று என்று வழுகி, அவள் வீழ்ச்சியடைந்து விட்டாள். இன்று அவளுக்கு புரிந்து விட்டது – தனக்கென்று எதுவுமே எஞ்சியிருக்கவில்லை என்ற உண்மை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருந்தால் போதும் என்று அவள் நினைத்தாள். பலருக்கும் சொந்தமானவளாக இருந்து, எந்தவொரு கண்ணுக்கும் அவளுடைய உருவம் பிடிக்கவில்லை. அவளுக்கோ அனைத்துமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தோன்றுகிறது. அவள் அழுதாள். இரவு முழுவதும் அழுதாள். ஒரு பிணம் அவளை நோக்கி பற்களை இளித்து காட்டியது. ஒரு குழந்தை தொண்டையே வெடிக்குமளவிற்கு அழுகிறது. கமலம்மா அதிர்ச்சியடைந்து விட்டாள். இனி அவள் என்ன செய்வாள்?

வனஜா அந்த வாசற் படியில் நின்றுகொண்டு பாதையில் போகின்றவர்களையெல்லாம் அழைப்பாள் - ‘நாராயணன் அண்ணா’ ‘கோபாலன் அண்ணா’ என்று. அவர்களில் சிலர் அதைக் கேட்டதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். அவள் உரத்த குரலில் கூறுவாள்: ‘அக்கா இங்கே வரச் சொன்னாள்.’


ஒரு கணவனை உண்டாக்குவதற்கு – மனைவி என்ற பதவியை அவள் கனவு காணுவாள். முன்பு கமலம்மா விட்டெறிந்து பேசச் கூடியவளாக இருந்தாள். எந்தவொரு காதலனையும் அவள் பொருட்படுத்தியதில்லை. அவளுடைய உதைகளை வாங்கியவர்கள் இருக்கிறார்கள். அவளால் எச்சில் துப்பப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பைப் பொறுத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அந்த வாழ்க்கை.... கேவலம் என்றுதான் சொல்ல வேண்டும் – காரியத்தில் மட்டுமே கண் வைத்திருக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. பேசி பணத்தை வாங்கி, அதற்கான விலையைக் கொடுத்தாள். அவ்வளவுதான். ஒருவனையும் அவள் உபசரித்ததில்லை. யாரிடமும் கொஞ்சியதில்லை. குழைந்ததில்லை. யாருக்கும் கீழ்ப்படிந்ததில்லை. அங்கு வந்தவர்கள் அனைவரும் அவளுடைய தாசர்களாக இருந்தார்கள்.

இன்று? அவள் அனுசரித்துப் போக கற்றுக் கொண்டாள். இன்று இரவு நேரத்தில் ஒரு காதலனுக்காக கதவைத் திறக்கும்போது, அவள் வேண்டிக் கொள்கிறாள்... ‘கடவுளே! இவன் என்றென்றும் எனக்கு இருக்க வேண்டும்’ என்று. அவள் ஒவ்வொரு இரவிலும் அன்றன்றைய காதலனுக்காக வாழ்கிறாள். அந்த மாதிரி நேரங்களிலெல்லாம் அவள் நினைப்பாள் - ‘நான் மனைவி’ என்று. மனைவி ஆகக் கூடிய பாடங்களை அவள் அந்த வகையில் கற்றுக் கொண்டாள்.

கமலம்மா கர்ப்பமாக ஆனாள். அதை உண்டாக்கியது ஒரு எக்ஸைஸ் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். அவன் அதை மறுத்தான்.

அவளுடைய தாய் மரணத்தைத் தழுவி விட்டாள். வனஜா யாருடனோ சேர்ந்து ஓடிப் போய் விட்டாள். ராமன் குஞ்ஞு எங்கோ போய் விட்டான்.

அந்த குழந்தையை அவள் வளர்த்துக் கொண்டு வந்தாள். அதை மடியில் படுக்க வைத்து, அதன் முகத்தைப் பார்த்தவாறு அவள் சிந்திப்பாள் – ‘இவனுடைய அப்பா யார்?’ என்று. அந்த கதை தெரியாத குழந்தை சிரிக்கும். தன் அன்னையின் மூக்கைப் பிடிப்பதற்காக கையை உயர்த்தும். அவன் பிறந்ததற்கு மூல காரணமாக இருந்த அந்த ஆணின் மீது அன்பு செலுத்தலாம் என்று அவள் மனதிற்குள் முடிவு செய்வாள்.

இளம் வயதில் சிலர் அவளிடம் கூறிய உணர்ச்சி வசப்பட்ட வாக்குறுதிகளையும் சபதங்களையும் அவள் நினைத்துப் பார்த்தாள். சந்தர்ப்பங்கள் அனைத்தும் பாழாகி விட்டன. இப்போது யாரும் எந்தவொரு வாக்குறுதியையும் தருவதில்லை. வாழ்வதற்காக இன்று அவள்தான் எதிர் பார்த்துக் கொண்டிருப்பவள்.

பக்கத்து வீடுகளில் இருந்த பெண்களிடம் அவள் ஒருநாள் கூறினாள்:

‘நாறாபிள்ளை அண்ணன் நேற்று வந்திருந்தார். அவர்தான் அங்கு தேவைப்படுவதைப் பற்றி விசாரிக்கிறார்.’

இப்படியே ஒரு வாரம் தாண்டிய பிறகு, அவள் கூறுவாள்:

‘கோபாலன் நாயர் அண்ணன்தான் விசாரிக்கிறார்.’

அந்த வகையில் அனைவரும் அவளைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தார்கள். அவளுடன் கொஞ்சம் பேசினால், அது வெளியே வந்து விடும்.

அதற்குப் பிறகும் கமலம்மா பிரசவித்தாள். அது ஒரு பெண் குழந்தை. வறுமை மிகவும் அதிகமானது. அவளுக்கு வயது முப்பத்தைந்தும் ஆனது. காலையில் ஒரு குழந்தையைக் தூக்கிக் கொண்டும், இன்னொன்றை நடக்க வைத்துக் கொண்டும் அவள் வீட்டை விட்டு வெளியேறுவாள். ஒரு தட்டை தலையில் வைத்துக் கொண்டு பாதையில் நடக்கும் போது, பழைய அன்பிற்குரியவர்களில் சிலரை அவள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம்.

‘அண்ணா!’ – அவள் வாயைத் திறந்து சிரிப்பாள். அவர்கள் யாரும் அவளைப் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

‘துரோகி! அழிஞ்சிடுவே!’ – அவள் கண்ணீருடன் சாபமிடுவாள்.

அந்த வகையில் அவள் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கும் பிச்சை எடுப்பதற்காகச் செல்வாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகுதான் திரும்பி வருவாள்.

கமலம்மா மீண்டும் கர்ப்பமானாள். பிரசவித்தாள்! ஒரு பெண் குழந்தை.

கிழிந்த துணித் துண்டைச் சுற்றி, தலை முடியை சடையாக கட்டி, கறுத்துப் போய் – அவளுடைய தோற்றம் இரக்கத்தை வரவழைக்கக் கூடியதாக இருந்தது.

நல்ல வசதிகள் இருந்த காலத்தில் அவள் அடித்து விரட்டிய ஒரு ஆண் அவளுக்கு நான்கு சக்கரங்களைக் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) கொடுத்தான். கமலம்மா அழுது கொண்டே வாங்கிக் கொண்டாள். அவனுடைய இரக்கம், வாழ்க்கையின் தோல்வியை அவளிடம் ஞாபகப்படுத்தியது.

‘என்னிடம் அன்பு இருந்ததா?’ – அவள் கேட்டாள்.

‘இருந்தது’ – இரக்கத்துடன் அவன் பதில் கூறினான்.

‘என்னை... அன்று மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பீர்களா?’

‘அதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது.’

அவள் நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு, எதுவுமே கூறாமல் நடந்தாள். இனிமேலும் அதற்கு ஆசைப்படக் கூடாது. எனினும், ஒரு விஷயத்தைக் கேட்பதற்காக அவள் முயன்றாள். அதற்காக திரும்பி நின்றாள். ஆனால், கேட்கவில்லை.

பாதையின் அருகிலிருந்த ஒரு மரத்திற்கு அடியில் மரணத்துடன் போராடிக் கொண்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்த ஒரு குழந்தையை மடியில் வைத்தவாறு அவள் அமர்ந்திருக்கிறாள்.

சூரியன் மறையும் நேரம் வரையில் அவளை அந்த நிலையில் பார்த்தார்கள். மற்ற இரண்டு குழந்தைகளும் அவளுக்கு அருகில் இருந்தார்கள். மறுநாள் காலையில் அந்த குழந்தையின் இறந்த உடல் மட்டும் மரத்திற்கு அடியில் கிடந்தது. காகம் அதன் கண்களை கொத்தி இழுத்து வெளியே போட்டது.

தூரத்திலிருந்த அந்தச் சிறிய நகரத்தில் ஒரு பச்சிளம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அலைந்து திரிவதை அந்த ஊரில் உள்ளவர்கள் சிலர் பார்த்தார்கள். ஒரு நான்கைந்து மாதத்திற்கும் அதிகமாக அதற்கு வயது இருக்காது.

வருடங்கள் சில கடந்தோடின. ஒரு வயதான பெண் அந்த கிராமப் புறத்தில் மதிப்புடன் இருக்கும் ஒரு மனிதனின் வீட்டிற்குச் சென்றாள். அவள் ஒரு பிச்சைக்காரி. அந்த பெரிய மனிதன் – அவன் ஒரு வயதான மனிதன் – அவளையே வெறித்துப் பார்த்தான்.

‘ம்.. என்ன?’ – அவன் கேட்டான்.

‘என்னை தெரியலையா?’

குரல் தடுமாற, அவன் கூறினான்: ‘இ... இல்லை...’

அவள் ஒரு அடக்க முடியாத சிரிப்புடன் கூறினாள்:

‘நான்... கமலம்மா.’

அந்த பெரிய மனிதன் சற்று அதிர்ச்சியடைந்ததைப் போல தோன்றியது. சிறிது நேரத்திற்கு யாரும் பேசவில்லை.

‘நான் என் வீட்டில் வசிப்பதற்காக வந்திருக்கிறேன்.’

‘சரி.... சரிதான்...’

‘எனக்கு செலவிற்கு தரணும்.’

‘நானா? எதற்கு?’

அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

‘எதற்கா? பத்து... நாற்பது வருடங்களுக்கு முன்பு.. அன்று இரவு வேளையில் பத்மநாபன் நாயரை... ஞாபகத்துல இல்லையா? அதை இப்போதும் ஆட்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.’

அந்த பெரிய மனிதன் பற்களைக் கடித்தவாறு உரத்த குரலில் கத்தினான்: ‘ஓ...! நாசம்!’

அவள் பிசாசுத்தனமாக சிரித்தாள்.

‘என்ன... என்னை காப்பாற்ற மாட்டீங்களா?’

‘நீ சாகக் கூடாதா?’

‘இல்லை... இல்லை... இப்படி நான் எல்லாரையும் பார்ப்பேன். எனக்கு அருகில் யாரும் பெரிய மனிதனாக இருக்க வேண்டாம்.’

பாதையின் அருகிலிருந்த ஒரு மண் குடிசை. அதற்கு அழகோ சுத்தமோ இல்லை. உரிய நேரத்தில் வேயாததால், அந்த கூரை சிதிலமடைந்திருந்தது. இரண்டு வயதானவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். ஒருத்தி – கமலம்மா. இன்னொருத்தி – வனஜா. எங்கெங்கோ சென்ற ஒரு வாழ்க்கைக்குப் பிறகு அவள் திரும்பி வந்தாள்.

அந்த வழியே யாரும் செல்வதில்லை. யார் சென்றாலும், அவள் ஏதாவது கேட்பாள். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் இப்போதும் அந்த ஊர்க்காரர்களில் ஒரு வீட்டுக்காரர்களாக அவர்களை கருதுகிறார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.