Logo

ந்யூ இயர்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4050

ந்யூ இயர்
(பஞ்சாபி கதை)
-அஜித் கவுர்
தமிழில்: சுரா

டைப் ரைட்டருடன் போராடிக் கொண்டிருந்த கபூரை அமைச்சரின் பணியாட்கள் குழுவில் நியமித்தவுடன், ஒரே இரவில் கபூர் 'கபூர் ஸாஹப்' ஆகி விட்டான்.

அமைச்சரின் பெர்சனல் அசிஸ்டெண்ட்! கபூர் ஸாஹப்!

ஒரே நாளில் தான் பெரிய ஆளாக ஆகி விட்டதைப் போல அவனுக்குத் தோன்றியது.

அலுவலகத்தின் வராண்டாவில் அவன் தலையை உயர்த்திக் கொண்டு நடந்தபோது, வராண்டாவிற்கு அகலம் போதாது என்று அவனுக்குத் தோன்றியது. மேலும் சற்று நடந்தபோது, வராண்டாவில் போடப்பட்டிருந்த ஸ்டூல்களில் அமர்ந்து தூங்கிக் கொண்டோ, வெற்றிலை - பாக்கு போட்டுக் கொண்டோ இருந்த ப்யூன்கள் எழுந்து, அவனுக்கு 'சலாம்' போட ஆரம்பித்தார்கள்.

இந்த பணி நியமனத்திற்குப் பிறகு பத்து, பதினொரு நாட்கள் கடந்த பின்னர் புது வருடம் ஆரம்பிக்கிறது. ஆனால், தன்னுடைய நீண்ட க்ளார்க் வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும், கபூர் புது வருடம் என்ற ஒன்றை அறிந்ததே இல்லை. புது வருடம் என்று ஆரம்பிக்கிறது, மெதுவாக நகர்ந்து அது என்றைக்கு முடிகிறது என்பதையெல்லாம் கபூர் ஒரு முறை கூட நினைத்துப் பார்த்ததில்லை. டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி, எப்போதும் இருக்கக் கூடிய முப்பது, முப்பத்தொன்று தேதிகளைப் போலவே அதிர்ஷ்டமற்ற நாளாகவே இருந்தது. ஜனவரி ஒன்று, எல்லா முதல் தேதியையும் போல சந்தோஷத்துடன் வந்து சேரும் - அது சம்பள நாள். கடன்காரர்களின் கடன் தீர்க்கப்படும் நாள். நீண்ட நாட்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளின் தேவைகள் செயலாக்கப்படும் நாள்.... நோட்டு புத்தகங்கள், புதிய புத்தகங்கள், கிழிந்து போனவற்றிற்குப் பதிலாக புதிய சாக்ஸ்கள், பள்ளிக்கூட சீருடை, பென்சில்....
மனதில் பெரிய பெருமை தோன்றும். அத்துடன் தாங்க முடியாத கவலையும்.... மாதத்தின் முதல் நாளன்றே சம்பளப் பணத்தில் பாதிக்கும் மேல் தீர்ந்து போய் விட்டதே என்ற கவலை.

ஆனால், இந்த முறை கபூர், கபூர் ஸாஹப் ஆக ஆகியதைத் தொடர்ந்து அவனுடைய வாழ்க்கை முறையே முற்றிலும் மாறி விட்டது.

நடந்தது இதுதான். புது வருட பரிசுடன் யாரோ வியாபாரி, அமைச்சரின் வீட்டிற்கு வந்தார். தேதி டிசம்பர் முப்பத்தொன்று. நேரம் காலை எட்டு மணி. அப்போது கபூர் அமைச்சரின் பங்களாவின் முன்னறையில் பி.ஏ.வின் நாற்காலியில் ட்யூட்டியிலிருந்தான்.

பரிசுப் பொருளைப் பார்த்ததும் அமைச்சர் சொன்னார்: 'மன்னிக்கணும். நான் மது அருந்துவதை நிறுத்தி விட்டேன். பிரதம அமைச்சர் என்ன கூறினார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமல்லவா?'

வியாபாரி தன் மனதிற்குள் அமைச்சரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டார். அவர் சற்று அதிர்ச்சியடையவும் செய்தார். அவர் மனதிற்குள் கூறினார்: 'திருட்டுப் பயல்.... என் பிடியிலிருந்து நழுவிப் போறதுக்கு முயற்சி பண்றியா?' எனினும், அவர் பற்கள் முழுவதையும் வெளியே காட்டி சிரித்தவாறு சொன்னார்:

'பரவாயில்லை சார்... புது வருட பரிசுப் பொருளுடன் நான் மீண்டும் வருகிறேன். நாளையோ, நாளை மறுநாளோ... ஆனால், இன்று புது வருடத்திற்கு முந்தைய நாள். இந்த டைரியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.' அவர் தன்னுடைய ப்ரீஃப்கேஸிலிருந்து டைரியை எடுத்து அமைச்சருக்கு முன்னால் வைத்தார். ஒரு சாதாரண டைரி. அதற்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட வேறு சில தாள்களும் இருந்தன. அமைச்சர் டைரியின் மேலட்டையைப் புரட்டி விட்டு, அதற்குள் இருந்த தாளின் எடையைப் பார்த்தார். அவர் சந்தோஷத்துடன் கேட்டார்: 'இதெல்லாம்.... எதற்கு இவ்வளவு சிரமம்?'

வியாபாரி திருட்டு சிரிப்பு சிரித்தார்.

மனிதனின் நிலை உயர்வதற்கேற்ப, அவனுடைய குழந்தைகள் அதிகமான இனிப்பு பலகாரங்களைச் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

அமைச்சர் டைரியை தன்னுடைய மேஜையின் ட்ராயருக்குள் வைத்தார்.

வியாபாரிக்கு மன நிம்மதி உண்டானது. 'ஓ... தப்பித்தோம்' - அவர் மனதிற்குள் கூறிக் கொண்டார்.

வெளியே வந்த பிறகு, அவர் பரிசாகக் கொண்டு வந்திருந்த புட்டியைக் கபூரிடம் கொடுத்தார். பி.ஏ.வையும் கைக்குள் போட வேண்டும்.

சம்பவம் சிறிதும் எதிர்பார்க்காமல் நடைபெற்றதால், கபூர் சற்று நிலை தடுமாறினான். முக உணர்ச்சிகளாலோ, வார்த்தைகளாலோ நன்றி கூற முடியவில்லை. வாழ்க்கையில் முதல் தடவையாக யாரோ ஒருவர் இப்படி கபூருக்கு பரிசுப்பொருள் தருகிறார். அவன் பதைபதைத்துப் போய் விட்டான். வியாபாரி கூறினார்: 'புது வருடத்திற்காக ஒரு சிறிய பரிசு.' அவர் சிரித்துக் கொண்டே வெளியேறினார்.

கபூர் நடுங்கியவாறு அந்த அட்டையால் மூடப்பட்டிருந்த புட்டியை தன்னுடைய மேஜைக்குள் வைத்தான். மேஜையின் ட்ராயர் கூட நடுங்குவதைப் போல அவனுக்குத் தோன்றியது.

கபூர் வியர்வையில் மூழ்கி விட்டிருந்தான்.

டைப்பிஸ்ட் வசிஷ்டனும் அந்த அறையில்தான் இருந்தான். நீண்ட காலமாக அதே அமைச்சரின் இலாகாவில் அவன் அமைச்சரின் டைப்பிஸ்ட்டாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். பி.ஏ.வின் அறையில்தான் அவனும் இருக்கிறான். முதல் நாள் கபூர் அந்த அறையில் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தபோது, வசிஷ்டன் அவனிடம் கூறினான்: 'கவலைப்பட வேண்டாம், நண்பரே! நான் எல்லாவற்றையும் சொல்லித் தர்றேன். அமைச்சர்கள் வருவார்கள்... போவார்கள். அவர்களுடைய பதவி என்பது நிரந்தரமானது அல்லவே! ஆனால், எங்களுடையது நிரந்தர போஸ்ட். எனக்கு இங்குள்ள செயல் முறைகள் நன்றாக தெரியும். உங்களுக்கு எந்தவொரு சிரமமும் இருக்காது.'

கபூர் ஸாஹப் கவலையுடன் இருப்பதைப் பார்த்ததும், வசிஷ்டன் வெற்றிலை - பாக்கு டப்பாவுடன் அவனுக்கு அருகில் சென்றான். 'வாழ்த்துக்கள், கபூர் ஸாஹப். முதல் பரிசு எல்லாருக்கும் சேர்த்து உள்ளது. கீழே உள்ளவர்களையும் சேர்த்து உபசரிக்க வேண்டும். அப்படியென்றால்தான் செல்வச் செழிப்பு உண்டாகும். உங்களுக்கு மற்றவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.'

கபூர் அந்தச் சமயத்தில் அனுபவங்கள் கொண்டவனாக இல்லை. அதனால் ஒரு புட்டி முழுவதையும் உள்ளே கொண்டு போவது என்பது பொதுவாகவே சிரமமான விஷயமாக இருந்தது. அவன் சொன்னான்: 'சரி... சரி... நிச்சயமாக.'

'ஆகட்டும்.... அப்படியென்றால் இன்று சாயங்காலம் உங்களுடைய வீட்டில் வைத்து புது வருடத்தைக் கொண்டாடுவோம். குப்தாவிடமும் கூறட்டுமா?'

குப்தா இன்னொரு டைப்பிஸ்ட். ஆனால், அவன் வேறொரு அறையில் அமர்ந்திருந்தான். தபாலில் வரக் கூடிய விஷயங்களைப் பெறக் கூடிய க்ளார்க்கும், டெஸ்பாட்ச் செய்யக் கூடிய ஆளும் அந்த அறையில்தான் இருக்கிறார்கள்.

'கட்டாயம்...' கபூர் பெருந்தன்மையுடன் கூறினான்.

அதைத் தொடர்ந்து மாலை வேளையில் வேலை முடிந்ததும், கபூர் ஸாஹப்புடன் வேலை செய்யும் இரண்டு மனிதர்களும் தங்களின் குடும்பத்துடன் கபூரின் வீட்டிற்கு வந்தார்கள்.


அவர்கள் வந்து சேர்வதற்கு முன்பு கபூர் தன்னுடைய மனைவியுடன் சண்டை போட்டு, அவளின் திட்டுதல்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி அவனிடம் உரத்த குரலில் கூறினாள்: 'நாசமாய் போன மதுவை இந்த வீட்டில் வைத்து குடிக்கப் போறீங்களா? அதுவும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு... 'ந்யூ இய'ராம்! என்ன நாசம் பிடிச்ச விஷயம் அது! போதாததற்கு இன்னைக்கு தேதி முப்பத்தொண்ணு. வீட்டிலோ காய்கறியோ பிஸ்கட்டோ, வேறு எந்த பொருளுமே இல்லை. பலசரக்குக் கடையில் இப்போது கடன் வாங்குவதற்கு வெட்கமாக இருக்கு. நேற்றுத்தான் அந்த ஆளுக்கிட்ட சொன்னேன்.... 'இந்த மாதம் இனி எதுவும் தேவையில்லை. கணக்கைக் கூட்டி வையுங்க. முதல் தேதியன்று பணத்தைத் தந்திடுறேன்' என்று. பழைய ஒரு பாக்கி 183 ரூபாய் இருக்கு. இனிமேலும் கடன் வாங்கினால், விருந்தாளிகள் சந்தோஷத்துடன் சாப்பிட்டு விட்டு, அவரவர்களின் வீடுகளுக்குப் போயிடுவாங்க. ஆனால், நாம அடுத்த மாதம் குருத்துவாராவிலிருக்கும் தர்மசாலையில் போய் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்து விடாதா? 'ந்யூ இய'ராம்! இதெல்லாம் பணக்காரர்களுக்கான விஷயங்கள். பெரிய ஹோட்டல்களுக்குப் போறவங்களோட கொண்டாட்டங்கள்.... இங்கே யார் எப்படி வாழ்க்கையை நடத்துறாங்கன்ற விஷயம் தெரியுமா? முப்பது நாட்களை நகர்த்தி விடுறது எப்படி என்று எனக்குத்தான் தெரியும்....'

ஆனால், கபூர் ஸாஹப் என்ன செய்வான்? அவன் தன்னுடைய மனைவிக்குக் கூறி புரிய வைக்க முயற்சித்தான்: 'அடியே! இது ஆங்கிலேயர்களின் கொண்டாட்டம். ந்யூ இயர்.... நம்முடைய விசாகத்தையும் தீபாவளியையும் போல...' ஆனால், அவள் கேட்டால்தானே!

ஏழே முக்கால் ஆனபோது, உடன் பணியாற்றுபவர்கள் இருவரும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்கள்.

பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் உள்ளேயிருந்த அறைக்குள் சென்றார்கள். எப்போதும் செய்வதைப் போல குழந்தைகள் ஆரவாரம் எதுவும் உண்டாக்கவில்லை. அதற்குப் பதிலாக தங்களின் தாய்களின் புடவைத் தலைப்புகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். க்ளார்க்குகளின் பிள்ளைகளாயிற்றே! வெளியே நல்ல குளிர் காணப்பட்டது. அதனால் 'போய் விளையாடுங்க...' என்று கூறி, அவர்களை வெளியே அனுப்பி வைக்கவும் வழி இல்லாமலிருந்தது.

வெளியே இருந்த அறையில் ஆண்கள் புட்டியை உடைத்தார்கள். அத்துடன் வறுத்த கடலையையும் மிக்சரையும் மென்று தின்றார்கள். உள்ளேயிருந்த அறையில் பெண்கள் உருளைக் கிழங்கின் விலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

'பணி உயர்வு கிடைத்ததற்கு கபூர் ஸாஹப் விருந்தே தந்திருக்கணும்' - வசிஷ்டன் சொன்னான்.

'என்ன பணி உயர்வு நண்பா! பணி உயர்வு என்று கூறினால், சம்பளம் அதிகமாக கிடைக்க வேண்டும். எனக்கோ வேலை மட்டுமே கூடியிருக்கிறது. முன்பு பத்தரை மணிக்கு அலுவலகத்திற்கு வந்தால் போதும். அதற்குப் பிறகு நான்கரை மணிக்குப் போய் விடலாம். இப்போதோ ஏழே முக்கால் மணிக்கு அமைச்சரின் பங்களாவுக்கு வந்து சேர வேண்டும். இரவு எட்டு, ஒன்பது மணி வரை வேலை இருக்கும், உங்களுக்கு தெரியுமல்லவா?' - கபூர் தன்னுடைய நிலைமையை விளக்கிக் கூறினான்.

'வேலையைப் பற்றிய விஷயத்தை விட்டுத் தள்ளுங்க, கபூர் ஸாஹப். உங்களுடைய நிலை உயர்ந்து விட்டது' - குப்தா கூறினான்.

'இந்த நாற்காலியில் அமர்ந்தால் எதையும் பெறலாம். சுதை ஞாபகத்தில் இருக்கிறதா? நம்முடைய நரேந்திர சுதை. இங்கு முன்பு உங்களுடைய இடத்தில் அவர்தான் இருந்தார். எட்டு வருடங்களுக்கு முந்தைய விஷயம். பம்பாயிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் லைஸன்ஸ் அமைச்சரின் இலாகாவில் முடங்கிக் கிடந்தது. ஒவ்வொரு வாரமும் அப்பிராணிகள் இங்கேயே சுற்றிக் கொண்டு திரிந்தார்கள். அமைச்சர் அவர்களைக் கொஞ்சம் கூட நெருங்க விடவில்லை. இறுதியில் ஏமாற்றமடைந்து பம்பாய்க்காரர்கள் திரு. சுதை அவருடைய வீட்டில் போய் பார்த்தார்கள். சுத் ஓடி அலைந்து ஒரே மாதத்தில் லைஸன்ஸைச் சரி செய்து கொடுத்து விட்டார். எல்லா விஷயங்களும் சுத் மூலமாகத்தான் நடந்தன. லைஸன்ஸ் கிடைத்தபோது பம்பாய்க்காரர்கள் நினைத்தார்கள்...' நாம் ஒவ்வொரு முறையும் டில்லியில் ஆறோ ஏழோ ஆயிரம் ரூபாய்களைச் செலவழிக்கிறோம். அப்படி இருக்கும்போது சுத்தையே இந்த விஷயத்திற்காக நியமித்து விட்டால் என்ன?' என்று. அதைத் தொடர்ந்து சுத் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு, கம்பெனியின் டில்லி எக்ஸிக்யூட்டிவ் டைரக்டராக ஆகி விட்டார். குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அலுவலக அறை, வசிப்பதற்கு தனியான ஃப்ளாட். பிறகு அவர் விலை மதிப்புள்ள காரில்தான் பயணம்... தன்னுடைய அழகான லேடி செக்ரட்டரியுடன். பழைய அலுவலக வராண்டாவில் சுற்றித் திரிந்து ஆட்களை டின்னருக்கு அழைக்கும் ஒவ்வொரு மாலை வேளையிலும் அமைச்சகத்தின் ஏதாவது ஆபீஸருடன் சேர்ந்து ஒபராய், தாஜ் அல்லது மவுர்யா ஹோட்டலில் டின்னர் சாப்பிடுவார். ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கான ரூபாய்களைச் செலவழிப்பார். எப்போதும் இறக்குமதி செய்யப்பட்ட புதிய சூட்டை அணிந்திருப்பார்' - வசிஷ்டன் அந்த கதையை விளக்கிக் கூறினான்.

'நண்பரே! நோட்டுகளில் சற்று பசை படிந்திருக்கும். யாருடைய கைகளின் வழியாக அது கடந்து போகிறதோ, அவங்களோட கையில் கொஞ்சம் அது ஒட்டிப் பிடித்துக் கொள்ளும். நீங்கள் விவரமான ஆள்தானே?' - குப்தா கூறினான்.

'நண்பர்களே! நான் இருக்குற விஷயத்தைக் கூறுகிறேன் சாஸ்திரங்களில் எண்பத்து நாலு இலட்சம் யோனிகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது அல்லவா? அவை அனைத்தும் க்ளார்க்குகளுக்கு உள்ளவையே. மனிதன், பூனை, நாய், தேள், ஆமை, குள்ள நரி, பன்றி - இப்படி எவ்வளவு உயிரினங்கள்! ஆனால், எண்பத்து நான்கு லட்சம் பிறவிகளுக்குப் பிறகுதான் மனிதப் பிறவி கிடைக்கும். அதிலும் ஏதாவது அதிர்ஷ்டசாலிக்கு மட்டுமே அமைச்சரின் பெர்சனல் அசிஸ்டெண்டாக ஆக முடியும்' - வசிஷ்டன் தன்னுடைய அறிவை வெளியிட்டான்.

அது சரிதான்.... 'ஆனால், வேலை அதிகமாகிறது. இங்கு வீட்டுக்காரியோ கடந்த பத்து நாட்களாக...' - கபூர் வாய் விட்டு சற்று சிரித்தான்.

'அவங்களுக்குக் கூறி புரிய வைக்க வேண்டும். இந்த நாற்காலி அற்புதங்களை உருவாக்கும் தகுதி படைத்தது என்பதைச் சொல்லுங்க. அதற்குப் பிறகு அவங்க உங்களுக்கு தினமும் அல்வாவையும் பாலையும் தந்த பிறகுதான் அலுவலகத்திற்கே அனுப்பி வைப்பாங்க' - வசிஷ்டன் கூறினான்.

'அவங்களுக்கு காரியங்களை விளக்கிச் சொல்லுங்க. படிப்படியாக எல்லா விஷயங்களையும் புரிஞ்சுக்குவாங்க' - வசிஷ்டனின் அடுத்த அறிவுரை.


'ஒவ்வொரு கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பதவியில் இருக்கும் மனிதரும் பாலத்திலோ சான்டாக்ரூஸிலோ வேலை கிடைப்பதற்கு என்ன சிபாரிசெல்லாம் செய்ய வைக்கிறார்கள்! ஒவ்வொரு ட்ராஃபிக் அலுவலக பதவியில் இருப்பவரும், ஒவ்வொரு சேல்ஸ் டாக்ஸ் ஆபீஸரும் சாந்த்னி சவுக்கிலும் சதரிலும்... இல்லாவிட்டால் சாவ்டி பஸாரிலும் பணி கிடைப்பதற்காக என்னென்ன வேலைகளையெல்லாம் செய்கிறார்கள்! அதெல்லாம் இருக்கட்டும்.... பெரிய மருத்துவமனைகளில் வி.ஐ.பி. பிரிவில் பணி கிடைக்கக் கூடிய டாக்டர்கள் மீது மற்றவர்களுக்கு என்ன பொறாமை இருக்கிறது என்பது தெரியுமா? இந்த இடங்கள் அப்படி சாதாரணமாக கிடைத்து விடாது. இரண்டு மடங்குகள் வேலைகளைச் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், தலை பெரியதாக இருந்தால், தலை வலியும் பெரிதாகத்தான் இருக்கும் என்பதைக் கூற வேண்டியதில்லையே!' - குப்தாவின் குரு மந்திரம் இது.

வசிஷ்டன் சொன்னான்: 'இன்னும் சொல்லப் போனால்... பிரதம அமைச்சரின் விஷயத்தையே எடுத்துப் பாருங்க. பாவம்... பதினெட்டு, பத்தொன்பது மணி நேரங்கள் பணி செய்கிறார். தேர்தல் நேரத்தில் கிராமம் கிராமங்களாக அலைந்து திரிகிறார். அவருக்கு என்ன கிடைக்கிறது?'

'ஆமாம் சார்... இந்த அனைத்து அமைச்சர்களும் தலைவர்களும் ஓடி திரிகிறார்கள். சும்மா இல்ல...'

'இறுதியில் இங்கு இருக்கும் அக்காவும் முழு பலனையும் அனுபவிப்பாங்க. பெரிய தலைவலியைக் கொண்ட உங்களோட தலையை அவங்க தடவி விடுவாங்க' - வசிஷ்டன் சிரித்துக் கொண்டே கூறினான்.

புட்டி காலியாகும் நிலையில் இருந்தது. கடலை கிட்டத்தட்ட தீர்ந்து விட்டிருந்தது. குப்தா கடிகாரத்தைப் பார்த்தான். 'நண்பர்களே! மணி ஒன்பதரை ஆகி விட்டது. இனி உணவு சாப்பிடலாம். பத்தரை ஆகி விட்டால், பிறகு பேருந்து கிடைக்காது. காரில் போவதற்கு நாமொன்றும் அமைச்சரோ மற்றவர்களோ இல்லையே!'

கபூர் எழுந்து உள்ளே சென்றான். சிறிது நேரம் கழித்து கபூரின் பிள்ளைகள் மேஜையின் மீது தட்டுகளைக் கொண்டு வந்து வைத்தார்கள். மூன்று நண்பர்களும் வெளியே இருந்த அறையிலும், குப்தா, வசிஷ்டன் ஆகியோரின் மனைவிகள் உள்ளேயிருந்த அறையிலும் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள். தங்களுடைய பிள்ளைகளிடம் தமாஷாகப் பேசியவாறு அவர்களையும் உணவு சாப்பிட வைத்தார்கள்.

கபூரின் மனைவி சப்பாத்தி தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பிள்ளைகள் பரபரப்பாக உள்ளேயும் வெளியேயும் தட்டுகளை மாற்றி மாற்றி கொண்டு போவதும், திருப்பிக் கொண்டு வருவதுமாக இருந்தார்கள்.

பத்தே கால் ஆனதும், எல்லோரும் புறப்பட்டார்கள்.

கபூர் குற்றவாளியைப் போல தன் மனைவியைப் பார்த்துக் கொண்டே உள்ளேயும் வெளியேயும் இருந்த அறைகளில் படுக்கையை விரித்தான்.

உணவு சாப்பிட்டு விட்டு, கபூரின் மனைவி கோபத்துடன் பாத்திரங்களைக் கழுவி சுத்தப்படுத்தினாள். 'ந்யூ இயர்! கடுமையான குளிரில் இதெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு சுவாரசியமான விஷயமாக இருக்கும். நம்முடைய நாட்டின் கொண்டாட்டங்கள் ஹோலியும், தீபாவளியும், விசாகமும்தான். அனைத்தும் நல்ல காலச் சூழ்நிலையில் வரக் கூடியவை. குளிர் காலத்தில் வரக் கூடிய லோஹடிக்குக் கூட ஆட்கள் நெருப்பு மூட்டி, குளிர் காய்கிறார்கள். இங்கு பனி உருகக் கூடிய இந்த குளிர் காலத்தில் பாத்திரத்தைச் சுத்தம் செய்ய வேண்டியதிருக்கிறது. இந்த ந்யூ இயர் போய் தொலையட்டும்....' - கபூரின் மனைவி தனக்குள் கூறிக் கொண்டாள்.

இறுதியில் விளக்குகள் அணைந்தன. சுமார் பதினொன்றரை மணி ஆகியிருக்கும். பிள்ளைகள் உறங்கி விட்டார்கள். கபூரின் மனைவி அப்போதும் கோபத்தில்தான் இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்:

'இந்த நாசமாய் போன ந்யூ இயர் ஏன் இரண்டாம் தேதி வந்திருக்கக் கூடாது? குறைந்த பட்சம், சம்பளம் கிடைத்திருக்குமே!'

கபூர் அதற்கு பதில் கூறவில்லை.

கபூரின் மனைவியின் சத்தம் சிறிது நேரம் இருண்ட அறைக்குள் கறுத்த வவ்வாலைப் போல அலைந்து திரிந்து விட்டு, பிறகு.... அது ஏதோ கீறல் விழுந்த சுவரில் போய் ஒட்டிக் கொண்டது.

இறுதியாக நாசமாய் போன ந்யூ இயர் இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்தபோது, எல்லோரும் ஆழமான உறக்கத்தில் மூழ்கி விட்டிருந்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.