Logo

பெண் விரிவுரையாளர்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4468
Pen Virivuraiyaalar

பெண் விரிவுரையாளர் (பஞ்சாபி கதை)

அஜீத் கவுர்

தமிழில் : சுரா

ல்லூரின் 'ஸ்டாஃப் ரூமில்' திருமதி பட்நாகர், திருமதி.பாண்டே, செல்வி. துபே, திருமதி, சுத் ஆகியோர் ஏதோ ரகசிய விஷயத்தை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நான்கு பேரும் மேஜையின் மீது கைகளை ஊற்றிக் கொண்டு முன்னோக்கி நகர்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களுடைய கண்களில் உற்சாகம் நிறைந்திருந்தது.

திருமதி. பட்நாகர் மேல்மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டே ஏதோ விஷயத்தைச் சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டிருந்தாள். திருமதி. சுத் மிகுந்த ஆச்சரியத்துடன் சொன்னாள்: 'ஆஹா! அப்படியென்றால்... மகாராணியின் கால்கள் தரையில் படாமல் இருக்குறதுக்குக் காரணம் அதுதான்...

எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தார்கள். ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும் முழுமையான திருப்தியையும் அடைந்தவாறு...

திருமதி. சுத் பரபரப்புடன் வாசலைப் பார்த்தாள். திருமதி. சவுதரி உள்ளே வந்து கொண்டிருந்தாள். இளம் நிறத்தில் கைத்தறியால் ஆன பட்டுத் துணியில் செய்யப்பட்ட சல்வார் கம்மீஸும், மெல்லிய சாக்லேட் நிறத்தைக் கொண்ட துப்பட்டாவும், சாதாரணமாக இருந்த செந்தூர பொட்டும், நீளமான கூந்தலும், மிடுக்கு நிறைந்த அழகும், தேன் ததும்பிக் கொண்டிருக்கும் கண்களும், முத்துச் சிப்பிக்கு உள்ளே இருக்கும் நிறத்தைக் கொண்ட கன்னங்களும், மெல்லிய உதட்டுச் சாயமும், கையில் இரண்டு மூன்று புத்தகங்களும்...

எல்லோரும் மிகவும் அமைதியாக இருந்தார்கள்.

ஆனால், இன்று எப்போதும் போல எல்லோரும் கண்களைச் சிமிட்டி வேறு பக்கம் பார்க்கவேயில்லை. யாருடைய கண்களும் பதைபதைப்பு அடைந்து மாத இதழ்களைத் தேடி போகவில்லை. எல்லோரும் நேராக திருமதி. சவுதரியையே பார்த்தார்கள். எட்டு கண்கள் மலர்ச்சியுடன் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை திருமதி. சவுதரி உணர்ந்தாள். அந்த கண்கள் தன்னைப் பார்த்து சவால் விடுவதைப் போலவும், தன்னைப் பார்த்து சிரிப்பதைப் போலவும், சந்தோஷத்தால் பிரகாசிப்பதைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.

திடீரென்று திருமதி. பாண்டே சாதாரணமாக ஏதோ கூற, நான்கு பேரும் சேர்ந்து ஒரே குரலில் குலுங்கிக்  குலுங்கி சிரித்தார்கள்.

தன்னுடைய முழு உடலும் 'க்ளோரோஃபாம்' மூலம் சுய உணர்வு இல்லாமற் போய் விட்டதைப் போல திருமதி சவுதரிக்குத் தோன்றியது. தன்னைத் தானே சற்று கட்டுப்படுத்திக் கொண்டு அவள் ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.

'நான் இவர்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்?'- தனக்குள் பதைபதைப்பு அடைந்து கொண்டே அவள் மனதிற்குள் கூறினாள்.

ஆனால், வெளியே அவள் முன்பு இருப்பதைப் போலவே சாந்த நிலையில் காணப்பட்டாள்.

திருமதி. சவுதரி முதலில் அந்த கல்லூரிக்கு வரலாறு விரிவுரையாளராக வந்தபோது, அவளுடன் பணியாற்றும் ஆண்கள் அவள் மீது தனி கவனம் செலுத்தினார்கள்.

'க்ரேஸ்ஃபுல்'- போசிரியர் தர்மவீரா கூறினார்.

'அழகு நிறைந்த எளிமை'- பேராசிரியர் பால் அதிகமாக புகழ்ச்சியைக் கலந்து கூறினார்.

'இரெஸ்ஸிஸ்டப்லி சார்மிங்'- போராசிரியர் சிங் தனக்கென்றே இருக்கக் கூடிய கம்பீரமான குரலில் பேராசிரியர் மல்ஹோத்ராவிடம் கூறினார்.

விரிவுரையாளர்கள் மத்தியில் கொஞ்சம் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் திருமதி. சவுதரியையைத் தங்களுடைய குழுவில் சேர்ப்பதற்கு முயற்சித்தார்கள். திருமதி. சவுதரி மூன்று நான்கு நாட்கள் அவர்களுடன் சேர்ந்து பங்கு பெறவும் செய்தாள். ஆனால், சேற்றில் இறங்கி நீர் வரை சென்று ஆடைகளை ஈரமாக்கும் ஆட்களை கரையில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளைப் போல மட்டுமே அவர்களுடைய நடவடிக்கைகள் இருந்தன. திருமதி.பாண்டே திருமதி.பட்நாகரைப் பாராட்டினாள். 'திரு.பட்நாகரின் செலக்‌ஷனா... இல்லாவிட்டால், நீங்களே செலக்ட் செய்ததா?'- செல்வி. துபே ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்தியவாறு கேட்டாள்.

'இப்போது மூலையில் இருக்கும் கடையில் நிறைய நல்ல புடவைகள் வந்திருக்கின்றன'- திருமதி. சுத் தன்னுடைய ஐந்து நாட்கள் சுற்றித் திரிந்த அனுபவத்தில் கிடைத்த அறிவை வெளிப்படுத்தினாள்.

'இல்லை... கைத்தறி பவனிலும் மிகவும் புதிய செலக்‌ஷன்கள் கிடைக்கும்' - திருமதி பட்நாயகருக்கு, திருமதி. சுத் இவ்வாறு வெறுமனே புகழ் பெறுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

திருமதி.சவுதரி இந்த 'போரடிக்கக் கூடிய' விஷயங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுடைய பிள்ளைகளைப் பற்றியோ இல்லாவிட்டால் கணவர்களைப் பற்றியோ அல்லது புதிய மாடல் கார்களைப் பற்றியோ அதுவும் இல்லாவிட்டால் புதிய திரைப் படங்களைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பார்கள்.

எல்லோரும் திருமதி..சவுதரியை தங்களுடைய பல வர்ணங்களைக் கொண்ட உலகத்திற்கு பிடித்து இழுத்துக் கொண்டு வந்து, அதில் சிறிதளவிலாவது பங்கெடுக்க வைப்பதற்கு ஆசைப்பட்டார்கள். ஆனால், திருமதி, சவுதரி சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு பெண்ணை மிகவும் சீக்கிரமே வெறுப்பதற்கு பெண்களால் முடியும். 'ஹோ! இந்த மகாராணிக்கு எதைப் பார்த்து இந்த மிடுக்கு? என்ன ஒரு சுப்பீரியாரிட்டி! என்ன... தங்கத்தால் ஆன சிறகுகளா இருக்கு?'

படிப்படியாக... நான்கைந்து நாட்களிலேயே... திருமதி சவுதரியை தங்களுடைய முழுவில் சேர்ப்பதற்கான முயற்சி முற்றிலும் வீணாகிப் போய் விட்டதைப் பார்த்தார்கள். எல்லோரும் உத்தியை மாற்றி பார்த்தார்கள்.

திருமதி. சவுதரியோ ஓய்வு பீரியடில் 'ஸ்டாஃப் ரூமின்' ஒரு மூலைக்குச் சென்று ஏதாவது ஸோஃபாவில் போய் அமர்ந்திருப்பாள். ஏதாவது பத்திரிகையையோ புத்தகத்தையோ வாசிப்பாள்.

மற்ற விரிவுரையாளர்கள் அவளுக்கு எதிராக 'ஒரு பொது அணியை' வடிவமைத்தார்கள். அவள் வரும்போது, திடீரென்று பேச்சை நிறுத்தி விடுவார்கள். குலுங்கிக் குலுங்கி சிரிப்பதும் ஆரவாரமும் நின்று விடும். அதற்குப் பிறகு உரையாடல் மிகவும் தாழ்ந்த குரலில் இருக்கும்.

உடன் பணியாற்றுபவர்களில் ஆண்கள் திருமதி. சவுதரியுடன் நட்பு உண்டாக்க முயற்சித்தார்கள். 'திருமதி - சவுதரி! நீங்கள் வாசிப்பதில் மிகவும் தீவிரமானவர் என்பது தோன்றுகிறது. என்ன வாசிக்கிறீங்க?'- பேராசிரியர் தர்மவீரா கேட்பார்.

'ஒரு கப் காபி பருகுவோம், திருமதி.சவுதரி'- பேராசிரியர் சிங் சிரித்துக் கொண்டே அவளை அழைப்பார்.

திருமதி. சவுதரி அழகாகவும், சாந்தமாகவும் சிரித்துக் கொண்டே 'நோ... தேங்க் யூ' என்று கூறும்போது, பேராசிரியர் சிங்கிற்கு சூடான காபி தன்னுடைய உடலின் மீது விழுந்ததைப் போல இருக்கும்.


இவ்வாறு சில நாட்கள் கடந்ததும், ஆண் விரிவுரையாளர்களும் திருமதி.சவுதரிக்கு எதிராக ஒரு 'ஜாய்ன்ட் டிஃபன்ஸ்' அமைத்தார்கள்.

ஆனால், திருமதி.சவுதரி முன்பு இருந்ததைப் போலவே எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தாள். மவுனமாக ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து எதையாவது வாசித்துக் கொண்டிருப்பாள்.

ஆனால், மாணவர்களுக்கு அவளை மிகவும் பிடித்தது. முதலில் பின்னாலிருந்த பெஞ்ச்களில் அமர்ந்திருந்த இரண்டு மூன்று மாணவர்கள் குறும்புத் தனங்களை வெளிப்படுத்த முயன்றார்கள். அதற்குப் பிறகும் அவள் முழுமையான சம நிலை மனதுடன் சொன்னாள்: 'பாடம் சொல்லித் தரும்போது நான் பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன். மற்றவர்களை கவனமாக இருக்க வைக்கவும் செய்வேன். இனிமேல் யாருக்காவது என்னிடம் விளையாட வேண்டும், தமாஷாக பேச வேண்டும் என்று நினைத்தால் பீரியட் முடிந்த பிறகு, வகுப்பறைக்கு வெளியில் வைத்து பார்ப்போம்.' அதைக் கேட்டவுடன், எல்லோரும் அடங்கி உட்கார்ந்து விட்டார்கள்.

அது தவிர, திருமதி.சவுதரியின் கூர்மையான அறிவு காரணமாக எல்லோரும் அவளை விரும்பினார்கள். இதுவரை இன்னொரு ஆசிரியையை இந்த அளவிற்கு மதித்ததில்லை. அவள் இல்லாத நேரத்திலும், அவளைப் பற்றி கிண்டல் பண்ணிக்கூட பேசுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் - பீரியட் இல்லாத வேளையிலும் திருமதி.சவுதரியைத் தேடி 'ஸ்டாஃப் ரூமிற்கு' மாணவர்கள் தங்களுடைய பிரச்னைகளுடன் வந்து கொண்டிருந்தார்கள்.

வேலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் அவள் இவ்வாறு இருப்பதைப் பார்த்து, மற்ற விரிவுரையாளர்களுக்கு அவள் மீது பொறாமை உண்டானது.

இப்படியே பல நாட்கள் கடந்து சென்றன.

ஆனால், சிறிதும் எதிர்பாராமல் எல்லோரின் முகங்களும் பிரகாசமாயின. திருமதி. பட்நாகர் சூடான தகவலுடன் வந்திருந்தாள்... திருமதி.சவுதரியை அவளுடைய கணவர் ஒதுக்கி விட்டார். அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்போது தனியாகத்தான் வசித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மோசமான குணத்தால்தான் தான் அவளை வேண்டாம் என்று ஒதுக்கியதாக அவளுடைய கணவர் மற்றவர்களிடம் கூறியிருக்கிறார்.

ஏழு கடல்களையும் தாண்டி ஏதோ புதிய தீவைக் கைப்பற்றியதைப் போல திருமதி. பட்நாகர் வந்தாள். 'யாரிடமும் சொல்லாதீங்க...' என்ற முன்னுரையுடன் அவள் தன்னிடமிருந்த ரகசியத்தை மெதுவான குரலில் கூறினாள். நடக்க வேண்டியதுதான் நடந்தது. ஒரே நொடியில் அந்தச் செய்தி காட்டுத் தீயைப் போல எல்லோரிடமும் போய்ச் சேர்ந்தது.

செல்வி.துபே தாழ்ந்த குரலில் கூறினாள்: 'செய்தி பொய்யா என்பதைப் பற்றி உறுதியில்லை. எந்த ஆணாக இருந்தாலும், பெண்ணிடம் அநியாயமாக நடக்கும்போது, அதை மறைப்பதற்காக 'மோசமான குணம்' என்ற காரணத்தைக் கூறுவார்கள்.'

ஆனால், ஏழு கடல்களைத் தாண்டிக் கொண்டு  வந்த தன்னுடைய அற்புத செய்தி இப்படி நிராகரிக்கப்பட்டது திருமதி. பட்நாகருக்குப் பிடிக்கவில்லை. அவள் கூறினாள்: 'இது அப்படிப்பட்டதல்ல. எல்லோரும் இதைத்தான் கூறுகிறார்கள். தூதர்களின் கருத்து, கடவுளின் அங்கீகாரம்...'

'உண்மை...'- திருமதி. பாண்டே சுவாரசியமான அந்தச் செய்தியின் சுவாரசியத்தைக் காப்பாற்றுவதற்காக மனப்பூர்வமாக உதவினாள்.

திருமதி. சவுதரி 'ஸ்டாஃப் ரூமுக்கு' வந்தவுடன், எப்போதும் நடப்பதைப் போல பேச்சு நிற்கவில்லை. அதற்குப் பதிலாக ஒரு பெரிய குலுங்கல் சிரிப்பு கேட்டது. கடந்த எல்லா நாட்களிலும் காட்ட வேண்டிய பழிக்குப் பழியை ஒன்றாகச் சேர்த்து அவர்கள் திருமதி. சவுதரியின் முகத்தில் அடித்ததைப் போல இருந்தது.

எல்லோரின் பார்வையும் திருமதி.சவுதரியின் மீது பதிந்திருந்தது. இன்று யாரும் கண்ணை வேறு பக்கம் செலுத்தவில்லை. எல்லா கண்களிலும் சவால் விடும் அறிகுறி இருந்தது. 'என்ன மகாராணி, என்ன கோபமாக இருக்கே? இன்னைக்கு என்ன மூட் சரியில்லையா?'

ஆண் விரிவுரையாளர்கள் மிகுந்த கிண்டலுடன் அவளையே வெறித்துப் பார்த்தார்கள்: 'பாவம்... மாடப்புறா. இந்த முகமூடி... அப்படியென்றால்... இதற்காகத்தான். காரணம் என்ன என்று உங்களுடைய கணவர் கூறுகிறார்- நீங்கள்... ஹ்... ஹ்... என்று.'

எல்லா கண்களிலும் கேலியும் கிண்டலும் தெரிந்தன.

பேராசிரியர் பால் அன்று எந்தவொரு மரியாதையும் இல்லாமல் கூறினார்: 'திருமதி. சவுதரி... இப்போது ஒரு நல்ல திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 'அன் அஃபயர் டூ ரிமெம்பர்.' சாயங்காலம் உங்களுக்கு குறிப்பிட்டுக் கூறும்படி வேலை எதுவுமில்லையென்றால், போகலாம். முகவரி சொல்லுங்க. நான் வண்டியைக் கொண்டு வந்து பிக்-அப் பண்ணிக் கொள்கிறேன்.'

பேராசிரியர் சிங், அவள் தனியாக கிடைத்தபோது கூறினார்: 'நீங்கள் பலருடன் போவீர்கள் அல்லவா? எப்போதாவது என் மீதும் தயவு காட்டணும். அந்த அளவிற்கு முடியாதென்றால், ஏதாவது ரெஸ்ட்டாரென்டில் ஒரு கப் காபி... ஹி... ஹி...'

பேராசிரியர் பாலும், பேராசிரியர் சிங்கும் ஒரு பெண்ணாக அல்ல- தங்களுக்கு முன்னால் டேபிளில் பரிமாறப்பட்ட சுவையான ஒரு உணவுப் பொருளாகவே நினைக்கிறார்கள் என்பதாக திருமதி. சவுதரிக்குத் தோன்றியது.

அவளுக்கு அனைத்தும் புரிந்தன. கிண்டல் நிறைந்த, மலர்ச்சியுடன் காணப்படும் அந்த கண்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும்.

ஆனால், அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். தன்னுடைய வயிற்றில் யாரோ ஒரு மத்துவை வைத்து கடைவதைப் போல அவளுக்குத் தோன்றியது. தன்னுடைய சரீரத்திலிருக்கும் அனைத்து உரோமங்களும் பற்றி எரியக் கூடிய நெருப்புப் பொறிகளாக ஆகி விட்டிருக்கின்றன என்பதாக அவள் நினைத்தாள்.

மற்றவர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். காரணம்- அவர்கள் உயர்ந்து நின்று கொண்டிருந்த ஒரு பீடத்திலிருந்து தன்னைப் பிடித்து இழுத்து கீழே போட்டிருக்கிறார்கள். இப்போது அதை கிழித்தெறியவோ, உடைத்து வீசவோ, கால்களைக் கொண்டு மிதித்து நசுக்கவோ... அவர்கள் செய்யலாம்- எந்தவொரு சிரமமும் இல்லாமல்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.