Logo

டில்லி 1981

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 9003
Delhi 1981

ராஜீந்தர் பாண்டே ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். தெருவிற்கு அப்பால் வரிசையாகக் கடைகள் இருந்தன. கடைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய மைதானம் இருந்தது. தெருவிலிருந்து பார்த்தால் அந்த மைதானம் தெரியாது. அவனுடைய அறை இரண்டாவது மாடியில் சாலையைப் பார்த்தவாறு இருந்தது. அதனால் ஜன்னலுக்கு அருகில் போய் நின்றால் கீழே இருக்கும் தெருவும் வரிசையாக இருக்கும் கடைகளும் அந்தப் பக்கமிருந்த மைதானமும் அவனுக்கு இங்கிருந்து தெளிவாகத் தெரிந்தன.

மைதானத்திற்கு நடுவில் ஒரு ஒற்றையடிப் பாதை போய்க்கொண்டிருந்தது. அந்த வழியே போனால் சிராக் டில்லிக்குப் போகக்கூடிய பிரதான சாலையை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் போய்ச் சேரலாம். மைதானம் எப்போதும் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிப் போயே கிடக்கும். எப்போதாவது சில நேரங்களில் அந்த ஒற்றையடிப் பாதை வழியாக யாராவது வரவோ போகவோ செய்வார்கள். பகல் நேரங்களில் அங்கு பன்றிகள் மேய்ந்து நடந்து திரியும். தெற்குப் பக்கம் இடிந்து தகர்ந்த நிலையில் காணப்படும் ஒரு கல்லறை இருக்கும். மொகலாயர்களின் காலத்தைச் சேர்ந்த அதில் நிறைய புறாக்கள் காணப்படும். எப்போது பார்த்தாலும் புறாக்களின் ஓசையும் சிறகடிப்பு சத்தமும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

பாண்டே ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு வெறுமனே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடன் அதே அறையில் வசிக்கும் கிஷோர் லால் ரேடியோவை “ஆன்” பண்ணி பாட்டுகள் கேட்டுக்கொண்டிருந்தான். திரைப்படப் பாடல்கள் கேட்பதில் அவ்வளவாக விருப்பமில்லாத பாண்டே போரடித்துப் போய் என்ன செய்வது என்று தெரியாமல் ஜன்னலுக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தான்.

கீழே தெரு வழியாக ரகுவீரும் நானக்சந்தும் நடந்து வருவதை அவன் பார்த்தான். அவர்கள் அந்தப் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பொறுக்கிகள். இரண்டு பேரும் இளைஞர்கள்தான். ஐ.பி. கல்லூரி மாணவிகளை பேருந்து நிறுத்தத்தில் தொந்தரவு செய்ததற்காக ரகுவீர் இரண்டு நாட்கள் லாக்-அப்பில் கிடக்க வேண்டி நேர்ந்தது. நானக்சந்த் ஐந்து முறை சிறைக்குப் போய்விட்டு வந்திருக்கிறான். கடைசி முறையாக அவன் ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து நகையைப் பறித்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றான்.

ரகுவீரும் நானக்சந்தும் அமீர்சிங்கின் சலவைக் கடைக்குப் பின்னாலிருக்கும் வழியாக மைதானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதை பாண்டே பார்த்தான். அவர்கள் புகைபிடித்தவாறு அங்கிருந்த ஒரு குத்துக்கல்லின்மீது போய் உட்கார்ந்தார்கள்.

தூரத்தில் மைதானத்தின் மறுபக்கத்தில் ஒரு மஞ்சள் வண்ணம் படிப்படியாக தெளிவாகத் தெரிவதை பாண்டே கவனித்தான். அதனுடன் ஒரு நீண்ட நிழலும் தெரிந்தது. சில நிமிடங்கள் கடந்த பிறகு அங்கு வந்து கொண்டிருந்தது, மஞ்சள் நிற புடவை அணிந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் என்பதை அவன் புரிந்து கொண்டான். இன்னும் சில நிமிடங்கள் கடந்து பிறகு, அந்த ஆணின் கையில் ஒரு குழந்தை இருப்பதையும் அவன் தெரிந்துகொண்டான்.

குத்துக்கல்லில் உட்கார்ந்திருந்த ரகுவீர் முகத்தைத் திருப்பி அந்தப்  பெண்ணையும் ஆணையும் பார்த்தான். பிறகு அவன் நானக்சந்திடம் என்னவோ சொன்னான். அவனும் முகத்தைத் திருப்பி அந்தப் பெண்ணையும் ஆணையும் பார்த்தான். அவர்கள் மீண்டும் தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் எழுந்து மைதானத்தின் வழியாக நடக்க ஆரம்பித்தார்கள்.

“டேய் கிஷோர், பொழுதுபோக ஏதாவது பார்க்கணும்னா வா.”

ராஜீந்தர் பாண்டே கிஷோர் லாலை ஜன்னலுக்கு அருகில் வரும்படி அழைத்தான். கிஷோர் லால் உதட்டில் தன் விரல்களை வைத்துக்கொண்டு “பேசாதே” என்று சைகை காட்டினான். ரேடியோவில் அமிதாப் பச்சன் பாடிய “லாவரிஸ்”ஸின் பாட்டு வந்து கொண்டிருந்தது.

ஒருவர் தோளில் இன்னொருவர் கை போட்டவாறு, அலட்சியமாக ஒரு சிகரெட்டை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று புகைத்துக்கொண்டு, நானக்சந்தும் ரகுவீரும் மைதானத்தின் மத்தியில் நடந்து கொண்டிருந்தார்கள். இப்போது மஞ்சள் நிறம் மேலும் தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணும் ஆணும் கிட்டத்தட்ட மைதானத்தின் நடுப்பகுதியை அடைந்திருந்தார்கள். ஜன்னலுக்கு அருகில் நின்றிருந்த பாண்டேக்கு அவளுடைய முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. எனினும், அவள் ஒரு அழகான பெண் என்பதை மட்டும் அவனால் நினைக்க முடிந்தது. அவளுடன் சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்த இளைஞன் உயரமாக, மெலிந்து காணப்பட்டான். அது மனைவியும் கணவனும் குழந்தையும் கொண்ட ஒரு அழகான குடும்பம் என்பது தெரிந்தது.

வெயில் பலமாக அடித்துக் கொண்டிருந்தது காரணமாக இருக்க வேண்டும். அந்த இளம்பெண் தன் புடவைத் தலைப்பால் தலையை மூடினாள். அவர்கள் இப்போது மைதானத்தில் நடுப்பகுதியை கடந்திருந்தார்கள்.

நானக்சந்த், ரகுவீர் இருவரும் மெதுவாக நடந்தார்கள். மைதானத்தின் எந்த இடத்திலும், கண்ணுக்குத் தெரியும் இடம் எதிலும் யாரையும் காணோம். இடிந்து போயிருக்கும் கல்லறையில் இருக்கும் புறாக்கள்கூட எந்தவித ஓசையும் உண்டாக்காமல் அமைதியாக இருந்தன.

“டேய் கிஷோர், உன் ரேடியோவை நிறுத்து. எழுந்து வாப்பா.”

பாண்டே மீண்டுமொருமுறை கிஷோர் லாலை ஜன்னலுக்கு அருகில் வரும்படி அழைத்தான்.

நானக்சந்தும் ரகுவீரும் அந்த சிறு குடும்பத்திற்கு அருகில் வந்தார்கள்.

“டேய், சீக்கிரமா எழுந்து வர்றியா இல்லியா?”

பாண்டே மைதானத்தின் மையப் பகுதியை கண்களை விரித்துக்கொண்டு பார்த்தான். ரேடியோவை நிறுத்தாமலே, கிஷோர் லால் எழுந்து வந்தான்.

நானக்சந்தும் ரகுவீரும் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள். நானக்சந்த் தன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு வாயிலிருந்த சிகரெட்டை எடுக்காமலே, அந்த இளம்பெண்ணைப் பார்த்து லேசாக சிரித்தான். அதைப் பார்த்து இளைஞனின் முகம் சிவந்தது.

“தள்ளி நில்லுங்க, பொறுக்கிப் பசங்களா.” அவன் சொன்னான்: “ராஸ்கல்ஸ்.”

நானக்சந்தும் ரகுவீரும் அவன் சொன்னதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அந்த இளம்பெண் மஞ்சள் புடவையை தலையில் இழுத்துவிட்டவாறு ஒடுங்கிப்போய் நின்றிருந்தாள். அவளுடைய இரு கன்னங்களும் சிவந்து போய் கலவரமடைந்து காணப்பட்டன.

“நானக்சந்தும் ரகுவீரும் என்ன செய்யப் போறாங்க?” கிஷோர் லால் பாண்டேயிடம் கேட்டான்.

“லெட்டஸ் வெய்ட் அன்ட் ஸீ. ஒரு சிகரெட் கொடு.”

கிஷோர் லால் ஒரு ரெட் அன்ட் வைட் பாக்கெட்டைத் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து பாண்டேவிடம் நீட்டினான். அவர்கள் இருவரும் ஆளுக்கொரு சிகரெட்டைப் புகைத்தார்கள். அதிகரித்த ஆர்வத்துடன் அவர்கள் மைதானத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அங்கு வெயில் காய்ந்து கொண்டிருந்தது.

“அவங்க பகல் காட்சி படம் பார்க்க போறாங்கபோல இருக்கு.”

பாண்டே சொன்னான். இல்லாவிட்டால் இந்த நேரத்தில், அதுவும் இந்த காய்கிற வெயிலில் அவர்கள் வேறெங்கு போகப் போகிறார்கள்?


“ஏய் மஞ்சள் கிளி, உன் முகத்தைக் கொஞ்சம் பார்க்கட்டுமா?”

நானக்சந்த் அந்த இளம் பெண்ணின் முகத்திலிருந்து புடவையைப் பிடித்து இழுத்தான். சதைப் பிடிப்பான கன்னங் களையும் விரிந்த கண்களையும் கொண்ட மிகவும் அழகான ஒரு முகம் அங்கு தெரிந்தது. தலைமுடிக்கு நடுவில் இருந்த நடுவகிடில் அவள் குங்குமம் பூசியிருந்தாள். நெற்றியில் பொட்டு இருந்தது.

நானக்சந்த் கையில் குழந்தையுடன் நின்றிருந்த இளைஞன் பக்கம் திரும்பி அவனிடம் சொன்னான்:

“சகோதரா, நீ பெரிய அதிர்ஷ்டசாலிதான். ஹேமாமாலினியைப் போல ஒரு மனைவி உனக்கு கிடைச்சிருக்காளே!”

இளைஞனுக்கு பொறுமை குறைந்துகொண்டே வந்தது. அவன் உள்ளுக்குள் கொதித்தான். கையில் குழந்தை இருக்கிறது. உடன் மனைவி இருக்கிறாள். இல்லாவிட்டால்...

அவன் கோபத்தை உள்ளேயே அடக்கிக்கொண்டு வேண்டுகிற குரலில் சொன்னான்:

“நண்பர்களே, உங்களுக்கு என்ன வேணும்? இந்த மாதிரி நாகரிகம்  இல்லாம நடக்குறது நல்லது இல்ல. நீங்க படிச்ச இளைஞர்கள்தானே? ப்ளீஸ்... நாங்க போகணும்.”

அவன் குழந்தையை மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டு, தன் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களைக் கடந்து போக முற்பட்டான்.

“எங்களைக் கடந்து போயிற முடியுமா?”

ரகுவீர் இளைஞனின் தோளில் தன் கையை வைத்தான்.

“எங்க அனுமதி இல்லாம நீ இங்கே இருந்து அசைய முடியாது. புரியுதா?”

அந்த இளைஞன் அந்தக் கணத்திலேயே தன் கையை வீசி ரகுவீரின் முகத்தில் ஒரு குத்துவிட்டான். அப்போது அவனுடைய கையிலிருந்த குழந்தை உரத்த குரலில் அழத் தொடங்கியது.

“கையால குத்துற அளவுக்கு வந்துட்டியா?”

நானக்சந்த் தன் பேண்ட்டிற்குள்ளிருந்து ஒரு கத்தியை வெளியே எடுத்தான். அந்த இளம் பெண்ணின் கழுத்துப்பகுதி ஒரு புறாவின் கழுத்தைப்போல துடித்துக்கொண்டிருந்தது. அவர்களுடன் தகராறு பண்ண வேண்டாம் என்று அவள் தன் கண்களால் கணவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அந்த இளைஞன் குழந்தையைத் தன் மனைவியின் கைகளில் கொடுத்துவிட்டு எதற்கும் தயாராக நின்றான்.

“என்னை குத்தவா செஞ்சே?”

ரகுவீர் குத்து விழுந்த தன் கன்னத்தைத் தடவியவாறு அவனுக்கு நேராகத் திரும்பி அவனுடைய சட்டையை இறுகப் பிடித்தான். அழுது கொண்டிருந்த குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அந்த இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். பயத்தால் தலை முதல் கால்வரை அவளுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ஒன் மோர் சிகரெட்...”

பாண்டே மைதானத்திலிருந்து தன் கண்களை எடுக்காமல் கிஷோரை நோக்கி கையை நீட்டினான். அவன் இன்னொரு சிகரெட்டையும் பற்ற வைத்துப் புகைவிட்டான். இதற்கிடையில் அவன் சொன்னான்:

“உண்மையிலேயே ரொம்பவும் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு.”

இளைஞனும் நானக்சந்தும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு நின்றிருக்க, ரகுவீர் சற்று தூரம் வரை நடந்து சென்று ஒரு பெரிய கருங்கல்லை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தான். அந்தக் கல்லை அந்த இளைஞனின் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்தவாறு அவன் அங்கே நின்றான். அதைப் பார்த்த மஞ்சள்கிளி தளர்ந்து போய்விட்டாள்.

மைதானத்தின் எதிர்பக்கத்தில் ஒரு வெள்ளி உருவம் தெரிந்தது. மிடுக்கு நிறைந்த, நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதன் அவன். அவன் கையில் ஒரு ப்ரீஃப்கேஸ் இருந்தது. அவன் மைதானத்தின் மையத்தைப் பார்த்து சந்தேகத்துடன் நின்றான். பிறகு ப்ரீஃப்கேஸை இறுகப் பற்றிக் கொண்டு தன் நடையை அவன் தொடர்ந்தான்.

“யாருடா அந்த ஆளு?”

பாண்டே சொன்னான்: “வர்ற அந்தப் புது ஆளு சுவராசியத்தைக் கெடுக்குறதுக்குன்னே வர்றான்.” அவன் எல்லா விஷயங்களையும் குழப்பப் போகிறான் என்று நினைத்தான் பாண்டே.

இளைஞனும் நானக்சந்தும் ஒருவரையொருவர் கன்னா பின்னாவென்று பேசியவாறு ஒருவரை மற்றவர் தள்ளிக்கொண்டும், அடித்துக் கொண்டு இருந்தனர். ரகுவீரின் கையில் இப்போதும் அந்தக் கருங்கல் இருந்தது. அவ்வப்போது அவன் அதை அந்த இளைஞனின் தலைக்கு மேலே உயர்த்திக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அந்த இளம் பெண்ணுக்கு உயிரே போவதைப் போலிருக்கும்.

மைதானத்தின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்த மனிதனைப் பார்த்தபோது அவளுக்கு மூச்சு சரியாக வந்ததைப் போலிருந்தது.

“கொஞ்சம் ஓடி வாங்க. இவங்க என் மகளோட அப்பாவைக் கொல்றாங்க.”

அவள் உரத்த குரலில் அழைத்துச் சொன்னாள். அந்த நாகரீக மனிதனின் கால்களுக்கு வேகம் அதிகரித்தது. அவன் தன்னுடைய பருமனான உடலை ஆட்டியவாறு வேகமாக அந்த இளம் பெண்ணை நோக்கி வந்தான். அவன் கிட்டத்தட்ட நூறு அடிகள் நெருங்கியிருப்பான். அப்போது ரகுவீர் அவனுக்கு நேராகத் திரும்பினான்.

“இங்கேயிருந்து போறியா இல்லியா?”

ரகுவீர் தன் கையிலிருந்த கருங்கல்லை அவனுக்கு நேராகத் தூக்கிக் காட்டினான். அவ்வளவுதான்- அந்த நாகரீக மனிதனின் கால்கள் செயல்படாமல் அப்படியே நின்றுவிட்டன. நானக்சந்தின் கையிலிருந்த நீளமான கத்தியும் அவனுடைய கண்களில் பட்டது.

“பாகோ, ஓடு...”

சிறிது தயங்கிய அவன் அந்த இளம்பெண்ணின் ஓலத்தைக் காதில் போட்டுக் கொள்ளாமல் திரும்பி நடந்தான்.

“ஓடு...”

அந்தப் படித்த மனிதன் தன்னுடைய பருமனான உடம்பு குலுங்கும் வண்ணம் கையில் ப்ரீஃப்கேஸுடன் ஓடிக் கொண்டிருந்தான்.

“சபாஷ்!”

ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பாண்டேயும் கிஷோரும் தலையிலடித்துக் கொண்டு சிரித்தார்கள்.

அப்போது ரகுவீர் தன் கையிலிருந்த கருங்கல்லைத் தூக்கி அந்த இளைஞனின்முன் தலையில் ஒரு போடு போட்டான். அடுத்த நிமிடம் அவன் நின்றிருந்த இடத்திலேயே நிலை குலைந்து தள்ளாடினான். நானக்சந்த் தன் காலைத் தூக்கி அந்த இளைஞனின் வயிற்றில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான். அவ்வளவுதான்- அவன் ஒரு வில்லைப்போல முன்னோக்கி வளைந்து கீழே விழுந்தான்.

“இந்த நானக்சந்தும் ரகுவீரும் உண்மையிலேயே பெரிய ஆளுங்கதான். ரியலி க்ரேட்...” பாண்டே சொன்னான்.

“வெரி வெரி க்ரேட்.”

தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கிஷோர் லாலும் சொன்னான்.

அவர்கள் இருவரின் கண்களும் மைதானத்தையே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தன.

“எழுந்திரு, சகோதரி.”

தன் கணவனுக்கு அருகில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த இளம் பெண்ணின் கையை நானக்சந்த் இறுகப் பற்றினான்.

“எங்ககூட வா அந்த கல்லறைக்கு.” அவன் இடிந்து விழுந்து கிடந்த கல்லறைக்கு நேராக விரலைக் காட்டினான்.

“என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க...”

அவள் கண்ணீர் வழிந்த கண்களுடன் அவர்களைப் பார்த்து கைகளைக் குவித்து கெஞ்சினான்.


நானக்சந்த் அவளைப் பலமாகப் பிடித்து தூக்கி முன்னோக்கித் தள்ளினான். கைக்குழந்தை தரையில் கிடந்து உரத்த குரலில் அழுதது. ரகுவீர் உடனே தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு பெரிய துவாலையை எடுத்து குழந்தையின் வாய்க்குள் திணித்தான். அடுத்த நிமிடம் குழந்தையின் கண்கள் வெளியே பிதுங்கியது. அதன் அழுகைக் குரல் நிரந்தரமாக நின்றது.

அவள் அவர்களிடமிருந்து விடுபட்டு மைதானத்தின் வழியாக ஓட ஆரம்பித்தாள்.

“பெஹன் சூத்... அவளைப் பிடி...”

நானக்சந்த் கோபித்தான். ரகுவீர் பின்னால் ஓடிச்சென்று அவளைப் பிடித்தான். இருவரும் சேர்ந்து அவளை கல்லறை இருக்குமிடத்திற்கு இழுத்துக்கொண்டு போனார்கள். கல்லறையில் இடிந்து கிடந்த சுவர்களுக்கு மேலே திகைப்படைந்து போய் புறாக்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தன.

“அதே பார், அவங்க அவளைக் கற்பழிக்க கொண்டு போறாங்க.” கிஷோர் லால் சொன்னான். ஒரு ஈஸ்ட்மென் அகன்ற திரை திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல அவர்கள் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ரகுவீரும் நானக்சந்தும் சேர்ந்து அவளைத் தூக்கி கல்லறைக்கு உள்ளே கொண்டு போனார்கள். மஞ்சள் கிளியின் வியர்வையில் நனைந்துபோன மஞ்சள் ப்ளவ்ஸ்ஸை அவர்கள் இழுத்துக் கிழித்தார்கள். அவர்கள் அவளை சிதிலமடைந்து போயிருந்த சுவரோடு சேர்த்து நிறுத்தினார்கள். அவளால் இப்போது அவர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. அவளுடைய தலை ஒரு பக்கம் சாய்ந்தது.

“யாராக இருக்கும் முதல்ல...?” கிஷோர் லால் கேட்டான்.

“நானக்சந்த்தான். வேற யாரு?” பாண்டே சொன்னான்.

ரகுவீர் அவளைச் சுவருடன் சேர்த்துப் பிடித்து நிறுத்தினான்.

நானக்சந்த் தன்னுடைய பேன்ட் பொத்தான்களை அவிழ்த்தான்.

அந்த நிமிடம் ராஜீந்தர் பாண்டேயின் ஒற்றை அறை பெரிய நகரமாக மாறுகிறது. அங்கு வானத்தை முட்டுகிற கட்டடங்கள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. ராஜீந்தர் பாண்டேயும் கிஷோர் லாலும் ஐம்பத்தைந்து லட்சம் மதிக்கக்கூடிய பெரிய மனிதர்களாக மாறுகிறார்கள். பெரிய பேச்சரங்கங்களில் நின்று கொண்டு, கைத்தட்டல்களுக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில், கதரும் காந்தித் தொப்பியும் அணிந்த தலைவர்கள் வாய் மூடாமல் இந்தியில் பேசுகிறார்கள். சிகரெட் புகை பரவியிருக்கும் காஃபி ஹவுஸ்களில் மேஜைகளைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, தோளில் பையைத் தொங்கப் போட்டு தாடியும் முடியும் வளர்ந்திருக்கும் அறிவு ஜீவிகள் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது கல்லறையின் இருட்டுக்குள்ளிருந்து ஒரு சிறிய புறாக்குஞ்சு பறந்து வந்து தன்னுடைய இளம் அலகால் நானக்சந்தின் முன் தலையைக் கொத்துகிறது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.