Logo

எட்டுக்காலி மம்மூஞ்ஞு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 8089
Ettukkali Mammugnnu

ங்கேயாவது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் அது நம்மாலதான் என்று எட்டுக்காலி மம்மூஞ்ஞு அப்போது கூறிக் கொண்டிருக்காத காலம். அன்று அதற்கான தைரியம் எல்லாம் மேலே சொன்ன நபருக் குக் கிடையாது. பிரபல திருடர்களான யானை வாரி ராமன் நாயர், தங்கச் சிலுவை தோமா ஆகியோ ருடன் நெருங்கிய உறவு வைத்திருக் கக் கூடிய ஒரு மனிதன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு. இருந்தாலும் அவர் கள் அவனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. பிக்பாக்கெட் அடிப்பதில் வல்லவனான மண்டன் முத்தபா, மூன்று சீட்டு விளையாடுவதில் கில்லாடியான ஒற்றைக் கண்ணன் போக்கர் ஆகியோர்கூட எட்டுக்காலி மம் மூஞ்ஞை எப்போதுமே பெரிதாக எடுத்துக்கொள்வ தில்லை.

முன்பு உண்மையாகவே ஒரு எட்டுக்கால் பூச்சி யாகத்தான் மம்மூஞ்ஞு இருந்திருப்பான் என்றுதான் பலரும் நினைப்பார்கள். காரணம்- அவனின் தோற்றம். தலை மிகவும் சிறியதாக இருக்கும். குள்ளமான உருவம். மொத்தத் தில் மம்மூஞ்ஞிடம் பளிச்சென்று தெரிவது அவனின் மீசைதான். அது இரண்டு பக்கங்களிலும் ஒரு முழம் அளவிற்கு நீளமாக இருக்கும்படி அவன் வளர்த்து விட்டிருந்தான். தெருக்களில் நடந்து போகும்போது பெண்களின் உடம்பில் எட்டுக்காலி மம்மூஞ்ஞு தன் மீசை படுமாறு செய்வதாக ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு பரவலாகக் கூறப்படுவதுண்டு. எட்டுக்காலி மம்மூஞ்ஞைப் பற்றி உள்ள இன்னொரு தகவல்- அவன் ஆணே அல்ல என்பது. அதே நேரத்தில் பெண்ணும் அல்ல. இரண்டுக்கும் நடுவில் ஆனவன். இந்த ரகசியம் அந்த ஊரில் உள்ள எல்லா பெண்களுக்கும் நன்றாகவே தெரியும். இந்த விஷயம் அவர்களுக்கு எப்படி தெரிய வந்தது என்பதுதான் யாராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு சமாச்சாரம்.

எட்டுக்காலி மம்மூஞ்ஞை, கோட்டு மம்மூஞ்ஞு என்றும் அழைப்பதுண்டு. நான்கோ ஆறோ ஆட்கள் அமர்ந்து சீட்டு விளையாடிக்

கொண்டிருக்கும்பொழுது, மம்மூஞ்ஞு அவ்வப்போது எழுந்து “கோட்டு இருக்கா?” என்று கேட்பான். அதனால் அவனுக்கு இப்படியொரு பட்டப்பெயர் வந்து சேர்ந்தது. மம்மூஞ்ஞை வைத்து ஏதாவது காரியம் சாதித்துக் கொண்டவர்கள் மரியாதையுடன் கோட்டு சாஹிப் என்றும் அவனை அழைப்பார்கள். இருந்தாலும் எல்லாருக்கும் நன்கு தெரிந்த பெயர் எட்டுக்காலி மம்மூஞ்ஞு என்பதுதான். பொதுவாக அவனுக்கு எல்லாரையும் மிகவும் பிடிக்கும். யார் எது சொன்னாலும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் அதைச் செய்யத் தயங்க மாட்டான் மம்மூஞ்ஞு. மண்டன் முத்தபாவின் தேநீர் கடையைப் பெருக்கிச் சுத்தப்படுத்துவது, பாத்திரங்கள் கழுவுவது, விறகு பிளந்து தருவது, அந்த ஊரில் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்களின் காலணிகளுக்குப் பாலிஷ் போட்டு விடுவது, அவர்களின் தொப்பியில் இருக்கும் எண்களை மண்ணால் துடைத்து தங்கம்போல மின்னச் செய்வது, போலீஸ் ஸ்டேஷனில் லாக்-அப் அறையைப் பெருக்கி சுத்தம் பண்ணுவது- இப்படி யாருக்கும் எந்த உதவியையும் செய்யத் தயங்காத மனிதன் மம்மூஞ்ஞு. இருந்தாலும் அவன்மேல் யாருக்குமே விருப்பம் கிடையாது. அதோடு நின்றால் பரவாயில்லை. அவனைப் பற்றிப் பேசுகிறபோது கிண்டலாக “ஓ... எட்டுக்காலி மம்மூஞ்ஞா?” என்பார்கள். இருந்தாலும், எட்டுக்காலி மம்முஞ்ஞு எல்லாரையும் விரும்பினான்.

இப்படி நாட்கள் நீங்கிக் கொண்டிருக்க, ஊரில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது.

ஒருநாள் யானைவாரி ராமன் நாயர் (மூன்று சீட்டுக்காரனின் மகள், தங்கச் சிலுவை, ஊருக்கு முக்கிய மனிதன் ஆகிய வரலாறு களைப் படிக்கவும்) மண்டன் முத்தபாவின் தேநீர் கடைக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்து அவரை யாரோ “டேய் யானைவாரி” என்று அழைத்தது அவர் காதில் விழுந்தது. ஸ்ரீஜித் யானைவாரி ராமன் நாயர் பின்னால் திரும்பிப் பார்த்தபோது, அங்கே நம் எட்டுக்காலி மம்மூஞ்ஞு நின்று கொண்டிருந்தான். அவரைப் பார்த்ததும் யானைவாரி ராமன் நாயருக்கு பயங்கரமான கோபம் வந்தது என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே! யானைவாரி ராமன் நாயரைப் பார்த்து, “டேய் யானைவாரி” என்று அழைக்கக்கூடிய உரிமை அந்த ஊரில் இதுவரை யாருக்குமே இல்லை. நமது பிரதம மந்திரியும் ஜனாதிபதியும் அப்படி அவரை அழைத்தால்கூட ராமன் நாயரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. காரணம் அவர்கள் யாரும் யானைவாரி ராமன் நாயருக்கு இணையானவர்கள் இல்லை. மேற்படி நபரை, “டேய் யானைவாரி” என்று கீழே கூறப்படுபவர்கள் மட்டுமே அழைக்கலாம்.


ஸ்ரீஜித் தங்கச் சிலுவை தோமா, ஜனாப் மண்டன் முத்தபா, ஜனாப் ஒற்றைக் கண்ணன் போக்கர், மரியாதைக்குரிய இரண்டு போலீஸ்காரர்கள், இந்த வரலாறை எழுதிக் கொண்டிருக்கும் நான்- நாங்கள் இல்லாமல் வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் இப்போது அண்டர்கிரவுண்டில் இருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன், அதை ராமன் நாயரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. எட்டுக்காலி மம்மூஞ்ஞை கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்தால் என்ன என்ற அளவுக்கு அவர் மனதில் ஆத்திரம் உண்டானது. ஆனால், அப்படியொரு பயங்கரமான காரியம் நடைபெறுவதற்கு முன்பு எட்டுக்காலி மம்மூஞ்ஞு யானைவாரி ராமன் நாயரின் அருகில் போய் கேட்டான்: “உங்களுக்கு விஷயம் தெரியுமா?”

யானைவாரி ராமன் நாயர் எட்டுக்காலி மம்மூஞ்ஞை ஏதாவது செய்வதற்கு முன்பு, அவன் அந்த பயங்கர ரகசியத்தை அவரிடம் சொன்னான். யானைவாரி ராமன் நாயரால் அவன் சொன்ன விஷயத்தை நம்பவே முடியவில்லை. வியப்பு மேலோங்க அவனைப் பார்த்து யானைவாரி கேட்டார். “உண்மையாவா சொல்ற?”

எட்டுக்காலி மம்மூஞ்ஞு மீசை இரண்டையும் தடவியவாறு பந்தாவான குரலில் சொன்னான்: “ஆமா...”

அப்படியே அவர்கள் மண்டன் முத்தபாவின் தேநீர் கடையை நோக்கி நடந்தார்கள். வழியில் நம் தங்கச் சிலுவை தோமாவைப் பார்த்தார்கள். அவரைப் பார்த்தவுடன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு கேட்டான்: “டேய் தங்கச் சிலுவை! உனக்கு விஷயம் தெரியுமா?”

அடுத்த நிமிடம் எட்டுக்காலி மம்மூஞ்ஞின் பிடரியைப் பிடித்து ஓங்கி ஒரு அடி கொடுத்தால் என்ன என்று நினைத்தார் தங்கச் சிலுவை தோமா. காரணம் தங்கச் சிலுவை தோமாவை, “டேய் தங்கச் சிலுவை” என்று பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ, இல்லா விட்டால் ராஜ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் முக்கிய பிரமுகரோ அழைத்தால்கூட அவருக்குப் பிடிக்காது. அவர் அப்படி நினைப்பதற்குக் காரணம்- அவர்கள் யாரும் அவரைப் பொறுத்த வரை அவருக்கு இணையானவர்கள் இல்லை. யானைவாரி ராமன் நாயரை யாரெல்லாம் “டேய் யானைவாரி” என்று அழைக்கலாமோ, அவர்களெல்லாம் தங்கச் சிலுவை தோமாவையும் “டேய் தங்கச் சிலுவை!” என்று அழைக்கலாம். அந்தப் பட்டியலில் நம்முடைய எட்டுக்காலி மம்மூஞ்ஞின் பெயரே இல்லையே! தங்கச் சிலுவை தோமா எட்டுக்காலி மம்மூஞ்ஞைப் பிடித்து அடிப்பதற்கு முன்னால் யானை வாரி ராமன் நாயர் தங்கச் சிலுவை தோமாவிடம் அந்த ரகசியத்தைக் காதில் சொன்னார். அதைக் கேட்டதும் தங்கச் சிலுவை தோமா ஆச்சரியம் மேலோங்க கேட்டார்: “டேய் எட்டுக்காலி, இது உண்மையா?”

அப்போது எட்டுக்காலி மம்மூஞ்ஞு தன் மீசையைத் தடவியவாறு சொன்னான்: “இது என்ன? இதையும் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் செய்றதுக்காகப் பிறந்தவன்தான் நான்.”

அவர்கள் பேசியவாறு மண்டன் முத்தபாவின் தேநீர் கடையை அடைந்தார்கள். அப்போது அங்கே மண்டன் முத்தபா, ஒற்றைக் கண்ணன் போக்கர், அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு போலீஸ் காரர்கள் ஆகியோர் இருந்தார்கள். அவர்களிடமும் அந்த ரகசியச் செய்தியை மம்மூஞ்ஞு மெதுவான குரலில் சொன்னான். எல்லாருமே அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டார்கள். எல்லாரும் அவனைப் பார்த்துக் கேட்டார்கள். “இது உண்மையா? உண்மையா?”

எட்டுக்காலி மம்மூஞ்ஞு அதற்கு பதிலாக எதுவும் கூறவில்லை. மிகவும் மிடுக்காக மீசையைத் தடவி விட்டுக்கொண்டே சிரிக்க மட்டும் செய்தான். உடனே மண்டன் முத்தபா சொன்னான்: “என் சார்பா எட்டுக்காலி மம்மூஞ்ஞுக்கு ஒரு சாயா தர்றேன்.” அதோடு நிற்காமல் ஒற்றைக் கண்ணன் போக்கர் சார்பாக இரண்டு துண்டு புட்டு, யானைவாரி ராமன் நாயர் சார்பாக அவித்த வேர்க்கடலை, தங்கச் சிலுவை தோமா சார்பாக இரண்டு பழங்கள், இரண்டு போலீஸ்காரர்கள் சார்பாக ஒரு வடையும் ஒரு சுசியமும் என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்து, தேநீர் அருந்தி, பீடியை உதட்டில் வைத்துப் புகைத்தவாறு அந்த ஊரின் முக்கிய நபர்களில் ஒருவனாக ஆனான் எட்டுக்காலி மம்மூஞ்ஞு.

அடுத்த சில நிமிடங்களிலேயே எட்டுக்காலி மம்மூஞ்ஞு செய்த வீரத்தனமான செயலைப் பற்றி ஊரில் இருந்த எல்லாருமே அறிந்து கொண்டார்கள். மிகவும் தைரியமான ஆண் என்று எல்லாருமே எட்டுக்காலி மம்மூஞ்ஞைப் பற்றி நினைக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பெண்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களின் பேச்சு எட்டுக்காலி மம்மூஞ்ஞைப் பற்றியும், அவனின் வீரபராக்கிரம செயலைப் பற்றியுமாகத்தான் இருக்கும். “என்ன இருந்தாலும் எட்டுக்காலி மம்மூஞ்ஞு பெரிய ஆளுதான்!” இதுதான் பெண்கள் சொன்ன கருத்து.

இப்போது நான் சொல்லப்போவது எட்டுக்காலி மம்மூஞ்ஞு எப்படி வீரப்பிரதாபன் ஆனான் என்ற விஷயத்தைத்தான். அது ஒரு ரகசியமான சமாச்சாரம் என்பதை எல்லாரும் இதுவரை புரிந்துகொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அதனால் இந்தச் சரித்திரத்தின் வேகத்தைச் சற்று குறைக்கப் போகிறேன். இப்போது நாம் இந்த சரித்திரத்தில் இருந்து இரண்டரை மைல் தூரத்திற்குப் போக வேண்டி இருக்கிறது. மலையோரத்திற்கு நாம் போகிறோம். குண்டுகளையும் குழிகளையும் தாண்டி அங்கு நாம் போனால் நம் கண்களில் வைக்கோல் வேய்ந்த ஒரு சிறிய வீடு படுகிறது. அந்த வீட்டில்தான் ஊரிலேயே பெரிய கஞ்சனான முட்டைக் கண்ணன் அந்த்ரு வசிக்கிறான். அவனுக்கு சந்தையில் ஒரு கடை இருக்கிறது. அங்கு சர்க்கரை, கருப்பட்டி ஆகியவற்றை அவன் விற்பனை செய்கிறான். முட்டைக் கண்ணன் அந்த்ரு அந்த ஊரில் இருக்கும் பணக்காரர்களில் ஒருவன். அவன் யாருக்கும் உதவி செய்வதில்லை. கடன் கொடுப்பதில்லை. வட்டிக்குப் பணம் கேட்டால் கொடுப்பதில்லை. தன் பணத்தை எல்லாம் இந்த மனிதன் எங்கு காப்பாற்றி வைத்திருக்கிறான் என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. யானைவாரி ராமன் நாயரும் தங்கச் சிலுவை தோமாவும் இரண்டு முறை இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தும் விட்டார்கள். அந்த வீட்டில் பெட்டி என்று எதுவும் இல்லை. பணத்தை பூமிக்கு அடியில் ஒருவேளை அந்த ஆள் குழி தோண்டிப் புதைத்து வைத்திருப்பானோ என்று அந்த ஊர் மக்கள் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எங்கே அவன் பணத்தைப் புதைத்து வைத்திருப்பான் என்பதைத்தான் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பணத்தின் விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நமக்கு பணம் ஒரு பிரச்சினையா என்ன? முட்டைக் கண்ணன் அந்த்ருவின் தாய் இறந்து போனபிறகு, வீட்டில் சோறும் குழம்பும் கூட்டும் வைப்பதற்கும், வீட்டைச் சுத்தம் பண்ணி பெருக்குவதற்கும் யாரும் இல்லை என்ற நிலை உண்டானது. இந்த கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக முட்டைக் கண்ணன் ஒரு இளமையான வேலைக்காரியைக் கொண்டு வந்தான். அவளின் பெயர் கதிஜும்மா. அவளுக்கு பல வசதிகளும் தந்து மாதமொன்றுக்கு இரண்டணா சம்பளம். (இரண்டணா என்றால் பன்னிரண்டு பைசா. அன்று அந்த சம்பளம் போதும் என்ற நிலை இருந்தது. தொழிலாளிகளின் ஒற்றுமை எல்லாம் இல்லாமல் இருந்து காலம் அது). இரண்டு மாதங்கள் கடந்த பிறகு முட்டைக் கண்ணன் அந்த்ருவின் மனதில் ஒருவகை எரிச்சல் உண்டானது. அது அந்த வேலைக்காரிக்குக் கொடுக்கும் சம்பளம் பற்றியது. அவன் அவளுக்குத் தரும் சம்பளத்தைக் கணக்கு போட்டுப் பார்த்தான். ஒரு வருடத்திற்கு ஒன்றரை ரூபாய் வருகிறது. அப்படியென்றால் பத்து வருடத்திற்கு பதினைந்து ரூபாய். நூறு வருடத்திற்கு நூற்று ஐம்பது ரூபாய். இந்தக் கணக்கைப் பார்த்ததும் முட்டைக் கண்ணன் அந்த்ரு நடுங்கிவிட்டான். அடுத்த நிமிடமே அவன் ஒரு முஸ்லிம் பெரியவரை வரவழைத்து “நிக்காஹ்” நடத்தி அந்த வேலைக்காரியைத் தன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொண்டான். அவர்களுக்கிடையே திருமணம் இனிதாக முடிந்தது. அவள் மனைவியாக மாறிவிட்டதால் அவளுக்குச் சம்பளம் தரவேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டது. தேவைப்படுகிற போது, அவளின் தலைமுடியைப் பிடித்து, அவளுக்கு இரண்டு அடிகள் கொடுக்கலாம். யாராவது வந்து இது பற்றிக் கேட்டால், “போடா கழுதை... நான் என் பொண்டாட்டியை அடிக்கிறேன். உனக்கு என்னடா” என்று தைரியமாகக் கேட்கலாம். அதோடு அந்த விஷயம் நின்று போய்விட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கதிஜும்மா பிள்ளை பெறத் தொடங்கினாள். இரண்டு மூன்று முறை தொடர்ந்து குழந்தைகள் பெற்ற அவளுக்கு, பிரசவ காலத்தின்போது சோறு சமைக்கவோ, குழம்பு, கூட்டு ஆகியவை வைக்கவோ முடியவில்லை என்ற நிலை உண்டானது. இதை முட்டைக் கண்ணன் அந்த்ருவும் புரிந்து கொள்ளாமல் இல்லை. இந்தத் தர்மசங்கடமான நிலையில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பது பற்றி அவன் சிந்திக்க ஆரம்பித்தான். அதற்கும் ஒரு வழிபிறக்காமல் இல்லை. கதிஜும்மாவின் உறவுக்காரப் பெண்ணான-  இன்னும் திருமணம் ஆகியிராத ஒரு பத்தொன்பது வயதுடைய தாச்சி என்ற பெண்ணை வேலைக்காரியாகக் கொண்டு வந்தான் முட்டைக் கண்ணன் அந்த்ரு. அவளுக்கு மாதச் சம்பளம் ஒன்றரையணா. தாச்சி வந்ததென்னவோ வேலைக்காரியாகத்தான். ஆனால், இரண்டு மாதங்கள் கழித்தபிறகு பார்த்தால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள். அதாவது அவள் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தாள். இது எப்படி என்று யாருக்குமே புரியவில்லை. இந்தக் கர்ப்பம் சம்பந்தமாகத்தான் எட்டுக்காலி மம்மூஞ்ஞு கண்களில் படுபவர்களிடமெல்லாம் “அது நான்தான்...” என்று சொல்லித் திரிந்தது. இப்போது புரிகிறதா?


ஊர் முழுக்க எட்டுக்காலி மம்மூஞ்ஞு இப்படிக் கூறித் திரிந்தாலும், தாச்சியைப் பொறுத்தவரை இதை ஒப்புக் கொள்ளவே இல்லை. அவள் “இந்தக் கர்ப்பத்திற்குக் காரணம் யாருமே இல்லை” என்றாள். இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலை வருகிறபோது பெண்களிடமிருந்து எப்படி உண்மையை வரவழைப்பது என்பதற்கான ரகசிய வழிமுறைகளை உலகத்தில் பல மகான்கள் ஏற்கெனவே கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் “பெண்களை உண்மை பேச வைக்க வழிகள்” என்றொரு புத்தகமே இருக்கிறது. அதில் 33, 33, 333 வழிகள் சொல்லப் பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வழிகளில் முட்டைக் கண்ணன் அந்த்ரு தேர்ந்தெடுத்தது மூன்றே மூன்று வழிகளைத்தான்.

1. மிளகைப் பொடிப் பொடியாக்கி பெண்ணின் கண்ணில் தூவுதல்.

2. கத்தியால் பெண்ணின் உடலில் கீறி சின்னச் சின்ன காயங்களை உண்டாக்கி அதன்மேல் மிளகாயையும் உப்பையும் அரைத்துத் தேய்ப்பது.

3. தீக்கனலை எடுத்து பெண்ணின் உள்ளங்கையில் வைப்பது.

இந்த மூன்று வழிகளில் முட்டைக் கண்ணன் அந்த்ருவுக்கு சரியான வழியாகப் பட்டது மூன்றாவது இருந்ததுதான். காரணம்- அதில் செலவு என்று ஒன்றும் வராது. அதன்படி தாச்சியின் உள்ளங்கையில் முட்டைக் கண்ணன் அந்த்ரு தீக்கனலைக் கொண்டு வந்து வைத்தான். என்ன இருந்தாலும் அவள் பெண்தானே! உண்மையை உடனே கூறிவிட மாட்டாளா? ஆனால் அவள் உண்மையைக் கூறவே இல்லை. அவள் உறுதியான குரலில் சொன்னாள்: “இதுக்கு யாருமே காரணம் இல்ல...”

விஷயம் இப்படிப் போய்க் கொண்டிருந்தபோது, முட்டைக் கண்ணன் அந்த்ருவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. உடலில் வேறு ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று சொன்னாள் முட்டைக் கண்ணன் அந்த்ருவின் மனைவி. இப்படி உடல்நலக் குறைவு பற்றியும், கர்ப்பத்தைப் பற்றிய சிந்தனையிலுமே முட்டைக் கண்ணன் அந்த்ருவின் பல நாட்கள் ஓடி மறைந்தன. அதற்குப் பிறகு அவன் இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லை. காரணம்- அவனின் சர்க்கரை வியாபாரம். பொதுவாக நல்ல லாபம் கிடைக்கக்கூடிய வியாபாரம் அது. இதில் லாபம் கிடைப்பதிலும் ஒரு ரகசியம் இருக்கவே இருக்கிறது. சர்க்கரை வியாபாரம் செய்து பணக்காரனாக வேண்டும் என்று மனதில் ஆசைப்படுபவர்களுக்காக இந்த சரித்திர எழுத்தாளனாகிய நான் அந்த ரகசியம் என்னவென்று இப்போது கூறப் போகிறேன். உடைந்து போனதும், நொறுங்கிப் போனதுமான நல்ல சர்க்கரையை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும். அதைப் பெரிய ஒரு இரும்பு அண்டாவில் போட்டு தண்ணீரை ஊற்றி, பெரிய அடுப்பில் வைத்து நெருப்பை எரியச் செய்ய வேண்டும். பிறகு... அந்த அண்டாவில் கொஞ்சம் தாராளமாகவே தவிட்டையும் புண்ணாக்கையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது நெருப்பின் உதவியால் இளகி களி மாதிரி ஆகிறபோது, அதை சிறிய சிரட்டைகளில் ஊற்ற வேண்டும். அது ஆறியவுடன் அதைச் சிரட்டையில் இருந்து எடுத்து கூடையின் அடியில் வைக்கோலைப் போட்டு, அதற்குமேல் அதைக் கொட்டி அடுக்க வேண்டும். பிறகென்ன? “ஹாய்.. அச்சுவெல்லம்!” பந்தாவாக சொல்லிக்கொண்டு விற்பனையை ஆரம்பிக்க வேண்டியதுதான். இந்த வழிமுறையை மட்டும் ஒருவன் கையாண்டால் மிகவும் குறுகிய காலத்தில் அவன் பணக்காரனாகி விடலாம். இதுபோக, வேறு பல வழிகளையும்கூட என்னால் சொல்லித் தரமுடியும். சரி... நாம் இதுவரை பேசிக் கொண்டிருந்தது தாச்சியின் கர்ப்பம் குறித்த விஷயத்தைப் பற்றி அல்லவா? மாதங்கள் பதினொன்று ஆகியும், அவள் பிரசவமாக வில்லை. இந்த விஷயம் இப்படி இருக்க, பல மாதங்களாக ஒரு வைத்தியன் முட்டைக் கண்ணன் அந்த்ருவுக்கு பதினொன்ற ரையணா தரவேண்டி இருந்தது. “போய்த் தொலையட்டும்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட முட்டைக் கண்ணன் அந்த்ரு, அந்த வைத்தியனை அழைத்துக்கொண்டு வந்து தாச்சியைக் காட்டினான். அவள் தற்போது கர்ப்பமாக இல்லை என்று கூறிய அவன் ஏதோ சில மருந்துகளைக் கொடுத்தான்.

இப்போது நாம் இந்த இடத்தைவிட்டு, எட்டுக்காலி மம்மூஞ்ஞு இருக்குமிடத்திற்குப் போவோம். மீதி கதைகளை எட்டுக்காலி மம்மூஞ்ஞிடம் இருந்துதான் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

ஒருநாள் யானைவாரி ராமன் நாயர் மண்டன் முத்தபாவின் தேநீர் கடைக்குப் போகும்போது, பயங்கர கவலையுடன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு யானைவாரி ராமன் நாயரைப் பார்த்துக் கேட்டான்.

“டேய் யானைவாரி! உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம குழந்தையைக் கொன்னுட்டாங்க...”

யானைவாரி ராமன் நாயர் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார். அவர் என்ன பதில் சொல்வார்? அவர் தன் போக்கில் நடந்தார். வழியில் தங்கச் சிலுவை தோமாவைப் பார்த்தார். வருத்தமான குரலுடன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு சொன்னான்: “டேய்... தங்கச் சிலுவை! விஷயம் தெரியுமா? அவங்க நம்ம செல்ல மகனைக் கொன்னுட்டாங்க.”

தங்கச் சிலுவை தோமாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒன்றுமே பேசாமல் மவுனமாக அவர்கள் மண்டன் முத்தபாவின் தேநீர் கடையை அடைந்தார்கள். தொண்டை அடைக்க, கண்ணீரைச் சிந்தியவாறு எட்டுக்காலி மம்மூஞ்ஞு மண்டன் முத்தபாவிடம் சொன்னான்: “டேய்.... முத்தபா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம அன்பு மகனை அவங்க கொன்னுட்டாங்க...”

மண்டன் முத்தபாவாலும் எந்த பதிலும் கூற முடியவில்லை. இந்த சம்பவத்தை ஒற்றைக் கண்ணன் போக்கர் அறிந்தான். ஊரில் இருந்த இரண்டு போலீஸ்காரர்களும் அறிந்தார்கள். எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்துப் பார்த்தும், அவர்களால் ஒரு முடிவுக்குமே வரமுடியவில்லை. இறுதியில் எட்டுக்காலி மம்மூஞ்ஞு சொன்னான்: “என் அன்பு மகனைக் கொன்னவனோட குடலை உருவி நான் மாலையா போடப் போறேன்!”

அப்போது போலீஸ்காரர்களில் ஒருவன் சொன்னான்: “க்ஷமீர்!”

அவன் அப்படி ஏன் சொன்னான் தெரியுமா? முட்டைக் கண்ணன்  அந்த்ருவின் வாப்பாவின் இரண்டாவது மனைவியின் தங்கையின் கணவனின் தம்பியின் மூத்த மகன் ஒரு ஹெட் கான்ஸ்டபிளாக இருந்தவன். அதனால் முட்டைக் கண்ணன் அந்த்ருவின் குடலை எடுத்து மாலையாகப் போடும் விஷயத்தை போலீஸ்காரர்கள் பலமாக எதிர்த்தார்கள். பாருங்கள்... இங்கு என்ன நடக்கிறது என்று! உத்யோகஸ்த துஷ் பிரபுத்துவமும் முதலாளித் துவ கூட்டணியும்! முட்டைக் கண்ணன் அந்த்ருவை எட்டுக்காலி மம்மூஞ்ஞுவும், அவனுடன் இருக்கும் மனிதர்களும் என்ன செய்துவிட முடியும்? இப்படி கவலைகள் நிரம்பிய நிச்சயமற்ற நாட்கள் படுவேகமாக நீங்கிக் கொண்டிருக்க... ஒரு புதிய செய்தியுடன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு மண்டன் முத்தபாவின் தேநீர் கடைக்கு வந்தான். அப்போது அங்கே யானைவாரி ராமன் நாயரும் தங்கச்சிலுவை தோமாவும் மண்டன் முத்தபாவும் ஒற்றைக் கண்ணன் போக்கரும் இரண்டு போலீஸ்காரர்களும் இருந்தார்கள். அவர்களுடன் சரித்திர எழுத்தாளனான நானும் இருந்தேன். எங்கள் எல்லாரையும் பார்த்து எட்டுக்காலி மம்மூஞ்ஞு கேட்டான்:

“விஷயம் தெரியுமா?”

அடுத்த சில நிமிடங்களுக்கு எட்டுக்காலி மம்மூஞ்ஞினால் எது வுமே பேச முடியவில்லை. அவன் அந்த அளவுக்கு கவலையிலும், கோபத்திலும், வேதனையிலும் ஆழ்ந்து போயிருந்தான். இறுதியில் கண்ணீர் சிந்தியவாறு கவலை தோய்ந்த குரலில் அவன் சொன்னான்:

“அந்த முட்டைக் கண்ணன் அந்த்ரு நம்ம செல்ல மகனைக் கொன்னதோடு நிக்காம, நம்ம பொண்டாட்டி தாச்சியைக் கல்யாணம் வேற பண்ணிக்கிட்டான்...”

சரித்திர மாணவர்களே, என்ன செய்வது?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.