Logo

ராதா - ராதா மட்டும்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4751
Radha - Radha mattum

ராதா - ராதா மட்டும்

எம்.முகுந்தன்

தமிழில் : சுரா

ராதா கல்லூரியை விட்டு, வீட்டை நோக்கி நடக்கும்போது பேருந்து நிறுத்தத்தில் சுரேஷ் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானது. நேற்று சாயங்காலம் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கடற்கரையில், உப்பின் வாசனை நிறைந்த காற்றை சுவாசித்தவாறு, சிப்பிகள் சிதறிக் கிடக்கும் மணல் வழியாக மேல் நோக்கி ஒரு மணி நேரம் நடந்தார்கள்.

இப்போது மீண்டும் சந்திப்போம் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அவள் சாலையைக் கடந்து சென்று சுரேஷை நோக்கி நடந்தாள். அவன் ஒரு சிகரெட்டைப் பிடித்தவாறு தூரத்தில் எங்கோ பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். தன்னை சிறிதும் எதிர்பாராமல் சந்திக்க நேரும்போது, அவன் எந்த அளவிற்கு சந்தோஷப்படுவான் என்பதை நினைத்து அவள் மனதிற்குள் மகிழ்ச்சியடைந்தாள். அவள் நடந்து சென்று அவனுக்கு முன்பு போய் நின்ற பிறகும், அவன் தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டேயிருந்தான். அவன் அவளைப் பார்க்கவே இல்லை. அவள் அவனுக்கு அருகில் போய் நின்றாள். அவர்களுடைய தோள்கள் ஒன்றோடொன்று தொட்டன. அவன் தன் வாயில் நிறைந்து வந்த புகையை வெளியே ஊதி விட்டுக் கொண்டே அவளுடைய முகத்தைப் பார்த்தான். பிறகு சிறிது தள்ளி விலகி நின்று கொண்டு மீண்டும் சிகரெட்டை இழுக்க ஆரம்பித்தான். அவளைப் பார்த்தபோது அவனுடைய முகத்தில் ஆச்சரியமோ சந்தோஷமோ எதுவும் உண்டாகவில்லை.

'சுரேஷ்... '

அவன் முகத்தைத் திருப்பி பார்த்தான்.

'சுரேஷ், நீங்க எங்கே போறீங்க? '

அவன் புரியாததைப் போல அவளுடைய முகத்தையே பார்த்தான். அவள் தன் மார்புடன் சேர்த்து பிடித்துக் கொண்டிருந்த புத்தகங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு மாத இதழை எடுத்தவாறு கூறினாள்: 'இதோ... பாருங்க... 'பிங்க்' இதில் இருக்கு. ' அவள் மாத இதழைத் திறந்து சாமுவேல் பெக்கட்டின் கவிதை பிரசுரமாகியிருந்த பக்கத்தைத் திறந்து, நீட்டி காட்டினாள். அவன் அவளுடைய முகத்தையும் மாத இதழையும் மாறி... மாறி பார்த்தான்.

'சுரேஷ். நீங்க முதலில் படிங்க... பிறகு நான் வாசிக்கிறேன்.'

அவள் மாத இதழை அவனை நோக்கி நீட்டிக் கொண்டு நின்றாள். அவன் எரிந்து முடிந்த சிகரெட்டை தரையில் போட்டு, செருப்பைக் கொண்டு நசுக்கி அணைத்துக் கொண்டே கேட்டான்: 'நீ யாரு?'

அதைக் கேட்டதும், அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். பேருந்து நிறுத்தம் என்பதையும், நான்கு பக்கங்களிலும் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவள் மறந்து விட்டாள். மாத இதழை நீட்டி வைத்துக் கொண்டே அவள் சொன்னாள்:

'இப்போதே இதை கொண்டு போங்க... சனிக் கிழமை வீட்டிற்கு வர்றப்போ, கொண்டு வந்தால் போதும்.'

'சனிக் கிழமையா? யாருடைய வீட்டிற்கு...?'

'சனிக் கிழமை இரவு வீட்டில்தானே உணவு? அதையும் மறந்துட்டீங்களா?'

'நீ சொல்றது எதுவுமே எனக்கு புரியல...'

'தமாஷா பேசுறதை நிறுத்துங்க...'

அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை, எந்தச் சமயத்திலும் அணையாத புன்னகை மறைந்தது. அவன் அவளை நோக்கி திரும்பி, மிடுக்கான குரலில் சொன்னான்:

'நீ என்னிடம் விளையாடுகிறாயா? உன்னை நான் இதற்கு முன்பு பார்த்தது கூட இல்லை.'

சுரேஷ் கூறியது எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. அவனுடைய நடவடிக்கைகள் அவளை குழப்பமடையச் செய்தன.

'நான் விளையாடவில்லை. சுரேஷ், நீங்கதான்...'

அவளுடைய முகம் கனமாக ஆனது.

'உனக்கு ஆள் மாறாட்டம் உண்டாகியிருக்கிறது. நீ நினைத்துக் கொண்டிருக்கும் ஆள் நான் இல்லை.'

'சுரேஷ்... நீங்க சுரேஷ்தானே? எனக்கு பார்த்தால் தெரியாதா?'

'நான் சுரேஷ்தான். ஆனால், உன்னை எனக்கு தெரியாது.'

'சுரேஷ், உங்களுக்கு என்னைத் தெரியாதா? ராதாவைத் தெரியாதா?'

'தெரியாது...'

அவனுடைய குரல் கனமாக இருந்தது. அவன் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து, புகையை ஊதி விட்டான்.

'சுரேஷ், முந்தா நாள்தானே நீங்கள் என்னைத் தேடி கல்லூரிக்கு வந்தீங்க? நேற்றுதானே நாம் சேர்ந்து கடற்கரைக்குப் போனோம்?'

'நான் யாரையும் பார்ப்பதற்கு கல்லூரிக்குப் போகவில்லை. நான் யாருடனும் சேர்ந்து கடற்கரைக்குப் போகவில்லை.'

அவளுடைய முகம் வெளிறிப் போனது.

'தயவு செய்து போ. நீ ஆட்கள் பார்க்குறதைப் பார்க்கலையா?'

அவன் அவளுக்கு அருகிலிருந்து சற்று தூரத்தில் விலகி நின்றான். அப்போதுதான் பேருந்து வந்தது. சுரேஷ் சிகரெட்டைக் கீழே போட்டு விட்டு, பேருந்தில் ஏறி அமர்ந்தான். பேருந்து ஆட்கள் நிறைந்திருந்த சாலையின் வழியாக ஓடி, வளைவில் திரும்பி மறைந்தது. மாத இதழை திரும்பவும் புத்தகங்களுடன் சேர்த்து வைத்தவாறு, குனிந்த தலையுடன் அவள் நடந்தாள். எப்படியாவது வீட்டிற்குப் போய் சேர்ந்தால் போதும் என்று அவளுக்குத் தோன்றியது.

பிரதான சாலையைக் கடந்து, வீட்டிற்கு செம்மண் நிறைந்த பாதையில் இறங்கி அவள் நடந்தாள். பாதையின் வழியாக சிறிது தூரம் தாண்டியதும், அவள் பாஸ்கரனின் தேநீர் கடைக்கு முன்னால் வந்தாள். தேநீர் அருந்திக் கொண்டிருந்த பாஸ்கரன் முகத்தை உயர்த்தி அவளைப் பார்த்தார். தேநீருக்காக காத்திருந்த கண்ணன் மாஸ்டரிடம் பாஸ்கரன் கேட்டார்:

'அங்கே போய்க் கொண்டிருக்கும் இளம் பெண் யாரு?'

மாஸ்டர் கையை விரித்தார்.

பாஸ்கரனின் கடைக்கு அடுத்து இருக்கும் வளைவில் திரும்பினால், அவளுடைய வீடு வந்து விடும். வீட்டின் வாசலில் அலுவலகத்திலிருந்து வந்திருந்த அவளுடைய தந்தை காலை நாளிதழுடன் எப்போதும் போல சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். அவள் முற்றத்தில் கால் வைத்தவுடன், அவளுடைய தந்தை தலையை உயர்த்தி, கண்ணாடியைச் சரி பண்ணி விட்டு பார்த்தார். அவள் குனிந்த தலையுடன் வாசல் பகுதியில் கால் வைத்தாள்.

'யாரு?'

அவளுடைய தந்தை கண்ணாடியைக் கையில் எடுத்தவாறு கேட்டார்.

'தெரியலையே...!'

அதைக் கேட்டதும் அவளுடைய நெஞ்சு அடித்துக் கொண்டது. முன்னால் வைத்த கால் அசையாமல் இருந்தது.

'எங்கேயிருந்து? உட்காரு... மாதவி!'

'அப்பா!'

அவளுடைய குரல் நடுங்கியது.

'அப்பாவா?'

நாற்காலியை விட்டு எழுந்து, அவிழ்ந்த வேட்டியைச் சரி பண்ணியவாறு தந்தை அவளை நோக்கி நடந்து வந்தார்.

'மகளே, நீ யாரு? எங்கேயிருந்து வர்றே?'

அவள் எதுவும் கூற முடியாமல் பதைபதைப்புடன் தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்...

'மாதவி... மாதவி...'


தந்தை வாசற்படியின் அருகில் சென்று நின்றவாறு தலையை உள்ளே நீட்டி, தாயை அழைத்தார். தாய் உள்ளே எங்கேயோ இருந்து கொண்டு அந்த அழைப்பைக் கேட்டாள். ஒன்றிரண்டு நிமிடங்கள் கடந்ததும், குளித்து முடித்து ஆடைகள் மாற்றிக் கொண்டு, நெற்றியில் சந்தனத்துடன் தாய் வந்தாள். தந்தை, தாயின் அருகில் சென்று நின்று கொண்டு குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு சொன்னார்:

'யாரோ ஒரு பொண்ணு... கேட்டால், பேச மாட்டேங்கிறா... என்ன ஆச்சோ, தெரியல...'

'எங்கேயிருந்துன்னு சொல்லலியா?'

'பேச வேண்டாமா? எதுவுமே பேசாமல் இருந்தால், எப்படி தெரிந்து கொள்வது?'

தாய் அவளையே சற்று பார்த்துக் கொண்டே சொன்னாள்:

'நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுன்னு தோணுது. பாவம்!'

'மகளே! இதோ... இங்கே உட்காரு.'

தந்தை நாற்காலியைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னார். அவள் அமராமல் ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள்.

தாய் அவளின் அருகில் வந்து, தோளில் கையை வைத்துக் கொண்டே சொன்னாள்:

'உட்காரு மகளே.'

தாய் அவளைப் பிடித்து நாற்காலியில் அமர வைத்தாள். புத்தகங்களைப் பிடித்திருந்த அவளுடைய கை நடுங்கிக் கொண்டிருந்தது.

'மகளே, உன் பெயர் என்ன? எந்த ஊர்?'

'அம்மா...'

'என்ன பிரச்சினைன்னு சொல்லு... எங்களால் முடியக் கூடிய உதவியை நாங்கள் செய்வோம். இல்லையா மாதவி?'

தந்தை தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவளிடம் சொன்னார். அவளுடைய கையில் வைத்திருந்த புத்தகங்கள் நழுவி கீழே விழுந்தன. அவளுடைய கால்களைச் சுற்றி தரையில் அவை சிதறிக் கிடந்தன.

'அப்பா, நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு புரியல...'

'அப்பாவா?'

ஆச்சரியத்துடன் தந்தை அவளின் முகத்தையே பார்த்தார்.

'நான் உன்னுடைய அப்பாவா?'

'நீங்க ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? என்னால முடியல...'

'மகளே, உன்னை யார் கஷ்டப்படுத்துறது?'

தாயின் குரலில் இரக்கம் இருந்தது.

'அப்பா... அம்மா... உங்களுக்கு என்னைப் பார்த்து தெரியலையா? உங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு? முடியல... என்னால முடியல...'

அவளுடைய கண்கள் நிறைந்தன. தந்தையும் தாயும் எதுவும் புரியாமல் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அவள் நாற்காலியை விட்டு எழுந்து உள்ளே நடக்க முயற்சித்தாள். மேலே இருக்கும் தன்னுடைய அறைக்குச் சென்று கட்டிலில் கவிழ்ந்து படுத்து அழ வேண்டும் போல அவளுக்கு இருந்தது. அவள் உள்ளே கால் வைத்தவுடன், தாய் முன்னால் வந்து தடுத்தாள்.

'நீ எங்கே போறே?'

'என் அறைக்கு... நான் படுக்கணும்... எனக்கு முடியல...'

'உன் அறையா?'

'தலைவலி இருப்பதைப் போல தோணுது.'

'புலி வாலைப் பிடிச்ச கதையா இருக்கே!'

தந்தை இரண்டு கைகளையும் கொண்டு பிசைந்தார்.

'உங்களுக்குத்தான் தலையில் கோளாறு ஆயிடுச்சு. அப்பா, அம்மா... உங்க சொந்த மகளையே உங்களுக்கு அடையாளம் தெரியாமப் போச்சு.'

அவளுடைய கண்ணீரால் முகம் சிவந்தது.

'நீ எங்களுடைய மகள் அல்ல.'

தேம்பி அழுது கொண்டே அவள் சொன்னாள்:

'நான்... ராதா. என்னைப் பார்த்து உங்களுக்குத் தெரியலையா?'

'நீ ராதா இல்லை.'

'நான் ராதாதான்... ராதாதான்...'

'இல்லை... இல்லை....'

'கடந்த பதினெட்டு வருடங்களும்... அம்மா, நீங்கதானே எனக்கு சோறு பரிமாறியது? அம்மா, இப்படி சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது?'

தாய் எதுவும் பேசாமல் கண்களில் நிறைய இரக்கத்தையும் துக்கத்தையும் வைத்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

'அப்பாதானே என்னைப் படிக்க வைத்தவர்? அப்பாதானே தேர்வு காலத்தின்போது தூங்காமலிருந்து எனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தவர்? அப்பாதானே போன வாரம் என்னை திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றவர்? அப்பா எப்படி மறக்கிறார்?'

தந்தை அவளுடைய தோளில் கையை வைத்தவாறு, புன்னகைத்துக் கொண்டே சொன்னார்:

'சாமர்த்தியசாலி. எந்த அளவிற்கு அருமையாக நீ கற்பனைக் கதைகள் உண்டாக்கி கூறுகிறாய்!'

'கற்பனை கதை..?'

கண்ணில் நிறைந்திருந்த நீரின் காரணமாக தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த தந்தையையும் தாயையும் அவளால் பார்க்க முடியவில்லை.

தந்தை திரும்பவும் நாற்காலியில் போய் உட்கார்ந்து, கண்ணாடியை எடுத்து மூக்கின்மேல் வைத்தார்.

'எங்கேயிருந்து வருகிறாய் என்பதையும், என்ன வேண்டும் என்பதையும் சொல்லு. எங்களால் முடியக் கூடிய உதவியைச் செய்யிறோம். விளையாட்டை நிறுத்தி விட்டு, விஷயத்தைச் சொல்லு...'

'சாயங்காலம் ஆயிடுச்சுல்ல...! இன்னைக்கு இங்கு தங்கிக் கொள். நாளைக்கு எங்கே போகணுமோ, போய்க் கொள்.'

'நான் எங்கே போவது? இதுதானே என் வீடு?'

'இது உன் வீடு இல்லை...'

'மாதவி, நீ வாதம் செய்ய வேண்டாம். புத்தி சீராக இல்லாததால் சொல்லுறேன்.'

'இன்று இங்கே தங்குவதற்கு விருப்பமில்லையென்றால், இப்போதே வெளியேறலாம். இருட்டுவதற்கு முன்பு எங்கு போகணுமோ, அங்கே போய்க் கொள்.'

தாய் சொன்னாள். தந்தை மீண்டும் பத்திரிகையை விரித்து வாசித்தார்.

'அம்மா, நான் எங்கே போவேன்? அம்மா, அப்பா... உங்களைத் தவிர, எனக்கு வேறு யார் இருக்காங்க?'

அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. துக்கத்தால் அவளுடைய தொண்டை அடைத்தது. அவள் சிறிது நேரம் வாசலில் நின்றவாறு அழுதாள்.

தந்தை பத்திரிகையிலிருந்து கண்களை எடுக்கவே இல்லை. தாய் எதுவும் பேசாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நேரம் மங்கலாகிக் கொண்டு வர வர தாயின் முகத்தில் அமைதியற்ற தன்மை பரவிக் கொண்டிருந்தது. அதைப் புரிந்து கொண்ட அவள் உள்ளங்கையால் கண்களைத் துடைத்தாள். நடுங்கிக் கொண்டிருக்கும் கால்களுடன் மேட்டை விட்டு இறங்கி, தெருவிற்கு வந்து நடந்தாள். பாதையின் இரு பக்கங்களிலும் இருந்த வீடுகளில் குத்து விளக்குகள் எரிய வைக்கப்பட்டிருந்தன. கடவுளின் நாமத்தைக் கூறிக் கொண்டிருந்த சிறுமிகள் அறிமுகமற்ற வெளிப்பாட்டுடன் அவளைப் பார்த்தார்கள். கூடுகளுக்கு திரும்பி பறந்து கொண்டிருந்த பறவைகள் அறிமுகமில்லாத ஒருத்தியைப் பார்த்து, கீழ் நோக்கி கண்களைச் செலுத்தின. கடலிலிருந்து வீசிக் கொண்டிருந்த காற்றில் மரங்கள் ஆடின. கடல் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. வானத்திலும் பூமியிலும் இருள் பரவி, நிறைந்தது. பறவைகளும் மரங்களும் கடலும் காற்றும் வானமும் பூமியும் ஒரே குரலில் பாடின:

'நீ ராதா இல்லை.... உன்னை எங்களுக்கு தெரியாது.'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.