Logo

அலிபாபாவின் மரணம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6053

அலிபாபாவின் மரணம்

அஜீத் கவுர்

தமிழில் : சுரா

றுதியாக ஒருநாள் அவன், தன்னுடைய அலுவலகத்தின், டவுன் ஹாலின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். சிறிது மனிதனாகவும், அதிகமாக கிளார்க்காகவும் இருந்த ராம்லால்.

மறுநாள் பத்திரிகையில் வட்டாரச் செய்திகள் பிரசுரமாகும் மூன்றாவது பக்கத்தில், ஓரிரு வரிகளில் ராம்லாலின் மரணச் செய்தி வெளிவந்திருந்தது. ‘நகராட்சியில் கிளார்க்காகப் பணியாற்றிய ராம்லால், டவுன்ஹாலில் நான்காவது மாடியிலிருந்து குதித்து மரணமடைந்துவிட்டான்!’ சாதாரண கெட்ட செய்திகள்தான் பொதுவாகவே அந்தப் பக்கத்தில் பிரசுரமாகும்.

நகரத்தில் இவ்வளவு மரணங்கள் நடந்துவிட்டன; இத்தனை கற்பழிப்புகள் நடந்தன; ஒரு ஆள் லாரி மோதி இறந்துவிட்டான்; ஒரு சிறுவன் புகைவண்டியின் தண்டவாளத்தில் தலையை வைத்து இறந்துவிட்டான்; இன்னொரு ஆள் தற்கொலை செய்து கொண்டான்; ஏதோ சில பெண்கள் ஸ்டவ்வில் தேநீர் தயாரிக்கும்போது வெந்து இறந்து விட்டார்கள் என்று தொடங்கி பலவும்...

அன்று மாலை திருமதி மிடாயின் பார்ட்டியில் திருமதி மாதுர் கோழித் துண்டுகளைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள்: “யார் இந்த பாவம் ராம்லால்? நேற்று டவுன்ஹாலில் குதித்து இறந்த ஆள்?” திருமதி மாதுர் மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எளிமையான ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருந்தாள். காரணம்- அவருடைய கணவரை இந்திய அரசாங்கம் கடந்த ஆறு வருடங்களாக பாதுகாப்பு அலுவலகத்தில் ஒரு சாதாரண பிரிவில் வேலை கொடுத்து உட்கார வைத்திருந்தது. அங்கு வெளி வருமானத்திற்கு எந்தவொரு வாய்ப்புமில்லை. அதனால் திருமதி மாதுர் தன்னுடைய புடவைகள், நகைகள் ஆகியவற்றின் எளிமையை மறைப்பதற்காக, பார்ட்டி நடக்கக்கூடிய நாளன்று மிகவும் கவனமாகப் பத்திரிகைகளை வாசித்து, அவற்றில் பிரசுரமாகியிருக்கும் இரண்டு மூன்று செய்திகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, பார்ட்டியில் அவற்றைப் பற்றி பேசி, மற்றவர்களுக்கு முன்னால் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வாள்.

எல்லாரையும் பார்ட்டிக்கு அழைத்திருந்த திருமதி மிடா கூறினாள்: “புவர் டியர்...”

அன்று மதியம் பிரஸ் கிளம்பில் பீர் புட்டிகளை நிறைத்துக் கொண்டு, பத்திரிகையாளர்கள் தாராப்பூர் ப்ளாண்ட்டைப் பற்றியும், ஹெவி வாட்டரைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். குப்தா கேட்டார்: “அந்த ராம்லாலைப் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சதா?” இந்தியில் இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு மாலைப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கும் குப்தாவை, இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திராகாந்தி மாநிலங்களவை உறுப்பினராக அறிவித்தார்.

“ராம்லால் சூடாக இருக்கக்கூடிய ஆள். ஒவ்வொரு முதலமைச்சரும் முன்னாள் முதலமைச்சராகும்போது, புதிதாக வரக்கூடிய ஆளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறுவான். நேற்றைக்கு முந்தைய நாள் பார்த்தபோது, புதிய முதலமைச்சரைப் பற்றிய தகவல்களைத் தருவதற்குத் தயாராக இருந்தான்.” ஹிந்துஸ்தான் டைம்ஸைச் சேர்ந்த ராஜன் கூறினார்.

“நண்பரே, இது அந்த ராம்லால் அல்ல; நேற்று டவுன் ஹாலிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ராம்லாலைப் பற்றிச் சொன்னேன்.”

“அந்த சம்பவத்தைப் பற்றி க்ரைம் ரிப்போர்ட்டர் விசாரணை செய்து கொண்டிருக்கிறார். இன்றிரவுக்குள் ஸ்டோரியை முழுதாக எழுதி விடுவார்.”

ஆனால், ‘ஸ்டோரிகள்’ நேற்று இரவிலிருந்தே எல்லாரின் பாக்கெட்களிலும் இருந்தன. இந்த விஷயத்தில் எல்லாருக்கும் உதவியது பவன் மன்சந்தாதான். இன்றிரவில் அதை எழுதுவான். நாளை பத்திரிகைகளில் பிரசுரமாகும்.

அலுவலகத்தின் பி.ஆர்.ஓ. (பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆஃபீஸர்) பவன் மன்சந்தா பத்திரிகையாளர்களுக்கு நேற்று மாலை ஒரு விசேஷ பார்ட்டி வைத்தான்- தாஜில். இப்படிப்பட்ட மோசமான சம்பவங்கள், மரணமும் கொலையும் எந்தவொரு அலுவலகத்திற்கும் மிகவும் அவமானத்தை அளிக்கக்கூடியவையே. ஒவ்வொரு அவமானத்தையும் மரியாதைக்குரியதாக மாற்றுவதுதான் மன்சந்தாவின் வேலையே. மந்திரிமோ மாயமோ எதுவும் தேவையில்லை.

ராம்லாலின் தற்கொலைச் செய்தி எவ்வளவு ஒதுக்கி வைத்தாலும், ஒதுங்காமல் வந்து கொண்டிருந்தவுடன், பவன் மன்சந்தாவை நகராட்சியின் கமிஷனர் அழைத்தார்: “என்ன இது? யார் இந்த ராம்லால்? நீங்கள் இருக்க, பாழாய்ப் போன பத்திரிகைக்காரர்களுக்கு இந்த தகவல் எப்படி கிடைத்தது? ஆறு தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டன.”

பவன் மன்சந்தா புன்னகைத்தான். “சார்... அந்த ஆளின் பிணம் எல்லாரும் பார்க்கும்வண்ணம் கீழே முற்றத்தில் வந்துவிழுந்தால்... பிறகு... என்னால் என்ன செய்ய முடியும்?”

“எனக்கு அது எதுவும் தெரியவேண்டாம். ஆனால், பிணம்... இல்லையென்றாலும், போகட்டும்... குறைந்தபட்சம் இந்த செய்தியையாவது மறைத்திருக்கலாம்.” நகராட்சி கமிஷனரின் முகத்தில் இறுக்கம் இருந்தது. புன்னகைத்துக் கொண்டே அதை சந்திக்க முடியவில்லை. ஆனால், இருவரும் ஒரு விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள்- இந்த பத்திரிகையாளர்கள் நன்றி கெட்டவர்களாகவும், மது அருந்தக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்... தங்களுக்கென்று கொள்கையே இல்லாதவர்கள்.

பவன் மன்சந்தா ராம்லாலின் தற்கொலைக்கான காரணத்தை அவனுடைய வீட்டில் இருப்பவர்களின் மீது சுமத்துவதற்கு முயற்சித்தான். எது வேண்டுமானாலும் நடக்கக்கூடியதுதான். ராம்லாலின் மனைவி வேறு யாருடைய வலையிலாவது விழுந்திருக்கலாம். ராம்லாலின் திருமணமாகாத மகள் கர்ப்பிணியாகியிருக்கலாம். ராம்லாலின் மகன் ஏதாவது குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால்...

ஆனால், எல்லா விசாரணைகளுக்கும் எந்தவொரு பிரயோஜனமும் உண்டாகவில்லை. கிழிந்த ஆடையை அணிந்திருக்கும் முப்பத்தைந்து வயது கொண்ட பொண்ணான (இப்போது ஐம்பது வயது கொண்டவளாகத் தோன்றுவாள்) திருமதி ராம்லால் வேறு யாருடனும் சேர்ந்து ஓடுவதற்கோ வாய்ப்பில்லை. ஆண் பிள்ளைகள் ஆறாம், ஏழாம் வகுப்புகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள்... அவர்களால் கொள்ளையடிப்பதற்கும், நெருப்பு வைப்பதற்கும் போக முடியாது. அப்படியே இல்லையென்றாலும், இந்த அப்பாவிச் சிறுவர்கள் எதைச் சாப்பிட்டுவிட்டு கொள்ளையடிப்பார்கள்? பெரிய பெரிய பணக்காரர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கென்று இருக்கக்கூடிய உரிமையாயிற்றே அது!

ஆனால், தற்போதைக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும். மன்சந்தாவுக்கு சம்பளம் கொடுப்பதே இந்த விஷயத்திற்காகத்தான்.

அதற்குப் பிறகு காரியங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. அலுவலகத்தில் மேலேயிருந்து கீழேயும் பிறகு கீழேயிருந்து மாடிக்கும் ஒரு பேப்பர் சென்றது. வழக்கம்போல ஃபைல்களில் சேர்த்து, பழைய தேதியைக் குறிப்பிட்டு வைத்தார். ஏதோ பரத்வாஜின் புகாருடன்- ராம்லால் சொத்து வரியில் மாறுதல் செய்வதற்காக அவரிடமிருந்து நாநூறு ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டான் என்று... (மன்சந்தாவிற்கு திடீரென்று தோன்றிய பெயர்தான் பரத்ராஜ். அதற்குக் காரணம் இருக்கிறது. சமீபகாலமாக ஏதோ பரத்வாஜின் மகளுடன் அவருக்கு திருமண அலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...) பிறகு... கேஸ் முழுவதும் தயாரானது. லஞ்சம் வாங்கும் ராம்லாலை ஆதாரத்துடன் பிடித்தார்கள். (காரணம் இருக்கிறது. வாசகர்களே... கிளார்க்குகளையும், கீழ்நிலையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் மட்டுமே ஆதாரங்களுடன் பிடிக்க முடியும். பிறகு... உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் பெரிய அளவில் ஒத்துப் போகாத சிறிய ஆஃபீஸர்களையும். இந்த நாட்டின் கடந்த நாற்பத்தொன்பது வருட வரலாறே இதற்கு சாட்சி). சார்ஜ் ஷீட்டும், சஸ்பெண்ட் ஆர்டரும் கையெழுத்திடுவதற்காக ஏதோ கவுன்சிலரின் மேஜையின்மீது கிடந்தது. சஸ்பென்ஷன் ஆர்டரைப் பற்றி அலுவலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்... ராம்லாலின் காதிற்கும் விஷயம் போய்ச் சேர்ந்தது. கெட்ட பெயருக்கு பயந்து ராம்லால் தற்கொலை செய்து கொண்டான்.


இந்தி திரைப்படக் கதாசிரியர் வடிவமைப்பதைப் போன்ற கதை.

மதியத்திற்குப் பிறகு எல்லாவற்றையும் சரி செய்து விட்டு பவன் மன்சந்தா தன்னுடைய ரிப்போர்ட்டை நகராட்சி கமிஷனரிடம் கொடுத்தான். அந்த வகையில் ராம்லாலின் பிணத்தின்மீது ஊழல் செய்தவன் என்ற முத்திரையைக் குத்தினான். போஸ்ட் மார்ட்டத்திற்காக டாக்டர்களை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் இறந்த சரீரம். ராம்லாலின் இறந்த உடலின் வயிற்றில், பழைய லஞ்சம் வாங்கிய ரூபாய் நோட்டுகளை வலிய திணித்து வைத்தான்.

போஸ்ட்மார்ட்டம் நடக்கும் அறைக்கு வெளியே, ராம்லாலின் அப்பாவி மனைவியும், பதைபதைப்புடன் இருந்த மூன்று குழந்தைகளும் காத்திருந்தார்கள் களைப்படைந்து தளர்ந்துபோய் சோர்வுடன் காணப்பட்ட வயதான மூன்று நான்கு மனிதர்களும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த இரண்டு மூன்று பெண்களும், மூன்று நான்கு உறவினர்கள்... ராம்லாலைப் போல அவனுக்கு பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் உறவினர்களும் க்ளாஸ்- த்ரீ, க்ளாஸ்- ஃபோர் ஆஃபீஸர்களே. அதாவது- கரோல்பாக்கின் சில்லறை வியாபாரிகள். பெட்டிக் கடைக்காரர்களும், சேல்ஸ்மேன்களும்... அவர்கள் மிகவும் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்களென்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமல்லவா? வியாபாரம் நடக்கவில்லையென்றால், இரவில் வீட்டில் அடுப்பு எரியாது என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியும். வேலை செய்பவர்கள் தங்களுடைய காஷுவல்  விடுமுறை நாட்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். தாங்களும் பிணமாகாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். மற்றவர்களுடைய பிணத்தின்மீது இரக்கம் உண்டானது. இரவு வரும்போது ராம்லாலின் பிண அடக்கம் நடைபெறவில்லையென்றால், அவர்கள் உடனிருந்தவர்களுக்கான கடமையை நிறைவேற்றுவதற்காக பிணத்திற்கு அருகில் இரண்டு நிமிடங்கள் அமர்வார்கள். அதாவது- அவனுடைய மனைவிக்கு ஆறுதல் கூறுவார்கள். அதைத் தவிர, மனிதர்களால் என்ன செய்ய முடியும்,

அன்று மாலைநேரம் ஆனபோது, ராம்லாலின் இறந்த உடல் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்த நேரத்தில், பவன் மன்சந்தா தாஜிலிருந்த ஒரு ஸுட்டில் பத்திரிகையாளர்களுக்கு ஸ்காட்ச் சந்து கொண்டிருந்தான்.

பத்திரிகையாளர்களுக்கு எல்லா நேரங்களிலும் ஸ்காட்ச் தருவதில்லை. ஏதாவது மிகவும் பெரியஸ்கான்டல் உண்டாகும்போது மட்டுமே அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மன்சந்தாவின் ‘எஜமானர்கள்’ ஸ்காட்சும் தாஜும் ‘சேங்ஷன்’ செய்வார்கள். இந்தப் பழக்கத்தை ‘ஸ்கான்டல் செய்தி’யின் தனிப்பட்ட மொழியில், ‘வாட்டர் டவுன்’ என்று கூறுவார்கள். ஸ்கான்டலும், ஸ்கான்டல் செய்தியும் பவன் மன்சந்தாவின் தனித்துவ விஷயங்கள்.

இந்த தனித்துவ விஷயங்களின் பலத்தில்தான் பவன் மன்சந்தா இப்போதைய பி.ஆர்.ஓ. பதவியிலிலேயே இருக்கிறான். பத்திரிகை உலகைச் சேர்ந்த பெரிய பெரிய ஜாம்பவான்களைப் பார்க்க வேண்டும்! அவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும்! அந்த நட்பில் எந்தவொரு வேலையும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவருக்கொருவர் இடையே எந்த வேலையும் இருக்கக்கூடாது. ஒருவரையொருவர் புரிந்து கொண்டுதான் இந்த விளையாட்டே. அதுதான் சட்டம்... நாகரிகம்...

பத்திரிகையாளர்கள் ஓசியில் கிடைக்கக்கூடிய மதுவையும் மாமிசத்தையும் மூக்குபிடிக்க சாப்பிடுவார்களென்று ஒவ்வொரு பி.ஆர்.ஓ.விற்கும் தெரியும். திரும்ப வீட்டிற்குச் செல்ல முடியாத அளவுக்கு... இனி வீட்டிற்குச் சென்றாலும், போதை சற்று இறங்கி தூக்கம் வருவதற்கு நள்ளிரவாகிவிடும்... அதற்குப் பிறகு மனைவியுடன் படுக்கையில் சேர்ந்து படுக்கும்போது, வெங்காயம், மசாலா, வியர்வை ஆகியவற்றின் வாசனைபட்டு அவள் ஹேமமாலினியாகவோ பத்மினி கோல்ஹாப்பூராகவோ தோன்றுவாள். பிறகு... செய்தியைப் பற்றிய விஷயத்தை எப்படி ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்?

ஆனால், எந்த பிரச்சினைக்கும் பரிகாரம் இருக்கிறதே! செய்தியை ‘எம்பர்கோ’ ஆக்கி வைப்பார்கள். நாளை முதலில் அச்சகத்தில் கொடுக்க வேண்டாமென்று எல்லாரும் சேர்ந்து தீர்மானிப்பார்கள். அடுத்த நாள் ‘நியூஸ் எடிட்டரிடம் கொடுப்பதற்காக ‘ஸ்டோரி’யை பாக்கெட்டிற்குள் போடுவார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் சில சட்டங்களும் மரியாதைகளும் இருக்கின்றன. விலைமாதர்கள் இருக்கும் தெருக்களுக்குக் கூட சட்டங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தால்தான் இருக்க வேண்டும்- பவன் மன்சந்தாவும் ஸ்டோரியை ‘எம்பர்கோ’ செய்துவிட்டான்... ராம்லாலின் பிணத்தின் லஞ்சக் கதையை தயார் செய்வதற்கு நேரத்தை எடுத்துக் கொண்டான்.

அந்த வகையில் ராம்லாலின் தற்கொலை நடைபெற்ற மூன்றாவது நாளில் செய்தி பிரசுரமாகி வந்தது. கிளார்க் ராம்லாலுக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டது. சஸ்பென்ஷன் ஆர்டர் அதற்குப் பிறகு வந்து சேர்ந்தது. அதனால் உண்டான கெட்ட பெயருக்கு பயந்து அவன் தற்கொலை செய்து கொண்டான்.

அந்த இரண்டு நாட்கள் ராம்லாலின் விதவை மனைவி மிகுந்த துக்கத்தில் இருந்தாள். பிள்ளைகள் களைப்படைந்து சோர்ந்து போய்விட்டார்கள். பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் கொண்டு வந்து கொடுத்த உணவைச் சாப்பிட்டார்கள். அவர்கள் சாதாரண நிலையில் உள்ளவர்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் வசதி படைத்த வீடுகளில் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றல்ல. மரண வீட்டில் பேரமைதி நிலவிக் கொண்டிருந்தாலும், அங்கு இருக்கக்கூடிய சமையலறைக்கு எப்போதும் ஓய்வே இருக்காது. பணியாட்களும் ஆயாவும் டிரைவர்களும் தேநீர் பருக வேண்டுமே! உணவு சாப்பிட வேண்டும். அதனால் தேதீர் பாத்திரத்தை எப்போதும் அடுப்பிலேயே வைத்திருப்பார்கள். உணவு தயாராகிக் கொண்டிருக்கும். வசதி படைத்தவர்களின் துக்கம் பெரிய விஷயம் என்பதால், துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கும் தேநீர் வேண்டும். வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் வற்புறுத்தி, உயிருடன் எஞ்சியிருப்பவர்களுக்கு தேநீரைத் தருவார்கள்.

மிகவும் ஏழையாக இருப்பவர்களின் விஷயத்திலும் பிரச்சினையில்லை. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களிடையே சாதாரண நாட்களிலேயே அடுப்பெரியுமாவென்று கூறுவதற்கில்லை. வருடத்தில் முன்னூற்று அறுபத்து நான்கு நாட்களிலும் சிரமங்கள்தான். ஆனால், நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்களின் விஷயம் பரிதாபகரமானது. சிரமகாலத்தில் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள்தான் ஏதாவது கொண்டு வந்து கொடுப்பார்கள்.

மூன்றாவது நாள் பத்திரிகையில் ராம்லாலின் உண்மையான கதை பிரசுரமாகி வந்தபோது, ராம்லாலின் மனைவி காலையில் அந்த செய்தியைத் தெரிந்திருக்கவே இல்லை. உணவு சாப்பிடும் விஷயம்கூட சிரமத்திற்குரிய ஒன்றாக இருக்கக்கூடிய வீட்டில், பத்திரிகை போன்ற வீணான செலவு எப்போதும் இருந்ததில்லை. அவர்கள் மற்றவர்கள் கூறக்கூடிய விஷயங்களை மட்டுமே கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஊரிலுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் கதைகளை மட்டும்... வழி தவறிச் செல்லும் கணவர்கள் மற்றும் ‘பயங்கரமான’ மாமியார் மார்களைப் பற்றிய செய்திகள்... தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு நேரத்தை அவர்கள் பெரும்பாலும், பக்கத்து வீடுகளில் நடக்கும் சம்பவங்களைத் தெரிந்து கொள்வதிலேயே செலவிடுவார்கள். கிராமப் பகுதிகளை விட்டு வெளியேறிச் சென்றால், நகரத்தில் கொள்ளைகள், பயங்கர விபத்துகள், நடக்கக்கூடாத மோசமான செயல்கள்- இவை பற்றிய செய்திகளே கிடைக்கும். தேசிய அளவில் என்றால்- இந்திரா தன் மகனுடைய மரணத்தின்போது அழவில்லை.


இந்திரா காந்தி மேனகாவை வீட்டை விட்டு வெளியேற்றினார்... ராஜீவ் முன்பு விமானத்தைப் பறக்கச் செய்து கொண்டிருந்தார். இப்போது நாட்டைப் பறக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி பல செய்திகள்... அப்படியே இல்லையென்றாலும், வேறு செய்திகளில் என்ன சுவாரசியம் இருக்கிறது? கார்பச்சோவ், ரீகனுக்கு அனுப்பி வைத்த தந்திச் செய்தி என்ன? ஐரோப்பிய பொருளாதாரக் குழுவின் கூட்டத்தில் என்ன முடிவெடுத்தார்கள்? அங்டாஸ் என்ன வேலையில் கையெழுத்திட்டது? அணி சேரா நாடுகளின் மாநாடு என்ன செய்தது? அமெரிக்க என்னவெல்லாம் சிறிய ரகசியங்களை தன் சிறகுக்குள் மறைத்து வைத்திருக்கிறது? ஸ்பெய்னில் ஆட்சிக்கு வந்திருப்பது சிவப்பு அரசாங்கமா அல்லது கருப்பா? எந்த நாட்டில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது? அதை எப்படி அடக்குகிறார்கள்? இப்படிப்பட்ட செய்திகளில் யாருக்கு   என்ன பாதிப்பு? இல்லையே? சரிதானே?

ஒருவகையில் பார்க்கப் போனால், இன்றைய யுகம் பத்திரிகை கலாச்சாரத்தின் யுகம். ஆனால், ராம்லாலின் மனைவிக்கு இந்த தாங்க முடியாத நாகரிகக் கலாசாரத்தின் மீது சிறிதும் ஆர்வம் கிடையாது. அந்த காரணத்தால் வறுமையிலும் மகிழ்ச்சியடையக் கூடியவளாக அவள் இருந்தாள். தினமும் காலையிலும் இரவில் படுக்கும் நேரத்திலும் கடவுளை வணங்குவாள். மாலையும் சந்தனத்திரியும் விலையதிகமான பொருள்களாக இருந்தாலும், விவேஷ நாட்களில்- சிவராத்திரியிலும் ஜென்மாஷ்டமியிலும்- ராம்லால் காலையில் பால் வாங்கச் செல்லும்போது, பூங்காவில் கீழே விழுந்துகிடக்கும் மூன்று நான்கு மலர்களை எடுத்துக் கொண்டு வருவான். பிறகு சந்தனத்திரியைப் பற்ற வைத்து கடவுளின் ‘ஹேப்பி பர்த்டே’யைக் கொண்டாடுவாள்.

ஆனால், ராம்லாலின் தற்கொலை பற்றிய உண்மையான தகவல் மற்றவர்களுக்கு எரிச்சலும் புளிப்பும் உள்ளதாக இருந்தது. மதிய நேரம் ஆனபோது, செய்தி ராம்லாலின் விதவையின் காதிற்கும் வந்தது.

“இது பொய்... பச்சைப் பொய்... மிகவும் சிரமப்பட்டுக் கொண்டும், தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டும்தான் நான் குடும்பத்தையே நடத்திக் கொண்டிருந்தேன். லஞ்சம் வாங்கக் கூடிய ஆளாக பிள்ளைகளின் அப்பா இருந்திருந்தால், பிள்ளைகள் இன்றைக்கு இப்படி அழுதிருக்க மாட்டார்கள். அந்த அப்பாவி பிள்ளைகளை கரையேற்றுவதற்கு வீட்டில் நாலு காசு இருந்திருக்கும்.” அவள் மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். அழுது அழுது கண்கள் இருண்டு போய்விட்டன.

நள்ளிரவு ஆனபோது முற்றிலும் அமைதியற்ற நிலையில் அவள் இருந்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது. பொதுவாகவே அவன் மிகவும் அமைதியான ஆள். எப்போதும் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருப்பார். ‘குறைந்த சம்பளத்தில் வீட்டை கவனிப்பதில் இருக்கும் சிரமங்களைப் பற்றிய சிந்தனையாக இருக்குமென்று நான் நினைத்தேன். ஆனால், அவருக்கு வெளி வருமானம் கிடைத்து,  அதை வீட்டிற்கு கொண்டு வராமல் இருந்திருந்தால்... யாருக்குத் தெரியும்? வேறு ஏதாவது... வேறு எங்காவது... இந்த ஆண்களை எப்படி நம்புவது?’

இப்படி... நண்பர்களே! நான்கில் ஒரு பகுதி மனிதனாகவும், நான்கில் மூன்று பகுதி கிளார்க்காகவும் வாழ்ந்த ராம்லால் என்ற மனிதனின் சிதை அணைவதற்கு முன்பே, அவனுடைய நல்ல பெயர் நாசமாகி விட்டிருந்தது. மடையன், வாழும் காலம் முழுவதும் நினைத்தான்- தான் பட்டினி கிடந்தாலென்ன- தன்னுடைய பிள்ளைகள் மோசமான நிலையிலிருக்கும் அரசுப் பள்ளிகளில் படித்தாலென்ன- தன் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய சம்பாத்தியம் நேர்மையுடனும் மனசாட்சியுடனும் இருந்ததுதான் என்று. பிள்ளைகள் உணவு சாப்பிட்டாலென்ன, சாப்பிடாவிட்டால் என்ன- அவர்கள் பெருமையுடன் தலைமை நிமிர்த்திக் கொண்டு நடக்கலாமே! நேர்மை குணமும் கடின உழைப்பாளியுமான ஒரு தந்தையின் பிள்ளைகள்தான் தாங்கள் என்று. மடையன், வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவனையும் போல, பிறந்த கணத்திலிருந்து முட்டாளாகவே இருக்கிறோமே என்பதை மறந்துவிட்டான். வறுமையும் முட்டாள்தனமும் ஆரம்ப காலத்திலிருந்தே ஒன்றாகச் சேர்ந்திருக்கும் வண்ணம் வாழ்ந்தவன் அவன். ஏழையால் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடியும். ஒன்று- தன்னுடைய உரிமையைத் தட்டிப் பறிக்க வேண்டும். இல்லாவிட்டால்- சதி செய்து பெற வேண்டும். இவை எதையுமே செய்ய முடியவில்லையென்றால், பாவம் சதியில் சிக்கவைக்கப்படுவான்.

ராம்லாலின் விஷயத்தில் நடைபெற்ற மிகப் பெரிய சதி அவனுடைய மரணத்திற்குப் பிறகு உண்டானதே.

சதிச் செயலில் சிக்கிவிடுவோமோ என்ற பயம்தான் அவனைத் தற்கொலை செய்ய வைத்தது.

நீங்கள் கேட்கலாம்- அவனுடன் இவ்வளவு காலம் சேர்ந்து வாழ்ந்த மனைவியால் தெரிந்து கொள்ள முடியாத விஷயத்தை நான் எப்படித் தெரிந்து கொண்டேன் என்று. பல வருடங்களாக ஒரே அலுவலகத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்களும், மதிய நேரத்தில் அலுமினிய டப்பாவைத் திறந்து காய்ந்த சப்பாத்தியையும் வெறும் கிழங்கையும் சாப்பிட்டு, பால் கலக்காத தேநீரைப் பருகி வாழ்ந்த கிளாஸ்-த்ரீ அலுவலர்கள்கூட தெரிந்திராத விஷயம். நண்பர்களே... சங்கதி ரகசியமானது. இதுதான் என்னுடைய ட்ரேட் ஸீக்ரட். உங்களுக்கு சொல்லிக் கொடுத்தால், நீங்கள் எல்லாரும் கதாசிரியர்களாகி விடுவீர்கள். இந்த அப்பாவி மனிதனின் கஞ்சி குடிக்கும் செயல் எப்படி நடக்கும்?

சம்பவம் இப்படித்தான் நடந்தது. ராம்லாலுக்கு மாறுதல் வந்தது. அவனை பொதுப் பணித்துறையின் பொறுப்பைக் கொண்ட நகராட்சி கவுன்சிலரின் பி.ஏ.ஆக்கினார்கள். பி.ஏ. என்றால் தெரியுமல்லவா? பர்ஸனல் அஸிஸ்டென்ட்....

காளையின் வேலை புல் தின்பது, எஜமானின் கொட்டடியில் கட்டிப் போடப்பட்டிருந்தாலும் கவலையில்லை... திருடன்·“ கொண்டு போனாலும் கவலையில்லை. கிளார்க்கின் வேலையும் கிளரிக்கல் வேலைதான். அது ஃபைல் பார்க்கக்கூடிய வேலையாக இருக்கலாம். பில்களைச் சேர்த்து வைக்கும் வேலையாக இருக்கலாம். பி.ஏ.வின் பொறுப்பாக இருக்கலாம்.

ராம்லாலின் நண்பர்கள் அவனை வாழ்த்தினார்கள்.

“எதற்கு வாழ்த்து? எப்படிப் பார்த்தாலும் கிளார்க்கின் வேலைதானே? என்ன வித்தியாசம்?”

“நண்பா, வித்தியாசம் அந்த நாற்காலியில் அமரும்போது தெரியவரும். அவருடைய அறையில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வரவும் செலவும் நடக்கிறது. வெளியிலிருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் உங்களுக்கு தட்சணை கிடைக்கும்.”

ஆனால், அவையெல்லாம் கிண்டல் செய்யும் விஷயங்களாகத்தான் ராம்லாலுக்குத் தோன்றியது. அவனுக்கு மிகுந்த வெட்கம் உண்டானது.

விதி தன்னை எங்கு கொண்டுவந்து கட்டிப் போட்டிருக்கிறது! கடவுளே!

எது எப்படியிருந்தாலும் வேலை என்னவோ வேலைதான். அதன் பெருமையைப் பற்றி கூறுவதற்கு என்ன இருக்கிறது! அனுபவம் கொண்டவர்கள் ‘கில்லாடி வேலை’ என்று கூறியது வெறுமனே அல்ல.


தினந்தோறும் புதிய புதிய அனுபவங்கள். முதல் நாளன்றே ஸாஹிப் அவனிடம் ஒரு பட்டியலைக் கொடுத்தார். ‘அந்த பட்டியலில் இருப்பவர்களின் தொலைபேசி அழைப்பு வந்தாலோ அல்லது அவர்கள் நேரில் வந்தாலோ, உடனடியாக எனக்கு தகவலைச் சொல்லிவிட வேண்டும்’. மீதி விஷயங்களை ராம்லால் தன்னுடைய அனுபவங்களை வைத்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கவுன்சிலர் ஸாஹிப்பின் குரலில் இருக்கக்கூடிய மிடுக்கையும் நேர்மைத் தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளையும் குரலில் இருக்கக்கூடிய ஏற்ற இறக்கங்களையும் அறிந்திருக்க வேண்டியது அவனுடைய வேலையின் முக்கியமான தேவை. யாரை உடனடியாகக் கொண்டுபோய் காட்ட வேண்டும்- யாரை ஏதாவது சொல்லி அனுப்பிவிட வேண்டும். யாருக்கு தேநீர் கொடுக்க வேண்டும்- யாரிடமும் ‘இரண்டு’ வார்த்தைகளைப் பேச வேண்டும்- இவையெல்லாம் தனக்குத்தானே ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... ராம்லாலுக்கு தெரியவும் செய்யும். எனினும், சுய பரிசோதனை செய்து பார்க்கும்போது, இவற்றை தான் செய்ய முடியாதென்று தோன்றும்.

அந்த நாற்காலியில் அமர்ந்து அவன் ஒரு வினாதமான உலகத்தைப் பார்த்தான். தன்னைச் சுற்றிலும் நாற்பது அல்ல- நாற்பதாயிரம் திருடர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். தான் அலிபாபா என்பதை அவன் உணர்ந்தான். ஆனால், கதையில் அலிபாபா திருடர்களுடன் சண்டை போட்டான். இந்த அலிபாபாவோ பயந்து போய்விட்டான். திருடர்களை கவுன்சிலர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களைச் சுற்றிலும் காணப்படும் திருட்டுக் கூட்டம். அமைச்சர்கள். அவர்களைச் சுற்றி குழுமியிருக்கும் திருடர்களின் கூட்டம். மாநில அரசாங்கங்களும் திருடர்கள் நிறைந்த வேறு அமைப்புகளும். திருடர்கள் திருடர்கள்தான். எல்லாரும் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்கிறார்களென்று அவனுக்குத் தோன்றியது. காரணம்- ராம்லால் பாரதமாக இருந்தான். பாரதம் முழுவதும்... நாடு முழுக்க கொள்ளையடிக்கப் படுபவர்களின் வாரிசுகள். மற்றவர்களால் கொள்ளையடிக்கப்படுவதற்காக பரம்பரை பரம்பரையாகவே வரம் பெற்றவர்கள்...

அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது அவனுக்கு ஞானக் கண் கிடைத்து. லட்சக்கணக்கான நோயாளிகள் மருந்து கிடைக்காமல் எப்படி மரணத்தைத் தழுவுகிறார்கள் என்பதை புரிந்தது. லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாமல் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறார்கள். தொழில் இல்லாமல், இளைஞர்களின் எலும்புகளில் நோயணுக்கள் நிறைகின்றன. புதிதாகப் போடப்பட்ட தார் சாலை, முதல் மழையிலேயே குழிகள் விழுந்து காணப்படுகிறது... புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. நாற்காலிக்காக மீதும் தேர்தலில் போட்டி போடும் ஒவ்வொருவரும் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கிறார்கள். அவர்களுடைய சம்பளமோ, ராம்லாலின் சம்பளத்தைவிட குறைவு.

ஆனால், ராம்லாலைப் பொறுத்தவரையில் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். வெறுமனே ‘யெஸ் சார்,’ ‘ஆல்ரைட் சார்’ என்று கூற வேண்டும். தொலைபேசி அழைப்புகளை கவனமாகக் காதில் வாங்கி, சந்திப்பிற்கான நேரத்தை முடிவு செய்து கூறவேண்டும். ‘டிக்டேஷன்’ கேட்டு எழுத வேண்டும். டைப்ரைட்டரில் அடிக்க வேண்டும். வேலையை மாற்றிப் போட்டால், அவனுக்கென்று தனித்துவும் இல்லாமல் போய்விடும். ராம்லால்? எந்த ராம்லால்? ராம்லால் பவுரப்ரஸாத். அது யாரென்று கேட்கிறீர்களா? இந்த நாட்டில் எவ்வளவு ஆயிரம் ராம்லால்கள் இருக்கிறார்கள். நகராட்சியில் இருக்கக்கூடிய பெரிய அலுவலகத்தில்... அதாவது- டவுன் ஹாலில் வேலை பார்க்கும் அந்த கவுன்சிலரின் பர்ஸனல் அசிஸ்டெண்ட் ராம்லால். ஓ... அந்த ஆளா?

ஆமாம்... அதுதான் அவனுடைய மேல் முகவரி.

அது தவிர, வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு உணவு வேண்டும். அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் ‘எதிர்கால வாக்குறுதிகள்...’ அவர்களுடைய ஆடைகளைப் பற்றி எதுவும் கூறாமலிருப்பதே நல்லது. கிழிசல் தைக்கப்பட்ட பைஜாமாவும், ராம்லாலின் கிழிந்த சட்டையைக் கிழித்துத் தைத்த சட்டையும்தான் ‘எதிர்கால’த்தின் ஆடைகள். ராம்லாலின் மனைவி பிரேமாவிற்கு கையை வெட்டிக் குறைப்பதற்கும், நீளத்தைக் குறைப்பதற்கும், அகலத்தைக் குறைப்பதற்கும் தெரியும். ஊசியையும் நூலையும் வைத்துப் போடும் சண்டை... ஆனால் காலர் தைக்கத் தெரியாது. விளைவு? தலைமுறை தலைமுறையாக நீண்டு சென்று கொண்டிருக்கும் காலர்... நாட்டின் பட்டினியையும் வறுமையையும் போலவே, தந்தையின் கழுத்துக் காலரையே குழந்தைகளும்- நாட்டின் எதிர்காலம்- பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பள்ளி ஆசிரியர்களின் நிரந்தரமான திட்டுகளைக் கேட்க வேண்டி வரும். ஃபீஸ் தாமதமாகும்போதும், ஆடை அழுக்காகும்போதும், தோல்வியடையும்போதும், சண்டையும் சொற்போரும் நடத்தும்போதும்...

நாட்டின் எதிர்காலத்தின் சுமை ராம்லாலின் தோளில் இருந்தது. அதன் காரணமாக அவனால் தோளை அசைக்கவே முடியவில்லை. பூமியைத் தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அட்லஸ் கடவுளும், எப்போதாவது தோளை அசைப்பதற்கும் தோளிலிருக்கும் சுமையை மாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் பூகம்பம் உண்டாகிறது. ஆனால் பூகம்பத்தால் அட்லஸ் கடவுளின் மனைவியும் குழந்தைகளும் கைநழுவிப் போய் விடப் போவதில்லையே! ராம்லால் இப்படி ஏதாவது செய்தால் பூகம்பத்தின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்களே நசுங்கிப் போய்க் கிடப்பார்கள். மனைவி மற்றும் பரிதாபத்திற்குரிய குழந்தைகளின் விஷயத்தைப் பற்றி கூற வேண்டியதே இல்லை. நண்பர்களே. கடவுள்களின் விஷயமே வேறு... அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தோளை அசைக்கலாம்... மலையைத் தூக்கியவாறு இறக்கப் போகும் மனிதனுக்கு மருந்து கொண்டு போய்க் கொடுக்கலாம். மனைவியை யாராவது அர்த்தம் வைத்துக் கொண்டு பார்த்தால், அவனுடைய குடும்பத்தையே நாசமாக்கலாம். வெண்ணெய் திருடலாம். குளித்துக் கொண்டிருக்கும் பெண்களை ‘சென்ஸார் கட்’ இல்லாமல் நிர்வாணமாகப் பார்க்க வேண்டுமென்றால், அவர்களுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு ஓடலாம். திருமணமான பெண்களுடன் காதல் கொள்ளலாம். கர்ப்பிணியாக இருக்கும் தங்களின் மனைவிகளை காட்டுக்குப் போகச் சொல்லலாம். நெருப்பில் அமரச் செய்து தர்மபத்தினிகளிடமிருந்து ‘பதிவிரதை சர்ட்டிஃபிகேட்’ வாங்கலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம். கடவுள்கள் அல்லவா! ஆனால், ராம்லாலைப் போன்ற சாதாரண மனிதன் பூமியில் வெறும் புழுதான். அவன் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டும். அதற்குமேல் எதுவும் செய்ய முடியாது.

மழைக்காலம் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நன்றாக மழை பெய்தது. மூன்றாவது நாள் ஒரு புதிய பள்ளிக்கூட கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி நான்கு குழந்தைகள் இறந்துவிட்டார்கள். காயமடைந்த இருபத்து மூன்று குழந்தைகளை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார்கள்.

அந்த கட்டடத்தைக் கட்டிய கான்ட்ராக்டரை ராம்லாலுக்கு நன்றாக தெரியும். அவனுடைய சாஹிப்பிற்குச் சொந்தமாக சண்டீகரில் ஆயிரம் அடி நிலம் இருக்கிறது. அங்கு ஒரு பங்களா கட்ட வேண்டுமென்று கான்ட்ராக்டர்களிடம் அவன் மூலம்தான் அவர் தகவலையே சொல்லி அனுப்பினார். அவர்களுடன் ஏதாவது நல்ல ஆர்க்கிடெக்ட் இருந்தால், வரைபடம் வரைய வேண்டும். அவர்கள் சந்தோஷமாகக் கூறினார்கள்: ‘எதற்கு வரைபடம் மட்டும்? பங்களாவையும் சேர்த்தே கட்டிவிடலாமே?


ராம்லாலுக்கு தாங்க முடியாத அளவுக்கு கோபம் வந்தது. அவன் திருடர்களுக்குத் துணையாக நிற்க வேண்டியதிருக்கிதே!

அவர்கள் நான்கைந்து மாதங்களில் கவுன்சிலர் சாஹிப்பின் பங்களா சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துக் கொடுத்தார்கள். முதல்தரம் வாய்ந்த விலையதிகமான ‘டிம்பரை’ டில்லியிலிருந்து கொண்டு வந்தார்கள். மார்பிள் மக்ரானாவிலிருந்து. பம்பாயிலிருந்து டைல்ஸ் சானிட்டரி இணைப்புகளையும் பல்புகளையும் ஷேட்களையும் காற்றாடிகளையும் சாஹிப்பின் மனைவியே நேரில் சென்று பார்த்துக் கொண்டு வந்தாள். கான்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பலமுறை சென்ற சாஹிப்பின் மனைவிக்கு ராம்லால் உதவ வேண்டியதிருந்தது. எல்லாவற்றையும் அனுசரித்துதான் செல்ல வேண்டும். மேலிடத்திலிருந்து வந்த கட்டளை...

பங்களா கவுன்சிலரின் மகன்களிலிருந்து பேரன்கள் வரை வசிப்பதற்கு ஏற்றபடி உறுதியுடன் கூடியதாக இருக்க வேண்டும். பள்ளிக்கூட கட்டடத்தின் காரியம் எப்படியிருந்தால் என்ன? அது நாளைக்கே இடிந்து விழுந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. அதன் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கிடக்கும் குழந்தைகள் பாரதம் என்ற குப்பைக் குவியலில் கிடக்கும் புழுக்கள்தானே! கணக்கில்லாமல் பிறக்கிறார்கள். எப்படியோ வளர்கிறார்கள். கட்டாயம் பள்ளிக் கூடத்திற்குச் சென்றுதான் ஆக வேண்டுமென்று அவர்களிடம் யார் சொன்னது? மற்ற குழந்தைகளைப் போல அவர்களும் ஷுக்களுக்கு பாலீஷ் போடலாம். தொழிற்சாலைகளில் இரவைப் பகலாக்கலாம். மூட்டைகள் தூக்கலாம். வீட்டு வேலைகள் செய்யலாம். பத்திரிகைகளை விற்கலாம். இவற்றையெல்லாம் ஏன் செய்யவில்லை? பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டுமாம்! அரசாங்கப் பள்ளிக் கூடங்களின் கட்டடங்கள் உறுதியாக இல்லையென்ற விஷயம் தெரியாது. மழைக்காலத்தில் இடிந்து விழுந்து நசுங்கி சாக வேண்டியதுதான்.

அன்று முழுவதும் ராம்லால் மிகுந்த கோபத்துடன் இருந்தான். இறந்த குழந்தைகள் மீதும், தன் மீதும், காற்றின் மீதும், மழையின் மீதும், நாற்காலியின் மீதும், மேஜையின் மீதும், மண்ணின்மீதும், ப்யூன்மீதும்- எல்லாரின்மீதும்...

மதியத்தைத் தாண்டி சாஹிப் அவனை அழைத்தார். “ராம்லால், அந்த பள்ளிக்கூட கட்டடத்தைக் கட்டிய கான்ட்ராக்டரின் அனைத்து ஃபைல்களையும், இன்றுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் எல்லா கான்ட்ராக்ட் சம்பந்தப்பட்ட ஃபைல்களையும் எடுத்துக் கொண்டு சாயங்காலம் பங்களாவுக்கு வா.”

மாலையில் ராம்லால் ஃபைல்களுடன் சாஹிப்பின் பங்களாவை அடைந்துபோது, கான்ட்ராக்டரும் அவருடைய மகனும் சாஹிப்பின் பெரிய அறையில் அமர்ந்து விஸ்கி பருகிக் கொண்டிருந்தார்கள். “வா, ராம்லாம்... அந்த ஃபைலை இங்கேவை. பள்ளிக்கூட கட்டடம் சம்பந்தப்பட்ட எல்லா பேப்பர்களையும் கொஞ்சம் எடுத்து வை. இரவில் பார்ப்போம்.”

ராம்லாலின் இடம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டிருந்த கான்ட்ராக்டர் அவனுக்கும் ஒரு ‘பெக்கை ஊற்றிக் கொடுத்தார். தான் எந்த சமயத்திலும் மது அருந்தியதே இல்லை என்று ராம்லால் கூறினான். “முடியாது... முடியாது. இதை குடித்தேயாக வேண்டும். இதன்மூலம் நாங்கள் உங்களை கௌரவப்படுத்துகிறோம். குடிக்கவில்லையென்றால் எங்களுக்கு அவமரியாதை உண்டானதைப் போல இருக்கும்.” கான்ட்ராக்டர் கூறினார்.

கவுன்சிலர் சாஹிப்பும் புன்னகைத்தவாறு அதை வழி மொழிந்தார்.

ராம்லால் ஒரே மூச்சில் அந்த ‘பெக்’கை உள்ளே செலுத்தினான். பிறகு குவளையை கான்ட்ராக்டரின் முன்னால் வைத்தான்.

இரண்டாவது ‘பெக்’கைக் குடித்துவிட்டு, அவன் மெதுவாக சற்று தன்னைச் சுற்றிலும் பார்த்தான். ஆச்சரியம்தான். அவன் இதே பங்களாவிற்கு முன்பும் பலமுறை வந்திருக்கிறான். ஆனால், வேலை முடிந்துவிட்டால் தலையை குனிந்து கொண்டே, உடனடியாக அங்கிருந்து கிளம்பி விடுவான். ஆனால், இன்று இரண்டு ‘பெக்’குகளை உள்ளே அனுப்பிவிட்டு மேலே பார்த்தான். சுற்றிலும் பார்த்தான். தன்னுடைய சாஹிப்பை, கான்ட்ராக்டரை, சாஹிப்பின் மனைவியை, சுவர்களை, பாரசீக விரிப்புகளை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை, வீடியோ மியூசிக் சிஸ்டத்தை, ஸோஃபாவை, டின்னர் செட்டை... எல்லாவற்றையும், ‘கட் க்ளாஸால்’ செய்யப்பட்ட ஃப்ளவர் வாஷ், அதில் அலங்கரித்துக் கொண்டிருந்த பூக்கள்...

பிறகு... எதற்கென்று தெரியவில்லை. அவன் உள்ளுக்குள் தனக்குத்தானே திட்டிக் கொண்டான். ‘டேய், ராம்லால்,,, நாயே... பிச்சைக்காரப் பயலே... நீ இவ்வளவு காலமும் என்ன சம்பாதித்தாய்? டேய் நாசமாய் போறவனே! உனக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு வயிறு நிறைய உணவு கொடுக்க உன்னால் முடிந்ததா? பள்ளிக்கூடக் கட்டடம் இடிந்து விழுந்து, மரணத்தைத் தழுவிய குழந்தைகளை உன்னால் காப்பாற்ற முடிந்ததா? எதற்குமே லாயக்கில்லாதவன். உன்னால் சொந்தமாக எதையுமே செய்ய முடியாது. மற்றவர்களை ஆக்குவதற்கும் முடியாது. போய் சாகு...’

அவன் கால்கள் தடுமாற வீட்டிற்கு வந்து, இரவு முழுவதும் தனக்குள் போராடிக் கொண்டிருந்தான். தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தான்.

காலையில் குளித்து முடித்து தூய்மையானான். புதிய ப்ளேடால் ஷேவ் செய்தான். அலுவலகத்திற்குச் சென்று மிகுந்த சந்தோஷத்துடன் டவுன்ஹாலில் நான்காவது மாடியிலிருந்து கீழே நோக்கி தாவிகுதித்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.