Logo

புதிய புதிய முகங்கள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5651

புதிய புதிய முகங்கள்

எம்.முகுந்தன்

தமிழில் : சுரா

ல்லூரி வேலைநாள் அது. எனவே ஸ்டேஷனுக்கு செல்வதற்காக விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை தேவகி டீச்சருக்கு உண்டானது. அதிகாலை வேளையிலேயே கண்விழித்து, குளித்துமுடித்து, பாதி நரைத்துவிட்டிருந்த கூந்தலை உலரவைத்தவாறு வண்டி வரும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மங்களாபுரம் மெயில் பதினொரு மணிக்குத்தான் வரும். நேரம் முன்னோக்கி நகரவேயில்லை.

சமீபத்தில் வெளிவந்த அறிவியல் களஞ்சியத்தின் முதல் நூலைத் திறந்து, அதில் கண்களைப் பதித்துக் கொண்டிருந்தாள். இடையில் அவ்வப்போது கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் சீக்கிரமாக நகர்வதைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிற நேரத்தில், மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கும். இடையில் அவ்வப்போது கைக்கடிகாரத்தைப் பார்த்தால், நேரம் மெதுவாகத்தான் நகரும். கடிகாரத்தைப் பார்க்காமல் இருக்கும்போது, நேரம் பறந்து போய்க்கொண்டிருக்கும்.

இறுதியில் மாதவனின் வாடகைக் கார் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது. முன்கூட்டியே காருக்கு சொல்லியிருந்தாள்.

“டீச்சர்... மணி பத்தரை.”

மாதவன் ஒரு தடிமனான பீடியை இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்தான். அந்த பீடிக்கு ஒரு விசேஷமான வாசனை இருந்தது. சங்கு கல்லூரியில் படித்த காலத்தில், இதே வாசனை அவனுடைய அறையில் தங்கிநிற்கும்.

“மாதவா, நீ என்ன பீடி புகைக்கிறே?”

மாதவன் சற்று புன்னகைத்தான். தொடர்ந்து குரலைத் தாழ்த்திக் கொண்டு டீச்சரின் காதில் சொன்னான்:

“இதற்குள்ளே மறந்திருக்கு...”

“என்ன மருந்து மாதவா?”

“வெளியே சொல்ல முடியாது. போலீஸ் பிடிச்சிடும். கஞ்சா டீச்சர்!”

“எனக்கு முன்பே அது புரிந்துவிட்டது. தெரியுதா மாதவா?”

“கஞ்சா புகைக்க எனக்கு கற்றுத் தந்தது யாரென்று தெரியுமா டீச்சர்?”

“சங்குதானே?”

“அவனேதான்...”

சங்குவின் தந்தைக்கு இருக்கக்கூடிய வயது மாதவனுக்கு. எனினும், அவனுக்கு கஞ்சா புகைப்பதற்கு கற்றுத்தந்திருக்கிறான் சங்கு. அவளுக்கு அந்த விஷயத்தில் ஆச்சரியம் உண்டாகவில்லை. மாதவனை மட்டுமல்ல; எவ்வளவு ஆண்களை அவன் கஞ்சா புகைக்க வைத்திருப்பானோ, யாருக்குத் தெரியும்?

“மங்களாபுரம் மெயிலில்தானே வர்றான்?”

காரை வாடகைக்கு ஓட்டலாமென்று மாதவன் சந்தேகத்துடன் கேட்டான்.

“அப்படித்தான் அவன் எழுதியிருக்கிறான்.”

“உறுதிதானே?”

மாதவன் மீண்டும் கேட்டான். கடந்த முறை சங்கு வந்த கதையை அவன் மறக்கவில்லை; டீச்சரும். சென்னையிலிருந்து ஒரு தந்தி. ‘நாளை மங்களாபுரம் மெயிலில் நான் ஊருக்கு வருவேன்’ அன்றும் கல்லூரியில் விடுமுறை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குச் சென்றாள். வண்டி வந்தபோது, ஆள் இல்லை.

‘இரவில் வரும் சூப்பரில் வரலாம்.’

மாதவன் சொன்னான். இரவில் மீண்டும் ஸ்டேஷனுக்குச் சென்றாள். நல்ல மழை. குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. புடவையைக் கொண்டு முழுமையாக மூடிக்கொண்டு பயணிகள் அறையில் காத்திருந்தாள். பதினொன்றரை மணிக்கு சூப்பர் வந்தது. சங்கு இல்லை. அப்படியே இரண்டு நாட்கள் எல்லா வண்டிகளுக்கும் சென்று பார்த்தாள். சங்கு இல்லை. மூன்றாவது நாள் ஸ்டேஷனுக்குச் செல்லவில்லை. எத்தனை நாள்தான் விடுமுறை எடுப்பது? அன்று கல்லூரியிலிருந்து திரும்ப வந்தபோது, ஒரு ஃப்ளானலாலான சட்டையை அணிந்து, சிகரெட்டைப் புகைத்தவாறு மழையைப் பார்த்தவாறு வாசலில் சங்கு அமர்ந்திருக்கிறான்.

“டீச்சர், நீங்க ஏன் சிரிக்கிறீங்க?”

“இல்லை மாதவா... கடந்த முறை சங்கு வந்த கதையை நினைச்சுப் பார்த்தேன்.”

“இந்த முறையும் அவன் நம்மை ஏமாற்றுவானோ?”

“ஒரு நிம்மதியிருக்கு... இப்போ மழையில்லையே!”

பிரகாசமான நாள். நிர்மலமான வானம். மலர்களை தூக்கத்திலிருந்து தட்டியெழுப்புவதற்காக மட்டுமே வீசிக் கொண்டிருந்த காற்று.

“டீச்சர், உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கணும் கேட்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்.”

“என்ன விஷயம் மாதவா?”

“டீச்சர், நீங்க எதுவும் நினைக்கமாட்டீங்களே?”

“நீ என்னிடம் எதைப்பற்றி வேணும்னாலும் கேட்கலாம் மாதவா.”

தன் தோளிலிருந்து நழுவி விழுந்த வெள்ளைநிற வாயில் புடவையை எடுத்த சரியாகப் போட்டாள் டீச்சர். மாதவன் விண்ட் ஸ்க்ரீனில் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவள் ஆச்சரிப்பட்டாள்.

“உங்க வீட்டிலிருந்த அந்த வேலைக்காரி கூட இல்லையா?”

“சாருவா?”

“அவ இப்போ எங்கே?”

டீச்சரின் கண்களிலிருந்த சந்தோஷம் உடனடியாக மறைந்துவிட்டது. அவளுடைய முகத்தில் இளம் வாழையிலையின் வெளிறிப்போன நிலை!

“அவ அவளுடைய வீட்டுக்குப் போயிட்டா.”

“அவ போனதுக்கு காரணமென்ன டீச்சர்? ஊர்ல இருக்கிறவங்க ஒவ்வொரு விதமா பேசிட்டிருக்காங்க.”

டீச்சர் கவலையுடன் தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுடைய மனதில் சாரு ஒரு ஆச்சரியத்திற்குரியவளாக ஆகிவிட்டிருந்தாள். பன்னிரண்டு வயதில் அவளுடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தாள். ஒரு வேலைக்காரியாக அவளை அவள் நினைத்ததில்லை. தன்னுடைய சொந்த மகளைப் போலவே நடத்தினாள்.

சொந்த மகளைப்போல-

“ஊர்க்காரர்கள் கூறுவது உண்மைதான் மாதவா.”

மாதவன் திகைத்துப் போய்விட்டான். டீச்சர் இப்படி வெளிப்படையாக மனம்திறந்து கூறுவாளென்று அவன் நினைக்கவே இல்லை.

“உங்களுக்கு யார்மேல் சந்தேகம் டீச்சர்?”

எவ்வளவு கேட்டும் அவள் கூறவேயில்லை. பாவம்... பெண்...

டீச்சர் பெருமூச்சுவிட்டாள். அவளுடைய சந்தோஷமும் உற்சாகமும் ஆறிக் குளிர்ந்தன. மனதில் ஒரே வேதனை. அவள் வெறுமனே வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

‘எது எப்படியோ... சங்கு இங்க இல்லாமலிருந்தது நல்லதாப் போச்சு...?’

மாதவன் தனக்குள் தேற்றிக் கொண்டான்.

“சங்கு அப்படி செய்வான்னு நினைக்கிறியா மாதவா?”

“இல்லை, டீச்சர். இல்லை... ஆனா ஊர்க்காரங்க வாயை நம்மால அடைக்க முடியுமா?”

வாடகைக் கார் ஸ்டேஷனுக்கு முன்னால் நின்றது.

“நான் ஒரு அரை தேநீர் குடிச்சிட்டு வர்றேன். டீச்சர், வேணாம்ல?”

“வேணாம் மாதவா.”

மாதவன் இரு கைகளாலும் வேட்டியை உயர்த்திப் பிடித்தான். பக்கத்தில் தெரிந்த தேநீர்க்கடைக்குள் நுழைந்தான். இரு காதுகளிலும் பீடி. கஞ்சா நிறைக்கப்பட்ட பீடி. ‘அவற்றை இப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு நடக்கலாமா?’

டீச்சர் ப்ளாட்ஃபாரத்திலிருந்த புத்தகக் கடையிலிருந்து கோபி கூப்பிட்டு சொன்னான். போயி காட்டிய புத்தகங்களை டீச்சர் பார்த்தாள். வயலட் லெட்யுக், நபாக்கோவ், டெஸ்மண்ட் மோரீஸ்... கோபி விஷயங்களை தெரிந்தவன். வேறு எந்தவொரு புகை வண்டி நிலையத்திலும் பார்க்க முடியாத புத்தகங்கள் அவனுடைய கடையில் இருக்கும்.

“இதோ ‘பாஸ்டர்ட்’ எழுதிய ஆள் டீச்சர், நீங்க வாசிச்சிருப்பீங்க.”

வயலட் லெட்யுக்கின் புத்தகத்தைத் தொட்டுக் காட்டினான் கோபி.


“அந்த லெஸ்பியனின் கதைதானே கோபி?”

டீச்சர் கண்ணாடியின் வழியாக சிரித்தாள்.

“இந்தப் பெண்களுக்கு இதையெல்லாம் எழுதுவதற்கு எப்படி தைரியம் வருகிறது டீச்சர்?”

கோபியின் நண்பன், சங்குவின் நண்பன் கஃபூர் ஆச்சரிப்பட்டான்.

“சங்கு இன்னைக்கு வர்றான்ல?”

“மெயிலுக்கு கோபி.”

“எனக்கு கடிதம் வந்திருந்தது.”

கஃபூர் பைக்குள்ளிருந்து கடிதத்தை எடுத்துக் காட்டினான்.

பயணிகள் அறைக்குள் சென்றமர்ந்து லெட்யுக்கின் புத்தகத்தை சற்று வாசித்துப் பார்த்தாள். அப்போது தூரத்தில் வண்டியின் கூவல் சத்தம் கேட்டது. வண்டி எப்போதும் தூரத்தைப் பற்றி அவளை சிந்திக்க வைக்கும். நகரங்களுக்கிடையே இருக்கக்கூடிய தூரம்... நாடுகளுக்கிடையே விரிந்துகிடக்கும் தூரம்... கோளங்களுக்கிடையில் இருக்கக்கூடிய தூரம்...

“அம்மா...”

தோளில் கைவந்து விழுந்தபோதுதான் அவள் சங்குவையே பார்த்தாள். டீச்சரின் பதைபதைப்பு சற்று அடங்கியது. காதுகளிலிருந்து வண்டியின் இரைச்சல் சத்தம் இல்லாமல்போனது. பெல்பாட்டம் பேண்ட் அணிந்த, பாத்திக் ஷர்ட் அணிந்த, கிருதாக்கள் வளர்த்திருக்கும் சங்கு எங்கே? வெள்ளை வேட்டியும் சட்டையும், அடர்த்தியான மீசையும்... இளம் சிவப்பு நிறத்திலிருந்த சாந்தம் தவழ்ந்து கொண்டிருந்த கண்கள்... இந்தப் பக்குவம் எங்கிருந்து கிடைத்தது? தாய்க்கு சந்தோஷம் உண்டானது. நான் பார்ப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய சங்கு இதுதான்... இதுதான்....

“வாழ்த்துகள் அம்மா!”

“எதுக்கு மகனே?”

“இப்போது ப்ரின்ஸிப்பல் இல்லியா? அம்மா, உங்க கடிதம், கிளம்புறதுக்கு முந்தைய நாள்தான் கிடைச்சது!”

“எனக்கு பி.எச்.டி. இருக்கா? இருந்தாலும் கிடைச்சது. மகனே, உன்னோட அதிர்ஷ்டத்தால்தான் இருக்கணும்.”

சங்குவின் கையைப் பிடித்தவாறு அவள் வெளியே நடந்தாள்.

அவனுடன் சேர்ந்து நடக்கும்போது தான் சிறிதாகிவிட்டதைப் போல அவளுக்குத் தோன்றியது. என்ன ஒரு உயரம்! அவனுடைய தந்தைக்கு இந்த உயரமில்லை. அவளுக்குமில்லை. பிறகு இந்த உயரம் எங்கிருந்து கிடைத்தது?

“அப்போ... சொன்ன வண்டியிலேயே வந்துட்ட..! அப்படித்தானே?”

மாதவன் காரின் கதவைத் திறந்துவிட்டான். டீச்சர் முதலில் காருக்குள் ஏறினாள். சங்கு பின்னால் ஏறியபோது, மாதவன் குரலைத் தாழ்த்திக் கொண்டு ஒரு திருட்டுத்தனம் கலந்த சிரிப்புடன் அவனுடைய காதில் சொன்னான்.

“மருந்து ஏதாவது கொண்டுவந்திருக்கியா? மாதவனை மறந்துடாதே?”

“கஞ்சாவை நிறுத்தியாச்சு மாதவா.”

“அப்படின்னா இப்போ என்ன?”

“கஞ்சாவைவிட சிறந்த ஒரு சரக்கு.”

டீச்சர் சங்குவின் கையை இறுகப் பிடித்தாள்... மயக்க மருந்துகளின் மத்தியிலிருந்து அவனைப் பிடித்து கரைக்குக் கொண்டு வருவதைப் போல... காப்பாற்றுவதைப்போல...

“அப்படின்னா... சாயங்காலம் பார்க்கலாமா?”

கோபியும் கஃபூரும் காரின் அருகில் வந்து நின்றார்கள்.

கார் நகர்ந்தது.

“நீ அம்மாவுக்கு என்னடா கொண்டு வந்திருக்கே மகனே?”

சங்கு குளியலும் சாப்பாடும் முடிந்தபிறகு, ஒரு சிகரெட்டுடன் தன்னுடைய கட்டிலுக்குச் சென்று படுத்தான். பத்து இருபது வருடங்களாக படுத்த கட்டில். ‘எவ்வளவு... எவ்வளவு முறை நான் இந்தக் கட்டிலில் படுத்து கைமுட்ட அடித்திருக்கிறேன்!’ சங்கு நினைத்தான்.

“அம்மா, உங்களுக்கு ஒரு பொருள் கொண்டு வந்திருக்கேன்.”

“என்ன?”

“உங்களால் யூகிக்க முடியாது.”

“புத்தகத்தைத் தவிர நீ வேறென்ன கொண்டு வந்திருப்பே? பிறகு... கோபியிடமிருந்து ஒரு புத்தகம் வாங்கியிருக்கேன். இதோ...”

“ஆன்ட்டி நாவல். அம்மா, நீங்க இதையெல்லாம் வாசிக்கிறீங்களே!”

சங்கு புத்தகத்தை நகர்த்தி வைத்தான்.

“அம்மா, நான் உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறது இதுதான்.”

பெட்டிக்குள்ளிருந்து, ஸெல்லோ ஃபைனில் சுற்றுப்பட்டிருந்த ஒரு பிடி ‘பங்க்’கை சங்கு வெளியே எடுத்து வைத்தான்.

“என்ன மகனே இது?”

“பங்க்...”

“நீ எனக்காக கொண்டு வந்திருக்கிறது இதுதானா?”

டீச்சரின் முகம் வாடியது.

“நான் கஞ்சா, மது எல்லாத்தையும் நிறுத்திட்டேன்மா. இப்போ இது மட்டும்...”

“கஞ்சா, மதுவை நிறுத்தியதால் என்ன லாபம்? அதைவிட பெரிய விஷயமாச்சே இது?”

“பங்க் என்னை சொர்க்கத்துக்கு கூட்டிப்போச்சுன்னு நான் சொல்லலை அம்மா.”

சங்கு தன் அன்னையின் மடியில் தலை வைத்துப்படுத்தான்.

“ஆனா, பழைய கட்டுப்பாடில்லாத தன்மையிலிருந்து அது என்னைக் காப்பாத்திச்சு. இப்போ என்னுடைய வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்கு. சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்குப் போறேன். நல்ல முறையில வேலை செய்யறேன். சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நேரா வீட்டுக்கு வந்திடறேன். ஒரு குவளை பங்க் குடிப்பேன். பிறகு... உணவு தயாராகிற வரை வாசித்துக் கொண்டிருப்பேன். சாப்பிட்டு முடிச்ச பிறகு, ஒண்ணுரெண்டு மணி நேரம் டேப் ரிக்கார்டருக்கு பக்கத்துல பாட்டு கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருப்பேன். காலையில புத்துணர்ச்சியோட கண் விழிப்பேன். சுருக்கமா சொல்றதா இருந்தா பங்க் என்னை நிம்மதி நிறைஞ்சவனா ஆக்குது. அம்மா, ஒரு இடத்தில் நிலையா இருக்குற மனநிலை கொண்டவன் நானில்லைன்ற விஷயம்தான் உங்களுக்குத் தெரியுமே! புத்தி தெரிஞ்ச காலத்திலிருந்து நான் அனுபவிச்ச நிம்மதிக் குறைவு... அதிலிருந்து பங்க் என்னைக் காப்பாத்திச்சு. நான் இப்போ சந்தோஷமா இருக்கேன். ”

“எனக்கும் சந்தோஷம் சங்கு. ஆனா, மகனே...”

“அம்மா, பயப்படவே வேணாம். கொஞ்ச காலம் பங்க்கை தொடர்ந்து பயன்படுத்தினா ‘சூப்பர் ஈகோ’ நீங்கிகும்ங்கற விஷயத்தை நான் சமீபத்தில் எங்கோ வாசித்தேன். சமூகத்தின் பழக்கவழக்கங்களிலிருந்து விடுதலை ஆவேன். சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவேன். ஐ டோண்ட் மைன்ட் இட். அதைத் தவிர பங்க் வேறு எந்த கெடுதலையும் செய்யாது.

“இருந்தாலும், மகனே...”

“மனசுக்கு நிம்மதி தரக்கூடிய வேறெதாவது கண்டா நான் இதை விட்டுடுவேன். அதுவரை மட்டுமே...”

சங்கு சட்டையைக் கழற்றினான். வேட்டியை மடித்துக் கட்டினான். தன் தாயின் அருகில் முழங்காலிட்டு அமர்ந்து அவன் ‘பங்க்’கை அரைக்க ஆரம்பித்தான். அன்னை அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அரைத்த பங்க்கை துணியைக் கொண்டு ஒரு கண்ணாடிக் குவளையில் வடிகட்டினான். பால், சர்க்கரை, மிளகுப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலக்கினான். நுரைத்துக் கொண்டிருந்த பானத்தை அவன் இரண்டு குவளைகளுக்குள் ஊற்றினான்.

“மகனே...”

“கொஞ்சம் ருசி பார்த்தா போதும். நான் பங்க் குடிக்கும்போது நீங்க குடிக்காம இருந்தா, நம்மோட உறவு முழுமையில்லாததா இருக்குமே அம்மா.” அவன் கண்ணாடிக் குவளையை தன் அன்னையின் கையில் கொடுத்தான். அவனுடைய கண்களில் தன் தாயின்மீது கொண்டிருக்கும் சந்தோஷம் நிறைந்த வெளிப்பட்டது.


“ச்யேர்ஸ்...”

சங்கு, குவளையை உயர்த்தி ஒரே இழுப்பில் முழுவதையும் குடித்தான். அன்னை முதலில் ஒரு மடக்கு பருகிறாள். சர்க்கரையும், பாலும், மிளகும்... என்ன ஒரு அருமையான ருசி! அவள் மீண்டும் ஒரு மடக்கைப் பருகினாள். பிறகு... எந்தவித பிரச்சினையும் இல்லாமல் குவளையை காலி செய்தாள். ‘என்னுடைய எல்லாமுமாக இருக்கக்கூடிய மகன்... என்னுடைய தங்க மகன் குடிக்கக்கூடியது இது. அப்படியென்றால்... நான் எதற்கு சந்தேகப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்?’ அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

“அம்மா, அதோ... அந்த நாற்காலியில் உட்காருங்க.”‘

அவன் சொன்னபடி அவள் நடந்தாள். சங்கு தன் தாய் அமர்ந்திருந்த நாற்காலியின் கையின்மீது, அவளுடைய கழுத்தில் கை போட்டவாறு அமர்ந்தான்.

“சொல்லு மகனே, உன்னோட நகரத்தைப் பத்தி சொல்லு. அம்மா கேட்கிறேன்.”

“பாராளுமன்றதுக்கு முன்னால் எப்போதும் ஆர்ப்பாட்டங்கள். அமைதியே இல்லாத பல்கலைக் கழக சூழல்... போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கிட்டிருக்கு...”

“இதுக்கு நீ ஏதாவதொரு பரிகாரத்தைக் காணலையா, சங்கு?”

“இல்லை.,,”

“பதில் இல்லாத ஏதாவது ஒரு கேள்வி இருக்கா மகனே?”

“மனிதன்...”

தாய் மெதுவாக சிறிது புன்னகைத்தாள். அவளுடைய வாய்க்கள் மேற்பகுதி உலர ஆரம்பித்தது. ‘பங்க்’ செயல்பட ஆரம்பித்தது.

“அம்மா, உங்களுக்கு என்ன பரிகாரம் தோணுது?”

“நீங்க... இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யணும்.”

“என்னன்னு நீங்களே சொல்லுங்களேன்...”

“ஒரு புதிய சொஸைட்டியை உருவாக்கணும். ஒரு புதிய நேஷன்...”

“இந்தியாவில் அந்த விஷயம் ‘புத்திஸம்’ போன்ற ஒரு மதத்தால் மட்டுமே முடியும். அசோக சக்கரவர்த்தியை போரிலிருந்து பின்னோக்கித் திரும்பி வரச் செய்த புத்த மதத்தால் நம்மை ஊழலிலிருந்தும் ‘ப்ளாக் மெயிலிங்’கில் இருந்தும் விடுதலை பெற வைக்க முடியுமோ என்னவோ? அதை கண்டுபிடிக்கணும் அம்மா.”

“சங்கு, எனக்குத் தெரிந்த சொல்யூஷன், ‘புத்திஸம்’ அல்ல.”

“பிறகு?”

சிகரெட்டின் புகையை ஊதிப்பறக்கவிட்டவாறு அவன் தன் தாயின் முகத்தையே வெறித்துப் பார்த்தான்.

“யூ மேக் ரெவல்யூஷன். ஒரு அமைதிப் புரட்சி...”

அவனுடைய அன்னையின் பார்வை தூரத்தை நோக்கி நீண்டு சென்று கொண்டிருந்தது. அவளுடைய நினைவு காலத்திற்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்தது. படைப்புகளின் இறப்பைத் தாண்டியிருக்கும். உலகத்திற்கு ‘பங்க்’கின் சிறகுகளைக் கொண்டு அவள் பயணத்தை ஆரம்பித்தாள். அன்னையின் கண்கள் மூடின...

· · ·

“இங்க சாரு இல்லையா?”

சாரு வாசலுக்குள் நுழைந்தான். சாருவின் தாய் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றாள். அவள் தான் அணிந்திருந்த துணியைக் கொண்டு முன்னறையில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சைத் துடைத்து சுத்தம் செய்தாள்.

“உட்காரு மகனே. நீ எப்போ வந்தே?”

“நேத்து... நான் கொஞ்சம் சாருவைப் பாக்கணும்.”

சாருவின் தாய் சுவரின்மீது சாய்ந்து நின்றிருந்தாள். அவள் எதுவும் பேசவில்லை. சங்குவின் முகத்தைப் பார்ப்பதற்கு அவளால் முடியவில்லை.

“நான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்.”

“உன் அம்மாவுக்கு தாங்க முடியாத அவமானத்தையல்லவா அவ உண்டாக்கிட்டா? அந்த மகாபாவி இப்படி செய்வான்னு யார் நினைச்சது மகனே?”

“அம்மாவுக்கு என்ன அவமானம்? தவறு எல்லாருக்கும் நடக்கறதுதானே? நான் கொஞ்சம் சாருவைப் பார்க்கணும்.”

“என் மகனே, நீ அவளைப் பார்க்க வேணாம். அந்த மகாபாவியின் முகத்தை நீ பாக்க வேணாம்.”

உள்ளே கதவிற்கு அப்பால் ஒரு வெடித்துச் சிதறும் அழுகைச் சத்தம். சங்கு உள்ளே நுழைந்தான். சாரு உள்ளே நுழைந்தான். சாரு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தாள். அழும்போது அவளுடைய முதுகு குலுங்கியது. அவளுடைய பாதத்தில், தரையில் சில கண்ணீர்த் துளிகள் விழுந்து உடைந்தன.

“சாரு...”

“அண்ணா, போயிருங்க என்னைப் பார்க்க வேணாம்.”

“சாரு, நான் ஒண்ணு கேட்டால் நீ சொல்லுவியா?”‘

அவள் சங்குக்கு நேராகத் திரும்பி நின்றாள். கர்ப்பத்தின் சோர்வு நிறைந்த, ஈரமான கண்கள்... கன்னங்களில் உதிர்ந்து விழுந்துகிடக்கும் தலைமுடி...

“சொல்லுவியா? அப்படின்னாதான் கேட்பேன்.”

“ம்...”

அவள் உள்ளங்கையால் கண்களைத் துடைத்தாள்.

“யாரு?”

“கோபி”

“புத்தகக் கடையின்...”

அவள் ஒரு வெடிக்கும் அழுகையுடன் உள்ளே ஓடிப்போனாள்.

“அம்மா...”

தாயும் மகனும் சாப்பிடும் மேஜைக்கு அருகில் அமர்ந்திருந்தார்கள்.

“ம்...?”

“அம்மா, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”

“என்னடா மகனே?”

“எனக்கு திருமணம் நடக்கணும்.”

தாயின் கண்களில் சந்தோஷம் மெழுகுவர்த்தியைப் போல எரிந்து படர்ந்தது.

“அம்மா, கொஞ்ச காலமாவே நீங்க என் கல்யாணத்தைப் பற்றி சொல்லிட்டு வர்றீங்களே?”

சங்கு கூறியதை அவளால் நம்பவே முடியவில்லை. தனக்கு எந்தச் சமயத்திலும் திருமணமே வேண்டாமென்றும், தனி ஒருவனாகத்தான் தான் பூமிக்கு வந்து சேர்ந்ததாகவும், தனி ஒருவனாகவே திரும்பிச் செல்ல வேண்டுமென்பதுதான் தன்னுடைய விருப்பமென்றும் அவன் உறுதியான குரலில் சமீபகாலமாக கூறிக் கொண்டிருந்தான். அதற்குப் பிறகு திருமண விஷயத்தைப் பற்றி அவனுடைய தாய் பேசுவதேயில்லை.

“இந்த முறையே...”

“அம்மாவுக்கு இதைவிட ஒரு பெரிய சந்தோஷமில்லை, மகனே.”

“ஆனால்...”

“ஒரு ஆனாலும்  இல்லை, சங்கு. உடனே நடக்கணும். உடனே...”

தாய்க்கு சந்தோஷத்தால் மூச்சுவிட முடியவில்லை.

“பெண்ணை நான்தான் தேர்ந்தெடுப்பேன்.”

“பிறகு... அதைப்பற்றி சொல்லணுமா சங்கு?”

“எனக்கு விருப்பமான பெண்ணுக்கு எதிர்ப்பு சொல்லமாட்டேன்னு உறுதிமொழி தாங்கம்மா. ஸ்வயர் அப்பான் மீ...”

“இதோ, வாக்குறுதி தர்றேன்.”

“நான் சாருவை கல்யாணம் செஞ்சுக்கிறேன்.”

தாய் அதிர்ச்சியடைந்துவிட்டாள். இன்று வழக்கத்தைவிட அதிகமாக ‘பங்க்’ பருகிவிட்டானோ?

“நீ என்னிடம் விளையாடுறியா?”

“இல்லை அம்மா... ஐ ஆம் சீரியஸ்...”

அன்னை மிகவும் அமைதியாக இருந்தாள். சங்குவின் கண்களிலிருந்து தெளிவையும் அவனுடைய குரலிலிருந்த உறுதியையும் பார்த்தபோது, அவன் சுய உணர்வுடன்தான் பேசுகிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவள் உணவே சாப்பிடாமல் எழுந்து போய்விட்டாள். சங்கு அவளை பதைபதைக்கச் செய்துவிட்டான். சாரு நல்ல ஒரு இளம் பெண்தான். வயதிலும் தோற்றத்திலும் சங்குவுக்குப் பொருத்தமானவள்தான். ஆனால், இந்த உலகத்தில் இருப்பது தானும் சங்குவும் மட்டுமல்லவே! ஊரிலுள்ளவர்கள் என்ன கூறுவார்கள்? அவர்களின் முகத்தை எப்படிப் பார்ப்பது? யாரோ ஒருவனின் கர்ப்பத்தை வயிற்றுக்குள் சுமந்து கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணை...


“அம்மா, நீங்க என்ன சொல்றீங்க?”

மறுநாள் சங்கு கேட்டான். ஒரு லுங்கியை மட்டும் அணிந்து கொண்டு, வாயில் டூத் பிரஷ்ஷை வைத்துக் கொண்டு, வாசலில் அவன் நடந்து கொண்டிருந்தான்.

“டேய், நீ சுய உணர்வோடதான் பேசுறீயா? ‘பங்க்’க்கு அடிமையாறது கட்டுப்பாடுகள்லயிருந்தும் சடங்குகள்லயிருந்தும் விடுதலை பெறச் செய்யும்னு நீ சமீபத்தில் சொன்னாயில்லையா? டேய், அந்த விஷயம் இப்போதே உனக்கு நடந்துட்டதா?”

“இல்லம்மா... எனக்கு சுய உணர்வு இருக்கு. அம்மா நீங்க என்ன தீர்மானிச்சீங்க?”

சங்கு வாசலில் நடந்துகொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, தன் தாயின் முகத்தையே பார்த்தான்.

சங்குவின் தாய் கல்லூரியிலிருந்து மேலும் ஒருமுறை விடுமுறை எடுத்தாள்- சங்குவையும் சாருவையும் அனுப்பி வைப்பதற்காக. ஸ்டேஷனில் கஃபூரும் சங்குவின் வேறு சில நண்பர்களும் வந்திருந்தார்கள். புத்தகக் கடையில் இறந்த உடலைப்போல நின்றிருந்தான் கோபி.

“அம்மாவுக்கு ஏற்ற மகன். மகனுக்கு ஏற்ற அம்மா.” ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்கள் கூறினார்கள்.

“படிப்பும் விபரமும் உள்ளவர்கள். இல்லைன்னா, பைத்தியக்காரத்தனம்னுதான் சொல்லணும்.”

“டேய், இந்தக் காலத்தில் படிப்பும் விவரமும் இருப்பவங்களுக்குதான் பைத்தியமே பிடிச்சிருக்கு.”

சங்குவையும் சாருவையும் ஏற்றிக் கொண்டு வண்டி நகர்ந்தவுடன், சங்குவின் தாய் வெளியே வந்தாள். மாதவன் காரின் கதவைத் திறந்துவிட்டான். அவள் உள்ளே ஏறி அமர்ந்தாள்.

“உனக்கு விருப்பமான இடத்துக்கு மாதவா...”

நிறம் மங்கலாகிக் காணப்பட்ட உதடுகளிலும், பார்வை சக்தி குறைந்து கொண்டு வரும் கண்களிலும் ஒரு மலர்ச்சியுடன், இருக்கையில் கண்களை மூடிக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.