Logo

பயணத்தின் ஆரம்பம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5682

பயணத்தின் ஆரம்பம்

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

வன் எந்த ஸ்டேஷனில் வண்டியில் ஏறியிருப்பானென்று நான் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். நிச்சயம் அது காலை பரபரப்பு ஆரம்பமாவதற்கு முன்பாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு உட்கார இடம் கிடைத்திருக்கும் வாய்ப்பே இல்லையே! இடமென்று கூறும்போது அவனுக்கு ஒரு ஆளின் இடமல்ல- இரண்டு ஆட்களுக்கான இடம் தேவைப்படும். அதற்கேற்ற உயரமும் அவனுக்கிருந்தது. நின்றால், கிட்டத்தட்ட மேற்கூரையில் தட்டக்கூடிய அளவுக்கு இருக்கும்...

எனக்கு எதிரே இருந்த இருக்கையில்தான் அவன் அமர்ந்திருந்தான். இருக்கைக்கு அடியில் அவனுடைய ஃப்ளெக்ஸிபிள் சூட்கேஸ் இருந்தது. சூட்கேஸ் என்று கூறினால்- நான் அப்படிப்பட்ட ஒன்றை அதற்கு முன்பு எந்த சமயத்திலும் பார்த்ததே இல்லை. அது ஒரு சவப்பெட்டியை எனக்குள் ஞாபகப்படுத்தியது. பர்த்தின் ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனி வரை இருக்கக் கூடிய...

என்னுடைய கண்கள் மாறிமாறி அந்த சூட்கேஸிலும் அவனுடைய முகத்திலும் பதிந்து கொண்டிருந்தன.

பொதுவாகவே அந்த அளவுக்குப் பெரிதாக இருக்கும் ஒரு மனிதனின் முகம் அப்படியொன்றும் அழகாக இருக்காது. ஆனால், எனக்கு முன்னால் அமர்ந்திருந்த பயணியின் முகம் அழகானதென்று கூற முடியாவிட்டாலும், அவலட்சணமாக இல்லை என்பது மட்டும் உண்மை. குறிப்பாக அவனுடைய அடர்த்தியான தலைமுடி அதற்கு நல்ல மினுமினுப்பும் கருப்பு நிறமும் இருந்தன. முடிச் சுருள்கள் நெற்றியில் விழும்போது, தங்கத்தாலான- கனமான ப்ரேஸ்லெட் அணிந்திருந்த கையால் அவன் இடையில் அவ்வப்போது அதை மேல்நோக்கி ஒதுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.

சாம்பல் நிறத்திலிருந்த ஜீன்ஸும், அடர்த்தியான மஞ்சள் நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான். இரண்டும் மிகவும் தரம் வாய்ந்தவையாக இருந்தன. அவனுடைய கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி தொங்கிக் கொண்டிருந்தது. சட்டையின் இடைவெளி வழியாக அதைப் பார்க்க முடிந்தது. அவ்வளவு பெரிய ஒரு சங்கிலியை ஒரு ஆணின் கழுத்தில் அதற்கு முன்பு எந்த சமயத்திலும் நான் பார்த்ததே இல்லை. ஒரு தடிமனான காளையின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியைப் போல அது இருந்தது.

அவன் அணிந்திருந்த கடிகாரமும் அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. தங்கக் கட்டியால் செய்யப்பட்ட ஒரு பெரிய கைக்கடிகாரம். அது அவனுடைய இடது கையில் கிடந்து பளபளத்துக் கொண்டிருந்தது.

அந்த பெரிய கைக்கடிகாரத்தின் ‘ப்ராண்ட்’ என்னவென்பதைத் தெரிந்து கொள்ள நான் விரும்பினேன். இடையில் அவ்வப்போது அதைக் கூர்மையாக கவனித்தேன் என்றாலும், என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒமேகா, ராடோ, ரோலக்ஸ் போன்ற எனக்குத் தெரிந்த ப்ராண்ட்கள் எதுவுமில்லை. இறுதியில் ஏதோ மிகவும் விலைமதிப்புள்ள கடிகாரமாக இருக்கலாமென்று நினைத்தேன்.

கடிகாரத்தை நான் கூர்ந்து கவனிக்கிறேன் என்ற விஷயம் அவனுக்குத் தெரிந்துவிட்டதென்று நினைக்கிறேன். திடீரென்று அவனுடைய முக வெளிப்பாடுகள் மாற, மிகக் கூர்மையாக அவன் என்னைப் பார்த்தான். ஏனென்று தெரியவில்லை- காரணமே இல்லாமல் எனக்கு பயம் உண்டானது. திடீரென்று அவனிடமிருந்து நான்முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

வண்டியில் இப்போது நல்ல கூட்டம் இருந்தது. நடந்து செல்லும் பாதையில் மட்டுமல்ல, இருக்கைகளுக்கு மத்தியிலும் ஆட்கள் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்திற்கு மத்தியில் பிச்சைக்காரர்களும் வியாபாரிகளும் வழக்கம்போல சத்தத்தை உண்டாக்கியவாறு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

வண்டியில் சிறிதுகூட காற்றில்லை. மேலே காற்றாடிகள் பலவும் செயல்படாமல் இருந்தன. யார் யாரோ பென்சிலையும் வேறுசில பொருட்களையும் வைத்து அவற்றின் இதழ்களை அசைப்பதற்கு முயற்சி செய்தும், அவை எதுவுமே வெற்றி பெறவில்லை. காற்றாடிகள் ஒரு பிடிவாதத்துடன் அசைவே இல்லாமலிருந்தன.

எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் நிலை குலைந்து விழுந்துவிடுவேனோ என்ற பயம் உண்டானது. என்னால் எந்த சமயத்திலும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதனால்தான் கோடைகாலத்தில் முடிந்தவரை பகல் நேர வண்டிகளில் செல்லும் பயணத்தைத் தவிர்த்துவிடுவேன்.

ஆனால், இங்கு இப்போது வெப்பம் மட்டுமல்ல. தூசி, சத்தம், வியர்வை, சிறுநீர் ஆகியவற்றின் கெட்ட வாடை வேறு...

(கழிப்பறையின் கதவை யாரோ வழக்கம்போல திறந்து விட்டிடிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.)

என்னைச் சுற்றிலும் ஆட்கள் இருந்தார்கள். பக்கங்களில் ஆட்கள், முன்னாலிருந்த இருக்கையிலும் இருக்கைகளும் நடுவிலும் ஆட்கள்... இதைப் போலவே இருக்கைக்குப் பின்னால்... பிறகு நடைபாதையில்... எங்கும், எங்கும்...

இந்த ஆட்களின் கூட்டத்திற்கு மத்தியிலும் ஏதோவொரு தூண்டுதலில் மாட்டிக் கொண்டதைப் போல, களைத்துப்போன என் கண்கள் தங்கத்தாலான பெரிய சங்கிலியையும், கைக் கடிகாரமும் அணிந்திருந்த பயணியின் முகத்தில் பதிந்துகொண்டிருக்க, அந்தச் சமயத்தில் அவன் என்னையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்து, இனம்புரியாத பயத்துடன் என் கண்களை பின்னோக்கி இழுத்துக் கொண்டேன்.

இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத அந்த ஆள் என்னையே எதற்காக கூர்ந்து பார்க்க வேண்டும் என்பதை நினைத்தபோது, என்னுடைய களைப்பும் பதைபதைப்பும் அதிகமாயின.

அப்போது திடீரென்று இன்னொரு அனுபவம் ஞாபகத்தில் வந்தது. சில வருடங்களுக்கு முன்பு நடந்தது அது. நான் கயாவிலிருந்து காசிக்குச் சென்றபோது, அன்று வண்டியில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு வகையான முரட்டுத்தனம் கொண்டவர்களாக இருந்தார்கள். எல்லாரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே அவர்களின் கூட்டத்தைச் சேராதவனாக இருந்தேன். முதலில் நான் அதைப் பற்றி சிறிதுகூட நினைத்துப் பார்க்கவில்லை.

மாலை நேரம் ஆனபோது, எல்லாரும் பையிலிருந்தும் தலைப்பாகைக்கு மத்தியிலிருந்தும் எதையோ எடுத்து உள்ளங்களையில் வைத்து அழுத்திக் கசக்க ஆரம்பித்தார்கள். கசக்கும் செயல் முடிந்ததும், அவர்கள் அதை வாய்க்குள் போட்டார்கள். பிறகு போராட்டம் வாய்க்குள் என்றானது அந்த சமயத்தில் யாரும் எதுவும் பேசவே இல்லை. மோசமான விளைவுகள் உள்ளதும், பயங்கரத்தன்மை கொண்டதுமான ஒரு சம்பவத்திற்கு முன்னோடிதான் அதுவென்று உடனடியாக எனக்குத் தோன்றியது. அப்போது எனக்கு மிகுந்த பயம் உண்டானது. அவர்களைச் சேர்ந்திராதவன் என்ற வகையில் வண்டியிலிருந்தவன் நான் மட்டும்தானே. எனினும் அவர்களின் முகங்களிலிருந்து கண்களை எடுக்காமல் ஒரு சிலையைப்போல நான் அமர்ந்திருந்தேன்.

திடீரென்று அவர்களுக்கு மத்தியிலிருந்து ஒருவன் உரத்த குரலில் என்னிடம் கேட்டான்-

“வேணுமா?”

‘வேண்டும்’ என்றோ ‘வேண்டாம்’ என்றோ எதுவும் கூறமுடியாமல் நான் விழித்துக் கொண்டிருந்தேன்.

உண்மையிலேயே அந்தக் கேள்வி என்னை முழுமையாக அதிர்ச்சியடையச் செய்தது.

எனக்கு அவர்களின் மொழியைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர்கள் என்னிடம் தங்களுக்கிடையேயும் பலவற்றையும் உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்கள். மரணத்தின் அருகில் உறைந்து போய் நின்று கொண்டிருப்பதைப் போல நான் இருந்தேன். காசியை அடையும்வரை நான் வாயைத் திறக்கவேயில்லை.


மிகவும் முன்பு... அன்று... உள்ளங்கையில் வைத்திருந்த இலைகளை மெதுவாக நசுக்கி வாய்க்குள் போட்டு ஒதுக்கிய அந்த முரட்டு மனிதர்களில் ஒருவன்தான், இப்போது மஞ்சள் நிற சட்டை அணிந்து எனக்கு முன்னால் அமர்ந்திருக்கிறான் என்று தோன்றியது.

நான் கூறவில்லை- அந்த ஆள் வந்ததிலிருந்தே மிகவும் உரத்த குரலில் சுற்றியிருந்தவர்களிடம் பேசிக் கொண்டேயிருந்தான். ஆட்கள் தன்னிடம் பதிலுக்கு உரையாட வேண்டுமென்ற கட்டாயம் அவனிடம் இருக்கிறதென்று தோன்றவில்லை. ஒரு கடமையை நிறைவேற்றுவதைப்போல அவன் பேசிக் கொண்டேயிருந்தான். வெளிநாட்டில் எங்கோ நீண்டகாலம் வேலை செய்தது. ‘இனி போதும்’ என்று நினைத்து எல்லாவற்றையும் உதறியெறிந்துவிட்டு ஊருக்குத் திரும்பி வந்தது. இங்கு நிலவிக் கொண்டிருக்கும் திருப்தியில்லாத சூழ்நிலைகளைப் பார்த்து மனதில் வெறுப்பு உண்டாகி மீண்டும் புறப்பட்டு வந்த திசைக்கே திரும்பிச் செல்வது, தனக்கு ஏ.ஸியில் முன்பதிவு கிடைக்காமல் போனது- இப்படி பலவற்றைப் பற்றியும் அவன் பேசிக் கொண்டேயிருந்தான். இதற்கிடையில் ஒன்றுக்குப் பிறகு இன்னொன்றாக அந்த ஆள் சிகரெட்டைப் புகைத்துத் தள்ளிக் கொண்டிருந்தான். கேள்விகளை யாரிடம் என்றில்லாமல் கேட்பது, பல நேரங்களில் தானே அவற்கு பதில் கூறுவது, நிறுத்தாமல் புகைபிடிக்கும் செயல் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

ஆனால், யாரும் அவனிடம் அதைப் பற்றி எதுவும் எதிர்த்துப் பேசவில்லை. ‘தயவு செய்து இந்த ஆட்களின் கூட்டத்தில் இருந்து கொண்டு சிகரெட் புகைக்காமல் இருக்க’ என்று கூறவேண்டுமென நான் நினைத்தேன். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும், அப்படி கூறக் கூடிய தைரியத்தைக் கொண்டுவர என்னால் முடியவில்லை. அதனால் ‘சக பயணிகளுக்கு ஆட்சேபனை இருக்கும் பட்சம், வண்டிக்குள் அமர்ந்து புகைபிடிப்பது தண்டனைக்குரியது’ என்று முன்பு எப்போதோ ரயில்வே இலாகாவினர் எழுதி வைத்ததை மீண்டும் மீண்டும் வாசித்து, நான் அமைதியாக உட்கார்ந்திருக்க மட்டுமே செய்தேன்.

பயணத்தில் எப்போதோ எனக்கருகில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் முன்னோக்கி நகர்ந்து, அந்த ஆளிடம் என்னவோ மெதுவான குரலில் கூறுவதைப் பார்த்தேன். என்னைப் பற்றித்தான் கூறியிருக்க வேண்டுமென்று நினைத்தேன். நான் நினைத்தது சரியாகவே இருந்தது. தங்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் முடிவடைந்ததும், அவன் என்னையே வெறித்துப் பார்த்தான். அவனுடைய முகத்தில் ஏதோ சந்தேகம் நிழலாடுவதைப் போல இருந்தது. அவன் தலையை அசைத்தவாறு சொன்னான்- “இல்லை... இல்லை... நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. நான் ஏராளமாக வாசிக்கக்கூடிய ஒரு மனிதன் எனினும், இதுவரையில்... இல்லை கேள்விப்பட்டதே இல்லை.”

தொடர்ந்து ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்துவிட்டு அவன் மீண்டும் சொன்னான்- “அப்படியே இருந்தாலும், இப்போது யார் கதை எழுதாமல் இருக்கிறார்கள்? எல்லாருமே எழுத்தாளர்கள்தான். ஆனால், எழுதுவதாக இருந்தால், கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சமீபத்தில் எழுதினாளே... தெய்வத்தைப் பற்றியோ என்னவோ... அப்படி எழுதணும். அமெரிக்காக்காரன் அந்த இளம்பெண்ணுக்கு, புத்தகத்தை அச்சடிப்பதற்கு முன்பே மூன்றரை கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறானே. மூன்றரை கோடி? நம் நாட்டில் இதற்கு முன்பு யார் இப்படி எழுதி மூன்றரை கோடியை முன்பணமாக வாங்கியிருக்கிறார்கள்? எழுவதாக இருந்தால்...”

கனமாக இருந்த தங்கச் சங்கிலியையும் ப்ரேஸ்லெட்டையும் கைக் கடிகாரத்தையும் அணிந்திருந்த பயணி, இந்த விஷயங்களையெல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் கூறிக்கொண்டிருந்தான்.

நான் எல்லாவற்றையும் மிகவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். உஷ்ணம், சத்தம், ஆட்களின் கூட்டம் ஆகியவற்றுக்கும் மேலாக, உரிய நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாமல் போனதால் ஏற்பட்ட களைப்பையும் கடந்து, மேலோட்டமான வார்த்தைகளும் சேர்ந்தபோது- நீருக்குள் மூழ்கிக் கீழே போய்க் கொண்டிருக்கும் ஒருவன் எப்படியோ நிமிர்ந்து வந்து மிதந்துகொண்டிருக்கும் ஒரு கட்டையைப் பிடித்து, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலிருக்கும் ஆழத்தில் செயலற்ற நிலையில் எங்கேயோ இழுத்துச் செல்லப்படுவதைப்போல...

கிளம்பும்போது மனைவி கேட்டாள்-

‘இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இப்போது இவ்வளவு தூரத்திற்கு போயே ஆகணுமா? அதுவும் இந்த பகல் வண்டியில்... நோயைப் பற்றி சொல்லி, வர முடியாதுன்னு சொல்லக் கூடாதா?’

போகாமலிருக்க முடியாதென்று நான் கூறியபோது, மனைவி மீண்டும் சொன்னாள்-

“அப்படின்னா, கொஞ்சம் முன்னாடியே அவங்க சொல்லியிருக்காலாமே. இல்லைன்னா ஒரு ஏ.ஸி.யோ முதல் வகுப்போ டிக்கெட் எடுத்து அனுப்பியிருக்கலாமே! அங்கு வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு ஏராளமாக பணம் செலவாகுமில்லியா? ஆனா, உங்களுடைய பயணம்னு வரும்போது...”

நான் மீண்டும் எதுவும் கூறாமல் இருந்தவுடன், மனைவி வெறுப்புடன் சொன்னாள்:

'இல்லை... நான் எதுவும் சொல்லலை. உங்க விருப்பப்படி எல்லாத்தையும் செஞ்சுக்கங்க. ஆனா, மருந்து விஷயத்தை மறந்துடக் கூடாது. நான் எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கேன், மதிய உணவிற்குப் பிறகு சாப்பிட வேண்டியது... சாயங்காலம்... ராத்திரி... எல்லாம் தனித்தனியாக எடுத்துவச்சிருக்கேன். மறக்காம இருந்தால் போதும்...

'இல்லை... மறக்கமாட்டேன்' என்று மனைவியை அப்போது சமாதானப்படுத்தினேன்.

அந்த அளவிற்காவது செய்ய வேண்டுமே! ஆனால், இப்போது...

மதிய நேர உணவு கூட சாப்பிட முடியவில்லை. அதற்குப் பிறகு தானே மருந்து...

ஆனால், மருந்து மிகவும் முக்கியமானதுதான். இதயத்தின் செயல்பாட்டை சீர்படுத்துவது... பிரச்சினை எதுவும் வராமல் பார்த்துக் கொள்வது... ஒருமுறை பிரச்சினை வந்தபோது காப்பாற்றியது...

டாக்டரும் சொன்னார்.

'கவனமா இருக்கணும். உரிய நேரத்தில் மருந்தை சாப்பிடணும். எந்த சமயத்திலும் அது நின்னுடக்கூடாது. பிறகு... உங்களுடைய இந்த பயணம் இருக்கிறதே... இலக்கியம், இசைன்னு சொல்றது... நான் சொல்லலை. ஒரு கட்டுப்பாடு... ஒரு கண்ட்ரோல்... அது கட்டாயம் வேணும்.'

நானும் டாக்டரிடம் கூறினேன்:

'இல்லை டாக்டர்... ஒரு பிரச்சினையும் வராது. இன்னைலயிருந்து எல்லா விஷயங்களும் மிகவும்...'

'பிறகு...'

நான் அவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.

பகல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்த வண்டி மாலையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

இனி சிறிது நேரம் கடந்தால், இறங்கவேண்டிய இடம். இறுதி ஸ்டேஷன்.

வண்டியில் இப்போது ஆட்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள்.

பலரும் வழியில் வந்த ஸ்டேஷன்களில் இறங்கிவிட்டார்கள். மஞ்சள் நிற டீஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்த, தடிமனான பயணியும் போய்விட்டிருந்தான்.

தன்னுடைய பெரிய பெட்டியை எடுத்துக் கொண்டு அவன் சென்றபோது நான் பார்க்கவில்லை. நினைத்துப் பார்த்தபோது, எனக்கு ஆச்சரியம் மட்டுமல்ல, வருத்தமும் உண்டானது. எவ்வளவு சீக்கிரம் நாம்...

ஸ்டேஷன்.

நான் ப்ளாட்ஃபாரத்தில் சிறிது நேரம் தயங்கி நின்றிருந்தேன்.

கடலிலிருந்து வந்து கொண்டிருந்த குளிர்ச்சியான காற்று ப்ளாட்ஃபாரத்தை வருடியவாறு போய்க் கொண்டிருந்தது.


என்னை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக யாரும் வந்திருக்கவில்லை.

ப்ளாட்ஃபாரத்தின் முடிவுவரை என்னுடைய களைத்துப்போன கண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நகர்ந்து போய்க் கொண்டிருந்தன. எங்கேயாவது...

இல்லை... யாருமில்லை...

ஆனால், நான் எனக்குள் கூறிக் கொண்டேன்.

'வருவார்கள்... வராமலிருக்க மாட்டார்கள். கட்டாயம் வருவார்கள். ஒருவேளை, இப்போது... இந்த நிமிடத்தில்... ஏதாவது ட்ராஃபிக் ஜாமில் சிக்கி, ஸ்டேஷனுக்கு...'

மனைவியின் கவலை நிறைந்த முகம் அப்போது மனதில் தோன்றியது.

மனைவி சொல்வாள்- 'நான் முதலிலேயே சொன்னேன்ல?'

யாருமில்லாத ஒரு பெஞ்ச்சில், அவர்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு கண்களை மூடி நான் அமர்ந்திருந்தேன்.

வரட்டும்... அதுவரை...

வண்டி சாரல் மழைக்கு மத்தியில் முன்னோக்கி வேகமாகப் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது.

கம்பார்ட்மெண்ட்டில் சுகமான குளிர்ச்சி இருந்தது. ஆட்களும் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். சிறிய வாய்க்கால்களாக வழிந்து கொண்டிருந்த நீரை, கண்ணாடி சாளரத்தின் வழியாக நான் வெளியே பார்த்தேன். கலங்கிக் காணப்பட்ட குளத்து நீரில் பத்து பன்னிரண்டு வயதுள்ள சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகத்திற்கும் சந்தோஷத்திற்கும் அளவே இல்லாமலிருந்தது. இவ்வளவு காலமும் அவர்கள் காத்திருந்தது மழைக்குத்தான் என்று தோன்றியது. அவர்களுடன் நீரில், அவர்களுடைய எருமைகளும் இருந்தன. தலையை மட்டும் வெளியே காட்டியவாறு எருமைகள் சமாதி நிலையில் இருப்பதைப்போல கிடந்தன...

அடர்த்தியான பச்சை நிறத்திலிருந்த நெற்கதிர்கள், மழையில் கீழேயிருந்து உச்சி வரை சிலிர்ப்படைந்து நின்றிருந்தன. தொடர்ந்து சிறிது சிறிதாக வயலிலிருந்த கதிர்கள் முழுதும் ஆடியசைய ஆரம்பித்தன. அழகான ஒரு நடனத்தில் இருப்பதைப் போல...

தூரத்தில் மலைகள் இருந்தன. ஒன்றுக்குப் பின்னால் இன்னொன்றாக மலைகள்... மலைகளின் சரிவுகளில் கருத்த காடுகள்...

மலைகளுக்கு மேலே நீர் நிறைந்த மேகங்கள் தங்கி நின்றிருந்தன.

வண்டி மழைக்கு நடுவில் முன்னோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.