Logo

ஒளிவிளக்கு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5830
Olivilakku

ஒளிவிளக்கு

சாராதிந்து பந்தோபாத்யாய்

தமிழில் : சுரா

ன்கு படித்த ஒரு மனிதரின் பெயரை, நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு செயலுடன் இணைத்துவிட்டால், யாருமே அதை நம்பாமல் இருக்க மாட்டார்கள். ‘இன்றிரவு அடர்த்தியான இருட்டில்­நடந்து போய்க் கொண்டிருந்தபோது நான் ஒரு பேயைப் பார்த்தேன்’ என்று கூறினால், என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘இந்த மனிதன் ஒரு பொய்யனாக இருக்க வேண்டும் அல்லது ஒரு குடிகாரனாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள்.

ஆனால், சர் ஆலிவர் லாட்ஜ், ‘நூற்றுக்கணக்கில்... ஆயிரகணக்கில்... உடம்பிலிருந்து வெளியேறிய ஆவிகள் உலகமெங்கும் சுற்றித் திரிகின்றன’ என்று எழுதியபோது, மக்கள் அதை ஆர்வத்துடன் வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை - அதை ஏற்றுக்கொள்வதைப்போல தங்களின் தலைகளையும் ஆட்டினார்கள். இந்த காலகட்டமே நம்பிக்கையின்மையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையில்லாத நிலையும் நிறைந்திருக்கும் ஒன்றே. அதே நேரத்தில் ஒரு புகழ்பெற்ற மனிதரின் பெயரை இணைத்துவிட்டால் அதே சம்பவத்தை மக்கள் மத்தியில் நம்பும்படி செய்வது மிகவும் எளிதான விஷயமாகவே இருக்கிறது. பெரும்பாலும் அவ்வாறு இணைக்கப்படும் பெயர், ஒரு பெரிய நவீன மேற்கத்திய அறிஞரின் பெயராக இருக்கவேண்டும். பண்டைய அல்லது ஒரு இந்திய அறிஞரின் வார்த்தைகளுக்கு எந்தக் காலத்திலும் அதற்கு நிகரான மதிப்பு இருக்கவே இருக்காது.

இப்படிப்பட்ட சூழலில், தன்னுடைய முற்பிறவியில் நடைபெற்ற சம்பவங்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு மனிதன் நான் என்ற உண்மையை மக்களிடம் கூறி, அவர்களை அந்த விஷயத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வது என்பதில் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் இருந்தது. நான் மேற்கத்திய அறிஞர் யாருடைய பெயரையாவது பயன்படுத்த முடியாது. நான் ஒரு சாதாரண நிலையிலிருக்கும் ரயில்வே க்ளார்க். நீண்ட பதின்மூன்று வருடங்கள் வேலைபார்த்த பிறகும், நான் ஒரு மாதத்திற்கு எழுபத்தாறு ரூபாய்தான் சம்பளமாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கடந்த பிறவிகள் சம்பந்தப்பட்ட கதைகளை நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறதா? இது நகைக்கக்கூடிய ஒரு விஷயமாக இல்லையா?

ராஜ்கிர்ரின் சிதிலமடைந்து கிடக்கும் இடங்களைப் போய் பார்க்க வேண்டும் என்பதற்காக, ரயில்வேயின் இலவச அனுமதிச் சீட்டுக்கு ஏற்பாடு செய்தேன். ஒரு அடர்த்தியான காட்டின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, உடனடியாக என்னுடைய கண்களுக்கு முன்னால் நேரத்தின் திரைச்சீலை விலகியது. அப்போது நான் பார்த்தவை எவ்வளவு பழமையானவை என்பதை என்னால் கூற முடியவில்லை. அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தையவையாக இருக்குமா? அல்லது மூன்று...? ஆனால், நான் நினைக்கிறேன் - அந்தச் சமயத்தில் பூமி இளமையாக இருந்திருக்க வேண்டும். வானம் நீல நிறத்தில்... புல் பச்சையாக...

கடந்தகாலப் பிறவிகளைப் பற்றி என்னைப் போன்ற ஒரு சாதாரண க்ளார்க் நினைத்துப் பார்ப்பதென்பது நகைப்பிற்குரிய ஒரு விஷயமே. அதே நேரத்தில்... தீர்மானமான குரலில் என்னால் கூற முடியும். இப்போது பாரதம் என்றோ இந்தியா என்றோ அழைக்கப்படும் இந்த நாட்டில் நான் மீண்டும் மீண்டும் பிறவி எடுதிருக்கிறேன். சில நேரங்களில் ஒரு அடிமையாக... சில நேரங்களில் ஒரு அரசனாக. என்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, நான் சிரிக்கிறேன். ஒரு காலத்தில் அழகான இளம்பெண்களைக் காப்பாற்றிய, போர்களில் ஈடுபட்ட, போர்களில் வெற்றி பெற்ற அந்த மனிதனா நான்? சில நேரங்களில் அலுவலகத்தில் என்னுடைய பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது, நான் வாய்விட்டு சிரித்துவிடுவேன்.

ஆனால், ராஜ்கிர்ரின் காடுகளின் சிதிலங்களுக்கு நடுவில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த இடம் ஏற்கெனவே எனக்கு நன்கு தெரியும் என்பதாகவே உணர்ந்தேன். இப்போது இருப்பதைப்போல அப்போது அந்த இடமில்லை. கட்டடங்கள், சாலைகள், நன்கு ஆடைகள் அணிந்த ஆண்கள், பெண்கள்... சில நேரங்களில் “நான் ஒரு அருங்காட்சியகத்திற்குச் செல்லும்போது, கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான சிற்பத்தைப் பார்ப்பேன். அப்போது என்னுடைய இதயத்தில் ஒரு அதிர்ச்சி உண்டாகும். என்னுடைய குரல் உணர்ச்சிகளுக்குள் சிக்கி பேசமுடியாத அளவிற்கு ஆகிவிடும். அந்த அழகான சிற்பத்தைச் செதுக்கியவனே நான்தான். மன்னர் கனிஷ்கரின் காலத்தில் ஒரு புத்த மடத்திற்காக நான் அந் சிற்பத்தைச் செதுக்கினேன். நான் அரண்மனைச் சிற்பியாக அப்போது இருந்தேன். அரசனின் நாட்டியப் பெண்ணால் அந்தப் பிறவியில் நான் விஷம் ஊட்டப்பட்டேன். அவள் கூறியபடி, அவளை நான் காதலிக்கவில்லை என்பதே அதற்குக் காரணம்.

அறையின் ஒரு மூலையில் நான் எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று என்னுடைய பார்வையிலிருந்து இப்போதைய உலகம் மறைந்துவிடுகிறது. ஒரு மிகப்பெரிய துறவியின் முகத்தை நான் பார்க்கிறேன் - ‘இருட்டுக்குள்ளிருந்து வெளிச்சத்திற்கு என்னை வழிநடத்திச் செல்லுங்கள். நிலையற்ற தன்மையிலிருந்து நிலைத்து நிற்கும் தன்மைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்.’ நான் அந்த மிகப்பெரிய மனிதரைப் பார்த்திருக்கிறேன். அவருடைய குரலைக் கேட்கவும் செய்திருக்கிறேன். ஆனால், ஒரு ஒரு முறை. கடந்த காலத்தின் ஆழங்களுக்குள்ளிருந்து நான் அந்த நினைவுகளை எழுதப்போகிறேன்.

மன்னன் அஜாதசத்ரு எல்லா பக்கங்களிலுமிருந்தும் தொந்தரவுகளை சந்தித்துக்கொண்டிருந்தான். அவனுடைய நாட்டின் வடக்கு திசையில் லிச்சாவி இருந்தது. அது அவனுடைய தாய்வழியைச் சேர்ந்தவர்களுக்குரியது. மேற்கு திசையில், தாய்வழியைச் சேர்ந்த இன்னொரு உறவினருக்கு சொந்தமான நாடு இருந்தது. அந்த மன்னன் கோசலை நாட்டை ஆண்டுகொண்டிருந்தான். அவனுடைய தந்தை பிம்பிசாரன் அமைதியை விரும்பக்கூடிய ஒரு மனிதன். போர்களில் ஈடுபட்டு சண்டை போடுவதற்கு பதிலாக, லிச்சாவி, கோசலை நாடுகளின் இளவரசிகளை அவன் மணம் செய்துகொண்டான். அஜாதசத்ரு மாறுபட்டவனாக இருந்தான். அமைதியாக இருப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் பதிலாக அவன் போர்களில் ஈடுபடுவதையே விரும்பினான். அதனால் தன்னுடைய தந்தையின் ‘எதிர்பார்த்திராத’ மரணத்திற்குப் பிறகு, அஜாதசத்ரு போர்களில் ஈடுபடுவதில் தன் கவனத்தைச் செலுத்தினான்.

ஆனால், அவனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. இரண்டு பக்கங்களிலும் பகைவர்கள் இருந்தார்கள். மேற்கிலிருந்து வடக்கு வரை. அவன் கவனத்தை வடக்குதிசை நோக்கித் திருப்பினால், மேற்கு திசைகளிலிருந்து யாராவது உள்ளே நுழைந்துவிடுவார்கள். மேற்கு திசை நோக்கி கவனத்தைத் திருப்பினால், வடக்கிலிருந்து நுழைந்து விடுவார்கள். மகதநாட்டு அரசன் அஜாதசத்ருவிற்குக் கீழிருந்த சிற்றரசர்கள் ஒன்று பயந்து நடுங்கி ஓடினார்கள். அல்லது எதிரிகளுடன் சேர்ந்துகொண்டார்கள். நாட்டில் சிறிதுகூட அமைதி என்பதே இல்லாமலிருந்தது. மக்கள் சந்தோஷமில்லாமலும், எந்தவித திருப்தியும் இல்லாமலும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். மன்னன் மிகவும் தைரியசாலி; ஆனால் புத்திசாலித்தனம் இல்லாதவன் என்று அவர்கள் நினைத்தார்கள். அவன் ஆட்சி பீடத்தில் இருக்கும் காலம் வரை, நாட்டில் சமாதான சூழ்நிலையும் செல்வச் செழிப்பும் இருக்கவே இருக்காது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், மக்கள் அப்படி நினைத்தது தவறு. அஜாதசத்ரு புத்திசாலித்தனம் இல்லாதவனும் இல்லை - முட்டாளும் இல்லை.


பருவமழையின் காரணமாக போர் தள்ளிப்போடப்பட்டது. அஜாதசத்ரு தன்னுடைய தலைமை. அமைச்சர் வர்ஷாகரை அழைத்தான். நகரத்தின் மையப்பகுதியில் ஒரு தனி இடத்தில் ‘பெனுபன்’ என்ற பெயரில் ஒரு தோட்டம் இருந்தது. பிம்பிசாரன் அதை புத்த பகவானுக்கு பரிசாக அளித்திருந்தான். ஒரு வெறித்தனமான இந்துவாக இருந்த அஜாதசத்ரு தனக்காக அதை கைப்பற்றிக் கொண்டான். இளம் மன்னனும் வயதான அமைச்சரும் அங்கு ரகசிய சந்திப்பை நடத்தினார்கள். நம்பிக்கையற்ற போக்கும், துரோகமும் நிறைந்த காலகட்டமாக அது இருந்தது. நகரெங்கும் ஒற்றர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்கள் துறவிகள், பிச்சைக்காரர்கள், சோதிடர்கள், விலைமாதர்கள், நடனக் கலைஞர்கள்- இப்படி எந்த வேடத்தையும் தரித்துக்கொண்டு நடமாடிக்கொண்டிருந்தார்கள். சமீபத்தில், வைஷாலியிலிருந்து நகரத்திற்கு ஒரு நடனப் பெண் வந்து சேர்ந்திருந்தாள். அவளுடைய பெயர் சாப்பலா. அவள் மிகவும் பேரழகு படைத்தவளாக இருந்தாள். நகரத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவளால் கவரப்பட்டனர். இளம் மன்னனான அஜாதசத்ருவும் அவளை நோக்கி ஈர்க்கப்பட்டான். அதே நேரத்தில் அவள் ப்ரிஜி அல்லது கோசலை நாட்டைச் சேர்ந்த ஒற்று வேலை பார்க்கும் பெண்ணாக இருப்பாளோ என்ற சந்தேகம் அவன் மனதிற்குள் இருந்தது. அதனால், மன்னன் மிகவும் கவனத்துடனேயே இருக்க வேண்டியதிருந்தது. சில நேரங்களில் அவன் தன்னுடைய தலைமை அமைச்சருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, மற்ற அமைச்சர்களைக் கூட அந்த அளவிற்கு நம்பமுடியாத சூழ்நிலைதான் இருந்தது.

தங்களுடைய ரகசியமான உரையாடல்களுக்குப் பிறகு, தலைமை அமைச்சர் வீட்டிற்குத் திரும்பி வந்தார். அந்த கிழட்டு அமைச்சரின் மங்கலாகிப்போன கண்களில் ஒரு ஒளி பளிச்சிடுவதையும், தன்னுடைய வறண்டுபோன, சுருக்கங்கள் விழுந்த உதடுகளில் புன்னகை தவழ்வதையும்- அந்த தோட்டத்தின் வெளிக்கதவிற்கு அருகில் காவலாளியாக நின்று கொண்டிருந்த மனிதன் கவனித்தான்.

இரவு உணவு முடித்து நான் தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய வேலைக்காரப் பெண், என்னைச் சந்திக்க விரும்பி ஒரு பெண் துறவி வந்திருப்பதாகக் கூறினாள். நான் ஆச்சரியப்பட்டேன். ‘ஒரு பெண் துறவி? அதுவும் இந்த இரவு வேளையிலா?’

அரசனால் மிகப்பெரிதாக மதிக்கப்படும் அந்த உயர்நிலையில் இருக்கும் பெண் என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனின் வீட்டிற்கு இந்த இரவு வேளையில் வருமளவிற்கு அப்படியென்ன வேலை இருக்கிறது? நான் அவளை வரவேற்று, வீட்டிற்குள் மரியாதையுடன் அழைத்துவந்தேன். அவளை வணங்கும் வகையில் தலையை குனிந்துகொண்டே சொன்னேன். “அம்மா, உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”

அந்த வயதான மிடுக்கான பெண் என் மரியாதையால் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டாள். அவள் ஒரு பட்டாடையை அணிந்திருந்தாள். அவளுடைய நெற்றியில் ஒரு சிவப்பு நிற அடையாளம் இருந்தது. தன் கையில் நீளமான காம்பைகொண்ட தாமரை மொட்டினை வைத்திருந்தாள்.

அவள் சொன்னாள் : “மலர்களைக் கொண்டு நான் அம்மனை பூஜை செய்துகொண்டிருந்தேன். அப்போது இந்த தாமரை மொட்டு என்னுடைய மடிமீது வந்து விழுந்தது.”

அவள் எதற்காக இதைக் கூறுகிறாள் என்று எனக்குப் புரியவில்லை. அதனால் நான் கேட்டேன்: “அதற்குப் பிறகு?”

அவள் சொன்னாள் : “அம்மன் என்னை என்ன செய்யச் சொல்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் தியானத்தில் அமர்ந்தேன். அப்போது அம்மன் மெதுவான குரலில் என்னிடம் கூறினாள். ‘கட்டட வேலை செய்பவர்களின் தலைவரான குமார தத்தாவிடம்  இந்த தாமரை மொட்டைக் கொடு. இந்த மொட்டின் உதவியுடன் அவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்’ என்று.”

நான் அவளையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்தப் பெண் துறவி சுற்றிலும் பரபரப்புடன் பார்த்தபடி தாழ்வான குரலில் சொன்னாள். “இந்த மொட்டினை எடுத்துக்கொள். உள்ளே விவரங்கள் இருக்கின்றன. உன்னுடைய வேலை முடிந்துவிட்டால், தயவு செய்து இதை அழித்துவிடு. ஞாபகத்தில் வைத்துக்கொள். இந்த மொட்டின் உதவியால் நீ அரசனின் அரண்மனைக்குள்கூட நுழையலாம்.”

இதைக்கூறி, அவள் என்னிடம் அந்த மொட்டினைத் தந்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டாள்: நான் முட்டாளைப் போல சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். முறையாக அவளை வழியனுப்புவதற்குக்கூட நான்- சொல்லப்போனால்- மறந்து விட்டேன்.

நான் ஒரு சாதாரண மனிதன். நான் தொழிலாளர்களுடன் பழகியிருக்கிறேன். அரண்மனைக்காக வேலை செய்யும் கட்டடக் கலைஞர்கள், ஆசாரிகள், மரவேலை செய்பவர்கள் ஆகியோரின் குழுவிற்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். திடீரென்று முக்கியமான நபர்களால் ஈர்க்கப்படும் மையப் புள்ளியாக எப்படி ஆனேன்? அதன் ரகசியம் என்ன? என்னுடைய சிறிய வீட்டிற்கு அந்த உயர்ந்த நிலையில் இருக்கும் பெண் துறவி வருகைதந்து ஏன் ஆசீர்வதிக்க வேண்டும்? எல்லா இடங்களுக்கும் செல்லலாம் என்ற சுதந்திரம் எனக்கு ஏன் கொடுக்கப்பட வேண்டும்? இந்த தாமரை மொட்டினை வைத்துக்கொண்டு  நான் எப்படிச் செயல்பட முடியும்? வேலை முடிக்கப்பட்டவுடன், நான் இதை ஏன் அழித்துவிட வேண்டும்? எனன் வேலை? இப்படிப்பட்ட மிகப்பெரிய சிக்கலுக்குள் இதற்கு முன்பு நான் எந்தச் சமயத்திலும் மாட்டிக்கொண்டதே இல்லை. அதனால், மிகுந்த ஆர்வத்துடன் நான் அமர்ந்திருந்தேன்.

அப்போது இரவு இரண்டாம் சாமம் கடந்துவிட்டிருந்தது. வேலைக்காரி தகவுக்கு வெளியே காத்திருந்தாள். சீக்கிரமாக வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்ற அவசரத்தில் அவள் இருப்பதைப்போல தோன்றியது. நான் அவளிடம் சொன்னேன். “வேண்டுமானால், நீ வீட்டிற்குப் புறப்படலாம். இப்போதே நேரம் அதிகமாகிவிட்டது.” மகிழ்ச்சியுடன் அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

நான் என்னுடைய படுக்கையறைக்குள் தாமரை மொட்டுடன் சென்றேன். விளக்கு வெளிச்சத்தில் அதை ஆராய்ந்து பார்த்தேன்... அதன் இதழ்களில் சில தெளிவற்ற குறிப்புகள் இருப்பதை கவனித்தேன். நான் மிகுந்த கவனத்துடன் இதழ்களைப் பிய்த்தேன். கருப்பு எழுத்தில் உள்ளே ஒரு தகவல் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். ‘இன்று நள்ளிரவு நேரத்தில் நீ மட்டும் தனியாக தலைமை அமைச்சரைப் போய்ப் பார்’- குறிப்பு வார்த்தையாக ‘குத்மல்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்தத் தகவலுக்குக் கீழே மகத நாட்டின் அரசனின் முத்திரை இடப்பட்டிருந்தது.

இப்போது விஷயங்கள் கொஞ்சம் தெளிவாகப் புரிய ஆரம்பித்தன- அந்தப் பெண் துறவியின் ரகசியம் பொதிந்த வார்த்தைகள், அம்மன் தாமரை மொட்டை அளித்தது... தலைமை அமைச்சருக்கு முன்னால் வந்து நிற்கும்படி நான் மிகவும் ரகசியமாக அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த ரகசியங்களெல்லாம் எதற்காக? முழு விஷயத்தையும் பற்றி எனக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. நான் மிகவும் சாதாரணமான ஒரு மனிதன். என்னிடம் தலைமை அமைச்சருக்கு அப்படியென்ன வேலை இருக்கப்போகிறது! அந்த வயதான மனிதர் மிகவும் கோப குணம் கொண்டவர் என்று எல்லாரும் கூறுவார்கள். எனக்கே தெரியாமல் நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? என்னை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக வரவைத்திருப்பாரோ? யாருக்குமே தெரியாத ஒரு ரகசியக் கருவூலத்தைக் கட்டுவதற்காக நான் தேவைப்பட்டிருக்கலாம். அதனால்தான் என்னை இந்த வகையில் அழைத்திருக்கிறார்கள்!


ஆர்வத்துடனும், அச்சத்துடனும், திகைப்புடனும் நான் மேலும் சில நிமிடங்களைச் செலவிட்டேன். அதேநேரத்தில் அரசனின் கட்டளைகளை பொருட்படுத்தாமலும் இருக்க முடியாது. நான் மன விருப்பத்துடன் செல்லவில்லையென்றால், என்னை பலவந்தமாக அழைத்துச் சென்றுவிடுவார்கள். அதனால், ஒரு சால்வையால் என்னை மூடிக்கொண்டு, விதியின் கையில் என்னை ஒப்படைத்துவிட்டேன்.

நகரத்தின் வடக்கு திசையில் என்னுடைய வீடு இருந்தது. தலைமை அமைச்சரின் வீடு நகரத்தின் மையப் பகுதியில் இருந்தது. தெருக்களில் யாருமே இல்லை. தெருக்களின் ஓரத்தில் இருந்த வீடுகள் இருளில் மூழ்கிக் கிடந்தன. நகரம் முழுமையான உறக்கத்தில் இருந்தது. இங்குமங்குமாக, கல் வடிவத்திலிருந்த பெண் கடவுள்களின் உள்ளங்கைகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விளக்கின் ஒளிக் கீற்றுகள் விழுந்துகொண்டிருந்த இடங்களில் இருட்டு சிதறப் பட்டிருந்தது.

தலைமை அமைச்சரின் பிரம்மாண்டமான அரண்மனையின் வெளிவாசலை அடைந்தேன். வெளியே மிகவும் இருட்டாக இருந்தது. வாயிற்காப்போன் யாரும் இல்லை. ஆனால், வெளிவாசல் நன்கு திறக்கப்பட்டுக் கிடந்தது. நான் ஒரு நிமிடம் தயங்கினேன். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாசலுக்குள் நுழைந்தேன். திடீரென்று ஒரு ஈட்டியின் கூர்மையான நுனிப்பகுதி என் தொண்டையைக் குத்தியது. இருட்டுக்குள்ளிருந்து என்னை நோக்கி ஒரு குரல் வந்தது: “நீ யார்?”

நான் அந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போனேன். அந்த ஈட்டி என் தொண்டையைத் தொட்டுக்கெண்டிருந்தது. அது இன்னும் கொஞ்சம் தாண்டியிருந்தால், நான் செத்தே போயிருப்பேன். சிறிது நேரத்திற்கு நான் ஒரு சிலையைப் போல நின்றிருந்தேன். பிறகு காம்புடன் இருந்த தாமரை மொட்டினை மேல்நோக்கி உயர்த்தி, குரல் வந்த திசையை நோக்கி அதைக் காட்டினேன்.

குரல் கேட்டது “அது என்ன? பெயரைக் கூறு...”

நான் சொன்னேன். “ஒரு காம்பிலிருக்கும் தாமரை மொட்டு.”

இனம்புரியாத ஒரு குரல் வினவியது: “நீ இதை எப்படி குறிப்பிடுவாய்?”

வாசலிலிருந்த காவலாளிதான் அவன் என்பதை நான் புரிந்துகொண்டேன். மலரின் இதழ்களில் எழுதப்பட்டிருக்கும் ரகசிய வார்த்தையை நினைத்துப் பார்த்த நான் கூறினேன். “குத்மல்.”

என்னுடைய தொண்டையைவிட்டு ஈட்டி விலக்கப்பட்டது. காவலாளி என் கைகளைப் பிடித்து இருட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றான். தொடர்ந்து இன்னொரு மனிதன் என்னை உள்ளே அழைத்துச் சென்றான். பிறகு நான் ஒரு மூன்றாவது மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டேன். என்னை அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு செல்லும் வேலையை ஐந்து நபர்கள் செய்தார்கள். பிறகு நான் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு சிறிய அறையை அடைந்தேன்.

அறையின் மையத்தில், மான் தோலாலான மெத்தையில் தலைமை அமைச்சர் அமர்ந்து சில கையெழுத்துப் பிரதிகளைக் கூர்மையான கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அறையில் வேறு யாருமில்லை. நான் அவரைப் பார்த்து வணங்கினேன். தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த ஒரு மெத்தையைச் சுட்டிக்காட்டிய அவர் சொன்னார். “உட்கார்.”

நான் அமைதியாக அவர் கூறியதைச் செய்தேன். தலைமை அமைச்சர் கேட்டார். “அந்தப் பெண் துறவியிடமிருந்து பெற்ற தகவலை எங்கே வைத்திருக்கிறாய்?”

நான் தாமரை மொட்டினை வெளியே எடுத்தேன். அவர் அதைப் பார்த்துவிட்டு சொன்னார்: “அதைத் தின்றுவிடு.”

அவர் என்ன கூறுகிறார் என்பது புரியாததால் நான் அவரையே முட்டாள்தனமாக பார்த்துக்கொண்டிருந்தேன். நான் ஏன் ஒரு தாமரை மலரைத் தின்ன வேண்டும்?

தலைமை அமைச்சர் மீண்டும் கூறினார்: ”அந்த தகவலைத் தின்று விடு.”

அப்படிப்பட்ட ஒரு கட்டளையை ஏற்றுக்கொள்வதற்கு என் மனம் மறுத்தது. இது என்ன வேடிக்கையான ஒரு விஷயமாக இருக்கிறது? இரவு வேளையில் என்னை அங்கு அழைத்து, ஒரு மலரைத் தின்னும்படி கூறுவது என்றால்...? அவர் வேண்டுமானால் தலைமை அமைச்சராக இருக்கலாம்! அதற்காக...

அந்தக் கிழவரின் உதடுகள் எரிச்சலுடன் துடித்தன. அவர் மிகவும் தாழ்வான குரலில் கூறினார்: “எல்லா இடங்களிலும் ஒற்றர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டியதிருக்கிறது. அந்த மலரின் மொட்டு சுவையான உணவாக இருக்கும் என்பதற்காக அல்ல...”

அதைத் தொடர்ந்து நான் அந்த தாமரை மலரின் இதழ்களைச் சுவைத்தேன். சிறிது நேரத்திற்கு பேரமைதியான சூழல் நிலவிக்கொண்டிருந்தது. தலைமை அமைச்சரின் மென்மையான முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வெளிப்பாடும் இல்லை. விளக்கின் ஒளி சிமிட்டிக் கொண்டிருந்ததை நிறுத்தியது. நான் ஆர்வத்துடன் காத்திருந்தேன்- அடுத்து என்ன நடக்கும்?

திடீரென்று அவர் கேட்டார்: “சாப்பலா என்ற நடனப் பெண்ணின் வீட்டிற்கு நீ அடிக்கடி செல்வதுண்டா?”

திடீரென்று கேட்கப்பட்ட அந்தக் கேள்வியால் நான் சற்று அதிர்ச்சியடைந்துவிட்டேன். அந்தப் பெண் அரசவையில் நடனப் பெண்ணாக இருப்பவள். இந்த மாதிரியான தனிப்பட்ட விஷயம் பற்றிய கேள்விகளை அந்த வயதான மனிதர் என்னைப் பார்த்து ஏன் கேட்க வேண்டும்? அதே நேரத்தில் - அந்தக் கிழவர் மிகவும் எச்சரிக்கையான மனிதர் என்பதையும், என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்பே தனக்கு தேவைப்படும் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பார் என்பதையும் நான் அறிந்திருந்தேன்.

சற்று தடுமாறிய குரலில் கூறினேன். “நான் ஒரே ஒருமுறை சென்றிருக்கிறேன். என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் செல்லக்கூடிய இடமல்ல அவளுடைய வீடு. அதனால் அதற்குப்பிறகு அவளுடைய வீட்டிற்கு நான் செல்லவில்லை.”

வயதான அந்த மனிதர் சொன்னார் : “நல்லது! லிச் சாவியைச் சேர்ந்த ஒற்று வேலை பார்க்கும் பெண் அவள்.”

அறைக்குள் மீண்டும் அமைதி ஆட்சி செய்தது. அந்த மனிதர் தியானத்தில் இருப்பதைப்போன்ற ஒரு சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இன்னொரு இடி முழக்கத்தை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன்.

“உனக்குக் கீழே நீ எத்தனை பணியாட்களை வைத்திருக்கிறாய்?”

“எல்லாரையும் சேர்த்து சுமார் பத்தாயிரம்.”

“உன்னிடம் இருக்கும் தச்சர்கள், கட்டடம் கட்டும் மனிதர்கள் ஆகியோர் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”

“ஆறாயிரம்.”

“மரவேலை செய்பவர்கள்?”

“மூவாயிரத்துக்கும் அதிகமாக...”

“சிற்பிகள்?”

“அந்த அளவிற்கு அதிகமாக இல்லை.... நூறுக்கும் குறைவாகத்தான் இருப்பார்கள்”

திடீரென்று சாதாரணமாக இ-ருந்த தலைமை அமைச்சரின் சரீரம், ஏதோ மந்திர சக்தியால் தட்டி எழுப்பப்பட்டதைப் போல புத்துணர்ச்சி பெற்று தோன்றியது. அவருடைய மங்கலான, கிழட்டுக் கண்கள் பிரகாசிக்க ஆரம்பித்தன.


அவர் விரலை உயர்த்தி என்னுடன் பேச ஆரம்பித்தார்: “மிகவும் கவனமாகக் கேள். இப்போது மழைக் காலம். இளவேனிற் காலம் வர ஆரம்பித்தவுடன், சாலைகளிலும் தெருக்களிலும் ஈரம் உலர ஆரம்பித்து விடும். அதைத் தொடர்ந்து போர்களும் சண்டைகளும் தொடங்கிவிடும்... இரண்டு பக்கங்களிலுமிருந்தும் நாம் தாக்கப்படுவோம். நம் நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அதனால் இந்த முறை போர் தொடங்குவதற்கு முன்பே, வெல்ல முடியாத அளவிற்கு ஒரு கோட்டையை பாகீரதி, ஹிரன்யாபாகு (கங்கை-ஷோன்) நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நாம் கட்டியாகவேண்டும். அந்தக் கோட்டை ஐம்பதாயிரம் போர் வீரர்கள் தங்கக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். அவர்கள் அங்கு நிரந்தரமாக இருப்பார்கள். இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன. இந்த முறை கோசலை, ப்ரிஜி ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர் வீரர்கள் ஆற்றைக் கடந்து நம்மைத் தாக்கும்போது, அவர்கள் நம்முடைய பிரம்மாண்டமான, வெல்லமுடியாத அளவிலிருக்கும் கோட்டையைப் பார்த்து திகைத்துப்போய் நிற்க வேண்டும்.”

இவ்வளவு நேரமும் நீருக்கு வெளியே இருக்கும் ஒரு மீனைப்போல என்னை நான் உணர்ந்திருந்தேன். இப்போதுதான் சாதாரண நிலைக்கு என்னால் வர முடிந்தது. தலைமை அமைச்சர் என்ன பேசுகிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். கட்டடனம் கட்டுவதுõன் என்னுடைய தொழில். நான் அவர் கூறிய விஷயத்தைப் புரிந்துகொண்டேன்.

நான் சொன்னேன் : “பத்தாயிரம் பணியாட்களை வைத்து மூன்றே மாதங்களில் என்னால் ஒரு கோட்டையைக் கட்டிமுடிக்க முடியும். ஆனால், சாலைகளும் போக்கக்கூடிய பாதைகளும் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. கோட்டை கட்டப்படும் இடத்திற்குத் தேவையான பொருட்களை நான் எப்படி கொண்டுசெல்வது?”

“அது உன்னுடைய வேலையல்ல. கோட்டையைக் கட்டும் வேலையில் மட்டுமே நீ கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்குத் தேவையான பொருட்களை நான் ஏற்பாடு செய்துதருகிறேன். நாட்டிலுள்ள அனைத்து யானைகளும் கற்களைச் சுமந்துவரும். அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.”

“அப்படியென்றால், மூன்றே மாதங்களில் நான் கோட்டையைக் கட்டி முடிக்கிறேன்” என்றேன் நான்.

வயதான அந்த மனிதர் சொன்னார் : “உன்னால் அப்படி கட்டி முடிக்க இயலாமல் போனால்...?”

“அதற்காக என் தலையையே துண்டித்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எப்போது நான் வேலையை ஆரம்பிப்பது?”

தலைமை அமைச்சர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு சொன்னார் : “நான்கு நாட்களுக்குப் பிறகு சந்திரன் சுவாதி நட்சத்திரத்தில் இருப்பான். அந்த விசேஷ நாளன்று நீ உன்னுடைய வேலையை ஆரம்பிக்கலாம்.”

“நீங்கள் கூறியபடி நடக்கட்டும்.”

சிறிது நேர அமைதிக்குப்பிறகு தலைமை அமைச்சர் சொன்னார் : “நான் உன்னிடம் கூறப் போவதை மிகவும் கூர்ந்து கவனித்துக்கேள். உனக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். அந்த முக்கியமான இடத்தில் நாம் ஒரு கோட்டையைக் கட்டுகிறோம் என்ற தகவலை எதிரிகள் தெரிந்துகொண்டார்களேயானால், அதைக் கட்டி முடிப்பதற்கு அவர்கள் எந்தக் காலத்திலும் விடமாட்டார்கள். எங்கு பார்த்தாலும் எதிரிகள் நடந்து திரிகிறார்கள். அவர்கள் கோட்டை கட்டும் தகவலை கோசலை மற்றும் லிச்சாவி நாடுகளின் அரசர்களுக்குக் கூறுவார்கள். அந்த வகையில் அவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும். அதனால் நீ மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். கங்கை மற்றும் ஷோன் நதிகள் சந்திக்கும் இடத்தை நோக்கி உன்னுடைய பத்தாயிரம் ஆட்களுடன் நீ புறப்படு. யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு உன்னுடைய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைந்துவிட்டால், அதற்குப்பிறகு எந்தவித பிரச்சினையுமில்லை. ஏனென்றால், அந்த இடம் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டதாகவும், காடுகளால் சூழப்பட்டதாகவும் இருக்கும். அதே நேரத்தில் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு முன்பே, வழியில் நீ ஒற்றன் என சந்தேகப்படும் யாரையாவது சந்திக்க நேர்ந்தால், உடனடியாக அவனைக் கொலை செய்வதற்கு சிறிதும் தயங்காதே. நீ வேலை செய்யும் இடத்திற்குப் போய் சேர்ந்தபிறகு, மகத நாட்டு கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திரு. அந்தக் கடிதத்தில் கோட்டையைப் பற்றிய வரைபடமும், என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற தகவல்களும்  எழுதப்பட்டிருக்கும். அதில் கூறப்பட்டிருக்கும் திட்டங்களின்படி கோட்டையைக் கட்டும் பணியை ஆரம்பிக்க வேண்டியதுதான். ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள். இந்த வேலைக்குப் பொறுப்பாளராக இருக்கும் ஒரே மனிதன் நீதான். இந்த திட்டம் தோல்வியடைந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் நீ மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும்.”

நான் சொன்னேன்: “என்ன வேண்டுமானாலும் நீங்கள் கூறுங்கள். ஆனால், என்னுடைய பத்தாயிரம் ஆட்களுக்குத் தேவைப்படும் பொருட்களை நான் எங்கிருந்து பெறுவது?”

தலைமை அமைச்சர் கூறினார்.: “கங்கையும் ஷோன் நதியும் சந்திக்கும் இடத்தில் பாடலி கிராமம் என்ற பெயரில் ஒரு சிறிய கிராமம் இருக்கும். ஒரு இரவு வேளையின்போது நீங்கள் அந்த கிராமத்தில் தங்கிக் கொள்ளுங்கள். இரண்டாவது நாள், நான் உனக்கும் உன்னுடைய மனிதர்களுக்கும் எவ்வளவு உணவு வேண்டுமோ, அவற்றை நான் அனுப்பி வைக்கிறேன்.”

பொழுது புலரும் நேரத்தில், தலைமை அமைச்சர் எனக்கு விடை கொடுத்தார். நான் புறப்படுவதற்கு முன்பு என்னிடம் கூறினார் : “சமீப காலமாக பௌத்தர்கள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுவரும் தகவலை கட்டாயம் நீ கேள்விப்பட்டிருப்பாய். ‘கடவுளை எந்தக் காலத்திலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது’ என்ற கொள்கையைக் கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் மிகவும் தந்திரசாலிகள். பிராமணர்களுக்கு எதிரானவர்கள். அவர்களுடைய தலைவராக இருப்பவர் சாக்கியவம்சத்தின் இளவரசர்... அந்த இளவரசரைப் பற்றி குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால்... அவர் கைதேர்ந்தவர்- பேராசை படைத்தவர்-பொறாமை குணம் கொண்டவர்- நயவஞ்சக எண்ணம் கொண்டவர். இப்போதைய அரசனின் தந்தை பிம்பிசாரனைக் கவர்வதற்கு அவர் முயற்சி செய்தார். மகதநாட்டில் புத்த மதத்தை நிறுவுவதற்கு விரும்பினார்... சமீபத்தில் இந்த நாட்டிலிருந்து அஜாதசத்ருவால் அவர் தூக்கி எறியப்பட்டார். அஜாதசத்ருதான் தீவிரமான இந்துமதப் பற்றாளராயிற்றே! இந்த புத்த மதத்தினரை நம்பாதே. அவர்கள் மகதநாட்டிற்கு எதிரிகள். கோட்டை கட்டப்படும் இடத்திற்கு அருகில் நீ அவர்களைப் பார்க்க நேர்ந்தால், இரக்கமே இல்லாமல் அவர்களைக் கொன்றுவிடு.”

..நிகழ் காலத்தின் ஆரம்பத்திலும் கடந்த காலத்தின் முடிவிலும் நின்றுகொண்டு, நடந்த சம்பவங்களை நான் நினைத்துப் பார்க்கும்போது, விதியின் எள்ளல் என்னுடைய உதடுகளில் ஒரு புன்னகையை அரும்பச் செய்கிறது. மகத வம்சத்தின் பிரகாசமான காலத்தில் சக்தி படைத்த தலைமை அமைச்சர் வர்ஷாகரின் பெயர், நேரத்தின் மணல்களுக்குள் எந்தவிதமான பதிவையும் பதிக்காமலேயே மூழ்கிப்போய்விட, எதுவுமே இல்லாத சிம்மாசனமில்லாத அந்த சாக்கிய இளவரசர், வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டு, இன்றுவரை அவருடைய தத்துவங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கும் பாதையைக் காட்டிக் கொண்டிருப்பார் என்பதை யார் நினைத்துப் பார்த்திருக்க முடியும்? இப்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கடந்த காலத்தில் பலம் மிக்கவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்துகொண்டு, பூமியின் செல்வங்களைத் திருடிக்கொண்டிருந்த அனைவரையும் மறந்தே விட்டார்கள். அதே நேரத்தில் - நல்வாழ்வு பற்றிய எட்டு அடுக்குகள் கொண்ட பாதையை உபதேசம் செய்தவரும், அந்தக் காலத்தில் நிர்வாண நிலையில் உயர்வுத் தன்மை கொண்ட யாசகருமான மனிதரை இப்போது ஆசியாவின் பாதிப்பகுதி அரசர்களின் அரசராக நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறது.


மழைக்காலத்தின்போது கட்டட வேலை செய்பவர்கள், தொழிலாளிகள், மரவேலை செய்பவர்கள் ஆகியோருக்கு பெரும்பாலும் வேலை இருக்காது. அதனால், என்னுடைய ஆட்களை ஒன்றுதிரட்டுவதில் எனக்கு எந்தவொரு சிரமமும் இருக்கவில்லை. காரணம்- அவர்கள் வேறெங்கும் வேலையில் ஈடுபடாமல் இருந்ததுதான். வெகுசீக்கிரமே என்னுடைய பத்தாயிரம் ஆட்களும் நகரத்தைவிட்டு அதன் பல வாசல்கள் வழியாக, யாருக்கும் தெரியாமல், யாருடைய கவனங்களையும் ஈர்க்காத வகையில் வெளியேறினார்கள். பிற்பகல் மூன்று மணி ஆனபோது, பல்வேறு குழுவினரும் நகரத்திலிருந்து ஆறு மைல்களுக்கப்பால் சந்தித்துக் கொண்டார்கள்.

அந்த இடத்திலிருந்து கங்கை மற்றும் ஷோன் நதிகள் சங்கமிக்கும் இடம் நூறு கல் தொலைவில் இருந்தது. அதைக் கடப்பதற்கு ஒருநாள் பயணம் செய்ய வேண்டும். சில விஷயங்களை விவாதித்த பிறகு, இரவு வந்துசேரும் வரை நாங்கள் பயணிப்பது என்ற முடிவிற்கு வந்தோம். இரவு வேளையில் சாலையோரத்தில் தங்கியிருந்துவிட்டு, காலையில் வெகுசீக்கரமே நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கிப் புறப்படுவதென்று தீர்மானித்தோம். பிற்பகலில் நாங்கள் பாடலி கிராமத்தை அடைவோம். ராணுவத்தின் படை வீரர்களைப்போல நாங்கள் அணிவகுத்துச் சென்றோம். வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. குளிர்ந்த ஈரமான காற்று வீசிக் கொண்டிருந்தது. இரவில் கட்டாயம் மழை பெய்யும். ஆனால், நாங்கள் யாருமே அதற்காக கவலைப்படவில்லை. உற்சாக மனநிலையுடன் எல்லாரும் சேர்ந்து உரத்த குரலில் பாடிக்கொண்டே முன்னோக்கிப் பயணித்தோம்.

அந்தக் காலத்தில் மகத நாட்டிலிருந்து பல நல்ல சாலைகள் இருந்தன. அரசாங்கத்தின் கருவூலத்திலிருந்து அந்த சாலைகளுக்காக மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டது. பல சாலைகள் கற்களால் ஆனவை. சாலைகளின் ஓரத்திலேயே கிணறுகள் தோண்டப்பட்டிருந்தன. பயணிகளுக்கு நிழல் தருவதற்காக மரங்கள் நடப்பட்டிருந்தன. பல இடங்களில், சாலைகளுக்கு குறுக்காக ஓடிக்கொண்டிருந்த நதிகளுக்கு மேலே பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. சில இடங்களில் படகுகள் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு மக்களை ஏற்றிச் சென்றன. வர்த்தகர்களும் பொருட்கள் விற்பவர்களும் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மீது ஏறி, அந்தச் சாலைகளின் வழியாக ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு விலைமதிப்பு கொண்ட பொருட்களுடன் பயணித்தார்கள். பல இடங்களில் கலைஞர்கள்கூட ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பயணித்தார்கள். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு குதிரைகளின்மீது செல்லும் தூதுவர்களை மிகவும் வேகமாக அனுப்புவதற்கு அந்தச் சாலைகளைத்தான் அரசர்கள் பயன்படுத்தினார்கள்.

சாலைகள் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு உள்ளதாக இருக்காது. திருடர்களிடமிருந்தும் பயங்கரமான காட்டுவாழ் மனிதர்களிடமிருந்தும் ஆபத்துகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இத்தகைய தாக்குதல்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலும், எங்கோ ஒரு சில இடங்களிலும்தான் நடந்தன. சாலையின் ஓரங்களில் முகாம்கள் அமைத்து கூட்டம் கூட்டமாக தங்கியிருந்த வீரர்கள், அந்தச் சாலைகளை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொண்டதே அதற்குக் காரணம் நாங்கள் கடந்துசென்ற சாலை வடக்கு திசையில் பாகீரதி நதி ஓடும் இடம்வரை நீளமாகப் போய்க்கொண்டிருந்தது. வெகு சீக்கிரமே இருள்வந்து மூடியது. மழை மேகங்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. காற்று தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தது. சாலையில் ஓரத்திலிருந்த வயல்களில் கூட்டம் கூட்டமாக நாங்கள் தங்கினோம். நாங்கள் எங்களுடைய இரவு உணவை எடுத்து வந்திருந்தோம். எங்களில் சிலர் சமையல் செய்வதற்காகவும், உணவை சூடு படுத்துவதற்காகவும் நெருப்பை எரிய வைத்தனர். ஆனால், காற்று மிகவும் பலமாக வீசிக்கொண்டிருந்ததால், அது எளிதான செயலாக இருக்கவில்லை. ஆங்காங்கே நெருப்பை மூட்டிக்கொண்டு பாதியளவு இருட்டை விரட்டியடித்த அந்த முழுக் காட்சியும், ஆவிகள் பங்குபெறும் ஒரு கொண்டாட்டத்தைப்போல தோற்றம் அளித்தது. அந்த மெல்லிய இருட்டில் குரல்கள் கேட்டன. பாடுவது, உரையாடுவது, இன்னும் சொல்லப்போனால்- சண்டை போடுவது. அணையும் நிலையிலிருந்த நெருப்பின் பாதி வெளிச்சத்தில் முகங்கள்கூட சரியாகத் தெரியவில்லை. நான் சிறிது மானின் மாமிசத்துடனும், சில பழங்களுடனும் என்னுடைய உணவை முடித்துக்கொண்டேன்.

நேரம் அதிகமாகி விட்டிருந்ததால், ஒரு பெரிய மரத்திற்குக் கீழே ஒரு துணியை விரித்துப்போட்டு, அந்த இரவுப் பொழுதைக் கழிப்பதற்கு தயாரானேன்.  அப்போது எனக்கு முன்னால் இரண்டு மனிதர்கள் வந்து நின்றார்கள். நான் கேட்டேன் : “யாரது?” ஒரு மனிதன் கூறினான். “அய்யா, நான் இந்த இடத்தின் காவலாளி. சாலையின் ஓரத்தில், கிணற்றுக்கு அருகில் யாரென்று தெரியாத ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். நான் அவரை உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்.”

நான் சொன்னேன் : “ஒரு பந்தத்தைப் பற்ற வை.”

பந்தத்தை எரியவைத்தபோது, அந்த காவலாளி ஒரு உயரமான, கிட்டத்தட்ட நிர்வாண நிலையிலிருக்கும், தாடி வளர்ந்திருந்த, வளைவான மூக்கைக் கொண்டிருந்த, கூர்மையான கண்களைக் கொண்டிருந்த மனிதனை அழைத்து வந்திருப்பதைப் பார்த்தேன். நான் அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டேன் : “அந்த கிணற்றுக்கு அருகில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”

அந்த மனிதன் சிறிதுகூட கண்களை இமைக்காமல் என்னைப் பார்த்துக்கொண்டே கூறினான்: “நீ இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பாய். உன்னுடைய நெற்றியில் அரச களையை நான் காண்கிறேன்.”

புகழ்ச்சிகளைக் கேட்டு சந்தோஷப்படும் வயதை நான் கடந்து வந்துவிட்டேன். போதாதற்கு, தலைமை அமைச்சர் வேறு என்னுடையமனதை சந்தேகத்தால் நிரப்பிவிட்டிருந்தார். அந்த வினோதமான மனிதரைப் பார்த்ததும், அது மீண்டும் கிளர்ந்தெழுந்து மேலே வந்தது. நான் போலியான மரியாதையுடன் சொன்னேன் : “நீங்கள் ஒரு மிகப்பெரிய ஜோதிடர். தயவு செய்து அமருங்கள்.”

விரிப்பில் அமர்ந்ததும் அந்த மனிதன் சொன்னான் : “நான் சிவனை வழிபடக்கூடிய ஒரு மனிதன். கடவுளால் மூன்றாவது கண் வழங்கப்பட்டவன் நான். ஒரே ஒரு நொடியில் என்னால் கடந்த காலத்தையும் பார்க்க முடியும். நிகழ்காலத்தையும் பார்க்க முடியும். வெகு சீக்கிரமே நீ அரச சிம்மாசனத்தில் அமர்வாய் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. இதற்குமுன் ஆண்ட அரசர்களின் புகழை, உன்னுடைய புகழ் மங்கச்செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.” நான் அந்த மனிதன் கூறுவதை உடனடியாகப் புரிந்துகொண்டேன். மரியாதை கலந்த குரலில் நான் சொன்னேன்: “நீங்கள் ஒரு மிகப்பெரிய துறவி! நான் சிரமங்கள் நிறைந்த ஒரு பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இதில் நான் வெற்றிபெறுவேனா?”

எதிர்காலத்தைப் பார்க்கக்கூடிய அந்த மனிதன் தன் கண்களை சிறிதுநேரம் மூடிக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டான்: “நீ எங்கே போகிறாய்?”

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் : “நீங்களே சொல்லுங்கள்.”

அந்த மனிதன் தரையில் கிறுக்க ஆரம்பித்தான்.

நான் கூறினேன் : “என் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு இதையெல்லாம் நீங்கள் வரையவேண்டுமா என்ன?”


அவர் என்னை சந்தேகத்துடன் பார்த்தார். “நான் உன்னுடைய ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இடத்தைக் கணக்கிட்டுப் பார்க்க முயற்சிக்கிறேன். ஜோதிடத்தைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? இல்லாவிட்டால், உன்னால் எதையும் புரிந்துகொள்ள முடியாது.”

நான் பணிவுடன் மிகவும் அமைதியாக இருந்தேன். அந்தத் துறவி தரையில் எழுதுவதைத் தொடர்ந்துகொண்டிந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவன் தன்னுடைய முகத்தை உயர்த்திச் சொன்னான் : “நீ இன்னொரு நாட்டிற்கு ஒரு ரகசிய வேலையாகச் சென்று கொண்டிருக்கிறாய். ஜாதகத்தில் நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தைப் பார்க்கும்போது, நீ ஏதோ போர் சம்பந்தப்பட்ட சூழ்நிலையில் ஈடுபட்டிருப்பதைப்போல தோன்றுகிறது.” இதைக் கூறிவிட்டு, அவன் கேள்வி கேட்கும் பாவனையில், மீதிவிஷயங்களை என்னிடமிருந்து எதிர்பார்ப்பதைப்போல பார்த்தான்.

நான் புகழும் குரலில் கூறினேன் : “நீங்கள் மிகப்பெரிய மனிதர். உண்மையாகவே உங்களால் எதிர்காலத்தைப் பார்க்க முடியும். எல்லா விஷயங்களையும் நீங்கள் புரிந்துவைத்திருக்கிறீர்கள். அரசரின் ஆணைப்படி நான் லிச்சாவிக்குச் சென்று கொண்டிருக்கிறேன். உங்களிடமிருக்கும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டு, நான் ஏன் அங்கு செல்கிறேன் என்பதற்கான காரணத்தைக் கட்டாயம் நீங்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு நான் அதைக் கூற வேண்டிய தேவை இல்லை. இப்போது என்னுடைய மிகவும் நெருங்கிய நண்பனின் எதிர்காலத்தைப் பற்றி தயவுசெய்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். காவலாளியே, வயலின் தூரத்து எல்லையிலிருக்கும் மரத்திற்குக்கீழே அமர்ந்திருக்கும் மிகிர்மித்ராவை தயவுசெய்து அழைத்து வா.”

மிகிர் தலைமை கட்டடக்கலை நிபுணராகவும், என்னுடைய மிக நெருங்கிய நண்பனாகவும் இருப்பவன். அவன் சிறந்த கலைஞன் மட்டுமல்ல; திறமையான ஜோதிடனும்கூட மிகிர்மித்ரா அங்குவந்து சேர்ந்தவுடன், எனக்கருகில் அவனை உட்காருமாறு கூறிவிட்டு, அந்த மனிதனைச் சுட்டிக்காட்டிக்கொண்டே சொன்னேன். “இவர் மிகப்பெரிய துறவி மற்றும் ஜோதிடர். உனக்காக இவர் உன்னுடைய எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவார்.”

மிகிர்மித்ரா அந்த துறவி இருந்த பக்கம் திரும்பி, அவரை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு, தன்னுடைய உள்ளங்கையை அந்த மனிதன் பார்க்கும் வண்ணம் நீட்டியவாறு சொன்னான் : “நான் எந்த ராசியில் பிறந்தேன்?”

அந்த மனிதர் சிறிது பதைபதைப்புடன் காணப்பட்டார். மிகிர்மித்ராவின் நீட்டப்பட்ட கையை பார்க்கக்கூட செய்யாமல் அவர் கூறினார். “நீ ஒரு விபத்தில் சிக்கி மரணத்தைச் சந்திப்பாய்.”

மிகிர் சொன்னான் : “அது இருக்கட்டும்... என்னுடைய கேள்விக்கு பதில் கூறுங்கள். நான் எந்த ராசியில் பிறந்தேன்?”

சிறிது தயங்கிவிட்டு, அந்த மனிதர் சொன்னார் : “துலா ராசியில்.”

“உண்மையாகவா? எனக்கு மேலும் சில தகவல்களைக் கூறுங்கள்.”

ஜோதிடம் பற்றிய மேலும் சில கேள்விகளை அவன் அவரைப் பார்த்து கேட்டான். நடுங்கிக்கொண்டே தன்னுடைய உலர்ந்துபோன உதடுகளை நக்கிய அந்த மனிதன், தயங்கித் தயங்கி அவனுடைய கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, மிகிர்மித்ரா சிரித்துக் கொண்டே என்னை நோக்கி திரும்பிச் சொன்னான் : “இந்த மனிதன் ஒரு கயவன். ஜோதிடத்தைப் பற்றி இவனுக்கு எதுவுமே தெரியவில்லை.”

அந்த மிகப்பெரிய துறவி வேகமாக எழுந்து, இருட்டில் ஓட ஆரம்பித்தான். மிக வேகமாக ஓடக்கூடியவனாகவும், மிகுந்த பலசாலியாகவும் அவன் இருந்தான். ஆனால், என்னுடைய இருபது ஆட்களுடன் அவன் எப்படி சண்டை போட முடியும்? அவன் ஒரு பலமான கயிறைக் கொண்டு கட்டப்பட்டான். அவன் என்னைப் பார்த்து பரிதாபமான குரலில் சொன்னான் : “என்னைக் கட்டாதீர்கள். நான் ஒரு சாதாரண பிச்சைக்காரன். ஜோதிடம் பற்றி எனக்கிருக்கும் அறிவைக்கொண்டு உங்களைக் கவர்ந்து சிறிது பணம் சம்பாதிக்க எண்ணினேன். ஆனால், நீங்கள் மிகவும் புத்திசாலி. என்னைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். நான் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தைக் கற்றுக்கொண்டேன். இப்போது என்னை விட்டுவிடுங்கள்.”

நான் சொன்னேன் : “நீங்கள் ப்ரிஜி அல்லது கோசலை நாட்டின் ஒற்றுவேலை பார்க்கும் மனிதராக இருக்க வேண்டும். என்னிடமிருந்து நீங்கள் தகவல்களைப் பெறுவதற்காக முயற்சித்தீர்கள்.”

அதைக்கேட்டு அந்தத் துறவி பயத்தால் அழ ஆரம்பித்தான். அவன் சொன்னான் : “நான் எல்லா கடவுள்களின் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன். நான் ஒற்றனல்ல. ஒரு பிச்சைக்காரன். தயவு செய்து என்னைப் போகவிடுங்கள். இன்னொரு முறை இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நான் எந்தக் காலத்திலும் செய்யமாட்டேன். நான் மிகவும் தாகத்துடன் இருக்கிறேன். எனக்கு நீர் தாருங்கள்.” அவன் கூறிக்கொண்டிருந்ததை உடனடியாக நிறுத்திக்கொண்டான்.

நான் ஒரு காவலாளியை அந்த மனிதனுக்கு கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவதற்காக அனுப்பினேன்.

காவலாளி அந்த மனிதனுக்கு நீர்கொண்டு வந்து தந்தபோது, அவன் நீர் பருகுவதில் அந்த அளவுக்கு ஆர்வமாக இல்லை. நான் சொன்னேன் : “நீங்கள் மிகவும் தாகமாக இருப்பதாகக் கூறினீர்கள். பிறகு ஏன் நீரை அருந்தவில்லை?”

அந்த மனிதன் மிகவும் பலவீனமான குரலில் கூறினான் : “நான் நீரை அருந்த மாட்டேன்.”

திடீரென்று நீர் கொண்டுவந்த காவலாளி அதைக்கீழே கொட்டிவிட்டு, தரையில் விழுந்து வெறிபிடித்தவனைப்போல கதற ஆரம்பித்தான். தொடர்ந்து அவன் தாங்கமுடியாத வேதனையால் துடித்தான். அவன் ஒரு ஆவியைப்போல வெளிறிப்போய் காணப்பட்டான். அவனுடைய கண்கள் வெளியே துருத்திக்கொண்டிருந்தன. அவனுடைய சரீரம் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அவனுடைய வாயிலிருந்து நுரை வெளியே வந்து கொண்டிருந்தது. அவனுடைய தொண்டையிலிருந்து எந்தவொரு ஓசையும் வரவில்லை. நாங்கள் அவனைச் சுற்றி நின்று கொண்டு, பதைபதைப்புடன் கேள்விகள் கேட்க ஆரம்பித்தோம். அவன் கீழே விழுந்த நீர் கொண்டுவந்த பாத்திரத்தை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தான். அடுத்த அரைமணி நேரத்தில் அவன் தன் இறுதி மூச்சை விட்டான்.

உடனடியாக எல்லாரும் அந்த கபடதாரியை - போலித் துறவியை நோக்கித் திரும்பினார்கள். அந்த மனிதன் பயத்தில் உறைந்துபோய் காணப்பட்டான். ஒரே நிமிடத்தில் அந்தக் கூட்டம் அந்த மனிதனைத் தாக்கி கொலையே செய்திருக்கும். அதற்குள் தலைமைத் தொழிலாளியும், உயரமான மனிதனும், சுறுசுறுப்பு நிறைந்தவனுமான டிங்கானாக் முன்னால் வந்து நின்றான். அவன் அந்த மனிதனை முடியைப் பிடித்து இழுத்தவாறு சொன்னான் : “நண்பர்களே, இந்த மனிதன் எதிரிகளின் ஒற்றன். இவன் நம் எல்லாரையும் கொல்வதற்காக கிணற்று நீரில் விஷத்தைக் கலந்திருக்கிறான். அவனுக்கு கிடைக்கவேண்டிய ஒரே தண்டனை மரணம்தான். நாம் இவனுக்கு கட்டாயம் தண்டனை தர வேண்டும். ஆனால், இப்போதல்ல. நாம் நம்முடைய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் ஒரு மனித உயிரை பலிகொடுக்க வேண்டுமென்பது நம்மிடையே இருக்கக்கூடிய ஒரு சடங்கு என்ற விஷயம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படிச் செய்தால்தான் நம்முடைய முயற்சியில் நாம் வெற்றி பெற முடியும். கடவுள்களுக்கு மனிதர்களை பலி கொடுக்காமல், நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நாம் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவே கூடாது. அதனால் இப்போது நீங்கள் யாரும் இவனை துன்புறுத்தக் கூடாது. உரிய நேரத்தில் நாம் இவனை கங்கை நதியின் கரையில் உயிருடன் புதைப்போம்.


அதன்மூலம் இந்த நயவஞ்சக மனிதனின் ஆன்மா, நாம் கட்டப்போகும் கோட்டையை எதிர்காலத்தில் காப்பாற்றும்.”

அந்த வார்த்தைகளைக் கேட்டு, எல்லாரும் மிகவும் அமைதியாக இருந்தார்கள். தொடர்ந்து நாங்கள் இறந்த காவலாளியின் உடலை ஒரு மரத்திற்குக்கீழே புதைத்துவிட்டு, ஒற்றனை அருகிலிருந்த ஒரு மரத்தில் கட்டிப்போட்டோம்.

மறுநாள் காலையில் சீக்கிரமே புறப்பட்டு, பாடலி கிராமத்தை பிற்பகல் மூன்று மணிக்கு அடைந்தோம். கங்கை நதியின் கரையில் இருந்த ஒரு மிகச் சிறிய கிராமம் அது. அந்த கிராமத்தில் சுமார் ஐம்பது ஏழைக் குடும்பங்கள் வசித்துக்கொண்டிருந்தன. அந்த கிராமத்தில் இருந்தவர்கள், ஒன்று வேட்டையாடக் கூடியவர்களாக இருந்தார்கள்; அல்லது மீனவர்களாக இருந்தார்கள். சில நேரங்களில் அவர்கள் நிலத்தைக் கிளறி, சில பயிர்களை வளர்ப்பதற்காக தயார் செய்தார்கள்.

நாங்கள் ஏராளமான பேர் அங்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களைத் தாக்குவதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் காட்டிற்குள் ஓடினார்கள். அவர்களுக்கு எந்தவித கெடுதலையும் நாங்கள் செய்யப்போவதில்லை என்பதைப் பற்றி திருப்பத் திரும்ப உறுதியான குரலில் கூறியும், அவர்கள் காட்டிலிருக்கும் மானைப்போல பாய்ந்தோடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்டுச்சென்ற உணவுப் பொருட்கள் என்று என்னவெல்லாம் இருந்தனவோ, அவை அனைத்தையும் நாங்கள் சாப்பிட்டோம். ஒரே மாலை வேளையில், ஆட்களின்றி காலியாகக் கிடந்த அந்த கிராமத்தில், அவர்கள் வைத்துவிட்டுப்போன உணவுப்பொருட்கள் அனைத்தையும் நாங்கள் பத்தாயிரம் பேரும் சாப்பிட்டு முடிந்தோம். எல்லாரும் மிகவும் களைத்து விட்டிருந்ததால், ஒரு இடத்தைப் பார்த்ததுதான் தாமதம், உடனடியாக அங்குபோய் தூங்க ஆரம்பித்தோம்.

மறுநாள் காலையில் வெகுசீக்கிரமே வேலை தொடங்கியது. கட்டடம் கட்ட தேவைப்படும் பொருட்கள், உணவு, மற்ற முக்கியமான பொருட்கள் - அனைத்தும் யானைகளின் மூலம் எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சிலர் கூடாரங்கள் அமைப்பதில் மிகவும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வேறு சிலர் யானைகளிலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அன்று முழுவதும் நாங்கள் மிகவும் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம்.

தலைமை அமைச்சர் கோட்டையைப் பற்றிய வரை படத்தை அனுப்பி வைத்திருந்தார். நான் மிகிர்மித்ராவையும் டிங்கானாக்கையும் அழைத்துக்கொண்டு, இரண்டு நதிகளும் சந்திக்கும் இடத்தில் கோட்டை கட்டப்போகும் இடத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றேன். ஆற்றில் பருவ மழையின் காரணமாக நீர் மிகவும் பலத்துடன் கரைபுரண்டு பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. கங்கை நதியின் நீர் சாம்பல் நிறத்தில் கலங்கலாக இருந்தது. ஷோன் நதியின் நீர் பொன்னிறத்தில் இருந்தது. இரண்டு நதிகளும் சங்கமமாகும் இடத்தில் ஒரு பெரிய சுழலைப்போல நீர் காட்சியளித்தது.

அந்தச் சந்திப்பின் தெற்குப் பக்கத்தில் நாங்கள் நின்றுகொண்டு, ஷோன் நதிக்கு அருகில் தனியாக ஒரு நிலப்பகுதி இருப்பதைப்பார்த்தோம். நதிகள் தங்களுடைய கைகளை நீட்டி அந்த நிலப்பகுதியை அணைப்பதைப்போல எங்களுக்குத் தோன்றியது. நீண்டநேர ஆராய்ச்சி மற்றும் விவாதத்திற்குப்பிறகு, அந்த இடத்தில் கோட்டையைக் கட்டுவதென்று நாங்கள் தீர்மானித்தோம். கோட்டையின் இரண்டு பக்கங்களையும் நதிகள் பாதுகாத்துக் கொண்டிருந்தால், அகழிக்கான தேவையே அங்கு இல்லை.

அந்த நிலப்பகுதியை சீர்படுத்துவதற்காக அங்கிருந்த மரங்களையும் செடிகொடிகளையும் அழிப்பதற்கு நாங்கள் ஆட்களை நியமித்தோம். வெட்டப்பட்ட பெரிய மரங்களின் பாகங்களை யானைகள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. மரங்கள் கீழே விழும் சத்தத்தாலும், வேலை செய்து கொண்டிருந்த ஆட்களின் ஆரவாரங்களாலும், யானைகளின் சத்தங்களாலும், குதிரைகளின் கனைப்புகளாலும் அந்த முழுப் பகுதியும் உயிரோட்டத்துடன் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஒரு அரக்கன் கண் விழித்துவிட்டான் போலிருக்கிறது என்பதைப்போல அந்த இடம் இருந்தது.

அன்று முழுவதும் நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்தோம். இரவில் உணவுண்டோம். இரவில் நான் தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, டிங்கானாக் எனக்கருகில் வந்து சொன்னான்: “அய்யா, நாளை காலையில் கோட்டை கட்டும் பணி ஆரம்பமாவதற்கு முன்பு, இன்று நள்ளிரவில் நாம் கடவுள்களுக்கு பலி கொடுத்தாக வேண்டும்.”

நான் கேட்டேன் : “என்ன பலி?”

“என்ன... மறந்துவிட்டீர்களா அய்யா? அந்த போலித் துறவியை, கடவுள்கள் சந்தோஷப்படும் வண்ணம் உயிருடன் புதைப்பது என்று தீர்மானித்தோமே?”

”உண்மைதான்... நான் அதைப்பற்றி மறந்துவிட்டேன். நாம் அந்த ஒற்றனை இறக்கச் செய்வதன் மூலம், இரண்டு காரியங்கள் நிறைவேறுகின்றன. சரி... பலி கொடுக்கும்போது செய்ய வேண்டிய சடங்குகளைப் பற்றி உனக்கு தெரியுமா?”

டிங்கானாக் சொன்னான் : “சடங்குகள் மிகவும் எளிமையானவை. நாம “அந்த மனிதனை போதை தரும் பானங்களை அருந்தச் செய்ய வேண்டும். பிறகு அவனுடைய செவிகளில் மெதுவான குரலில் ‘நீ ஒரு ஆன்மாவாக இந்தக் கோட்டையை எப்போதும் காவல் காக்க வேண்டும்’ என்று முணுமுக்க வேண்டும். தொடர்ந்து அவனை உயிருடன் புதைக்க வேண்டும்.”

நான் சிறிது ஆச்சரியத்துடன் கேட்டேன்: “இந்த அளவிற்கு சடங்குகளைப் பற்றி நீ எப்படி தெரிந்துகொண்டாய்?”

டிங்கானாக் சிரித்தான். “நான் இதற்கு முன்பே இதைச் செய்திருக்கிறேன். மிகப்பெரிய வர்த்தகரான தனஸ்ரீ தன்னுடைய கருவூலத்தை பூமிக்கு அடியில் கட்டும்போது, நான்தான் தொழிலாளர்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தேன். அந்த சமயத்தில் காட்டுக்குள்ளிருந்து ஒரு பழங்குடி  இனத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டான். தொடர்ந்து இந்த முறையில்தான் அவன் புதைக்கப் பட்டான்.”

நான் சொன்னேன் : “அப்படியென்றால் என்ன செய்யவேண்டுமோ, அதை நீ செய்.”

டிங்கானாக் சொன்னான் : “அதைச் செய்வதற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அதே நேரம்... அய்யா... நீங்களும் அந்த பலி கொடுக்கப்படும்போது உடனிருக்க வேண்டும்.”

“சரி...”

டிங்கானாக் அங்கிருந்து புறப்பட்டான். ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு என்னை நோக்கி ஓடிவந்த அவன் சொன்னான் : “அய்யா... அந்த மனிதன் நம்மை ஏமாற்றிவிட்டான்!”

“நம்மை ஏமாற்றிவிட்டானா? எப்படி?”

“அவன் விஷத்தை உட்கொண்டுவிட்டான். அது அவனுடைய மோதிரத்திற்குள் மறைந்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நாம் என்ன செய்வது?”

“அதன் அர்த்தம் என்ன?”

ஒரு மனிதனை நாம் பலி கொடுக்கப்போவதாக கடவுள்களிடம் கூறிவிட்டோம். ஒருவேளை நாம் நம்முடைய வாக்கைக் காப்பாற்ற வில்லையென்றால், அவர்களுடைய கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டியதிருக்கும்.”

உண்மைதான்! பதைபதைப்பை உண்டாக்கக்கூடிய விஷயம்தான் அது. அந்த மனிதன் மேலும் சிறிது நேரம் மரணத்திற்காக ஏன் காத்திருக்கக் கூடாது? தான் எந்த அளவிற்கு சுயநலம் கொண்டவன் என்பதை அவன் செயல்வடிவில் காட்டிவிட்டானே! நள்ளிரவின் இந்த நேரத்தில் நாம் பலி கொடுப்பதற்கு ஒரு மனிதனுக்கு எங்கு வோவோம்?


அடுத்து என்ன செய்வதென்ற கவலையில் நான் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். திடீரென்று அந்த இடத்தின் காவலாளி அங்குவந்து, தலைமழிக்கப்பட்ட சில பிச்சைக்காரர்கள் நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும், அதனால் அவர்களைப் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறினான்.

அதைக் கேட்டு டிங்கானாக் மிகுந்த சந்தோஷத்திற்கு ஆளானான்.

“கடவுள்கள் கருணை மனம் கொண்டவர்கள். பலி கொடுக்கப்படும் மனிதனை அவர்களே நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.”

நானும் சந்தோஷப்பட்டேன். இந்த பிரச்சினைக்கு இவ்வளவு சீக்கிரம் தீர்வு கிடைக்கும் என்பதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பிச்சைக்காரர்களைவிட சிறந்த பலியாக வேறு யார் கிடைப்பார்கள்? கடவுள்கள் உண்மையிலேயே கருணை மனம் கொண்டவர்கள்தாம்!

அவர்கள் நான்கு அல்லது ஐந்துபேர் இருப்பார்கள். அவர்கள் காவி உடைகள் அணிந்திருந்தார்கள். யாசகத்திற்கான பாத்திரங்களை கையில் வைத்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நடுத்தர வயதைக் கொண்டவர்களாக இருந்தார்கள். ஒரே ஒருவரைத் தவிர. அவர் மிகவும் வயதானவராகவும், சுமார் எழுபது வயது நிறைந்தவராகவும் இருந்தார்.

வயதான மனிதர் ஒரு புன்னகையுடன் கூறினார் : “உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!”

நான் அந்த வயதான பெரியவரைப் பார்த்ததுதான் தாமதம், என்னுடைய ஆன்மாவை ஒரு மின்னல் தொட்டதைப்போல உணர்ந்தேன். நான் யார், நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்து விட்டேன். இனம்புரியாத, கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகள் எனக்குள் அலைமோதிக் கொண்டிருப்பதைப்போல உணர்ந்தேன். அவர் யார்?  இந்த அளவிற்கு பேரழகு படைத்த இந்த அளவிற்கு கருணை தாண்டவமாடும் ஒரு முகத்தை என் வாழ்க்கையில் நான் எந்தச் சமயத்திலாவது பார்த்திருக்கிறேனா? கடவுள்களிடம் எந்த அளவுக்கு ஒளி நிறைந்திருக்கும் என்று நான் கற்பனை செய்து வைத்திருந்தேனோ, அது அந்த மனிதரிடம் நிறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அந்த ஒளியும் சாந்த நிலையும் அவருடைய கண்களில் தெரிந்தன. அவருடைய கண்கள்க ஒரு சக்தி படைத்த பிரகாசத்துடன் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

என்னுடைய இதயம் திரும்பத் திரும்ப கூறியது: ‘ஒளிவிளக்கு! ஒளி விளக்கு!’

திகைத்துப்போய் நான் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவர் திரும்பவும் புன்னகைத்தார். அவருடைய முகம் பிரகாசத்துடன் காணப்பட்டது. அவர் சொன்னார் : “மகனே, நாங்கள் ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கும் பிச்சைக்காரர்கள். நாங்கள் குஷி நகருக்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்றிரவு உங்களுடைய முகாமில் தங்குவதற்கு எங்களுக்கு தயவ>செய்து இடம் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.”

பதைபதைப்பு நிறைந்த குரலில் நான் கேட்டேன் : “நீங்கள் யார்?”

அவருடன் நின்றுகொண்டிருந்த ஒரு மனிதர் சொன்னார் : “சாக்கிய நாட்டு இளவரசர் கௌதமரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?”

தன்னுடைய சிம்மாசனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு வந்த இளவரசன் இவர்தான்! தலைமை அமைச்சர் வர்ஷாகரின் வார்த்தைகளை நான் நினைத்துப் பார்த்தேன். அவர் இந்த மனிதரை தந்திர குணம் கொண்டவர், அயோக்கியர், பேராசை பிடித்தவர் என்று கூறினார். நான் எனக்குள் சிரித்துக்கொண்டேன். இந்த மனிதர் எப்படி தந்திர குணம் கொண்டவராகவும் பேராசை பிடித்தவராகவும் இருக்க முடியும்? இதுபோன்ற ஒரு மனிதரை நான் இதற்குமுன்பு எந்த சமயத்திலும் பார்த்ததே இல்லை. இந்த மனிதரைச் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய அதிர்ஷ்டம் இல்லாமற்போன தலைமை அமைச்சருக்காக நான் வருத்தப்பட்டேன்.

எனக்குள் உண்டான அளவற்ற உணர்ச்சிகளின் பெருக்கால் நான் நடுங்க ஆரம்பித்தேன். என்னுடைய கண்கள் தடை செய்ய முடியாத அளவிற்கு கண்ணீரால் நிறைந்தன. என்னுடைய கடந்தகால வாழ்க்கை பயனற்ற செயல்களால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது என்பதைப்போல நான் உணர்ந்தேன்.

நான் அவருடைய பாதங்களில் விழுந்து சொன்னேன் : “நான் குருடனாக இருக்கிறேன், கடவுளே ! எனக்குப் பாதையைக் காட்டுங்கள்.”

அவர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டே கூறினார்: “மகனே, என்னுடைய ஆசீர்வாதங்கள் உனக்கு இருக்கின்றன. நீ உண்மையை உணர்ந்து, சரியான பாதையில் நடப்பாய்.”

நான் சொன்னேன் : “கடவுளே ! என்னை உங்களின் அடுக்குகளுக்குள் சிறகுகளுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் தெய்வீக ஒளியில ஒரு சிறிய பகுதியை எனக்கு அளியுங்கள்.”

சாக்கிய நாட்டின் இளவரசர் கூறினார் : “அப்படியே நடக்கட்டும்..”

அவர் தன்னுடைய உள்ளங்கையை என் தலையில் வைத்தவாறு கூறினார் : “நான் உன்னை என்னுடைய உலகிற்குள் வரும்படி செய்கிறேன். இப்போதிருந்து நீங்கள் எட்டு அடுக்குகள் கொண்ட பாதையைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு நிரந்தரமான அமைதி கிடைக்கும். இதுதான் நான் உங்களுக்கு அளிக்கும் ஆசீர்வாதம்.”

நான் அவருடைய பாதத்திற்கு அருகில் அமர்ந்து மூன்று புனித வார்த்தைகளை அதாவது... புத்தமதத்தின் மூன்று வைரங்களை உச்சரித்தேன்.

சம்பவம் நடந்துகொண்டிருந்த இடத்தைவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தான் டிங்கானாக். குரூரத்தன்மை கொண்டவனாகவும், பலசாலியாகவும் இரக்க குணமே இல்லாதவனாகவும் இருந்த அதே டிங்கானாக்கின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் தழுதழுத்த குரலில் தொடர்ச்சியே இல்லாமல் வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

பூகம்பம் உண்டாகி எங்களுடைய பழைய வாழ்க்கையைப் புரட்டிப்போடுவதைப்போல உணர்ந்தோம். நாங்கள் புழுக்களாக  இருந்தோம். இந்த மிகப்பெரிய ஞானியைச் சந்தித்ததும் மனிதர்ளாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதைப்போல உணர்ந்தோம்.

மறுநாள் காலையில் மிகப்பெரிய ஞானியான கௌதமர் குஷி நகரை நோக்கிப் புறப்பட்டார். அவர் ஆற்றின் கரையில் நின்றுகொண்டு, தன் கையில் என் கையை எடுத்து வைத்தவாறு சொன்னார்: “மகனே, நயவஞ்சகம் நயவஞ்சகத்தை உற்பத்தி செய்கிறது. அமைதிக்காக உழை.”

நான் ஆர்வத்துடன் கேட்டேன் : “மீண்டும் உங்களை நான் எப்போது பார்ப்பேன், கடவுளே?”

அவர் அந்த அற்புத புன்னகையை வெளியிட்டவாறு சொன்னார் : “நான் குஷி நகருக்குச் செல்கிறேன். திரும்பவும் வரமாட்டேன்.”

தொடர்ந்து இரண்டு நதிகளும் சங்கமமாகும் இடத்தை தன்னுடைய கண்களைக் கொண்டு தூரப்பார்வை பார்த்த அவர், வினோதமான, தீர்க்க தரிசனம் நிறைந்த குரலில் கூறினார்: “ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உன்னுடைய வேலை புகழப்படும் என்பதை என்னால் பார்க்கக முடிகிறது... இந்தச் சிறிய பாடலி கிராமமும் நீங்கள் கட்டப் போகும் கோட்டையும் ஒரு புகழ்பெற்ற நகரமாக வளரும். கலாச்சாரமும், வர்த்தகம், கலை, அறிவியல் ஆகியவற்றின் மைய நகரமாக அது இருக்கும். இந்த பெரிய நகரத்தில் என்னுடைய வழிகாட்டல்கள் ஆழமாக வேரூன்றி நிற்கும். உன்னுடைய படைப்பு காலத்தைக் கடந்து நிலைபெற்று விளங்கட்டும்.”

அவர் என்னை மீண்டும் ஆசீர்வதித்தார். தொடர்ந்து நிர்வாண நிலையை... எல்லையற்ற பரம்பபொருளுடன் சங்கமமாகும் நிலையை நோக்கிய தன் பயணத்தை அவர்தொடர்ந்தார்.

டிங்கானாக் பின்னர் டிங்காச்சாரியர் என்ற ஒரு புகழ் பெற்ற புத்தமத தத்துவவாதியாக அறியப்பட்டான். இந்தப் பிறவியில் ஏழை ரயில்வே க்ளார்க்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் நான், ஒரு காலத்தில் பாடலி புத்திரம் என்ற நகரத்தைக் கட்டிய, புத்தர் என்ற சக்தி படைத்த மனிதரை எதிர்பாராமல் சந்தித்த அந்தச் சிறிய இடைவெளியில் தன் வாழ்க்கையில் வியக்கத்தக்க ஒரு மாற்றத்தை அடைந்த, புகழ்பெற்ற குமாரதத்தனாக இருந்தவன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.