Logo

ஒரு முத்தத்தின் ஞாபகம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5649

ஒரு முத்தத்தின் ஞாபகம்

பாறப்புரத்து

தமிழில் : சுரா

ளம் மஞ்சள் நிறமுடைய சிறிய இலைகளையும், சிவப்பு நிற சிறிய மலர்களையும் கொண்ட அழகான முட்புதரால் மூடப்பட்டுக் கிடந்தது அந்த மண்மேடு. மண்மேடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், உயிர்பிரிந்த ஒருவன் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான் என்பதற்கு ஆதாரமாகக் கூறும் வகையில் என்ன இருக்கிறது? குஞ்ஞுமோள் கூறியிருக்காவிட்டால், அதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்காது.

அழகாகக் கட்டி எழுப்பப்பட்டிருந்த கல்லறைகளுக்கு மத்தியில், ஒரு சிறிய மண்மேட்டிற்கு என்ன முக்கியத்துவம் இருந்துவிடப் போகிறது? ஒரு மழைக்காலத்தின் பாதிப்பால், அந்த மண்மேடு கிட்டத்தட்ட தரைமட்டமாகிவிட்டிருந்தது. நான்கு மழைக்காலங்களுக்குப்பிறகு அங்கு எதுவுமே இருந்ததில்லை என்னும் நிலைமை உண்டாகிவிடுமோ? அது தன்னுடைய அடையாளத்தையே இழந்துவிட்டிருக்கலாம். என்ன காரணமென்று தெரியவில்லை - சிவப்பு நிற மலர்களைக் கொண்ட முட்செடியின் கொடிகள் மட்டும், அந்த மண்மேட்டின் மீது தனிப்பட்ட காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. எந்தச் சமயத்திலும் வாடாமல் இருக்கும், ஒரு மலர் வளையத்தைப்போல அவை அந்த மண்மேட்டின்மீது பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஒருவேளை - காதல் உணர்வு நிறைந்த அந்த இதயத்திலிருந்து அந்த முட்செடிகள் முளைத்தெழுந்திருக்கலாம்! நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடுகளாக அந்த சிறிய பூக்கள் இருக்கலாம்.

என் கைவிரலைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த குஞ்ஞுமோள் சொன்னாள் “பொன்னம்மா அக்கா புதைக்கப்பட்ட இடத்திற்குப் பக்கத்தில் சிறிஸ்துமஸ் நாளில் நாங்கள் மெழுகுவர்த்திகளை எரிய வைத்தோம். நானும், குஞ்ஞம்மா அக்காவும், அம்மாவும், அச்சன்குஞ்ஞும் மெழுகுவர்த்திகள் கொளுத்தினோம். அப்போது அம்மா அழுதாங்க. குஞ்ஞம்மா அக்காவும் அழுதாங்க. நல்ல பொன்னம்மா அக்கா! அப்படித்தானே அண்ணா?”

“ம்.”

‘அம்மாவைவிட குஞ்ஞம்மா அக்காவை விட.... பொன்னம்மா அக்கா நல்லவங்க. பொன்னம்மா அக்காவை கடவுள் அழைச்சிக்கிட்டாரு.

தனக்கு விருப்பமானவர்களை கடவுள் முன்கூட்டியே அழைத்துக்கொள்வார் என்று அம்மா சொன்னாங்க. கிழக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த கொச்சுப்பாப்பன்தான் பலா மரத்திற்கு அடியிலிருந்து பொன்னம்மா அக்காவைத் தூக்கி எடுத்துக்கொண்டு வந்தார். பலா மரத்தின் வேருக்கு நடுவில் கால் சிக்கியிருந்தது. இல்லாவிட்டால் நீரின் ஓட்டத்துல அவங்க அரிக்கப்பட்டுப் போயிருப்பாங்க. உடல்நலம் சரியில்லாம இருந்ததால பொன்னம்மா அக்காவை எங்கேயும் அனுப்புறதே இல்லை. நானும் அம்மாவும் பொன்னம்மா அக்காகூடவே இருப்போம். தினமும் ஏரிக்கு குளிபப்தற்காகப் போவோம். அன்றைக்கு கிழக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த பெரியம்மா என்னை அழைச்சிட்டுப் போனாங்க. துணி துவைப்பதற்குப் போகவேண்டாம் என்று பொன்னம்மா அக்காகிட்ட சொல்லியிருக்காங்க. குளித்துக்கொண்டு இருந்தபோதுதான் பொன்னம்மா அக்காவிற்கு உடல்நலக் கேடே வந்திருக்கு. குஞ்ஞம்மா அக்கா எல்லா விவரங்களையும் உங்களுக்கு கடிதம் மூலம் எழுதி அனுப்பலையா?”

“ம்.”

“கடவுளுக்கு என்மீதும் பாசம்தான். நான் தினமும் கடவுளை வணங்கிக்கொண்டிருக்கிறேன். அதனால கடவுள் என்னையும் சீக்கிரம் அழைத்துக்கொள்வார். அண்ணா, நீங்களும் என்னுடன் வரணும்.”

“என்ன?”

அதிர்ச்சியடைந்துவிட்டதைப்போல நான் குஞ்ஞுமோளை கண்களை விரிய வைத்துக்கொண்டு பார்த்தேன். தான் அடையப்போகும் மிககப்பெரிய காரியத்தைப் பற்றிய சந்தோஷம் அவளுடைய கள்ளங்கபடமற்ற முகத்தில் தெரிந்தது. மையால் வரைந்ததைப்போல நீல நிறத்திலிருந்த பெரிய கண்களைத் திறந்து அவள் என்னையே பார்த்தாள். அவளுடைய மிகப்பெரிய அற்புதப் பிறவியான ‘அண்ணன்’ என்ற இந்த மனிதன் கடவுளை நோக்கிச் செல்வதற்கு தயார்தானா என்று கேட்பதைப்போல அவளுடைய பார்வை இருந்தது. அவள் கூறியதைப்போல நடந்துவிடுமோ என்று சந்தேகப்பட்டதைப்போல நான் அவளைப் பிடித்து நெருக்கமாக நிற்க வைத்துக்கொண்டு கூந்தலை வருடினேன். இப்போது அவளுக்கு என் கைவிரலைப் பிடித்து நிற்கக்கூடிய அளவிற்கு உயரம் உண்டாகிவிட்டிருக்கிறதே! முதல்முறையாக நான் அந்த வீட்டிற்குச் சென்ற போது, குஞ்ஞுமோளுக்கு மூன்று வயதுதான் இருக்கும். அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கோ தூரத்திலிருக்கும் நாட்டில் பணி செய்துகொண்டு, தன்னுடைய மூத்த அக்காவுக்கு கடிதங்கள் எழுதியும் பணம் அனுப்பிக்கொண்டும் இருக்கும் அண்ணனைப்பற்றி கேள்விபப்ட்டுக் கொண்டிருக்கிறாள். வருடத்திற்குகொருமுறை ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விசேஷமான பொருட்களுடன் அண்ணன் வருகிறான்.

“குஞ்ஞுமோளே?”

“என்ன?”

“உன்னை கடவுள் இப்போது எந்த காரணத்தைக் கொண்டும் அழைக்கமாட்டார். நீ போய்விட்டால், பிறகு... இந்த சின்ன தங்கச்சியை அண்ணனான என்னால் எப்படிப் பார்க்க முடியும்?

“அண்ணா, நீங்களும் என்கூட வரணும்.”

“சரி. நாம ஒண்ணா சேர்ந்து போவோம். இப்போதல்ல. எவ்வளவோ நாட்கள் கழிந்தபிறகு...”

“ம்... எது எப்படி இருந்தாலும்.... அண்ணா, நீங்க என்கூட சேர்ந்து வரணும்...”

“வர்றேன்.”

“அண்ணா. எனக்கு எல்லாரின்மீதும் இருப்பதைவிட உங்கள்மீதுதான் பாசம் அதிகம்.”

“ம்..”

“அண்ணா, தினமும் நான் உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்.”

“எனக்கும் இந்த குட்டி தங்கச்சியின்மீது அதே மாதிரி பாசம் இருக்கு..”

“அம்மாவும் கிழக்குப் பக்க வீட்டிலிருக்கும் பெரியம்மாவும் சொல்லுவாங்க... ‘ஓ... பொண்ணுக்கு ஒரு அண்ணன் இருக்கான். அதைப்பற்றி பெரிய நினைப்பு’ என்று...”

“அப்படியா?”

“அண்ணா, பொன்னம்மா அக்காவுக்கும் உங்கமேல பெரிய அளவுல அன்பு இருந்தது. அண்ணா, பொன்னம்மா அக்கா எப்போ பார்த்தாலும் உங்களைப் பற்றி பேசிக்கிட்டே இருப்பாங்க.”

“அப்படியா?”

நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். மேற்கு திசையிலிருந்த அடர்த்தியான மரங்களுக்கு மத்தியில் தெரிந்த, மறைந்துகொண்டிருந்த சூரியனின் வெளிச்சம் கல்லறைகளில் இளம் சிவப்பு நிறத்தைப் பரவச் செய்துகொண்டிருந்தது. தேவாலயத்தின் கட்டடங்கள், மறைந்து கொண்டிருக்கும் சூரியன் விட்டுச்செல்லும் பிரகாசத்தை வாங்கிக்கொண்டு ஜொலித்துக்கொண்டிருந்தன. பொன்னம்மா புதைக்கப்பட்டிருந்த இடத்தில் படர்ந்து கிடக்கும் முட்புதர்களிலிருக்கும் சிறிய பூக்களும், முன்பு இருந்ததைவிட அதிகமான சிவப்பு வண்ணத்துடன் இருக்கின்றனவோ? ஆமாம்... ஆசைகள் நிறைந்த அந்த இதயத்திலிருந்து உருவானவைதானே அந்த ரத்தப் பூக்கள்! ஆசைகள் நிறைந்த.... அனைத்தும் இந்த மண்ணில் கலந்துவிட்டிருக்கின்றன. கடைந்தெடுத்ததைப் போன்ற அழகான வடிவம் கொண்ட அவளுடைய சரீரத்தையும், கள்ளங்கபடமற்ற தன்மை சிறிதும் விலகியிராத முகத்தையும் நான் பார்க்கிறேன். அவை அனைத்தும் மண்ணாகப் போயிருக்கின்றன என்பதை நினைக்கும்போது, மனதிற்குள் இனம்புரியாத ஒரு வேதனை உண்டாகிறது.

பெண் பார்ப்பதற்காக நான் அந்த வீட்டிற்குச் சென்றபோது, பொன்னம்மா என்ற பெயரைக்கொண்ட ஒரு இளம்பெண் அங்கு இருக்கிறாள் என்ற விஷயமே எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளும் அளவிற்கு, பொன்னம்மா அந்த வீட்டைச் சேர்ந்த ஒருத்தியாக இல்லையே! தூரத்து உறவிலிருந்த ஒரு குடும்பத்தில் அனாதையாகிவிட்ட மூன்று இளம்பெண்களில் மூத்தவள் பொன்னம்மா. இரண்டு தங்கைகளை, வேறு இரண்டு உறவினர்கள் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டார்கள். திருமணம் முடிந்து நான் அந்த வீட்டிற்குச் சென்றபோதுதான் நான் அவளையே பார்க்கிறேன். கதவிற்குப் பின்னால் முகத்தை மட்டும் வெளியே காட்டிக்கொண்டு, ஒரு ஆச்சரியத்தைப் பார்ப்பதைப்போல அவள் என்னையே கண்களை அகலத் திறந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். நான் பார்க்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டதும் உடனடியாக தன்னுடைய முகத்தை உள்ளே இழுத்துக்கொண்டாள். நான் கேட்டேன்.


“உள்ளே யார்? அறிமுகமில்லாத ஒரு ஆள்..”

குஞ்ஞம்மா சொன்னாள் :

“பொன்னம்மா!”

“எந்தப் பொன்னம்மா?”

“அம்மாவுடைய ஒரு அண்ணனின் மகள்.”

மிகுந்த ஆர்வத்துடன் அல்ல அவள் அதைக் கூறியது. அந்த வீட்டில் அக்கறை செலுத்தப்பட்ட ஒரு உயிர் அல்ல அவள் என்பதை நான் புரிந்துகொண்டேன். அந்த வீட்டுடன் மிகவும் நெருக்கமாகி, தெரியாமலிருந்த பல விஷயங்களையும் தெரிந்துகொண்டபோது, பொன்னம்மாவைப் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். குஞ்ஞம்மாவின் அன்னைதான் கூறினாள்:

“அவளுக்கு ஒரு உடல்நலக் கேடு இருக்கிறது குழந்தை. வலிப்பு நோய்... ஒவ்வொரு மாதமும் மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து அது வரும். எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தாச்சு. இனி தெய்வமே மனசு வச்சாத்தான். அந்த நோய் குணமாகும்.”

உண்மைதான். உதவியையும் மனநிம்மதியையும் அவளைப் பொறுத்த வரையில் தெய்வத்திடமிருந்து மட்டுமே எதிர்பார்க்க முடியும் என்பதை நான் சீக்கிரமே தெரிந்துகொண்டேன். பொன்னம்மாவும் குஞ்ஞம்மாவும் ஒரே வயதைக் கொண்டவர்கள். அவர்கள் ஒரே மாதத்தில் பிறந்திருக்கிறார்கள்.

“உடல்நலக்கேடு இல்லாமலிருந்தால், இருப்பதில் எதையாவது கொடுத்து, அவளை ஒருத்தன்கூட அனுப்பியிருப்போம் குழந்தை...” என்று குஞ்ஞம்மாவின் தாய் கூறியதையும் நான் நினைத்துப்பார்க்கிறேன். ஆனால், அவளுக்கு அந்த உடல்நலக்கேடு இருப்பது ஒரு வகையில் நல்ல விஷயம் என்றல்லவா அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அந்த வீட்டிலிருக்கும் வேலைகள் முழுவதையும் அவள்தான் செய்கிறாள். நான் அங்கு விருந்தாளியாகச் சென்றபிறகு ஒரு நிமிடம்கூட பொன்னம்மா வெறுமனே அமர்ந்திருந்து பார்த்ததே இல்லை. என்னுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் குஞ்ஞும்மாவைவிட அவள் அதிக ஈடுபாட்டைக் காட்டினாள் என்றே கூற வேண்டும். முதல்முறையாக நான் அவளிடம் பேசியதை நினைத்துப் பார்க்கிறேன். திருமணம் நடந்த சில நாட்களில் நடந்தது அது. ஏரியின் கரையில் நின்றுகொண்டு, பச்சைப் பசேல் என்றிருந்த மலைப்பகுதியின் வனப்பை நான் ரசித்துக்கொண்டிருந்தேன். ஏரியின் கரையிலிருந்த காய்கறித் தோட்டத்தில் பயறு பறிப்பதற்காக வந்திருந்தாள் பொன்னம்மா. பயறு கொடிகளுக்கு மத்தியில் அவளுடைய கைகள் அசைவதைத்தான் முதலில் பார்த்தேன். பிறகு... அவளடைய ஆர்வம் நிறைந்த முகத்தை, நான் அங்கு நின்றுகொண்டிருப்பேன் என்பதை அவள் நினைத்திருக்கவேயில்லை. என்னைப் பார்த்ததும், கிள்ளி எடுத்த ஒரு பயறின் நுனியைக் கடித்தவாறு முகத்தை குனிந்துகொண்டு நின்றாள். நான் அருகில் சென்று கேட்டேன்:

“பொன்னம்மா, உனக்கு என்மீது கோபம்... அப்படித்தானே?”

அப்படிக் கேட்கும் அளவிற்கு, தான் நடக்கக்கூடாத வகையில் ஏதாவது நடந்துவிட்டோமோ என்ற பதைபதைப்பு உண்டானதைப்போல அவள் முகத்தை உயர்த்திப் பார்த்தாள்.

உடனடியாக முகத்தை குனிந்துகொண்டு கையிலிருந்த பயறை நசுக்கிக்கொண்டே சொன்னாள் :

“அண்ணா... உங்களுக்கு விருப்பமில்லாததால்தானே என்னுடன் இதுவரை பேசாமலே இருந்தீர்கள்?”

“அண்ணா என்று யார் அழைக்கச் சொன்னார்கள்? பொன்னம்மா, குஞ்ஞம்மாவைவிட நீ ஒரு வாரத்திற்கு மூத்தவள்... அப்படித்தானே?”

வெட்கத்தால் அவளுடைய முகம் மீண்டும் குனிந்துகொண்டது. பிறகு... மெதுவான குரலில் கூறினாள்:

“பிறகு... நான் எப்படி அழைப்பது? அத்தையிடம் நான் கேட்டேன்? எப்படி அழைக்க வேண்டுமென்று.”

“பிறகு?”

“உனக்கு எப்படி அழைக்கணும்னு தோணுதோ, அப்படி அழைச்சிக்கோன்னு சொல்லிட்டாங்க.”

“பொன்னம்மா, அண்ணா என்று அழைப்பதுதான் உனக்குப் பிடித்திருக்கிறதா?”

பொன்னம்மா எதுவும் கூறவில்லை. ஆரோக்கியமான அவளுடைய சரீரத்திற்குள் நாசமாய்ப்போன அந்த நோய் மறைந்துகொண்டிருக்கிறது என்பதை நம்புவதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. கறுப்பிற்கும் வெளுப்பிற்கும் இடைப்பட்ட அவளுடைய நிறமே ஆரோக்கியத்தை வெளிப்படுத்தியது. அடர்த்தியான சுருண்ட தலைமுடியும், மெல்லிய இடையும், உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த முகமும் அவளின் அழகை அதிகரித்துக்கொண்டிருந்தன. நான் கேட்டேன்.

“எதற்கு பயறு பறிக்கிறாய்?”

“அவியல் வைப்பதற்கு. அவியல் என்றால் மிகவும் பிடிக்குமென்று குஞ்ஞம்மா சொன்னாளே!”

“ஓஹோ...”

“அண்ணா, பிறகு... உங்களுக்கு வேறென்ன பிடிக்கும்?”

“பிறகா? பலாப்பழம், முந்திரிப்பருப்பு, சீமைச்சேம்பு... இப்படி விருப்பமானவை பல இருக்கின்றன. பொன்னம்மா, உன்னையும் எனக்குப் பிடிக்கும்.

அப்போது பொன்னம்மாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஒரு நிமிடம் மட்டுமே. சிரித்ததை யாராவது கேட்டிருப்பார்களோ என்று பயத்துடன் சுற்றிலும் பார்த்தாள்.

“நான் போகட்டுமா அண்ணா? ஒரே ஓட்டத்துல வந்துவிடணும்னு அத்தை சொல்லிவிட்டாங்க. அண்ணா, நாளைக்குப் போறீங்களா?”

“நாளை அதிகாலை வேளையில்...”

“நாளைக்கு வேண்டாம் அண்ணா. இரண்டு நாட்கள் கழிந்தபிறகு போனால் போதும்.”

“என் விடுமுறை முடிந்துவிட்டது. பொன்னம்மா, நாளைக்கு வேலை செய்யும் இடத்திற்கு திரும்பிப் போயாகணும்.”

“குஞ்ஞம்மாவை உங்களுடன் அழைத்துப் போறீங்களா?”

“ஆமாம்... அங்கு வீடு எடுத்து வைத்துவிட்டுத்தான் வந்தேன்.”

பொன்னம்மா எதுவும் கூறவில்லை. நான் சொன்னேன்:

“பொன்னம்மா, உன் திருமணம் முடிவு செய்யப்படும் தகவல் தெரிந்ததும், நாங்கள் வருகிறோம்.”

எரிந்து கொண்டிருந்த விளக்கு திடீரென்று அணைந்து விட்டதைப்போல, அவளுடைய முகம் மங்கலாகிவிட்டது. வேகமாக நடந்துகொண்டே சொன்னாள் :

“நான் போகட்டுமா, அண்ணா?”

தனக்கிருக்கும் நாசமாய்ப்போன நோயைப் பற்றியும், தன் பரிதாபப்படக்கூடிய மோசமான நிலைமையைப் பற்றியும் எந்தச் சமயத்திலும் அவள் கவலைப்பட்டு நான் பார்த்தே இல்லை. கவலைப்படுவதாக இருந்தால், ஒரு நிமிடம்கூட சந்தோஷப்பட முடியாத அளவிற்கு காரணங்கள் தான் இருந்தனவே! முக்கியமானது - நோய். மிகவு“ இளம்வயதிலேயே அந்த நோய் அவளை இறுகப் பிடித்துக்கொண்டது. நான்கைந்து வயது நடந்துகொண்டிருந்தபோது, ஒருமுறை வீட்டு வாசலில் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டு அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்:

“என் கண்களில் இருள் வருகிறது.”

ஒவ்வொரு வருடமும் புதிய வடிவங்களுடன் அந்த நோய் அவளுக்குள் வளர்ந்துகொண்டிருந்தது. ஒரு காலத்தில், சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சிறிய குடும்பத்தின் செல்ல மகளாக அவள் இருந்தாள். அப்பா பேருந்து நடத்துனராக இருந்தார். அவள் எதைக் கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்த அப்பா. வீட்டில் எப்போதும் அசைவம்தான். மீனும் மாமிசமும் இல்லாமல் அப்பா சாப்பிடவே மாட்டார். தன் மகள் பொன்னம்மாவைத் தன்னுடன் படுக்க வைத்துக்கொண்டுதான் அப்பா உறங்குவார். சாயங்காலம் வரும்போது அந்த மகளுக்காக ஏதாவது விசேஷமாக வாங்கிவருவார். ஆனால், அந்தக் காலமெல்லாம் கனவைப்போல கடந்து போய்விட்டன. பேருந்து விபத்தில் சிக்கி அப்பா இறந்துவிட்டார். அதே வருடத்தில் அம்மாவும் இறந்து விட்டாள்.

சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பதைத் தவிர, பிள்ளைகளுக்காக எதுவுமே சம்பாதித்து வைத்துவிட்டுப் போவதற்கு அப்பாவால் முடியவில்லை. அந்த வகையில் அனாதையாகிவிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் அவள் என்ற விரக்தி உணர்வு எந்தச் சமயத்திலும் அவளிடம் இருந்ததில்லை. தீவிரமான நோய், அவளுடைய வாழ்க்கையின் சந்தோஷங்களுக்கு முன்னால் கட்டிவிட்ட உயரமான கோட்டையைக்கூட அவள் கண்டுகொள்ளவே இல்லை என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். நோய் பாதித்த நிலையில் ஒருமுறை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஒரே ஒருமுறை மட்டும்.


மூன்று வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது அது. எப்போதையும்விட வேலைகள் அதிகமாக இருந்த ஒரு விடுமுறைக் காலமது. விடுமுறை முடிகிற நேரத்தில்தான் குஞ்ஞம்மாவுடன் சேர்ந்து என்னால் அந்த வீட்டிற்குச் செல்ல முடிந்தது. நாங்கள் வரப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். பொன்னம்மா நான் கேட்கவேண்டும் என்பதற்காக குஞ்ஞம்மாவிடம் அவள் தன் மனக்குறைகளைக் கூறிக்கொண்டிருந்தாள்:

“பெரிய மனிதர்கள் இப்போதெல்லாம் அப்பாவிகளை நினைத்து பார்க்கிறார்களா? அண்ணன் இப்போது முன்பு இருந்த ஆளில்லையே எனினும், நாங்கள் அண்ணனை மறக்கமாட்டோம்...”

இரண்டு மூன்று வருடங்கள் பொன்னம்மாவிடம் பெரிய அளவில் மாற்றங்களை உண்டாக்கிவிட்டன என்று கூறுவதற்கில்லை. நோய் அவளை மேலும் சற்று பாதித்து விட்டிருந்ததால், சரீரத்தின் அழகிற்கு சிறிது குறைபாடு உண்டாகியிருந்தது. எனினும், பழைய உற்சாகம் அப்படியே இருந்தது. என்னுடன் உரையாடுவதிலும், நான் கூறும் தமாஷான விஷயங்களைக் கேட்டு சிரிப்பதிலும் ஒவ்வொரு நிமிடமும் அவள் விருப்பம் கொண்டிருந்தாள். சமையலறையில் மிகவும் தீவிரமாக வேலை செய்து கொண்டிருப்பதற்கு மத்தியிலும், இடையில் ஒருமுறை வெளியே வந்து நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துவிட்டுச் செல்வாள். பயறையோ மிளகையோ பிரித்துப் போட்டுவிட்டு வரும் வழியில், அருகில் வந்து மெதுவான குரலில் கேட்பாள் : “அண்ணா, காப்பி போட்டுக் கொண்டு வரட்டுமா? ஓட்டை நீக்கிவிட்டு முந்திரிப்பருப்பு கொண்டு வந்து தரட்டுமா?”

நான் அங்கு சென்றதற்கு மறுநாள். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. குஞ்ஞம்மா எழுந்துபோவதை நான் உணர்ந்தேன். அதிகாலை வேளையில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் தூங்குவதற்கு நான் விரும்புகிறேன் என்ற விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். தூக்கத்தில் யாரோ காதில் முணுமுணுப்பதைப்போல தோன்றியது.

“காப்பி...”

நான் கண்களைத் திறக்கவில்லை. அப்போது என்னுடைய நெற்றியில் ஒரு முத்தம் பதிந்ததைப்போல இருந்தது. எனினும், கண்களைத் திறக்காமலேயே, “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கொள்ளட்டுமா” என்று முணுமுணுத்துக்கொண்டே நான் திரும்பிப் படுத்தேன். அப்போது குளிர்ச்சியான ஒரு கை என்னுடைய நெற்றியை வருடியது. கண்களைத் திறக்காமலே நான் அந்தக் கையைப் பற்றினேன். என்ன? வளையல் அணியாத கையாக இருக்கிறதே! அதிர்ச்சியடைந்து நான் கண்களைத் திறந்தேன். பொன்னம்மா ! வென்டிலேட்டரின் வழியாக உள்ளே வந்துகொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளுடைய முகத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை. கையை விடுவித்துக்கொண்டு அவள் அங்கிருந்து ஓடினாள்.

அன்று பகல் முழுவதும் நான் பொன்னம்மாவை வெளியே எங்கும் பார்க்கவில்லை. சமையலறைக் குள்ளேயிருந்து அவள் வெளியே வரவேயில்லையென்று தோன்றியது. அவளுடைய மாறுபட்ட நடத்தையைப் பார்த்து குஞ்ஞம்மாவின் அம்மா சொன்னாள் :

“பெண்ணுக்கு என்ன ஆச்சு? நோய் வரப்போவதற்கு முன்னால் இருப்பதைப்போல உள்ளேயே அடங்கிப்போய் இருக்கிறாயே! அது வருவதற்கான நேரம் இன்னும் வரவில்லையே! அமாவாசையோ பௌர்ணமியோ நெருங்கி வரும்போதுதானே அது வரும்!”

ஆமாம்... வழக்கத்திற்கு மாறாக அன்று சாயங்காலம் அவளுக்கு அந்த நோய் வந்துவிட்டது. ஒரு அலறலுடன் அவள் சமையலறையின் தரையில் விழும் சத்தத்øக்கேட்டு நான் அங்கு ஓடினேன். அப்போது நான் அன்றுவரை பார்த்த பொன்னம்மாவாக அவள் இல்லை. முகத்தில் பேய்த்தனமான வெளிப்பாடு! பற்கள் ‘நறநற’வென்று கடிக்கப்படும் ஓசை எவ்வளவு அச்சத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது! கைகளையும் கால்களையும் தரையின்மீது ஓங்கி அடித்துக்கொண்டும் நெளிந்துகொண்டும், வளைந்துகொண்டும் அவள் இருந்ததைப் பார்த்து நானே பயந்துபோனேன். அம்மா சமாதானம் சொன்னாள் :

“ஓ... பயப்படுறதுக்கு எதுவுமில்லை குழந்தை! அரை மணி நேரம் ஆயிட்டா எல்லாம் சரியாயிடும்.”

சிறிது நேரம் ஆனபிறகும் அவள் எந்தவித அசைவும் இல்லாமல் வெறும் தரையில் கிடந்தாள். முகத்தில் நீரைத் தெளித்ததும், கண்களைத் திறந்து பார்த்தாள். நான் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன் என்பது தெரிந்ததும், முன்பு எந்தச் சமயத்திலும் பார்த்திராத தோல்வி மனப்பாங்குடன் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அதற்குப்பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. அடுத்த விடுமுறையின்போது பொன்னம்மா அவளுடைய தாயின் மூத்த சகோதரி வீட்டில் இருந்தாள்.

‘எவ்வளவோ நேரமாயிடுச்சு. அண்ணா, இருட்டிவிட்டால், ஒற்றையடிப் பாதையின் வழியாகப் போவதற்கு நமக்கு பயமாக இருக்காதா?”

நான் சிந்தனைகளிலிருந்து விடுபட்டேன்.

குஞ்ஞுமோள் கூறியது உண்மைதான். இருள் பரவ ஆரம்பித்திருக்கிறது. சுண்ணாம்பு அடிக்கப்பட்ட கல்லறைகள் உண்டாக்கிய பிரகாசம் மட்டுமே இருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்திலும் பொன்னம்மா புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலே, ஒன்றொடொன்று பிணைந்து கிடக்கும் முட்புதரில் சிவப்பு நிறத்தில் சிறிய சிறிய பூக்கள் இருந்தன. காதல் உணர்வு நிறைந்த அந்த இதயத்திலிருந்து முளைத்தெழுந்து வந்த ரத்தப் பூக்கள்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.