Logo

பிசாசு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6326
pisasu

ருவேளை? எதையாவது பார்த்துவிட்டுதான் நாய்கள் இப்படி ஊளையிடுகின்றன. மையைப்போல கறுத்து, இருண்டு கிடக்கும் இந்த நள்ளிரவு வேளையிலும் நாய்களால் பார்க்கமுடியும். அதனால் தான் வாசனை பிடித்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் தேடி இங்குமங்குமாக அது ஓடித்திரிந்து கொண்டிருக்கிறது! என்ன? பிசாசு என்ற ஒன்று இருக்கிறதா? சரிதான்... பிசாசும் பூதமும் யானை மருதாயும்,

அறுகொலையும் கருங்காளியும் சாத்தானும்- சகல வித ஷைத்தானும் இருக்கத்தான் செய்கின்றன. சரியான நள்ளிரவு வேளையில் நெருப்பைப் போன்ற கண்களை ஜொலிக்க வைத்துக்கொண்டு, உடுக்கையால் ஓசை உண்டாக்கியவாறு வரும் யானை மருதாய்...? நிச்சயமாக உண்டு. ஆனால் நான் பார்த்ததில்லை. எனக்கு ஒரு ஆளைத் தெரியும். நெருப்புருண்டைகளை வைத்துப் பந்தாடும் எலும்புக்கூடுகளின் ஊர்வலத்தைப் பார்த்தவர் அவர்! ஒரு வெள்ளிக்கிழமை. நள்ளிரவு வேளையில், ஒரு வயலின் நடுவில் அவர் பார்த்தார்- ஒரு பெரிய நெருப்பு. எரிந்து எரிந்து அது அப்படியே வானத்தின் உயரத்திற்கு உயர்ந்தது. திடீரென்று இடி முழங்கியதைப் போல ஒரு அட்டகாசம்! சிறிது சிறிதாக ஆன அந்த நெருப்பு அப்படியே அணைந்துவிட்டது. அதற்குப் பிறகும் இரைச்சலுடன் அது மலைபோல எரிந்து உயர்ந்தது- லட்சம் குரவ மலர்கள் ஒரே நேரத்தில் எரிவதைப் போல. திடீரென்று இதயத்தை நடுங்கச் செய்கிற அளவிற்கு ஒரு சிரிப்பு வெடித்துச் சிதறி வானத்தின் விளிம்பை அடைந்தது. அத்துடன் ஆயிரக்கணக்கில் அந்த நெருப்பு பிரிந்தது. கழுத்தில் தீப்பந்தத்தைச் சொருகிக் கொண்டு, ரத்தத்தில் குளித்த தலையில்லா சரீரங்களுடன்... தொடர்ந்து அவை அனைத்தும் அந்த ஆளைச் சுற்றி நடனமாடுகின்றன! ஆமாம்... ஆள் பயங்கரமான தைரியசாலிதான். வீட்டிற்குள் சென்று நுழைந்தவுடன், அவருடைய சுய உணர்வு இல்லாமல் போனது. மூன்று மாத காலத்திற்கு எந்தவொரு ஞாபகமும் இல்லை. வெறும் முனகல்களும் உளறல்களும். என்னவெல்லாம் நடந்தன தெரியுமா? அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக இருந்தார். அவருக்கு சில எதிரிகள் இருந்தார்கள்.

அவர்களை அவர் அழித்துவிட்டார். எப்படித் தெரியுமா? தேநீர்க்கடைக்காரனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். தனக்கு எதிராக இருக்கும் நண்பர்களுக்குத் தரும் தேநீரில் ஒரு வகையான ‘ஆஸிட்'டை கலந்து கொடுப்பதற்காக. அந்த வகையில் ஒரு ஆறு மாதங்கள் கடந்தோடி விட்டன. அவர்கள் யாரும் இறக்கவில்லை! ஆனால், அவர்களுடைய ஆண்மைத்தனம், மதிப்பு எல்லாம் இல்லாமற்போயின. அவர்கள் எல்லாரும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆள் மட்டும் மரணமடைந்துவிட்டார். தன்னைத் தானே கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டார். ங்ஹா... இதைப் போன்ற பயங்கரமான சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நம் அனைவரது கண்களுக்கும் முன்னால்தான்! ஆமாம்... ஆமாம். உணவில் ‘ஆஸிட்'டைக் கலந்துகொடுத்து எதிரிகளை அழிப்பதென்ற விஷயம் அந்தக் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்திருக்கும் ஒரு செயல்தான். ங்ஹா... பிசாசுகள்தான்! நண்பரே! மனிதர்கள் மட்டுமே பிசாசுகளாக இருக்கிறார்கள். ஒரு ஆன்ம பரிசோதனை நடத்தப்பட்டால், மனசாட்சிக்கு முன்னால் அனைவரும் அவலட்சண உருவம் கொண்டவர்களாக மாறி விடுவார்கள். அவ்வளவுதான்... ...பிசாசுகள்!

அந்த விளக்கை அணைத்துவிடு. பொருட்களுக்கு அதிகமான விலையிருக்கும் இந்த போர்க்காலத்தில் எண்ணெய்யை வெறுமனே வீணாக்க வேண்டாம். கை பட்டு சிம்னி விளக்கு உடைந்து விடாத இடத்தில் அதை வைக்கவேண்டும். ங்ஹா... சரிதான். உண்மையிலேயே இருட்டு ஒரு சுகம்தான். மறைந்துபோன காரியங்கள், அனுபவங்கள் அனைத்தும் இருளின் பேரமைதியில்தான் முகத்தைக் காட்டுகின்றன. என்ன? மேலே ‘கிருகிரா' என்ற சத்தம் கேட்கிறதோ? ஓ... அது ஏதாவது பூனையாக இருக்கவேண்டும். நாய்கள் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருப்பதையும் ஊளையிடுவதையும் பார்த்து பயந்துபோய் வீட்டின் மேலே இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த தீப்பெட்டியை இங்கே கொடு. தீக்குச்சிகள் மிகவும் மெல்லியவையாக இருக்கின்றவே! நான் அதை ‘ப்ளேடை' பயன்படுத்தி நான்கு துண்டுகளாக்கி வைத்திருக்கிறேன். விலை அரை அணாதானே? (மூன்று பைசா). எப்படி தவறு செய்ய முடியும்? ஓஹோ! ஆறு, எட்டு துண்டுகளாகக்கூட ஒரு தீக்குச்சியை ஆக்கலாம். ஆனால், அதற்கு மிகுந்த அனுபவம் வேண்டும். இதோ... தலையணைக்கு அடியில் வைத்திருக்கிறேன். இரவு வேளைகளில் என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஒரு தீப்பெட்டியோ டார்ச் விளக்கோ... ஆமாம்... ஒரு கட்டாயமாக அது ஆகிவிட்டது. 1933-ஆம் ஆண்டில் டும்கூரில் நடைபெற்ற ஒரு அனுபவம்தான் காரணம்.

அதுவா? பயங்கரம்! நினைத்துப் பார்க்கும்போது என் இதயம் ‘கிடுகிடு' என்று நடுங்குகிறது. கதையல்ல- உண்மையாகவே நடைபெற்ற சம்பவம்! ஆமாம்... கதையென்று கூறுவதாக இருந்தால், அது நடக்காத சம்பவமாக இருக்கவேண்டும் என்று என் காதலி கூறுகிறாள்.

ஆமாம்- நானும் காதலிக்கிறேன். அளவற்ற காதலின் -சுவாரசியத்தை நானும் தெரிந்துகொண்டுவிட்டேன். காதல்! அது என்னை மூச்சை அடைக்கச் செய்கிறது. என் இதயத்தை அது நூறு இடங்களில் காயப்படுத்தி விட்டது. ஆமாம்... இப்போதும் நான் காதலின் நெருப்பு அடுப்பில்தான் இருக்கிறேன். என்னை அது சாம்பலாக்கட்டும். நான் வெந்து நீறாக ஆகட்டும்.

அதற்குப் பிறகும்... அதற்குப் பிறகும்... நான் யுகங்களின் தீவிரத்தன்மையுடன் காதலிக்கிறேன். தாகம்-அடங்காத தாகம் என்னை வாட்டுகிறது. காதலின் அந்த அமிர்தம் எனக்கு வேண்டும். நான் அதை நிறைய... நிறைய... பருகி... நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? ங்ஹா... அது பிடித்துக் கொண்டது. எல்லையற்ற காலத்திலிருந்தே கற்பனையில் வலம்வந்து கொண்டிருக்கும் அந்தப் பிசாசு! நரகத்தின் ஆழத்திற்குள்ளிருந்து சொர்க்கத்தின் தளத்திற்கு வாழ்க்கையை அப்படியே பந்தாடும் அந்த கோபம் கொண்ட, கெட்ட எண்ணம் நிறைந்த பூதம்! காதல் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறது.


ஒரு மூன்று வருடங்கள் ரகசியமாக நான் காதலித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ‘ஹெல'னை... பெயர் அதுவல்ல. எனினும், நான் ‘ஹெலன்' என்றுதான் அழைக்கிறேன். ‘மைடியர் ஹெலன் ஆஃப்...' -இப்படித்தான் காதல் உணர்வு நிறைந்த என்னுடைய இதயம் அவளை அழைக்கிறது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? ‘ஹெலன் ஆஃப் ட்ராய்'யைப் பற்றி... ங்ஹா... அதே போலத்தான் தோற்றம். இருண்ட ஆழமான பகுதிகளை வெளிப்படுத்தும்- சற்று முன்னோக் கியிருக்கும் கறுத்த விழிகள்... நீண்டு, சிவந்த முகம்... சிவந்த, மென்மையான உதடுகள். பிப்ரவரி 23-ஆம் தேதிதான் நான் முதல் முறையாக அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து இதுவரை ஒரு தொண்ணூறு காதல் கடிதங்கள் எழுதி அனுப்பியிருப்பேன். என்னுடைய உயிரோட்டம் நிறைந்த குருதியில் அமிழ்த்தி எழுதிய காதல் கடிதங்கள்! ம்... அவள் பதில் எழுதினாள். என் ஹெலன் பரந்த மனம் கொண்டவள். சாப்பிட்டு முடித்து ஒரு பெரிய கொட்டாவி விட்டுக்கொண்டே அவையனைத்தையும் வாசித்து முடித்துவிட்டு, ஹெலன் எனக்கு பதில் எழுதினாள்:

என்மீது அவள் அன்பு வைத்திருக்கிறாள்- ஆனால் ஒரு சகோதரனிடம் அன்பு வைத்திருப்பதைப்போல. என்ன? என் ஹெலனை பிசாசு என்கிறீர்களா? சட்! உன்னை நான் அடித்து நொறுக்கிவிடுவேன்! ங்ஹா! மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை. இனிமேல் எச்சரிக்கையுடன் இருந்துகொண்டால் போதும்.

என் ஹெலன்! எல்லையற்ற பெண்மைத்தனத்தின் அடையாளம். ஆமாம்... அவளை நான் வழிபடுகிறேன். என்ன? கேட்பதற்கு சுவாரசியமாக இல்லையா? ஓ... அப்படியென்றால், தூங்கிக் கொள்ளுங்கள். குட் நைட்!... ங்ஹா! பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? மைசூர் சமஸ்தானத்தில். அங்கு போயிருக்கிறேனா என்று கேட்கிறீர்களா? சரிதான்! இந்தியா முழுவதும் நான் பயணம் செய்திருக்கிறேன். ஒன்பது பத்து வருடங்கள் தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தேன். எங்கெங்கெல்லாம் தெரியுமா? இந்தியாவின் பூகோள வரைபடத்தை விரித்துப் பார்க்கும்போது கவனித்திருக்கிறீர்கள் அல்லவா? சிறிது சிறிதாக இருக்கும் கறுப்பு நிற வட்டங்கள்? ங்ஹா... அவையனைத்தும் நகரங்கள். அவற்றில், நூற்றுக்கு எழுபத்தைந்தில் நான் வசித்திருக்கிறேன். ஆஃப்கானிஸ்தான் வழியாக ரஷ்யாவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், வைக்கத்திலிருந்து புறப்பட்டு கைபர் கணவாயை அடைந்தபோது, ஐந்து வருடங்கள் கடந்து விட்டிருந்தன. நத்தை ஊர்வதைப்போல நடவடிக்கை இருந்தது. அப்படியே ரஷ்யாவை அடையும்போது வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடும் என்ற பயம் உண்டானதால், திரும்பி வந்துவிட்டேன். போனது? நாடுகளைப் பார்ப்பதற்கு. பணம்? அவற்றை எப்படியோ உண்டாக்கினேன். செய்யாத வேலையும், ஏற்காத ஜாதியும், போடாத வேடமும் இல்லை. சூழ்நிலைக்கேற்றபடி நான் எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். ஊ...? அந்த கிருகிரா சத்தத்தைப் பற்றி கேட்கிறீர்களா! ஓ... அது ஏதாவது நாயாக இருக்கும். காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேளுங்கள். அது வாசனை பிடித்துக்கொண்டே காய்ந்து போன சருகுகளின் வழியாக பதுங்கிப் பதுங்கி நடந்து போய்க் கொண்டிருக்கிறது.

டும்கூரில் உண்டான அனுபவத்தைக் கேட்கிறீர்களா? நான் கூற மாட்டேன். நீங்கள் பயந்து விடுவீர்கள். நாய்கள் ஊளையிட்டுக் கொண்டு ஓடித்திரிந்துகொண்டிருக்கும் இந்த நள்ளிரவு வேளை கூறுவதற்கு ஏற்றதல்ல. ஒரு பிசாசைப் பற்றிய விஷயமது. பயமில்லை என்கிறீர்களா? ஓ எஸ்... அப்படியென்றால், கூறுகிறேன். ஆனால், இடையில் புகுந்து எதுவும் கேட்கக்கூடாது. வெறுமனே ‘உம்' கொட்டிக்கொண்டு கேட்டால் போதும்.

ங்ஹா! அந்தக் காலத்தில் நாங்கள் ‘உலக சுற்றுப் பயணம் போய்க்கொண்டிருந்தவர்கள்'. ஆமாம்... என்னுடன் ஒரு நண்பனும் இருந்தான். பறவூரைச் சேர்ந்தவன். என்னுடைய நெருங்கிய தோழனும், சம வயதைக் கொண்டவனுமாக அவன் இருந்தான். பெயர்- சிவராமன் கர்த்தா. மெலிந்து, உயரமாக, மாநிறத்தில் அவன் இருந்தான். நுனி கூர்மையாகவும், மெலிய ஆரம்பித்துமிருந்த மூக்கும், பிரகாசமான கறுப்பு நிறக் கண்களும், சற்று அகலமான முகமும், மெல்லிய உதடுகளும்... பற்கள் இரண்டு வரிசைகளிலும் வெளியே நன்கு தெரியும் வண்ணம் சிரித்துக் கொண்டிருப்பான். கரகரப்பான குரலில் இருக்கக்கூடிய உரையாடலைக் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். யாரையும் பேசியே மயக்கிவிடுவான். யாரும் கோபம் கொள்ள முடியாத அளவுக்கு ஒரு குணத்தைக் கொண்டிருந்தான் கர்த்தா. என்னுடைய நீண்டகால பயணத்திற்கு மத்தியில் எனக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். ஆனால், நான் கோபம் கொண்டு பிரியாத ஒரே ஒரு நண்பன் கர்த்தா மட்டுமே. ‘உங்களுடைய மிகப் பெரிய நண்பன்' - இந்த வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் பத்து முறையாவது கர்த்தா கூறாமல் இருக்கமாட்டான். எதுவுமே தெரியாத ஒரு சிறிய குழந்தை நான் என்று கர்த்தா தன் மனதில் நினைத்துக்கொண்டிருந்தான். அதே நேரத்தில், என்னைப் பார்த்து அவனுக்கு மிகப்பெரிய அச்சம் இருந்தது. என்னுடைய விருப்பத்திற்கேற்றபடிதான் அவன் ஒவ்வொரு செயல்களையும் செய்வான். எங்காவது சென்றால் மனிதர்களைப் பார்ப்பது, உணவிற்கான வழியைக் கண்டுபிடிப்பது- இவைதான் கர்த்தாவின் வேலை.

கையில் கிடைக்கும் பணம் முழுவதையும் என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தான். கண்களில் படும் பலகாரங்கள் எல்லாவற்றையும் வாங்கிவிட வேண்டும்... பெரிய சாப்பாட்டுப் பிரியன் அல்ல. எனினும், அவற்றை வாங்கியே ஆகவேண்டும் என்று நினைப்பான் கர்த்தா. மூக்குப் பிடிக்க சாப்பிட்டு முடித்து, வெளியே சென்று ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவுடன், ஒரு பொட்டலம் அல்வாவோ, ஜிலேபியோ, வேர்க்கடலையோ... இவற்றில் ஏதாவது கர்த்தாவின் கையில் இல்லாமல் இருக்காது. அப்போது அவனுடைய முகத்தில் தெரியும் உணர்ச்சிகளைப் பார்த்தால், நான் ஏங்கி, ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு கனியை- மிகப்பெரிய தியாகம் செய்து, பறித்துக்கொண்டு வருவதைப்போல இருக்கும். நான் கோபப்பட்டால், சிரித்துக்கொண்டே கூறுவான்:

‘‘டேய் மகனே, உனக்காகத்தான் வாங்கிக்கொண்டு வந்திருக்கேன்!''

அதனால் காசு முழுவதையும் என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற கட்டாயச் சட்டத்தைச் செயல் வடிவத்திற்குக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலை உண்டானது. ங்ஹா... ‘டேய் மகனே' என்றுதான் நாங்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வோம். பள்ளிக்கூடம் மூடப்படாத காலமாக இருந்தால், நாங்கள் சொற்பொழிவு நடத்துவோம். சொற்பொழிவு ஆற்றுவதோ நாட்டு நிலைமைகளை பற்றி... ஏய்! நான் சொற்பொழிவு ஆற்றமாட்டேன். கர்த்தாதான் சொற்பொழிவுகளை நடத்திக் கொண்டிருப்பான். நான் பெரிய ஒரு மனிதனைப்போல- வேட்டைக்குச் செல்லும் வெள்ளைக்காரன் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு, கூடியிருப்பவர்களுக்கு முன்னால் கம்பீரமாக அமர்ந்திருப்பேன். ‘ஒருமுறை நான் ஒரு புலியுடன் ஒரு மணி நேரம் கடுமையாகப் போரிட்டேன்.


அதன் வாலைப்பிடித்து, தலையை சுற்றச் செய்து பாறையில் அடித்துக் கொன்றேன் என்று கர்த்தா அள்ளி விட்டுக் கொண்டிருந்தான். ஒரு நான்கய்யாயிரம் கண்கள் என்னை நோக்கி ஆச்சரியத்துடன் திரும்பின. காதலும் மரியாதையும் வியப்பும் கலந்த பெண்மணிகளின் கண்மணிகள் என்மீது பதிந்தபோது, வெட்கத்தால் அன்று என்னால் மூச்சே விடமுடியவில்லை. ங்ஹா... சிவராமனின் சொற்பொழிவு! ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஆங்கிலத்தில்... ஒரு எம்.ஏ., படித்தவனின் ஸ்டைலில். இண்டர்மீடியட் வரைதான் படித்திருக்கிறான். சொற்பொழிவை எழுதி சீர் செய்வது நான். கர்த்தா யாருக்கும் தெரியாமல் படிப்பான். மிகவும் அருமையாக சொற்பொழிவு ஆற்றுவான். சரி... பள்ளிக்கூடம் மூடப் பட்ட காலத்தில்தான் நாங்கள் டும்கூருக்குச் சென்றோம். டும்கூர்... எதுவுமே இல்லாத தரிசு நிலங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரம். மைசூர் மாநிலம் பெரும்பாலும் வறண்டு காய்ந்துபோன தரிசு பூமியைக் கொண்டதே. மலையும், குன்றுகளும், தரிசு நிலமும். நீருக்கு மிகவும் சிரமம். குளங்கள் ஏராளமாக இருந்தன. விவசாயத்திற்குத் தேவைப்படும் நீர் பெரும்பாலும் குளங்களில் இருந்துதான் கிடைத்தன. ஏதாவதொரு மலையின்மீது ஏறி நின்று கொண்டு மதிய நேரத்தில் பார்க்க வேண்டும். மேகக்கூட்டங்கள் பிரகாசிப்பதைப்போல, ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஏராளமான குளங்களைப் பார்க்கலாம். மைசூர் மாநிலத்தில்தான் ‘நீர்கள்' இருக்கின்றன. உப்பு நீர், சுண்ணாம்பு நீர், புளிப்பு நீர், கந்தக நீர்... சில கிணறுகளில் கசப்பான நீரும் இருக்கும். இருக்கும் ஆறுகள் பெரும்பாலான காலங்களிலும் வறண்டு காய்ந்துபோய்தான் கிடக்கும். வெண்மணல்...

அந்த வகையில் நீர் வற்றிப்போன ஒரு ஆற்றுக்கு அருகிலிருந்த ஒரு சத்திரத்தில்தான் நாங்கள் தங்கியிருந் தோம். பொதுவாக இருக்கக்கூடிய சோம்பலுடனே நான் சத்திரத்தில் அமர்ந்திருந்தேன். நல்ல மதிய நேரம்! கடுமையான வெப்பம் இருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டு முடித்து, வெறுமனே உட்கார்ந்துகொண்டிருந்த காரணத்தால் நான் சற்று கண் அயர்ந்துவிட்டேன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.

‘‘திறக்கடா, மகனே...'' அன்பு கலந்த கர்த்தாவின் குரல்... கண்ணைக் கசக்கிக்கொண்டே நான் கதவைத் திறந்தேன். என் கண்கள்- கறுத்த, உயரம் குறைவாக இருந்த- அறிமுகமில்லாத ஒரு முகத்தின்மீது சென்று பதிந்தன. ஒரு அங்குலம் நீளத்தில் முடி இருந்த உருண்டையான தலை, தடிமனான மேலுதடு முழுவதும் நீளமாக வளர்ந்திருந்த மீசை, சதைப்பிடிப்பு கொண்ட கூர்மையான நாசி, மிகவும் நெருக்கமாகக் காணப்பட்ட பூனைக் கண்கள், நீளமான கதர் ஜிப்பா, பாதங்கள் வரை நீண்டிருந்த கதர் வேட்டி, காலில் தோல் செருப்பு, கையில் பெரிய பிரம்புக் கழி... அனேகமாக முப்பத்தைந்து வயதிருக்கும்.

‘‘இவர் பெண்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர். பெரிய இந்தி பண்டிதரும்கூட. பண்டிட் நரசிம்மன். உங்களுடன் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக வந்தார்'' என்ற முன்னுரையுடன் கர்த்தா அறிமுகப்படுத்தினான். எனக்கு நன்கு இந்தி தெரியும் என்பதால், நாங்கள் வெகுசீக்கிரம் நண்பர்களாகி விட்டோம். அவருடைய அமைதியான உரையாடல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சிரிக்கும்போது அந்த கறுத்து இருண்ட முகத்திலிருந்த இரண்டு வரிசைப்பற்களும் ‘பளபள' வென பிரகாசிக்கும். பூனைக் கண்கள் எந்தவித அசைவுமில்லாமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும். ஈர்க்கக்கூடிய குரலும், அழகான புன்னகையும்... அரை மணிநேரம் கழிந்து அவர் சென்ற பிறகு கர்த்தா சொன்னான்:

‘‘டேய் மகனே... உன்னுடைய நடத்தையின்மீது அவருக்கு நல்ல அபிப்ராயம் உண்டானது மிகவும் நல்லதாகி விட்டது.''

எனக்கு தாங்கமுடியாத அளவிற்கு கோபம் வந்தது. ‘‘நான் என்ன அந்த அளவிற்கு நாகரீகமற்ற மனிதனா? உனக்கு மட்டும்தான் எப்படி நடந்துகொள்வது என்று தெரியுமாக்கும்!'' கர்த்தா குலுங்கிக் குலுங்கி சிரித்தான். ‘‘அது இல்லடா மகனே! அவர் மிகவும் பெரிய மனிதர். நல்ல செல்வாக்கு கொண்ட ஒரு பொதுநல செயல்பாட்டாளர். விடுமுறைக் காலமாக இருப்பதால் அவர் இப்போது ஒரு இந்திப் பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். இது தவிர, அதிகாரிகளின் வீடுகளிலிருக்கும் மாணவிகளுக்கு ட்யூஷன் கற்றுத் தருகிறார். அவருடைய ஆதரவிருந்தால், நமக்கு இங்கிருந்து நல்ல ஒரு தொகை...''

கர்த்தாவின் அந்தக் கருத்து உண்மையான ஒன்று என்பதாக எனக்குப் பட்டது. நான்கைந்து நாட்கள் தொடர்ந்து பழகியதையடுத்து அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு பெரிதாக இருக்கிறது என்பதையும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு இருந்தது வெறும் செல்வாக்கு மட்டுமல்ல; மக்கள் அவர்மீது உயர்ந்த மதிப்பு வைத்திருந்தனர். அவர்மீது ஈடுபாடு வைத்திருந்தனர். பணக்காரர்களும், ஏழைகளும், பதவியில் இருப்பவர்களும்...

நாங்கள் மனதில் நினைத்திருந்ததைவிட அதிகமான உதவி டும்கூரில் எங்களுக்குக் கிடைத்தது. இந்தி மாஸ்டரின் செல்வாக்கே அதற்குக் காரணம்.

அதிகாலை வேளையில் டும்கூரைவிட்டுப் புறப் படவேண்டுமென்று முடிவு செய்திருந்ததால், கர்த்தா பொருட்கள் அனைத்தையும் கட்டி தயார் செய்துகொண்டிருந்தான். மாஸ்டரிடம் நானும் சென்று விடை பெற்றுக் கொள்ளவேண்டுமென்று கர்த்தா கட்டாயப்படுத்திக் கூறினான். என்னுடன் ஒரு கர்நாடக மாணவனையும் துணைக்கு அனுப்பி வைத்தான். அவன் மாஸ்டரின் இந்தி சிஷ்யன். அரைமைல் தூரத்திலிருந்த பெண்கள் பள்ளிக்கூடத்தில் தற்போதைக்கு மாஸ்டர் தங்கியிருந்தார். நகரத்திற்கு வெளியே இருந்த ஒரு மைதானத்திற்கு அருகில் அந்த பள்ளிக்கூடம் இருந்தது.

வழியில் நாங்கள் பேய்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தோம்... என்னுடைய ‘ஸ்டாக்'கில் இருந்த ஒரு பேய் பற்றிய கதையை நான் கூறினேன். மலையைப் போல இருந்த ஒரு கரும்பூதம் என்னுடைய நெஞ்சின்மீது ஏறி உட்கார்ந்து, கழுத்தை இறுகப் பிடித்து மூச்சுவிட முடியாமல் செய்த விஷயம்... மாணவனுக்குத் தோன்றியது வேறொன்று. அவன் ஒரு காட்டில் சிக்கிக்கொண்டான். திடீரென்று நான்கு ஆட்கள் தோன்றினார்கள். ஒரு ஆளின் தோல் உரிந்தது. தோல் உரிந்த மனிதனின் சதையை மூன்று ஆட்களும் சேர்ந்து அறுத்து துண்டு துண்டாக்கி பச்சையாக சாப்பிட்டார்கள். அவனையும் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்கள். அது ஒரு கனவு.
தான் உணர்ந்த வேறொன்றையும் அவன் கூறினான்.

இறந்துபோன குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு அழுதவாறு நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணின் ஆவியைப் பற்றி... அதை பலரும் பார்த்திருக்கிறார்கள் என்பது அந்த மாணவனின் கருத்தாக இருந்தது. நாங்கள் நகரத்தைவிட்டு மைதானத்தில் கால்களை வைத்தோம். இரவு பத்துமணி தாண்டியிருக்க வேண்டும்.

வறட்சியான காற்று மெதுவாக முனகியவாறு வீசிக்கொண்டிருந்தது. நல்ல இருட்டு. நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்த இருண்ட வானத்திற்குக் கீழே, மேலும் சற்று கறுப்பாக பள்ளிக்கூடம் தெரிந்தது.

பள்ளிக்கூட கட்டடத்தை நாங்கள் நெருங்கிக் கொண்டிருந்தோம். பேரமைதி... காற்றின் இடைவிடாத முனகல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.


அடைக்கப்பட்டிருந்த மாஸ்டரின் அறையின் சாளர இடைவெளி வழியாக பொன்னாலான நூலைப்போல வெளிச்சம் தெரிந்தது.

‘‘நரசிம்மஜீ...'' சாளரத்தைத் தட்டியவாறு வெளியே நின்றுகொண்டு நான் அழைத்தேன். மாணவனும் அழைத்தான். கன்னடத்தில் என்னவோ கூறி அழைத்தான். எந்தவொரு அசைவும் இல்லை. நாங்கள் தொடர்ந்து தட்டிக்கொண்டே அழைத்தோம். பேரமைதி... யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘‘தூங்கிவிட்டிருப்பார்...'' -நான் கூறினேன். ‘‘ஏய்... இவ்வளவு சீக்கிரம் தூங்கும் பழக்கமில்லை. இன்னொரு கதவு மூடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்போம்...'' மாணவன் திரும்பினான். சிறிய தோட்டத்தின் வழியாக விளையாட்டு மைதானத்தையும் தாண்டி நாங்கள் முன்பக்கத்திற்குச் சென்றோம். தூரத்தில் எங்கோ ஊளையிட்டுக்கொண்டிருக்கும் குள்ளநரிகளின் சத்தம். பொதுச்சாலையிலிருந்த விளக்கின் ஒளி கறுத்த சிமெண்ட் படிக்கட்டில் விழுந்துகொண்டிருந்தது. கதவு திறந்துதான் கிடந்தது. மாஸ்டரின் அறை, கூடத்தின் வடக்கு மூலையில் இருந்தது. நாங்கள் பேசிக்கொண்டே உள்ளே சென்றோம். அடர்த்தியான இருட்டு... காற்றின் முனகல் சத்தத்திற்கு மத்தியில் குள்ளநரியின் ஊளைச் சத்தம் தெளிவில்லாமல் கேட்டது. நான் முன்னாலும், மாணவன் பின்னாலுமாக தட்டுத்தடுமாறி முன்னோக்கி போய்க்கொண்டிருந்தோம். தூண்கள்! தூண்கள்! தலை இடிக்காமல், இருட்டில் தூண்களில் போய் மோதிவிடாமல், கண்பார்வை தெரியாமல், கையையும் கால்களையும் கொண்டு தேடியவாறு நீளமான கூடத்தின் வழியாக முன்னேறிச் செல்லும்போது, என்னுடைய கை குளிர்ச்சியான மென்மையான ஏதோ ஒன்றில் பட்டது. திடீரென்று ஒரு முனகல் சத்தம். இருட்டில் ஏதோவொன்று என்னுடைய சரீரத்தின்மீது சாய்ந்தது. உறுப்புகள் அனைத்தையும் பிடிப்பதைப்போல ஒரு பிடி! என்னுடைய சரீரம் முழுவதும் குளிர்ந்து போய்விட்டது. அதிர்ச்சியடைந்த நான், ஒரு நிமிடம் திகைப்பில் உறைந்துபோய் நின்றுவிட்டேன். பயப்படவில்லை. பலத்தைப் பயன்படுத்தி அதைப் பிடித்திழுத்து விலக்கி உதறியெறிந்துவிட்டு தப்பிப்பதற்கு நான் முயற்சித்தேன். என்னுடைய வாயில் நீர் இல்லை. தொண்டை வற்றிப்போன நிலை. என்னுடைய கை படுவது வெப்பமுள்ள, வழுவழுப்பான மனித சரீரத்தில்! அவிழ்ந்து தாறுமாறாக சிதறிக் கிடக்கும் தலைமுடி! மென்மையான முகம்! உருண்ட, மினுமினுத்துக் கொண்டிருக்கும் மார்பகங்கள்! நிர்வாணமான உடல்! வாயில் எதையோ இறுகக் கடித்துப் பிடித்துக்கொண்டிருக்கிறாள்! இருட்டுக்கு மத்தியில் நடத்திய ஆராய்ச்சியில் நான் தெரிந்துகொண்டது இவ்வளவுதான்... என் இதயம் மிகவும் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. நெற்றியில் குளிர்ச்சியான வியர்வை அரும்பிவிட்டிருந்தது. தலைக்குள் லட்சக்கணக்கான வண்டுகள் ஒரே நேரத்தில் இரைச்சல் போடுவதைப் போல தோன்றியது. அது மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது! அதன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது! என்ன செய்வதென்று தெரியாமல் நான் நின்றுகொண்டிருந்தபோது, மாணவன் பதை பதைப்புடன் கேட்டான்: ‘‘எ... என்ன... அது?'' வேகமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்ததால், உடனடியாக அவன் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை. ஒரு வகையில் மூச்சைப் பிடித்துக்கொண்டு நான் சொன்னேன்: ‘‘என்னவா? ஒரு பெண்...''
‘‘பெண்?''
‘‘ங்ஹா... பெண்ணேதான். தீப்பெட்டியை உரசு.''
‘‘அய்யோ! தீப்பெட்டி இல்லையே...''
‘‘பரவாயில்லை... பேசாமல், எச்சரிக்கையுடன் திரும்பி நட...''
என்னுடைய இடுப்பிலிருந்த பிடியை விடுவித்துக் கொண்டு, அதன் கையை இறுகப் பற்றிக்கொண்டு, நான் தட்டுத் தடுமாறியவாறு திரும்பி நின்றேன். பின்னால் என்னவோ அசைந்தது. என்ன அது?
தட்டுத் தடுமாறி நாங்கள் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு கதவுக்கு அருகிலிருந்த வெளிச்சத்தில் போய்ச் சேர்ந்தோம். என் இதயம் நடுங்கிக் கொண்டிருந்தது. நிர்வாணமான ஒரு கறுத்த இளம்பெண்! பதினான்கு பதினைந்து வயதிருக்கும். அவளுடைய சிவப்பு நிறப் புடவையின் பாதியளவு வாய்க்குள் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது. எப்படியோ நாங்கள் அதை வெளியே எடுத்தோம். அவள் மூச்சு விட்டாள். வேகமாக அவள் புடவையைச் சுற்றிக் கட்டினாள். அந்த வேகத்தில் ஒரு நாலணா நாணயம் (கால் ரூபாய்) ‘க்ணிம்' என்று ஓசை எழுப்பியவாறு படிக்கட்டில் விழுந்தது. வெட்கத்துடன் அவள் அதை குனிந்து எடுத்தாள். மாணவன் கன்னட மொழியில் என்னவோ கேட்டான். நிறுத்தி நிறுத்தி தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அவள் என்னவோ சொன்னாள். பயம் நிறைந்திருந்த அந்த பெரிய கண்களைத் திருப்பி இடையில் அவ்வப்போது என்னைப் பார்த்தாள். எனக்கு எதுவுமே புரியவில்லை. மாணவனின் முகம் வெளிறிப் போய், சிறிதுகூட ரத்தமே இல்லாததைப்போல காணப்பட்டது. அவன் தன் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி தனக்குத் தானே வீசிக்கொண்டு நின்றான். அவள் சாலையின் அந்தப் பக்கத்திலிருந்த ஒரு சிறிய வீட்டைச் சுட்டிக்காட்டினாள். மாணவன் தலையால் கட்டளை யிட்டான். கண்ணீரில் குளித்த விழிகளை அவள் என் முகத்தை நோக்கி உயர்த்தினாள்.
‘‘ஹய்யா... நான்...''

அவள் முழுமை செய்யவில்லை. சிவந்த கன்னங்களின் வழியாக கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

அந்தக் கண்களில் ஒரு பதைபதைப்பும் பரபரப்பும் காணப் பட்டன. அவள் படிக்கட்டைவிட்டுக் கீழே இறங்கினாள்.

எங்கள் இருவரின் முகங்களையும் மாறிமாறிப் பார்த்து விட்டு, தலையை குனிந்துகொண்டே அவள் நடந்து சென்றாள். இடையில் அவ்வப்போது புடவை நுனியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். நடந்து நடந்து சாலையைக் கடந்து அந்தச் சிறிய வீட்டின் கதவை அடைந்து, மீண்டும் ஒரு முறை அவள் திரும்பிப் பார்த்தாள். ஒரு கதவு மெதுவாக மூடப்படும் ‘கிர்கிரா' சத்தம் காற்றில் கலந்து ஒலித்தது. அதற்குப் பிறகும் காற்று முனகியவாறு வீசிக்கொண்டிருந்தது. மாணவன் நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே மெதுவான குரலில் சொன்னான்:

‘‘பால்காரியின் மகள். மாஸ்டருக்கு தினமும் பால் கொண்டு தருபவள் இவள்தான்... இன்று...''

அவன் என்னுடைய ‘முகத்தைப் பார்த்தான். கவலை நிறைந்த அந்தப் பார்வை என் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. நான் எதுவும் கூறவில்லை. பேரமைதியாக சில நிமிடங்கள் நகர்ந்தன. படிக்கட்டுகளில் கிடந்த ரத்தத் துளிகளின்மீது என்னுடைய பார்வை பதிந்தபோது, மாணவன் தன் முகத்தைத் திரும்பிக் கொண்டான். கவலையுடன் அவன் கேட்டான்.

‘‘மாஸ்டரைப் பார்க்கணுமா?''

‘‘ம்... கட்டாயமில்லை...''

எனினும், கூடத்திற்குத் திரும்பி வந்தோம். நான் அழைத்தேன்: ‘‘நரசிம்மஜீ! நாங்கள் அதிகாலையில் புறப்படுகிறோம். விடைபெற்றுக் கொள்வதற்காக வந்தேன்.''

என்னுடைய குரல் எங்கும் மோதாமல் கூடம் முழுக்க கேட்டது. அதற்குப்பிறகும் கூடம் பேரமைதியுடன் இருந்தது. எந்தவொரு அசைவும் இல்லை. எந்தவொரு பதிலும் வரவில்லை. நாங்கள் வெளியேறி நடந்தோம். மாஸ்டரின் அறைச் சாளரத்தின் இடைவெளியில் நூலைப்போல இருந்த அந்த வெளிச்சம் அப்போது இல்லை.

‘‘நீங்கள் மிகவும் தைரியசாலிதான்...'' அந்த மாணவன் சொன்னான்.

நான் எதுவும் கூறவில்லை.


எதுவும் பேசாமலேயே நாங்கள் நடந்தோம். மாணவன் தன் வீட்டு வாசற்படி வந்ததும், அவன் விடை பெற்றுக்கொண்டான். மிகவும் கவலையைத் தரக்கூடிய ஒரு இறுதிப் பயணம்! ஒன்பது பத்து வருடங்களுக்கிடையில் ஒரு ஐம்பதாயிரம் பெண்களும் ஆண்களும் என்னிடம் இறுதிவிடை கூறியிருக்கிறார்கள். எனினும், வெறுப்பும் ஏமாற்றமும் கோபமும் கவலையும் நிறைந்த அந்த மாணவனின் முகம் என்னுடைய நினைவு மண்டலத்தில் அப்படியே பசுமையாக நின்று கொண்டிருந்தது.

கனவில் நடப்பதைப்போல நடந்து நான் சத்திரத்தை அடைந்தேன். ‘‘என்னடா மகனே... மாஸ்டருடன் சந்திப்பு எப்படி இருந்தது? நீ சண்டை போடவில்லையே?'' வழக்கமான சிரிப்புடன் இருந்த கர்த்தாவின் கேள்விக்கு பதில் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. மொத்தத்தில்- எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை. சாக்கடைக்குள் புதைந்து போய்விட்டதைப்போல எனக்கொரு தோணல். என்னுடைய நிலைமையைப் பார்த்து கர்த்தா ஆச்சரியமடைந்து. காலிலிருந்து தலை வரை என்னையே பார்த்தான். வியப்புடன் எழுந்து சுட்டிக்காட்டியவாறு கேட்டான்.

‘‘இந்த ரத்தம் எங்கேயிருந்து வந்தது?''

‘‘ரத்தமா?''

பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து...!

என்னுடைய மனம் அதிர்ந்துபோய்விட்டது. பதைபதைப்புடன் நான் பார்த்தேன். ரத்தம்! ஆமாம்... வெள்ளை நிற வேட்டியில் நான்கைந்து இடங்களில் ரத்தம்! என்னுடைய சரீரம் முழுவதும் குளிர்ந்து போய்விட்டது. அணிந்திருந்த ஆடையை வெறுப்புடன் சுழற்றி வராந்தாவில் வீசி எறிந்தேன். தீப்பெட்டியைத் தடவி எடுத்து ஒரு குச்சியை உரசி நெருப்பைப் பற்ற வைத்தேன். காற்று ஓசை உண்டாக்கியவாறு வேகமாக வீசியது. கர்த்தாவின் முகத்தில் வெளிச்சத்தை உண்டாக்கியவாறு நெருப்பு பெரிதாக பற்றி எரிந்தது. குள்ள நரியின் ஊளையிடும் சத்தம் உரத்துக் கேட்டது. கதராடை எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். வாழ்க்கையில் முதல்முறையாக நான் எரியச் செய்யும் கதராடை!

பதைபதைப்புடன் கர்த்தா என் கண்களையே பார்த்தான். தோளைப் பற்றிக் குலுக்கியவாறு கேட்டான்: ‘‘என்னடா மகனே, இதன் அர்த்தம் என்ன?''

‘‘அர்த்தம்?''

‘‘ங்ஹா... என்ன? சொல்லு... உனக்கு என்ன ஆனது?''

வேட்டி நன்கு எரிந்து முடிந்தது. கொஞ்சம் கறுத்த சாம்பல் மட்டும் எஞ்சியது. அதை காலால் தட்டி விட்டு, முற்றத்தில் சிதறச் செய்தேன். காற்றில் அது பறந்து சென்றது. நான் அறைக்குள் நுழைந்து ஒரு பீடியைப் பற்றவைத்தேன். இடையில் அவ்வப்போது ஓரக் கண்களைக் கொண்டு என்னுடைய செயல்களைக் கூர்ந்து கவனித்தவாறு கர்த்தா அறைக்குள் இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டிருந்தான். நண்பனின் பார்வையையும் நடவடிக்கைகளையும் பார்த்து, நான் எழுந்து சென்று கதவின் தாழ்ப்பாளைப் போட்டேன். நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினேன். கர்த்தாவின் முகம் பிரகாசமானது. அவன் அறிவுரை கூறினான்:

‘‘டேய், மகனே... நீ குளித்துவிட்டு படுத்துக்கிடந்தால் போதும். எனினும், அந்த இருட்டில் நீ பயப்படவில்லையே! பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறாயே!''

அன்றிரவு அந்தக் குளிரில், கிணற்றின் உப்பு நீரில், கர்த்தா கட்டாயப்படுத்தி என்னை குளிக்கச் செய்தான்.

ங்ஹா! அதிகாலை வேளையில் நாங்கள் டும்கூரை விட்டுப் புறப்பட்டோம். என்ன? பயணத்தின் ஆரம்பத்திலிருந்து கூற வேண்டுமா? சரிதான்... அதற்கு இதைப் போன்ற எவ்வளவோ இரவுகள் வேண்டும். சரி... இருக்கட்டும். நாம் தூங்குவோம். என் சரீரத்தில் உரச வேண்டாம்... சற்று தள்ளிப்படு... ங்ஹா... குட்நைட்! விஷ் யூ ஸ்வீட் ட்ரீம்ஸ்! குட் நை....

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.