Logo

கவர்னர் வந்தார்!

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6554
Governor Vanthaar

போக்குவரத்தைக் கண்காணிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் துக்காரம் அன்று வேலைக்கு சென்ற பொழுதே விடுமுறை எடுத்துத் திரும்பி வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் போய் இருந்தான். அவனுடைய மகனுக்குக் கடந்த ஐந்து நாட்களாகக் கடுமையான காய்ச்சல். அது கொஞ்சமும் குறைவதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் காய்ச்சலின் கடுமை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு வேளை குழந்தைக்குப் பேய் பிடித்து விட்டிருக்குமோ என்று குருக்களைப் போய்ப் பார்த்தான் துக்காரம்.

குருக்கன் மந்திரம் கூறி குழந்தையின் கையில் கறுப்புக் கயிற்றைக் கட்டிய பிறகும் கூட காய்ச்சல் குறைந்ததாகத் தெரியவில்லை. துக்காராமுக்கும் அவனுடைய மனைவிக்கும் பயம் மூண்டது. குழந்தை வைத்தியர் பாபுராவிடம் கொண்டு சென்று காட்டினார்கள். நாலணாவுக்கு மருந்து கொடுத்துவிட்டு கட்டணமாக எட்டணா வாங்கிக் கொண்டார் அவர்; எது எப்படியோ மருந்து கொடுத்தாகி விட்டது. பாபுராவின் மருந்து மட்டும் காய்ச்சலின் உஷ்ணத்தை உடனடியாக கீழே இறக்கிக் கொண்டு வந்து விடுமா என்ன? வேதனையால் துடித்துக் கொண்டிருந்தான் பையன். முகம் சற்று அதிகமாகவே வெளிறிப் போயிருந்தது. கண்களில் கூட குழி விழுந்து விட்டது. உடலில் வெப்பம் அனலாக வீசியது.

துக்காராமின் மனைவி துளசி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். துக்காராமுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆண்பிள்ளை இவன் ஒருவன் தான். ஒரு வேளை காய்ச்சலால் இவன் இறந்து விட்டால் நிச்சயம் துளசியும் இறுதி மூச்சை விட்டு விடுவாள்.

சீருடை அணிந்து கொண்டிருந்த துக்காராமைப் பார்த்த துளசி, "உங்களுக்கென்ன, எப்போ பார்த்தாலும் ஒரே டூட்டி... டூட்டி... டூட்டி... குழந்தை காய்ச்சல்ல கெடக்குதே! அதைப் பத்தி கொஞ்சமாவது கவலைப்படுறீங்களா?" என்றாள்.

துக்காரம் தாழ்ந்த குரலில் "நான் போய் லீவு வாங்கிட்டுத் திரும்பி வர்றேன் துளசி" என்றான்.

பொது மருத்துவமனைகளைத் துக்காராமினால் நம்ப முடியவில்லை; பாவம், அந்த நோயாளிகளை அங்கே மனிதர்களாகவா நினைக்கிறார்கள்? ஏதோ புழு, பூச்சி என்று மாதிரியல்லவா அவர்களை நடத்துகிறார்கள்? நாடி பிடித்துப் பார்ப்பது, ஸ்டெதாஸ்கோப்பை நெஞ்சில் வைத்து இதயத் துடிப்பைக் கணக்கிடுவது - இதைக் கூடவா இந்த எளிய மக்களுக்கு செய்யக் கூடாது? நோயாளி தன்முன் வந்து நின்று, தனக்கு இருக்கும் நோய் குறித்துக் கூறுவதற்கு முன்பே மருந்தின் பெயரை எழுத ஆரம்பித்து விடுவார் டாக்டர். டாக்டரானாலும், வேறு அதிகாரியானாலும் அவரவருக்கென்று உள்ள வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமல்லவா? எப்படியும் தவறாமல் ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிவிட வேண்டும்! இதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே குறி.

இந்தப் பொது மருத்துவமனைக்குள் கால் வைக்க வேண்டுமென்றாலே   யார் யாருக்கெல்லாம் கைக்கூலி கொடுக்க வேண்டியிருக்கிறது? சரி. அதுதான் பரவாயில்லை என்றால் தினமும் பசியிலும் பட்டினியிலும் உழன்று கொண்டிருக்கும் ஏழைகளை மிதித்துத் தாண்டியல்லவா டாக்டர்மார்களின் அறைக்குள் போகவேண்டியிருக்கிறது! தங்களுக்குக் கிடைக்காததை நினைத்துப் பொருள் இல்லாதவன் ஏங்கிக் கிடக்க வேண்டியதுதான். போன மாதம் தன் இளைய மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அல்லல்பட்ட அனுபவம் இன்னும் நன்றாகவே நினைவில் இருக்கிறது துக்காராமுக்கு.

நிச்சயம் தன் மகனை இந்தப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு போகக் கூடாது, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தனியார் மருத்துவமனைக்குத்தான் கொண்டு போக வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்து கொண்டான் துக்காராம். பணம் இருந்தால், எப்படிப்பட்ட மருந்து வேண்டுமானாலும் கிடைக்கும். வீட்டில் என்ன பணம் கொட்டியா கிடக்கிறது - நினைத்தவுடன் எடுத்து செலவு செய்ய? யாரிடமாவது கடன் தான் வாங்க வேண்டும். நான்கு பேருக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்? போக்குவரத்தைக் கவனிக்கும் போலீஸ்காரராக இருந்து கொண்டு கடன் கேட்கப் போனால் கேலி செய்ய மாட்டார்களா?

துளசி அடிக்கடி சொல்வாள் : "வாழ்றதா இருந்தா, அந்த விட்டல் மாதிரி வாழணும். அவர் தன் பெண்டாட்டிக்கு என்னவெல்லாம் வாங்கித் தந்திருக்கார்னு பார்த்தீங்களா? புதுசு புதுசா என்ன மாதிரியெல்லாம் சேலை வாங்கித் தந்திருக்கார்! குழந்தைகளுக்கு என்ன என்ன தினுசுல, கலர் கலரா ஆடை எடுத்துத் தந்திருக்கார்! மனுஷன்னா அப்படி இருக்கணும்.. அதை விட்டுட்டு, உங்க மாதிரி இருந்தா... எப்பப் பார்த்தாலும் உங்களுக்கு வறுமைப் பாட்டுத்தான்!'

மனைவி இப்படி சொல்லும் சமயங்களில் அவளைப் பார்த்து என்னவோ மாதிரி சிரிப்பான் துக்காராம். ஒரு பக்கம் பார்க்கப் போனால், அவள் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்தது. விட்டல் எப்படியெல்லாமோ காசு சேர்க்கிறான். இரட்டைச் சவாரி, விளக்கு இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்வது, அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிக் கொண்டு லாரி செல்வது - இப்படி எத்தனையோ விஷயங்களை மூலமாக வைத்து பிழைத்துக் கொண்டிருந்தான் விட்டல். சுங்கச் சாவடியில் மட்டும் ட்யூட்டிக்கு நின்றால் போதும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நிச்சயம் துக்காராமினால் இது முடியாத காரியம். பொய் சொல்வதற்குத் துக்காராமின் நாக்கு ஒரு போதும் சம்மதித்ததில்லை. சட்டத்துக்கு விரோதமாக வரும் பணத்தை அவனின் கைகள் பெற்றுக் கொண்டதே இல்லை. கைக்கூலி வாங்கும் சமயம் பார்த்து டிரைவர் உடையில் சி.ஐ.டி. யாரேனும் வண்டியில்

இருந்து விட்டால் அவ்வளவுதான்! அதன் பிறகு நடக்கப் போவதைப் பற்றி சொல்லவே வேண்டாம். என்றாலும், கொஞ்சமும் உழைக்காமலே கிடைக்கிற பணம் மழைபோல் ஆயிற்றே!

சாலையோரத்தில் யாரோ கூவி அழைக்கிறார்கள். எட்டணா கொடுத்தால் இருபதாயிரம்... ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம். தினமும் லாட்டரி சீட்டு வாங்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மாதிரி பல நண்பர்கள் துக்காராமுக்கும் இருக்கிறார்கள். காக்கி உடை அணிந்து கொண்டு அதிர்ஷ்டத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கும் இவர்கள் நிச்சயம் வினோதமான மனிதர்கள்தாம்!

இன்ஸ்பெக்டர் குல்கர்ணியின் முன் கான்ஸ்டபிள்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.

"சீக்கிரம்... சீக்கிரம்..." ஹெட் கான்ஸ்டபிள் விட்டல் கையை உயர்த்தி சத்தமிட்டான். வேகமாக ஓடிவந்து 'சல்யூட்' அடித்தபோது, டயரியைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், துக்காராமைக் கவனித்தார்.

"சார்..."

"என்ன?" குல்கர்ணி மெதுவாகக் கேட்டார். என்றாலும் அதில் அதிகாரவர்க்கத்தின் ஆணவம் இருந்தது.

"என் குழந்தைக்குக் காய்ச்சல், சார். அதனால இன்னிக்கு ஒரு நாள் எனக்கு லீவு தரணும்.."

மீண்டுன் டயரியைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் தலையை உயர்த்திக் கேட்டார்:


"நீ என்ன சொன்னே?"

"சார்... என் குழந்தை..."

துக்காராம் தான் சொல்ல வந்ததை முழுமையாகக் கூட முடிக்கவில்லை. அதற்குள் குறுக்கிட்டார் குல்கர்ணி : "இன்னைக்கு நம்ம ரூட்ல யார் போறாங்கன்னு தெரியுமா? கவர்னர் சுற்றுப் பயணம் முடிஞ்சு இந்த வழியாத்தான் போறார். அதனால..."

"சார், என் மகனுக்கு 104 டிகிரி காய்ச்சல் அடிச்சுக்கிட்டிருக்கு." துக்காராமின் குரலில் பதற்றம் தெரிந்தது. கண்களில் நீர்கூட அரும்பிவிட்டது. சிறிய அந்த வாடகை வீட்டின் ஓர் அறையில் தாழ்ந்த கட்டிலில் கண்மூடி வாடித் தளர்ந்து போய்க் கிடக்கும் தன் மகனுடைய முகமும், அவனருகே கண்ணீர் வழிய அமர்ந்திருக்கும் துளசியின் முகமும் அப்போது அவனுடைய மனத்திரையில் தோன்றின.

"இங்கே பார், துக்காராம்..., இன்னிக்கு யாருக்கும் நான் லீவு தரப் போறதில்லை. ஏய்... விட்டல்!"

அடுத்த நிமிடம் ஹெட் கான்ஸ்டபிள் விட்டல் அட்டென்ஷனில் வந்து நின்றான்.

"எல்லாருக்கும் அவங்கவங்க நிற்க வேண்டிய இடத்தை நல்லா விளக்கி சொல்லிடணும், தெரியுதா?

"சரி. சார்..."

"சார்... என் குழந்தைக்கு எதிர்பாராம ஏதாவது நடந்துருச்சுன்னா..."

"என்னால இப்ப ஒண்ணும் செய்ய முடியாது, துக்காராம். டி.எஸ்.பி. சார் யாருக்கும் கண்டிப்பா லீவு தரக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறப்போ, என்னால் என்ன செய்ய முடியும்? நீயே சொல்லு!"

"எனக்கு ஒரு அரை நாளாவது..." - துக்காராம் அழுதுவிடுவான் போலிருந்தது.

"முடியாது" என்ற பாவத்தில் கையை ஆட்டிய குல்கர்ணி கண்டிப்பான குரலில் கூறினார்: "நான் இப்போ ஒண்ணும் செய்றதுக்கில்ல."

துக்காராமுக்குத் தொண்டையை அடைத்தது. கண்களில் நீர் அரும்பி குளமாகிக் கொண்டிருந்தது. துடிக்கிற உதட்டைக் கடித்தபடி ஹெட் கான்ஸ்டபிள் விட்டல் முன் போய் நின்றான்.

"பன்ஸாரா!"

"ஜீ ஸாப்."

"மெயின் போஸ்ட் ஆபிஸ் ஜங்ஷன்"

"ஹரிகிஷன்."

"ஜீ ஸாப்."

"சுங்கம் வளைவு."

"முனிராம்"

"ஜீ....ஸாப்!"

"கவர்மெண்ட் ஆஸ்பத்திரி முச்சந்தி."

"துக்காராம்"

"ஜீ ஸாப்."

"கண்டோன்மெண்ட் லிமிட் வளைவு."

"ஸாப், என் குழந்தைக்கு...."

"புகாரெல்லாம் பிறகு. இப்போ போய் வேலையைப் பார்."

"சரி... சார்."

ஒவ்வொருவரும் நிற்க வேண்டிய இடங்களைக் கூறிய விட்டல் சொன்னான்: "கவர்னர் சரியா பன்னிரண்டரை மணிக்கும் இரண்டரை மணிக்கும் இடையில் இந்த வழியில வருவார். பைலட் ஜீப்ல டி.எஸ்.பி. சார் இருப்பார். இடையில ஒண்ணு ரெண்டு தடவை குல்கர்ணி சாரும் ரவுண்ட் வருவார். யாரும் ட்யூட்டியை மறந்து தூங்கிக்கிட்டிருக்கக் கூடாது, தெரியுதா? ட்யூட்டியில மட்டும் யாரும் இல்லைன்னா, அப்புறம் பேசாம தொப்பியைக் கழற்றிக் கொடுத்துட்டு, வீட்டுக்கு ஒரேயடியா போயிட வேண்டியதுதான்."

"விட்டல் ஸாப், என் குழந்தைக்கு..."

தலையைக் கைகளால் அடித்துக் கொண்டு கத்தினான் விட்டல்.

"உனக்கு உன் குழந்தைதான் பெரிசு!... அதுதான் லீவு தர மாட்டேன்னு இன்ஸ்பெக்டர் சாரே சொல்லிட்டார்ல! அதுக்கப்புறம் என்ன? போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேற ஆள் யாரும் இல்லை புரியுதா?

கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட துக்காராம் கழன்று போன தன் சைக்கிள் பெடலை ஓர் அழுத்து அழுத்தினான். விடுமுறை வாங்கிக் கொண்டு தன் கணவன் எப்படியும் சிறிது நேரத்தில் வந்து விடுவான் என்று பாவம் துளசி வழிமேல் விழி வைத்து வீட்டில் காத்துக் கொண்டிருப்பாள். கண்மூடி துவண்டு கிடக்கிற மகனின் உடலை வருடியபடி அவள் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பாள். என்னதான் இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்ற வயிறாயிற்றே! கலங்காமல் வேறு என்ன செய்யும்?

நகரத்தின் எல்லைப் புறத்தில், மூன்று வீதிகளும் கூடுகிற இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் துக்காராம். அதுதான் அவன் ட்யூட்டி பார்க்க வேண்டிய இடம்.

"ராம் ஸாப், இன்னிக்கு என்ன விசேஷம்?" சிறிது தூரத்தில் இருந்த தேநீர் கடைக்காரன் லட்சுமணன் சத்தம் போட்டு கேட்டான்.

"என்னத்தை சொல்லட்டும், லட்சுமணன்! வீட்டுல என் மகனுக்கு ஒரே காய்ச்சல். லீவு கேட்டாக்கா, தர மாட்டேன்னுறாங்க. கவர்னர் இன்னிக்கு இந்த வழியே போறாராம்!"

அப்போது லட்சமணணின் முகம் வியப்பால் விரிந்தது.

பள்ளிக் குழந்தைகளின் கூட்டம் ஒன்று அப்போது புத்தகப் பைகளைச் சுமந்தபடி அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. அவர்கள் துக்காராமை அதிசயக் கண்களுடன் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தில் தன் மகனை அவனால் காண முடியவில்லையே!

"அவனுக்கு ஏதாவது எதிர்பாராதது நடந்துட்டா... சத்தியமா சொல்றேன் நானும் அந்த நிமிடமே செத்துப் போவேன்" துளசி காலையில் சொன்னது துக்காராமிற்கு நினைவுக்கு வந்தது.

"அப்படியெல்லாம் சொல்லாதே, துளசி! இன்னிக்கு எப்படியும் நான் லீவு வாங்கிட்டு வர்றேன்" என்றான் துக்காராம்.

கிராமத்திலிருந்து நகரத்துக்குப் போகும் பால்காரர்கள் சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டு கடந்து போனார்கள்.

"ராம் ஸாப், இன்னிக்கு யார் வர்றது?"

"கவர்னர் ஸாப்."

தோள்களைக் குலுக்கியபடி அவர்கள் சிறிது நேரத்தில் பார்வையிலிருந்து மறைந்து போனார்கள். கதிரவன் நடுவானை நெருங்கிக் கொண்டிருந்தான். வெயில் என்னவோ சற்று அதிகம்தான். சாலையில் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தார் சில இடங்களில் உருகிக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் சென்றிருக்கும். கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி துக்காராமின் அருகே வந்ததும் நின்றது; டிரைவர் தலையை வெளியே நீட்டிக் கேட்டார்:

"ட்ராஃபிக் செக்கிங் ஏதாவது?"

"இல்லை. கவர்னர் ஸாப் இந்த வழியே வர்றார். ட்ராஃபிக் ட்யூட்டி. அவ்வளவுதான்."

"ம்... பெரிய இடத்து விஷயம். நாம என்ன சாதாரண குடிமக்கள்! வாங்க, சாயா குடிக்கலாம்."

"இல்ல... டி.எஸ்.பி. சார் எந்த நேரத்துலயும் ரோந்து வரலாம்."

"அப்படின்னா, பரவாயில்லை. கொஞ்சம் கரும்பு தர்றேன். வீட்டுக்கு எடுத்துட்டுப் போயி குழந்தைக்குக் கொடுங்க."

"வேண்டாம், ஸாப்! வீட்டுல மகனுக்குக் கடுமையான காய்ச்சல்!"

"அப்படின்னா லீவு போட வேண்டியதுதானே?"

பெருமூச்சு விட்டுக் கொண்டே கூறினான் துக்காராம் : "நமக்கு யார் லீவு தர்றேன்றாங்க? நம்ம மாதிரி ஏழை பாழைங்களோட கஷ்டத்தை யாரு பார்க்குறாங்க?"

"ம்... எல்லாத்தையும் அந்தக் கடவுள் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கார்.!" - வானத்தை நோக்கிக் கையை உயர்த்தியபடி கூறினார் டிரைவர்.

"நீங்க சொல்றது உண்மைதான், ஸாப். அவருக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கப் போகுது?"

"சரி அப்போ நான் வர்றேன் ராம்ஸாப்..." டிரைவர் லாரியை ஓட்டியவாறு கிளம்பினார்.


கடவுளே, இந்தக் கவர்னரின் கார் எப்போது இந்தப் பக்கம் வருவது?

துக்காராமை எதிர்பார்த்து துளசி தளர்ந்து போயிருப்பாள். பாவம், அவள் என்ன செய்வாள்? குழந்தை பெற்று விடுவதோடு ஒரு தாயின் கஷ்டம் தீர்ந்து விடுகிறதா என்ன?

கடுமையான நடுப்பகல் வெயில். வியர்வை அரும்பி, ஆடையை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.

காலையில் வேலைக்குக் கிளம்பி வரும்போது கூட, துக்காராம் ஒன்றும் சாப்பிடவில்லை. நிழல் தரக் கூட ஒரு மரம் இல்லாத இந்த இடத்தில் உடம்பைக் கஷ்டப்படுத்திக் கொண்டு நிற்பது என்ன சாதாரண விஷயமா? பசி வயிற்றைக் கிள்ளியது. கண்களை இருட்டிக் கொண்டு வருவது மாதிரி இருந்தது.

"போலீஸ்காரர் இன்னும் நின்னுக்கிட்டிருக்காரே!"

"போலீஸ் சார், ஏன் காலையிலயிருந்து இங்கேயே நின்னுக்கிட்டிருக்கீங்க?" திரும்பி வந்த பள்ளிக்கூடக் குழந்தைகள் துக்காராமை நோக்கி விசாரித்தார்கள்.

"எனக்கு இப்ப ட்யூட்டி, குழந்தைகளே!"

தன்னைக் கடந்து போகும் குழந்தைகளையே ஒரு முறை பார்த்தான் துக்காராம்.

சுமார் ஐந்து மணி இருக்கும். போலீஸ் ஜீப் ஒன்று சிறிது தூரத்தில் வந்து கொண்டிருந்தது. அட்டென்ஷனில் தயாராக நின்றான் துக்காராம். எதிர்ப்பக்கம் வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி கவர்னர் போக வசதி செய்து கொடுக்க வேண்டும்!

அடுத்த சில நிமிடங்களில் அந்த ஜீப் துக்காராமின் அருகே வந்ததும் நின்றது. ஜீப்பிலிருந்த கான்ஸ்டபிள் கூறினார்:

"என்ன சொல்லட்டும் துக்காராம்... கவர்னர் ஸாப் வேற ஏதோ ரூட்ல போயிட்டாராம். என்ன இருந்தாலும் அவங்கல்லாம் பெரியவங்க. நாம என்ன செய்ய முடியும்?"

துக்காராமும் தலையை ஆட்டி வைத்தான் - "ஆமாம்" என்கிற பாவனையில்.

படுக்கையில் துவண்டு கிடக்கும் மகன், கண்ணீர் வழிய அவனையே பார்த்தபடி சோகமே வடிவமாக அமர்ந்திருக்கும் துளசி- இவர்களின் முகம் என்ன காரணத்தாலோ துக்காராமின் மனதில் அப்போது தோன்றின.

Page Divider

 

 

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.