Logo

கிளி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6501
Kili

ர்சிங் சூப்பிரெண்டின் அறையை விட்டு வெளியே வந்த அந்த மனிதர் மீண்டும் ஜன்னலின் அருகில் போய் நின்றார். அங்கே ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே கிளி எதிர்பார்ப்புடன் அவருக்காகக் காத்திருந்தது.

கிளி கேட்டது :

‘‘அந்த ஆளு என்ன சொன்னாரு ?’’

அவர் சொன்னார் :

‘‘குறிப்பிடும்படியா ஒண்ணும் சொல்லல...’’

அப்போது கிளி சொன்னது :

‘‘அப்படியில்ல... என்னவோ சொன்னாரு. நான் கேட்டேனே !’’

சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்த அவர் மெதுவான குரலில் சொன்னார் :

‘‘யார் கூட இதுவரை பேசிக்கிட்டு இருந்தீங்கன்னு கேட்டாரு. இங்கே யார் இருக்குறது ? தனியா இருந்து எனக்கு நானே...’’

கிளி சொன்னது :

‘‘என் கூட பேசிக் கொண்டு இருந்ததாச் சொல்ல வேண்டியதுதானே ?’’

அப்படிச் சொன்னபோது கிளியின் உதட்டில் ஒரு சிறு புன்னகை தெரிந்தது. அவர் வருத்தம் கலந்த குரலில் சொன்னார் :

‘‘அதெப்படி முடியும் ? ஒரு மனிதன் ஒரு பறவைகூட பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னா. அதைக் கேக்குறவங்க அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும்னு நினைக்க மாட்டாங்களா ?’’

கிளி சொன்னது :

‘‘அப்போ உங்களுக்குப் பைத்தியம் இல்லைன்னு சொல்றீங்களா ?’’

வந்த சிரிப்பை அடக்கியவாறு, அவர் திடீரென்று வரவழைத்துக் கொண்ட மிடுக்குடன் சொன்னார் :

‘‘இல்ல... இல்ல... எனக்குப் பைத்தியம் ஒண்ணும் கிடையாது. பைத்தியத்தைக் குணப்படுத்துறதுக்காக நான் இந்த மருத்துவமனைக்கு வரல... எனக்கு சுகக்கேடு இதயத்துலதான்...’’

கிளி அடுத்த நிமிடம் சொன்னது :

‘‘நீங்க சொல்றது சரி இல்லை. என்னோட ஆளின் இதயத்துக்கு ஒரு குறைபாடும் இல்ல...’’

கிளியின் குரல் தெளிவாக இருந்தது. இருந்தாலும், ஒரு கவலையின் கீற்று அந்தக் குரலில் கலந்திருப்பது தெரியாமல் இல்லை. அவர் கிளி சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன் கேட்டார் :

‘‘என்ன சொன்னே ? ‘என்னோட ஆளு’ன்னா ?’’

கிளி ஒன்றும் கூறவில்லை. அது எதுவும் பேசாதததால், அவரும் எதுவும் பேசவில்லை.

அவர் மிகவும் களைத்துப் போயிருந்தார். ஜன்னல் கம்பிகளை எவ்வளவு பலத்துடன் பிடிக்க முடியுமோ, அவ்வளவு பலத்துடன் பிடித்திருந்தார். அவரின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கிளியை விட்டு விலகி ஆகாயத்தை நோக்கி உயர்ந்தன.

ஆகாயத்தின் நீல நிறம் இலேசாக மங்கலாகி விட்டிருந்தது.

அவரின் மனத்தின் அடித்தளத்தில் இருந்து ஒரு பழைய பாடலின் வரிகள் புறப்பட்டு மேலே வந்தன.

‘‘பச்சைப் பனங் கிளியே

பொன்னடி பூ முத்தே...’

அவரையும் அறியாமல் வரிகள் கிளம்பி வெளிவந்தன.

‘‘பச்சைப் பனங் கிளியே...’’

இழந்து விட்ட ஆசைகளும், அதனால் உண்டான வருத்தமும் பாடலில் முழுமையாக வெளிப்பட்டது. இந்தப் பாடல் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு கவிஞரின் நாடகத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இப்போது அந்தப் பாடல் அவரின் சொந்தப் பாடலாகவே ஆகிவிட்டது.

நேரத்தைப் பற்றியோ, காலத்தைப் பற்றியோ அவருக்கு எதுவுமே தெரியவில்லை.

சிறிது நேரம் கழித்து அவர் தான் பாடிக் கொண்டிருந்த பாடலை நிறுத்தினார்.

அவர் பதைபதைப்புடன் கேட்டார் :

‘‘என்ன ? என்ன நடந்துச்சு ? என் பாட்டு உனக்குப் பிடிக்கலையா ?’’

கிளி பதில் எதுவும் சொல்லவில்லை.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு கிளி சொன்னது :

‘‘நீங்க என்னை அழ வச்சிட்டீங்க...’’

‘‘அதெப்படி ?’’ என்று அவர் கேட்டபோது, கிளி பதிலெதுவும் சொல்லவில்லை. ‘‘நீங்க என்ன மனிதர் ! உங்களால எதையுமே புரிஞ்சிக்க முடியலையா -?’’ என்றொரு அர்த்தம் கிளியின் செயலில் தெரிந்தது. கிளியின் கண்களில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. அப்போதுதான் அவருக்கே ஞாபகம் வந்தது. அறிமுகமான ஆரம்ப நாட்களில் ஆண் கிளியைப் பற்றிக் கேட்டதற்கு, கிளி அதைப் பற்றிச் சரியாக பதில் சொல்லவில்லை. பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது அது.

கிளி திடீரென்று சொன்னது :

‘‘நான் போறேன்...’’

பக்கத்தில் இருந்த நிலத்தில் நிறைந்து நின்றிருந்த பழைமையான பெரிய மரங்களில் ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு அவர் கேட்டார்.

‘‘உன்னோட வீட்டுக்கா ?’’

கிளி அதற்குப் பதில் சொல்லாமல் வேறு எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.

தூரத்தில் எல்லையற்ற ஆகாயம் மட்டுமே தெரிந்தது.

அவர் மீண்டும் கேட்டார் :

‘‘அப்போ நீ இன்னைக்கு வீட்டுக்குப் போகலையா ?’’

கிளி தனக்குத்தானே பேசிக் கொள்வதைப் போல் மெதுவான குரலில் சொன்னது :

‘‘வீடு ! எத்தனை நாட்கள் அது இருக்கப் போகுது !’’

கிளியின் குரலில் கவலை அதிகமாக வெளிப்பட்டது. அவர் பதைபதைப்புடன் கேட்டார் :

‘‘ஏன் அப்படிச் சொல்ற?’’

மரங்கள் அடர்ந்திருக்கும் நிலத்தைப் பார்த்தவாறு கிளி சொன்னது :

‘‘இங்கே கட்டிடங்கள் வரப் போகுது-.’’

‘‘கட்டிடங்களா ? என்ன கட்டிடங்கள் ?’’

ஆனால், கிளி எதுவும் சொல்வதற்கு முன்பே, அவருக்கு ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு நர்சிங் சூப்பிரெண்ட் சொன்னார் : ‘‘இங்கே வர்ற மக்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. வரந்தாவுல ஆட்கள் நிற்க இடமே இல்ல... புதுசா கட்டிடங்கள் கட்டினாத்தான் சரியா இருக்கும். மருத்துவமனையோட ஒரு பகுதியை மாற்றி...

அவர் அப்போது கேட்டார் :

‘‘அதற்கான இடத்தைப் பார்த்தாச்சா ?’’

சூப்பிரெண்ட் சொன்னார் :

‘‘காசு கையல இருந்துச்சுன்னா, இடத்திற்கா பிரச்னை ?’’

அதற்குப் பிறகு அவர் அந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. சூப்பிரெண்ட்டும் சொல்லவில்லை. மருத்துவமனை சம்பந்தப்பட்டவர்கள் இடம் வாங்குவதற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? ஆனால், இப்போது கிளியின் வார்த்தைகளைக் கேட்டபோது...

அவர் கிழக்குப் பக்கம் அடர்ந்து நின்றிருந்த மரங்களைப் பார்த்தார். நகரத்தின் நடுவில் இப்படி ஓர் இடமா என்று யாருமே சொல்லப் போனால் ஆச்சரியப்படுவார்கள். ஒரு ஏக்கரை விட அந்த இடம் அதிகமாகவே இருக்கும். அங்கு பழைமையாகி நின்றிருக்கும் இரண்டு சிறிய வீடுகள்... நிலம் முழுக்க கம்பீரமாக நின்றிருக்கும் வயதாகிப் போன பெரிய மரங்கள்... மா, பலா, புளி என பலதரப்பட்டவை. மரங்களில் பறவைகளின் இடைவிடாத பாட்டும் சத்தமும்...

அது ஒரு தனி உலகமாக இருந்தது.


ஆரம்பத்தில் சில நாட்கள் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் இருந்தபோது, அவருக்கு ஒரே வெறுப்பாக இருந்தது. கண்ணாடியால் ஆன ஒரு பெரிய சவப் பெட்டியில் உயிருடன் தன்னை அடக்கம் செய்ததைப் போல அவர் உணர்ந்தார். தெரிந்தவர்கள் யாரையும் பார்க்க முடியாமல்... யாருடனும் பேச முடியாமல்... தனிமையில் இருப்பது என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு புதிய அனுபவம் இல்லை. உண்மையாகச் சொல்லப் போனால் தனிமை என்பது அவருடன் எப்போதும் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதுதான். இருந்தாலும்...

இங்கு இனிமேலும் சில நாட்கள் இருந்தால் நிச்சயம் தான் ஒரு மனநோயாளியாக மாறப் போவது உறுதி என்ற எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பித்தபோது, அவரை மருத்துவமனையின் பின்பக்கம் பெரியதும் நல்ல காற்றோட்டமும் உள்ள ஓர் அறைக்கு மாற்றினார்கள்.

இந்த அறைக்கு தன்னை மாற்றியபோது அவருக்கு உண்டான சந்தோஷத்திற்கான அளவே இல்லை.

அறையின் தெற்குப் பக்கத்திலும், கிழக்குப் பக்கத்திலும் பெரிய ஜன்னல்கள் இருந்தன. அந்த அறை தனியாக இருந்ததால், வாசல் கதவை அடைத்து விட்டால், மருத்துவமனையின் எந்தச் சத்தமும் அவரின் அந்த அறைக்குள் வரவே வராது.

அறையில் தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் இல்லாத நேரங்களில், அவர் கிழக்குப் பக்கம் இருக்கும் ஜன்னலுக்கு அருகில் சென்று வெளிப் பக்கத்தைப் பார்த்து கொண்டிருப்பார்.

பச்சைப் பசேல் என இருக்கும் நிலப்பரப்பு... பழைய வீடுகள்... உயரமாக வளர்ந்து நிற்கும் வயதான பெரிய மரங்கள்... பறவைகள்... அவை பாடிக் கொண்டும் பலவிதப் பட்ட சந்தங்களை உண்டாக்கிக் கொண்டுமிருந்தன. பிறகு... காலைநேரத்திலும் மாலை நேரத்திலும் கொஞ்சமும் தவாறமல் இலைகளுக்கு மத்தியில் தன்னுடைய பொன் கதிர்களைப் பரப்பும் சூரியன்…

அவரின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.

இந்த நாட்களில் ஒரு நாளில்... கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தக் கிளியின் நட்பு அவருக்கு கிடைத்தது.

பலவற்றையும் சிந்தித்தவாறு நின்றிருந்த அவரைப் பார்த்து கிளி மீண்டும் கேட்டது :

‘‘நான் போகட்டுமா ?’’

அடுத்த நிமிடம் கிளி ஆகாயத்தில் ‘விர்’ என உயரத்தில் போனது. ஆனால், போன அதே வேகத்தில் கீழே இறங்கி வந்து அவருக்கருகில் ஜன்னல் கம்பியில் அமர்ந்தவாறு கிளி தயங்கி தயங்கி சொன்னது.

‘‘என் மேல கோபப்படக்கூடாது. நான் உங்களைப் பார்த்து ஒண்ணு கேட்கலாமா ? உங்களைக் கவனிக்க, கூட இருந்து பார்த்துக்க வீட்ல யாருமே இல்லையா ? இதுவரை நான் யாரையும் பார்க்கல. ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க வர்றாங்க... போறாங்க... ஆனா....’’

அவர் ஒன்றும் பேசவில்லை.

அப்போது கிளி மீண்டும் சொன்னது :

‘‘இன்னொரு விஷயத்தையும் நான் தெரிஞ்சிக்கணும். இன்னைக்கு காலையில இங்க ஒரு இளம்பெண் வந்தாளே... ரொம்பவும் தூரத்துல இருந்து வர்றது மாதிரி... களைச்சுப் போய் தூக்க கலக்கத்துடன், முடியாம... இருந்தாலும் அவ நல்ல அழகா இருந்தா, அவளோட கண்களை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. அதை எப்படிச் சொல்றதுன்னே தெரியல... அந்தக் கண்கள்ல அன்பு வெளிப்பட்டதை என்னால உணர முடிஞ்சது.’’

கிளி தன் பேச்சை நிறுத்தி விட்டு, அவரின் முகத்தையே பார்த்தது.

ஆனால் அவர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். கிளி திடீரென்று கேட்டது :

‘‘யார் அந்தப் பெண் ?’’

அவர் மெதுவான குரலில் சொன்னார் :

‘‘அந்த மாதிரி பல பேர் இங்கே வந்தாங்களே !’’

கிளி அப்போது கோபத்துடன் சொன்னது :

‘‘வர்ற பல பேரைப் பற்றி நான் பேசல. அந்தப் பெண்ணைப் பற்றி மட்டும்தான் நான் கேக்குறேன்.’’

அவர் ஒன்றும் பேசாமல், மறையப் போகிற சூரியனையே பார்த்தவாறு நின்றிருந்தார்.

கிளி சொன்னது :

‘‘சரி... வேண்டாம்... நான் இதைக் கேட்டிருக்கக் கூடாது இது ஒரு ஆளோட...’’

கிளி அதற்குப் பிறகு என்ன சொன்னது என்று அவர் கேட்கவில்லை.

ஆகாயத்தின் நீல வர்ணத்திற்கு மத்தியில் கிளி பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அவர் அங்கே ஜன்னலருகில் நின்றிருந்தார்.

தனக்குச் சொந்தமான - மிகவும் விலைமதிப்பற்ற ஏதோ ஒன்று நிரந்தரமாக தன்னை விட்டுப் போவதைப் போல் அவர் உணர்ந்தார்.

இரவில் அவருடன் துணைக்குப் படுப்பதற்காக வந்த மருமகன் குட்டி பயத்துடன் சொன்னான் :

‘‘மாமா... மழை பெய்யுது. காற்றும் அடிக்குது. ஜன்னலை மூடட்டுமா ?’’

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அவருக்கும் அது தெரியாமல் இல்லை.

அவர் சொன்னார் :

‘‘உன் பக்கம் மட்டும் அடை, கிழக்குப் பக்கம் அடைக்க வேண்டாம்...’’

இருட்டில் அவருக்கு எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும், அவருக்கு எல்லாமே தெரிந்தது. மரங்களினுனூடை சீறிப் பாயும் காற்றின் வலிமையையும், மழையின் ருத்ர தாண்டவத்தையும்... எல்லாவற்றையும் அவரால் உணர முடிந்தது. ஒரு பொட்டு கூட உறங்காமல் அவர் அங்கேயே படுத்திருந்தார்.

காலையில் பார்த்தபோது, வெளியே இருந்த மரங்களில் பெரும்பாலனவை இல்லாமற் போயிருந்தன. மழையிலும் காற்றிலும் அவை நிலத்தில் விழுந்து கிடந்தன.

அவர் நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தார். அவரின் களைத்துப் போன கண்கள் நிலத்தில் விழுந்து கிடக்கும் மரங்களுக்கு மத்தியில் எதையோ தேடின. ஆனால் அவரின் முயற்சி வீணானதுதான் மிச்சம்.

அவரின் கிளி அங்கு எங்குமே இல்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.