Logo

மருந்து

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6401
marundhu

சாயங்கால மேகங்கள் மர உச்சிகளை இளம் சிவப்பு நிறத்தில் மூடிக் கொண்டிருந்தபோது, அவள் சாளரத்தின் அருகில் நின்றவாறு கண்ணாடிகளைப் பார்த்து அந்தக் குங்குமப் பொட்டைச் சரி செய்து கொண்டிருந்தாள். துடிதுடிப்பாக இருந்த கண்கள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தன.

வெண்மையாக எழுந்து நின்ற மார்பகங்கள் கண்ணாடியில் முழுமையாக நிறைந்து காட்சியளித்தது. இடது கையால் ஆர்வத்துடன் அவள் தடவினாள். அப்போது நரம்புகள் வழியாக ஒரு குளிர்ச்சி பாய்ந்து செல்வதைப்போல அவள் உணர்ந்தாள். சுருண்டு அடர்த்தியாகக் காட்சியளித்த கூந்தலை மார்பின்மீது சிதற விட்டுக் கொண்டு அவள் நின்றிருந்தாள். அந்த எதிர் உருவமும் மிகவும் அழகாகவே இருந்தது. கண்கள் நெல்வயல் போய் முடிவடையும் மலைச்சரிவையே பார்த்தன.வெள்ளை நிற ஆடை அணிந்த திடகாத்திரமான மனிதன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அடுத்த நிமிடம் மரங்கள் இடைவிடாமல் வளர்ந்து காட்சியளிக்கும் ஒற்றையடிப் பாதையில் அவன் மறைந்துவிட்டான். அத்துடன் அவளுடைய இதயத்தில் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சு உண்டானது. பாதி மூடியிருந்த கண்களால் அவள் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அப்போது சிரமம் நிறைந்த ஒரு முனகல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் காற்றைப்போல அங்கு வேகமாக வந்தது. அது தொடர்ந்து அவளைத் தொல்லைக்கு உள்ளாக்கியது.

“நாசம் பிடிச்ச விஷயம்!”-அவள் திரும்பி சமையலறையை நோக்கி நடந்தாள். விறகுக் கொம்புகள் அடுப்பிற்கு வெளியே கிடந்தவாறு எரிந்து கொண்டிருந்தன. வெறுப்புடன் அவள் அழைத்தாள்:

“அடியே... மாதவி!”

“என்ன?”

இப்படி வெளியே எங்கோ இருந்து பதில் வந்தது. அவள் கோபத்துடன் அழைத்துக் கேட்டாள் :

“மருந்து கொடுத்துட்டேல்லடீ?”

“இல்ல...”

“சவம்!”

அவள் காலால் விறகுக் கொம்பை அடுப்பிற்குள் தள்ளி விட்டாள். பிறகு கஷாயச் சட்டியைத் திறந்தபோது, மேலே வந்த ஆவி மூளையையே செயலிழக்கச் செய்துவிட்டதைப்போல அவள் உணர்ந்தாள். வெள்ளைநிறக் கோப்பையில் எடுத்து வைத்த கருப்பு திரவத்தில் தன்னுடைய மார்பு தெரிவதை அவள் பார்த்தாள். அவளிடமிருந்து பரவிய இன்னதென்று கூற முடியாத வாசனைக்கு மீண்டும் அங்கு முக்கியத்துவம் கிடைத்தது.

அன்னப் பறவையைப்போல அந்த அறைக்குள் அவள் சென்றாள். சுவருடன் சேர்த்துப் போடப்பட்டிருந்த கட்டிலில் சிவப்பு நிறப் போர்வைக்குக் கீழே படுத்திருந்த மனிதன் தலையை மெதுவாகத் திருப்பினான். சிறு சிறு ரோமங்கள் வளர்ந்திருந்த எண்ணெய் பசை அற்ற நீளமான முகம். போர்வையை விலக்காமல் முனகியவாறு அவன் எழுந்து உட்கார்ந்தான். மிகவும் சிரமப்பட்டு இருமிக்கொண்டே துப்பிய சளி மஞ்சள் நிறத்தில் சுவரில் படிந்திருந்தது. அதில் ரத்தம் கலந்திருந்தது. எண்ணெய் படிந்திராத தலை முடியைப் பின்னோக்கித் தடவி விட்டவாறு, நீட்டிய கை நடுங்கிக் கொண்டிருந்தது. பாத்திரத்தின் மேற்பகுதிக்கு மேலே பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அவளையே வேட்கையுடன் இழுத்துக் குடிக்கின்றனவோ? அந்தக் கண்களை எஜமான்மீது பாசம் வைத்திருக்கும் நாயின் கண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க அவள் நினைத்தாள். ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த அவனுடைய உருவத்தை நினைத்துப் பார்க்க அவள் சிரமப்பட்டு முயற்சித்தாள். பாத்திரத்தை வாங்கிக் கீழே வைத்துவிட்டு, அவள் சாளரத்திற்கு அருகில் போய் நின்று கொண்டாள்.

அவன் முனகினான்:

“என் ஜானு”,

“என்ன?”

அவள் திரும்பி நின்றாள். அவன் எதுவும் பேசவில்லை. அந்தக் குரலில் இருந்த உயிரற்ற தன்மை இதயத்தை சுட்டெரித்தது. “என் அம்மா!”- எதுவுமே செய்ய முடியாமல் அவன் கட்டிலில் சாய்ந்தான். வெளியில் தெரிந்த பாதங்களை அவள் போர்வையை இழுத்து மூடினாள். குலுங்கிக் குலுங்கி அவள் நடந்தாள். நகர்ந்து கொண்டிருக்கும் பருமனான அந்த உடலையே பார்த்துக் கொண்டு அவன் நீண்ட பெருமூச்சை விட்டான்.

“ஜானு...”- அவன் முனங்கினான்.

வாசற்படியில் நின்று கொண்டு அவள் முகத்தைச் சற்று திருப்பினாள். அந்த பார்வை இதயத்தை மகிழச் செய்வதாக இருந்தது.

“வைத்தியர் போயிட்டாரா?”

“போயிட்டார்.”

“மருந்து?”

“ஓ... கொண்டு வருவார்.”

அவள் புன்னகைத்தாள். மனதை மயக்கக்கூடிய குளிர் நிலவின் ஒளி! அதன் குளிர்ச்சியான ஒளிக் கீற்றுகள் இதயத்தை வருடுவதைப்போல அவன் உணர்ந்தான்.காதல் வயப்பட்டு, மிகவும் சிரமப்பட்டு அவனும் மெல்லப் புன்னைகத்தான்.

வாசல் வழியாக அவன் வெளியே பார்த்தவாறு படுத்திருந்தான்.தென்னை மரங்கள் நிறைந்த தோப்பும், கீழே விளைந்து கிடக்கும் நெல் வயலும், அது போய் முடிகிற மலைச்சரிவும்... அவன் அந்த இடங்களில் நடந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. வைத்தியரின் வார்த்தைகள் ஆறுதல் அளிப்பவையாக இருந்தன. ஒரு வருடமாகத் தவறாமல் அவர் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். சிறிய ஒரு சாரல் மழையில் நனைந்ததால் சயரோகமாக மாறிவிடுமா? ஆனால், சயரோகம் என்று அவர் கூறவில்லை. வைத்தியர் மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருப்பவர். அவருடைய மருந்திற்கு நல்ல விளைவு இருக்க வேண்டும். பலரிடமிருந்து வாங்கியிருக்கும் சான்றிதழ்களை ஃப்ரேம் போட்டு மருத்துவமனையில் அவர் தொங்க விட்டிருந்தார். ஒற்றையடிப் பாதை மறைந்துவிட்டது. மலை,போர்வையால் மூடியதைப்போல உயர்ந்து நின்று கொண்டிருந்தது. கம்பீரமான ஒரு அமைதி அதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. நீல வானத்துடன் ஒட்டிக்கொண்டு, கருப்பு மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தது. நிலத்தில் இருந்து இருண்ட காற்று மேலே எழுந்து வருகின்றதோ? அது ஆகாயம்வரை பரவி விட்டிருந்தது. பூமியின் விளக்கு அணைந்துவிட்டது... அமைதியான இருட்டு அசைவே இல்லாமல் இருந்தது... அவள் கண்களை விரித்துக் கொண்டு பார்த்தான்.

திடீரென்று எரிய வைக்கப்பட்ட லாந்தர் விளக்குடன் வேலைக்காரி அறைக்குள் வந்தாள். தீபத்தின் சுடர் தங்கம் உருகியதைப்போல இருந்தது. அழகான அவளுடைய உடல் மஞ்சள் வெளிச்சத்தில் பிரகாசமாகக் காட்சியளித்தது. முனை வளைந்த கம்பியில் மாட்டுவதற்காக விளக்கை உயர்த்தியபோது, சுவரில் அவளுடைய நிழல் விழுந்தது. அது தரையில் முளைத்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும்- ஒரு கரும் பாறையை மடியில் வைத்துக் கொண்டு கீழ்நோக்கிச் சாய்ந்திருக்கும் ஒரு குன்றை ஞாபகப்படுத்தியது.

விளக்கின் ஆட்டம் நின்றது. எந்தவித அசைவும் இல்லாமல் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் சுடரை அடைய சிறிய ஈக்கள் சிம்னிக்கு வெளியே சுற்றிச்சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. முலாம் பூசப்பட்ட ஃப்ரேமில் தொங்கிக் கொண்டிருந்த படத்தில் இருந்து இரண்டு கண்கள் மட்டுமே தெளிவாகத் தெரிந்தன. எவ்வளவு கருணை நிறைந்தவையாக அந்தத் தாயின் கண்கள் இருக்கின்றன! தாயும்  குடும்பமும் இல்லாமல் போனாலும் ஜானு கிடைத்தாள் எனினும், தாயின் பாசம்!


அவனுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது. தொண்டையில் ஏதோ வந்து தங்கிவிட்டிருந்தது. திரும்பத் திரும்ப சிரமப்பட்டு அவன் இருமினான். அது செம்புப் பானையை வெளியே இருந்து தட்டுவதைப் போன்ற சத்தத்தை உண்டாக்கியது. அவனுடைய நெற்றி வியர்வையால் நிறைந்தது. காய்ச்சல் இருக்கிறதோ என்று அவன் சந்தேகப்பட்டான். மூக்கிலிருந்து வந்த மூச்சு மிகவும்  வெப்பமாக இருந்தது. நெஞ்சில் பெரிய சுமை இருப்பதைப்போல இருந்தது. கீழ்நோக்கி நாம் இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று அவன் பயந்தான்.

வேலைக்காரி ஒரு டம்ளர் பாலையும் ஒரு காய்ந்து போன ரொட்டியையும் எடுத்துக்கொண்டு வந்தாள். பாதி பாலைக் குடித்தவுடன், அவனுக்குச் சற்று நிம்மதி உண்டானதைப்போல இருந்தது. அவள் ரொட்டியை அறுத்துப் பாலில் தொட்டுக் கொடுத்தாள். அவன் அதைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவள் அவ்வப்போது அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் எதற்காக கவலை? அவளுடைய கண்கள் எதற்காக பனிக்க வேண்டும்?

அவன் படுத்தான். போர்வையை எடுத்து அவள் நன்றாக மூடிவிட்டாள். அவன் சொன்னான்:

“காய்ச்சல் இருக்கான்னு பார்.”

அவள் துணியின் முனையால் துடைத்துவிட்டு, குளிர்ச்சியான தன் கையை அவனுடைய நெற்றியில் வைத்தாள். பாத்திரங்களின் பாசியும், புகையும், வியர்வையும், சாம்பலும் சேர்ந்து உண்டான ஒரு வாசனை அவனைத் தழுவிக் கொண்டிருந்தது. அவனுடைய மார்பில் அவளுடைய கை பட்டது. இதயம் அவளுடைய கையில் படுவதைப்போல அவன் உணர்ந்தான். அவளுடைய தொடல் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அவன் மீண்டும் கேட்டான்:

“காய்ச்சல் இருக்குதா?”

“கொஞ்சம் வெப்பம் இருக்கு.”

அந்த மூச்சுக் காற்று அவனுடைய மூக்கில் அடித்தது. அது நறுமணம் நிறைந்ததைப்போல் அவனுக்கு இருந்தது. அவளுடைய இதயத்தைத் தழுவிவிட்டு வந்ததாக அது இருக்குமோ? அவன் முனகினான்:

“மாதவி...”

“என்ன?”

“அம்மா எங்கே?”

“புத்தகம் படிச்சுக்கிட்டு படுத்திருக்காங்க.”

நிமிடங்கள் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தன. சுகமான ஒரு நிம்மதி அவனை வந்து ஆக்கிரமித்தது. அவள் கேட்டாள்:

“மருந்து கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம்... உறக்கம் வருது.”

அவள் விளக்கின் திரியை இறக்கினாள். இருள் பரப்பில் மேலே வந்த இளம் மொட்டைப்போல தீபத்தின் சுடர் இருந்தது. அவனுடைய கண்களுக்கு சுமை அதிகமாகிக் கொண்டே வந்தது... அகன்று அகன்று தூர தூரமாக அந்த இளம் மொட்டு நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. அப்படி... அப்படி... அவன் தூங்கியும் விட்டான்.

சுய நினைவு வந்தபோது அவன் வியர்வையில் மூழ்கிக் கிடந்தான். தொண்டை வறண்டு போயிருந்தது. இதயம், நெருப்பு எரிந்து  கொண்டிருக்கும் பஞ்சு மூட்டையைப்போல அவனுக்குத் தோன்றியது. தாகம்...மிகவும் கடுமையான தாகம்! அவன் கண்களைத் திறந்தான். சுற்றிலும் அடர்த்தியான இருட்டு! அவன் மருந்துக்காக அழைக்க முயற்சித்தபோது... அருகில் எங்கோ ஒரு  அடக்கிய சிரிப்பு! தொடர்ந்து ‘ஓ...’ என்றொரு சிணுங்கல்! இளமை தவழும் பெண்ணிடமிருந்து வந்த காமம் கலந்த இனிய குரல்... அவனுடைய ஒவ்வொரு துளி ரத்தமும் ஒவ்வொரு ரோமங்களும் முன்னெச்சரிக்கையுடன் எழுந்து நின்றன. மூச்சை அடக்கிக்கொண்டு, அவன் கவனித்தான். இருட்டில் இருந்து தாழ்வான குரல் இவ்வாறு வந்து ஒலித்தது:

“என் திருடி!”

“ம்... வீடு வீடா... ஏறி... இறங்குகிற...”

“என் தேன் அடையாச்சே!”

“பிறகு... இப்படியே எத்தனை நாட்கள்... இருப்பது?”

“எல்லாம் சரியாகும்... இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுமையாக இரு”

“என்... இதயம்...வலிக்குது!”

“அதற்குத்தானே மருந்து!”

(சிறிது நேரத்திற்கு அமைதி)

“ஓ... என்னை... முத்தம் தந்து தந்து... நெரிச்சுக் கொல்லுங்க.”

“என்ன... மருந்து வேண்டாமா?”

“பிறகு... வே... ண்டாமா?”

மீதியை அவன் கேட்கவில்லை. நரம்புகளில் ஒரு வெறி பாய்கிறதா? முன்பு எங்கோ நடைபெற்ற ஒரு சம்பவம்! பதைபதைப்புடன் அவன் எழுந்து தட்டுத் தடுமாறி மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு சாளரத்தை மெதுவாகத் திறந்தான். கண் தெரியவில்லை. முழு உலகமும் சுற்றிக் கொண்டிருந்தது... எவ்வளவு நிமிடங்கள் அப்படியே நின்றோம் என்று அவனுக்கே தெரியவில்லை. பார்வை தெளிவடைந்தபோது, உறங்கிக் கொண்டிருந்த நிலவு வெளிச்சத்தில், கட்டிப் பிணைந்த ஒரு உருவம் தெரிந்தது.

அவனுடைய இதயம் வெடித்து விடுவதைப்போல அவன் உணர்ந்தான். வாயில் நீர் இல்லை. சத்தம் வெளியே வர மறுத்தது. மூச்சு இல்லாமல் கை, கால்கள் குழைந்து அவன் விழுந்தான்.

சுய உணர்வு வந்தபோது, அவன் கட்டிலில் கால்களை நீட்டிப் படுத்திருந்தான். நல்ல பிரகாசமான பகல். ஒரு புதிய உற்சாகம் அவனை வந்து ஆக்ரமித்திருந்தது. அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். ஜானகியும் அவளுடைய தாயும் சகோதரனும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்களும் அறையில் ஆங்காங்கே நின்றிருந்தார்கள். அழும் முகத்துடன் வேலைக்காரி கதவுக்கு அருகில் நின்றிருந்தாள். ஒவ்வொரு முகங்களிலும் அவனுடைய பார்வை பதிந்தது. இறுதியில் மனைவியின் வெளிறிப்போன முகத்தில் போய் நின்றது. திரை போடாமல் அவளுடைய இதயத்தை எரிக்கக்கூடிய இரண்டு நெருப்புக் கட்டைகளோ அவை?

அவன் மெதுவான குரலில் கேட்டான்:

“ஜானு... யார் அது?”

“எது?”

அவள் சுற்றிலும் பார்த்தாள். அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான் . வறண்டு போன ஒரு பொய்யான சிரிப்பு! அப்போது வைத்தியர் படியைக் கடந்து வந்து கொண்டிருந்தார். எழும் செருப்பின் ஓசையைக் கேட்டு ஜானகி சொன்னாள்:

“வைத்தியர்.”

“ஓ... வை...த்தியர்!”

நெருப்புக் கட்டைகளைப்போல அவளுடைய கண்கள் ஜொலித்தன. பாண்டி நாட்டு துப்பட்டா அணிந்து, இரட்டைக் கரை வேட்டி உடுத்தியிருந்த அழகான தோற்றத்தைக் கொண்ட வைத்தியர் வழக்கமான புன்னகையுடன் அறைக்குள் வந்தார். நோயாளி உணர்ச்சி வேகத்துடன் கேட்டான்:

“வைத்தியரே, அதைக் கொண்டு வந்தீங்களா?”

“எதை?”

“அந்த மருந்தை...?  ஜானுவின் இதய வலிக்கான மருந்தை...!”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.