Logo

மனைவியின் காதலன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7886
manaiviyin kadhalan

யதான அந்த டாக்டர், இளம் பெண்ணான தன்னுடைய நோயாளியிடம் அந்த ஃபயர் ப்ளேஸின் இரு பக்கங்களிலும் அமர்ந்து கொண்டு பேசினார். வழக்கமாக பெண்களுக்கு உண்டாகக்கூடிய நோய் மட்டுமே அவளுக்கு உண்டாகியிருந்தது - திருமணமான ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் தன்னுடைய காதல் விளையாட்டுக்கள் மூலம் வரக்கூடிய வெறுப்பும் நாடித் தளர்ச்சியும் களைப்பும்தான்.

அவள் ஸோஃபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டு பேசினாள். “இல்லை டாக்டர்” - அவள் சொன்னாள்: “ஒரு பெண் தன்னுடைய கணவனுக்கு துரோகம் செய்கிற விஷயத்தை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

ஒரு பெண் தன் கணவன் மீது அன்பு இல்லாமல் இருக்கிறாளா? கணவன் அவளுடைய விருப்பங்களுக்குச் சம்மதம் தராமல் இருக்கலாம். ஆனால், அவள் எப்படி தன்னையே இன்னொரு ஆளுக்கப் பரிசாகத் தர முடியும்? மற்றவர்களின் கண்களில் இருந்து அவள் அதை எப்படி அதை மறைக்க முடியும்? துரோகத்திற்கும் கபடத்திற்குமிடையில் இருந்துகொண்டு அவளால் எப்படிக் காதலிக்க முடியும்?”

டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “அது மிகவும் எளிதான விஷயம். ஒருமுறை தன்னுடைய மனதைத் திறந்துவிட ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், சிறிய சிறிய விஷயங்களைப் பற்றியெல்லாம் அவள் சிந்தித்துப் பார்க்க மாட்டாள். திருமணத்திற்குப் பிறகு இருக்கும் காமக் களியாட்டங்களையும் மற்ற மகிழ்ச்சியான விஷயங்களையும் கடந்து போகிற போது மட்டுமே ஒரு பெண் காதலிக்கப்படும் நிலையை அடைகிறாள் என்று நான் நினைக்கிறேன். பகல் நேரத்தில் அவளை அடித்து உதைப்பதும், இரவில் அவளை அளவுக்கும் அதிகமாகக் கொஞ்சுவதும் அனுபவிப்பதும்தான் ஒரு நல்ல ஆணுக்கு அடையாளம். திருமணம் நடக்காமல் ஒரு பெண்ணால் சரியாகக் காதலிக்க முடியாது என்பதுதான் உண்மை.

கபடத்தன்மையைப் பற்றிக் கூறுவதாக இருந்தால், எல்லா பெண்களுக்கும் வேண்டிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு சிறப்பு குணம் அது. மிகவும் சாதாரண பெண்கள் கூட அதன் அடையாளம் கொண்டவர்களே. மிகவும் ஆபத்தான ஒரு திரிசங்கு நிலையில் இருந்துகூட வெளியே வரக்கூடிய அசாதாரணமான ஆற்றல் அவர்களுக்கு உண்டு.”

நம்பிக்கை வராததைப்போல அந்தப் பெண் சொன்னாள்: “இல்லை டாக்டர். அப்படி ஒரு தடவை நடக்கும்போது மட்டுமே பெண்கள் அதைப்பற்றி புரிந்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் மதிப்பு இல்லாமல் போவது ஆண்களைவிட பெண்களுக்குத்தான்.”

டாக்டர் தன்னுடைய கைகளை உயர்த்தினார்:

“அப்படியொன்று நடந்த பிறகு நீங்கள் சொல்ல வேண்டும்! என்னைத் தேடி பரிசோதனைக்காக வரக்கூடிய பத்தினி என்று நான் நினைத்திருந்த ஒரு பெண்ணுக்கு ஒரு முறை நடந்த கதையை நான் இங்கு கூறப்போகிறேன்.”

தெற்கு திசையில் இருக்கும் ஒரு நகரத்தில்தான் அந்தச் சம்பவம் நடைபெற்றது. அந்த இரவு நேரத்தில் நான் நல்ல உறக்கத்தில் இருந்தேன். யார் அழைத்தாலும் எளிதில் கண்விழிக்க முடியாத அளவிற்கு உள்ள தூக்கம். நெருப்பு பிடித்திருப்பதை அறிவிக்கக்கூடிய மணிகள் ஒலிப்பதைக் கனவில் கேட்பதைப்போல எனக்கு இருந்தது. அடுத்த நிமிடம் நான் அதிர்ச்சியடைந்து எழுந்தேன். என்னுடைய வீட்டின் மணிச்சத்தம் தான் அது. என்னுடைய வேலைக்காரர்கள் அதற்கு பதிலாக எதுவும் செயல்படாமல் இருந்ததால், நான் என் கட்டிலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மணியைக் கழற்றி வைத்தேன். சிறிதும் தாமதிக்காமல் என்னுடைய வீட்டின் முன்பக்கக் கதவை யாரோ தட்டுவதும், நடந்து வரும் படியில் யாருடைய காலடிச் சத்தமோ ஒலிப்பதும் என் காதுகளில் விழுந்தன. அதைத் தொடர்ந்து ஒரு கடித்தத்துடன் ழாங் என்னைத் தேடி வந்தாள். கடிதத்தில் இப்படி எழுதப் பட்டிருந்தது. ‘டாக்டர் சிமியோனின் அவசரமாக வரவேண்டுமென்று மேடம் லெ லீவ்ரெ பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்.

சிறிது நேரம் சிந்தித்த பிறகு நான் சொன்னேன்: “நரம்புத் தளர்ச்சி, ஆவி, வயிற்றுக் கோளாறு... எனக்கு தாங்க முடியாத அளவிற்கு களைப்பு இருக்கிறது.” தொடர்ந்து நான் பதில் எழுதினேன். ‘டாக்டர் சிமியோனினுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், அவருடைய நண்பரான திரு. போனேயை அழைத்துக் கொள்ள வேண்டுமென்று தயவுசெய்து லெ லீவ்ரெயிடம் கூறு.’

நான் அந்தக் கடிதத்தை ஒரு உறைக்குள் இட்டு ழாங்கிடம் கொடுத்துவிட்டு, தூங்குவதற்காகப் படுத்தேன். ஆனால், சிறிது நேரம் கடந்தபோது மீண்டும் மணி ஒலிக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து ழாங் நான் இருக்கும் இடத்திற்கு வந்து சொன்னாள்: “கீழே யாரோ இருக்காங்க. உங்களிடம் அவங்க உடனே பேச வேண்டும் என்கிறார்கள். அது ஒரு ஆணா அல்லது பெண்ணா என்று என்னால் அடையாளம் தெரிஞ்சிக்க முடியவில்லை. அந்த உருவம் மேலிருந்து கீழ்வரை மூடிய நிலையில் இருக்கிறது.”

நான் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். அந்த உருவத்தை உள்ளே வரச்சொல்லும்படி என்னுடைய வேலைக்காரியிடம் சொன்னேன்.

ஒரு கருப்புநிற முகமூடி என்னுடைய அறைக்குள் வந்தது. ழாங் அறையை விட்டுப் போனபிறகு, அந்த உருவம் தன்னுடைய முகமூடியைக் கழற்றியது. மேடம் பெர்த்தா லெ லீவ்ரெதான் அது. இளம் வயதைக் கொண்ட அந்தப் பெண் அந்தப் பகுதியில் இருக்கும் மிகச் சிறந்த அழகிகளில் ஒருத்தியும் ஒரு பெரிய வர்த்தகரின் மனைவியுமாகவும் இருந்தாள்.

அவள் பயத்தால் வெளிறிப் போய்க் காணப்பட்டாள். பைத்தியம் பிடித்தவர்களின் முகத்தைப்போல அவளுடைய முகம் மிகவும் சோர்வுடன் இருந்தது. கைகள் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தன. இரண்டு முறை அவள் பேச முற்பட்டாள் என்றாலும், குரல் வெளியே வரவில்லை. ஆனால், இறுதியில் திக்கித் தடுமாறியவாறு அவள் இப்படிச் சொன்னாள்:

“சீக்கிரமா வரணும் டாக்டர். என்னுடைய... என்னுடைய காதலர் என்னுடைய அறையில் இறந்து கிடக்கிறார். அதிகமாக உணர்ச்சி வசப்பட்டதால் அவருக்கு மூச்சுவிட முடியாமல் போய்விட்டது.” - அவள் தொடர்ந்து சொன்னாள்: “என்னுடைய கணவர் - வெகு சீக்கிரம் க்ளப்பில் இருந்து வீட்டிற்கு வந்துவிடுவார்.” ஒரு இரவு உடை மட்டுமே அணிந்திருக்கிறேன் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நான் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தேன். வெகு சீக்கிரமே நான் ஆடைகளை எடுத்து அணிந்தேன். தொடர்ந்து அவளிடம் கேட்டேன்: “சிறிது நேரத்திற்கு முன்னால் நீங்கள் இங்கே வந்திருந்தீங்களா?”

பயத்தால் ஒரு கல்லைப்போல நடுங்கிக் கொண்டு அவள் சொன்னாள் : “இல்லை. என்னுடைய வேலைக்காரி அது. அவளுக்கு அது தெரியும்.” சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்:  “நான் அந்த மனிதருக்கு அருகில்தான் இருந்தேன்.”


பிறகு அவள் பயத்தைத் தரக்கூடிய ஒரு சத்தத்தை உண்டாக்கினாள். சிறிது நேரம் மூச்சுவிட சிரமப்பட்டு மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு அவள் உரத்த குரலில் அழுதாள். ஒன்றோ இரண்டோ நிமிடங்கள் அது நீடித்தது. திடீரென்று உருகும் மனதின் வெப்பம் பாதித்ததைப் போல அவளுடைய கண்ணீர் வற்றிப்போய்விட்டது. துயரத்தின் அமைதியுடன் அவள் சொன்னாள் : “நாம சீக்கிரமே போகலாம்.”

“நான் தயார்” - நான் சொன்னேன்: “ஆனால், என்னுடைய வண்டியைத் தயார் பண்ணும்படி நான் உத்தரவு போடவில்லை.”

“நான் வண்டி கொண்டு வந்திருக்கிறேன்” - அவள் சொன்னாள்: “அது அந்த மனிதரின் வண்டிதான். அது அந்த மனிதரை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தது.” அவள் மீண்டும் தன்னுடைய உடல் முழுவதையும் மூடிக் கொண்டாள். நாங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

வண்டிக்குள் இருந்த இருட்டில் எனக்கு அருகில் உட்கார்ந்திருக்கும் போது என்னுடைய கைகளை அழுத்திக்கொண்டு நொறுங்கிப் போன குரலில் அவள் சொன்னாள் : “ஒ... உங்களுக்காவது... உங்களுக்காவது என்னுடைய நிலைமை புரிந்திருக்கும்! நான் அந்த மனிதரைக் காதலித்தேன். நான் அவரை அளவுக்கு மீறிக் காதலித்தேன். கடந்த ஆறு மாதங்களாக நான் அவரை பைத்தியம் பிடிக்கிற அளவிற்கு காதலித்தேன்.”

“உங்கள் வீட்டில் யாராவது இருக்காங்களா?” - நான் கேட்டேன்.

“இல்லை. ரோஸ் என்ற வேலைக்காரியைத் தவிர வேறு யாருமில்லை. அவளுக்கு எல்லா விஷயங்களும் தெரியும்.”

நாங்கள் அவளுடைய வீட்டை அடைந்தோம். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். எந்தவொரு சத்தமும் உண்டாக்காமல், மெதுவாக வாசல் கதவைத் திறந்து நாங்கள் மாடிக்குச் சென்றோம். பிணத்திற்கு அருகில் இருக்க பயமாக இருந்த காரணத்தால், அந்த வேலைக்காரி படிகளுக்கு அருகில் ஒரு மெழுகுத் திரியை எரிய வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் அந்தப் படுக்கையறைக்குள் நுழைந்தேன். ஒரு மல்யுத்தம் நடந்து முடிந்ததைப் போல முழுமையான அலங்கோல நிலையில் அறையின் உட்பகுதி இருந்தது. தலைகீழாகக் கிடந்த படுக்கை யாரையோ எதிர்பார்த்துக் கிடந்ததைப்போல இருந்தது.

படுக்கை விரிப்பு கீழே விழுந்து கிடந்தது. அந்த மனிதர் தன்னுடைய கன்னங்களையும் நெற்றியையும் துடைக்கப் பயன்படுத்தியிருந்த ஈரமான துணிகள் அந்தச் சிறிய வாஷ்பேசினுக்கு அருகில் கிடந்தன. அதற்கு அருகில் ஒரு கண்ணாடிக் குவளை இருந்தது. வினிகரின் தாங்க முடியாத வாசனை அந்த அறையில் நிறைந்திருந்தது.

அந்த இறந்த உடல் அறைக்கு நடுவில் நீளமாகக் கிடந்தது. நான் அதற்கு அருகில் சென்று அதைத் தொட்டுப் பார்த்தேன். கண்களைத் திறந்து பார்த்தேன். கைகளைப் பிடித்துப் பார்த்தேன். பிறகு பயத்தால் மரத்துப் போய் நின்றிருந்த அந்த இரண்டு பெண்களையும் பார்த்தவாறு நான் சொன்னேன்: “இதை அந்த கட்டிலில் படுக்க வைக்க எனக்கு உதவணும்.” அந்த மனிதரை மெதுவாகக் கட்டிலில் படுக்க வைத்த பிறகு, நான் அவளுடைய இதயத் துடிப்பைப் பார்த்தேன். ஒரு பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தி அவருடைய உதடுகளைப் பரிசோதனை செய்தேன். “எல்லாம் முடிந்துவிட்டது. நாம உடனடியா இந்த மனிதருக்கு ஆடைகள் அணிவிக்க வேண்டும்” - நான் சொன்னேன். பயங்கரமான ஒரு காட்சியாக இருந்தது அது.

பெரிய ஒரு பொம்மையின் உறுப்புகளைக் கையில் எடுப்பதைப் போல நான் அவருடைய ஒவ்வொரு உறுப்பையும் கையில் எடுத்தேன். அந்தப் பெண் கொண்டுவந்த ஆடைகள் ஒவ்வொன்றையும நான் அந்த மனிதருக்கு அணிவித்தேன். அவள் அந்த மனிதரின் உள்ளாடைகள், ஸாக்ஸ், ட்ரவுசர், வெயிஸ்ட் கோட் ஆகியவற்றை அணிவித்தாள். ஆனால், சட்டையின் கைகள் அந்த மனிதருடைய மேலாடையின் கைகள் வழியாகக் கடந்து செல்ல சிரமப்பட்டன. அவருடைய பூட்ஸின் கயிறுகளைக் கட்டுவதற்காக நான் அதை பலமாகப் பிடித்தபோது, அந்தப் பெண்கள் குனிந்து நின்றுகொண்டு அதை அணிவிக்க முயற்சித்தார்கள். கால்கள் நீர் வந்து வீங்கியிருந்ததால், கயிறு இடக்கூடிய ஓட்டையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இரண்டு முனைகளும் இணைவதற்காக ஹேர் பின்னைப் பயன்படுத்தினார்கள். அந்தக் கடுமையான முயற்சி முடிந்தவுடன் நான் அவர்களிடம் சொன்னேன்: “நீங்கள் அவருடைய தலை முடியை அழகாக வாரி விடுங்க.” அந்த வேலைக்காரிப் பெண் தன்னுடைய எஜமானத்தியின் பெரிய பற்களைக் கொண்ட சீப்பையும் ப்ரஷ்ஷையும் எடுத்துக் கொண்டு வந்தாள். அந்த மனிதரின் நீளமான தலைமுடி சீப்பிற்கு அடியில் சிக்கியபோது, அதை விட்டெறிந்துவிட்டு, தன்னுடைய கையாலேயே அவருடைய தலைமுடியை... அவரைத் தழுவுவதைப்போல அவள் கோதி விட்டாள். அவள் அந்த மனிதருடைய தாடியைச் சீவி முறைப்படுத்தினாள். காதல் ஜோடிகளுக்கு மத்தியில் செய்வதைப்போல அவள் அந்த மனிதருடைய மீசையை அழகாக சுருட்டி விட்டாள்.

அடுத்த நிமிடம் அவருடைய தலைமுடியை விட்டு, அவள் தன் காதலரின் தலையைத் தன் கையில் எடுத்தாள். இனி எந்தச் சமயத்திலும் சிரிக்க முடியாத அசைவற்ற முகத்தையே அவள் ஏமாற்றத்துடன் பார்த்தாள். அவர் அந்த மனிதருடைய உடல்மீது விழுந்தாள். அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தாள். அந்த மூடிய கண்களிலும் உதடுகளிலும் அந்த முத்தங்களை ஒத்தடத்தைப்போல அவள் பதித்தாள். நெற்றியிலும் முன் தலையிலும் அதையே செய்தாள். அவளுடைய உதடுகள் அந்த மனிதருடைய காதில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. தன்னுடைய அணைப்பை மேலும் அதிகமாக்கிக் கொண்டு அவள் சொன்னாள் : “என் தங்கமே... உனக்கு இறுதிவிடை!”

அப்போது மணி பன்னிரண்டு அடித்தது. நான் அதிர்ச்சியடைந்து எழுந்தேன். பன்னிரண்டு மணி! நான் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன்: “இந்த நேரத்தில்தான் க்ளப்பை அடைப்பார்கள். வாங்க மேடம். நாம இனிமேல் கொஞ்சமும் நேரத்தை வீணாக்கக் கூடாது.”

அவள் எழுந்தபோது, நான் சொன்னேன்: “நாம் இந்த பிணத்தை வரவேற்பு அறைக்குக் கொண்டு செல்வோம்.” அதைச் செய்து முடித்ததும், அதை அங்கிருந்த ஸோஃபாவில் உட்கார வைத்தபிறகு, நான் சர விளக்குகளை எரிய வைத்தேன். அப்போது வெளிக் கதவு பலமாகத் திறந்து மூடும் சத்தம் எனக்குக் கேட்டது. “ரோஸ், ஒரு கைக்குட்டையையும் பாத்திரத்தையும் கொண்டு வா. பிறகு அந்த படுக்கையறையைச் சுத்தம் செய். கடவுளை மனசுல நினைத்துக் கொண்டு அதைச் சீக்கிரமா செய்! திரு. லெ லீவ்ரெ வர்றாரு.”


அவர் படிகளில் ஏறி வரும் சத்தம் எனக்குக் கேட்டது. அவருடைய கைகள் சுவரில் தடவுவதையும் நான் உணர்ந்தேன். “வாங்க நண்பரே!” - நான் சொன்னேன். “இங்கே எங்களுக்கு நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்து விட்டது.”

பதைபதைத்துப் போன அந்தக் கணவர் உதட்டில் சுருட்டுடன் கதவுக்குப் பக்கத்தில் வந்து கேட்டார்: “என்ன விஷயம்? இதன் அர்த்தம் என்ன?”

நான் அவருக்கு அருகில் சென்று சொன்னேன்:

“என் நண்பரே, நாங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம். உங்களுடைய மனைவியும் நானும் என்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்த இந்த நண்பரும் சேர்ந்து இரவில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இந்த மனிதர் தலைசுற்றிக் கீழே விழுந்துவிட்டார். பிறகு இரண்டு மணி நேரமாக சுய உணர்வு இல்லாத நிலையிலேயே இருக்கிறார். வெளியிலிருந்து அறிமுகமில்லாதவர்கள் யாரையும் அழைக்க வேண்டாம் என்று நான் நினைத்தேன். நீங்கள் கொஞ்சம் உதவினால், நான் இந்த மனிதரை இவருடைய வீட்டில் கொண்ட போய் விட்டு விடுவேன். ”

பதைபதைப்பு அடைந்தாலும் எந்தவொரு சந்தேகமும் அடையாமல் அந்தக் கணவர், எதிர்காலத்தில் தனக்கு எந்தவொரு தொந்தரவையும் தர இயலாத தன்னுடைய எதிரியைத் தன்னுடைய கைகளால் தாங்கிப் பிடித்தார். ஒரு குதிரையை நுகத்தடியில் கட்டுவதைப்போல நான் பிணத்தின் இரண்டு கால்களுக்கு நடுவிலும் நின்று கொண்டு அதைத் தாங்கியவாறு கீழே கொண்டு வந்தேன். மனைவி எங்களுக்கு வெளிச்சத்தைக் காட்டினாள். நாங்கள் வெளியே வந்ததும், வண்டிக்காரனை சரி பண்ணுவதற்காக நான் அந்த அசைவே இல்லாத பிணத்திடம் இப்படிச் சொன்னேன்: “நட நண்பா... இது ஒரு பெரிய விஷயமில்லை. சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்னு எனக்குத் தெரியும். ஆனால், தைரியமா இருக்கணும். எல்லாம் சீக்கிரம் நல்லதுல முடியும்.” அவர் என்னுடைய கைகளிலிருந்து நழுவிப்போவதைப் பார்த்ததும் நான், அந்தப் பிணத்தின் தோளில் ஒரு கிள்ளு கொடுத்தேன். அடுத்த நிமிடம் அந்த ஆள் வண்டிக்குள் விழுந்தார். அவருடன் நானும் அந்த வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தேன்.

திகைப்பில் மூழ்கிப்போயிருந்த திரு. லீவ்ரெ என்னிடம் கேட்டார்: “இது பிரச்சினை ஆயிடுமா? அந்த அளவிற்குப் பெரிய விஷயம் என்று உங்களுக்கு தோணுகிறதா?”

தன்னுடைய உயரத்தில் இருந்த கணவரின் தோளில் கையை வைத்துக் கொண்டு அந்த வண்டிக்குள் எட்டிப் பார்த்த பெண்ணைப் பார்த்து நான் சொன்னேன்: “இல்லை.”

நான் அவருக்குக் கையை ஆட்டிவிட்டு வண்டிக்காரனிடம் வண்டியைச் செலுத்தும்படிச் சொன்னேன். பயணம் முழுவதும் அந்த மரணமடைந்த மனிதர் என் உடல்மீது விழுந்து கொண்டே இருந்தார். நான் அந்த மனிதரின் வீட்டை அடைந்தேன். வீட்டிற்கு வரும் வழியில் அவர் தலைசுற்றி கீழே விழுந்துவிட்டார் என்றும்! அவரை அறையில் கொண்டுபோய் படுக்க வைக்க வேண்டும் என்றும் நான் அவருடைய வீட்டில் இருந்தவர்களிடம் கூறினேன். மாடிக்கச் சென்று அவரை மேலும் ஒருமுறை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக நான் சொன்னேன். அந்தக் கவலையில் மூழ்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னால் நான் இன்னொரு நாடகத்தையும் நடத்தினேன். இறுதியில் அங்கிருந்தவர்களைத் திட்டாமல் இருக்க முடியாமல் நான் உறங்கச் சென்றுவிட்டேன்.”

சிரித்துக் கொண்டிருந்தாலும், டாக்டர் தான் கூறிக்கொண்டிருந்த விஷயத்தை நிறுத்தினார். மிகவும் பதைபதைத்துப் போயிருந்த அந்த இளம்பெண் கேட்டாள்: “நீங்கள் எதற்கு இந்தக் கதையை என்னிடம் சொன்னீர்கள்?”

மிகவும் அமைதியாக தலையைக் குனிந்துகொண்டு அந்த டாக்டர் சொன்னார்:

“எதிர்காலத்தில் உங்களுக்கும் இப்படிப்பட்ட ஒரு தேவை வந்தால், என்னுடைய உதவி கட்டாயம் கிடைக்கும்."

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.